கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: September 16, 2022
பார்வையிட்டோர்: 16,696 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பிரதமர் வருகை பற்றிக் கிராமத்தில் பத்து நாட்களாய்ப் பேச்சு. செல்லத்தாயிக்கு ஆச்சர்யமாக இருந்தது. மாரியம்மன் பூச்சாட்டு மறுபடியும் வந்துவிட்டது போலிருந்தது, மாரியம்மன் சாட்டுன்னா தலைக்குத் தலை வரி கொடுக்கணும். வரி கொடுக்காத திருவிழா மாதிரி இது, செலவு பண்ண யார் யாரோ.பத்து நாட்கள் வேடிக்கை இன்னமும் தீரவில்லை… பொழுது போகக் கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாம் என்றிருந்தது.

பிரதமரைச் செல்லத்தாயி பஞ்சாயத்து போர்டு ஆபீஸ் டீ.வி.யில் பல தரம் பார்த்திருக்கிறாள், “என்ன நிறம்… என்ன அழகு” என்று வியந்திருக்கிறாள், சுண்டினால் இரத்தம் வரும் நிறம். ஆரஞ்சுப் பழச் சருமம், டீ.வி. யில் பார்க்காத நாளில்லை, டீ.வி. யில் காட்டும்போது யார் என்று அவளுக்கு முன்பெல்லாம் தெரியவில்லை, கிருஷ்ணவேணி – பஞ்சாயத்து போர்டு பள்ளியில் எட்டாவது படிப்பவள் – ஒருநாள் சொன்னாள் – அவர்தான் பிரதமர் என்று. அப்போதிலிருந்து டீ.வியைப் பார்க்கிற போது பிரதமர் வந்தால், செல்லத்தாயி சட்டென அடையாளம் கண்டு கொள்வாள். “அய்… பிரதமர்” என்று முணுமுணுத்துக் கொள்வாள். பிரதமர் இன்னாரின் மகன் என்பதை அறிந்தபின் அவளுக்கு இன்னும் சந்தோஷமாகவே இருந்தது என்ன பிறப்பு, வளர்ப்பு, செல்வச் செழிப்பு, உயர் குடி வகை என்று ஆச்சர்யம் கொண்டிருக்கிறாள். அப்படிப்பட்ட பிரதமர் அவளின் கிராமத்திற்கு வரப்போகிறார். அவளின் குடிசை உள்ள தெருவுக்கு வரப் போகிறார். ஏதாவது பேசினாலும் பேசுவார். பதில் சொல்ல வேண்டும் என்று உள்ளூர்ப் பெரியவர்கள் சொல்லியிருந்தார்கள்.

எளச்சி பாளையத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவாராம். பல வொலிகாப்டர்கள் ஊர் மேல் சமீபமாய்ப் பறக்கின்றன – புழுதி பரப்பி.’புஷ்பக விமானமாய், சப்த மெழுப்பாமல், சினிமாவில் தேவர்கள் வரும் வாகனங்கள் போன்று எதுவும் அவருக்கு இல்லையா?’ என்று செல்லத்தாயியும் நினைத்துப் பார்த்திருக்கிறாள். “அந்த மவராசனுக்குத் தெரியாததா, நமக்குத் தெரியப் போகுது…வரட்டும்…”

இரண்டு நாட்கள் முன் ஒத்திகை மாதிரி எல்லாம் நடந்தது. எளச்சி பாளையத்தில் புழுதி பரப்பி ஹெலிகாப்டர் ஒன்று வந்தது. போலீஸும், உயர் அதிகாரிகளும் வந்தனர். பிரதமர் போன்று ஒருவர் வந்தார். அவர் நடக்கும் தெருவில் நடந்தார். அவர் எங்கெல்லாம் நிற்பார். பேசுவார் என்று கணக்கிட்டு நின்றார்; பேசினார். எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று சந்தோஷப்பட்டுப் போனார்.

“செல்லத்தாயி.. பிரதமர் இந்தத் தெருவிலே வரப் போறார். யார் வீட்டுக்கு வேணா போவார். உங்கிட்டே வந்து ஏதாச்சும் கேட்டா சரியா, மரியாதையா பதில் சொல்லணும்..”

“சரிங்க..ஆனா அந்த மவராசன் எந்த பாஷையிலே பேசுவார். டீ.வி.யிலே அவர் பேசற பாஷை என்ன..?”

“அவர் என்ன பாஷை பேசினாலும், அதைத் தமிழிலே சொல்ல ஆளுங்க இருப்பாங்க..சரியா பதில் சொல்லு…”

“சரிங்க…சட்டுன்னு வூட்டுக்குள்ளே பூந்து சாப்பாடு சாப்பிடற மாதிரியெல்லாம் டீ.வி.யிலே காட்டறாங்களே..?”

“ஆமா…எதுக்கும் கோழிக் கொழம்பு வெச்சி வை. தயாரா!”

“நான் எங்கேங்க போவேன் கோழிக்கு – மாசக் கடைசியிலே…?” – சுற்றி இருந்தவர்கள் சிரித்தார்கள்.

“சை…சும்மா கெட. வீட்டிலே வந்து கோழிக் கொழும்பு திங்குறதுக்கு அவருக்கு நேரமெல்லாம் இருக்கா.. ”

இதைச் சொல்ல வந்தவர்களை நினைக்க நினைக்கப் பயமெடுத்தது அவளுக்கு. எவ்வளவு போலீஸ்காரர்கள். எவ்வளவு திடமான மனிதர்கள். ஒரு மனிதனைச் சுற்றி இவ்வளவு பேர்களா? இன்றே இப்படி யென்றால் நிஜ மனிதர் வரும் நாளில் எப்படியிருக்கும்? தலை சுற்றும் அளவுக்கு இருந்தது.

எளச்சிபாளையத்திற்கு அந்தப் புறம் ஏதோ தொழிற்சாலை வரப் போவதாக எல்லோரும் பேசிக் கொள்வது செல்லத்தாயிக்குத் தெரியும். ஒரு நாள் தன் மகன் பொன்னுரங்கத்திடம் கூடச் சொன்னாள் :

“ஏண்டா…எளச்சி பாளையத்திலே ஏதோ பெரிசா தொழிற்சாலை வரப் போகுதாம். குண்டு, வெடியெல்லாம் பண்ணுவாங்களாம்…நீயும் போய்ச் சேரேன்…எத்தனை நாளைக்கு மில்லுலே எட்டு ரூபா சம்பளத்துக்கு அலைவே. ஏதோ சர்க்காரு தொழிற்சாலைங்கறாங்க…”

“அம்மா…அது பேக்டரியில்லே..அணு உலை…அணுசக்தி சம்பந்தமானது…”

“என்ன எளவோ ..?”

“நிறைய வெடிகுண்டு மாதிரி என்னென்னமோ செய்வாங்க. ஒடம்புக்கு ஆகா தாமா… மெல்ல மெல்ல சாவு வரும் பக்கத்திலிருக்கிறவங்களையும் விடாதாமா… காச நோய் மாதிரி ஆளை அரிச்சுக் கொன்னு போடும். பொறக்கிற குழந்தைங்க கண்ணு இல்லாமே. கால்கை இல்லாமே பொறக்கும். மூளை வளர்ச்சி இருக்காதுன்னு நிறையச் சொல்றாங்க…”

“அப்புறம் அது எதுக்கு…?”

“விஞ்ஞானம்தான்…”

“என்ன விஞ்ஞானமோ…?”

“அதெல்லாம் இங்கே வந்தால் தாமெல்லாம் ஊரைக் காலி பண்ண வேண்டியிருக்கும். இப்பவே எளச்சி பாளையம் காலியாயிடுச்சுத் தெரியுமா….நம்மளை எப்ப காலி பண்ணச் சொல்வாங்களோ..? அதனால தான் இதெல்லாம் வரக் கூடாதுன்னு போராட்டம் பண்றாங்க சில போ. நம்ம செண்பகராமன் பையன் கூட அந்தப் போராட்டத்திலே முக்கியமான ஆளுதா…அது சம்பந்தமான போராட்டத்திலதான் அவரை ஜெயில்லே போட்டுட்டாங்க. மூணு மாசத்துக்கு மேலாச்சு. இன்னும் வெளியே வுடலே..என்ன ஆகுமோ..?”

“அய்யோ… நம்மளையும் காலி பண்ணச் சொல்லுவாங்களா..”

“சொல்லலாம். நாலு கிராமம் காலியாயிடுச்சு. நம்மதும் பண்ணணும்னா பண்ணித்தான் ஆகணும். ஆனால் பணம் குடுப்பாங்க.”

“பணம் குடுத்துக் காலி பண்ணச் சொன்னால் பண்ணிட்டாப் போச்சு. நமக்கென்ன இருக்கு பெரிசா? ஓடும். காலி எடமும்தானே…காசு கொஞ்சம் தாஸ்தியா கெடச்சா இந்த வூரை வுட்டுட்டுப் போயிடலாம்…எத்தனை தலைமுறைக்கு இங்கே கஷ்டப்படறது..?”

“ஆனா…வழக்கமா விக்கறதை விட பாதிக்குக் கூட விலை தரமாட்டாங்க..”

“அப்புறம் என்னத்துக்கு…! ஆமா வர்ற அத்த மகராசன் பணம் குடுக்கத்தான் வர்றாரா…?”

பொன்னுரங்கம் சிரித்துக் கொண்டான்.

“போராட்டமெல்லாம் நடக்குது பாரு…அது சம்பந்தமாதான்…”

***

“அம்மா. நல்ல தண்ணிக்குப் போகனும்னா போயிட்டு வந்துடு… நாளைக்குப் பிரதமர் வர்றப்போ எங்கேயும் நடமாட முடியாது. போனாத் திரும்பி வர்ற வரைக்கும் நிச்சயமிருக்காது”.

பொன்னுரங்கம் செகண்ட் ஷிப்ட் வேலைக்குப் போகையில் சொல்லிவிட்டுப் போனான். குடிநீருக்குப் போகிறவர்களைக் கூடத் தடுத்து நிறுத்திச் சிரமம் தருவார்களா என்பது குறித்து ஆச்சரியமாகவே இருந்தது செல்லத்தாயிக்கு, இருந்தாலும் போய்விட்டு வந்து விடலாம் என்று இரு மண் குடங்களையும் எடுத்துக் கொண்டாள்.

உள்ளூர் கிராமத்தில் கிடைப்பது உப்புத் தண்ணீர்தான். அதை வாயில் வைக்க முடியாது. எளச்சி பாளையத்தில் சமீபமாய்த் தொழிற்சாலை வருகிறது என்று பிரமாதமாய்க் குடிதண்ணீர் வசதி, எளச்சி பாளையத்திற்குத்தான் நல்ல தண்ணீருக்கு – குடி நீருக்கு – செல்ல வேண்டும். இரண்டரை மைல்கள். ஐம்பதை எட்டிய தள்ளாத வயதில், மெல்ல மண் குடங்களுடன் நடந்து போய், கொண்டு வருவாள். அளந்து நிதானமாய்த்தான் மொண்டு தண்ணீர் தாகத்தைத் தணிக்க வேண்டும். கொஞ்சம் அதிகம் தாகம் என்று நிதானமில்லாமல் ஊற்றிக் கொண்டால் அவ்வளவுதான் – பக்கத்து வீட்டில் ஒரு சொம்பு கடன் கேட்க வேண்டும். பத்து ரூபாய் கடன் கேட்பது போல் ஒரு சொம்பு தண்ணீர் கேட்பது, எல்லோர்க்கும் அசௌகரியம்தான்.

நடக்க நடக்க நடை நீண்டு கொண்டே போவது போலிருந்தது. கால்கள் சலித்தன செல்லத்தாயிக்கு. மண்குடங்கள் எவ்வளவு கணம் கணக்கின்றன! எளச்சி பாளையத்துத் தண்ணீர்த் தொட்டி பக்கம் அலுத்து, அடைந்த போது, போலீஸ்காரர்கள் குடத்தில் என்ன என்று திரும்பத் திரும்பக் கேட் டனர், தண்ணீர் எடுக்க வந்ததைச் சொன்ன போது காதில் வாங்கிக் கொள்ளாமல், குடத்துக்குள் கைவிட்டு அலசியும் பார்த்தனர், குடத்தை வாங்கி அவசர கதியில் கீழே போட்டு உடைத்து விடுவார்களோ என்ற பயமும் இருந்தது அவளுக்கு. அவர்கள் குடங்களைக் கொடுத்த பின்னும், பயத்தால் குடங்கள் கைகளிலிருந்து நழுவி விடக் கூடாது என்று பதறினாள் செல்லத்தாயி, நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. பயத்தால் நழுவிவிழுந்துவிட்டால் பொன்னுரங்கம் சத்தம் போட்டாலும் போடுவான், தண்ணீர் பிடித்துக் கொண்டு கிளம்புகையில் போலீஸ்காரர் ஒருவர். செல்லத்தாயியைப் பார்த்துச் சப்தம் போட்டார். ”நாளைக்கு இந்தப் பக்கம் வந்துராதே. எலும்பு கூட மிஞ்சாது. இந்த வயசிலே தண்ணி எடுக்க வந்தேன்னு சொன்னா யார் நம்புவா? போ, கெழம்!”

பயத்தால் கிடுகிடுவென்று கால்கள் நடுங்க நடந்தாள் செல்லத்தாயி.

கால்கள் வலியெடுத்தள, கால்களிலிருந்து வலி மெல்ல மெல்ல ஏறிக் கொண்டிருந்தது. ஹெலிகாப்டர் வந்து எறங்கற எடம்னு டாங்க் டாங்க்கா தண்ணியை நெலத்தில் கொட்டறாங்களே. நமக்குக் குடிக்கத் தண்ணியே கெடைக்க மாட்டேங்குது. எத்தனை வருஷம் இந்தக் கஷ்டப்படறது? மூச்சு அடங்கற வயசும் வந்துடுச்சு. இன்னமும் இந்தத் தண்ணிக்குக் கஷ்டம் தீரலியே. இதிலே எளச்சி பாளையத்திலே வெடிகுண்டுத் தொழிற்சாலை எதுக்கு? இதிலே எதுக்கு நாமெல்லாம் எடத்தை வேறே காலி பண்ணித் தரணும்…” செல்லத்தாயியின் கோபம் ஆகாசம் அளவு வந்து நின்றது.

***

வீதி சட்டெனப் பரபரப்பானது. மாரியம்மன் கோவில் முனையில் பிரதமர் நடந்து வந்து கொண்டிருந்தார். சுற்றிலும் செக்யூரிட்டி ஆட்கள், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், திண்ணையின் மேல் ஏறி நின்று பார்த்தாள் செல்லத்தாயி. தெரியவில்லை. பரபரவென்று ஓடிவந்த யாரோ, பிரதமர் நாகமணி வீட்டில் இருப்பதாய்ச் சொன்னார். செல்லத்தாயி ‘அப்படியா?’ என்று சொல்லிக் கொள்கையில், இன்னொருவள்: ”என்ன இருக்கு… சாப்பிட, குடேன்னு’ கேழ்வரகுக் கஞ்சியை வாங்கிக் குடிச்சிக் கிட்டிருக்கிறாராம்…” என்றான். வியப்பாயிருந்தது செல்லத்தாயிக்கு. எதிர்த்த வீட்டு ஈஸ்வரி வந்தாள். நன்றாக அலங்காரம் பண்ணியிருந்தாள். நல்ல பட்டுப் புடைவையைக் கட்டியிருந்தாள். திருவிழாவுக்குப் புறப்படுகிறவள் போல், உறவுக் கல்யாணத்திற்குப் போகிறாற் போல் இருந்தது. செலத்தாயி கிழிந்த தன் புடைவையைப் பார்த்துக் கொண்டாள்.

“என்ன பட்டுப்புடைவையும், பௌடரும்…” செல்லத்தாயி மெல்லக் கேட்டாள்.

“பிரதம மந்திரி வர்றார், இல்லியா…? வந்து சட்டுன்னு நம்ம கூட பேசினா போட்டோ புடிப்பாங்க. சினிமா புடிப்பாங்க. டீ.வி. காரங்க புடிப்பாங்க. அப்புறம் டீ.வி. யிலே காட்டுவாங்க, கொஞ்சம் சுமாராவாச்சும் நாம் இருக்க வேண்டாமா.”

செல்லத்தாயிக்குப் பொறி தட்டியது. குடிசையினுள் சென்றாள். உள்ளிருந்த மண் குடங்களை எடுத்து வந்து வெளியில் வைத்தாள், ஒரு குடம் நல்ல குடி தண்ணீர் மட்டும் இருந்தது. அது வீணாகி விடக் கூடாது, இன்றைக்கு எளச்சிபாளையம் போக முடியாது. இனி நாளைக்குத்தான். எனவே நாளை வரை ஜாக்கிரதையாக வைத்திருக்க வேண்டும். இன்னொரு மண் பாத்திரத்தை எடுத்து வந்து அந்த மண் குடத்தை மூடினாள். கடைசியில் பார்த்தால் ஏழெட்டு மண் பாத்திரங்களாகி விட்டன, மண் பாத்திரங்கள் முன்னால் உட்கார்ந்தாள்.

திடீரென வீதியில் பரபரப்பு அதிகமானது. ஜனங்கள் திமுதிமுவென்று ஓடி வந்தார்கள். பிரதமர் வந்து கொண்டிருந்தார். சுற்றிலும் செக்யூரிட்டிகளும், அரசியல் பிரமுகர்களும். கூச்சல் ஆரவாரம். எங்கே ஜனக் கூட்டம் தன் மண் பாத்திரங்களை யெல்லாம் உடைத்து, துவம்சம் செய்து விட்டுப் போய் விடுமோ என்ற பயமும் இருந்தது செல்லத்தாயிக்கு. ஆனால் அவள் மண் பாத்திரங்களுடன் குடிசைக்கு முன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தவர்களே சற்று ஒதுங்கி நடக்க ஆரம்பித்தனர். எல்லோரின் பார்வையிலும் அவள் பட ஆரம்பித்தாள்.

பிரதமர் கைகூப்பியபடி வந்தார். கையிலிருந்த பூமாலைகளையும், துண்டுகளையும் மக்கள் மேல் எறிந்து கொண்டே வந்தார். செல்லத்தாயியின் குடிசை முன்பு ஜனத்திரள் அடைத்துக் கொண்டாலும், செல்லத்தாயி பானைகளின் முன்பு உட்கார்ந்திருப்பது தெரிந்தது. பிரதமர் குடிசையை நோக்கி வந்தார். கூட்டம் மெல்ல விலகி வழிவிட்டது. இப்போது செல்லத்தாயி அனைவரின் பார்வையிலும் பட்டாள்.

பிரதமர் அவள் முன் இருந்த மண் பாத்திரங்களை நோக்கி வந்தார். புருவங்களை உயர்த்தி என்ன என்பது போல் பார்த்தார். செக்யூரிட்டிகள் அவசரத்துடன் முண்டியடித்தனர், பிரதமரின் சைகை அவர்களைக் கட்டுப்படுத்தியது. செல்லத்தாயியின் பக்கம் சென்றார்.

கைகளைக் குவித்து “வணக்கம்” என்றார், செல்லத்தாயி எழ முயன்று உட்கார்ந்தபடியே “வணக்கம்” என்றாள்.

“எப்படி உள்ளீர்கள்? ரேஷன் ஒழுங்காய்க் கிடைக்கிறதா? அணுசக்தி ஆலை வந்தால் உங்களுக்குத் தொந்தரவு இல்லை யல்லவா?” என்றார் நளினமான ஆங்கிலத்தில். அவரின் நிறத்தையும், உடல் வாகையும் பார்த்துக் கொண்டேயிருந்தாள் செல்லத்தாயி. அவசர அவசரமாய் ஒருவர் தமிழில் பிரதமர் சொன்னதைச் சொன்னார். செல்லத்தாயி எதுவும் பேசாமல் நின்றாள். மொழிபெயர்த்தவர் மீண்டும் கேள்வியைச் சொல்லி விட்டு, “பதில் சொல்லம்மா” என்றார். செல்லத்தாயி நிதானமாய், “எப்பவும் கஷ்டம்தா…கஷ்டமில்லாமே மனுஷ ஜீவனம் இருக்க முடியுமா?” என்றாள்.

மொழிபெயர்ப்பாளர், “எல்லாம் கிடைக்கிறது. அது ஆலை பற்றி ஆட்சேபனை எதுவுமில்லை என்கிறாள்” என்றார்.

பிரதமர் லேசாய்ப் புன்னகை செய்தார்.

“இன்னிக்கு என்ன சாப்பாடு செய்தீர்கள்?”

பிரதமர் தன் கேள்வியை இந்திக்குத் திருப்பினார். மொழிபெயர்ப்பு நடந்தது.

“வழக்கமா கேழ்வரகுதா…நாளைக்கு ஞாயித்துக் கெழமை – கறியும் நெல்லு சோறும்…”

அவள் வீட்டில் கறிக்குழம்பும், அரிசி சாதமும். சாப்பிட அழைக்கிறாள் என்றார் மொழிபெயர்ப்பாளர். டி.வி. கேமராக்கள் இயங்கின. போட்டோக்கள் பளிச்சிட்டன.

“ரொம்பவும் நன்றி. இன்னொரு நாளைக்குச் சாப்பிடறேன்…”

“நாகமணி வீட்லே ஐயா சாப்பிட்டாரா?”

“ஆமா..நான் யார் வீட்லியும் சாப்புடுவேன். சாமானியன்தானே.”

“தண்ணிக்குத்தாங்க கஷ்டம். தினமும் மூணு மைல் இந்த வயசிலே நடக்கறேன்…”

“என்ன சொல்றா அம்மா?”

வெற்றுக் குடத்தை எடுத்துக் காண்பித்தாள் செல்லத்தாயி… ஒரு சொம்பில் இருந்த தண்ணீரைக் காட்டினாள்.

“நீங்க அந்தம்மா வீட்லே தண்ணியாச்சும் சாப்புடனும் என்கிறாள்” என்றார் மொழி பெயர்ப்பாளர்.

“தண்ணி கஷ்டத்தைப் போக்காமெ பக்கத்து ஊர் வெடிகுண்டு தொழிற்சாலை யெல்லா…”

செல்லத்தாயி உரத்த குரலில் சொன்னாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

யாரோ கட்டளையிட்டார்கள். டி.வி. இயங்குவது நின்றது.

“அவள் என்ன சொல்கிறாள்?” பிரதமர் செல்லத்தாயியின் முகபாவத்தைப் பார்த்த படியே கேட்டார்.

“ஒன்றுமில்லை…இருக்கும் இடத்தைக் காலி செய்யச் சொல்வீர்களா..தலைமுறை தலைமுறையாய் இருந்த இடம் என்கிறாள்.”

சரேலென்று பலர் இடம் பெயர்ந்தனர். செல்லத்தாயியை மறித்தனர். பிரதமரிடம் யாரோ போகலாம் என்றனர். பிரதமரும் சரி என்று கிளம்பினார். செல்லத்தாயிக்கு முன்னால் வலிமையான மனிதர்கள் பலர் நின்று கொண்டிருந்தார்கள், கும்பல் பிரதமருக்குப் பின்னால் போனது. புழுதி அவள் மூச்சைச் சிரமப்படுத்தியது. சட்டென ஒரு பூட்ஸ் கால் தண்ணீர் இருந்த குடத்தை மிதித்தது. பளாரென்று குடம் உடைந்து நீர் தரையில் இறங்கியது.

– 20-08-1989, அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் ரூ.375 மூன்றாவது பரிசு பெரும் கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *