கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 1, 2013
பார்வையிட்டோர்: 11,768 
 

ரம்யாவிற்கு அவளதுதோழிகளுடன் அடிக்கடி சண்டைவந்தது. ஒன்பதாவதுபடிக்கும் சிறுமி அவள் எதற்காகத் தோழியருடன் தனக்குச்சண்டை வருகிறது என்பதை அவளால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அப்படிச் சண்டைவராமல் தடுக்கவும் முடியவில்லை. இப்படி அடிக்கடி சண்டைபோடுவதால் அனைவரும் சேர்ந்து தன்னை ஒதுக்கிவிடுவார்களோ என்று அவள் பயந்தாள். கடும் மனஉளைச்சலுக்கும் ஆளானாள். மிகுந்த மனக்கவலையுடன் இருந்த ரம்யாவின்முன்னால் ஒருநாள் தேவதைஒன்று தோன்றியது. ரம்யா அந்ததேவதையிடம் “எனக்கு உதவ முடியுமா?”- என்றுகேட்டாள்.

“அதற்காகத்தானே வந்திருக்கிறேன்!”- என்ற தேவதை ரம்யாவிடம் ஒரு முகம்பார்க்கும் கண்ணாடியைத் தந்தது. “இது சாதாரணக்கண்ணாடி கிடையாது! மாயக்கண்ணாடி! நாம நம்மளை என்னவா நினைச்சுக்கிடடு இந்தக்கண்ணாடியைப் பாக்குறோமோ அந்தஉருவம் இதுல தெரியும்!”- என்ற தேவதை “நீ இதை உன்நண்பர்கள் எல்லார்கிட்டயும் காண்பி! அதுக்குப்பின்னாடி என்னை வந்துபாரு!”- என்று சொல்லிவிட்டு மறைந்துபோனது.

தனக்கு உதவச்சொன்னால் இப்படி கண்ணாடியைத் தந்துவிட்டுப்போகிறதே இந்ததேவதை என்று குழம்பினாள் ரம்யா. இருந்தாலும் தேவதை சொன்னதைச் செயல்படுத்தினாள். அடிக்கடி தன்னை ஒரு ராணியாகக் கற்பனை செய்துகொள்வது அவள் வழக்கம். ஓருராணியாகக் கற்பனை செய்துகொண்டு கண்ணாடியைப்பார்த்தாள். பல்லக்கில் பவனிவரும் மகாராணியாகத் தெரிந்தாள்.

ரம்யாவின்தம்பிக்கு கௌபாய்படங்கள் என்றால் உயிர். தன்னை ஒரு கௌபாய் வீரனாகக் கற்பனை செய்துகொண்டு கண்ணாடியைப் பார்த்தான் அவன் ஸ்டைலான கௌபாய் வீரனாகத் தெரிந்தான். அக்கம்பக்கம் குடியிருக்கும் தனதுதோழியர் சிலரிடம் அந்தக்கண்ணாடியைக் காண்பித்தாள் ரம்யா. தனது வகுப்பு தோழியர் சிலரை வீட்டுக்கு வரவழைத்து அவர்களிடமும் காண்பித்தாள். ஒவ்வொருவருககும் ஒவ்வொரு உருவம் தெரிந்தது.

பக்கத்துவீட்டுத்தோழிக்கு அரக்கியாக, சித்தப்பாபையனுக்கு ஏர்ஓட்டும் உழவனாக, வகுப்புத்தோழிக்கு விஞ்ஞானியாக, அத்தை பையனுக்கோ சர்க்கஸில் கூத்துகாட்டும் கோமாளியாக அவரவருடைய விருப்பத்திற்கேற்ப உருவங்கள் அந்தக்கண்ணாடியில் தெரிந்தன. ஒவ்வொருவரின் கற்பனையும் ஒவ்வொருவிதத்தில் சுவராசியமானதாகத்தான் இருந்தது. தேவதை தனக்கு என்னவழி சொல்லப்போகிறது? மிகுந்த ஆர்வத்துடன் ஒருநாள் தேவதையை அழைத்தாள். ஓர் அர்த்தப்புன்னகையுடன் ரம்யாவின் முன்னால் தோன்றியது தேவதை.

“என்ன ரம்யா உன்நண்பர்கள்கிட்ட காண்பிச்சியா?”- கேட்டது அது.

“காண்பிச்சேன்! இந்தா உன்கண்ணாடி…!”- ரம்யா கண்ணாடியைத் திருப்பிதர அதைப் பெற்றுக்கொண்டு கிளம்பத்தயாரானது தேவதை.

“என் பிரச்னைக்குத் தீர்வு…?”- அவசரமாக இடைமறித்தாள் ரம்யா.

“நீதான் சூட்டிகையான பெண்ணாச்சே! இந்தக் கண்ணாடிக்குப்பின்னால ஒளிஞ்சிருக்குற உண்மையை உன்னால புரிஞ்சுக்க முடியலையா?”- கேட்டது தேவதை.

“குழப்பமா இருக்கு! நீயே சொல்லிறேன்?”-ரம்யா கெஞ்சினாள்.

ஓரிருவிநாடிகள் அமைதிக்குப்பின்பு தேவதை சொல்ல ஆரம்பித்தது. “கண்ணாடில தெரிஞ்சது உங்க உருவமில்ல! அது உங்க கற்பனை! அதாவது உங்க சிந்தனை! எந்த ரெண்டுபேரோட சிந்தனையாவது ஓன்னுபோல இருந்துச்சா ரம்யா!”- தேவதை கேட்டது.

“இல்லை இல்லை!”- தலையாட்டி மறுத்தாள் ரம்யா.

“இதுதான் மனுசங்க மனசு ரம்யா! எந்தஒரு சூழ்நிலையிலும் எந்த ரெண்டுபேரோட மனசும் ஒன்னுபோல சிந்திக்காது! நாலுபேர் மத்தில நாம இருக்கும்போது இதை இயல்பா எடுத்துக்கனும்! உனக்கு என்ன பிரச்னைனா நீ மத்தவங்க கருத்தை ஏத்துக்க மறுக்குற! நீ நினைச்சதுதான் சரின்னு பிடிவாதம் பிடிக்குற! நீ எதை விரும்புறியோ அதைத்தான் சுத்திஇருக்குறவங்களும் விரும்பனும்னு எதிர்பாக்குற! எப்ப நம்ம கருத்தை மத்தவங்கமேல வலிஞ்சு திணிக்குறோமோ அப்ப அந்தஇடத்துல கண்டிப்பா சண்டைசச்சரவு வரத்தான் செய்யும்! அதனாலதான் உனக்கு உன் நண்பர்களோட அடிக்கடி சண்டை வருது!”- என்ற தேவதை சற்றுஇடைவெளி விட்டுச்சொன்னது.

“உன்னோடகருத்து சரியா இருக்கலாம்! ஆனா அதைச்சொல்றவிதம்னு ஒன்னு இருக்கு! அதிகாரமா சொன்னா எடுபடாது! பொறுமையாஅன்பா சொன்னா எல்லோரும் ஏத்துப்பாங்க! உன்னோட அணுகுமுறைய மாத்திப்பாரு ரம்யா! எந்த நண்பர்கள்ல்லாம் சேர்ந்து உன்னை ஒதுக்கிருவாங்களோன்னு பயப்படுறியோ அவங்களே உன்னை தலைமேல தூக்கிவைச்சுக் கொண்டாடுற சூழ்நிலை உருவாகும்! நான் வர்றேன்!”- என்று கூறிவிட்டு தேவதை மறைந்துபோனது.

பள்ளியில் மதியஉணவு இடைவெளிநேரம். ரம்யா தனது பென்சிலைச் சீவுவதற்காக ஷார்ப்னரைத் தேடினாள். அவளுடைய ஷார்ப்னரை தோழிஓருத்தி வைத்திருந்தாள். ரம்யாவிற்கு முணுக்கென்று கோபம் வந்தது. வேறொருசமயமாக இருந்தால் அந்தத்தோழியை கண்டபடி திட்டியிருப்பாள். ஆனால் இப்போது தேவதைகூறிய அறிவுரை ஞாபகத்திற்குவர நயந்துபேசினாள்.

“நீதான் ஷார்ப்னரை எடுத்தியா? ஓருவார்த்தை சொல்லிட்டு எடுத்திருக்கக்கூடாதா? நீ எடுத்ததுதெரியாம நான் ரொம்பநேரமா தேடிக்கிட்டிருக்கேன் பாரு!”- என்றாள். இவள் சுடுசொற்களை பேசும்போது அவர்களும் பதிலுக்குச் சுடுசொற்களை வீசுவார்கள். ஆனால் இப்பொது தோழி அப்படிப் பேசவில்லை.

“ஸாரிப்பா! உன்கிட்ட கேக்காம எடுத்தது என் தப்புதான்! என்னை மன்னிச்சரு!”- என்றபடி ஷார்ப்னரைத் திருப்பித்தந்தாள். அணுகுமுறை செய்யும் மாயஜாலத்தை நன்றாகவே புரிந்துகொண்டாள் ரம்யா. தொடர்ந்து அதைக் கடைபிடித்தும் வந்தாள். அதற்குப்பின்னால் அவளுக்கும் அவளது தோழியருககும் இடையே சண்டைகளே வரவில்லை.

– 14.04.2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *