மன்னன் மகிபாலனுக்கு பல சிற்றரசர்கள் திரை கொடுக்க வேண்டும். அவர்களிடம் நல்ல நட்புறவு கொண்டதால் திரையை வாங்காமல் நண்பனைப் போல் பழகினான். அச்சிற்றரசர்கள் நமக்கு உற்ற துணையெனக் கருதி முழுமையாக நம்பியிருந்தான்.
பல சிற்றரசர்களின் துணை இருக்கும்போது, நாம் வெற்றி கொள்வதில் ஐயமில்லை என்னும் எண்ணத்தால், அம்மன்னன் வேற்றரசன் ஒருவனோடு பகை கொண்டு போர் தொடங்கினான்.
அவ்வேற்றரசன் மிகவும் வலிமைமிக்கவனாக இருந்தான். அவனுடைய படை எதிர்க்கும் ஆற்றல் உடையதாக இருந்தது.
இரு பக்கத்துப் படைகளும் கை கலந்து கடும்போர் தொடங்கின. வேற்றரசன் படை, ஆற்றல் மிகக் கொண்டு தாக்கியது. சிற்றரசர்களின் படை அஞ்சி நடுங்கியது. சிற்றரசர்கள் பலரும் பேந்தப் பேந்த விழித்தனர்; தம் உயிரை எப்படியேனும் காப்பாற்றிக் கொண்டால் போதுமென்று முடிவு செய்தனர்; உடனே தத்தம் படையோடு மூலைக்கொருவராக அஞ்சியோடி விட்டனர்.
சிற்றரசர்கள் அனைவரும் ஓடி விடவே, அவர்களை முழுமையாக நம்பியிருந்த மன்னன் தனித்தவனானான். அவனுடைய படையும் சிறியதுதான். ஆகையால் அம்மன்னனால் நீண்ட நேரம் எதிர்த்து நிற்க முடியவில்லை. வேற்றரசன் மிக விரைவில் அம்மன்னனைச் சிறைபிடித்து விட்டான்.
பகைவர்கள் கையில் சிக்கிய மன்னன் மிகவும் வருந்தினான். “ஐயோ! சமயத்தில் தக்கவாறு உதவி செய்யாதவர்களை நம்பிக் கெட்டோமே! நாம் மட்டும் தனித்திருந்தாலும், இந்தப் போர் ஏற்படாமல் முதலிலேயே தடுத்திருக்கலாமே!’ என்று பலவாறு வருந்தினான்.
அவ்வாறு வருந்திய மன்னன், வேற்றரசனோடு ஓர் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டு விடுதலையடைந்தான்.
மன்னன் விடுதலையடைந்த பின், அச்சிற்றரசர்கள் மன்னனைக் காண்பதற்காக வந்தனர்.
மன்னன் அச்சிற்றரசர்களைக் கண்டதும், “”உங்களை நம்பியதால் நான் துன்பத்திற்கும், இழிவுக்கும் ஆளானேன். போர்க்களத்தில் உதவி செய்யாமல் தலைவனை விட்டு விட்டு ஓடிப் போகும், கல்வியற்ற குதிரையைப் போன்றவர்கள் நீங்கள். உங்கள் உறவு எனக்கு வேண்டாம். வழக்கம் போல் நீங்கள் திறைப் பொருளை முறைப்படி செலுத்திக் கொண்டு தொலைவிலேயே இருங்கள்…” என்று இடித் துரைத்தான்.
களத்தில் கைவிட்டோடிய அச்சிற்றரசர்கள், நாணம் அடைந்து திரும்பிச் சென்றனர்.
அக்டோபர் 29,2010