ஓணானுக்குப் பிறந்தவன்!

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: January 4, 2015
பார்வையிட்டோர்: 50,190 
 

அவனைப் பிடித்துவிட்டார்கள். கிரேக்க தேசத்தின் பாட்ரா எல்லையில் இரவு 2 மணிக்கு. அவன் நின்ற இடம் இதற்கு முன்னர் லட்சக்கணக்கான பயணிகள் நின்று நின்று பள்ளம் விழுந்து தேய்ந்துகிடந்தது. அவன் உயரம்கூட ஓர் அங்குலம் குறைந்தே காணப்பட்டது. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு வருடங்களில் பல தடவை பிடிபட்டிருக்கிறான். அன்று பிடிபடுவோம் என்று நினைக்கவே இல்லை. அவனுடைய கடவுச்சீட்டும் விசாவும் அத்தனை உறுதியாக இருந்தன. நீண்ட மேலங்கியைத் துளைத்துக் குளிர் அவன் உடம்பை நடுங்கவைத்தது. எல்லை பொலீஸ்காரர் பழைய காலத்துச் செப்பேட்டை ஆராய்வதைப் போல குனிந்து, கண்களைச் சுருக்கிக் கூர்ந்து படித்தார். கடவுச்சீட்டில் 48 பக்கங்கள் இருக்க வேண்டும். அவனு டைய கடவுச்சீட்டில் 46 பக்கங்கள் மட்டுமே இருந்தன. அவனுக்கே அது தெரியாது. அவர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள்.

ஒரு சின்ன அறைக்குள் நுழைந்தபோது மின்தூக்கியில் ஏறியிருப்பதாக அவன் நினைத்தான். அதுதான் விசாரணை அறை. அதிகாரி மேஜையின் முன் உட்கார்ந்து ”சொல்லுங்கள்…” என்றார். அவன் இன்னொரு நாற்காலியில் உட்கார்த்திவைக்கப்பட்டான். ”என்ன?” என்றான், ஒன்றுமே புரியாமல்.

”உங்கள் கதையை ஆரம்பத்திலிருந்து…” என்றான்.

அவனுக்குக் கிரேக்க மொழி தெரியும். ஆனால், தெரியாததுபோலப் பாசாங்கு செய்தான். மெள்ள மெள்ள ஆங்கிலத்தில் சொல்லத் தொடங்கினான்.

”இதே கிரீஸில்தான் மூன்று வருடங்களுக்கு முன்னால், 1983-ம் ஆண்டு கப்பலில் சேர்ந்தேன். அதன் பெயர் ஆர்கோ. என்னுடைய முதல் பயணம் பிரேசில் நாட்டுக்கு. அதற்குப் பின்னர் பலப் பல நாடுகளுக்குப் பயணித்தேன். உலகம் முழுக்கச் சுற்றினேன். இறுதியில் ஒருநாள் துருக்கி பாண்டிர்மா துறைமுகத்தில் கப்பலை விற்றுவிட்டார்கள். வேலை போய்விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றபோது, மூன்று பாகிஸ்தானிகள் எனக்கு உதவினார்கள். என் வாழ்க்கை மாறியது. துருக்கியில் பொஸ்ஃபோரஸ் என்கிற இடத்தில் தங்கினோம். கிழக்கும் மேற்கும் சந்திக்கும் அற்புதமான இடம் அது. எங்கள் விடுதியில் நின்று பார்த்தால், நீல மசூதி தெரியும். துருக்கியில் இயங்கும் மாஃபியா கும்பலுக்கு வேலை செய்வது என்று முடிவெடுத்தோம். அங்கே மாஃபியா ஓர் அரசாங்கம்போலவே பலத்துடன் செயல்பட்டது. அவர்கள் ஆதரவு இருந்தால் எந்தப் பிரச்னையையும் கடந்துபோகலாம் என்றார்கள். நான் புதியவன் என்பதால், பாகிஸ்தானியர்கள் எனக்கு வேலை கற்றுத் தந்தார்கள்.

ஓணானுக்குப் பிறந்தவன்!

துருக்கியில் 1980-களில் கார்கள் இறக்குமதி கிடையாது. கள்ளச் சந்தையில் அவற்றின் விலை எக்கச்சக்கமாக இருக்கும். எங்கேயாவது கார் ஒன்று விபத்தில் சிக்கிக்கொண்டால், மாஃபியா கும்பல் லைசென்ஸ் தகடுகளை உடனே பிடுங்கிவிடும். அதே மாதிரியான ஒரு புது காரை சுவிட்சர்லாந்தில் இருந்து வருவித்து, லைசென்ஸ் தகட்டை மாற்றி விற்றுவிடுவார்கள். ஒரு கார் 50 ஆயிரம் வரைக்கும் டாலர்களில் விலைபோகும். எங்கள் வேலை சுவிட்சர்லாந்துக்கு விமானத்தில் போய், அங்கே அவர்கள் சொன்ன வகை காரை வாங்கி ஓட்டிக்கொண்டு வந்து துருக்கியில் கொடுப்பதுதான். மிகச் சுலபமான வேலைதான். சூரிச்சில் தொடங்கி இத்தாலி, யூகோஸ்லேவியா, பல்கேரியா நாடுகளைக் கடந்து, துருக்கிக்கு ஓட்ட வேண்டும். கூலியாக 5,000 டாலர்கள் தருவார்கள். ஒரே வாரத்தில் இரண்டு கார்களைக்கூடக் கடத்தியிருக்கிறேன். கையிலே அத்தனை பணத்தையும் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விரயம் செய்த நாட்கள் அவை.

சுவிட்சர்லாந்தில் ஒருநாள் பளிங்குத் தரையில் ஒரு பெண்ணின் பிம்பத்தைக் கண்டு மோகித்தேன். அவள் அந்த நாட்டு நீச்சல் வீராங்கனை. பெயர் ஸிமோனா. மெய்யான நீலக் கண்கள். உற்றுப் பார்த்தால் ஒரு கடலுக்குள் மூழ்கிவிட்டதுபோல இருக்கும். சுவிட்சர்லாந்தில் நிற்கும் நாட்களில் அவளுடனேயே தங்குவேன். கவலை இல்லாத நாட்கள். நான் ஒரு பணக்கார விற்பனை அதிகாரி என்று நினைத்திருந்தாள் ஸிமோனா. ஒருநாள் அவளிடம் உண்மையைச் சொன்னபோது, ஒரு துள்ளுத் துள்ளி எழுந்து நின்றாள். தாங்க முடியாத உவகை அவளுக்கு. துணிச்சல்காரி. சாகசத்துக்கு அலைபவள்.

‘என்னையும் உன்னுடன் அழைத்துப் போ’ என்றாள். மாஃபியாவுக்கு அது பிடிக்காது. எனினும், அவள் பக்கத்தில் இருக்க புது காரை 2,500 கிலோ மீட்டர்கள் ஓட்டினேன்.

துருக்கி எல்லைக்குள் நுழைந்ததும் முதலில் எதிர்ப்பட்ட உணவகத்தில் காரை நிறுத்தினேன். வாசலில் ஒருவன் இரண்டு கைகளாலும் தூக்கி ஒரு வாத்தியத்தை வாயிலேவைத்து ஊதினான். அதன் நீளம் வாசிக்கும்போது சில சமயம் கூடியது. சில சமயம் குறைந்தது. நான் அவனுக்கு 100 லீரா காசு போட்டேன். ஸிமோனா என் பையிலிருந்து பிடுங்கி இன்னொரு 100 லீரா போட்டாள். அவள் மகிழ்ச்சியில் இருந்தாள். நாங்கள் உணவருந்திவிட்டுத் திரும்பியபோது, எங்கள் காருக்கு முன்னால் இன்னொரு கார் நின்றது. காரிலே ஒருவரும் இல்லை. ஆனால், அதன் உள்ளிருந்து கடாமுடா என்று சத்தம் மட்டும் வந்தது. ஸிமோனா என்னிடம் ஆலோசனை கேட்கவில்லை. கனமான ஸ்பானரை எடுத்து ஓர் அடியில் கார் டிக்கி கதவைத் திறந்துவிட்டாள். அதற்குள் கை, கால்கள் கட்டப்பட்டு ஒரு பெரிய உருவம் கிடந்தது. அத்தனை பெரிய உருவத்தை எப்படிச் சுருட்டி உள்ளே வைத்தார்களோ தெரியவில்லை. அவன் வாயை அவிழ்த்ததும் தன்னைக் காப்பாற்றச் சொல்லி மன்றாடினான். யோசிப்பதற்கு நேரம் இல்லாததால் அவனை காரிலே ஏற்றிக்கொண்டு வேகமாகப் பறந்தோம். ஸிமோனா இரண்டு வால் கிடைத்த நாயைப் போல மகிழ்ச்சியில் தத்தளித்தாள். அவளுக்குச் சாகசம் என்றால் ரொம்பப் பிடிக்கும்.

அவனுடைய பெயர் ஆஃமெட். அவன் வேறு மாஃபியா கும்பலைச் சேர்ந்தவன். எதிரிகள் அவனைப் பிடித்துக் கொல்வதற்காகக் கொண்டுபோயிருக்கிறார்கள். 20 மைல் தள்ளி அவனை இறக்கிவிட்டபோது கண்கள் கலங்க, ‘எனக்கு உயிர் தந்த உங்களை மறக்க மாட்டேன். நன்றி’ என்றான். நான் ஓட்டிவந்த காரை மாஃபியாவிடம் ஒப்படைத்துவிட்டு, பணத்தைப் பெற்றுக்கொண்டு நான்கு நாட்கள் ஸிமோனாவுடன் உல்லாசமாகச் சுற்றினேன். அதி விலை உயர்ந்த ஹோட்டல்களில் தங்கினோம். அயாசோஃபியாக் கட்டடத்தை 100 தடவை படம் பிடித்தாள். அது 1,500 வருடங்கள் பழமைவாய்ந்த கட்டடம். முதலில் தேவாலயமாக இருந்து, பின்னர் மசூதியாக மாற்றப்பட்டு அதற்கும் பிறகு, அருங்காட்சியமாக வடிவமைக்கப் பட்டது. அதன் முன்னால் என்னை நிற்கச் சொன்னாள். ‘நான் துப்பாக்கி வைத்திருக்கிறேனா அல்லது பல் வைத்தியரா அல்லது வருமான வரி அதிகாரியா? சிரி…’ என்றாள். ‘யார் வருமான வரி அதிகாரி?’ என்றேன். அப்படி ஒருவர் இருப்பதும், உழைக்கும் காசுக்கு வரி செலுத்த வேண்டும் என்பதும்கூட எனக்குத் தெரியாது.

அன்று இரவை மறக்க முடியாது. ஒரு காலணியை மற்ற காலால் அகற்றினாள். எனக்கும் சுவருக்கும் இடையில் அவள் படுத்தபோது வேடிக்கையாக இருந்தது. முதலை போல இரண்டு கால்களையும் மடித்தபடிதான் படுப்பாள். அன்று மியூஸியத்தில் பலவிதமான ஓவியங்களைப் பார்த்திருந்ததால், அவள் ஒரு கேள்வி கேட்டாள். ‘அது எப்படி ஆதாமும் ஏவாளும் வரும் ஓவியங்களில் எல்லாம் சரியாக ஒரு செடியின் இலைகள் அந்தந்த இடங்களை மறைக்கின்றன’. அதன் காரணத்தை அவள் வாய்க்குள் சொன்னேன். அவள் கண் மை மீனின் செதிலைப் போல இரவிலே பளபளத்தது. அவள் பிடறியில் மயிர் நிறம் மாறும் இடத்தில் முத்தமிட்டேன். அவள் மூச்சு எனக்குக் கேட்டது. பின்னர், என் மூச்சு எனக்குக் கேட்கத் தொடங்கியது. அன்று இரவு நாங்கள் தூங்கவே இல்லை. அதன் பின்னர் நான் அவளைச் சந்திக்கவில்லை. அதுதான் கடைசி இரவு என்பது அவளுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது.

விமான நிலையத்தில் தடுப்புக்கு அப்பாலிருந்து, சத்தியப் பிரமாணம் செய்வதுபோல வலது கையை உயர்த்தி விடைபெற்றாள். மின் படிகள் மடிந்து மடிந்து கீழே போக, அவள் பின் தலையும் மெள்ள மெள்ள மறைந்தது. நான் திரும்பியபோது இருவர் என்னைத் தொடர்ந்தார்கள். துருக்கி பொலீஸார். கடவுச்சீட்டைக் காட்டச் சொன்னார் கள். எனக்கு உடனே விஷயம் விளங்கிவிட்டது. துருக்கிக்குள் நுழையும்போது கடவுச்சீட்டில் ஒரு காரின் பட முத்திரையைக் குத்துவார்கள். காருடன் நாட்டைவிட்டுப் போகும்போது அந்த முத்திரையை நீக்கிவிடுவார்கள். பொலீஸ்காரர் ‘எங்கே கார்?’ என்றார். நான் பேசாது நின்றேன். சிறையிலே என்னை அடைத்தார்கள். 40 பேர்களால் நிறைந்திருந்த சிறை. மூன்று நாட்கள் அந்த நரகத்தில் இருந்த பின்னர், மாஃபியா வந்து என்னை மீட்டது. என் மேல் பொலீஸாருக்குச் சந்தேகம் விழுந்துவிட்டதால், மாஃபியாவுக்கு என்னால் பிரயோஜனம் இல்லை. ஆனாலும் நல்லவர்கள். கட்டாருக்கு டிக்கெட் தந்து அங்கே ஒரு கப்பல் வேலைக்கும் ஏற்பாடு செய்தார்கள்.

கட்டாரில் என்னோடு சேர்த்து 19 பேர் கப்பலில் வேலைக்கு ஏறினோம். ஒருவரோடு ஒருவர் அறிமுகம் செய்துகொண்டோம். என் பெயரைச் சொன்னபோது ஒருவரும் சிரிக்கவில்லை. எனக்கு ஆறுதலாக இருந்தது. அந்தக் கப்பல் மிகப் பழையது. பேய் பிடித்ததுபோல இருந்தது. கப்பலில் அதிகாரிகள் ஒருவருமே இல்லை. என்ன செய்வது என்று தெரியாத குழப்பத்தில் நாள் முழுவதையும் கழித்தோம். இரவு 11 மணி அளவில் கேப்டனும் இரண்டு அதிகாரிகளும் தடதடவென்று வந்து ஏறினர். கப்பலில் சாமான்கள் இல்லை. போதிய உணவு இல்லை. எங்கே போகிறது என்று ஒருவருக்குமே தெரியாது. நாங்கள் ஒருவருடன் ஒருவர் ரகசியமாகப் பேசிக்கொண்டு, உள்ளுக்குள் பயந்தபடியே இருந்தோம். ஏதோ பெரிய அசம்பா விதம் நடக்கப்போகிறது என்பதை மட்டும் உணர முடிந்தது.

நாலாவது நாள் கப்பல் டிஜிபுட்டி போய் ஒரு நாள் நின்றது. ஒரு சாமானும் ஏற்றவில்லை. சில நாட்களில் ஏடன் துறைமுகத்தைத் தாண்டியபோது இன்னும்கூட பயம் பிடித்தது. என்னுடன் வேலை செய்த கிறிஸ்துவப் பையன் அழத் தொடங்கினான். நான் சொன்னேன், ‘அழுவதற்கு ஒரு திறமையும் தேவை இல்லை. குழந்தைகூட அழும். நீ ஒரு மாலுமியாகச் செயல்படும் நேரம் இது’ என்றேன். நடுங்கிக்கொண்டு சிலுவைக் குறியிட்டான். என்னவென்று கேட்டேன். பூமியில் முதலில் இறந்த மனிதனின் சமாதி அங்கே இருக்கிறது என்று சுட்டிக் காட்டினான். ‘ஆதாமின் சமாதியா?’ என்றேன்.

‘இல்லை… இல்லை. முதலில் உண்டான மனிதன்தான் ஆதாம். முதலில் இறந்தவன் ஆபேல். ஆதாமின் இரண்டாவது மகன். அவன் கொலைபட்டல்லவோ இறந்தான். நீ சிலுவைக் குறியிடு. உனக்கு நன்மை கிடைக்கும்’ என்றான். எதற்கும் இருக்கட்டும் என்று நானும் சிலுவைக் குறி போட்டேன்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் உணவு முடிந்துவிட்டது. நேற்றோடு தண்ணீரும் இல்லை. இரவு 10 மணியிருக்கும். திடீரென்று கப்பல் பேய் வேகம் எடுத்து பயங்கரமாக ஆட ஆரம்பித்தது. கப்பல் இந்த வேகத்தைத் தாங்க முடியாது என்பது எனக்குத் தெரியும். நான் எழுந்து உட்கார முயன்றேன். இதனிலும் மோசமான ஒன்று நடக்க முடியாது என்று நான் நினைத்தபோது, அது நடந்தது. கப்பல் பெரும் சத்தத்துடன் பாறையில் மோதிச் சரிந் தது. சுவரில் ஒரு கிரேக்க அழகியின் காலண்டர் மாட்டியிருந்தது. அடிபட்ட வேகத்தில் காலண் டர் திரும்பி பின் பக்கமாக ஒரு கோணத்தில் தொங்கியது. பின் அட்டையிலே குழந்தையின் கையெழுத்தில் ஒரு வாசகம் எழுதியிருந்தது.

‘ஆபத்து. இந்தக் கப்பலை உடைத்துக் காப்புறுதிப் பணம் வாங்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள். உடனே தப்பி ஓடவும்.’

ஓணானுக்குப் பிறந்தவன்!2

நான் மேல் தளத்துக்குப் பாய்ந்து வந்தபோது, உயிர்க் காப்புப் படகுகளில் ஆட்கள் ஏறித் தப்பிக்கொண்டு இருந்தார்கள். நானும் குதித்தேன். எகிப்தின் தலைநகரமான கெய்ரோவுக்கு எங்களை அழைத்துச் சென்று, அவசர அவசரமாக அவரவர் நாடுகளுக்கு டிக்கெட்டையும் சம்பளத்தையும் கொடுத்துப் போகச் சொன்னார்கள். என்னுடன் வந்த 18 பேரும் வாய் திறக்காமல் அவர்கள் கொடுத்ததை வாங்கிக்கொண்டு புறப்பட்டார்கள்.

எனக்குப் புரிந்துவிட்டது. கப்பலை உடைத்து அவர்கள் மில்லியன் கணக்கில் சம்பாதிப்பார்கள். எங்கள் உபயோகம் முடிந்துவிட்டது. என் முறை வந்தபோது கையில் டிக்கெட்டைத் தந்தார்கள். ’14-ம் தேதி

டிக்கெட் போடப்பட்டிருந்தது. விபத்து நடந்தது 17-ம் தேதி. எப்படிச் சாத்தியம்? இது மிக மோசமான மோசடி. நான் விடப்போவது இல்லை. லோயிட்ஸ் காப்புறுதி நிறுவனத்துக்கு அறிவிக்கப்போகிறேன். எங்கள் எல்லோருக்கும் தகுந்த இழப்பீடு தர வேண்டும்’ என்றேன். அவர்கள் ‘உங்களை மேலதிகாரியிடம் அழைத்துச் செல்கிறோம்’ என்றார்கள்.

இரண்டு நாள் கழிந்தது. கெய்ரோவின் மிக ஒடுக்கமான பாதைகளில் அலையவைத்து, ஒரு பழைய வீட்டுக்குக் கீழே உள்ள பாதாள அறைக்கு என்னைக் கூட்டிச் சென்றார்கள். அது ஆடம்பரமாகப் பளிச்சென்று இருந்தது. இரண்டு காவலா ளிகள் துப்பாக்கிகளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு நின்றார்கள். அவர்கள் தலைவன் சிங்காசனம் போன்ற ஒன்றில் பாதி உடல் வெளியே தள்ளச் சரிந்துகிடந்தான். கீழே லுங்கி; மேலே சட்டை இல்லை. அவன் வயிறு மடிந்து மடிந்து அவன் வயிற்றின் மேலேயே கிடந்தது. முகத்தைத் திருப்பினான். என்னை அறியாமலே நான் கத்திவிட்டேன். ‘ஆஃமெட்…’ துருக்கியில் காருக்குள் மடித்துவைக்கப்பட்ட அதே மனிதன். ‘நண்பா…’ என்று கத்தியபடி சிரமத்துடன் எழுந்து வந்து என்னைக் கட்டிப்பிடித்தான். நான் உறைந்து போனேன். அவன் சொன்னான், ‘உன்னைக் கொல்லச் சொல்லி எனக்கு உத்தரவு வந்திருக்கிறது. ஒருமுறை நீ என்னைக் காப்பாற்றினாய். இந்த முறை நான் காப்பாற்றுகிறேன். கணக்குத் தீர்ந்தது. அடுத்த முறை நீ பிடிபட்டால், நான் கொன்றுவிடுவேன்’ என்றான். பின்னர், ‘உனக்கு என்ன வேண்டுமோ கேள். எதைக் கேட்டாலும் தருவேன்’ என்றான்.

நான் அமெரிக்க விசா கேட்டிருக்கலாம். பிரெஞ்ச் விசா கேட்டிருக்கலாம். ஸிமோனாவின் நாட்டுக்கு விசா கேட்டிருக்கலாம். ஆனால், நான் கிரீஸ் போக வேண்டும் என்று சொன்னேன். போதிய பணம் கையிலே தந்து அவன்தான் என்னை இங்கே அனுப்பினான்!” என்றான்.

இரண்டு எல்லை பொலீஸ்காரர்களும் நம்ப முடியாமல் அவனையே உற்று நோக்கினர். ஒருவன் கேட்டான். ”மறுபடியும் எதற்கு இங்கே வந்தாய்?”

”இங்கேதானே நான் ஆரம்பித்தேன்” என்றான். இப்போது மூன்றாவதாக ஒருத்தன் வந்து சேர்ந் தான். நூதனமான பிராணியைப் பார்ப்பதைப் போல அவனைப் பார்த்தான். ‘ஓணானுக்குப் பிறந்தவன் என்ன சொல்கிறான்?’ என்று கேட்டான். அவர்கள் சொன்னார்கள், ”கதை அளக்கிறான்.”

பின்னர் மூவரும் கலந்து ஆலோசித்தார்கள். உரத்த குரலில் சண்டையிட்டார்கள். அவர்கள் அவனைச் சிறையில் அடைக்கலாம். அதனால், அவர்களுக்குத்தான் நட்டம். திருப்பி அனுப்ப வேண்டும் என்றால், டிக்கெட் காசை அரசாங்கம் கொடுக்க வேண்டும். அது இன்னும் கூடிய நட்டம். புதிதாக வந்தவன் 46 பக்க கடவுச்சீட்டைக் கையிலே வைத்து ஆட்டிக்கொண்டு கிரேக்க மொழியில் ”இவனிடம் நிறையப் பணம் இருக்க வேண்டும். இவனைக் கொன்றுவிட்டால் என்ன?” என்றான்.

பிதாகரஸ், பிளேட்டோ, ஆர்க்கிமிடிஸ் போன்ற அதி உன்னத கிரேக்க மூளைகளின் வழி வந்தவர்கள், தங்களிடம் இருக்கும் சின்ன மூளைகளைப் பாவித்துச் சிந்தித்தார்கள். வாக்குவாதம் செய்தார்கள். அவனுக்குச் சிரிப்பாக வந்தது. இலங்கையைவிட்டு அவன் வெளியேறி, சரியாக மூன்று வருடங்கள், நான்கு மாதங்கள், எட்டு நாட்கள் ஆகின்றன. இவர்கள் கொடுக்கப்போகும் எந்தத் தண்டனையும் அவன் ஏற்கெனவே அனுபவித்ததற்குக் கிட்டவும் வர முடியாது.

இறுதியில் அவர்கள் எந்த முடிவுக்கு வந்தாலும் அவனுக்குச் சரிதான். இவர்களுக்கு பாவம் ஒரு நாடுதான் இருக்கிறது.

அவனுக்கு உலகம் முழுக்க நாடுகள்!

– மே 2013

Print Friendly, PDF & Email

1 thought on “ஓணானுக்குப் பிறந்தவன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *