புதிய கோணங்கி

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: November 3, 2015
பார்வையிட்டோர்: 39,681 
 

ராமானுஜம் அலுவலகம் கிளம்ப சைக்கிளை சாய்த்து வலதுகாலால் பெடலைத் திருப்பி வசதியாக ஏறி அமர்ந்தபோது அவர் மனம் ’ஆட்டுக்குட்டி முட்டையிட்டு…’ என்றது.

இது மட்டுந்தானா இன்னும்
இருக்குது சாமி…

கமலா, டேப் ரிகார்டரை சின்னதா வெச்சுக்கச் சொல்லு ரமாவை! தெரு முழுக்க அலர்றது.”

“சரின்னா. நீங்க சகுனம் பார்த்து ஜாக்ரதையா கிளம்புங்கோ. அமாவாசை. மத்யானம் சாப்பாட்டுக்கு வழக்கம்போல வந்துருவேள்ல? இல்ல ஏதாவது லோன் இன்ஸ்பெக்*ஷன் அதுஇதுன்னு–”

“இன்னிக்கு அதெல்லாம் ஒரு எழவும் கிடையாது. ரெண்டு மணிக்கு பாங்க் முடிஞ்சதும் நேரே வரவேண்டியதுதான். வரட்டுமா?”

தெருமுனையில் திரும்பி நாலைந்து டீக்கடைகளையும் ஒன்றிரண்டு பரோட்டா விடுதிகளையும் கடந்து ’தம்’ பிடித்து தார் ரோட்டுக்கு ஏறி வசதியாக நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டு இருபுறமும் பின்னுக்கு விரையும் மரங்களையும் பின்னால் மெல்ல நெளியும் வயல்வெளிகளையும் காலடியில் நழுவும் தார் ரோட்டின் செழுமையையும் ரசித்தபடி வழுக்கிக்கொண்டு முன்னேறியபோது மனம் மீண்டும் அந்தப் பாடலை முணுமுணுத்தது.

சென்ற வாரம் ஈச்சங்குடி கீற்றுக் கொட்டகையில் சாய்வு நாற்காலியில் வசதியாக அமர்ந்து பார்த்த அந்தப் படத்தின் குறிப்பிட்ட பாடல் காட்சி மனத்திரையில் விரவியது.

சப்பாணியின் அபிநயங்களும் ஶ்ரீதேவியின் சிரிப்பலைகளும் அவர் உற்சாகத்தைத் தூண்ட, ’கிட்டத்தட்ட பாரப்பா பழனியப்பா மெட்ட மாத்திப்போட்ட மாதிரி இருக்கு’ என்று நினைத்துக்கொண்டார்.

நீண்டநாள் கழித்து ஒரு மாறுதலுக்காகப் பார்த்த அந்தப் படத்தின் பாதிப்பில் மனதில் புதிய கோணங்கள் விரிய,

“பாரப்பா பழனியப்பா,
பட்டணமாம் பட்டணமாம்!
ஊரப்பா பெரியதப்பா
உள்ளந்தான் சிறியதப்பா
கதையில்ல சாமி இப்போ
காணுது பூமி!”

என்று இலங்கை வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்கும் வெள்ளவத்தை சுப்பிரமனியன்போல் குரல்கொடுத்துக்கொண்டு, குறிப்பிட்ட இடம் வந்ததும் சைக்கிள் தானாக இடப்புறம் ஈச்சங்குடி செல்லும் ஒற்றையடிப் பாதையில் திரும்ப, மணல் பாதையின் சரிவில் அனிச்சையாக இறங்கியவர் எதிரில் சட்டென்று விஸ்வரூபம் எடுத்த இரண்டு கழுதைகள்மேல் மோதவிருந்து சமாளித்து ஹாண்டில்பாரை ஒடித்து பிரேக் பிடிக்காமல் தடுமாறி விழுந்தார்.

கழுதைகள் மிரண்டு நாலுகால் பாய்ச்சலிட, ஒட்டிவந்த சிறுவன் திகைத்துநின்று, “என்ன சாமி, பாத்து வரக்கூடாது?” என்றான்.

புழுதியைத் தட்டியபடி எழுந்து தன் பஞ்சகச்ச வேஷ்டியையும் சைக்கிளையும் ஒரே சமயத்தில் சரிசெய்ய முயன்றவர் குழப்பத்தில், “ஏண்டா, நீயும் பாத்து வந்திருக்கலாமில்ல?” என்றவாறே தலையை உயர்த்தியபோது பையன் கழுதைகள் பின்னால் இரண்டுகால் பாய்ச்சலிட்டுக்கொண்டிருந்தான்.

ஈச்சங்குடியின் சிக்கனமான கடைத்தெருவின் முனையிலிருந்த வங்கியின்முன் அவர் நின்றபோது கதவு பூட்டியிருந்தது.

’எங்க போய்ட்டான் இந்த வடிவேலு? கார்த்தால ஏழுமணிக்கே வந்து சாவியை வாங்கிண்டுபோனானே?’ என்ற நினைவுடன் அவர் வங்கியைத் திறந்தபோது கைக்கடிகாரம் எட்டு-நாற்பது காட்ட, அந்தப் பாடலின் கடைசி அடிகள் காற்றில் மிதந்து வந்தன.

மெயினைப்போட்டுவிட்டு அவர் ஹால் கதவைத் திறந்தபோது மின்விசிறிகள் இரண்டு வேகம்பிடித்துச் சுழல, தரையில் சிதறியிருந்த கசங்கிய காகிதங்கள் வட்டமடித்து சலசலக்க, கவுண்டர்மேலிருந்த படிவங்களும் ஸ்பைக்கில் செருகியிருந்த அடிக்கட்டைகளும் காற்றில் படபடத்தன.

மனம் அலுத்துக்கொண்டாலும் கைகள் பொறுமையாக ஒவ்வொரு ஸ்விட்ச்சாக அணைக்க, காஷியர் மேசைமேல் திறந்தபடி இருந்த ஜெனரல் லெட்ஜர் வகையறாக்களை சுமந்தபடி தன் அறைக்கு வந்தார்.

மேசையில் படிந்திருந்த ஒருநாள் புழுதிப்படலத்தை சட்டை செய்யாமல் அமர்ந்து அவர் லெட்ஜர்களைப் பிரித்தபோது மலேசியா வாசுதேவன், ’தன ததரின ததரின’ என்றார். கூடவே கழுதை ஒன்று கத்தியது.

மீண்டும் வாசுதேவன், ’தன ததரின ததரின’ என்க, மீண்டும் கழுதை கத்தியது. கடைசியில் ’ப்ரூ…’ என்று முடித்தது. தொடர்ந்து விவிதபாரதியின் மணி ஒலிக்க ஓர் அரசு வங்கி தன் விளம்பரத்தைத் தொடங்கியது.

ராமானுஜம் அனிச்சையாக இவற்றைக்கேட்டு ரசித்தபடி ’டோட்டலை’ சரிபார்த்தபோது மறுபடியும் கழுதை கத்தியது. ’சரிதான், பாடலை யாரோ டேப் செய்துவிட்டு மறுபடியும் போட்டுப் பார்க்கிறார்கள்’ என்று நினைத்துக்கொண்டார்.

இம்முறை கழுதையின் குரல் கொஞ்சம் பலமாக, அதுவும் மிக அருகில் ஒலித்தபோது திடீரென்று நினைவுக்குவந்து திடுக்கிட்டார்!

ஓசையுடன் பூட்டுக்களைத் திறந்துகொண்டு ஓட்டமும் நடையுமாக பின்கட்டுக்குச் சென்று பார்த்தபோது அந்தத்தூண் வெறுமையாக் காட்சியளித்தது.

’இதென்ன சோதனை!’ என்று திரும்பியபோது ’ஸ்ட்ராங் ரூம்’ எதிரில் ’ரெகார்ட் ரூமி’லிருந்து அந்த ஒலி வருவதைக் கவனித்தார்.

பரபரப்புடன் விளக்கைப்போட்டுப் பார்த்தபோது பூட்டிய அறையின் உள்ளிருந்து ஜன்னல் கம்பிகளின் வழியே மூக்கை நீட்டியபடி ஒரு கழுதை இவரைப்பார்த்து ’ப்ரூ…’ என்றது! தோழமையுடன் கால்களைப் பரப்பிக் காதுகளை உயர்த்தியது.

கண்களில் பயத்துடன் கனக்கும் இதயத்துடன் அவர் கழுதையைத் தாண்டிப் பார்வையை ஓடவிட்டார்.

வழக்கமாத் தரையில் படிவங்களும், சலான்களும், அவிழ்க்கப்பட்ட வவுச்சர் கட்டுகளும், இன்னபிற காகிதங்களும் இறைந்து காணப்படும் ’ரெகார்ட் ரூம்’ துடைத்து மெழுகியதுபோல் காட்சியளித்தது! ஓரத்தில் கள்ளிப் பெட்டிகலின்மேல் அடுக்கியுருந்த பழைய லெட்ஜர்களில் ஒன்றிரண்டு பிரிந்துகொண்டு இவ்வளவு தூரத்திலிருந்து பார்க்கும்போதும் பக்கங்கள் குறைந்து கிழிந்து காணப்பட்டன.

சட்டென்று மூண்ட கோபாக்னியில் அந்தக் கழுதையை எரித்துவிடுபர்போல் பார்த்தவர், சாவியைத்தேடிக் கிடைக்காமல், சாவியை அவர் வீட்டு அலமாரியில் மறதியாக இடம்மாறி வைத்தது நினைவுக்கு வர, ராமானுஜம் ஓர் உத்வேகத்துடன் பாய்ந்து ஜன்னல் கம்பிகளில் கைவிட்டுக் கழுதையின் தலையைப்பற்ற முயன்று காதுகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்.

பின்னர் அவர் ஒரு தேர்ந்த மல்யுத்த வீரர்போல் சட்டென்று கையை விலக்கிக் கழுதையின் பிடரியில் பற்றி அங்குக் குறுக்கிட்ட கயிற்றைப் பிடித்திழுத்து ஜன்னல் கம்பிகளில் தறிநெய்து இறுக்கமாகக் கட்டினார்.

கழுதையால் ஏற்பட்ட கோபம் ’அந்த மடக்கழுதை’ வடிவேலு பக்கம் திரும்ப அவர் மூச்சுவாங்க ஹாலுக்கு வந்தபோது சுவரில் மாட்டியிருந்த புகைப்படங்களில் அதே கழுதை ’போஸ்’ கொடுத்துக்கொண்டிருக்க, சலவைத்தொழிலாளி ராஜு ஓர் அசட்டுப் புன்னகையுடன் மத்திய மக்கள் நலத்துறை அமைச்சரிடம் கடன் உதவிக்கான காசோலையை வாங்கிக்கொண்டிருந்தான். அருகில் வாயத்திறந்துகொண்டு ராமானுஜம்.

அப்போதய அவசர நிலையிலும் அந்தக் காட்சி மனதில் சில வினாடிகள் ஓட அவர் தனக்குள் புன்னகைத்துக்கொண்டார்.

“…அதிலும் குறிப்பாக இந்த வங்கிக்கிளையின் மேலாளர் திரு. ராமானுஜம் அவர்கள் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று கருதி, சலவைத்தொழிலாளர்கள் மிகுந்துள்ள இந்தக் கிராமத்தில், கறவை மாடுகளுக்கும் காளை மாடுகளுக்குமே கடன் வழங்கி அனுபவப்பட்ட வங்கியில் இப்போது கழுதைகள் வாங்கவும் கடனுதவி அளிக்க முன்வந்து மேற்கோண்ட முயற்சிகள் பல்லாண்டுகாலம் நினைவுகூரத்தக்கன…” என்று தொகுதி எம்.எல்.ஏ. முகவுரை கூறி ஆரம்பித்துவைக்க,

அடுத்துப் பேசிய ராமானுஜம் அந்தக் கிராமத்தை பாரதியாரின் ’புதிய கோணங்கி’ பாடலில் உள்ள வேதபுரத்துக்கு ஒப்பிட்டு, அரசாங்க ஆதரவில் அவருடைய வங்கி மேற்கொண்ட முயற்சிகளால் “தரித்திரம் போகுது; செல்வம் வருகுது; … வியாபாரம் பெருகுது; தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான்; சாத்திரம் வளருது; சாதி குறையுது; நேத்திரம் திறக்குது; நியாயம் தெரியுது” என்றெல்லாம் மளையாள பகவதியை விளித்துக் குறிகூறிக் கரவொலிகள் பெற,

அந்தக் கடன் வழங்கு விழா கோலாகலமாக நடைபெற்று, மத்திய அமைச்சர் கழுதைகளையும் காசோலைகளையும் கடன்தாரர்களுக்குத் தாரைவார்க்க, தொழிலாளி ராஜு மேடைக்குத் தன் மனைவி மற்றும் கழுதையுடன் வந்து காசோலையைப் பெற்றுக்கோண்டபோது ராமானுஜம் அடித்த ’ஜோக்’கில் பந்தல் அதிர்ந்தது.

“ராஜு, செக்கை ஜாக்கிரதையா வாங்கி பக்கத்தில உன் சம்சாரத்துக்கிட்ட கொடு. நீ பாட்டுக்கு ஞாபகமறதியா கழுதைகிட்ட கொடுத்திடாதே!”

மத்திய அமைச்சர் அந்த ’ஜோக்’கை மொழிபெயர்ப்பில் அறிந்து (“…மிலான்கோ அப்னி பத்னிகேபாஸ் தேனா…கத்தேகேபாஸ் நஹி!) ’வாவ், வாவ்!’ என்று உரக்கச் சிரித்தது ராமானுஜத்துக்குப் பெருமையாக இருந்தது.”

இப்போது வெறுப்பாக இருந்தது. இன்று அதே ராஜுவும் அவன் சகாக்கள் பலரும் தாம் வாங்கிய கடன்தொகையில் பெரும்பகுதியைத் தவணைக்காலம் முடிந்தும் திரும்பச் செலுத்தாமல் நாள் கடத்த, வங்கி நடவடிக்கைகளின் முதல்படியாக அவர் அவனுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் விட்டும் பயனில்லாது போகவே, ராஜுவின் கழுதையைப் பறிமுதல் செய்து வங்கியில் கட்ட ஏற்பாடு செய்தார்.

நேற்று மாலை அவர் மேற்பார்வையில் மெஸஞ்ஜர் வடிவேலு தாழ்வாரத்தூணில் கட்டிய கழுதை எப்படி ரெகார்ட் அறைக்குள் நுழைந்தது என்று புரியவில்லை.

ஏற்கனவே அவரிடம் பலமுறை தகராறு செய்துவிட்டு யூனியன் தயவால் அந்தக் கிளையில் ஒட்டிக்கொண்டிருந்த வடிவேலுவுக்கு இம்முறை சரியான பாடம் கற்பிக்கத் தீர்மானித்து அவர் ஒரு ’மெமோ டைப்’ செய்யத்தொடங்கினார்…

“ஏண்டா அறிவுகெட்ட கழுதை!” என்றான் யூனியன் செகரட்டரி மாணிக்கம்.

“என்னையாண்ணே?” என்றான் வடிவேலு.

“இல்ல, ஒம்பக்கத்துல நிக்கிற அந்த நாலுகால் ஜந்துவை! மடையா, அப்பிடி என்னாடா ஞாபகமறதி? ரெகார்ட் ரூம்குள்ளாற கழுதை இருக்கறதுகூடத் தெரியாம எப்பிடிப் பூட்டிக்கிட்டுப்போவே? இல்ல வேணும்ட்டே செஞ்சியா?”

“நான் ஏன்ணே வேணும்ட்டு செய்யறேன்? இந்தக் கழுதயத் தாவாரத்லதாண்ணே கட்டிப்போட்டேன்! எப்படியோ கயித்த அறுத்துக்கிட்டுவந்து இந்த ரூம்ல நுழைஞ்சிருச்சு, நானும் கவனிக்கலே! இப்பப் பாருங்க அவ்வளவு வவுச்சரும் காலி! எஸ்.பி., கரண்ட் அகவுண்ட் லெட்ஜர்லாம்கூட வாய்வெச்சிருச்சு அண்ணே! அய்யரு என்னத் தொலச்சிட்டாரு! ஏற்கனவே அவருக்கு எம்மேல ஒரு கண்ணு…”

மாணிக்கம் கழுதையின்மேல் விழிகளை நிறுத்தி சில வினாடிகள் யோசித்தான். பின் சந்தேகத்துடன் கூடத்துக்கு நகர வடிவேலு பின்தொடர்ந்தான்.

“இங்க பாருங்கண்ணே, அய்யரு மேசைமேல ஜீயெல்! ஏற்கனவே வந்துட்டாரு போல! கழுதையை அவர்தான் கண்டுபிடிச்சு ஜன்னலோட கட்டியிருக்கணும். ஏன்னா ஸ்வீப்பரம்மா இன்னிக்கும் வந்தமாதிரித் தெரியல, பாருங்க தரையெல்லாம் குப்பை. ரெகார்ட் ரூம் சாவியைக் கொண்டார மறந்துட்டுத்தான் வூட்டுக்குத் திரும்பப்போயிருக்காரோ என்னமோ? நல்லவேளை, நாம அவர் இருக்கும்போது வந்து மாட்டிக்கல! இப்ப அவர் மறுபடி வர்றதுக்குள்ளாற ஏதாச்சும் செய்யுங்கண்ணே!” என்று கூறிவிட்டுத் திரும்பிய வடிவேலு, மாணிக்கம் கையில் ஒரு புதிய ’டைப்ரைட்டர் கார்பனை’ வைத்துக்கொண்டு குழல் விளக்கொளியில் படித்துக்கொண்டிருப்பதுகண்டு திடுக்கிட்டான்.

“அய்யரு ரொம்பக் காட்டமாத்தான் எழுதியிருக்காரு”, என்றான் மாணிக்கம்.

“என்னண்ணே மெமோவா?”

“இல்ல வாழ்த்துமடல்! உன்மேல ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாதுன்னு கேட்டிருக்கார்.”

“இப்ப என்ன செய்யறது மாணிக்கண்ணே?”

மாணிக்கம் சிகரெட் பற்றவைத்துக்கொண்டு உற்சாகமாகப் புகையை அவன்மேல் ஊதிவிட்டுக் கூறினான்.

“ஒண்ணும் செய்யவாணாம். இந்தக் கழுதையை உடனே அவுத்து பின் வழியா ஆத்துப்பக்கம் ஓட்டிவுட்ரு, யாருக்கும் தெரியாம! நான் பழையபடி கதவெல்லாம் பூட்டிட்டு வாரேன். பத்துமணி வாக்கில ஆபீசுக்கு வழக்கம்போல வருவோம். பாக்கிய நான் பாத்துக்கறேன்.”

*** *** ***

’தன ததரின ததரின’ என்றார் மலேசியா வாசுதேவன்.

“டேப்பை சின்னதா வைடி ரமா-னுஜம்! அப்பா மூட்ல இல்லை, ஒதை வாஙப்போறே!” என்றான் ஶ்ரீதர்.

“இன்னொரு தடவை ரமா-னுஜம்னு சொன்னே, பல்லை உடைப்பேன் படவா! அப்பாவைக் கேலியா பண்றே?”

ஶ்ரீதர் சட்டென்று கோபமாகி அவள் கையைப் பிறாண்ட அவள் அவனைத் தாடையில் அறைய, அவன் சட்டென்று தாவி டேப்ரிகார்டர் ஒலியைச் சின்னதாக்க முனந்தபோது அது மேலும் பெரிதாகிவிட, அவன் பயந்து புழக்கடைப்பக்கம் ஓடிவிட, வாசுதேவனின் உரத்த சங்கதிகளில் ஶ்ரீதேவி கலகலக்க, கழுதையொன்று குரல் விரக்க, ராமானுஜம் வெளிப்பட்டு ஆத்திரத்துடன் மகளைத் தலையில் குட்டி இழுத்துத் தள்ளிவிட்டு, டேப்ரிகார்டர் ஒலியைக் குறைக்க முற்பட்டபோது வாசலில் கோரஸாகக் கழுதைகள் கத்துவது கேட்டுத் திடுக்கிட்டார்!

கலவரத்துடன் அவர் வாசலுக்கு வந்தபோது அந்தத் தெருவை அடைத்துக்கொண்டு கழுதைப் பட்டாளம் ஒன்று நின்றிருந்தது! அவரைக் கண்டதும் கச்சேரி களைகட்டிவிட, கழுதைகள் தம் யஜமானர்களின் கையசைவில் விடலைப் பையன்கள் கையில் கிடத்த மௌத் ஆர்கன்கள்போல் வினோத ஒலிகள் எழுப்பின! சட்டென்று அடங்கி மென்மையாக விர்ரித்தன. உள்ளே ரமாவின் அழுகுரல் கேட்டது.

கடன் பட்டுவாடா செய்யப்பட்டபோது இருந்த ஆர்வமும் பணிவும் நட்பும் அறவே விடைபெற்றுக்கொள்ள, நூற்றுக்கும் மேற்பட்ட அந்த சலவைத் தொழிலாளர்கள் ராமானுஜத்துக்கெதிராக கோஷங்கள் எழுப்பினர்.

கோஷங்கள் அடங்கியதும் முன்னணியில் இருந்த ஒருவன் ராமானுஜத்தைப் பார்த்துக் கூறினான்.

“நீங்க செய்யறது கொஞ்சம்கூட நல்லா இல்லை சார்! நாங்க ஏதோ ஏழைத் தொழிலாளிங்க, கிடைக்கற பணத்துல அப்பப்ப கொஞ்சம் கட்டறோம். அதுகூட ஒருசில பேரால முடியறதில்லை. காரணம் தக்க வருமானம் இல்லை. நீங்க ஏதோ ஒங்க சொந்தப் பணத்துல கடன் கொடுத்தாப்பல சட்டநடவடிக்கைகள் அதுஇதுன்னு இறங்கினீங்கன்னா நாங்க ஒட்டுமொத்தமா தவணைத் தொகைகளை நிறுத்திக்கறதத் தவிர வேற வழியில்லை. தயவுசெய்து ராஜுவோட கழுதையை வெளில விட்டிடுங்க. அவர் முடிஞ்சப்ப கடனைக் கட்டிடுவார்.”

“ஆறுமுகம், பேசறதைக் கொஞ்சம் யோசித்துப் பேசணும். என் சொந்தப் பணத்தைக்கூட நான் வசூலிக்காம விட்டுடலாம். ஆனா, எங்க வங்கிலேருந்து கடனாக் கொடுத்திருப்பது மக்களோட பணம். நீங்க எவ்வளவு தூரம் கஷ்டப்படறீங்களோ அவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு உழைச்சு சேர்த்துவெச்சு எங்க வங்கியை நம்பிப் பணம் போட்டிருக்கற டெபாஸிட் கஸ்டமர்களுக்கு உங்களைப்போன்ற கடன்தாரர்கள் வாங்கின பணத்தைத் திரும்பத் தரலேன்னா நாங்க என்ன பதில் சொல்லறது? சலவைத் தொழிலாளி ராஜு போன்ற சிலர் வேண்டுமென்றே காலம்கடத்தறனாலதான் நாங்க சட்ட–”

கூட்டம் அவரை முடிக்க விடவில்லை. கோஷங்கள் ஓய்ந்ததும் ஆறுமுகம் முடிவாக, “நாங்க சொல்லவேண்டியதச் சொல்லிட்டங்க. இன்னிக்கு மதியம் மூணு மணிக்குள்ளாற ராஜுவோட கழுதையை நீங்க விடுதலை செய்யாங்காட்டி நாங்களும் எங்க கழுதைகளும் உங்க வங்கி முன்னால உண்ணாவிரதம் ஆரம்பிக்கப் போறோங்க. அப்பால உங்க விருப்பம்” என்று கூறிவிட, புழுதியைக் கிளப்பிக்கொண்டு கழுதைப் பட்டாளம் கலைந்தது.

“சார், இந்த மெமோவை வடிவேலு கையெழுத்து போட்டு வாங்கறதுக்கு முன்ன, அவர் செஞ்ச தப்பு என்னன்னு கொஞ்சம் விளக்கி சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்” என்றான் யூ.செ. மாணிக்கம்.

“மிஸ்டர் மாணிக்கம், நீங்க இப்படி எதுக்கெடுத்தாலும் ’டிஃபென்ட்’ பண்ணித்தான் இன்னிக்கு இந்த நிலைமையில இருக்கு. யாரா இருந்தாலும் ஒரு காரியத்தை ஒப்படைச்சா பொறுப்பா செய்ய வேணாம்? வடிவேலு அஜாக்ரதையா அந்தக் கழுதையை ’ரெகார்ட் ரூம்’ல விட்டு பூட்டிட்டுபோனதால இன்னிக்கு–”

“எக்ச்சுஸ் மி சார், ஒரு நிமிஷம்! வடிவேலுதான் அந்தக் கழுதையை ’ரெகார்ட் ரூம்’ல விட்டார்னு எப்படிச் சொறீங்க?”

“என்னய்யா இது பேத்தல்? ’ரெகார்ட் ரூமை’ப் பூட்டறச்ச உள்ளே கழுதை இருக்கறதுகூடவா தெரியாது ஒரு மனுஷனுக்கு? தாழ்வாரத்தில கட்டியிருந்த அந்தக் கழுதை எப்படி ’ரெகார்ட் ரூம்’குள்ள நுழைஞ்சது? அப்படியே நுழைஞ்சிருஞ்சாலும் ஏன் அதை அவர் பாக்கலை? செய்யறதையும் செஞ்சிட்டு இப்ப நான் வரதுக்குள்ள கழுதையை அவுத்து வெளியில விட்டுட்டாரு! கார்த்தால எங்க வீட்டு முன்னால ஒரே ஆர்ப்பாட்டம்! இப்ப நான் இந்த ஜனங்களுக்கு என்ன பதில் சொல்றது? நம்ம ’ஹெட் ஆஃபீஸ்’க்கு என்ன பதில் சொல்றது? ’ஐ யாம் ஸாரி மிஸ்டர் மாணிக்கம். ஐ கேன்னாட் டாலரேட் சச் இன்டிஸிப்ளின் இன் மை ஆஃபீஸ் எனி லாங்கர்!”

“ஸோ, வடிவேலுதான் கழுதையை ’ரெகார்ட் ரூம்’ல விட்டுப் பூட்டிட்டுப் போய்ட்டார், வடிவேலுதான் கழுதையை அவுத்து வெளியில விட்டுட்டார்னு சொல்றீங்க?”

“சொல்றது என்ன, அதானே உண்மை!”

“உண்மைன்னு நீங்க சொல்றீங்க சார். நாங்க சொல்றதுலயும் கொஞ்சம் உண்மை இருக்கலாமில்ல?”

“’வாட் நான்சென்ஸ்!’ நீங்க என்ன சொல்லப் போறீங்க புதுசா?”

“இன்னும் ஒருமணி நேரத்தில எங்க உதவிப் பொதுச்செயலாளர் வந்ததும் சொல்றோம் சார். இப்போதைக்கு நான் ஒரே ஒரு விஷயம்தான் சொல்ல விரும்பறேன். காலையில ஏழு மணிக்கு வடிவேலு உங்ககிட்ட சாவி வாங்கிட்டுப்போனதுக்கு அப்பறம் இப்பதான் பாங்க் உள்ளாற நுழையறார். ஊருக்குப்போன ஸ்வீப்பரம்மா இன்னும் வரலைபோல. ஏன்னா அவங்க வடிவேலுகிட்ட சாவி வாங்கிக்க வரலை. தவிர, ’ரெகார்ட் ரூம்’ சாவி உஙகிட்டேயும் ஒண்ணு இருக்குங்கற உண்மையை ஞாபகம் வெச்சுக்குவோம் சார்.”

“வாட்டுயு மீன்?”

இந்த சமயத்தில் “குட் மார்னிங் மிஸ்டர் ராமானுஜம்!” என்று ஒருவர் அறைக்குள் நுழைய, அவரை ஒருகணம் முறத்துப் பார்த்து அடையாளம் தெரிந்துகொண்ட ராமானுஜத்துக்குத் தலை சுற்றியது. ஹெட் ஆஃபீஸ் இன்ஸ்பெக்*ஷன்!

அடுத்த சில நாட்கள் அங்கு ஏற்பட்ட பிரளயத்தை இந்தச் சிறுகதையில் வர்ணிக்கமுடியாது. தொழிற் சங்கம், நிர்வாகம் மற்றும் பொதுஜனம் இவற்றின் மும்முனைத் தாக்குதலில் ராமானுஜம் துணை யாருமின்றித் தனியே போரிட முயன்று தோற்றார்.

அவர் மலைபோல் நம்பியிருந்த சட்டம், ஒழுங்கு, நியாயம், உண்மை முதலிய துணைவர்கள் ஒவ்வொருவராகப் புறமுதுகிட்டு ஓடி ஒளிந்துகொள்ள, பாரதப் போரின் கர்ணன்போல் அவர் ஒவ்வொரு கணையாக மார்பில் ஏற்று, வாய்மை எப்படியும் இறுதியில் வென்றுவிடும் என்ற நம்பிக்கையுடன் போராடி, முடிவில் தன்னைக் கல்கி அவதாரமாக நினத்துக்கொண்டு விஸ்வரூபம் எடுக்க முனைந்து தோற்று, ஓர் அரக்கனாகக் கணிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டார்.

ஓர் ஏழைத் தொழிலாளியின் கழுதையைப் பறிமுதல் செய்யப் பரிந்துரைத்து செயல்பட்டது மக்கள் நலனுக்கெதிரான மகத்தான குற்றமாகக் கருதப்பட்டது.

அந்தப் பறிமுதல் செய்யப்பட்ட கழுதையையும் சரிவரப் பாதுகாக்கமுடியாமல் இழந்தது அவருடைய அஜாக்ரதையைக் காட்டியது. கடைசியில் கழுதை கிடைத்தும் தொழிலாளி ராஜுவிடம் சல்லிக்காசு பெயராதது அவருடைய திறமையின்மையைக் காட்டியது.

’ரெகார்ட் ரூமில்’ கழுதை புகுந்து நாசம் விளைவித்ததற்கான பொறுப்பு சரிவர நிரூபிக்கப்படாமல் அவர் தலையில் விழுந்தது. வங்கியின் முக்கிய தஸ்தாவேஜ்களை சரிவர்ப் பாதுகாக்கமுடியாமல் இழக்க நேரிட்டது நிர்வாகத்தால் வன்மையாகக் கண்டிக்கப்பட்டது.

தொழிற்சங்கத் தலைவர்கள் குழப்பிய குட்டையில் அவர்மீது கணக்குகள் சரிவர நேர்செய்யப் படவில்லை, நேர்செய்வதற்கான வவுச்சர்களை இழந்தது போன்ற ஆதாரங்களின்பேரில் கிரிமினல் குற்றங்கள் சுமத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, அதிகாரிகள் சங்கம் தலையிட்டு அத்தகைய நடவடிக்கைகளைத் தவிர்த்து, அவர் நாலைந்து நாட்கள் மற்ற அதிகாரிகளின் மேற்பார்வையில் இரவும் பகலும் பாடுபட்டுக் கணக்குகளை நேர்செய்து கொடுத்து ஒருவழியாகத் தப்பினார்.

கடன்களைப் பட்டுவாடா செய்வதில் காட்டப்படவேண்டிய வேகத்தை அவற்றைப் பராமரிப்பதில் காட்டாதிருப்பது விவேகம் என்ற கசப்பான உண்மையை விழுங்கமுடியாமல், ராமானுஜம் அந்த ஊரிலிருந்து மற்றொரு குக்கிராமத்துக்கு மாற்றப்பட்டபோது, தன் ஆறுமாத சர்வீஸை விடுமுறையாக மாற்றிக்கொண்டு முன்னதாகவே ஓய்வுபெற்றார்.

Print Friendly, PDF & Email

1 thought on “புதிய கோணங்கி

  1. தன் கீழ் உள்ள அலுவலகத்தைச் சரிவரக் கவனிக்கமுடியாத ராமானுஜம் போன்ற அதிகார அய்யர்களால் ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் ஏழைகளுக்கே எதிர் வினை ஆற்றிவிடுவதை நன்கு காட்டியிருக்கிறார் ஆசிரியர்.
    குறிப்பாக அதிகாரியின் அறிவுக் குறைவை முதலிலேயே தொடர்பேயில்லாத மெட்டுகளைத் தொடர்பு படுத்துவதாகக் காட்டுவதும் “சாவியை அவர் வீட்டு அலமாரியில் மறதியாக..” என்று திறமை இன்மையை வெளிப்படுத்துவதும் மிகச்சிறப்பு.

    உண்மையிலேயே அலுவலக அறைச் சாவியெல்லாம் வீட்டில்மறந்து வருகிறவர் தண்டனையில் இருந்து அதிகாரி சங்கத்தால் தப்புவதும் நாட்டில் வர்க்கபேதம் இன்னும் கொடிகட்டிப்பறப்பதைத் தெளிவாக்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *