அப்பாவின் கண்ணம்மா

6
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 11, 2012
பார்வையிட்டோர்: 22,808 
 

அம்மா ஸ்டூல் ஒன்றை இழுத்துப் போட்டுக் கொண்டு அதன்மேல் ஏறி நின்று எதையோ பரணில் தேடிக்கொண்டிருந்தாள். நான் இதையெல்லாம் கவனிக்காதது போல பாடத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன். கடந்த ஒரு வாரமாய் இந்த வீட்டில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அப்பா எழுதிய துண்டுக் காகிதங்கள், பேப்பர்கள் எல்லாவற்றையும் அம்மா கவனமாகச் சேகரித்து கட்டுக்கட்டாக பரண்மேல் குவித்து வைத்திருந்தாள். அதில்தான் எதையோ தேடிக் கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது. இப்படித்தான் புதையல் காக்கும் பூதம்போல அவ்வப்போது ஸ்டூல் வைத்து ஏறி நின்று எதையாவது கிண்டி எடுப்பதும் அதைப் படித்துவிட்டு மீண்டும் பத்திரப்படுத்தி கவனமாக வைப்பதும் இப்போது அம்மாவின் தினசரி வேலையாய்ப் போய்விட்டது.

அப்பா எப்போதும் போல சிரித்துக் கொண்டேயிருந்தார். எங்களை விட்டுப் பிரிந்து இரண்டு மாதங்கள் விரைவாக ஓடிவிட்டாலும், சுவரில் தொங்கிய அப்பாவின் படம், அப்பா கண்முன்னால் இருப்பது போன்றதொரு பிரமையை எங்களுக்கு ஏற்படுத்தியிருந்தது. திடீரென ஒருநாள் நெஞ்சு வலிப்பதாகச் சொன்னவரை அவசரமாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது, பாதி வழியிலேயே எங்களைத் தவிக்க விட்டுப் போய்விட்டார். சொந்த பந்தம் என்று சொல்லிக் கொண்டு வந்தவர்கள் எல்லாம் தாமரை இலையில் தெறித்து விழுந்த நீர்த்துளி போல ஒவ்வொருவராக விடைபெற்றுச் சென்றுவிட நானும் அம்மாவும் தான் வீட்டிலே எஞ்சி நின்றோம். அப்பா இருந்தவரை நினைத்தும் பார்க்காத தனிமையும், எதிர்காலம் பற்றிய பயமும் திடீரென எங்கள் இருவரையும் பிடித்துக் கொண்டது. நாளைய பொழுது என்ன என்ற கேள்வி எங்கள் முன் விருட்சமாய்ப் பரந்து நின்றதில் வியப்பேதுமில்லை!

‘எங்களுக்கென்று எதுவும் சேர்த்து வைக்காமல் நிம்மதியாய்ப் போய்விட்டாரேடி பாரதீ..தீ..!’ அம்மா என்னைக் கட்டிப் பிடித்து கதறியபோது, ஆண்களையே நம்பியிருக்கும் எங்கள் சமுதாய அமைப்பை நினைக்க எனக்குள்ளும் அந்தப் பயம் சட்டென்று பிடித்துக் கொண்டது. பெண்ணாய் பிறந்து விட்டால் எப்பொழுதும் பாரம்தானோ என்று அந்தக் கணத்தில் எண்ணத் தோன்றியது.

பாரதியின் எழுத்துக்களால் கவரப்பட்ட அப்பா, நான் பிறந்தபோது அந்தப் பெயரையே எனக்குச் சூட்டி ‘பாரதீ, பாரதீ’ என்று ஆசை தீர அடிக்கொரு தடவை அழைத்து, திருப்திப்பட்டுக் கொண்டிருந்தார். அம்மாவின் நிஜப்பெயர் கண்ணம்மா. அம்மா பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்தபோது அவர்களின் பாடசாலையில் நடந்த பாரதி விழா ஒன்றுக்கு இளம் ஆசிரியராக இருந்த அப்பாவையும் சிறப்புச் சொற்பொழிவாற்ற அழைத்திருந்தார்களாம். அங்கே அப்பாவின் பேச்சு வன்மையைக் கண்டு அம்மா வியந்திருக்கிறாள். அது மட்டுமல்ல, அப்பாவிற்கு கணிரென்ற நல்ல குரல் வளமும் இருந்தது. அவர் சொற்பொழிவிற்கிடையே ‘சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா’ என்ற பாரதியின் பாடலை
சபையோர் மயங்கும் வண்ணம் மிக அழகாகப்பாடி அதற்கு விலாவாரியாக விளக்கமும் கொடுத்திருக்கிறார். சபையோர் மயங்கினார்களோ இல்லையோ அந்தப் பாடலைச் சபையிலே கேட்டுக் கொண்டிருந்த அம்மா தன்னையே கண்ணம்மாவாக நினைத்து ஒரேயடியாய் மெய்மறந்து உருகிப் போய்விட்டாள். அப்பா மீது அவளுக்கு ஒரு வகை ஈர்ப்பு ஏற்பட்டு இருந்ததால் அப்புறம் அடிக்கடி அவர்களின் சந்திப்பும் நிகழ்ந்தது. அவளே விரும்பி பெரியவர்களின் சம்மதத்தோடு அப்பாவை திருமணம் செய்து கொண்டாள். உதடு மெல்ல விரியும் புன்சிரிப்பு, பட்டென்று கவர்ந்திழுக்கும் அந்தக் காந்தக் கண்கள், கணீரென்ற குரல், இவையெல்லாம் அப்பாவின் பிளஸ் பாயின்ட்ஸாக இருந்ததால் அவை எல்லாம் ஒட்டுமொத்தமாக அம்மாவைக் கவர்ந்து இழுத்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லைத்தான்!

கற்பனை வேறு யதார்த்தம் வேறு என்பதைக் காலப் போக்கில் அம்மா புரிந்து கொண்டாள். குடும்ப பொருளாதார நிலையைக் கவனிக்காமல் கற்பனையில் வாழ்வது, சிந்திப்பது, எழுதுவது, சொற்பொழிவாற்றப் போவது, பொதுச்சேவை என்று இப்படியே அவரது வாழ்கை வாத்தியார் தொழிலில் வரும் சொற்ப வருமானத்தை மட்டும் நம்பி தினமும் ஓடிக்கொண்டிருந்தது. அம்மாவிற்கு என்னை எப்படிக் கரைசேர்ப்பது என்ற பயம், அதனாலே தினமும் அப்பாவைத் திட்டித் தீர்த்துக் கொண்டேயிருந்தாள்.

அப்பாவிற்கு ரோஷம் வருமோ என்னவோ தெரியாது, ஆனால் அதற்குப் பதிலாகக் கோபம் மட்டும் வரும். அம்மா திட்டத் தொடங்கியதும் அப்பா கதவை அடித்துச் சாத்திவிட்டு உள்ளே இருந்து கோபம் தீரும்வரை ஏதாவது எழுதிக் கொண்டேயிருப்பார். அப்புறம் அம்மா உள்ளே போய் சாப்பிட வரும்படி சமாதானப்படுத்துவாள். திட்டுவதும், அப்புறம் சமாதானப் படுத்துவதும் தினமும் நடந்து கொண்டிருந்ததால் எங்க வீட்டிலே அது ஒரு சாதாரண நிகழ்ச்சியாகவே போய்விட்டது. அம்மாவின் ஊடலும் அதைத் தொடர்ந்து அப்பா அம்மாவைச் சமாதானப் படுத்துவதும் தொடரும். அம்மாவின் பலவீனம் என்ன என்பதை அப்பா நன்கு அறிந்து வைத்திருந்தார்.

‘வாலைக் குமரியடி- கண்ணம்மா மருவக் காதல் கொண்டேன்..!’ சமையல் செய்து கொண்டிருக்கும் அம்மாவின் முதுகுப் பக்கம் சென்று அவளது தோள்பட்டையில் நாடிபுதைத்து காதுக்குள் மெதுவாக அப்பா கிசுகிசுக்க, தேன் குடித்த வண்டு போல அம்மா சமையலையும் மறந்து அப்படியே உறைந்து போவாள். இப்படிப் பல தடவைகள் அப்பாவின் பாடலைக் கேட்டு மெய்மறந்து அவள் உறைந்து போய் நின்றதை நான் பார்த்து எனக்குள் வியந்திருக்கிறேன். அப்பாவைப்போல அம்மாவிற்குத்
தனது அன்பை வெளிப்படையாகக் காட்டத் தெரியாதோ என்றும் சில சமயங்களில் நான் நினைப்பதுண்டு. ஆனால் இறுதியில் தணிந்து, பணிந்து போவது எப்பொழுதும் அம்மாவாகத் தானிருக்கும்.

‘ஏனம்மா எப்ப பார்த்தாலும் அப்பாவைத் திட்டிக் கொண்டே இருக்கிறாய்?’

‘அது என்னோட சுபாவமடி, உன்னையும்தான் தினமும் திட்டிறேன், அதற்காக உன்மேல எனக்கு பாசமில்லை என்று அர்த்தமா?’

அம்மாவின் அப்பாவித்தனமான இந்தப் பதில் என்னைச் சிந்திக்க வைத்தது.

எங்கேயாவது இருவரும் வெளியே சென்றால் அம்மாவைப் பார்த்து என்னுடைய அக்காவா என்றுகூட சிலர் கேட்டிருக்கிறார்கள். தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழி என்பதுபோல அம்மா ஒரு நெருங்கிய தோழிபோலத்தான் என்னோடு பழகினாள். அம்மாவின் பாசம் ஆழமானது, வெளியே காட்டிக் கொள்ளாமல் மனசுக்குள் பூட்டிவைக்கும் அன்பு! பொசுக்கென்று வெடித்துவிடும் பலூன் போல, கண்களில் நீர்
துளிர்க்கும் போது பளீச்சென்று மின்னலாய்த் தெரியும் அந்த அன்பு!

அப்பா மேல் அம்மாவிற்கு மதிப்பும், மரியாதையும், பாசமும் இருந்தது மட்டுமல்ல அவர்மீது ஒருவித மயக்கமும் இருந்தது. அப்பா என்ன சொன்னாலும், அவர் தான் தனது உலகமென்று தலையாட்டும் பொம்மை போல சரியோ பிழையோ அவர் சொல்லைத்தட்டாது நடந்து கொள்வாள். ‘அப்பாவின் கண்ணம்மா’ என்றுதான் நான் அம்மாவை எப்பொழுதும் செல்லமாக அழைப்பேன். அப்பாவுக்கு ஏதாவது நடந்தால் அதை அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியுமா என்றுகூட நான் சிலசமயங்களில் நினைத்துப் பார்த்திருக்கிறேன்.

எதிர்பாராத விதமாக நடக்கக் கூடாத சோகசம்பவம் அன்று நடந்து விட்டது.

பற்றிப் படர்ந்த மரமே பட்டுப்போனால் பாவம் அந்தக் கொடி என்ன செய்யும்? முதல் ஒரு வாரம் அப்பாவின் படத்திற்கு முன்னால் சுவரோடு சாய்ந்து உட்கார்ந்து கொண்டு துக்கம் தாளமுடியாமல் அம்மா அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். அப்புறம் தன்னைத் தானே கட்டுப் படுத்திக் கொண்டாள்.

பிரிவு என்பது உடலுக்குத்தான், ஆத்மாவிற்கு அல்ல என்ற ஆத்மீகத் தத்துவத்தை அப்பாவிடம் இருந்து அம்மா கற்றுக் கொண்டிருக்கலாம். ஏனோ தெரியாது அதன் பிறகு அம்மா மனதுக்குள் அழுதாளோ, அல்லது இரவு நேரங்களில் எனக்குத் தெரியாமல் தலையணைகளை நனைத்தாளோ தெரியாது, ஆனால் பெரிதாகக் கத்திக் குழறி அழவுமில்லை, எனக்கு முன்னால் தன் சோகத்தைக் காட்டிக் கொள்ளவுமில்லை.

குட்டிபோட்ட பூனைபோல அம்மா என்னைச் சுற்றிச் சுற்றி வரும்போது எதையோ மனதுக்குள் வைத்துக் குமைந்து கொண்டு வெளியே சொல்லமுடியாமல் சங்கடப்படுவதும், எதையோ என்னிடம் சொல்லத் துடிப்பதும் எனக்குப் புரிந்தது. அவளே சொல்லட்டும் என்று காத்திருந்து பொறுக்க முடியாமல் போகவே அம்மாவிடம் கேட்டேன்.

‘ஏனம்மா கொஞ்ச நாளாய் ஒரு மாதிரியாய் இருக்கிறாய்?’

‘என்னுடைய மனசுக்குள்ளே அந்தக் குற்ற உணர்வு குடைஞ்சு கொண்டே இருக்குடி பாரதி!’

;ஏனம்மா, அப்படி பீல்பண்ணுமளவிற்கு என்ன பெரிதாய் தப்புச் செய்திட்டாய், என்னவென்று என்னிடமாவது சொல்லேன்?’

‘எப்படி உன்கிட்ட சொல்றது என்றுதான் எனக்குத் தயக்கமாக இருக்கிறது!’

‘பரவாயில்லை, வேறுயார்கிட்ட சொல்ல முடியும்? என் கிட்டதானே, சொன்னா உனக்கு கொஞ்சம் மனசுக்கு ஆறுதலாய் இருக்குமேம்மா’

அம்மா கொஞ்ச நேரம் தயங்கினாள். எப்படித் தொடங்குவது என்றோ அல்லது தனது அந்தரங்கத்தை மகளுடன் எப்படிப் பகிர்ந்து கொள்ளவது என்றோ நினைத்திருக்கலாம்.

‘வந்து.., அன்று அப்பா எங்களை விட்டுப் பிரிவதற்கு முதல் நாள் இரவு நான் ஒரு தப்புப்பண்ணிட்டேன்!’

‘தப்பா? என்னம்மா சொல்லுறீங்க?’

‘ஆமா..!, படுக்கையிலே என்னை அவர் ஆசையோடு அணைக்க வந்தார், நான் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டேன். ‘வயசுப் பெண்ணை வைத்துக் கொண்டு இப்போ இதெல்லாம் தேவையா?’ என்று நான் வீம்போடு விலகிப் போய்விட்டேன். அவருக்கு ஏமாற்றமாய்ப் போய்விட்டது. அதன்பிறகு அவர் மறுபக்கம் திரும்பிப் படுத்திட்டார், என்கூடப் பேசவுமில்லை, ஊடல்தானே சரியாப்போயிடும் என்று நினைச்சு நானும் பேசாமல் இருந்திட்டேன். இப்படியாகுமென்று எனக்குத் தெரியுமா? அதை நினைச்சா எனக்கு இப்பவும் ஒரே குற்ற உணர்வாய் இருக்கு. அவருடைய கடைசி ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாத பாவியாய்ப் போய்விட்டேனடி நான்..!’ ஒரு தோழியிடம் தன் குறையைச் சொல்வது போல என்னிடம் சொல்லி விம்மத் தொடங்கினாள் அம்மா.

‘என்னம்மா வேண்டும் என்றா இப்படிச்செய்தாய், யார் எதிர்பார்த்தா இப்படி எல்லாம் நடக்குமென்று, தற்செயலாக நடந்ததுதானே, உன்மேல தப்பேயில்லையம்மா!’

‘நான் பாவியடி..! அவர் என்கிட்ட தானே கேட்டார். புருஷன் என்ற உரிமையோடுதானே என்னிடம் கேட்டார்..!’ தலையில் அடித்துக் கொண்டே ஒரு குழந்தைபோல என்தோளில் முகம் புதைத்துத் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

‘இப்படி எல்லாம் நடக்கும் என்று நீ நினைச்சியா அம்மா? நம்ம விதி அவ்வளவுதான், வேறு என்ன செய்ய முடியம்?’ அம்மாவை அணைத்துக் கொண்டு சமாதானம் சொன்னேன்.

அவருடைய படத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவர் என்னுடைய காதுக்குள்ளே ‘வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா..!’ என்று குற்றம் சாட்டுவது போல எனக்குள் ஒரே பிரமையாய் இருக்குதடி பாரதீ, அவரைக் கைபிடிக்கும்போது அக்கினி சாட்சியாய் இன்பத்திலும் துன்பத்திலும் அவருக்குத் துணையாய் இருப்பேன் என்றுதானே கைப்பிடித்தேன், நானொரு பைத்தியம், நிவர்த்தி செய்யமுடியாத தப்புப் பண்ணிட்டேனே என்று என்னுடைய மனச்சாட்சி எப்பொழுதும் என்னைக் குத்திக் காட்டிக் கொண்டிருக்குதே, நான் என்ன செய்ய..?’ விசும்பல் விம்மலாக மாற அம்மா கத்தி அழத்தொடங்கினாள்.

‘அழட்டும்! நெஞ்சில் உள்ள பாரத்தைக் கொட்டித் தீர்க்கும்வரை அழட்டும்!’ என்று சிறிது நேரம் அம்மாவின் தலையை மெல்ல வருடி விட்டபடி காத்திருந்தேன்.

முடிந்தவரை அம்மாவிற்கு ஆறுதல் சொல்லிச் சமாதானப் படுத்தினேன். ஒரு மனநோயாளிபோல, பெற்ற மகளிடமே தன் அந்தரங்கத்தைச் சொல்லி அழுது தீர்க்கும் அளவிற்கு அம்மாவின் நிலை தாழ்ந்து விட்டதே என்பதை நினைத்த போது என்னையும் மீறி என் கண்கள் பனித்தன.

குடும்ப பொருளாதார நிலையை உத்தேசித்து நான் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போகத் தீர்மானித்தேன். அம்மாவிடம் எனது முடிவைச் சொன்ன போது அம்மா அதை முற்றாக மறுத்துவிட்டாள்.

‘வேலைக்குப் போனால் என்ன? வேண்டாம் என்று ஏன் தடுக்கிறீங்க?’

‘வேலைக்கு அப்புறம் போகலாம், அதற்கு முன் படிப்பை முடிக்கணும், அப்பாவோட விருப்பமும் அதுதான்!’

‘அப்பாவின் விருப்பமா? அவர் உங்ககிட்ட சொன்னாராம்மா?’

‘இல்லை, எழுதியேவெச்சிருக்கிறார்.’

‘எழுதியா..? எங்கே?’

‘இந்தா இதைப் படித்துப் பார்!’

அம்மா கொடுத்த கட்டுப் பேப்பரைப் படித்துப் பார்த்தேன். அது பரணில் இருந்து எடுத்த அப்பா எழுதிய சிறுகதை ஒன்று. அதிலே வரும் கதாநாயகி நிறையப் படித்தவளாகவும், கிணற்றுத் தவளைபோல இருக்காமல் வெளியுலக அனுபவங்களை நிறையப் பெறற்றவளாகவும் இருந்தாள், பாரதியின் புதுமைப் பெண்ணைப் போல பெண்கள் இருக்க வேண்டும் என்பதை அப்பா அதிலே வலியுறுத்தியிருந்தார்.

அதனால் தான் அம்மா என்னை தற்சமயம் வேலைக்குப் போக வேண்டாம் என்றும், தொடர்ந்து படிக்கச் சொல்லியும் என்னை வற்புறுத்துகிறாள் என்பதையும் புரிந்து கொண்டேன்.

அப்பாவின் எழுத்துக்களைத் தாரக மந்திரமாக ஏற்று அதையே அம்மா பின்பற்றுகிறாள் என்பதை இன்னுமொரு சந்தர்ப்பத்திலும் என்னால் உணரமுடிந்தது.

திடீரென ஒரு நாள் அம்மா நெற்றியிலே பொட்டு வைத்து, பூ வைத்து, வண்ணச் சேலை கட்டியிருந்தாள். அம்மாவிற்கு என்ன நடந்தது என்று தெரியாமல் நான் மலைத்துப் போய்விட்டேன். அவளுடைய கடந்த கால நடவடிக்கைகளைப் பார்க்க ஒருவேளை மனநோயால் பாதிக்கப் பட்டிருக்கிறாளோ என்று கூட எண்ணத் தோன்றியது.

என்னுடைய மனதைப் படித்தவள்போல அவளே வேறு ஒரு கட்டுப் பேப்பரைக் கொண்டுவந்து படித்துப் பார் என்று கொடுத்தாள். இதுவும் பரணில் இருந்து அம்மாவால் கிண்டி எடுக்கப் பட்டதாய்த்தான் இருக்கவேண்டும். அதை ஆர்வத்தோடு படித்துப் பார்த்தேன். அதிலே ஓரிடத்தில் ‘மனைவி இறந்தால் கணவன் எதையும் துறப்பதில்லை, கணவன் இறந்தால் மட்டும் ஏன் மனைவி பூவும், பொட்டும் துறக்கணும்? ஏன் இந்தப் பாரபட்சம், வேண்டாம் இந்த அநீதி!’ என்று அப்பா எழுதியிருந்தார்.

திடீரென அப்பாவின் எழுத்துக்கள் ஒவ்வொன்றாக அம்மாவின் உருவத்தில் உயிர் பெற்று நிற்பதைப் பார்க்க எனக்கே வியப்பாக இருந்தது. ஒருவேளை அப்பா எதிர்பார்த்த புதுமைப் பெண்ணாக அம்மா மாறிக் கொண்டிருக்கிறாளோ?

அப்பாவை ஒரு ஆசிரியராகத்தான் இதுவரை நான் தெரிந்து வைத்திருந்தேன். அவரை ஒரு சிறந்த எழுத்தாளனாக நான் கற்பனை செய்துகூடப் பார்த்ததில்லை!

அப்பாவிடம் இவ்வளவு திறமையும் கெட்டித்தனமும் இருந்ததா என்பதை நினைத்துப் பார்க்க எனக்கே புல்லரித்தது. நடமாடும் பல்கலைக்கழகம் என்று அவரது நண்பர்கள் மேடையில் அடிக்கடி அவரைப் புகழ்ந்ததன் அர்த்தம் இப்போது தான் எனக்குப் புரிந்தது.

காலமும் நேரமும் வந்தால் எல்லாம் கனிந்து வரும் என்பது போல, இதுவரை காலமும் திரும்பியே பார்க்காமல் அசட்டை செய்த பிரசுரதாரர்கள் எல்லாம், அப்பாவின் நாவல் ஒன்றுக்கு அரசவிருது கிடைத்ததும் வீடு தேடி வரத்தொடங்கினார்கள். அப்பாவின் ஆக்கங்களுக்கு அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு முற்பணம் கொடுக்க முன் வந்தார்கள். அம்மா தினமும் அவர்களுக்காகத்தான் ஸ்டூல் வைத்து ஏறிநின்று பரணில் புதையல் தேடுகிறாளோ என்று நான் முதலில் நம்பினேன். ஆனால் உண்மையிலேயே அப்பாவின் எழுத்துக்களில் அம்மாவிற்கு இருந்த ஆர்வமிகுதியாலும், ஈடுபாட்டாலும் தான் அம்மா அவற்றைத் தேடித்தேடி படிக்கிறாள் என்பதை விரைவில் நான் புரிந்து கொண்டேன். அப்பா விட்டுச் சென்ற நினைவுச் சின்னங்கள் ஒவ்வொன்றிலும் அவள் தன்னையும் ஐக்கியமாக்கி அதன் மூலம் தன்னைத்தானே மானசீகமாய் திருப்திப்
படுத்திக் கொண்டிருந்தாள்.

அப்பாவின் எழுத்துக்களை எப்படியாவது காசாக்கி விடவேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் மெல்லத் தலை தூக்கியிருந்தது. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டுமென்பதால், அம்மா வெளியே செல்லும் சமயங்களில் நானும் ஸ்டூலை வைத்துப் பரனில் புதையல் தேடத் தொடங்கினேன். அப்படிக் கிண்டிய பொழுதுதான் அப்பா எழுதிய அந்தக் கதை எனக்குக் கிடைத்தது. அதிலே கணவனை இழந்த ஒரு இளம் பெண், மறுமணம் செய்து புதுவாழ்வை ஆரம்பிப்பதாக அப்பா எழுதியிருந்தார்.

அந்தக் கதையைப் படித்து விட்டு என்ன செய்வது என்று நான் சிறிது நேரம் யோசித்துப் பார்த்தேன். அப்பாவின் எழுத்துக்கள் எல்லாம் இப்போ அம்மாவிற்கு வேதவாக்குகளாய்த் தெரிகின்றன. குழம்பிய மனநிலையில் இருக்கும் அம்மாவின் கையில் அப்பாவின் இந்தக் கதை கிடைத்தால் என்ன நடக்கும் என்பதையும் நினைத்துப் பார்த்தேன். வேண்டாம், அப்பாவின் இந்தக் கதையை அம்மா படிக்கக் கூடாது. புது வாழ்வு என்ற போர்வைக்குள் அவளுடைய கனவுகள், சந்தோஷங்கள்
எல்லாம் கலைந்து நிர்மூலமாகக் கூடாது.

‘அம்மா இது ஊருக்கு உபதேசமாய் இருக்கலாம.; ஆனால் உனக்கு மட்டும் இந்த உபதேசம் வேண்டாம். ஏனென்றால் அப்பாதான் உலகம் என்று ஒரு குழந்தை மனதோடு இதுவரை நீ வாழ்ந்து விட்டாய், இன்றும் அப்பாவின் அந்தப் பசுமையான இனிய நினைவுகளோடு தான் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய், உன்னை வேறு யாராயும் என்னால் நினைத்துக் கூடப்பார்க்க முடியாது. அதனாலே அப்பாவின் கண்ணம்மா வாகவே நீ என்றென்றும் இருந்துவிடு!’

அம்மாவைப் பற்றி நான் எடுத்த முடிவு சுயநலமானதா, சரியானதா என்ற கவலை அவ்வப்போது என்னை வாட்டிக் கொண்டே இருக்கிறது. ஏன் அந்த முடிவை எடுத்தேன் என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு மட்டுமே அவள் தாயாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் ஒருவேளை என் அடிமனதில் இருந்ததோ தெரியவில்லை!

Print Friendly, PDF & Email

6 thoughts on “அப்பாவின் கண்ணம்மா

  1. படிக்கும் வாசகன், கதையின் முடிவை நோக்கி நகரும்போது, பூவும் பொட்டும் வைத்து தன்னை அலங்கரித்துக் கொள்ளும் அம்மா, அடுத்து மறுமணம் செய்து கொள்வாள் என்று எதிர் பார்க்கும் வேளையில், அப்பாவின் கண்ணம்மாவாகவே இருக்க வேண்டும் என்ற மகளின் மாற்று எண்ணங்களைக் கொண்டு ஒரு வித்தியாசமான முடிவை உருவாக்கிவிட்டார் ஆசிரியர்.
    எதிர் பாராத முடிவு.
    பாராட்டுக்கள்
    ஜூனியர் தேஜ்

  2. உங்கள் பதிவுக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்
    குரு அரவிந்தன்

  3. நிறைய சிந்திக்க வைத்து மனதை நெகிழவும் வைத்தது

  4. மனதை நெகிழ வைத்துவிட்டது இந்தக் கதை. கண் கலங்குவதை நிறுத்த முடியாமலே படித்து முடித்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *