முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 1,944 
 

நாற்பது ஆண்டுகட்குமுன் பள்ளிப்பாடப் புத்தகத்தில் உள்ள கதை இது.

வயதான தன் தந்தையைத் தெருத்திண்ணையில் உட்காரவைத்து, ஒரு சட்டியைக் கொடுத்து, நாடோறும் அதில் சோறு போட்டுவைத்து, அவர் உண்ணும்படிச் செய்யத் தன் மனைவியிடம் சொல்லிவைத்திருந்தான் ஒருவன்.

பல நாட்கள் இந்தத் தொண்டு நடந்துவந்தது.

ஒருநாள் சோறு போடப் போகும்போது, கிழவனிடம் அச் சட்டி இல்லை. இச்செய்தியைக் கணவனிடம் சொல்லுகிறாள் மனைவி.

சட்டி எங்கே என்று கேட்டு, அவரைத் திட்டி அடிக்கவும் கை ஓங்குகிறான் அவன். அப்போது அவன் பிள்ளை ஒடி வந்து, “அப்பா, நான் தான் அந்தச் சட்டியை எடுத்து ஒளித்து வைத்திருக்கிறேன்” என்று சொன்னான்.

‘ஏன் அப்பா?’ என்று கேட்டதற்கு, ‘சிறுவன்’ “உங்களை இம்மாதிரித் திண்ணையில் உட்கார வைத்துச் சோறு போட எனக்கு ஒரு சட்டி வேண்டாமா? அதற்காக எடுத்துப் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்” என்றான்.

மகனுடைய சொல்லைக் கேட்டு, ‘தனக்கும் இப்படி நேரிடுமோ’ என்று தந்தை பயந்தான்.

தன் தந்தைக்குத் தான் செய்யும் கொடுமைகளையே தன் மகன் தனக்கும் செய்வான் என்று அஞ்சித் திரும்பினான்; திருந்தினான்.

இக் கதை நமக்கு, ஓர் உண்மையை விளங்குகின்றது.

‘தினை விதைத்தவன் தினை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்’

இதுதான் அந்த உண்மை.

நாம் செய்கின்ற செயல்களின் பலன்களை பெரும் பாலும் இப்பிறவியிலேயே அனுபவிக்க நேரிடும் என்பதற்கு இது ஒரு சான்று.

– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *