கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: April 30, 2022
பார்வையிட்டோர்: 15,818 
 

தொழிலதிபர் சோப்ரா இந்த சமயத்தில் இப்படி ஒரு சிக்கலை எதிர்பார்க்கவில்லை.

அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சாயத் தொழிற்சாலை தொடங்க ‘லொகேஷன்’ தேடிய சோப்ராவுக்கு அந்தக் கிராமம் மிகவும் பிடித்துப் போயிற்று.

கிராம முக்கயஸ்தர்களை அணுகி நோக்கம் விளக்க நிலம் கேட்டபோது, ஊர் கூடி முடிவு செய்து, பல பேருக்கு வேலை வாய்ப்பைத் தரும் பெரிய தொழிற்சாலை தொடங்குவதை வரவேற்று நியாயமான விலையில் நிலம் தர முன் வந்தனர்.

தேவைக்கு மேல் ஒரு பங்கு அதிகமாகவே நிலங்களை வாங்கி வளைத்துப்போட்டு ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகி விட்டது.

மொதத் நிலத்தையும் சர்வே செய்து, அயல் நாட்டுப் பொறியாளர்களையும் வரவழைத்து கம்பெனி நிர்மானிக்கப் ‘பிளான்’ போடப்பட்டு முறைப்படி ‘அப்ரூவல்’ வாங்கியாகிவிட்டது.

இன்னும் இரண்டு நாட்களில் அடிக்கல் நாட்டு விழா.

ஆயத்தப் பணிகளுக்கான ஏற்பாடுகளைத் தொடங்கப் போன சோப்ரா, இந்த நேரத்தில் இப்படி ஒரு சிக்கலை எதிர்பார்க்கவில்லை.

“ஏழைகள் வாழ்வைக் கெடுக்காதே… எங்கள் கிராமத்தை கெடுக்காதே… காற்றையும் நீரையும் கெடுக்காதே… எங்கள் உயிரைக் குலைக்காதே…” என்ற கோஷத்தை இந்த நேரத்தில் சோப்ரா நிச்சயமாக எதிர்பார்க்காததால் ஒரு நிலைகுலைந்துதான் போனார். அடுத்த நொடி தன்னைச் சுதாரித்துக்கொண்டார்.

“அடிக்கல் நாட்டறதை நிறுத்தக் காரணம் என்னன்னு தெரிஞ்சிக்கலாமா…?” கூட்டத்தை நோக்கி சோப்ரா கேட்க,

“… … … … …” கூட்டத்தில் சிறிது நேரம் மௌனம்.

ஓர் இளைஞன் முன் வந்து சோப்ராவிடம் பேசினான். “ஐ ஆம் சத்யம். நான் எம்.எஸ்.ஸி கெமிஸ்ட்ரி ஸ்டூடண்ட்…” என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டான்.

“க்ளாட் டூ மீட் யூ மிஸ்டர் சத்யம். தொழிற்சாலை ஆரம்பிச்ச உடனே நம்ப தொழிற்சாலையிலேயே நீங்க கெமிஸ்ட் ஆயிடுங்க…”

“சாரி சார். வேலை கேட்டு இப்போ நாங்க உங்க முன்னால போராட்டம் நடத்தலை. இந்தக் கிராமத்துல இந்தச் சாயத் தொழிற்சாலை சூரம்பக்கறதை நாங்க விரும்பலை.”

“காரணம்…?”

“எங்க கிராமத்தை நாங்க பாதுகாக்க விரும்பறோம். தலைமுறை தலைமுறையா நாங்க சுவாசிக்கிற நல்ல காத்தையும் குடிக்கற நல்ல தண்ணியையும் வரப்போற சந்ததிகளம் அனுபவிக்கணும்னு ஆசைப்படறோம்.”

“ஓ கே..! இந்த இடத்தை இந்த நோக்கத்துக்காகத்தான் நான் வாங்கறேன்’னு ஊர் ஜனங்க முன்னே எடுத்துச் சொல்லிட்டு, ஊர் மக்கள் ஒத்துழைப்போடத்தானே வாங்கினேன்..? இப்போ சொல்ற கருத்தை அப்பவே நீங்க சொல்லியிருக்கலாமே…!”

“சாரி சார். நான் ‘நார்த்’ல ஒரு கம்பெனீல கெமிஸ்ட்டா இருக்கேன். லாங் லீவுல நேத்திக்குத்தான் இந்த ஊருக்கு வந்தேன். விஷயம் தெரிஞ்சிக்கிட்டேன். தொழிற்சாலை தொடங்கினா ஏற்படப்போற பின்விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினேன்.

“மிஸ்டர் சத்யம்… நீங்க ஒரு ‘லே மேனா’ இருந்தா உங்களுக்கு விளக்கலாம். நீங்களே ஒரு கெமிஸ்ட். உங்களுக்குப் பொல்யூஷன் கண்ட்ரோல் பத்தி நான் விளக்க வேண்டியதில்லை. இந்த கிராமத்துல எத்தனை பேருக்கு இந்தத் தொழிற்சாலை வேலை கொடுக்கும்னு நீங்க நினைச்சிப் பார்த்தீங்களா சத்யம்..?”

“சாரி சார். நோ காம்ப்ரமைஸ். இந்த கிரமத்துல தொழிற்சாலை தொடங்க நாங்க அனுமதிக்கப் போவதில்லை…” என்று உறுதியாகச் சொன்னான் சத்யம்.

சோப்ராவை மேலே பேச விடாமல் கையமர்த்தினான் சத்யம்.

சத்யம் அவ்வாறு கூறியதும் “தொடங்காதே… தொடங்காதே… சாயச்சாலை தொடங்காதே…! கெடுக்காதே… கெடுக்காதே… மண்ணையும் நீரையும் கெடுக்காதே…!” என்று கூட்டம் முழங்கியது.

அதற்கு மேல் சோப்ரா எதுவும் பேசவில்லை. ‘ஜீப்’பில் ஏறித் திரும்பினார். அவரைத் தொடர்ந்து வந்த லாரிகளும் வேன்களும் திரும்பின.

சோப்ராவுக்கு எதிர்ப்போ ஏமாற்றமோ புதிதல்ல. அடுத்து ஆக வேண்டியதைப் பற்றி யோசிக்கலானார் சோப்ரா.

தன் அலுவலகம் வந்தவுடன் உடனடியாகத் தொலைப் பேசினார். அமைச்சர் திறப்பு விழாவிற்கு வருவதாக இருந்த திட்டத்தை ரத்து செய்தார்.

“தம்பி சத்யம் மட்டும் இந்தச் சமயத்துல வந்து நமக்குச் சொல்லலைன்னா நம்ம கிராமமே வீணாயிருக்கும்…!”

“சத்தியம் தம்பியால நம்ம கிராமமே ஒரு பெரிய கண்டத்துலேர்ந்து தப்பிச்சிது…!”

“நம்ம கிராமமே முன்னேற முட்டுக்கட்டை போட்டுட்டானே பாவிப் பய…!”

“அவனுக்கென்ன… வடக்கே போயி மாசம் பத்தாயிரத்துக்கு மேலே சம்பாரிக்கறான். இந்தக் கம்பெனி ஆரம்பிச்சி நாலு பேர் நல்லா இருந்துட்டா அவனை யாரும் மதிக்கமாட்டாங்க பாரு… அதான் இப்படிக் கிருத்துருவம் பண்ணிட்டான்…!”

“டிகிரி, டிப்ளமான்னு படிச்சி வேலை கிடைக்காம சுத்திக்கிட்டிருந்த நமக்கு ஏதோ வழி பொறக்கும்னு கனாக் கண்டுக்கிட்டிருந்த நேரத்துல் இப்படி திடீர்னு வந்தவன் கெடுத்துப்புட்டானே..”

“ஏழெட்டு வருசமா இந்த ஊர்ப் பக்கமே தலை வெச்சிப் படுக்காதவன் திடீர்னு ஊருக்குள்ளே நுழைஞ்சதுமே நினைச்சேன். நினைச்ச மாதிரியே குடி கெடுத்துட்டான்.”

“இவனும் இந்த மாதிரி கம்பெனிலதானே வேலை பாக்கறான். அந்த ஊர்ல மட்டும் ஊரைச் சுத்தி இருக்கற இடம் நாசமானாப் பரவாயில்லையாமா…?”

“எப்படியாவது கம்பெனி ஆரம்பிக்க வெச்சிடணும்டா… அதுக்கு என்னடா வழி..?”

“ஊர் ஜனங்கள்ல முக்கால்வாசிப் பேரு அந்த சத்தியம் பயப் பக்கம் சப்போர்ட்டா இருக்காங்க. முதலில் ஊர் ஜனங்களை எப்படியாவது ‘காம்ப்ரமைஸ் பண்ணணும்மா…”

இப்படி வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்கிற வகையில் ஊரில் பேச்சுக்கள். சுற்று வட்டாரம் முழுவதும் பரவலாய்ப் பேசப்பட்டன.

அன்று

சலசலத்துப் பாயும் ஆற்றங்கரைத் திடலில் சத்யத்தின் தலைமையில் ஊர்க் கூட்டம் கூடியது.

“கம்பெனி தொடங்கக் கூடாதுன்னு நாம போராட்டம் நடத்தின பிறகு ஒரு மாசமா அது அமுங்கிக் கிடக்குது. திட்டத்தைக் கை விட்டுட்டாங்கன்னு நினைச்சி நாம சும்மா இருந்துட முடியாது. திடீர்னு ஒரு நாள் அரசியல்வாதிகளை துணைக்கு வெச்சிக்கிட்ட நம்மைப் போல கிராம மக்களை வாய் அடைச்சிட்டு சாயத் தொழிற்சாலையைத் தொடங்கிடுவாங்க. புலி பதுங்குதுன்னா அது பாயறதுக்குத்தான் தன்னை ஆயத்தப்படுத்திக்குதுன்னு நாம புரிஞ்சிக்கணும். எந்தத் தடை வந்தாலும் நம்ம கிராமத்துக்காக, நம்ம ஊர் நலனுக்காக, இப்போ பார்க்கறோமே சலசலத்து ஓடற ஆறு, அந்த ஆற்றின் தூய்மையைக் காப்பாத்தறதுக்காக, இப்போ நாம சுவாசிக்கற காத்தை அடுத்தடுத்து வரப்போற சந்ததிகளும் சுவாகிக்கணும்ங்கறதுக்காக நாம எதிர்த்து நின்னுப் போராடணும். நம்ம உயிரைக் கொடுக்கவும் தயாரா இருக்கணும். செய்வீர்களா?” என்ற சத்யம் முழங்க

“போராடுவோம்… போராடுவோம்…” என்று கூட்டம் முழங்கியது.

அப்போதுதான் சத்தியத்தின் முன் முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு முதியவர் எழுந்தார்.

“எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருக்கணும்..” என்று கேட்டுக் கொண்டான் சத்யம். ஊர் அமைதி காத்து ‘சத்தியத்திற்கு’க் கட்டுப்பட்டது.

எழுந்து நின்ற எழுபது வயதைத் தாண்டிய அமாவாசைக் கிழவர் சத்தியமூர்த்தியை நோக்கிப் பேச ஆரம்பித்தார்.

“சத்யம் தம்பி… எனக்கு சில சந்தேகங்க இருக்கு, அதான் கேக்லாமுன்னு…”

“கேளுங்க பெரியவரே… கேளுங்க…”

“தம்பி, நன் படிக்காதவன். நான் கேக்கற கேள்வில ஏதாவது தப்பிருந்தா மன்னிக்கணும். நான் கேட்க வர்றது என்னன்னா… ஊர் உலகத்துல எத்தனையோ இடங்கள்ல எத்தனையெத்தனையோ இடங்கள்ல இதுபோல தொழிற்சாலைங்க இருக்குது. அந்த ஊருங்க எல்லாத்துலயும் காத்து கெட்டுப்போய் தண்ணி கெட்டுப் போய் ஜனங்க வாழ முடியாமத்தான் இருக்குதா…?”

“பெருசு, முக்கால் வாசி இடங்கள் இந்த மாதிரி ஆபத்தான நிலைலதான் தத்தளிச்சிட்டுக்கிட்டிருக்கு…”

“முக்கால் வாசி ஊருங்க அப்படியிருக்கங்கிறியே… அப்போ கால்வாசி ஊர்கள் அப்படி இல்லேங்கறியா தம்பி…”

“ஆமாம். அந்த கால் வாசி இடங்கள்ல மக்கள் விழிப்புணர்வோட இருக்கறதுனால ஊர் காக்கப்படுது. கம்பெனியைத் தொடங்க விடாம இருக்கறதுதான் புத்திசாலித்தனம் பெருசு.”

“அப்போ கம்பெனியும் நடத்தி ஊர் நாசமாகமயும் இருக்க வழி இருக்குன்னு சொல்லு…”

“இருக்கு. தொழிற்சாலைல இருந்து வர்ற கழிவு நீரை அப்படியே ஆத்துல கலக்காம அதை சுத்தம் பண்ணி விட்டாக்கா, ஆற்று நீர் கெடாம இருக்கும். ஆனா ‘ஈ டீ பீ’ ன்னு சொல்ற சுத்தம் செய்யற வேலையை பொதுவா கம்பெனி செய்யறதேயில்லை.”

நிறைய நிறைய விஷயங்கள் சொன்னான் சத்யம். ஊர் மக்கள் வாய் பிளந்துகொண்டு கேட்டனர்.

படிப்பறிவில்லாத அமாவாசைக் கிழவருக்கு சத்தியம் சொன்னதில் பல புரியாவிட்டாலும் சில விஷயங்கள் மட்டும் ஆணித்தரமாகப் புரிந்தன.

‘காற்றும், நீரும், நிலமும் மாசுபடாமல் கம்பெனியை நடத்த முடியும்…’ என்ற விஷயம் அவரினுள் தன்னம்பிக்கையை விதைத்தது.

தொழிற்சாலை தொடங்குவது தடைபட்டபோது அது தற்காலிகத் தடையாகத்தான் இருக்கம் என நினைத்தார் சோப்ரா. ஆனால் ஆற்றங்கரைத் திடலில் சத்யத்தின் தலைமையில் கூட்டம் நடந்ததைத் பற்றறிக் கேள்விப்ட்ட சோப்ரா, ‘இந்தக் சிக்கலை விளக்கி தொழிற்சாலையைத் தொடங்க சத்யத்தை ‘கன்வின்ஸ்’ செய்வது ஒன்றே வழி எனப் பட்டது சோப்ராவிற்கு.

‘சத்யத்தை பேச்சு வார்த்தைக்கு அழைத்தால் வருவதற்கு முரண்டு பிடிக்கலாம். விவரமாய் புள்ளி விவரங்களைக் குறித்து சத்யத்தின் பார்வைக்கு அனுப்பினால் என்ன…?’ என்று தோன்ற உடனடியாக அதைச் செயல்படுத்தினார் சோப்ரா.

சோப்ரா அனுப்பிய பல புள்ளி விவரங்கள் சத்யத்திற்கு ஓரளவு திருப்தி அளித்தாலும் தனி ஒருவனாக எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலையில், “ஊர் கூடித்தான் எந்த முடிவையும் எடுக்க முடியும் என்று சொல்லி அனுப்பிவிட்டான்.

அன்று கிராமமே விழாக் கோலம் பூண்டது.

பேண்டும் சூட்டுமாய் பலப் பல ஆபீசர்கள்.

எதிர்ப்பை உமிழும் கிராமத்து ஜனங்கள்.

சோப்ரா எளிமையாகவும் பொறுமையாகவும் பல விஷயங்களை விளக்கிக் கொண்டிருந்தார். “இந்த ஊர் காத்தையும், நீரையும் மாசுபடாமல் காப்பது தன் கடமை என சூளுரைத்தார். சுத்திகரிப்பு ப்ளாண்ட் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக அலசினார்.

அப்பொழுதுதான் அமாவாசைக் கிழவர் எழுந்தார். “ எனக்கொரு சந்தேகம், கேக்கலாமுங்களா..?”

“ஓ… ! கேளுங்க…” என்றார் சோப்ரா.

இந்தக் கிழவர் என்னதான் கேட்கப் போகிறார் என்பதைக் கேட்க ஊர்க்கூடடம் வாய்ப் பொத்தி, காது தீட்டிக் காத்திருந்தது.

“ஐயா நீங்க காத்தையும், தண்ணியையும் பெடுக்காம கம்பெனி நடத்துவோம்னு சொல்றீங்க. அது இது இது இப்படிச் செய்வோம்னு பட்டியல் போடுறீங்க. அதோட இந்த ஊர்ச் சத்தியத்துக்கு கம்பெனி நிர்வாகத்தைப் பாக்கற அதிகாரத்தையும் கொடுக்கறதாச் சொல்றீங்க.. அதெல்லாம் உங்க நேர்மையைக் காட்டுது. நான் கேட்க நினைச்சது என்னன்னா…ஒவ்வொரு நாளும் இந்த சுத்திகரிப்பு வேலைக்கு எவ்வளவு செலவு செய்வீங்கனு சொல்ல முடியுமா..?”

கோப்பைப் புரட்டிய சோப்ரா, “ஒரு நாளைக்கு உத்தேசமா இருபதனாயிரம் ரூபாய் ஆகும் பெரியவரே…” என்றார் சோப்ரா.

“அந்தச் செலவு கம்பெனியைப் பொருத்தவரை லாபமா..? நட்டமா..?”

சோப்ரா வியந்தார். ‘சத்யம், கிராம மக்களை நன்றாகத்தான் விழிப்புணர்வூட்டியிருக்கிறான்.’ என நினைத்துக் கொண்டார்.

அமாவசைச் கிழவரே தொடர்ந்தார். “ நீங்க சுத்திகரிப்புக்காக செய்யற செலவு கம்பெனியைப் பொறுத்தவரை நட்டம்தான். அந்தச் செலவு செய்வதை ஒருநாள் நிறுத்திக்கிட்டாக்கூட கம்பெனிக்கு இருபதினாயிரம் ரூபாய் லாபன், அப்படித்தானே…?”

“பெரியவரே.. இப்படிச் சுத்தம் செய்யாம ஆத்துல கலந்தா சுற்றுச் சூழல் அதிகாரிகள் வந்து கம்பெனியை மூடி சீல் வெச்சிட்டுப் போயிடுவாக்க அய்யா…”

“ஒரு நாளைக்கு இருபதினாயிரம்னா… மாசத்துக்கு கிட்டத்தட்ட ஆறு லட்சம் ரூபாய் இதுக்காக செலவு பண்ணப் போறீங்க. இந்த ஆறு லட்சத்துல ஒரு லட்சமோ ரெண்டு லட்சமோ நீங்க அந்த அதிகாரிங்களுக்குக் கொடுத்தாக்கூட உங்களுக்கு நாலு லட்சம் லாபம்தானுங்களே…அதனால…”

“அதனால தொழிற்சாலை தொடங்க வேண்டாம்னு சொல்றீங்களா பெரியவரே..”

“ஐயா நான் படிக்காதவன். கை நாட்டு. எங்களைப் போல உள்ளவங்களுக்கெல்லாம் தெரிஞ்சது இந்த ஊர் மண்ணும், காத்தும், தண்ணியும்தான். இதுங்களை மாசுபடாம பாதுகாகக் மனுசனோட சுயநலம் ஒண்ணுதான் வழின்னு எனக்குத் தோணுது.”

“நீங்க என்னதான் சொல்ல வரீங்க பெரியவரே?”

“ஐயா, நீங்க மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு கம்பெனி நடத்துவேன்’னு சொன்னீங்க. இந்த ஊர் சத்தியத்தையே ஆலை நிர்வாகத்தை கவனிக்கச் சொல்றதா சொல்றீங்க. நீங்களும் சத்தியமும் இருக்கற வரைக்கும்தான் இந்தக் கம்பெனி நடக்கப் போவதில்லை. உங்களுக்குப் பிறகும் கம்பெனி நடந்துக்கிட்டுத்தான் இருக்கும். உங்களுக்குப் பிறகு நிர்வாகத்துககு வரிறவங்க உங்களைப் போலவே நேர்மையானவங்களா இருப்பாங்கங்கறதுக்கு என்ன உத்தரவாதம் இருக்கு…?”

“ … … … … …”

“அதனால, நான் சொல்றபடி அக்ரிமெண்ட் போட்டுக்கட்டு கம்பெனியை தாராளமாத் தொடங்கி நடத்தலாம்…” என்ற அமாவசைக் கிழவரின் யோசனை என்னவாக இருக்கம் என்பதை அறிய சோப்ரா முதல், ஊர்கூட்டம் வரை காது தீட்டிக் கேட்டுக்கொண்டிருந்தது.

“ஐயா, நீங்க கம்பெனி கட்டறதுக்குத் தேவையான இடத்தைப் போல இரண்டு மடங்கு நிலங்களை வளைச்சிப் போட்டிருக்கீங்கல்ல. கம்பெனி இடம் போக மீதி இடத்துல கம்பெனீல வேலை செய்யப்போற அத்தனை ஊழியர்களுக்கும் முதல் குடியிருப்பு கட்டுங்க…”

“குடியிருப்பு கட்டறதுனால…”

“குடியிருப்பு கட்டுறது முக்கியமில்லை. ஏல்லா ஊழியர்களும் கண்டிப்பாக அந்த குடியிருப்புலதான் குடும்பத்தோட தங்கியாகணும்னு கண்டிஷன் போட்டுடுங்க. அதோட முக்கியமா ஒண்ணு செய்யணும். அந்தக் குடியிருப்புல தங்கறவங்களுக்கு இந்த ஊர் ஆத்துத் தண்ணியைத் தவிர வேற தண்ணி வசதியே செய்து தரப்படாதுன்னு கண்டிஷன் போட்டுட்டா, பொதுநலம் கருதலேன்னாலும் சுயநலத்துக்காகவாவது ஆத்துத் தண்ணியைக் கெடுக்காம காலம் முழுக்க கம்பெனி நல்லா நடக்கும். ஏதோ எனக்குத் தெரிஞ்சதைச் சொல்லிப்புட்டேன். நீங்க முடிவு பண்ணிக்கங்க…” என்று சொல்லிவிட்டு கிழவர் அமர, சோப்ரா அமாவாசைக் கிழவர் பாதம் தொட்டு வணங்கினார்.

முந்நூறு குடும்பங்கள் குடியிருக்கம் அளவிற்கு குடியிருப்புகள் கட்ட அடுத்த வாரம் அடிக்கல் நாட்டப்படும் என அறிவித்தார்.

அதோடு ஊர்ப் பெரியவர் அமாவசைக் கிழவர்தான் வந்து திறப்பு விழா செய்யவேண்டும் என்ற போது அமாவசைக் கிழவரின் கண்கள் இரண்டு நிலவுகளைப் போல் பிரகாசித்துக் கொண்டிருந்தன.

– 17.10.1999 கல்கி போட்டியில் பரிசு பெற்ற கதை

Print Friendly, PDF & Email

1 thought on “பூமி இழந்திடேல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *