சிறப்பானவன் எவன்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 2,172 
 

கடற்கரை அருகில், ஒரு சிற்றூரில் மீனவப் பெண் ஒருத்தி இருந்தாள். அவள் ஒரு அநாதை . மிகவும் அழகானவள்.

அவள் அழகில் மயங்கிய வாலிபர்கள் சிலர், அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பி, அவளைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தனர்.

அவள் தன் அழகினால் கர்வம் கொண்டு, எவன் சிறந்த மனிதனோ அவனையே மணப்பேன் என்று உறுதி பூண்டிருந்தாள்.

ஒரு நாள் இளவரசன் ஒருவன் குதிரைமீது சவாரி செய்து எதிரே வந்தான்.

இவனே சிறந்த மனிதன் என்று கருதி, ஆவலோடு நின்றாள் அந்த மீனவப் பெண்.

அப்பொழுது துறவி ஒருவர் அங்கே வந்தார். உடனே இளவரசன் குதிரையை விட்டு இறங்கி, துறவியை வணங்கினான்.

இளவரசனை விட, துறவியே சிறந்த மனிதன்’ என்று நினைத்து துறவியைப் பின்தொடர்ந்து செல்லலானாள் மீனவப் பெண்.

சிறிது தூரம் சென்றதும், மரத்தடியில் இருந்த சிவலிங்கத்தை வணங்கிவிட்டுச் சென்றார் துறவி.

அதைப் பார்த்ததும் துறவியை விட, சிவலிங்கமே சிறந்தது என்ற எண்ணம் எழுந்தது அவளுக்கு.

அதன்பின், ஒரு நாய் ஓடிவந்து, அந்தச் சிவலிங்கத்தின் மீது சிறுநீர் கழித்துச் சென்றது.

சிவலிங்கத்தைவிட, நாயே சிறப்பாகத் தோன்றியது அவளுக்கு அதனால் நாயைத் தொடர்ந்து சென்றாள்.

பாழடைந்த ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்திருந்த ஏழை ஒருவனிடம் அந்த நாய் சென்று, அவன் மீது புரண்டு, புரண்டு விழுந்து அன்பு செலுத்தியது.

நாயை விட அவனே சிறந்தவன் என்று தீர்மானித்து, அவனோடு வாழத் தொடங்கினாள் அந்த மீனவப் பெண்.

அவளைப் பார்த்து முன்பு ஆசைப்பட்ட இளைஞர்களில் ஒருவன், அந்த வழியாகப் போய்க் கொண்டிருக்கையில், “யாருக்கு என்ன கிடைக்க வேண்டும் என்ற விதியோ அப்படித்தான் நடக்கும் போலும்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டே சென்றான்.

சிறந்தவனைத் தேடியதன் பலன் எப்படி ஆயிற்று?

– மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் – முதற்பதிப்பு: ஜூன் 1998 – முல்லை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *