நான்காவது பரிமாணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: March 21, 2013
பார்வையிட்டோர்: 22,978 
 

என்னமோ தெரியவில்லை, இத்தாலி வந்ததில் இருந்து அம்முவின் நினைவுகள் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றது. கடந்த இரண்டு நாட்களில் அவளின் பெயரை கூகுளில் பத்துத் தடவைகளாவது தேடி இருப்பேன். அவளின் பெயரும் படிப்பும் தனித்துவமானவை… எத்தனைத் தேடியும் என்னுடைய ஆராய்ச்சிக்கட்டுரையில் நன்றித் தெரிவித்தப் பக்கத்தைத் தவிர வேறு எங்குமே அவளின் பெயர் இல்லை.-… மூன்று வருடங்களில் லிங்டின் தளத்திலாவது இருக்க மாட்டாளா என்ற ஒரே நப்பாசைதான் … ஒரு வேளை நேரத்தை நிறுத்தக் கூடிய ஆற்றல் எனக்கு இருந்தால், செப்டம்பர் 3, 2009 ஆம் ஆண்டோடு நிறுத்தி இருப்பேன். அன்றுதான் நான் அவளுடன் பேசிய கடைசி தினம். எத்தனைக் கெஞ்சியும் அவளின் பெற்றோர் பேச்சை மீறமாட்டேன் என்று விலகிப்போய்விட்டாள். பெண்கள் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டால், மிச்சமீதின்றி அத்தனையும் துடைத்து எடுத்தது போல, இருந்த சுவடே இல்லாமல் மறைந்துவிடுவார்கள். அவளை நினைவூட்டும் நபர்களை நானும் தள்ளிவைத்தேன் … தள்ளிவைத்தலில் பலப் பாடல்களும், ஏன் உணவுப்பழக்கங்கள் கூட உள்ளடங்கிப் போயின.

இதோ அவளின் நினைவுகளை சுப்ரமணியபுரத்தில் வரும் இளையராஜாப் பாட்டுடன் ஆளரவமற்ற , ரோம் நகரத்துப் புறநகர்ப் பகுதிகளில் பொட்டல் திடலில் மறுவாசிப்பு செய்து
கொண்டிருக்கின்றேன். எப்படியாவது அம்முவைக் கண்டுபிடித்துவிட வேண்டும், கடைசியாக அவளைப் பற்றிக் கேள்விப்ட்டது, இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகி இருக்கின்றாள் என.
விபரத்தை சொன்ன முன்னாள் அலுவலகத் தோழியை ஒட்டு மொத்தமாக நட்பு வட்டாரத்தில் இருந்து நீக்கி இருந்தேன். முதலில் அந்தத் தோழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற
எண்ணத்தோடு, இயற்கையின் உந்துதலை கழிக்க, நமது ஊர்ப்புறங்களில் இருக்கும் பாழடைந்த கட்டிடத்தைப்போலக் காணப்பட்ட கூரையில் சுவர்களின் பின்னால் ஒதுங்கினேன்.

”பலப்பேர் வந்து போகின்ற தபால் நிலையத்திற்கு முன்னால் சிறுநீர் கழிக்கின்றாயே உனக்கு அறிவில்லையா “ என ஆங்கிலத்தில் ஒரு குரல் கேட்டது. இத்தாலியில் அதுவும் இந்த
இடத்திலா… எனது பேராசிரியர் வந்த முதல் நாளே சொன்னார், தனியாக எங்கும் தெரியாத இடங்களுக்கு செல்லவேண்டாம் என்று.. நான் கேட்டால்தானே….

“இல்லை இல்லை… நிறுத்திவிட்டேன். தாங்கள் யார்” குரலிலும் உடலிலும் தானாகவே நடுக்கம் வந்து சேர்ந்தது. அழுக்கு உடைகளுடன், நீண்ட தாடி, தலைமுடியுடன் ஒருவர்
மற்றொரு சுவற்றின் பின்பக்கத்தில் இருந்து வெளிவந்தார். ராணுவத்தின் உடையைப்போல ஒன்றை அணிந்திருந்தார், தோராயமாக 80 வயது இருக்கும்.

“அட … இந்தியனா … ~ என கண்களைச் சுருக்கி என்னைப் பார்த்து வியப்பு மேலிட, மேலும் கீழும் பார்த்தார். எனக்கு இரண்டு ஆறுதல்கள், கையில் இருப்பதைப் பிடுங்கிக் கொள்ளும் வழிப்பறித் திருடன் இல்லை. பேய்களும் பிசாசுகளும் இந்தியனா என ஆச்சரியமாக கேட்டதாக எங்கும் படித்ததில்லை.

“ஆமாம், தமிழ்நாட்டில் இருந்து வருகின்றேன்”

“எனக்கும் ஒரு தமிழ் நண்பன் இருந்தான், அதோ அந்தக் கால்வாயைக் கடக்கும்பொழுது, அச்சு நாட்டுப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்” என அந்தக்காலத்து ஆங்கிலத்தில்.

”ஓ நீங்கள் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றவரா”

“ஆமாம் …. கனடாவில் இருந்து வந்த படையணிகளைச் சேர்ந்தவன், இத்தாலியை நாஜிக்களிடம் இருந்து மீட்டதில் உங்கள் இந்திய வீரர்களுக்கும் பங்கு உண்டு”

“படித்திருக்கின்றேன், கிட்டத்தட்ட 30 ஆயிரம் நபர்களுக்கு மேல் இந்திய துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்கள் இத்தாலியப் போர் முனைகளில் உயிரிழந்திருக்கின்றனர்” அந்த
முதியவருடனான உரையாடல் எனக்கும் தேவையாக இருந்தது. அம்முவின் சோக நினைவுகளில் இருந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது.

என்னைப்பற்றி விசாரித்தார். கணினிப் பற்றி எல்லாம் அவர் அறிந்திருக்கவில்லை. இந்த நேரத்தில் இங்கே எதற்கு என அவர் என்னிடம் கேட்ட அதே கேள்வியை அவரிடம் திரும்பக்
கேட்டேன்.

“தபால் நிலையத்திற்கு தபால்களைப்போட வந்தேன்”, கையில் சில உறையிடப்பட்ட கடிதங்களையும் வைத்திருந்தார். நான் சிறுநீர் அடித்த இடத்திற்கு பத்தடித் தள்ளி சன்னல்
அமைப்பாக இருந்திருக்க வேண்டிய இடத்திற்கு அப்பால் கடிதங்களைப்போட எத்தனித்தவரிடம்,

“ஐயா, தபால் பெட்டியில் தான் போடவேண்டும், இங்கு போட்டால் தபால்கள் போகாது, என்னிடம் கொடுங்கள் நகரத்திற்கு செல்லும்பொழுது நான், பெட்டியில் போட்டுவிடுகின்றேன்”

“அது சரிதான், போக வேண்டிய இடத்திற்குப்போகும், போக வேண்டிய காலக்கட்டத்திற்குப் போகுமே,,,, இந்த ராணுவ தபால் நிலையமே சேரவேண்டியவர்களுக்குச் சேர்ப்பிக்கும்” என
தபால்களை சன்னலில் எறிந்துவிட்டு எதுவும் பேசாமல் எதிர்ப்பக்கம் நடந்துபோனார். ஒரு வேளை மனக்கிறுக்குப்பிடித்தவராக இருக்கக்கூடும் என நானும் மாணவர் விடுதியை நோக்கி
நடக்கலானேன். அடுத்த இரண்டு நாட்கள் படிப்பிலும், அம்முவிற்கும் எனக்கும் பொதுவாக இருந்த நண்பர்களைத் தேடுவதிலேயே காலம் கழிந்தது. ஒரு சிலரைக் கண்டுபிடித்து,
அவர்களிடம் தான் அவளைச் சந்திக்க விரும்புவதாகவும் என்னுடைய இத்தாலிய முகவரியை அவளுக்குத் தெரிவித்துவிடவும் கேட்டுக்கொண்டேன்.

வேறொரு இளையராஜாப்பாடலுடன் மீண்டும் முந்தையப் பகுதிக்கு நடைபயிலப் போனபொழுது அந்த முதியவரும் அவரின் கடிதங்களும் நினைவுக்கு வந்தது. கடிதங்களை எடுத்து சரியான தபால் பெட்டியில் போட்டுவிடலாம் என அந்தக் கட்டிடத்தில் கடிதங்களைத் தேடினேன். கலைந்து கிடந்த சில உறைகளை சேகரித்துக் கொண்டிருந்த பொழுதுதான்
கவனித்தேன். அனைத்திலும் 43 ஆம் ஆண்டு , இங்கிலாந்து ராணியின் படம் போட்ட தபால் தலை ஒட்டப்பட்டிருந்தது. இத்தாலிய முகவரிக்கு கடிதம் எழுதப்பட்டு கனடாவில்
இருந்து அனுப்பப்பட்டிருந்தது.

அந்த முதியவர் வயதின் மூப்பினால் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று உறுதியாக நம்பினேன். இரண்டாம் உலகப்போர் காலக்கட்ட கடிதங்கள்,
அரியப்பொக்கிஷங்கள், ஏலத்திற்கு விட்டால் எப்படியும் கோடி ரூபாய் பெறுமானம் பெறும். அடுத்த மூன்று வருட படிப்பைப் பிரச்சினை இன்றி முடித்துவிடலாம் என மனம்
கணக்குப்போட்டது. ஒரு கடிதத்தை படிக்கப் பிரிக்க , முதுகில் மென்மையான அடி விழுந்தது. திகிலுடன் திரும்பிப்பார்க்க, முதியவர் கோபமாக என்னிடம் இருந்து கடிதங்களைப்
பிடுங்கிக்கொண்டார்.

“அடுத்தவர்களுக்கு வந்தக் கடிதத்தைப் பிரித்துப் படிப்பது அநாகரிகம்” என்றபடி, கையில் கொண்டு வந்திருந்த வேறு கடிதங்களை சன்னலில் எறிந்துவிட்டு அவரின் பாதையில்
திரும்பிப்போனார்.

“பைத்தியக்கார கிழவன்~ என்று மனதில் நினைத்தபடி, புதிதாக அவர் எறிந்த கடிதங்களைப் பொறுக்குகையில் ஒரு அதிர்ச்சிக் காத்திருந்தது. எதிலும் தபால் தலைகள் ஒட்டப்படவே
இல்லை. புத்தம் புதிதாக கனடிய முகவரிக்கு எழுதப்பட்ட கடிதங்கள். மறுநாள் விடியற்காலையிலேயே அந்த கட்டிடத்திற்கு வந்து, நேற்று எறியப்பட்ட கடிதங்கள் கிடக்கின்றனவா எனத் தேடினேன். தபால் தலையில்லாமல் எறியப்பட்ட ஒன்றுகூட
இல்லாமல் , புதிய கடிதங்கள் கிடந்தன தபால் தலைகளுடன், ஆனால் 44 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டு. கண்கள் சொருக கீழே சரியப் போனவனை அந்த முதியவர் மீண்டும்
கைதாங்கலாகப் பிடித்துக் கொண்டார். மனதும் உடலும் தெளிவடைந்தபின்னர்,

“அவரிடம் நேரிடையாகவே கேட்டேன், நீங்கள் கடந்த காலத்திற்கா கடிதங்கள் எழுதுகின்றீர்கள்”

“எதிர்காலத்தில் போய் சேரக்கூடிய கடிதங்களை நம்மால் அனுப்ப முடியும் பொழுது, ஏன் கடந்த காலத்திற்கு அனுப்ப முடியாது, இந்த ராணுவ தபால் நிலையம் அந்த சேவையை
எனக்கு கடந்த 70 வருடங்களாக செய்துவருகின்றது … வேண்டுமானால் நீ கூட முயற்சி செய்து பாரேன்” என்று சித்தர் வாக்கு போல சொல்லிவிட்டு தனது கடிதங்களுடன் அந்த
இடத்தை விட்டு நகர்ந்தார்.

அந்த இடம் அமானுஷ்யமாக திகிலூட்டினாலும், அம்முவிற்கு 2009 துவக்கத்தில் கடிதத்தை எழுதி இந்த கட்டிடத்தில் போட்டால் என்ன எனத் தோன்றியது. அன்று இரவே, அம்முவின்
பிரிவிற்கு சில மாதங்களுக்கு முன்னர் நடந்த சிலத் தென்றல் வருடும் சம்பவங்களை நினைவில் கொண்டு, அந்தக் காலக் கட்டத்தில் எழுதுவதைப் போலவே ஒரு கடிதம் எழுதி,
அவளின் அந்நாளைய அலுவலக முகவரியுடன் ,மறுநாள் அந்த கட்டிடத்தில் போட்டுவிட்டு வந்தேன், பத்து நாட்கள் நடையாய் நடந்து எனக்கு அம்முவிடம் இருந்து ஏதேனும் பதில் வந்து இருக்கின்றதா என எதிர்ப்பார்ப்பதிலேயே கழிந்தது. அந்த முதியவரும் தென்படவில்லை, அவருக்கான கடிதங்களும் அங்கே காணப்படவில்லை. இரண்டு வாரமாகியும் எந்தக் கடிதமும் எனக்கு வரவில்லை. ஒருவேளை எனக்கு வந்த கடிதத்தை இந்தக் கிழவர் எடுத்துக் கொண்டு போய் இருப்பாரோ என சந்தேகமும் ஏற்பட்டது. 15 ஆம் நாள் நம்பிக்கை கைவிடாமல், கடிதம் வந்திருக்கிறதா, எனப் பார்க்க போகையில் கிழவர் எதிரில் வந்தார்.

“எனக்கு வந்த கடிதம் ஏதேனுமொன்றை நீங்கள் எடுத்துச் சென்றுவிட்டீர்களா” எனப்பாவமாய் கேட்டேன்.

மையமாய் சிரித்துவிட்டு, ”உனக்கான தபால்கள் வந்து சேருமிடம் உனது இல்லத்திற்கு அருகில் இருக்கும் தபால் நிலையம் தான். இங்கு அனுப்ப மட்டும்தான் முடியும். , நாளை அங்கு போய் கேள், ஒரு வேளை வந்து இருக்கலாம்”

மறுநாள், உடைந்த இத்தாலியத்தில் என் வீட்டு முகவரிக்கு ஏதேனும் தபால்கள் வந்து இருக்கின்றனவா எனக்கேட்டேன்…. உள்ளேப் போய் சில நிமிடங்கள் கழித்து வந்த தபாலதிகாரி,

ஒரே ஒரு தபால் மட்டும் வந்திருக்கின்றது எனக் கையில் கொடுத்தார். தபால் தலையின் அச்சிடப்பட்டத் தேதியைப் பார்த்தேன்… கருப்புமை விரவி வருடம் தெரியவில்லை….
அனுப்புனர் முகவரி இல்லை, உறையின் மேல் இருந்த கையெழுத்து அம்முவினதுதான்.

அன்புடன் கார்த்திக்கிற்கு,

அம்மு எழுதிக் கொண்டது… நலம் நலமறிய ஆவல்……..

எனக் கடிதத்தைப் பிரித்துப் படிக்கலானேன்.

– ஜனவரி 23, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *