அந்த ஊரில் பஞ்சகாலம் நிலவியது! மழையின்றி வயல்கள் வறண்டு தோற்றமளித்தன. தண்ணீர் பற்றாக்குறை. உணவுக்கு வழியில்லை.
அங்கு ஒரு பெரும் செல்வந்தர் இருந்தார். அவர் இளகிய மனம் கொண்டவர். அவரிடம் ஊர்மக்கள் சென்று தங்களது நிலைமையைக் கூறினார்கள்.
தங்கள் குழந்தைகளுக்கு மட்டும் ஒரு ரொட்டித் துண்டை அளிக்கும்படி கேட்டனர். அதற்கு ஒப்புக் கொண்ட செல்வந்தர், தனது வேலையாட்களிடம் ஊரிலுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும்படி கூறினார். அதற்கேற்றார்போல ரொட்டிகள் வாங்கச் சொன்னார். ரொட்டிகள் அதிகரிக்கவும் கூடாது. குறைவாகிவிடவும் கூடாது என்றும் கட்டளையிட்டார். குழந்தைகள் மூன்று வேளைகளுக்கும் ரொட்டி வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்தார்.
அன்றிலிருந்து, காலையில் கூடையில் ரொட்டிகளை வைத்துக் கொண்டு செல்வந்தர் வெளியில் அமர்ந்து கொண்டார்.
குழநதைகள் ரொட்டியைப் பார்த்தவுடன், போட்டி போட்டுக் கொண்டு, “எனக்கு முதலில்… எனக்குப் பெரிய ரொட்டி வேண்டும்…’ என்று கூச்சலிட்டுக் கொண்டும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டும் ரொட்டிகளை வாங்கிப் போய்க் கொண்டிருந்தனர்.
ஒரே ஒரு சிறுமி மட்டும் அனைவரும் வாங்கிய பின்னர் கடைசியில் பொறுமையாக வாங்கிச் சென்றாள்.
அதேபோல மதிய வேளையிலும் ரொட்டி வழங்கப்பட்டது. அப்போதும் அதே கூச்சல்… அதே குழப்பம்… அந்தச் சிறுமி மட்டும் கடைசியாக வந்து வாங்கிச் சென்றாள். செல்வந்தர் அந்தச் சிறுமியையே கவனித்துக் கொண்டிருந்தார்.
மீண்டும் மாலையில் அதேதான் நடந்தது…
அந்தச் சிறுமி மிகவும் பொறுமையாக இருந்து எல்லோரும் வாங்கிமுடித்தபிறகு ரொட்டியைப் பெற்றுக் கொண்டு தனது வீட்டுக்குச் சென்றாள்.
தனது தாயிடம் கொடுத்து உண்பதற்குத் தயாரானாள். ரொட்டியை இரண்டாகப் பிய்த்த தாய் ரொட்டிக்குள்ளிருந்து இரு தங்க நாணயங்கள் விழுந்ததைக் கண்டாள். அதிர்ந்து போனாள்!
அவற்றை எடுத்துக் கொண்டு போய் அந்த செல்வந்தரிடம் கொடுத்துவிட்டு வரும்படி சிறுமியை அனுப்பினாள்.
சிறுமியும் நாணயங்களை எடுத்துக் கொண்டு போய் செல்வந்தரிடம் கொடுத்தாள்.
அதற்கு செல்வந்தர், “இது உன் பொறுமைக்குக் கிடைத்த பரிசு! நீயே இதை வைத்துக் கொள்…’ என்று கூறி அவளைப் பாராட்டினார்.
சிறுமி மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்தபடி தன் தாயிடம் அவற்றைக் கொடுப்பதற்குக ஓடினாள்.
-மு.சம்யுக்தா, 8-ம் வகுப்பு,
அலங்கார மாதா உயர்நிலைப் பள்ளி,
பரமக்குடி, இராமநாதபுரம்.
பெப்ரவரி 2012
One story