கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 25,797 
 

காகத்திற்கு வெகு நாட்களாகவே காரசாரமாக மாசாலா தடவிய சிக்கன் சாப்பிட வேண்டும் என்று ஆசை.

ஒரு நாள் காகம் இரை தேடிவிட்டு இளைப்பாருவதற்காக மரத்தடியில் போய் அமர்ந்தது. அந்த மரத்திற்கு பக்கத்தில் இருக்கும் வீட்டில் பூனை ஒன்று இருந்தது. அந்த வீட்டுக்காரர் பூனைக்கான காலை உணவை கொண்டு வந்து பூனை முன் வைத்தார்.

தட்டில் இருக்கும் உணவை பூனை ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது. பூனை இந்தளவுக்கு ரசித்து ருசித்து சாப்பிடுதே! அப்படி என்ன சுவையான உணவு என்று எண்ணியபடியே காகம் பூனையின் தட்டை உற்று நோக்கியது.

தட்டில் இருக்கும் உணவை கண்டதுமே காகத்திற்கு நாவில் எச்சில் ஊறியது. ஆஹா பூனை சாப்பிடுவது நாம இவ்வளவு நாளா சாப்பிடணுன்னு ஆசைப்பட்ட மசாலா சிக்கன் ஆச்சே. எப்படியாவது அந்த பூனையிடமிருந்து நாம் அந்த உணவை அபகரிக்க வேண்டும் என்று எண்ணியபடியே காகம் மரத்திலிருந்து பறந்து சென்று பூனை இருக்கும் வீட்டின் வாசற்படியில் போய் அமர்ந்தது.

காகத்தை பார்த்ததுமே பூனைக்கு தன் உணவு பறிபோக போகிறதே என்று நினைத்து சாப்பாட்டு தட்டை மறைத்துக்கொள்ள முயற்சித்தது.

பூனையின் இச்செயலை கண்ட காகம், நாம் இந்த பூனையிடம் லாவகமாக பேசிதான் நம் ஆசையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்து காகம் மூளையை கசக்கியது.

அடடே பூனையாரே என்னை பார்த்து பயப்பட வேண்டாம். நா உங்க சாப்பாட திருடரதுக்காக வரல. நா இப்பதா நல்ல வயிறு முட்ட சாப்பிட்டேன். அடடா என்ன டேஸ்டுன்னு தெரியுமா? நானும் இதுவரைக்கும் எத்தனையோ வகையான கறிகள சாப்பிடுருக்கே ஆனா இன்னைக்கு சாப்பிட்ட எலிகறியோட டேஸ்ட் எந்த கறியிலயும் இல்ல.

எலி கறியா! பூனை வாயை பொளந்தது.

ஆஹா பூனை நம் பேச்சை நம்பிவிட்டது. இதுதான் நல்ல சமயம் என்று காகம் மனதுக்குள் எண்ணிக் கொண்டது.

உங்களுக்குதா எலிகறினா ரொம்ப பிடிக்குமே, அதா என்னோட சாப்பாட்ல உங்களுக்கும் கொஞ்சம் பங்கு கொடுக்கலான்னு நெனச்சேன்.

அஹா இன்னைக்கு நல்ல வேட்டைதான். நாம் தேடி போகாமலேயே அதிர்ஸ்டம் நம்மை தேடி வருதே!

பூனையாரே உங்களுக்கும் எலிகறிய சாப்பிட ஆசையா இருக்கா? அதோ அந்த மரத்துக்கு அடியில் ஒரு பொந்து இருக்கிறதே அந்த பொந்தில்தான் நான் சாப்பிட்டது போக மீதி கறியை ஒழித்து வச்சுருக்கேன்.

காகத்தின் பேச்சை நம்பி பூனை தனது சாப்பாட்டு தட்டை அங்கயே விட்டு மரபொந்தை நோக்கி ஓடியது.

காகத்திற்கு சந்தோஷம் தாங்கவில்லை. கறிதுண்டுகள் இருக்கும் தட்டை தூக்கி கொண்டு காகம் பறந்தது.

பாவம் பூனை ஏமாற்றத்துடன் வீடு திரும்பியது. வீட்டில் தனது சாப்பாட்டு தட்டு இல்லாததை பார்த்தபோதுதான் காகத்தின் நாடகமே பூனைக்கு புரிந்தது…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *