கதையாசிரியர்:
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 29,178 
 

இன்று நாளை என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாள் வந்தே விட்டது. முகுந்த் மருத்துவப் படிப்பிற்காக மெல்பர்ன் யுனிவர்சிட்டி/ஆஸ்திரேலியாவுக்குச் செல்வது என்பதைத் தீர்மானித்தபின், முகுந்த்துடன் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் மிகப் பெரிய பொக்கிஷமாகப் பட்டது கமலாவுக்கு. கணேஷ்-கமலாவின் அருந்தவப் புதல்வன் முகுந்த் என்றால் ரொம்பவே சரியாக இருக்கும். திருமணமாகி வெகு நாட்களுக்குப் பிறகு முகுந்த் பிறந்ததில், கமலாவை விடக் கணேஷுக்குத்தான் அதீத சந்தோஷம். மூச்சுக்கு முந்நூறு தடவை முகுந்த் முகுந்த் என்று அவன் மீது இருவரும் அளவற்ற பாசத்தைக் கொட்டி வளர்த்தனர்.

முகுந்த்தின் படிப்பிலிருந்து அவனது எல்லாத் தேவைகளையும் பார்த்துப் பார்த்துச் செய்வதில் பூரித்துப் போவாள் கமலா. சிறு வயதிலிருந்தே பணிவோடும், பக்தியோடும் அவனைப் பார்த்தவர்கள், கமலாவுக்குக் ‘கிரெடிட்’ கொடுத்தபோது, சிறகுகள் இல்லாமலேயே வானத்தில் பறந்து கொண்டிருந்தாள் கமலா.

தங்கை மீனாவுடன் வயலின் வாசித்தும், கணேஷுடன் டென்னிஸ் விளையாடியும், கமலாவுடன் ஸ்க்ராபிள்ஸ் விளையாடிக் கொண்டும், அனைவரின் உயிர்நாடியாகவும் வளர்ந்து வந்தான் முகுந்த். வெளியில் சென்றவன் வீட்டுக்குள் நுழைந்தாலே ம்யூசிக் சிஸ்டமும், டெலிவிஷனும் உயிர் பெற்றது போல் ஒருவித வைப்ரேஷன் ஏற்பட்டுவிடும்! இப்போது, அவனைவிட்டுப் பிரியணுமே என்ற கவலை எல்லோரையும் விடக் கமலாவையே அதிகமாக ஆட்கொண்டிருந்தது. அப்படி ஒன்றும் ,முகுந்த் தொட்டதுக்கெல்லாம் அம்மாவைத் தேடிவரும் பிள்ளை இல்லைதான்! இருந்தாலும் அவனை விட்டுப் பிரிவதில் சற்றும் உடன்பாடு இல்லாமல் இருந்தாள்.

ஆனாலும் கூடச், சொல்லத் தெரியாத சங்கடமும் நன்றாகப் படித்து நல்லபிள்ளையாக வரணுமே என்கிற அம்மாக்களுக்கே உரித்தான கவலையும் அவளைப் படுத்தி எடுத்தன.

‘ஹாய் அம்மா! ஏர் டிக்கெட் வந்தாச்சு. குவான்டஸில், நெக்ஸ்ட் வீக் கிளம்பனும் அம்மா! பாஸ்போர்ட் மற்ற டாக்குமெண்ட்ஸ் எல்லாம் எடுத்து வச்சுக்கணும்’……பரபரத்தபடி வந்தான் முகுந்த். ‘இதோ ரெண்டே நாளில் எல்லாம் ரெடி பண்ணிடறேன் பார்’ என்றவாறே ஒவ்வொன்றையும் சரி பார்த்து வைக்கலானாள் கமலா.
இரண்டு பெட்டிகள் நிறைய அவனுக்குத் தேவையான உல்லன் உடுப்புகள், ஜாக்கெட், சிறிய சைஸ் ரைஸ்குக்கர், கார்ட்லெஸ் கெட்டில், மீனாட்சியம்மா சமையல் புத்தகம், இன்ஸ்டன்ட் சமாச்சாரங்கள், சிறு பிள்ளையார் விக்கிரகம், எம்.எஸ்ஸின் சுப்ரபாதம், மாண்டலின் இசைவட்டுக்கள், ஒரு சோனி வாக்மன், டென்னிஸ் ராக்கெட் ….என்று பார்த்துப் பார்த்து வைத்தாயிற்று. அவனுக்குப் பிடித்த ரிப்பன் பக்கோடாவையும், திரட்டுப்பாலையும் அழகாய்ப் பாக் பண்ணி வைத்தாள். சுவாமி திருநீறு ஒரு ப்ளாஸ்டிக் பாக்கெட்டில் வைத்தாள்.
இதுவரையில் ஒரு சோப் வாங்கவோ, பால்பாக்கெட் வாங்கவோ கூட முகுந்த் கடைக்குப் போனதில்லை. தினமும் அவனை எழுப்பி, அவன் இருக்குமிடம் சென்று ப்ரேக்:.பாஸ்ட் செய்து கொடுத்து, இஸ்திரி செய்த சீருடைகளைக் கொடுத்து, அவனை அனுப்பி வைக்கும் வரையில் அவனோடு இணைந்து போவாள் கமலா. இனிமேல் அவன் என்ன செய்வான்? தானே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளணுமே என்ற எண்ணம் வந்தபோது, கண்களில் நீர் முட்டியது!

வரும்போதே ‘அம்மா, பசிக்கிறது’ என்று பறந்து கொண்டுதான் வருவான்….இனி யார் பார்த்துப் பார்த்துசெய்யப் போகிறார்கள்? தானே சமாளித்துக் கொள்ளணுமே….நாலாவிதக் கவலைகளும் அவளை வாட்டி எடுத்தன.

ஆயிற்று. முகுந்த் ஆஸ்திரேலியா கிளம்பிப் போய் விளையாட்டுப் போல் இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அவனது பிறந்த நாள் வந்தபோது, புது ட்ரெஸ்ஸும், ஸ்வீட்டும் பண்ணிப் பார்சலில் அனுப்பி வைத்தாள். ஆஸ்திரேலியா என்ன, கொல்லைப்புறத்திலா இருக்கு? யாரேனும் முகுந்த்தைப் பற்றி விசாரித்தாலே கண்களில் யமுனை பொங்கிற்று. மீனாக்குட்டியோடு ஒடியாடிக்கொண்டு, பிற விஷயங்களில் கவனத்தைச் செலுத்தி இயல்பாக இருக்கப் பிரயத்தனம் செய்தும், மனத்தை அடக்குவது பெரும் கஷ்டமாகவே இருந்தது கமலாவுக்கு.

ஒரு ‘அம்மாவாக’ இருப்பதில் இத்தனை கஷ்டமா? தினமும் ஈமெயில் அனுப்பியும், ஸ்கைப்பில் பேசியும் நாட்கள் ஓடின. முகுந்த் இருக்கும்போது, சாப்பாட்டில் அப்பளம் தினமும் கண்டிப்பாக வேண்டும். இப்போது அப்பளக்கட்டை எடுத்து வேலைக்காரிக்குக் கொடுத்தாயிற்று. தோசையும் சாம்பாரும் அவனுக்கு ரொம்ப இஷ்டம் என்பதால் வாரத்தில் இரண்டு தினங்கள் தோசைக்கு அரைத்து விடுவாள். இப்போ, அப்படி ஒரு அயிட்டம் இருப்பதே மறந்துவிட்டது! அவனுக்குப் பிடித்த வாட்டர்மிலனும், கொய்யாவும் இல்லாமல் :.பிரிட்ஜும் வெறிச்சோடிக் கிடந்தது. ‘அம்மா, இப்போல்லாம் அண்ணாவுக்குப் புடிச்ச கேசரி ஏம்மா பண்ண மாட்டேங்குறே?’…என்று கேட்டுக் கேட்டு மீனுக்குட்டியும் அலுத்துப் போய்விட்டது.

அன்றைய தினம் கணேஷ் ஏக உற்சாகத்தோடு வந்தான். ‘ஹாய் கமலி! குவாண்டஸ்ல இப்போ ஒரு ஹாலிடே ஆ:.பர் வந்திருக்கு. ஒரு ஏர்டிக்கெட் வாங்கினா ஒரு ஏர்டிக்கெட் :.ப்ரீ. எனக்கு இப்போ கம்பெனில ஆடிட்டிங் … ரொம்ப டைட்டாயிருக்கும். நீயும் மீனுவும் வேணா ஆஸ்திரேலியா போய் வருகிறீர்களா?’…..

கணேஷ் கேட்டதுதான் தாமதம். ‘மை காட்! ப்ளீஸ் கணேஷ், மொதல்ல டிக்கெட்ட புக் பண்ணுங்கோ…..இந்த நிமிஷமே எனக்கு முகுந்த்தைப் பார்க்கணும் போல இருக்கு. தாங்க்ஸ் டு காட்’…..பரபரப்பு தொற்றிக் கொண்டது கமலாவுக்கு.

பத்மா சேஷாத்ரியில் போய் டீச்சரைப் பார்த்து, மீனுக்குட்டிக்கு லீவு அப்ளை செய்து கொண்டாள். முகுந்துக்கு ஸ்பென்சர் பிளாசாவில் ஒரு டைட்டன் வாட்சும், க்ரிஸ்டியன்டயர் சன்கிளாஸும் வாங்கிக் கொண்டாள்.

அடையாறு ஆனந்தபவனில் முந்திரி கத்திலியும், கை முறுக்கும் வாங்கிக் கொண்டாள். அவள் அக்கா சாவித்திரி செய்து கொடுத்த அரிசி வடகத்தையும் அப்பளத்தையும் மறக்காமல் எடுத்து வைத்துக் கொண்டாள்.

மெல்பர்ன் ஏர்போர்ட்டுக்கு முகுந்த் வந்திருந்தான். நாலுபேர் பார்க்கிறார்களே என்ற லஜ்ஜையே இல்லாமல், ‘முகுந்த் கண்ணா’ என்று கட்டிக் கொண்ட போது, ‘உஷ், என்னம்மா நீ” என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி, பிள்ளை ரொம்பவே கூச்சப்பட்டான்.

இந்த நாலைந்து மாதங்களில் ஹேர்கட் செய்யாததால், தலை காடாகக் கிடந்தது. அந்நாட்டுக் க்ளைமேட்டில், முகமும் உடம்பும் நன்றாகக் சிவந்து, லேசான சதைப்பற்றுடன், ‘ஜம்’மென்றிருந்த பிள்ளையைப் பார்க்கையில், கமலாவிற்குத் தன கண்ணே பட்டுவிடும் போலிருந்தது. அவனது ரூமுக்குப் போனதும் கல் உப்பெடுத்துக் சுத்திப் போடணும் என்று நினைத்துக் கொண்டாள்.

மெல்பர்ன் யுனிவர்சிட்டி எப்படி, நண்பர்கள் எப்படி, வகுப்புக்கள் எப்படி, தினமும் அவனது ரொட்டீன் என்ன, அவனது வயலின் ப்ராக்டீஸ் எப்படிப் போகிறது, என்று குடைந்து குடைந்து கேட்டுக்கொண்டு வந்தாள் கமலா. ‘அம்மா, ப்ளீஸ் சும்மா தொணத் தொணக்காதேயேன்….மெல்பர்ன் எப்படி இருக்குனு பார்த்துண்டு வாயேன்,….முகுந்த் சொன்னபோது பொங்கிய பாலில் சற்று நீர் தெளித்து அடக்கினாற் போல் உணர்ந்தாள் கமலா.

முகுந்த் தங்கியிருந்த காலேஜ் ஸ்கொயர் அபார்ட்மெண்ட், மெல்பர்ன் யுனிவர்சிட்டியின் அருகாமையில்தான் இருந்தது. வெகு அழகாக, படு சுத்தமாக, ஒரு இளம் தம்பதியர் குடித்தனம் செய்யும்வகையில் கச்சிதமாக இருந்தது. புத்தக அலமாரி, படிக்கும் மேஜை, ஒரு கணினி, குளிர்சாதனக் கருவி, கிச்சன் காபினெட்,மைக்ரோவேவ் அவன்,குக்கிங் ரேஞ்ச் என்று ரொம்பவே செளகர்யமாக இருந்தது..

கீழ்த்தளத்தில் ராட்சத டெலிவிஷன் வேறு. லைப்ரரி, விதவிதமான இன்டோர் கேம்ஸ்… என்று மிகவும் தரமாக இருந்தது. குஷன் சோபாக்கள், மெகா சைஸ் அசுரர்களையே காணாமல் செய்துவிடும் போலிருந்தது.அங்கிருந்த பெரிய வாஷிங் மெஷினில் வாரம் ஒரு முறை மூன்று டாலர் போட்டு, துவைக்க வேண்டிய துணிகளைத் துவைத்துக் கொள்ளலாம். உடனேயே பக்கத்திலிருக்கும் ட்ரையரில் ஒரு டாலர் போட்டு உலர்ந்தவுடன் எடுத்துச் சென்றுவிடலாம்.
முகுந்த்துடன் அந்த அறையில் கூடவே தங்கியிருந்த கொரியாப் பையனும் மிகவும் அனுசரித்துப் போகும் டைப்பாக இருந்தான். கூப்பிடு தூரத்தில் இருந்த சே:.ப்வே என்ற அமெரிக்க சூப்பர் மார்க்கெட் இருந்தது. பசேல் என்ற காய்கறிகளும், புதிய தினுசான பழங்களும், கேக் வகைகளும், மூக்கைத் துளைக்கும் வாசனையுடன் ரொட்டி வகைகளும், பாலடைக்கட்டியும், வெண்ணையும் விதவிதமான பழ ரசங்களும், கண்ணைக் கவரும் வண்ணப் பூங்கொத்துக்களும்….வாசனைத் திரவியங்களும்…..அப்பப்பா…. எல்லாமே ஒன்றையொன்று தரத்தில் மிஞ்சும்படி இருந்தன..
வந்த இரண்டு நாட்களிலேயே கமலாவுக்கு மெல்பர்ன் மிகவும் பழகிப் போய்விட்டது. இரு வாரங்களுக்குரிய டிக்கெட் வாங்கிக் கொண்டு, விக்டோரியா மார்க்கட், ரியால்டோ டவர்ஸ், சிட்டி, என்று டிராமில் போய் வந்தார்கள். மெல்பர்ன் நகரத்து லைகான் தெருவில் நடப்பது என்பதே சுகானுபவமாக இருந்தது.

மாலை ஐந்து மணிக்குத் தொடங்கும் ரெஸ்டாரண்டுகளும், அதன் நுழைவாயிலில் போவோர் வருவோரை வரவேற்கத் துடிக்கும் பணியாளர்களும், எட்டு ஊருக்கு மணக்கும் பீட்சாவும், க்ரீமில் செய்து வைத்த பாஸ்தாவும், மென்மையான ரொட்டி வகைகளும் பிஸ்தாவிலும், ஸ்ட்ராபெரியிலும், சாக்லட்டிலும், இன்னும் பலவித சுவைகளிலும் மினுமினுக்கும் ஐஸ்க்ரீமும்……நாக்கில் உமிழ் நீரைப் பெருக்கின. வெரைட்டியாகச் சாப்பிட்டுச் சாப்பிட்டு, மீனுக்குட்டியும் கமலாவும் ஒரு சுற்றுப் பருத்து விட்டார்கள்.

இப்படி வெளியில் போய் வந்தாலும், அபார்ட்மென்டுக்கு வந்துவிட்டால், தினுசு தினுசாகச் சமைத்தாள் கமலா. ஆனாலும் முகுந்த் எதுவொன்றையும் அத்தனை ருசித்துச் சாப்பிட்டதாகத் தெரியவில்லை. யுனிவர்சிட்டியிலிருந்து வருபவனுக்கு அன்றைய பாடங்களை அவனது தோழர்களோடு டிஸ்கஸ் செய்யவும், ஒழிந்த நேரங்களில் இண்டர்நெட்டில் சாட் செய்யவுமே நேரம் சரியாக இருந்தது. மேலும் தனக்குத் தானே தேநீர் போட்டுக்கொள்வதும், தனது உடுப்புக்ககளைத் தானே எடுத்துச் சென்று துவைத்து அயர்ன் செய்து கொள்வதுமாக முகுந்த் இருந்ததால், கமலாவுக்கு அவனோடு ஆறவமரப் பேசக்கூட முடியாமல் இருந்தது.

கமலாவுக்குத் தான் அங்கிருப்பதே அனாவசியமாகப் பட்டது. வீட்டில் இருந்த வரையில் ஷூலேஸ் முதற்கொண்டு போட்டு விடுவாள். இப்போ எல்லாம் தலைகீழாக அல்லவா இருக்கு! அளந்து அளந்து பேசிக்கொண்டு….எப்போதும் ஏதோ தீவிரச் சிந்தனையோடு இருந்த முகுந்த் அவளை ஏதோ ஒரு வகையில் ஏமாற்றிக் கொண்டிருப்பதாக உணர்ந்தாள். உடனே கணேஷைப் பார்த்து ஒரு பாட்டம் சொல்லி அழணும் போலிருந்தது.

தான் இல்லாமல் பிள்ளை என்ன பண்ணுவானோ, எப்படித் தவிப்பானோ என்று மருகி மருகித் தான் உருகியதை எண்ணிப் பார்த்தபோது, எல்லாம் அர்த்தமற்றவையாகத் தெரிந்தது.

இந்த நாலைந்து மாதங்களிலேயே முகுந்திடம் இத்தனை மாற்றங்கள் என்றால், இன்னும் போகப் போக எத்தனையோ?….மனது வலித்தது. ஒரு வேளை, முகுந்தின் கவனம் வேறு எதிலாவது இருக்குமோ? கூடப் படிக்கும் அவனது நண்பர்களெல்லாம், அவனை வெகுவாகப் பாராட்டி, ‘ஆன்ட்டி! முகுந்த் ரொம்ப ஹெல்ப்:.புல் ஆன்ட்டி. ஏதாவது சாமான்கள் வேண்டுமென்றாலும், பாடங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் சரி, நாங்கள் முகுந்த் கிட்டத்தான் வருவோம். சலிச்சுக்காமப் பண்ணித் தருவான் தெரியுமா? முகுந்த் இஸ் அவர் கிரேட் பிரெண்ட்’ என்று சொன்னார்களே!

மனதை எதுவோ சங்கடம் செய்யவே அவனது டேபிளைச் சரி பண்ண ஆரம்பித்தாள். சிதறிக் கிடந்த பேப்பர்களையும், அவனது புத்தகங்களையும் நேர்த்தியாக ஒழுங்கு செய்தாள். கடந்த வருடம் பிறந்த நாளுக்கு கணேஷ் பரிசாகக் கொடுத்திருந்த விவேகானந்தர் புத்தகமும், பள்ளியில் பரிசாகக் கிடைத்த பகவத்கீதையும், தான் கொடுத்த சிறு பிள்ளையார் விக்கிரகமும் அவனது டேபிள் லாம்ப்புக்கு அருகில் இருத்ததைப் பார்த்த போது, கமலாவுக்குக் கொஞ்சம் நிம்மதி வந்தது!

‘அம்மா,உனக்குக் கோவில்னா போகப் பிடிக்குமே! இன்னிக்குப் போகலாம். சாயங்காலம் ரெடியா இரு.’. டான்டினங்க் என்ற இடத்தில் இருந்தது அந்த சிவா-விஷ்ணு கோவில். வெள்ளைப் பளிங்கில் விநாயகரும், புஷ்டியாக அம்பாளும், படு சுத்தமாகப் புல்வெளியும். அகன்ற பிரகாரமுமாக மிக அழகாக இருந்தது. கோவிலை ஒட்டிய மண்டபத்தில் கச்சேரிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தது. அன்றைய தினம் முதல் தன்முனைப்புப் பேச்சாளர் சுகிசிவத்தின் சொற்பொழிவு தொடக்கம் என்பதால், ஏகப்பட்ட தமிழ் முகங்களைக் காண முடிந்தது. ஒரு குட்டித் தமிழ்நாடும், ஆந்திராவும், கேரளமும் கன்னடமுமாக அந்த இடம் கலகலவென்று பட்டும், பூவுமாக அமர்க்களமாக இருந்தது. ஒரு செளகர்யமான இருக்கையில் கமலாவும் அமர்ந்து கொண்டாள். சுகிசிவத்தின் உரை காந்தம் போல் அனைவரையும் இழுத்தது!

“ அன்பர்களே! நீங்கள் எல்லோரும் கோவிலுக்கு வருகிறீர்கள். கோபுர தரிசனமும் செய்திருப்பீர்கள். கோபுர தரிசனம் பாப விமோச்சனம் அல்லவா? அந்தக் கோபுரத்தைப் பார்த்தால், அதன் ஒவ்வொரு பக்கமும், ஏராளமான பொம்மைகள் விதவிதத் தோற்றங்களில், வண்ணங்களில் காட்சி தரும். இந்தப் பொம்மைகள் சற்றுக் கர்வமாக நினைத்துக் கொள்ளுமாம்….’நாம் மட்டும் இப்படித் தாங்கிக் கொள்ளவில்லை என்றால், இந்த உயர்ந்த கோபுரம் என்றோ விழுந்திருக்குமே என்று!

எண்ணிப் பாருங்கள். இது எந்தவிதத்தில் வாஸ்தவமானது? வானம் தொட்டுவிடும் தூரம்தான் என்று உயர்ந்து நிற்கும் அந்தக் கோபுரம்……மின்னல், இடி, புயல், மழை என்று எந்தவொரு இயற்கை சக்தியின் ஆக்ரோஷத்துக்கும் கட்டுப்படாமல், தாக்கப்படாமல் கம்பீரமா, உறுதியா தலை நிமிர்ந்து நிற்கணும்னா அதோட அஸ்திவாரம் சரியா, ஆழமாக இருந்தாத் தானே சாத்தியம்? பெரியவா எல்லாம், ‘அகல உழுவதை விட ஆழ உழுவதே சிறப்பு’னு சொல்லி வச்சிருக்காளே!
ஏன் இதை பத்திச் சொல்றேன்னா, நம்ம குடும்ப அமைப்புக்களும், பெற்றோர்களும் குழந்தைகளும் இந்தமாதிரி ஒரு அமைப்பிலும், சமன்பாட்டிலும் தான் இருக்கோம். குழந்தைகள் சிறு பிராயமா இருக்கும்போதே, நல்லொழுக்கத்தையும், தெய்வ வழிபாட்டையும், கலாச்சார நெறிகளையும், நாம் ஊட்டும் உணவோடு சேர்த்துக் கொடுக்கணும். அதுவே அந்தக் குழந்தைகள் உயர்வாக ஓங்கி வளர்வதற்காக நாம் போடும் அஸ்திவாரம்!

யெஸ். யூ ஹாவ் டு டீச் தெம் த வால்யூஸ்! பண்பாடும், ஒழுக்கமும், இளவயதிலேயே பசுமரத்தாணியாகப் பதியப்பெற்ற நாம் பெற்ற செல்வங்கள் ஒரு நாளும் பெற்றோருக்கோ, தமக்கோ அவமானத்தைத் தேடித் தரமாட்டார்கள். …….போகும் தேசம் எதுவாக இருந்தாலும், நாம் வாழும் வழிமுறைகளை அவர்கள் மனதில் ஒழுங்கு தவறாமல் பதியச் செய்ய வேண்டும். முன்னோடும் வாய்க்கால் தானே பின்னேயும் ஓடும்? எனவே நல்லவிதமாகப் பெற்றோர்கள் வாழ்ந்து காட்டி, அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து விட்டால், எந்த நாட்டில் வளர்ந்தாலும், படித்தாலும் நிச்சயம் தவறு செய்ய மாட்டார்கள்…..
சுகிசிவத்தின் அந்த அருமையான பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது. கமலாவின் மனத்தை ரொம்பவே அழுத்திக் கொண்டிருந்த பாரங்கள், வெடிவைக்கப்பட்ட பாறை போல் சிதறிக் கொண்டிருந்தன. அவள் மனத்தின் துயரங்களுக்கு ஒரு வடிகால் போல் அந்தச் சொற்பொழிவு இருந்தது. மனத்தின் அழுக்கான எண்ணங்கள் கழன்று அங்கே பிரகாசம் குடி கொண்டது!

உண்மைதான்! முகுந்த்தின் வளர்ச்சியையும், மன முதிர்ச்சியையும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் ‘இது என்ன மாற்றம்?’ என்று மருகிக் கொண்டு அசட்டுத்தனமாக அல்லவா இருந்து விட்டேன்? அவன் வளர்ந்து வருவதை ஆரோக்கியமாக நினைக்காமல், என்னை மிகவும் அலட்சியம செய்வதாக அல்லவா நினைத்துக் கொண்டேன்?

சாய்ந்து விழும் கொடிக்குத்தானே கொழுகொம்பு வேண்டும்? முகுந்த் இப்போ சாயாத, உறுதியான விருட்சமாக அல்லவா மனதாலும் உடலாலும் வளர்ந்திருக்கிறான்! தினமும் சொல்லிச் சொல்லி வளர்த்த காயத்ரி மந்திரமும், ஒழுங்கான வாழ்க்கை முறையும், தினமும் உறங்கும் முன்பாகப் படிக்கும் பகவத்கீதையும் அவனை நிச்சயம் நெறிப்படுத்தும் என்று இப்போதாவது தனக்குப் புரிந்ததே! கமலாவுக்கு நெஞ்சம் நெகிழ்ந்தது!

மறுநாள் உற்சாகம் தொற்றிக் கொண்டவளாக, “முகுந்த் கண்ணா, நானும் மீனுக்குட்டியும் இன்னும் ரெண்டு நாள்ல கிளம்பணும் பாரு….ஏர்டிக்கெட்டை இன்னிக்கு கன்:.பர்ம் செஞ்சுடு.”என்றபோது கமலாவின் அத்தனை கவலைகளும் காணாமல் போயிருந்தது!

– அக்டோபர் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *