கோ.இராகவனா, கொக்கா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 7,902 
 

கோ.இராகவன் யார் என்று சின்னப்பிள்ளையை அந்த ஊரில் கேட்டால் தெரியும், அப்பா அம்மா வைத்த பெரிய என்னவோ இராகவன், ஆனால் ஊரால் சூட்டிய பெயர் கோ.இராகவன்.

இராகவன், சின்ன வயசிலேயே அதிபுத்திச்சாலி, அதிபக்திமான், அதிவாயாடி, எப்போ பார்த்தாலும் கோயிலுக்கு போய் சாமி கும்பிடுவது, சுண்டல், சர்க்கரை பொங்கல் சாப்பிடுவது தான் அதிகம் செய்வார். கோயிலில் அமர்ந்து ஆன்மீகத்தைப் பற்றி பேசியதால் அவரை எல்லோரும் கோயில் இராகவன் என்றே அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். நாமலும் சுருக்கமாக கோ.இராகவன் என்று அழைக்கலாம்.

கோ.இராகவன் நன்றாக படித்து பட்டங்கள் பெற்றப் பின்பு வேலைக்கு போக முயற்சி செய்தார். அப்பா அம்மாவோ நம்மிடம் எக்கசக்கமான சொத்துகள் இருக்கிறதே, அவற்றை நிர்வாகம் செய்தாலே போதுமே என்றார்கள். இராகவனுக்கோ உலக ஞானத்தை பெறவும், மக்கள் எப்படி எல்லாம் இருக்கிறார்கள், சிக்கலான சூழ்நிலையை எப்படி சமாளிப்பது போன்றவற்றை கற்றுக் கொள்ள சில ஆண்டுகள் யாரிடமாவது தொழிலாளியாக வேலை செய்யலாம் என்று முடிவு செய்து, அப்பா, அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கி பக்கத்து நாட்டுக்கு சென்றார்.

கால் பொன போக்கில் நடந்து போனவரிடம் இருந்த காசு எல்லாம் தீர்ந்து விட்டது, அங்கே கோயிலுக்கு போனால் ஏதாவது பிரசாதம் கிடைக்கும், சாப்பிட்டு சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்து அங்கே போனால், கோயிலில் பெரிய பூட்டு போட்டிருந்தது, அருகில் போன ஒருவரை விசாரித்த போது, இக்கோயிலானது பரம்பரை பரம்பரையாக அந்த ஊர் ஜமிந்தார் குடும்பத்தால் பராமரிக்கப்பட்டதாகவும், தற்போது இருக்கும் ஜமிந்தார் கடுமையான கஞ்சபேர்வழி, கொடிய மனசு படைத்தவர், கோயிலுக்கு என்று அவர் முன்னோர் கொடுத்த விளை நிலங்களை எல்லாம் தானே எடுத்துக் கொண்டதாகவும், கோயில் நகைகள் அனைத்தையும் விற்று பணமாக்கி விட்டதாகவும், அத்தோடு கோயிலையும் இழுத்து மூடியதாக சொன்னார்.

அதைக் கேட்ட இராகவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது, அதுக்கு மேலே பசி வேற, என்ன செய்யலாம் என்று யோசித்து நேராக ஜமிந்தார் வீட்டுக்கு போனார், போய் “அய்யா! எனக்கு வேலை போட்டு போடுங்க, என்ன வேலை என்றாலும் செய்வேன்”

“நீ யாரப்பா, உனக்கு என்ன வேலை தெரியும்?”

“தோட்டவேலை, கால்நடைகளை பராமரிக்கிறது எல்லாமே செய்வேன்”

“சரி, வேலையில் சேர்ந்துக் கொள், முதலில் நன்றாக சாப்பிடு” என்று கூறிவிட்டு, பெரிய விருந்தே கொடுத்தார். தினமும் சைவம், அசைவம் என்று விதம்விதமாக சாப்பாடு போட்டார், சாப்பாட்டை சாப்பிட்டு ஜமிந்தார் மீது கோ.இராகவனுக்கு தனி பக்தியே வந்து விட்டது, அன்று ஜமிந்தாரைப் பற்றி அந்த ஊர்க்காரர் தப்பு தப்பாக சொல்லிட்டார், ஜமிந்தார் தங்கமான மனுசர் என்று இராகவன் நம்பினார்.

இராகவனுக்கு வேலையே கொடுக்கவில்லை, ஒரு மாசம் உட்கார வைத்து சாப்பாடு போட்டதால், உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவே கஷ்டப்படும் அளவுக்கு கொழு கொழு என்று குண்டானார்.

நம்ம ஜமிந்தாரைப் போல் உலகில் நல்லவர்கள் யாருமே இருக்கமாட்டாங்க என்ற நிலைக்கு வந்து விட்டார். ஒரு நாள் இரவில் ஜமிந்தார் கோ.இராகவனைப் பார்த்து “தம்பி, நாளை காலையில் நாம் நீண்ட தூரப் பயணம் செல்ல இருக்கிறோம், நேற்று கொன்று எருமைமாட்டின் தோலை எடுத்து மூட்டையாக கட்டிவை, போகும் போது எடுத்துட்டு போக வேண்டும்” என்றார்.

இராகவனும் தோலும் கொஞ்சம் சதையுமாக இருந்த எருமை மாட்டின் தோலை எடுத்து சுருட்டிக் கட்டினார். அடுத்த நாள் ஜமிந்தார் ஒரு குதிரையில் ஏறினார், அடுத்த குதிரையில் இராகவனும், மற்றொரு குதிரையில் பெரிய பெரிய சாக்கு மூட்டைகளும், எருமை மாட்டின் தோலும் கட்டியிருந்தார்கள்.

இரவும் பகலும் மாறி மாறி ஒரு வாரம் நெடுந்தூரப் பயணம் சென்றார்கள். போகிற வழியில் வானம் அடிக்கடி இருண்டது போல் பெரிய பெரிய பறவைகள் பறப்பதை இராகவன் கண்டார்.

இவ்வாறாக ஒருவார பயணத்தின் முடிவில் ஒரு பெரிய மலையடிவாரத்தை அடைந்தார்கள், சுற்றிலும் வெட்டவெளியாக இருந்தது. இராகவனும் ஜமிந்தாரும் இரவு உணவை முடித்து உறங்கினார்கள், விடியற்காலையில் ஜமிந்தார் இராகவனை எழுப்பி, “தம்பி! நீ அந்த எருமை மாட்டின் தோலை எடுத்து பாய் போல் விரி, பின்னர் அதில் படுத்துக் கொள்” என்றார்.

இராகவனும் ஜமிந்தார் சொல்கிறாரே என்ற பயபக்தியில் ஏன் எதுக்கு என்று கூட கேட்காமல் எருமை மாட்டின் தோலை விரித்து படுத்தார். உடனே ஜமிந்தார் பெரிய கயிறு போட்டு இராகவனை மாட்டுத்தோலுக்குள் வைத்து கட்டிவிட்டார், தன் குதிரைகளை ஓட்டிக் கொண்டு, அருகில் இருந்த காட்டுக்குள் மறைந்து விட்டார். சிறிது நேரத்தில் பெரிய பெரிய இராட்சத பறவைகள் பறந்து வந்தது, எருமை மாட்டின் தோலுக்குள் சுருண்டு இருந்த இராகவனை அப்படியே தூக்கிக் கொண்டு மலையின் உச்சிக்கு கொண்டு சென்றது. அங்கே சென்றதும், மாட்டுத்தோலை தங்கள் இராட்சச அலகுகளால் கொத்த, இராகவனுக்கு பயம் வந்து விட்டது, ஜமிந்தார் தன்னை பறவைகளுக்கு பலி கொடுத்து விட்டாரே என்று அலறி துடித்து வெளியேறத்தொடங்கினார். அதே நேரம் கீழே ஜமிந்தார் பெரிய வெடியை வெடிக்க வைக்க, பறவைகள் பயந்து பறந்தோடி விட்டது, அதே நேரத்தில் இராகவனும் வெளியே வந்து விட்டார்.

“அய்யா, ஜமிந்தாரே, என்னை காப்பாற்றுங்க, உங்களுக்கு புண்ணியமாக போகட்டும்”.

“கவலைப்படாதே தம்பி, நான் உன்னை காப்பாற்றுகிறேன், நீ உடனே அங்கே குவிந்து கிடக்கும் பெரிய பெரிய இரத்தினம், மரகத, வைர கற்களை எடுத்து கீழே வீசு, வேகமாக செய், இல்லை என்றால் பறவைகள் மீண்டும் வந்து விடும்” என்றார்.

இராகவனும் அங்கே இங்கே என்று ஓடி கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி கீழே வீசினார், அங்கே எல்லா இடங்களிலும் மனித எலும்புத்துண்டுகள் கிடந்தன, அதை பார்த்ததும் அவருக்கு பயம் வேறு தொத்திக் கொண்டது. ஜமிந்தாரும் தான் கொண்டு வந்த அத்தனை மூட்டைகளையும் நிரப்பிக் கொண்டு குதிரையில் கிளம்பத் தொடங்கினார்.

அதை பார்த்து பயந்து அலறிய இராகவன் “அய்யா, என்னை காப்பாற்றுங்க, இல்லை என்றால் பறவைகள் என்னை கொன்றுவிடும்”

“தம்பி, உன்னை பலி கொடுத்தால் தான், அடுத்த முறையும் மனித இறைச்சிக்காக பறவைகள் இங்கே வரும், மேலும் நான் என்ன செய்கிறேன் என்ற உண்மை உனக்கு தெரிந்து விட்டது, ஏற்கனவே உண்மை தெரிந்தவர்களின் கதியை மேலே நீ பார்க்கிறாயே, அதே தான் உனக்கும்” என்று கூறி இடத்தை காலி செய்தார்.

இராகவனுக்கோ வயித்தை கலக்கியது, பெரியபறவைகளுக்கு இன்று சரியான விருந்து தான், இனியும் தாமதித்தால் தன் கதி அதோ கதி தான், என்று யோசித்து, அங்கே கிடந்த எலும்புக்கூடுகளை எல்லாம் ஒன்றாக குவித்து, அதன் அடியில் போய் ஒளிந்துக் கொண்டார்.

சிறிது நேரத்தில் வந்த பறவைகள் எருமை மாட்டின் தோலை மட்டும் கொத்தி சாப்பிட்டு விட்டு, அங்கே படுத்து தூங்கத் தொடங்கின, கொஞ்ச நேரத்தில் எலும்புக்கூடுகளின் அடியிலிருந்து வெளியேறி, அங்கே கிடந்த பறவைகளின் இறகுகளால் தன் உடலை சுற்றிக் கட்டிக் கொண்டார், அப்புறமா பெரிய பறவையில் ஒன்றின் காலில் தன்னைக் கட்டிக் கொண்டார்.

விடியற்காலையில் மீண்டும் பறவைகள் இரைத் தேட போனது, வெகுதூரம் பறந்த போது தூரத்தில் ஒருகிராமம் வருவதை அறிந்த கீழே பெரிய ஆறு ஓடுவதை அறிந்து தன்னை பறவையில் காலில் இருந்து விடுவித்துக் கொண்டார். பறவையில் இறகுகளுடன் தண்ணீரில் விழுந்தார், இறகுகள் இருந்ததால் மிதந்து கொண்டே அக்கிராமத்தை அடைந்தார்.

தன் பையில் இருந்த மரகத கற்களை அங்கே விற்று, புதிய உடைகள் வாங்கினார். தன்னுடைய சாப்பாட்டை பாதியாக குறைத்துக் கொண்டார், தாடி, மீசை எல்லாம் வைத்துக் கொண்டார், சில நாட்களில் உடல் மெலிந்து அடையாளமே தெரியவில்லை, நேராக அந்த ஜமிந்தாரின் வீட்டிக்கு போய் வேலை கேட்டார்.

இராகவனை அடையாளம் தெரியாத ஜமிந்தாரும் மிக்க மகிழ்ச்சி கொண்டு, வழக்கம் போல் நல்ல சாப்பாடு கொடுத்தார், ஒரு வாரத்திலேயே மாட்டுத்தோலுடன் மலையடிவாரம் என்றார்.

வழக்கம் போல் இராகவனை மாட்டுத்தோலை விரித்து படுக்கச் சொன்னார், உடனே இராகவன் “அய்யா, மாட்டுத்தோலில் எப்படி படுப்பது என்று எனக்கு தெரியலையே, நீங்க படுத்து காட்டுங்க” என்றார்.

உடனே ஜமிந்தாரும் இப்படி தான் படுக்க வேண்டும் என்று காட்ட, அதிரடியாக செயல்பட்ட இராகவன், ஜமிந்தரை மாட்டுத்தோலுக்குள் வைத்துக் கட்டினார், ஜமிந்தாரும் “டேய், டேய் என்ன செய்கிறாய், என்னை அவிழ்த்து விடு, இல்லை என்றால் உன்னை கொன்றுவிடுவேன்” என்றார்.

இராகவன் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் காட்டுக்குள் ஓடி மறைந்தார், சிறிது நேரத்தில் அங்கே வந்த பறவைகள் மாட்டுத்தோலுடன் ஜமிந்தாரை தூக்கிக் கொண்டு மலை உச்சியை அடைந்தது, சிறிது நேரத்தில் இராகவன் தன்னிடம் இருந்த வெடியை வெடிக்க வைக்க பறவைகள் ஓடி விட்டன, ஜமிந்தாரும் ஒருவழியாக மாட்டுத்தோலிலிருந்து வெளியேறி “டேய், யாருடா நீ, எப்படி என் ரகசியம் உனக்கு தெரிந்தது” என்றார்.

தான் இராகவன் என்றும், சென்ற முறை தான் தப்பியதை சொன்னார், அத்துடன் அங்கே கிடக்கும் அனைத்து கற்களையும் கீழே எறியச் சொன்னார்., அவ்வாறு செய்தால் தப்பிக்கும் வழி சொல்வதாக சொன்னார்.

ஜமிந்தாரும் தன் குண்டு உடம்பை தூக்கி கொண்டு அங்கே இங்கே என்று ஓடி அனைத்தும் தூக்கி விசினார், இராகவனும் அவற்றை எல்லாம் மூட்டைகளாக கட்டுக் கொண்டு நடையை கட்டினார்.

ஜமிந்தாரும் இராகவன் தப்பித்த வழியை சொல்லித் தரச் சொல்லி கெஞ்சினார். உடனே இராகவன் “அய்யா, எனக்கு உங்க முன்னாள் வேலையாட்கள் தான் உதவினார்கள், அவர்களிடமே கேளுங்க” என்றார்.

இராகவனும் வேகவேகமாக மூன்று குதிரைகளின் மூட்டைகளை கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டார்.

ஜமிந்தாரும் ஓடி போய் குவியலாக கிடந்த எலும்புக்கூட்டின் அடியில் ஒளிந்துக்கொள்ள பார்த்தார், ஆனால் அவரது பெரிய உருவத்தை அவற்றால் மறைக்க முடியவில்லை, அங்கே வந்த பறவைகள், கொடிய ஜமிந்தாரை கொன்று தின்றன.

ஜமிந்தாரின் ஊருக்கு போன இராகவன் ஜமிந்தாருக்கு நேர்ந்ததை எல்லோரிடமும் சொல்லி, தான் கொண்டு வந்த இரத்தின கற்களில் பாதியை விற்று கோயிலை பராமரிக்கவும், ஜமிந்தாரால் கொல்லப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தாருகும் கொடுத்து விட்டு, மீதியை தன் வீட்டிக்கு கொண்டு வந்து, விற்று பெரும் பணக்காரராக, எல்லோருக்கும் உதவுகிறார், இப்போவும் கோயிலுக்கு போய் சுண்டல், சர்க்கரை பொங்கல் வாங்கி சாப்பிட்டு வருகிறார், நம்ம கோ.இராகவன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *