நம்பிக் கெட்ட சன்யாசி

1
கதையாசிரியர்: ,
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 39,723 
 

ஓர் ஊரை ஒட்டியிருந்த காட்டுப் பகுதியில் ஒரு மடம் இருந்தது. அந்த மடத்தில் ஒரு சன்யாசி வசித்து வந்தான்.

சன்யாசி தொடக்கத்தில் உத்தமனாகத்தான் இருந்தான்.

அடிக்கடி வேள்விகள் செய்வான். பக்திநெறி தவமும் ஆன்மீக உபதேசங்களை மக்களுக்குச் செய்வான். நோய் நொடி என்று வந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்து நோயை குணப்படுத்துவான்.

இந்தக் காரணத்தால் சன்யாசிக்கு ஊர் மக்களிடம் நல்ல மதிப்பும் செல்வாக்கும் இருந்தது.

மக்கள் சன்யாசியை சந்திக்க வரும்போதெல்லாம் நல்ல விலை மதிப்புடைய பல பொருட்களை அன்பளிப்பாகக் கொடுத்துச் செல்வது வழக்கம்.

சன்யாசி தனக்குப் பரிசுப் பொருளாக வந்தவற்றை யெல்லாம் விற்று தங்கமாக மாற்றிக் கொண்டான்.

சன்யாசி தங்கத்தை ஒரு துணிப்பைக்குள் வைத்து அந்தப் பையை எப்போதுமே தன் கட்கத்தில் வைத்து, பாதுகாக்க முற்பட்டான்.

தங்கம் சேர்ந்த உடனே சன்யாசி வழக்கமான ஒழுக்க நெறிகளைக் கை விட்டுவிட்டான், மன நிம்மதி அவனை விட்டுப் பறந்துவிட்டது. மேலும் மேலும் தங்கத்தைச் சேரக்க வேண்டும் என்ற வெறி கொண்டு அலையத் தொடங்கிவிட்டான்.

ஒரளவுக்கு மேல் போனால் பணத்தால் நன்மைக்குப் பதில் தீமைகள்தான் அதிகமாக விளையத் தொடங்கிவிடும்.

தேவைக்கு மேல் பணம் சேரும்போது மனிதன் அறிவை இழந்து விடுகின்றான். ஆண்மையை இழந்து விடுகின்றான். மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் இழந்து விடுகின்றான்.

சேர்த்த செல்வம் எப்போது கை நழுவிப் போய் விடுமோ – ஏமாந்தால் கள்வர்கள் அபகரித்துக் கொள்வார்களோ என்று எப்போதும் திகில் பிடித்த அலைந்துக் கொண்டிருப்பான்.

எதிர்பாராத விதமாகப் பணம் பறி போய் விட்டாலோ அவன் தன் உயிரையே இழந்துவிட்டவன் போல பித்துப் பிடித்துத் திரியத் தொடங்கி விடுகிறான்.

உலக நீதி கூறும் அவ்வளவு உண்மைகளும் சன்யாசிக்குப் பொருத்தமாக அமைந்திருந்தன.

அவனுக்கு யாரைக் கண்டாலும் அச்சம் – அவநம்பிக்கை. தனக்க உதவி செய்ய முன்வருபவர்களைக்கூட தங்கத்தைப் பறிக்க வருகிறார்களோ என எண்ணி நடுங்குவான். . .

அவன் உண்ணும் போதும், உறங்கம்போதும், மலஜலம் கழிக்கும்போதுங்கூட தங்கம் அடங்கிய பை அவன் கட்கத்திலேயே இருக்கும்.

சன்யாசியிடம் தங்கம் இருப்பதும், அதை சன்யாசி தனது அக்குளிலேயே எப்போதும் வைத்திருப்பதையும் ஆஷாடபூதி என்ற வஞ்சகன் ஒருவன் விளங்கிக் கொண்டான்.

அந்தத் தங்கததை எப்படியாவது அபகரித்துவிட வேண்டும் என்று தீர்மானம் செய்துக் கொண்டான்.

சன்யாசி, தங்கம் அடங்கிய பையை எங்காவது தனியிடத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தால் அதை எளிதாக களவாடிட முடியும். பை எப்போதும் சன்யாசியின் அக்குளில் இருப்பதால் எளிதாக அதனைக் களவாடமுடியும் என்று ஆஷாடபூதிக்குத் தோன்றவில்லை.

ஆகவே எப்படியாவது சன்யாசியின் உடன் இருந்து சந்தர்ப்பம் வாய்க்கும்போது தங்கததை அபகரித்துச் சென்றுவிட ஆஷாடபூதி திட்டமிட்டான்.

ஒருநாள் அதிகாலையில் ஆஷாடபூதி குளித்து முழுகி கடல் முழுவதும் விபூதிப்பட்டை அடித்துக் கொண்டு சன்யாசியிடம் வந்து காலில் வீழந்து வணங்கினான்.

“நீ யாரப்பா?” என சன்யாசி வினவினார்.

“சுவாமி, சம்சார பந்தத்தில் மூழ்கிக் கெட்டழிந்து கடைத்தேற வழி காணாது திகைக்கும் எனக்கு நல்வழி காண்பித்து அருள வேண்டும். என்னைத் தங்கள் சிஷ்யனாக ஏற்று என் ஊனக் கண்ணை மாற்றி ஞானக்கண் பெற அருள வேண்டும்” என வேண்டிக் கொண்டான்.

சன்யாசி ஆஷாடபூதியை ஆசீர்வதித்து, “குழந்தாய், உன்னுடைய இந்த இளம் வயதில் மனத்தை கட்டுபடுத்தி துறவி நெறியில் நடப்பது கடினம் தவிரவும் ஒரு சீடனை வைத்து நிர்வகிக்கும் சூழலிலும் நான் இல்லை. நீ தக்க ஓர் ஆசானை அடைந்து கடைத்தேறுவாயாக” என்று புத்தி கூறினார்.

“சுவாமி நான் போக்கிடமற்ற அனாதை. தங்களைப் போன்ற பெரியோர்களுக்குக் குற்றேவல் செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தால் போதும். நான் ஒரு சுமையாக தங்களக்கு இருக்கமாட்டேன். நன்றியுள்ள ஒரு நாயைப் போல தங்கள் பின்னால் திரிய அனுமதியளித்தால் போதும்” என்று ஆஷாடபூதி விடாப்பிடியாக வேண்டிக் கொண்டான்.

சன்யாசி அவனைக் கை கழுவிவிட எவ்வளவோ முயற்சி செய்தும் பயன் கிட்டவில்லை.

வேறு வழியில்லாமல் ஆஷாடபூதியைத் தனது சீடனாக ஏற்றுக் கொண்டார் சன்யாசி.

நன்றியுள்ள ஒருநாய் போல அவன் முகமறிந்து மனமறிந்து படாத பாடுபட்டு உழைத்து சன்யாசியின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் பெற்று விட்டான்.

என்றாலும் தங்கப்பை விஷயத்தில் மட்டும் சன்யாசி மிகவும் விழிப்புடன் இருந்தார்.

ஒருநாள் அயலூரில் முக்கியமான அலுவல் இருந்த காரணத்தால் சன்யாசி புறப்பட்டார்.

ஆஷாடபூதியை மடத்திலேயே இருக்குமாறு கூறினார்.

“சுவாமி, தங்களைவிட்டுப் பிரிந்திருக்க என் மனம் இடங் கொடுக்கவில்லை. செல்லும் வழியில் தங்களுக்கு ஏதாவது ஆபத்து நிகழ்ந்தால் பாதுகாப்புக்கு ஓர் ஆள் வேண்டாமா? நானும் உடன் வருகின்றேன்” என்றான் ஆஷாடபூதி.

சன்யாசி யோசித்தார். கையில் தங்கம் இருக்கிறது. நடு வழியில் கள்ளர் பயமும் உண்டு. ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் துணைக்கு ஓர் ஆள் இருப்பதும் நல்லதுதான் என எண்ணி ஆஷாடபூதியையும் உடன் வர அனுமதித்தார்.

செல்லும் வழியில் ஒரு ஆற்றங்கரை ஓரமாக இருவரும் நடந்து செல்லும்போது சன்யாசிக்கு வயிற்றில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டு மலங்கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது.

இத்தனைக் காலமாக யார்மீதும் நம்பிக்கை ஏற்படாதிருந்த சன்யாசிக்கு அன்று ஏனோ ஆஷாடபூதிமீது நம்பிக்கை ஏற்பட்டது.

தங்கம் இருந்த பையை தனது மேல் வஸ்திரத்தில் சுற்றி அதை ஆஷாடபீதியிடம் கொடுத்து, “குழந்தாய் நான் மலங்கழித்துத் திரும்பும்வரை இந்தச் சிறு மூட்டையை பத்திரமாக வைத்திரு. விரைவில் வந்து வாங்கி கொள்கிறேன்” எனக் கூறினார்.

ஆஷாடபூதி அந்த துணி மூட்டையை மிகவும் பயபக்தியுடன் வாங்கிக் கொண்டான்.

சன்யாசி புறப்பட்டார்.

அவர் தலைமறையும் வரை அந்த இடத்தில் அசையாமல் நின்றிருந்த ஆஷாடபூதி அவர் தலை மறைந்ததும், தங்கம் அடங்கிய மூட்டையை எடுத்துக் கொண்டு ஓடிப் போய்விட்டான்.

தங்கத்தைத் தூக்கிக் கொண்டு அவன் ஓடிவிட்டான் என்பது தெரிந்ததும் சன்யாசி தலையில் விழுந்து கைகால்களை உதைத்துக் கொண்டு. “ஐயோ, என் தங்கம் போய் விட்டதே! படுபாவி நம்பிக்கைத் துரோகம் செய்து தங்கத்தை அபகரித்துச் சென்று விட்டானே” என்று அரற்றினார் – கதறினார் – கூவியழுதார்.

பிறகு ஒருவாறு மனத்தைத் தேற்றிக் கொண்டு, அந்த நம்பிக்கைத் துரோகியை எவ்விதமாவது கண்டு பிடித்து தங்கத்தைத் மீட்டு அவனுக்கு தண்டனை வாங்கி கொடுப்பேன் என்று பிதற்றியவாறு நடக்கத் தொடங்கினார்.

சன்யாசி தொடர்ந்து நடந்து சென்ற கொண்டிருந்த போது அந்தி நேரம் வந்துவிட்டது.

மதிய உணவு கொள்ளாததாலும், நீண்ட தூரம் நடந்ததாலும் அவருக்கு மிகவும் களைப்பாகவும் பசியாகவும் இருந்தது.

உறவினர் வீடு ஒன்றில் நடைபெற இருக்கும் குடும்ப விழாவில் கலந்துக் கொள்வதற்காக ஒரு நெசவாளியிம் அவன் மனைவியும் சென்ற கொண்டிருந்தனர்.

சனயாசி நெசவாளியை நோக்கி, “ஐயா, நான் மிகுந்த பசியுடனும் களைப்புடனும் இருக்கின்றேன். இந்த ஊரில் எனக்கு அறிமுகமானவர்கள் யாருமில்லை. இன்று இரவு மட்டும் என்னை அதிதியாக ஏற்று உபசரிக்க வேண்டும்.”

அந்தி நேரத்தில் அதிதிகளை வரவேற்று உபசரிப்பது கடவுளையே உபசரிப்பது போன்று பெருமையுடைய தாகும் என்று நீதி நூல்கள் கூறுகின்றன. என்னைப் போன்ற அதிதியை உபசரித்து பசியகற்றி உதவுபவர்களுக்கு கடவுள் சகல பாக்கியங்களை அருளுவான். என கேட்டுக் கொண்டார்.

நெசவாளி தனது மனைவியை நோக்கி, “ஒரு துறவியை அந்தி நேரத்தில் உபசரிக்கும் வாய்ப்பு பெற்றது பெரிய பேறாகும் நான் மட்டும் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டு விரைவாகத் திரும்பி விடுகின்றேன். நீ இந்தப் பெரியவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவு சமைத்தளித்து உபசரித்து சிரமம் தீர உதவு” என்று கூறினான்.

நெசவாளி மனைவி சன்யாசியை அழைத்துக்கொண்டு வீடு நோக்கி நடந்தாள்.

அந்த நெசவாளியின் மனைவி ஒழுக்கங் கெட்டவள். பதித்துரோகி. தனது கள்ளக் காதலனை சந்திக்க நல்லதோர் சந்தர்ப்பம் கிடைத்தது என எண்ணி மகிழ்ந்து விரைவாக வீட்டை அடைந்தாள்.

சன்யாசியை ஒரு பழைய கட்டிலில் படுத்து சிரம பரிகாரம் செய்துக் கொள்ளச் சொன்னாள்.

“சுவாமி, கொஞ்ச நேரம் களைப்பாருங்கள். நான் அருகாமையிலிருக்கும் கடைக்குச் சென்று சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு சடுதியில் திரும்பி வந்துவிடுகிறேன்” எனக் கூறிவிட்டு தன்னைப் பிரமாதமாக அலங்கரித்துக் கொண்டு வீட்டைவிட்டுப் புறப்பட்டாள்.

பாதி தூரம் அவள் போவதற்குள் எதிரிலே தன்னுடைய கணவன் நன்றாகக் குடித்துவிட்டுக் குடிவெறியுடன் தள்ளாடியவாறு நடந்து வருவதை நெசவாளி மனைவி பார்த்துவிட்டாள்.

கணவன் பார்த்து விட்டானோ என்னவோ என அஞ்சியவளாக விழுந்தடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடினாள்.

தனது அலங்காரத்தையெல்லாம் கலைத்துவிட்டு பழைய புடவை ஒன்றை உடுத்திக்கொண்டு சமையல் செய்வதுபோல பாவனை செய்தாள்.

நெசவாளி தன் மனைவி கண் முன்னே வந்ததையும், திரும்ப வீடு நோக்கி ஒடியதையும் பார்த்து விட்டிருந்தான்.

வீட்டுக்குள் பிரவேசித்ததும் மனைவியை விளித்து, “ஒழுக்கங் கெட்டவளே எங்கேடி போய் விட்டுத் திரும்பி வருகிறாய் உன்னைப் பற்றி – உன்னுடைய மோசமான நடவடிக்கைகளைப் பற்றி ஊரார் சொல்வதெல்லாம் பொய்யாக இருக்குமென நினைத்தேன். இப்போது கண் முன்னாலேயே பார்த்து விட்டேன்” எனக் கூறி நையப்புடைத்தான்.

Print Friendly, PDF & Email

1 thought on “நம்பிக் கெட்ட சன்யாசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *