தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 8,324 
 

ரொட்டிக் கடை வைத்திருந்த ஒருவருக்கு, கடைக்கு வெண்ணெய் சப்ளை செய்பவர் மீது வெகுநாட்களாக ஒரு சந்தேகம் இருந்தது. தன்னை அவர் ஏமாற்றுகிறாரோ என்று எண்ணிக் கொண்டேயிருந்தார். அவர் தரும் வெண்ணெய் எடை குறைவாக இருப்பதாக நினைத்தார்.

ஒருவழியாகத் தீர்மானம் செய்து அவர்மீது வழக்கு தொடுப்பது என்று முடிவு செய்தார்.

நீதிபதியின் முன்பு, வெண்ணெய் வியாபாரி கொடுத்த வெண்ணெய்ப் பொட்டலத்தை எடை போட்டுக் காட்டினார் –

“பாருங்கள், நீதிபதியவர்களே, 450 கிராம்தான் இருக்கிறது. 500 கிராம் என்று சொல்லி எனக்கு இதைத் தருகிறார் இந்த வியாபாரி. இப்படிப் பலமுறை இவர் ஏமாற்றியிருக்கிறார். இதனால் இவருக்குத் தக்க தண்டனை கொடுக்க வேண்டும்’ என்று வேண்டிக் கேட்டுக் கொண்டார்.

நீதிபதி வெண்ணெய் வியாபாரியைப் பார்த்து, “என்ன சொல்கிறீர்கள்? ஒவ்வொரு முறையும் 50 கிராம் குறைவாகத் தருவது நியாயமா?’ என்று கேட்டார்.

அதற்கு வெண்ணெய் வியாபாரி, “ஐயா, என்னிடம் 500 கிராம் எடைக் கல் கிடையாது. அதனால், 500 கிராம் எடையுள்ள பொருள் ஏதேனும் ஒன்றை எடைக்கல்லுக்குப் பதிலாக பயன்படுத்துவேன். எப்போதும் இவர் கடை ரொட்டியைத்தான் வாங்குவேன். பாக்கெட்டில் 500 கிராம் என்று எழுதப்பட்டிருப்பதை நம்பி, எடைக்கல்லுக்குப் பதிலாக தராசில் இவரது ரொட்டியைப் பயன்படுத்துவேன். இப்போது பாருங்கள்… இவரது ரொட்டியும் வெண்ணெயும் சம எடையாக இருக்கும்…’ என்று கூறியபடி அதை நிறுத்துக் காட்டினார்.

இரண்டின் எடையும் சமமாக இருந்தது.

ரொட்டிக் கடைக்காரர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு, மனம் திருந்தினார்.

– எஸ்.ஆறுமுகம், கழுகுமலை.(ஜூலை 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *