நல்ல வெய்யில். நான் நெடுந்தூரம் நடந்து களைத்துவிட்டேன். மழையில் நனைந்த பருந்தின் சிறகு போன்ற அழுக்குத் துணி. வேர்வையில் என் உடலில் ஒட்டிக்கிடந்தது.
ஒரு பலா மரத்தின் அடியில் இளைப்பாறு வதற்காக அமர்ந்தேன். அப்பொழுது வில்லேந்திய வேட்டுவர் தலைவன் ஒருவன் என் முன் தோன்றினான். அவன் காலிலே வீரக்கழல் ஒலித்தது. அவன் முடியிலே நீலமணி ஒளிர்ந்த து….
நான் அவனைக் கண்டதும் எழுந்து வணங்கினேன். அவன், கைகுவித்து, என்னை அமர்க” என்றான். தன் கையிலிருந்த “நிணத்தடி” யை, கடைந்த நெருப்பிலிட்டுச் சுட்டுப் பக்குவப் படுத்தினான். பின்னர், அவ்வூனைத், “தின்னும் ” என்று எனக்குக் கொடுத்தான். நான் அதனை அமுதம் என்று எண்ணி விரைந்து தின்றேன். பசி தீர்ந்தது.
அருவி நீரைக் குளிரக் குடித்த பின், வேட்டுவர் தலைவனிடம் விடைபெறத் தொடங்கினேன்.
அவன் விடை தருவதற்குத் தயங்கினான். திடீரென்று. தன் மார்பிற் கிடந்த முத்து மாலையைக் கழற்றி என் கழுத்திற் போட்டான்.
”நான் காட்டில் திரிபவன், கொடுப்பதற்கு என்னிடம் வேரென்றுமில்லை” என்று குரல் அடைக்கக் கூறினான்.
“உன் பெயர் என்ன?” வென்று கேட்டேன். அவன் பேசவில்லை .
“உன் ஊரென்ன?” என்று கேட்டேன். அதற்கும் அவன் ஒன்றும் உரைக்கவில்லை .
பின்னர் கலங்கிய கண்களுடன் அவனை விட்டு பிரிந்தேன்.
வழியில் சிலரைக் கண்டேன்… அவர்களிடம் நடந்ததைக் கூறினேன். அவர்கள் என்னிடம் கூறியது
“அதோ தெரிகிறதே மலை, அதுதான் தோட்டிமலை. அம் மலைத்தலைவன் தான் உனக்கு பரிசளித்த வள்ளல். மிக்க புகழும் பெருநாடும் உடையவன்”
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்