ஒரு மகானிடம் போக்கிரி ஒருவன் சீடனாக இருந்தான். அவனுக்கு அவனுடைய நாக்குதான் எதிரி. எல்லோரையும் எப்போதும் அவன் கேலி செய்து கொண்டும் திட்டிக் கொண்டும் இருப்பான்.
அந்த மகானுக்கு அந்தப் போக்கிரியின் உயிரைக் கொண்டு போவதற்கு எமன் வரப்போகிறான் என்பது முன்னதாகத் தெரிந்தது.
அதை அவர், அந்தச் சீடனிடம் கூறி எச்சரிக்கையாக இருக்கும்படி பணித்தார்.
மற்ற சீடர்களுக்கும் அந்தப் போக்கிரி மாதிரியே உடை அணிவித்து அவர்களுடன் அவனையும் படுத்துறங்கும்படி ஏற்பாடு செய்திருந்தார்.
உயிர் எடுக்கப்பட வேண்டிய நாளும் வந்தது.
இரவு எமதூதர்கள் வந்து படுத்துக் கிடக்கும் சீடர்களில் அந்தப் போக்கிரி யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறினார்கள்.
அப்போது ஒரு எமதூதன் தனது சாமர்த்தியத்தால் போக்கிரியைக் கண்டுபிடித்துவிடலாம் என்று நினைத்து, “எல்லாம் நன்றாகத்தான் வேஷம் போட்டிருக்கிறார்கள்… ஆனால் ஒரே ஒருத்தன் மட்டும் ஒரு சிறிய தவறு செய்திருக்கிறான்’ என்று உரக்கக் கூவினான்.
பயத்தில் தூங்குவது போலப் பாசாங்கு செய்துகொண்டிருந்த போக்கிரி உடனே எழுந்து, “என்ன தவறு அது?’ என்று கேட்டான்.
“உன் நாக்குதான் உன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டது… இதுதான் நீ செய்த தவறு!’ என்று கூறியபடியே அந்தப் போக்கிரியை எமலோகத்துக்குக் கூட்டிச் சென்றான்.
– எஸ்.ஆறுமுகம், கழுகுமலை. (மார்ச் 2012)