ஆப்பை அசைத்த குரங்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 2,009 
 

ஒரு மாவியாபாரி, காட்டில் உள்ள மரங்களை, தொழிலாளர் களைக் கொண்டு வெட்டச் செய்து விற்பனை செய்து வந்தான்.

வெட்டப்பட்ட மரங்களை பயன்படுத்துவதற்கு ஏற்றபடி ரம்பத்தால் அறுப்பார்கள். அப்படி அறுக்கும் போது, மாத்தின் பிளவுக்கு மத்தியில் ஒரு முளையை அதில் நட்டு வைப்பார்கள்.

ஒரு நாள் வழக்கம் போல், தொழிலாளர்கள் வேலை முடித்து போகும்போது, அறுக்கப்பட்ட மரங்களின் நடுவே, ஆப்பை (முளையை) அடித்து வைத்துச் சென்றனர்.
அங்கே பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. ஏராளமான குரங்குகள் அதில் தங்கி இருந்தன.

அந்தக் குரங்கக் கூட்டத்தில், பெரிய குரங்கு ஒன்று இருந்தது. அது மிகவும் பொல்லாதது, மற்ற குரங்குகளை எல்லாம் அதிகாரம் செய்து, மிரட்டி வந்தது. அதனால், அந்தக் குரங்குகள் எல்லாம் பயந்து ஓடிவிடும்.

பெரிய குரங்கினால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த குரங்குகள் எல்லாம் அதை வெறுத்து, எங்கேயாவது ஒழிந்து போகாதா? அதற்கு சாவு வராதா என்று கருவிக் கொண்டிருந்தன.

ஒரு நாள், அந்தப் பெரிய குரங்கு தனியே எங்கேயோ போய்க் கொண்டிருந்தது.

மரம் அறுக்கும் இடத்தை அடைந்தது, சுற்று முற்றும் பார்த்தது.

எவரும் அங்கே காணப்படவில்லை . மரங்களின் மீது ஓடி ஆடிக் குதித்தது.

ஆப்பு அடிக்கப்பட்டிருந்த மரம் ஒன்று அந்தக் குரங்கின் கண்ணில் பட்டது.

அது அறுத்து, பாதி பிளந்து, ஆப்பு அடிக்கப்பட்டிருந்தது. அதன் மீது உட்கார்ந்து, அந்த ஆப்பை அசைத்து, அசைத்துப் பிடுங்கியது. பிளவுபட்டிருந்த மரம் ஒன்றாக இணைந்தது, அதன் நடுவில் உட்கார்ந்த குரங்கு, அதில் அகப்பட்டு நசுங்கி மாண்டது.

மற்ற குரங்கள் எல்லாம் ஓடி வந்து பார்த்தன. பொல்லாத குரங்கு ஆப்புக்கு மத்தியில் நசுங்கிச் செத்ததைக் கண்டு துள்ளிக் குதித்தன.

இதைத்தான், “ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கு போல” என்று மக்கள் கூறுவார்கள்.

– மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் – முதற்பதிப்பு: ஜூன் 1998 – முல்லை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *