கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: May 25, 2015
பார்வையிட்டோர்: 10,792 
 

வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு படியேறி” தலைமையாசிரியர்” என போர்டு போட்ட என் அறைக்குள் நுழைந்தேன், அலுவலக உதவியாளர் மணி “குட்மார்னிங் சார்” என சொல்ல மெல்ல தலையசைத்து என் நாற்காலியில் உட்கார்ந்தேன்.

மணி! கொஞ்சம் பேனை போடு என்று சொல்லிவிட்டு சுழலும் காற்றாடியின் காற்றை அனுபவித்து …ஸ்..அப்பாடி வாய் விட்டு சொன்னேன், வாசலில் நிழலாடியது மெல்ல தலையை திருப்பி வாசலை பார்த்தேன், கல்பனா டீச்சர் நின்று கொண்டிருந்தார்கள், உள்ளே வாங்க டீச்சர்.. கல்பனா டீச்சர், கொஞ்சம் பொ¢ய உருவம், சிவந்த நிறம், கொஞ்சம் மாணவர்களிடம் டிசிப்ளின் எதிர்பார்ப்பவர், ஆகையால் ஏதேனும் மாணவனைப்ப்ற்றி புகார் சொல்ல வந்திருப்பார் என நினைத்தேன்.

என் எதிரில் வந்து உட்கார்ந்தவர் சார்.. என இழுத்தார், சொல்லுங்க டீச்சர் என்ன விசயம்? நம்ப வளர்மதி டீச்சர்..கொஞ்சம் மென்று முழுங்கினார்..சார் நான் சொன்னேன்னு சொல்லாதிங்க அவங்க தினமும் இரண்டு பை நிறைய திண்பண்டங்களை ஸ்கூலுக்கு கொண்டுவந்து விக்கிறாங்க? அதுவும் அவங்க ஸ்டுடண்ட்ஸை வச்சு
விக்கிறாங்க, இதனால ஸ்டூடண்ட்ஸ் கூட்டம், அதிகமாகுது எல்லாத்துக்கும் டிஸ்ட்ஸ்ரப் ஆகுது, இதை நீங்க கொஞ்சம் கவனிக்கனும், தயவு செய்து நாந்தான் ரிப்போர்ட் பண்ணேன்னு தெரியவேண்டாம், மீண்டும் ஒரு முறை தன்னை தப்பித்துக்கொள்ள வழிவகை செய்துகொண்டார்.சரிங்க டீச்சர் நான் எப்படி அவங்களை நீங்க விக்ககூடாது அப்படீன்னு சொல்றது? என்ன சார் நீங்க ஒரு ஹெட்மாஸ்டர், ஸ்கூல் டிஸ்ட்ஸ்ரப் ஆகுது அப்படின்னு சொல்றதுக்கு உங்களுக்கு உரிமையில்லயா?.. இதே டீச்சர் போன மாதம் ஒரு அரை மணி நேரம் அதிகமாக ஒரு வேலை சொல்லிவிட்டேன் என்பதற்காக ஹெட்மாஸ்டர்ன்னா டூட்டி டைமுக்கு மேலயும் வேலைகொடுக்கறதுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு என்று சண்டை போட்டவர்கள், அடுத்தவர்களுக்கு வேலை ஏவும்போது மட்டும் உங்களுக்கு உரிமையில்லயா? என்று தலைமேல் ஐஸை கொட்டுவார்கள். இது எல்லா மனிதனின் இயல்பு என்று மனதில் நினைத்துக்கொண்டு சரிங்க டீச்சர் நான் பார்த்துக்கறேன் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தேன்.

கிளார்க் குருநாதன் சிரித்தார், என்ன சார்..நீங்களே சிரிச்சுக்க்றீங்க..இல்ல இந்த டீச்சர் முந்தாநேத்து வளர்மதி டீச்சரோட ஒரு மணிநேரமா சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தாங்க, இப்ப இவங்களேவந்து அவங்களைப்பத்தி கம்பிளெயிண்ட் கொடுக்கறாங்க..நான் நினைக்கறேன் அவங்ககிட்ட கடன் கிடன் கேட்டிருப்பாங்க அவ்ங்க இல்லயின்னு சொல்லியிருப்பாங்க உடனே இந்தம்மா அவங்களை போட்டு கொடுக்க வந்துட்டாங்க என்று தன் கற்பனையை ஓட விட்டு சொன்னார். அப்படித்தான்னு நாம சொல்லமுடியாது குரு சார், ..ம் மத்த டீச்சர்ஸ் யாரும் இதப்பத்தி கம்பிளெயிண்ட் பண்றதில்லையே?

நான் கூட பார்த்துட்டுத்தான் இருக்கேன் சரி குழந்தைகள் வெளியே போய் ஈ மொய்ச்சதை சாப்பிடறதுக்கு, உள்ளே சுத்தமானதை சாப்பிடட்டுமே, சரி குரு சார் இந்த வளர்மதி டீச்சர் வீட்டுல ரொம்ப கஸ்டமோ? என்று கேட்டேன்? எனக்கு அவங்க குடும்பத்தைப்பத்தி ஒண்ணும் தெரியாது சார்! மணி உனக்கு தெரியுமா? அவனும் தனக்கு ஒன்றும் தெரியாது என்று தலையை ஆட்டினான்.

மாலை ஐந்து மணிக்கு மேலிருக்கும், நான் மாணவர்களின் வருகைப்பதிவேடுகளை பார்த்துக்கொண்டிருந்தேன், எப்படியும் இந்த வேலை முடிய ஒரு மணி நேரமாவது பிடிக்கும், கிளார்க்கும் தனக்கு சம்பள பட்டியல் போடும் வேலை இருப்பதால் தானும் ஒரு மணி நேரம் கூட இருப்பதாக சொல்லி வேலை செய்துகொண்டிருந்தார்.மைதானத்தில் இன்னும் ஒரு சில மாணவர்கள் விளையாண்டுகொண்டிருக்கும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது எனக்கு வளர்மதி டீச்சரைப்பற்றிய கல்பனா டீச்சரின் புகார் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

மறு நாள் காலை நான் வரும்போதே என் அறைக்கு முன்னால் கூட்டமாக இருந்தது, உள்ளே வளர்மதி டீச்சர் எனக்காக காத்திருந்தார்கள் சார்..இந்த ஸ்கூல் காம்பவுண்டுக்குள்ள செல்போன் வச்சிருக்க கூடாதுன்னு நான் பல முறை சொல்லியாச்சு, பசங்க கேக்கற மாதிரி தெரியல அதான் நேத்து நாலு பசங்ககிட்ட செல்போனை புடுங்கிட்டு, அவ்ங்க அப்பாவை வரச்சொல்லி அனுப்பிவைச்சுட்டேன் அவங்க வந்திருக்கறாங்க நீங்க விசாரிங்க என்று சொல்லி முடித்தார். டீச்சர் முதல்ல உட்காருங்க என்று எதிரில் இருந்த நாற்காலியை காட்டி அதில் உட்காரவைத்துவிட்டு மணி கொஞ்சம் வெளியில இருக்கறவங்களை கூப்பிடு என்றேன், வந்தவர்கள் பா¢தாபமாக இருந்தார்கள், தினமும் கூலி வேலைக்கு செல்பவர்கள் போல் இருந்தார்கள், அவ்ர்களுக்கு எதற்கு கூப்பிட்டிருக்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை ஆனால் மாணவர்கள் கொஞ்சம் கூட பயப்பட்ட மாதிரி தெரியவில்லை, அவர்களுக்கு அடிக்கமாட்டார்கள் என்பது நன்கு தெரியும், ஏனென்றால் அரசாங்கமே அவர்கள் பக்கம்தானே,இதுக்கும் ஏழாவது தான் படிக்கிறார்கள், அவர்கள் தகப்பனார்களிடம் அவர்களை கூப்பிட்டு அனுப்பியதற்கான காரணத்தை டீச்சரை விட்டே விளக்கச்சொன்னேன், அவர்கள் கடைசியாக சொன்ன பதில் எங்களுக்கு ஒண்ணும் தெரியாதுங்க.. எங்களுக்கு ஒரு நாள் வேலைக்கு போலையின்னா சமபளம் கிடையாது இதை மட்டும் அனைவரும் ஒப்புவித்தார்கள்.நான் அவர்களிடம் இனிமேல் செல்போனை உங்க பசங்க வச்சிருந்தாங்கன்னா செல்போனை போலீசுகிட்ட ஒப்படைச்சுடுவோம் என்று ஒரு மிரட்டு மிரட்டிவிட்டு அவர்களிடம் போனை கொடுத்து இத நீங்களே வச்சுக்குங்க பசங்ககிட்ட கொடுக்காதீங்க !..என்று அனுப்பிவைத்தேன்.என்னுடைய அறையை தாண்டி சிறிது தூரம் போவதற்குள் அவர்களிடமிருந்து செல்போனை அந்த மாணவர்கள் பிடுங்கிச்செல்வதை ஜன்னல் வழியாக பார்த்தேன், என்ன செயவது? வருத்தப்பட்டுக்கொண்டேன்.

இந்த முடிவை வளர்மதி டீச்சரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, நீங்கள் இப்படி இருந்தால் எப்படி ஸ்டூடன்ஸ் எங்களை மதிப்பாங்க? நீங்கள் செல்போனை கொடுத்திருக்ககூடாது ! என்று கோபமாக் கூறினார். விடுங்க டீச்சர் நாம என்ன செய்யமுடியுமின்னு நினைக்கிறீங்க செல்ல வாங்கி வச்சுட்டா மட்டும் இவனுங்க
கேப்பானுங்களா? இப்ப பார்த்தீங்கள்ள அவங்கப்பாகிட்ட இருந்தே ‘செல்ல’ புடிங்கிட்டு போறதை, டீச்சர் இதை கேட்க தயாரில்லை, நான் ஒத்துக்க முடியாது சார், செல்ல ஒரு முறை பசங்ககிட்ட புடுங்கி வச்சுட்டா அவனுங்க இனிமேல் ஸ்கூலுக்கு கொண்டு வரமாட்டானுங்க, எனக்கு ஆயாசமாக் இருந்தது, டீச்சர் ‘செல்ல’ நாம வச்சிருந்தா அதுக்கு நாம காவல் காத்துட்டு இருக்கமுடியாது..

டீச்சர் மீண்டும் மீண்டும் அதைப்பற்றியே பேச எனக்கு பொறுமை போய் சட்டென்று நீங்க மட்டும் ஸ்கூல்ல திண்பண்டம் விக்க கூடாதுன்னு தெரிஞ்சும் விக்கறீங்கள்ள !

வாயிலிருந்து கட்டுப்படுத்த முடியாமல் வந்துவிட்டது. டீச்சர் ஒரு கணம் திகைத்து விட்டார், அவர் இப்படி சொல்வேன் என எதிர்பார்த்திருக்கமாட்டார். நான் விக்கறது தப்புன்னு நினைச்சிங்கன்னா நான் இன்னையோட விக்கறதை நிறுத்திக்கறேன், சடாரென எழுந்து சென்று விட்டார். என்னையே நொந்து கொண்டேன்.

மறு நாள் பகல் 11 மணி இருக்கும், வெளியே ஒரே இரைச்சலாக இருந்தது, மாணவர்கள் போவதும்,வருவதுமாக இருந்தார்கள்,மணியை விசாரிக்க சொன்னேன், சார் வளர்மதி டீச்சர் திண்பண்டம் கொண்டு வரலியாம், பசங்க வெலளிய போய் வாங்கிட்டு வர்றாங்க, மெல்ல வெளியே வந்தேன் வெளியே பள்ளியை ஒட்டிய கடைகளில் மாணவர்கள் கூட்டம் அலை மோதியது சுத்தமில்லாத பண்டங்கள், வாங்குவதற்கு குழந்தைகள் போட்டி போட்டன, சே..இந்த வளர்மதி டீச்சர் ஏன் இப்படி?

ஒரு வாரம் ஓடி விட்டது, இப்பொழுது வளர்மதி டீச்சர் திண்பண்டங்கள் விற்பதில்லை என குழந்தைகள் புரிந்து கொண்டன.அதனால் பள்ளிக்கு பக்கத்தில் புதிது புதிதாய் கடைகள் முளைத்தன.ஈ மொய்க்கும் திண்பண்டங்கள் ரோட்டோரத்தில் விற்கப்பட்டன, அது போக அது பஸ் போகும் பாதையாதலால் வண்டிகள் சென்று கொண்டே இருந்தன, இதனால் வ்ரும் புகையும், மண்ணும் திண்பண்டங்களில் படிந்து கிடந்தது, அதைப்பற்றி குழந்தைகள் யாரும் கவலைப்படவில்லை, அவர்களை சொல்லி என்ன பயன்? பசிக்கு எதையாவது சாப்பிடவேண்டும் என குழந்தைகள் ஏங்குவது இயல்புதானே ! எனக்கு யாரை குறை சொல்வது என்று புரியவில்லை ஆக மொத்தம் பாதிப்பது குழந்தைகள் உடல் நலம்தான். வளர்மதி டீச்சருக்கு ஏன் புரியவில்லை?

மதியம் இரண்டு மணிக்கு மேல் இருக்கும் அப்பொழுதுதான் சாப்பிட்டு முடித்து இருக்கையில் அமர்ந்திருந்தேன், பூமிநாதன் சார் மெல்ல உள்ளே வந்தார், அவ்ர் மாணவர்களுக்கு அறிவியல் பாடம் எடுப்பவர், என்ன விசயமா என்னை பார்க்க வந்திருப்பார்? என எண்ணமிட்டவாறு வாங்க பூமிநாதன் சார் என வரவேற்றேன், என் எதிரில் உட்கார்ந்தவர் சார் வளர்மதி டீச்சரை இண்டர்வெள்ள எதுவும் விக்ககூடாதுன்னு சொல்லிட்டிங்களாம், கல்பனா டீச்சர் சொன்னாங்க..எனக்கு கல்பனா டீச்சரின் அரசியல் புரிந்தது, அதிலிருந்து நழுவ வேண்டும் என்று அப்படியா சொன்னாங்க, ஒரு வேலை அவங்க விக்காததுனால இவங்களுக்கு ஏதாச்சும் நன்மை இருக்கா? மெல்ல தூண்டில் போட்டேன், என்ன சார் சொல்றீங்க நம்ம ஸ்கூலுக்கு பக்கத்துல இருக்கற நாலு கடையும் அவங்களதுதான் சார், அது போக இரண்டு கடைகளை வாடகைக்கு விட்டுருக்காங்க. இப்பொழுது எனக்கு புரிந்தது… ஏன் சார் இந்த வளர்மதி டீச்சருக்கு கவர்மெண்ட் சம்பளம் போதலயோ? இதயெல்லாமா ஒரு டீச்சர இருந்துட்டு செய்யறது? அடுத்த தூண்டில் போட்டேன்,

ஐயோ ! சார் அது அந்த டீச்சருக்கு இல்லீங்க ! அவங்க அனாதை ஆசிரமத்துல வளர்ந்தவங்க,அங்க இவங்களை மாதிரி வேலை செய்யறவங்க தன்னோட சம்பளத்தை அந்த நிர்வாகத்துகிட்ட கொடுத்து, அவங்க கொடுக்கற பணத்துலதான் இவங்க செலவு பண்ணுவாங்க! அது போக அங்க இருக்கற வயசானவங்க செய்யற திண்பண்டங்களை எடுத்து வந்து தான் விக்கறாங்க, இவங்களை மாதிரி வளர்ந்த நிறைய பேர் இந்த மாதிரி விக்கறாங்க, அதனால சுத்தமாக இருக்கும், இது தெரிஞ்சதனால நாங்களும் வீட்டுக்கு வாங்கிட்டு போவோம்…அது போக.. என்று சொல்லிக்கொண்டே போனார்…. எனக்கு மனம் வலிக்க ஆரம்பித்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *