சுல்தான், நீ எங்கே இருக்கிறாய்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 20,320 
 

ந்த நாள் என் சந்தோஷ நாள். எனக்கு வேலை கிடைத்து அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வந்திருந்தது. அதை மாலதியிடம் காண்பிக்கச் சென்றபோது, அவள் ஊருக்குக் கிளம்பத் தயாராக நான்கு அவசர சாரிகளைப் பெட்டிக்குள் அடைத்துக்கொண்டு இருந்தாள்.

”மாலதி! எனக்கு வேலை கிடைத்துவிட்டது!”

மாலதி மற்றொரு சாரியைக் கசக்கி அடைத்தாள். அவள் முகம் என்னவோ போல் இருந்தது. ”ஏன் மாலதி என்னவோ போல் இருக்கிறாய்?”

மாலதி என்னை வெறித்துப் பார்த்தாள். ”நான் இனி இந்த வீட்டில் ஒரு கணம் தாமதிக்கப்போவதில்லை. சொந்த அப்பாவாக இருந்தால் என்ன, திஸ் இஸ் தி லிமிட்! நான் போகிறேன்!”

”இரு, இரு எங்கே போகிறாய்?”

”எங்கேயாவது!” அவள் கண்களில் நீர் ததும்பியது.

”ஆ, கம் ஆன்! அவசரப்படாதே. என்ன நடந்துவிட்டது? அப்பா ஸ்டார் டஸ்ட்’டை நிறுத்திவிட்டாரா! மாலதி நீ போய்விட்டால் டாக்டர் அவர்களைப் பார்த்துக்கொள்வது யார்? ஒரே ஓர் அப்பா இல்லையா?”

”பார்த்துக்கொள்வதற்கு ஆள் கிடைத்துவிட்டான். மாடிக்குப் போய்ப் பார்! உனக்குப் போட்டியாக மற்றொரு சிநேகிதன் வந்திருக்கிறான். சுல்தான்!”

எனக்குத் திரைக்கதை, வசனம், டைரக்ஷன் புரியவில்லை. சுல்தான்… இந்தப் பெயரை எங்கோ பார்த்திருக்கிறேனே? சே, அப்படி இருக்காது. எனக்குப் போட்டியாக ஒரு சுல்தானா?

மூன்று தாவலில் மாடி ஏறினேன். கதவு சாத்தி இருந்தது. டாக்டரின் குரல் கேட்டது. ”அப் சுல்தான், அப்! அப்படி சுல்தான், அப்படி அப்!”

புரியவில்லை. கதவைத் தட்டினேன். ”கம் இன். கதவு தாளிடப்படவில்லை. ஆ பையா! எங்கே வந்தாய்..?”

அறையில் டாக்டர் மட்டும் தான் இருந்தார்.

”டாக்டர், முப்பத்தைந்து செகண்டுகளுக்கு முன் யாருடன் பேசிக்கொண்டிருந்தீர்கள்?”

”ஓ. சுல்தானை நீ இன்னும் சந்திக்கவில்லை அல்லவா?அதோ பார்!”

டாக்டர் குறிப்பிட்ட திக்கில் அறையின் வடமேற்கு மூலையின் மேலே, வெண்டிலேட்டர் என்னும் காற்று ஜன்னலில் தொற்றிக் கொண்டிருந்த சுல்தானை முதல் தடவையாகப் பார்த்தேன்.

சுல்தான் சுமார் மூன்றடி உயரமுள்ள ‘சிம்பன்ஸி’ ரகக் குரங்கு. உடல் முழுவதும் கருகரு என்று கேசம். நீளநீள விரல்கள். முகத் தில் முக்கால் பாகத்தை அடைத் துக்கொண்டு பற்கள்.

மேற்படி பற்கள் என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டுஇருந்தன. அந்த சினிமாஸ்கோப் சிரிப்பைச் சிரிப்பு என்கிற ரகத்தில்தான் சேர்க்க வேண்டும். பளீர் என்று வெண் பற்கள். ஒவ்வொன்றும் நாற்பது வாட்.

”சுல்தான், கீழே வா!” என்றார் டாக்டர், அது உடனே ரப்பராகத் தாவி, ஒரு கோட் ஸ்டாண்டு, ஒரு சோபாவின் விளிம்பு இவை மூலமாக எங்கள் அருகில் வந்து நின்றது. பக்கத்தில் பார்க்க இன்னும் மொசமொசவென்று அசிங்கமாக இருந்தது. ”டாக்டர், நான் போய்விட்டுச் சாவகாசமாக வருகிறேன். உங்களுக்கு எவ் வளவோ வேலை இருக்கும்.”

”பயப்படாதே. சுல்தான் ஒன்றும் செய்ய மாட்டான். சுல்தான். இது என் ஃப்ரெண்ட்! ஃப்ரெண்ட்! மாமாவுக்கு ஷேக்ஹாண்ட் கொடு.”

சொரசொர என்று ஒரு கரம் என் கரத்தைப் பற்றிக் குலுக்கிவிட்டு, ஒரு சலாம் போட்டது. ‘ஹலோ’ என்றேன். சுல்தான் என் பையிலிருந்து பேனாவை எடுத்துக்கொண்டுவிட்டது.

”டாக்டர், என் பேனாவைத் திருப்பிக் கொடுக்கச் சொல்லுங்கள்.”

”எப்படி! ஏறக்குறைய மனுஷாள் மாதிரியே பண்ணுகிறது பார்!”

டாக்டர், என்ன இது, குரங்கை வைத்துக்கொண்டு கூத்து! எங்கே பிடித்தீர்கள் இக் குரங்கை? எதற்காக? ஐயோ, என் பேனாவைக் கடிக்கிறதே! டேய், குடுத்துடுடா.”

”பையா, ஒரே ஒரு வார்னிங். அதை டேய் கீய் என்று மரியாதை இல்லாமல் பேசாதே. சில வேளை கோபம் வந்துவிடும்!” டாக்டர் குரங்கின் தலையை வருடிக்கொண்டே தொடர்ந்தார். ”சர்க்கஸில் வாங்கினேன். நொடித்துப்போன சர்க��
�கஸ் கம்பெனி. இதற்குப் பட்டாணி போடக்கூடக் காசில்லை. பையா, டாக்டர் க்யூலரின் ஆராய்ச்சிகளைப் பற்றிப் படித்திருக்கிறாயா?”

”டாக்டர், நான் கடைசியில் படித்தது ‘நீச்சலடி சுந்தரி’ என்கிற மர்ம நாவல். குமாரி ஜெயபுஷ்பா எழுதியது.”

”டாக்டர் க்யூலர், ‘தி மெண்டாலிட்டி ஆஃப் ஏப்ஸ்’ என்று அருமையான புத்தகம் எழுதி இருக்கிறார்.”

”டாக்டர்! மாலதி ரொம்ப கோபத்தில் இருக்கிறாள். என்ன நடந்தது?”

”நான் அவளிடம் சுல்தானை வாங்கி வந்ததைப் பற்றிச் சொல்லவில்லை. அவள் டிரெஸ் பண்ணிக்கொண்டிருந்தபோது உள்ளே எட்டிப் பார்த்துவிட்டான். கொஞ்சம் குழப்பம். அதிருக்கட்டும், குரங்குகளை வைத்துக்கொண்டு க்யூலர் நிறையப் பரிசோதனைகள் செய்திருக்கிறார்.”

”மாலதி ஊருக்குக் கிளம்பிக்கொண்டு இருக்கிறாள்!”

”எங்கேயும் தனியாகப் போக அவளுக்குத் தைரியம் கிடையாது. நாயர் கடை வரை போய்த் திரும்பிவிடுவாள். அவளுக்கு என்னை விட்டுவிட்டு இருக்க முடியாது… க்யூலர் கெஸ்டால்ட்டின் சைக்காலஜியை நிரூபிப்பதற்கு குரங்குகளுக்குச் சில புத்திசாலித்தனமான காரியங்களைக் கற்றுக்கொடுத்தார்… உதாரணத்துக்கு இதோ பார். கம் சுல்தான்…”

எனக்கு கெஸ்ட்டால்டின் மனோதத்துவத்தில் ஈடுபாடு அதிகம் இல்லை என்று சொன்னதைப் பொருட்படுத்தாமல் டாக்டர் அவர்கள் அறையின் மூலையில் இருந்த கூண்டுக்குள் சுல்தானை அழைத்துச் சென்றார். அதைக் கூண்டுக்குள் அடைத்துப் பூட்டினார். சுல்தான் உள்ளே திருதண்டி சந்நியாசி மாதிரி குதித்தது. டாக்டர் அலமாரிக்குச் சென்று ஒரு நீளமான பச்சைநாடன் வாழைப் பழத்தை எடுத்துக் கூண்டின் அருகில் கொண்டுவந்து சுமார் எட்டு அடி தள்ளி வைத்தார். இரண்டு சிறிய மூங்கில் குச்சிகளைக் கூண்டுக்குள் சுல்தானிடம் கொடுத்தார்.

”பையா, வேடிக்கையைப் பார்!”

சுல்தான் முதலில் தன் உடம்பை ஹடயோகியைப் போல நீளமாக இழுத்து வாழைப்பழத்தை எட்டப் பார்த்தது. முடியவில்லை. ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு அதனால் வாழைப்பழத்தை எட்டப் பார்த்தது. குச்சி நீளம் போதவில்லை. சுல்தான் மற்றொரு குச்சியை வைத்து முயன்று பார்த்தது. ம்ஹூம். அதுவும் நீளம் போதவில்லை. இரண்டு குச்சிகளையும் கீழே போட்டுவிட்டுச் சற்று நேரம் கூண்டுக்குள் பின்கை கட்டிக்கொண்டு எலெக்ஷனில் தோற்றவன் போல உலாத்தியது. திடீரென்று ஞானோதயம் பிறந்தது போல ஒரு மூங்கிலை எடுத்தது. அதன் நுனியில் கடித்து நீளவாக்கில் கொஞ்சம் பிளாச்சாய்ப் பிளந்துகொண்டது. அந்தப் பிளவில் மற்றொரு குச்சியைச் சொருகிக்கொண்டது. அப்போது நீளம் போதுமானதாக இருந்தது. லாகவமாக வாழைப் பழத்தைக் குச்சியால் தன்பால் நகர்த்தி எடுத்துக்கொண்டுவிட்டது.

”பார்த்தாயா!”

”ரிமார்க்கபிள் டாக்டர். சுல்தான். நீ ஒரு ஜீனியஸ்!”

”ஜீனியஸ் அவனில்லை. கற்றுக் கொடுத்த நான்!”

”இன்னும் என்னவெல்லாம் செய்யும்? மோர்சிங் வாசிக்குமா?”

”பொறு, இதுவரை க்யூலரின் ஆராய்ச்சியின்படிதான் கற்றுக் கொடுத்திருக்கிறேன். இனிதான் டாக்டர் ராகவானந்தம் வருகிறார்.”

டாக்டர் அலமாரிக்குச் சென்று சிறிய பட்டாணி அளவில் இரண்டு சமாசாரங்களை எடுத்துவந்து எனக்குக் காட்டினார். ”இது என்ன தெரியுமா? மெர்க்குரி செல் பேட்டரி. இது ஒரு சின்ன எலெக்ட்ரானிக் சர்க்யூட். பேட்டரியிலிருந்து சக்தி கொடுத்தால் இதிலிருந்து சின்னச் சின்ன அலைகள், மின் துடிப்புகள் கிடைக்கும். இந்த இரண்டையும் இணைத்துச் சுல்தானின் தலையில் ஆக்ஸிபிட்டல் பாகத்தில் பொருத்தப்போகிறேன். சுல்தானின் மூளைக்குச் சிறிய மின் அதிர்வுகள் கிடைக்கும்போது நடக்கப்போவது என்ன தெரியுமா…? நீ மைக்கல் க்ரைடனின் டெர்மினல் மான் படித்தாயா?”

”டாக்டர், நான் சமீபத்தில் படித்தது நீச்சலடி…”

”நிகழப்போவது மனித சரித்திரத்தில் ஒரு மைல் கல். சுல்தானுக்கு அறிவு கிடைக்கப்போகிறது. சுல்தான் இப்போது இருப்பதைவிடப் பதின்மடங்கு அறிவு பெறப்போகிறான்.”

”டாக்டர், ஏற்கெனவே என் பேனாவைக் கடித்து உண்டு இல்லை என்று பண்ணிவிட்டது. குரங்குக்கு எதற்கு அறிவு கொடுக்க வேண்டும்?”

”இதில் ஒரு சிக்கல்.”

”நல்ல வேளை.”

”தன் தலையில் இந்தக் கருவியைப் பொருத்த விட மாட்டேன் என்கிறான் சுல்தான். என் ஒருத்தனால் சமாளிக்க முடியவில்லை.”

”எனவே…”

”நீ கொஞ்சம் ஒத்தாசை செய்தால் காரியம் நிறைவேறும்.”

”நோ நோ நோ. டாக்டர், எனக்குக் குரங்குகளிடம் அவ்வளவு பரிச்சயம் இல்லை. எங்கேயாவது பிடுங்கிவைத்தால்… சே சே! பல் ஒவ்வொன்றும் எவ்வளவு தீர்க்கமாக வளர்ந்திருக்கிறது பாருங்கள்.”

”பையா, உதவி செய்யமாட்டாயா?”

”இல்லை டாக்டர். நான் உங்களுக்கு எவ்வளவோ உதவியிருக்கிறேன். ஆனால், குரங்கு வேலை வேண்டாம். என்னை மன்னித்துவிடுங்கள். என்னால் முடியாது!”

”அப்படியா?”

”ஆம். டாக்டர்.”

”முடியாதா?”

”ம்ஹூம். முடியாது.”

”சுல்தான்!” என்றார் டாக்டர். சுல்தான் நிமிர்ந்தது.

”ஷகூலா ஜாகராண்டா!”

”என்ன டாக்டர் அது. குரங்கு பாஷையா… ஹ…ஹ….” என் சிரிப்பு உறைந்தது. சுல்தான் தன் பற்களை ஆர்மோனியக் கட்டைகள் போல் விரித்து என் எதிரில் வந்து நின்றது. ஒரு தடவை எம்பிக் குதித்தது. ஒரு தடவை பாதி உட்கார்ந்து நிமிர்ந்தது. படபட என்று தன் தொடைகளில் தாராசிங் போலத் தட்டிக் கொண்டது.

”டாக்டர், எனக்குப் பயமாக இருக்கிறதே, என்ன செய்யப் போகிறது.”

சுல்தான் லபக் என்று என் தலைமேல் ஏறி டென்னிஸ் ரெஃபரி போல உட்கார்ந்துகொண்டது.

”டாக்டர், திஸ் இஸ் பிளாக் மெயில். என்ன இது! இறங்கச் சொல்லுங்கள்.” நான் தலையை அசைக்காமல் கரகம் ஆடுபவன் போல் இரண்டு கைகளையும் நீட்டி பேலன்ஸ் பண்ண வேண்டியிருந்தது. ”டாக்டர், ப்ளீஸ்!”

அவர் சும்மா இருந்தார்.

”டாக்டர், நீங்கள் என்ன வேண்டுமானாலும் கேளுங்கள். எத்தனை குரங்குகளை வேண்டுமானாலும் பிடித்துக்கொள்கிறேன். இதை இறங்கச் சொல்லுங்கள்!”

”தட்ஸ் த பாய்! சுல்தான், இறங்கு!”

இறங்கிவிட்டது.

”நீ பிடித்துக்கொள்ள வேண்டாம். நான் பிடித்துக்கொள்கிறேன். நீ தலையில் பேண்டேஜ் போல் இந்த சாதனத்தைக் கட்டிவிட வேண்டும். அவ்வளவுதான்.’

”செய்கிறேன் டாக்டர்.” டாக்டர் அவர்கள் சுல்தானைப் பிடித்துக்கொள்ள அந்த இரண்டு சாதனங்களையும் பதித்து பேண்டேஜ் போல என்னைத் தலையில் இறுக்கக் கட்டச் சொன்னார். சுல்தான் தன் பற்களை விரித்து என்னைப் பார்த்த பார்வையில். ‘உன்னை அப்புறம் கவனித்துக்கொள்கிறேன்’ என்றது.

”இது சாதாரணமாகவே புத்திசாலிக் குரங்கு. இதற்கு மூளையில் ‘பல்ஸ்’ கொடுத்தால் இதைச் சமாளிப்பது சற்றுச் சிரமமாக இருக்கலாம். கூண்டுக்குள் அடைத்துவிடலாம்” என்று சுல்தானைக் கூண்டுக்குள் அடைத்துப் பூட்டிவிட்டார்.

”நீயும் குரங்கு வித்தையில் சேர்ந்துகொண்டுவிட்டாயா?” என்று குரல் கேட்டுத் திரும்ப… மாலதி.

”நீ ஊருக்குப் போகவில்லையா? நல்ல வேளை!” என்றேன்.

”டாக்ஸிக்கு அனுப்பியிருக்கிறேன்” என்றாள்.

”மாலதி. கேன்சல் பண்ணு உன் பயணத்தை. சுல்தானைக் கூண்டில் அடைத்தாகிவிட்டது. இதோ பார், இனி இதனால் உனக்கு ஓர் உபத்திரவமும் கிடையாது” என்றார் டாக்டர்.

”கூண்டில் அடைக்க வேண்டியது வேறு இரண்டு ஆசாமிகளை. எத்தனை நாழி டாக்ஸி கொண்டு வர!”

”மாலதி டார்லிங்! இனிமேல் சுல்தானைக் கூண்டுக்குள் வைத்துத்தான் கண்காணிப்பேன்.”

வாசலில் கார் ஹாரன் சத்தம் கேட்டது

”மாலதி, போகாதே!”

”இந்தக் குரங்கு இந்த வீட்டில் இ
ருக்கும்வரை நான் இங்கே இருக்கப் போவதில்லை. காலையில் என்ன செய்தது தெரி யுமா?”

”சொன்னார்! அன்ஃபார்ச்சுனேட்” என்றேன்.

”மாலதி, டாக்டர் க்யூலர் என்ற ஜெர்மானியர்….” என்றார் டாக்டர்.

”பார்த்தாயா, ஆரம்பித்தாகிவிட்டது… டாட்டா!”

மாலதியின் பின்னே நானும் டாக்டரும் தொடர… அவள் வைராக்கியமாக இறங்கிக் கீழே வந்தாள். வாசலில் டாக்ஸி இல்லை. வேறு ஏதோ கார் சத்தம் கேட்டிருக்கிறது.

”மாலதி, இப்போதுகூட லேட் இல்லை. இனி உனக்கு எந்தத் தொந்தரவும் கிடையாது. சுல்தானுக்கு மனிதத் தன்மை கொடுத்துவிட்டேன். நாகரிகம் கொடுத்துவிட்டேன். அவன் இனி பாத்ரூமுக்குள் எல்லாம் எட்டிப் பார்க்க மாட்டான்.”

டாக்டர் அவர்கள் மேலே தொடர்வதற்குள் மாடியில் ‘டணாங்’ என்று சில்லறை இறைபடுவது போல் சத்தம் கேட்டது.

”டாக்டர், அது என்ன சத்தம்!”

”கண்ணாடி உடைந்திருக்கும்” என்றாள் மாலதி.

”இல்லையே. கூண்டுக்குள் பூட்டி வைத்துவிட்டுத்தானே வந்தோம்! பையா, வா பார்க்கலாம்.”

”நீங்கள் போய்ப் பாருங்கள். நான் மாலதியுடன் சற்று நே…. டாக்டர்!”

”என்ன?”

”என் அப்பாயின்மென்ட் லெட்டர்! என் வேலை! அதை மாடியில் வைத்துவிட்டேன்! கூண்டுக்கு அருகில் உள்ள மேஜையில்!”

”குரங்கு சாப்பிட்டிருக்கும். ஓடு” என்றாள் மாலதி. எனக்கு திகீர் என்றது. டாக்டருடன் மாடிக்கு நானும் ஓடினேன். அறைக்குள் நுழைந்தபோது…

அறை காலியாக இருந்தது. கூண்டு திறந்திருந்தது. மேஜை மேல் வைத்திருந்த என் அப்பாயின்மென்ட் லெட்டரைக் காணோம். சுல்தானையும் காணோம்!

”டாக்டர்! என் லெட்டர்!”

”பையா! என் குரங்கு!”

”எங்கே அந்த சுல்தான்?”

”சுல்தான்! எங்கே ஒளிந்துகொண்டு இருக்கிறாய்? வந்துவிடு! கண்ணல்லவா? பையா, என் ஆராய்ச்சி வெற்றி… வெற்றி! எப்படித் தப்பித்திருக்கிறது பார். அதற்கு அறிவு வந்துவிட்டது. மேஜை மேல் வைத்திருந்த சாவியைக் குச்சியால் தள்ளி எடுத்துப் பூட்டைத் திறந்திருக்கிறது. குரங்கு… பூட்டைச் சாவி போட்டுத் திறந்திருக்கிறது… வெற்றி!”

”டாக்டர், என் லெட்டரை ஏன் அது எடுக்க வேண்டும்? எங்கே அந்தத சுல்தான்!”

அதற்குப் பதில் போல கீழே வீல் என்று ஐயாயிரம் சைக்கிள் அலறல் கேட்டது. மாலதி! அங்கே விரைந்தோம். ”என்ன மாலதி? என்ன ஆச்சு!”

”குரங்கு…” என்றாள். அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை. பயம் தொண்டையை அடைத்தது. அதே சமயம் பின்கட்டிலிருந்த டாக்டர் வீட்டுச் சமையற்காரர் அரை டிராயர் அணிந்துகொண்டு பிரசன்னமானார். ”சார்! டாக்டர் சார்! இனி ஒரு நிமிஷம் இந்தப் பைத்தியக்கார வீட்டில் காரியம் செய்ய மாட்டேன். குரங்கு வளர்க்கலாம். ஆனா, இவ்வளவு செல்லம் கொடுக்கக் கூடாது. நேரா சமையல் அறைக்கு வந்து என் வேஷ்டியையும் துண்டையும் உருவிக்கொண்டுபோய்விட்டது. சே!”

”கையில் ஒரு காகிதம் வைத்திருந்ததா? ரிஜிஸ்டர்டு லெட்டர்?” என்றேன்.

”அது என்ன இழவோ. எனக்குத் தெரியாது. மாலதி அம்மா இந்த நிமிடமே என் கணக்கைத் தீர்த்துவிடுங்கள்.”

”வேஷ்டியையா உருவிற்று? உருவக் கூடாதே!” என்றார் டாக்டர்.

”இன்னும் கொஞ்சம் நாழி இருந்தா டிராயரையும் உருவி இருக்கும்.”

”பையா, விபரீதம். அதன் தலையில் இருக்கும் சாதனத்தை எடுத்துவிடக்கூடும் இல்லையா?”

”முதல்லே குரங்கையே காணோமே டாக்டர்! என் லெட்டர் எனக்கு வேண்டும் டாக்டர்!”

”மாலதி, நீ சுல்தானைப் பார்த்தாயா?”

”திடுதிடுவென்று நடு ஹாலில் குறுக்கே நொண்டி ப்ளே விளையாடுகிற மாதிரி ஓடியது. அவ்வளவுதான் தெரியும் எனக்கு.”

”எந்தப் பக்கம் போச்சு?”

”வாசல் பக்கம்.”

”போச்சுடா!”

”பையா, வா! சுல்தானைப் பிடித்தே ஆக வேண்டும். இல்லா விட்டால் ஆபத்து.”

நானும் டாக்டரும் வெளி
யே வந்தோம். தெரு அமைதியாக இருந்தது. நாங்கள் மேலும் கீழும் பார்த்தோம். எலெக்ட்ரிக் கம்பங்களைப் பார்த்தோம். மரங்களைக் கூர்ந்து பார்த்தோம். சுல்தான் சுல்தான் என்று செல்லமாகக் கூப்பிட்டுப் பார்த்தோம். ம்ஹூம்!

”டாக்டர், அதோ பாருங்கள்…”

சாலை நடுவே குரங்கின் காலடிகள் மாதிரி தெரிந்தது. அருகே ஒரு வெற்றிலைப் பாக்குக் கடை தெரிந்தது. கடைக்காரரிடம் சென்று, ”ஐயா, இந்தப் பக்கம் ஒரு கறுங்குரங்கு போயிற்றா?” என்று கேட்டேன். அந்த ஆள் என்னை ஒருவிதமாகப் பார்த்தார். அதே சமயம், எதிர் வீட்டிலிருந்து ஒரு நனைந்த ஆசாமி ஓடி வந்தார். ”மாணிக்கம், சட்டுனு ஒரு சோடா உடை! எனக்குப் படபப்பாக இருக்கிறது” என்றார்.

”என்ன ஆச்சு சார்?”

”கொஞ்ச நாளாகவே எனக்கு தத்துபித்து என்று கனா. ஆனா, சொன்னா நம்ப மாட்டே. பகல்ல முழிச்சுட்டு இருக்கிறபோது எனக்குக் கனா வருகிறது! தலையிலே முண்டாசு கட்டிக்கொண்டு ஒரு ஆப்பிரிக்க தேசத்துக் குரங்கு பாத் ரூம் வழியா எட்டிப் பார்த்து ஒரு பேப்பரை ஆட்டறாப்பலே! சோடா.”

”சார்! அந்த பேப்பர் என் அப்பாயின்ட்மென்ட் லெட்டர் சார். எங்கே அந்தக் குரங்கு?”

”அப்ப குரங்கு நிஜமா?”

”ஆம்!”

”அப்ப வீட்டுக்குள்ளே இருக்கு! குரங்கு உங்களுதா! அறிவுகெட்ட பசங்களா! என்னடா இது அக்கிரமம்? முண்டாசைக் கட்டிவிட்டுக் குரங்கை உள்ளுக்குள்ளேவிட்டு வேடிக்கை பார்க்கறீங்களா? எனக்கு சப்த நாடியும் அடங்கிப் போச்சு!”

”சார், இதை அப்புறம் சாவகாசமாக உங்களுக்குச் சொல்கிறேன். இப்ப அந்தக் குரங்கை முதலில் பிடிக்க வேண்டும். பையா! வா போகலாம்” என்று டாக்டர் கடையிலிருந்து ஒரு வாழைப்பழத்தை முறித்துக்கொள்ள இருவரும் அந்த வீட்டில் நுழைந்தோம்.

இக்கட்டாக இருந்த அந்த வீட்டில் ஸ்தம்பித்த ஒண்டுக் குடித்தனக்காரர்களைக் கடந்து, குறிப்பிட்ட பாத் ரூமெல்லாம் தேடி… அறை அறையாகத் தேடி (‘கார்ப் பரேஷன்காரர்களோ?’) பின்கட்டுக்குச் சென்றோம்.

சுல்தான் சாதுவாகச் சப்பணம் கட்டிக்கொண்டு ஒரு வயதான பாட்டிக்கு எதிரே உட்கார்ந்திருந்தது. அந்த மாது கண்களை இடுக்கி அதை உற்றுப் பார்த்து, ”யாரப்பா நீ நம்ம கிஷ்ணசாமி புள்ளையாட்டம் இருக்கே?” என்றுகேட்டுக் கொண்டிருந்தாள்.

`நான் ரகசியமாக, பைய, பின்னால் இருந்து அணுக முயற்சிக்க, சுல்தான் எங்க ளைப் பார்த்துவிட்டது. உடனே உயரமான பின்புறச் சுவரின் மேல் ஏறிக்கொண்டது.

”சுல்தான், நான் சொல்வதைக் கேள். வந்துவிடு!” என்றார் டாக்டர். ”சுல்தான், என் பேப்பரைக் கொடு!” என்றேன் நான். ”ஏன் சார், அந்தக் குரங்கு பேசுமா?” என்றது ஒரு குரல். ”கொசுவலை கொண்டுவரேன். அதைப் போட்டுப் பிடித்துவிடலாம்” என்றது மற்றொரு குரல். நான் ஓட்டுப் பக்கம் ஏறி, மெதுவாக மறுபடி சுல் தானைப் பின்புறம் அணுகி… அணுகி… அணுகிவிட்டேன். பிடித்துவிட்… ம்ஹூம். தப்பித்து அந்தப் பக்கம் குதித்துவிட்டது.

”பையா, சொல்வதைக் கேட்க மாட்டேன் என்கிறது! அந்தப் பக்கம் என்ன இருக்கிறது?”

”சின்ன சந்து, டாக்டர்.”

”சந்தின் முடிவில்?”

”தட்டி போட்டு அடைத்திருக்கிறது.”

”சார், அந்தத் தட்டிக் கதவைத் திறக்கிறீர்களா?” சந்தில் மடக்கி விடலாம். பையா, குரங்கு தெரிகிறதா?”

”தெரிகிறது, பத்தடி தூரத்தில் ராஸ்கல் நின்றுகொண்டிருக்கிறது.”

நானும் டாக்டரும் மெதுவாக நடந்தோம். எங்களுக்குப் பத்தடி முன்னாலேயே சுல்தான் நடந்தது.

”சுல்தான், கண்ணே! நில்லடா!” என்றார் டாக்டர்.

சந்தின் இறுதியில் தட்டி அடைத்திருந்தது. அதன் மேல் முதுகை வைத்துக்கொண்டு நின்றது. நாங்கள் அருகே வருவதைப் பார்த்ததும் தட்டியைப் பிரித்துக்கொண்டு அந்தப் பக்கம் சென்றுவிட்டது.

நான் தட்டியைப் பிரித்து அந்தப் பக்கம் என்ன என்று பார்த்தேன். என் ரத்தம் உறைந்தது.

அந்தப் பக்கம் ஒரு பொதுக்கூட்டம் நடந்துகொண்டு இருந்தது. பேசுபவர்கள் எங்களுக்கு முது கைக் காட்டிக்கொண்டு இருக்க… எதிரே திரளான மக்கள் குந்தி உட்கார்ந்துகொண்டு ஆ என்று வாய் பிளந்து பேச்சாளரைக் கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.

சுல்தான் முதலில் ஒரு மூலையில்தான் இருந்தது. யாரும் அதைக் கவனிக்கவில்லை. ஆனால், பக்கத்தில் ஒரு காவலர் இருந்தார். அவர் தொப்பி அருகில் இருந்தது.

”குமுறுகிறோம். கொதிக்கின்றோம். மக்களின் விருப்பத்தினையும் நலத்தினையும் சீரழிக்கும்…” பேச்சாளர்.

சுல்தான் அந்தத் தொப்பியை சைஸ் பார்த்துக்கொண்டு இருந்தது.

”….” ”…..” என்று டாக்டர் சன்னமாகக் கூப்பிட்டார் சந்தினூடே! போலீஸ்காரர் கால் மாற்றிக் கால் போட்டு உட்கார்ந்துகொண்டார். சுல்தான் அவரை நிமிர்ந்து பார்த்தது.

”மத்திய அரசைக் கேட்கின்றோம்!” என்றார் பேச்சாளர். ”உங்களுக்கு விருப்பமிருந்தால் வந்து எங்கள் அரியணையில் உட்கார்ந்து பாருங்கள். அது அரியணையல்ல… முள்!”

சுல்தான் அந்தக் காலி நாற்காலியில் போய் உட்கார்ந்துகொண்டது. மக்கள் பேச்சாளரின் உதடுகளிலேயே கவனமாக இருந்தார்கள்.

”சுல்தான்!” என்று எட்டு பாயின்ட் எழுத்துக்களில் அதட்டிப் பார்த்தார் டாக்டர்.

”வண்ணாரப்பேட்டை அறுபத்து மூன்றாவது வட்டம் கிளை சார்பாகத் தலைவர் அவர்களுக்கு மலர் மாலை” என்று சுல்தானுக்கு ஒரு மாலை போடப்பட்டது.

அப்புறம் அங்கே நிகழ்ந்ததை விவரிப்பது சற்றுச் சிரமமாக இருக்கிறது.

”டேய், குரங்குடா!” என்றது ஒரு குரல். அப்புறம் ஒரு சலசலப்பு!

”எதிர்க்கட்சிக்காரன் வேலைடா!”

”தொப்பி மாட்டிக்கிட்டிருக்குடா!”

டணாங் என்று ஒரு கோலி சோடா பாட்டில் மேடை நோக்கி விரைந்தது. அதைப் பிடித்து சுல்தான் திரும்ப எறிய, ‘அமைதி அமைதி’ என்று ஒலிபெருக்கி அலற, அந்தக் கூட்டம் கலைந்த தேனீக்கூடு போல் ஆகிவிட, தக்காளிப் பழம், முட்டை, ஒற்றைச் செருப்புகள் எல்லாம் பிரயோகமாக…

”டாக்டர், வாருங்கள்! பின்பக்கமாகவே ஓடிவிடலாம்” என்று நாங்கள் ஓட, எங்களுடனேயே சுல்தானும் ஓடி வர, ‘பிப்பீ’ என்று போலீஸ் விசில் சத்தம் கேட்க, என் தோளில் ஒரு முரட்டுக் கை பரவ…

மாஜிஸ்ட்ரேட் கனைத்துக்கொண்டார். ”கைதிகள் டாக்டர் ராகவானந்தம், முதுகுடுமிப் பெருவழுதி. இது அவர் சொந்தப் பெயரில்லை என்று நினைக்கிறேன். இருவரும் இ.பி.கோ.268 பப்ளிக் நியூசன்ஸ், உடன் இ.பி.கோ.289 இவ் விரு பிரிவுகளின்படி குற்றவாளிகளாக நிரூபிக் கப்பட்டு இருக்கிறார்கள். இருவருக்கும் தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அப ராதம் செலுத்தத் தவறினால், இரண்டு மாதம் சிறைத் தண்டனை” என்று படித்தார்.

”டாக்டர், என்னிடம் சில்லறையாக இல்லையே?” என்றேன்.

”பையா, கவலைப்படாதே! யுவர் ஆனர்! அபராதத் தொகையைச் செலுத்தத் தயாராக இருக்கிறோம். மாலதி!” என்றார்.

சபையில் தலைமறைவாக இருந்த மாலதி ஓரமாக வந்து, ”அப்பா பேங்கில் மொத்தம் 550 ரூபாய்தான் இருந்தது” என்றாள்.

நான் திடுக்கிட்டேன். டாக்டர் தலையைச் சொறிந்து என்னை நோக்கினார். ”இப்ப என்ன செய்வது?”

”முதுகுடுமி ஜெயிலில் இருக்க வேண்டியதுதான்! க்யூலரின் அருமையான புத்தகம் கொண்டுவந்திருக்கிறேன். படித்தால் பொழுது போய்விடும். இரண்டு மாதம்தானே?” என்றாள் மாலதி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *