சிறந்த புத்திரன் யார்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 6, 2021
பார்வையிட்டோர்: 3,295 
 

ஒரு அரசன் தன் நாட்டை மிகவும் கீர்த்தி யுடன் ஆண்டு வந்தான். அவனுக்கு மூன்று புத்திரர்கள் இருந்தார்கள். அவர்கள் நன் றாய் வளர்ந்து பலசாலிகளாக யிருப்பது அர சனுக்கு மிகவும் திருப்தியைக் கொடுத்தது. என்றாலும் தனக்குப்பின் திறமையுடன் இராஜ்ய பரிபாலனத்தை நடத்தக்கூடிய மகன் யார் என்று அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

ஒரு நாள் அரசன் தன் மூன்று குமாரர் களையும் கூப்பிட்டு, “எனது அருமைப் புத்தி ரர்களே ! எனக்கோ வயோதிகத்தன்மை வந்து விட்டது. எனக்குப்பின் சிம்மாசனத் தில் அமரத் தகுதியுள்ளவன் எவன் என்று என்னால் இலகுவில் கண்டுகொள்ள முடிய வில்லை. உங்களில் யார் என்மேல் அதிக அன்புள்ளவர்களா யிருக்கிறீர்கள்; அதை முதலில் சொல்லுங்கள்” என்றான்.

முதல் மகன் தகப்பனைப் பார்த்து , “அப்பா நான் உங்கள் மேல் கொண்ட அன்பின் அளவு, சமுத்திரத்தைக் காட்டிலும் அகலமாயும், ஆழமாயும், எல்லையற்றதாயும் இருக்கிறது. அதை என்னால் விவரிக்கவே முடியாது” என்றான்.

அடுத்த மகன் அவனைப் பார்த்து “ஐயனே, யான் தங்கள் பால் கொண்டுள்ள அன்பின் தன்மையை, பூவுலகத்திலும், மேலு லகத்திலும் கூட யாராலும் அளவிட்டுச் சொல்ல முடியாது” என்றான்.

கடைசி குமாரனின் வார்த்தைகளோ இரத்தினச் சுருக்கமாயிருந்தன. ” ஐயா! தங்களை நான் மிகவும் நன்றாய் நேசிக்கிறேன். இதைவிட அதிகமாய் என்னால் சொல்ல முடியாது” என்றான்.

பின்பு அரசன் அவர்களை அனுப்பி விட்டான். யோசனையில் ஆழ்ந்தான். தனது மந்திரியைக் கூப்பிட்டு பின் வருமாறு கூறினான்: “நான் மக்காவுக்கு யாத்திரை செல்ல விரும்புகிறேன். எனது பாவங்களை என்னால் சுமக்க முடியவில்லை; பிரயாச்சித்தம் செய்வதற்காகக் காலில் பாதரக்ஷை இல்லாமலும், தலையில் தலைப்பாகை அணியாமலும், அப்புண்ணிய தலத்திற்குத் தனியாகவே நடந்து செல்ல தீர்மானித்திருக்கிறேன். ஒருக்கால், ஆண்டவனின் திருப்பாதம் அடையும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமானால், எனக்குப் பதிலாக என் குமாரர்கள் மூன்று பேரையுமே அரசாளும்படிச் செய்ய வேண்டியது உன்னுடைய கடமை”, என்று மிகவும் பயபக்தியாய்ச் சொன்னான்.

மந்திரி தரை மட்டும் தாழக் குனிந்து “ஆண்டவனே! உம்முடைய கட்டளைப் படியே நான் செய்வேன்” என்று வாக்குறுதி கொடுத்தான்.

ஒரு வருஷம் சென்றது.

அறுவடைக் காலம். எல்லோரும் வெகு சுறு சுறுப்பாய் இருந்தார்கள். அச்சமயத்தில் தான் அரசன் இறந்து போனான் என்ற செய்தி எங்கும் பரவிற்று. இராஜ்யம் முழுமையும் துக்க சாகரத்தில் மூழ்கிற்று. எத்திசையில் பார்த்தாலும் ஜனங்கள் அரசனைத் துதித்தார்கள். அரசன் முன்பு மந்திரிக்குக் கொடுத்து விட்டுப் போன கட்டளையின் படியே, அவனுடைய குமாரர்கள் மூவரும் சிம்மாசனம் ஏறினார்கள்.

இன்னொரு வருஷமும் தோன்றி, மறைந்தது. அறுவடைக் காலமாதலால் மக்களுக்கு அலுவல்கள் அதிகமாயிருந்தன. கோட்டை வாசலிலிருந்து ஒரு பிச்சைக்காரன், பட்டணத்துக்குள்ளே மெதுவாக நடந்து வந்தான்.

வழியிலே, மிகவும் துக்கத்தோடே உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு ஆள் அடிக்கடித் தன் மார்பிலே அடித்துக் கொண்டு “என்ன அருமையாக நான் அவரை நேசித்து வந்தேன். அவர் போய் விட்டாரே” என்று புலம்பின வண்ணமாக இருந்தான். அவனைக் கண்டவுடன், அப்பிச்சைகாரனுக்கு அதிகப் பரிதாபம் உண்டாயிற்று. பக்கத்தில் போய், “அப்பா! நீ ஏன் விசனத்தில் ஆழ்ந்திருக்கிறாய்? காரணத்தைச் சொல்ல மாட்டாயா?” என்றான்.

அம்மனிதனோ, “எனக்கு இருக்கும் துயரத்தை யாரிடம் சொல்லி ஆறுதல் அடைவேன்? என் தகப்பன் தான் இந்த இராஜ்யத்தை ஆண்டு வந்தார். அவர் இறந்து போனார். இதைக் காட்டிலுமா ஒரு பெரிய நஷ்டம் ஒரு மகனுக்கு நேரிட முடியும்” என்று சொல்லிக் கொண்டே மளமள வென்று அழ ஆரம்பித்தான். தன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு அலறவும் ஆரம்பித்து விட்டான்.

“அப்பா! அப்படிப்பட்ட அன்பு மிகவும் அபூர்வம்தான். அல்லாதான் உனக்கு ஆறுதல் அளிக்கவேண்டும். அதிருக்கட்டும், உனக்குச் சகோதரர் இருக்கிறார்களா? அவர்களும் இப்படித்தான் உன்னைப் போல் விசனப்பட்டுக் கொண்டு இருக்கிறார்களா?” என்று அப்பிச்சைக்காரன் விசாரித்தான்.

“எனக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள். ஒருவனுக்கு விசனமே கிடையாது. நன்றாய் உண்டு, வெறி கொண்டு திரிகிறான். கஜானாப் பணத்தை எடுத்து, களியாட்டங்களில் செலவழித்து வருகிறான். குதிரைப் பந்தயம் என்றால் அவனுக்கு வெகு விருப்பம் பணத்தை வீணாகச் செலவு செய்து சுகபோக மாய் ஜீவித்து வருகிறான்” என்று பதிலளித்தான்.

“கடைசி சகோதரன் எப்படி?” என்று வினவினான் அப்பிச்சைக்காரன்.

“அவன் தான் இப்பொழுது இராஜ்ய பாரத்தைத் தாங்கி வருகிறான். அவனொருவன் இல்லாவிட்டால், இந்நேரம் நாடே சீர் குலைந்து போயிருக்கும். என் தகப்பனார் விட்டுப்போன ஊழியத்தை அவன் தொடர்ச்சியாய் எடுத்து நடத்துகிறான். அவர் உயிருடன் இப்பொழுது இருந்தால், என்ன காரியங்களைச் செய்வாரோ அவைகளையே இன்னும் செய்து வருகிறான்” என்று மிகவும் சந்தோஷமாய்ச் சொன்னான்.

பின்பு, பிச்சைக் காரனும் அவனும் தங்கள் தங்கள் வழியே சென்றார்கள்.

அரசனின் மூன்றாவது மகன் கொலு மண்டபத்தில் வீற்றிருந்தான். திடீரென அப்பிச்சைக்காரன் அங்கே வந்தான். என்ன துணிகரம் அவனுக்கு! அங்கிருந்த எல்லோரும் அவனை வெகு கோபத்துடன் நோக்கினார்கள். பிச்சைக்காரனோ, தன் மேல் அங்கியைக் கழற்றி வீசி எறிந்தான். தலைப்பாகையையும் கீழே தள்ளிவிட்டான். என்ன ஆச்சரியம்! அவன்தான் இறந்துபோய் விட்டதாகச் சொல்லப்பட்ட அரசன். தன் தகப்பனை அடையாளம் கண்டு கொண்ட இளைய மகன் சிம்மாசனத்திலிருந்து தாவிக் குதித்துத் தந்தையை தழுவிக் கொண்டான். மந்திரியும் சேனாதிபதியும், மற்ற உத்தியோகஸ்தர்களும் அரசன் அடி பணிந்தார்கள்.

இவ்வதிசயத்தைக் கேட்ட பிரஜைகள் அரசனைப் பார்க்கும்படியாக கொலு மண்டபத்தில் வந்து கூடினார்கள். அரசன் அவர்களைப் பார்த்து, “தன் தகப்பனின் ஊழியத்தைத் தொடர்ந்து, பழுதில்லாமல் நடத்தப் பிரயாசப் படுகிறவனே தகப்பனுக்கு உண்மைப் புத்திரனாவான். எனவே, என் இளைய குமாரனே அரசுக்குரியவன். இப்பொழுதே எனது இராஜ்யம், அதிகாரம், மகுடம் செங்கோல், சிம்மாசனம் எல்லாவற்றையும் அவனுக்குக் கொடுக்கத் தீர்மானித்து விட்டேன்” என்றான். குடிஜனங்கள் அனைவரும் அரசனுடைய செய்கையை மெச்சி, தங்களுடைய புதிய அரசனுக்கு வணக்கம் செய்தார்கள்.

“குறையச் சொல்லி நிறையச் செய்தல்
மெச்சத்தகுந்தது”

கேள்விகள்:
1. “தன்னை அதிகமாக நேசிக்கிற குமாரன் யார்?” என்று கேட்ட அரசனுக்கு அவன் குமாரர்கள் அளித்த பதிலென்ன?
2. “மக்கா”விற்கு அரசன் எதற்காகப் போவதாகக் கூறினான்.
3. அதன் உண்மை நோக்கமென்ன?
4. மூத்த குமாரன் பிச்சைச்காரனிடத்தில் கூறியதென்ன?
5. அரசாளத் தகுந்த குமாரன் யார்? அதை எப்படி நிரூபித்தான்?

– சிறுவர்க்கேற்ற சிறுகதைகள், முதற்பதிப்பு – நவம்பர் 1949, தென்னிந்தியப் பதிப்புக் கழகம், சென்னை – 24

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *