சிலுக்கலூர்பேட்டை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: March 2, 2020
பார்வையிட்டோர்: 43,914 
 

”சிலுக்கலூர்பேட்டை!”

பேரைக் கேட்டதுமே சும்மா கிர்ர்னுன்னு இருக்குல்லே?

முதன்முதலாக இப்பேட்டை குறித்த அறிதலை பகவதி என்ற தோழர் வாயிலாக அறிந்துகொண்டேன். அவர் ஒரு அச்சக முதலாளி. எங்களது டிசைனிங் சென்டருக்கு கஸ்டமராக வருவார். அச்சகத் தொழிலில் நேரம் காலமோ, ஓய்வோ கிடைப்பதரிது. ஆனால் இவரோ எப்போதுமே ப்ரெஷ்ஷாக இருப்பார். அவரது ப்ரெஷ்ஷுக்கான காரணத்தை ஒருமுறை கேட்டபோது அவர் சொன்ன பதில்…

”சிலுக்கலூர்பேட்டை!”

“அது எங்கே இருக்கு? அங்கே என்ன ஸ்பெஷல்?”

”ரோஜா, நக்மா ரேஞ்சு குஜிலிங்க கூட ரொம்ப சீப்பா ஐம்பது, நூறுக்கு கிடைக்கும்”

ஒருமுறை பீர் அடிக்க ஆகும் செலவு தான் அது என்பதால் ஆர்வம் கூடியது. என்னைவிட சேகருக்கும், சுரேஷுக்கும் சிலுக்கலூர்பேட்டை குறித்த செய்திகளை அறிந்துகொள்வதில் அதீத ஆர்வம் இருந்தது.

மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தியதில் சிலுக்கலூர்பேட்டை சூலூர்பேட்டையை விட பலவிஷயங்களில் விஸ்தாரமாணதும், வீரியமிக்கதும் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. இந்த ஊரில் நிறைய அஜால் குஜால் வீடுகள் உண்டாம். ஊருக்கு வரும் விருதினர்களை தலைதீபாவளிக்கு வரும் மாப்பிள்ளை மாதிரி வரவேற்று உபசரித்து, ‘திருப்தி’ படுத்தி அனுப்புவார்களாம். ஆயில் மசாஜ் தான் ஸ்பெஷலிலும் ஸ்பெஷல். மற்ற இடங்கள் மாதிரியின்றி இங்கே கோழிக்கறி அடித்து விருந்தும் உண்டாம். ஒரு ஆளுக்கு ஐநூறு தான் செலவாகும் என்றார்கள். இது வதந்தியா நிஜமா என்பதை உடனே முடிவுசெய்ய முடியவில்லை. சில வருடங்கள் கழித்து வெளிவந்த காட்ஃபாதர் படத்தில் இந்த விஷயத்தை கே.எஸ்.ரவிக்குமார் தொட்டிருந்தது இப்போது நினைவுக்கு வருகிறது.

இந்த மேட்டர் தெரிந்ததுமே சேகரும், சுரேஷும் ரொம்ப இம்ப்ரஸ் ஆகிவிட்டார்கள். நானும் தான். சிலுக்கலூர்பேட்டை எங்கே இருக்கிறது என்று தென்னிந்திய மேப்பை வைத்து தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. அது விஜயவாடாவுக்கு பக்கத்தில் இருப்பதாக சேகர் விசாரித்து சொன்னார். கிராமமாகவும் இல்லாமல், நகரமாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருக்குமாம். சென்னையிலிருந்து போய்வர இரண்டு, மூன்று நாள் ஆகிவிடும் என்றார்.

சேகருக்கு அஜால் குஜால் மேட்டரில் ஏற்கனவே கொஞ்சம் அனுபவம் இருந்தது. சுரேஷும், நானும் தான் ஞானஸ்தானம் பெறாதவர்கள். எனவே இயல்பாகவே எங்கள் இருவருக்கும் சிலுக்கலூர்பேட்டை மீது பிடிப்பு கொஞ்சம் அதிகமாக இருந்தது. சுரேஷுக்கு என்னைவிட ஆறு வயது அதிகம். சேகர் அவரைவிட இரண்டு வயது பெரியவர். நான் அப்போது தான் டீனேஜின் கடைசி ஏஜில் இருந்தேன்.

சிலுக்கலூர்பேட்டை விஜயத்துக்கு ஒரு பொங்கல் விடுமுறை குறிக்கப்பட்டது. என்ன ஒரு துரதிருஷ்டம் பாருங்கள். சுரேஷும், சேகரும் மட்டுமே போவதாக முடிவெடுக்கப்பட்டு பணிகள் தொடர்ந்தது. மூஞ்சியில்லாத முருகனுக்கு பலமுறை ‘ஞானஸ்தானம்’ நடந்திருந்ததாலும், பணநெருக்கடி காரணமாகவும் அவனால் ஜோதியில் ஐக்கியமாக முடியவில்லை. நொந்துப்போய் “என்னையும் ஆட்டையிலே சேர்த்துக்கங்கப்பா. நானென்ன பாவம் பண்ணேன்?” என்று கேட்டேன்.

“வயசுக்கு வராத பசங்க வர்ற இடமில்லை அது!” சேகர் கொஞ்சம் காட்டமாகவே சொன்னார். எனக்கு மீசை சாஸ்திரத்துக்கு கூட கொஞ்சமும் முளைக்காத அவலமான காலக்கட்டம் அது.

சமீபத்தில் ஜோதி தியேட்டரில் படம் பார்த்ததற்கான அத்தாட்சியாக நுழைவுச்சீட்டினை காண்பித்தேன். நான் வயசுக்கு வந்ததற்கான ஆதாரமாக அதை சேகர் எடுத்துக்கொள்வார் என்றும் நம்பினேன். அதுவுமில்லாமல் பொதுவாக வீக்கெண்டு பீர் பார்ட்டிகளின் ஸ்பான்ஸர் நானாகவும் இருந்ததால் என்னுடைய கோரிக்கையை உடனடியாக சேகராலும், சுரேஷாலும் நிராகரிக்க முடியவில்லை. என்னை அழைத்துக்கொண்டு செல்வதாக இருந்தால் பானு தியேட்டரில் ஒரு ஸ்பெஷல் ஷோ ஸ்பான்சர் செய்வதாகவும் வாக்குறுதி தந்தேன்.

இருவரும் கொஞ்சம் குழம்பிப் போனார்கள். என்னை அழைத்துக் கொண்டு செல்லும் முடிவு குறித்து ஆலோசனை செய்து இருநாட்களில் நல்ல செய்தி சொல்வதாக வாக்களித்தார்கள். அன்று மாலை அவர்களை பானு தியேட்டருக்கு அழைத்துச் சென்றேன். படம் ஆரம்பிப்பதற்கு முன்பாக போரூர் முருகன் ஒயின்ஸில் ஜலக்கிரீடையும் என் செலவிலேயே நடந்தது. ’பொங்கல் டைமில் அனேகமாக திருப்பதிக்கு போகவேண்டியிருக்கும், வெங்கடாஜலபதியை தரிசிக்க வேண்டியிருக்கும், ரெண்டு மூணு நாள் வீட்டுக்கு வரமாட்டேன்’ என்று வீட்டில் முன்னெச்சரிக்கையாக நோட்டிஸும் கொடுத்து வைத்திருந்தேன்.

ரெண்டு நாள் கழித்து இப்போதைக்கு திட்டத்தை ஒத்திவைத்திருப்பதாக சேகர் சொன்னார். ஊரில் ஆயா சீரியஸ் என்பதால் எப்போது வேண்டுமானாலும் புட்டுக்கலாம் என்று அதற்கு பொருத்தமான ஒரு காரணத்தையும் அவர் சொன்னதால் அப்போதைக்கு எனது தீவிரம் சற்று தணிந்தது. ’ஆயாவுக்கு சீரியஸுன்னா என்ன பண்ணமுடியும்?’ என்று சுரேஷும் ஒதுங்கிவிட்டார்.

பொங்கல் இனிதே முடிந்தது. அலுவலகத்துக்கு வந்தபோது எனக்கு பெருத்த அதிர்ச்சி. சுரேஷும், சேகரும் ஏதோ ஒரு ஞானம் பெற்றிருப்பது போன்ற மலர்ச்சியோடு தெரிந்தார்கள். அவர்களது தலைக்குப் பின்னே தலா ஒரு ஒளிவட்டம் இருந்ததுபோல எனக்கு பிரமை. இருவரும் ஒருவரையொருவர் பார்த்து வெட்கத்தோடு நமட்டுச் சிரிப்பும் சிரித்துக் கொண்டார்கள். எனக்கு வானமே தலைமீது இடிந்து விழுந்தது போல பெருத்த மனக்குழப்பம்.

உருட்டி, மிரட்டி, அழுது, புரண்டு, ஆர்ப்பாட்டம் செய்து கேட்டபோது உண்மையை ஒத்துக்கொண்டார்கள். தான் கன்னித்தன்மையை இழந்துவிட்டது குறித்து மகிழ்ச்சியோடு தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் சுரேஷ். ‘எவ்வளவோ பார்த்திருக்கேன். இதுமாதிரி எங்கேயும் பார்த்ததில்லை’ என்று சாவகாசமாக ஆனால் விரிவாக பேசினார் சேகர். விருந்து, மருதம் படிப்பது மாதிரியே இருந்தது. என்னை தந்திரமாக தள்ளிவிட்டு இருவரும் சென்று வந்தது குறித்து நினைத்தபோது கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்தது.

“நீங்க போய்ட்டு வந்ததுக்கு என்ன ஆதாரம்?” வக்கீல் மாதிரி கேட்டேன்.

சடக்கென்று பஸ் டிக்கெட், ரயில் டிக்கெட் என்று நிறைய ஆதாரங்களை சேகர் காட்டியதுமே ரொம்பவும் நொந்துவிட்டேன். எனக்கு மீசை நல்லா கத்தையா முளைச்சதுக்கப்புறம், பெரியவன் ஆனதுக்கு அப்புறமா தனியாவே சிலுக்கலூர்பேட்டை போயிட்டு வருவேன் என்று மனதுக்குள் வீரசபதம் செய்தேன். “நான் தரிசிக்க வேண்டிய தலம் என் தம்பி கருணாநிதி குடியிருக்கும் பாளையங்கோட்டை சிறைச்சாலை” என்று அண்ணா சொன்ன அதே தீவிரம் என்னுடைய சிலுக்கலூர்பேட்டை சபதத்தில் நிறைந்திருந்தது.

அன்று மட்டுமல்ல. அதையடுத்து சில மாதங்களுக்கு அவர்கள் இருவரும் சிலுக்கலூர்பேட்டை புராணமே பாடிக்கொண்டிருந்தார்கள். எனவே அவர்களுக்கு வீக்கெண்டு பார்ட்டி ஸ்பான்ஸர் தருவதை நிறுத்தினேன். பதிலுக்கு அவர்கள் எனக்கு பார்ட்டி தந்து, பார்ட்டியில் சிலுக்கலூர் அனுபவங்களை புட்டு புட்டு வைக்க பல இரவுகள் தூக்கமில்லாமல் எனக்கு கழிந்தது.

இப்போது கத்தையாக இல்லாவிட்டாலும் கண்ணுக்கு தெரிவது போல மீசையென்று சொல்லிக்கொள்ளும் அளவில் ஏதோ முளைத்துவிட்டது. பணம் ஒரு பிரச்சினையில்லை. பெரியவனாகவும் ஆகிவிட்டேன். ஆனால் இடையில் சந்திரபாபு நாயுடு அதிரடிவேட்டை ஆடி சிலுக்கலூர்பேட்டையை அயோத்தி ரேஞ்சுக்கு புனிதநகரம் ஆக்கிவிட்டார் என்று கேள்விப்பட்டேன். அது அது அந்தந்த காலத்தில் நடந்து தொலைத்திருக்க வேண்டும். இப்போது அவலை நினைச்சு உரலை இடிச்ச கதை தான். வேறு என்னத்தைச் சொல்வது? 🙁

இந்த இடைப்பட்ட வருடங்களில் சுரேஷும், சேகரும் என்ன ஆனார்கள் என்று விசாரித்துப் பார்த்ததில் தகவல்கள் மெச்சிக்கொள்ளத்தக்க வகையில் இல்லை. சுரேஷுக்கு இன்னமும் கல்யாணம் ஆகவில்லை. லே-அவுட் ஆர்ட்டிஸ்டாக இருந்த அவர் இப்போது தி.நகரில் ஒரு ஜவுளிக்கடையில் சேல்ஸ் சூபர்வைசராக வேலை பார்க்கிறாராம். சேகருக்கு காதல் திருமணம் முடிந்து விவாகரத்தும் ஆகிவிட்டதாம். எந்த வேலையிலும் நிலையாக நீடித்திருக்க முடியாமல் பலமுறை தற்கொலைக்கும் முயன்றாராம். அனேகமாக அவர் ஜிகாலோவாக கூட ஆகியிருக்கலாம்.

– ஏப்ரல் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *