புதிய வார்ப்புகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: March 22, 2014
பார்வையிட்டோர்: 12,216 
 

“ஐயோ..அம்மா” என்ற சுபாஷ் மாஸ்டரின் அலறலைக் கேட்டு நான் பக்கத்து வகுப்பறைக்கு ஓடினேன்.

அங்கு நான் கண்டக் காட்சி என்னைக் குலைநடுங்கச் செய்தது. காது கிழிந்து, வாய்ப் பிளந்து எக்குத்தப்பாக மேஜை நாற்காலிக்கு இடையில் சிக்கியிருக்கும்சுபாஷ் மாஸ்டரைச் சில மாணவர்களும் ராஜன் மாஸ்டரும் தூக்க முயன்றனர்.

இரண்டு நாட்களுக்குப் பின் ஆசிரியர்கள் அறையில், “என்ன ரேகா டீச்சர் இன்னிக்கி காலைல நீங்க ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தீங்களே சார் எப்படிஇருக்காரு? ஏதாவது முன்னேற்றம் இருக்கா?” என்று கேட்டுக்கொண்டே வந்தார் சாரா மிஸ்.

“உயிருக்கு ஆபத்து இல்லை, ஆனா முதுகுத்தண்டுல அடி பட்டதால இன்னும் ஒரு சில மாசமாவது சிகிச்சை எடுக்கணும், எப்படியோ மீண்டும் பழையபடி வாழமுடியும்ன்னு இன்னிக்கி காலைல டாக்டர் சொன்னதும் தன் மாஸ்டரும் அவர் பொண்டாட்டியும் கொஞ்சம் தெளிஞ்சி இருக்காங்க. பாவம் சுபாஷ்வீட்டுல இருக்கறவங்க. அவங்கப் பொண்டாட்டி நாலு வயசுப் பொண்ணயும் பாத்துக்கணும். இப்போ அவங்க இரண்டாவதாக் கர்ப்பமாவும் இருக்காங்க.நாளைக்குத் தான் ஊருல இருந்து அவங்க அம்மா அப்பா வரபோறாங்க. அதுவரைக்கும் ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைச்சல். இதுவேமுதுகுத்தண்டில் பட்ட அடியால் இனி கிடந்த கிடப்பு என்று ஆகியிருந்தால் என்னவாகியிருக்கும். யோசிக்கவே முடியவில்லை! நாளைக்கு இந்நிலைநமக்கும் வராமல் இருக்கும் என்று என்ன நிச்சயம்?” என்ற என் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. ஆனால் இக்கேள்வி எல்லோரிடத்திலும் உண்டு.

நேரம் தவறி வந்த மாணவர்களைக் கேள்வி கேட்டதால் சுபாஷ் மாஸ்டருக்கு வந்த நிலை! “நாங்க குடுக்கற காசுல சம்பளத்தை வாங்கிகிட்டுஎங்களையே கேள்வி கேப்பியா..மவனே” என்று கூறிக்கொண்டே அவரைத் தும்சம் செய்துவிட்டனர் இரண்டு மாணவர்கள்.

இவ்விஷயம் பத்திரிகையில் வந்ததும் எல்லோருக்கும் பதில் சொல்லவேண்டிய நிலை. எப்படியோ எல்லாவற்றையும் சமாளித்துவிட்டது பள்ளிநிர்வாகம்.

“டிங் டிங் டிங்” என்று மணி அடித்ததும் பள்ளிக்கூடம் விட்டுவிட்டது என்ற நிம்மதியில் “அப்பா ஆண்டவா, இன்னிக்கி ஒரு பிரச்னையும் இல்லாமநல்லபடியாப் போச்சே. இது மாதிரி எப்பவும் நீதான் பா என்னைக் காப்பாத்தணும்” என்ற வேண்டுதலுடன் பஸ் பிடிக்க வந்தேன்.

இந்தச் சம்பவத்திற்குப் பின் இது விஷயமாக ஆசிரியர் பெற்றோர் சங்கம் கூடியது. அக்கூட்டம் காரசாரமான விவாதித்தது, ஒவ்வொருவரும் மற்றவரைக் குறைகூறிக்கொண்டே இருந்தனரே தவிரப் பிரச்சனைக்கு மூலகாரணம் என்ன? அதற்குத் தீர்வு என்ன? என்று சிந்திக்கவேண்டியதைத் தவறிவிட்டு மீண்டும் அடுத்த வாரத்தில் இதைபற்றிய விவாதம் தொடரும் என்று கூறி பிரிந்தனர்.

“அம்மா இன்னிக்கி ஸ்கூல்ல அடுத்த வாரம் நடக்கற பெயிண்ட்டிங் காம்பெடிஷனுக்குப் பேரு தரலாம்ன்னு சொன்னங்க. அதுக்கு நான் போய்த்தரும்போது இந்த வருஷம் பப்ளிக் எக்ஸாம் வெசிகிட்டு இதெல்லாம் எதுக்குப் போய்ப் படிக்கற வேலைய பாரு. அப்படின்னு எங்க டீச்சர்சொன்னாங்கம்மா.” என்றாள் வருந்தினாள் பன்னிரண்டாவது படிக்கும் என் மகள் லலிதா.

“சரி சரி. நான் உன்னோட பேரையும் சேர்க்க சொல்லி உன் டைரில எழுதி தரேன். அப்புறம் ராம் எங்க? அவன காணோம்?” என்று என் இளைய மகனைபற்றிக் கேட்டேன்.

“அவன் வந்ததும் சீக்கிரமா ஹோம்வொர்க் முடிச்சிட்டு பசங்க கூட விளையாட போய்ட்டான். ஆறு மணிக்கு வந்துடறேன்னு சொல்ல சொன்னான்.” என்று பதில் அளித்துவிட்டு படிக்க இருக்கும் மகளைப் பார்த்தேன்.

இந்த வயதில் விளையாட்டுக்கும் மற்றப் படைப்பாற்றலுக்கும் முக்கியத்துவம் தராமல் எப்படி நல்ல மக்களை உருவாக முடியும்? “எப்பவும் படிபடின்னு சொன்னா பசங்க எப்போ பசங்களா இருப்பாங்க?”

மனிதனின் உள்ளிருந்து பீறிட்டுக்கொண்டு வரும் சக்தியை விளையாட்டோ அல்லது ஆக்கபூர்வமாக வெளிபடுத்த தவறும்போதுதான் தகாத பழக்கவழக்கங்களில் செல்கின்றனர் என்பதைப் பெற்றோகளும் ஆசிரியர்களும் புரிந்துக்கொள்ளாமல் இருப்பதால் தான் சுபாஷ் மாஸ்டருக்கு நேர்ந்த நிலைமை இப்பொழுது அதிகரிக்கக் காரணம் என்ற என் வாதத்தை என் சக ஆசிரியர்களே ஒதுக்கியது வருத்தமாக இருந்தது.

போன வாரத்தில் இதைப் பற்றிக் கூறும்போது, “ரேகா டீச்சர் நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க? இந்த ஸ்கூல்ல பசங்கள சேர்க்கறதே 100% ரிசல்ட் தருவதாலதான். இருக்கற பாடத்தை முடிக்கவே நேரம் இல்லை. இதுல நீங்க சொன்னாப்பல பாட்டு, விளையாட்டு எப்படின்னு சொன்னா மானேஜ்மெண்ட் மட்டுமில்லை பேரண்ட்ஸ்கூட இதுக்கா நாங்க பசங்கள அனுப்பறோம் அப்படின்னு கேள்வி கேக்கறாங்க.”

“ம்ம்.. நீங்க சொல்லறது எனக்கும் புரியுது. அனா பசங்கள எதுக்குப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பறாங்கன்னு புரிஞ்சிக்காம இருக்கறது வேதனையா இருக்கு. பல விஷயங்களை கத்துக்கொடுக்கறது மட்டுமில்லாம அவங்களோட தனித்திறமைகளைக் கண்டுபிடிச்சி மெருகேத்தினாதான் குழந்தைகள் நல்லபடியா வளர்ந்து இந்தச் சமுதாயமும் நல்லா இருக்கும். எதிர்காலத்துல பல துறையிலும் சிறந்து விளங்க நம்பச் சந்ததியினருக்கு நாம் தானே வழிக்காட்டனும்.” என்ற என் கருத்தை ஆமோதிக்க ஒரு சிலரே இருந்தனர்.

“அட போங்க டீச்சர். வாங்கற சம்பளத்துக்கு இதுவே அதிகம். ஏதோ வந்தோமா சொல்லிகொடுத்தோமா அப்படின்னு போய்கிட்டே இருக்கணும். அதவிட்டுட்டு…” என்ற ஆசிரியரை என்ன சொல்ல? அதுவும் இந்தத் தனியார் பள்ளியில் தரும் குறைவான சம்பளத்துக்குக் கூடுதல் வேலை!

“நம்ப நல்லபடியா இருந்தா தானே பசங்களும் நல்லபடியா வளருவாங்க. அதுவும் இப்போ பசங்களுக்குப் பாடம் நடத்த போனா பசங்க பாடத்தைக்கவனிக்காம கண்டதையும் பாத்துக் கமென்ட் பண்ணறாங்க அப்படின்னு சாரா மிஸ் சொல்லி வருத்தப்பட்டாங்க. நம்பளும் அவங்க அம்மா அப்பா போல அப்படின்னு ஒரு எண்ணம் இல்லை..ஹ்ம்ம் நமக்கும் நம்பகிட்ட படிக்கும் பசங்க மட்டுமில்லை எல்லாப் பசங்களும் நம்பச் சொந்த குழந்தைகள் அப்படின்னு எண்ணம் இருக்கணும்.” என்று சொன்னேன்.

“ஆமா ரேகா டீச்சர். அன்னிக்கி நான் போர்டுல கணக்கு போட்டுக்கிட்டு இருந்தா கணக்கை கவனிக்காம நம்ப என்ன போட்டு இருக்கோம், அதுவும் உள்ள என்ன போட்டு இருக்கோம் அப்படின்னு பேசிகிட்டு இருக்கற பசங்கள என்ன செய்ய?” என்ற சுதா டீச்சரின் ஆதங்கத்தைப் புரிந்துக்கொள்ள முடிந்தது.

அவரே தொடர்ந்து “ரேகா டீச்சர் பசங்க உங்ககிட்ட மட்டும் எப்படிப் பெட்டி பாம்பா அடங்கி இருந்து நீங்க சொல்லறதை எல்லாம் சரியா பண்ணிக்கிட்டுவராங்க. அப்பப்போ உங்கள சுத்தி பசங்க கூட்டம் வேற..” என்று என் முகத்தைப் பார்த்துகொண்டிருந்தார், என் பதிலுக்காக.

“அது ஒன்னும் கம்பச் சூத்திரம் இல்லை! பசங்கள பசங்களா நடத்தனும். பாடம் நடத்தும்போது அவங்க கவனம் கலையறமாதிரி இருந்தா வேற ஏதாவது விஷயம் பத்தி பேசி அவங்க கவனம் திரும்பவும் நம்பக் கிட்ட இருக்கும்போது பாடத்தை நடத்துவேன். அவங்களும் பசங்க தானே, ரோபோவா? எப்பவும் ஒரே மாதிரி இருக்கணும்ன்னு நினைக்காம, அப்பப்போ தட்டிக்குடுத்து மேல கொண்டு வரணும்.”

“முன்ன மாதிரி மனுஷங்களுக்குத் தேவையான நல்லொழுக்கத்தைப் பத்தி போதிக்கும் வகுப்புகள் தேவை” என்றேன்.

“நீங்க வேற விளையாட்டு, பாட்டு, கைவேலை இப்படிப்பட்ட வகுப்பையே வேண்டாம் டைம் வேஸ்ட் அப்படின்னு நினைக்கும் மக்களுக்கு நடுவுல இருந்துகிட்டு இப்படி நீதி போதனை அப்படி இப்படின்னு சொன்னா நம்பளதான் முட்டாள் மாதிரி பாப்பாங்க.” என்று பதில் சொன்ன சுதா டீச்சரை புரிந்துக்கொள்ள முடிந்தது. அதற்குள் வகுப்புகள் தொடங்க மணி அடித்ததும் வகுப்பை நோக்கி சென்றோம்.

“ஏங்க, நானும் சுதா டீச்சரும் நாளைக்குச் சுபாஷ் மாஸ்டர பாக்க போய்ட்டு வரோம்” என்று கணவரிடம் கூறினேன். அடிக்கடிச் சென்று பார்த்துவிட்டுவருவது ஒரு வாடிக்கையாகிவிட்டது. அப்படிப் போகும்போது ஏதேனும் கொண்டு செல்வது வழக்கம்.

“போயிட்டு வாங்க. கிட்டத்தட்ட ரெண்டு மாசம் ஆகபோகுது. அந்தக் காலத்துல டீச்சர்ன்னா மரியாதையா பாப்பாங்க. ஆனா இப்போ … இதுவும் உயிருக்குஉத்தரவாதம் இல்லாத வேலையா போச்சு.” என்று என் கணவர் சொன்னதை ஆமோதிக்கும் நிலையில் இருந்தேன்.

“வாங்க வாங்க.” என்று அழைத்துச்சென்ற சுபாஷின் மனைவியின் பின்னே சென்றோம்.

“சார் இப்போ எப்படி இருக்காரு?” என்று கேட்டுகொண்டே உள்ளே சென்றோம்.

தன் மாமியாரை பார்த்துவிட்டு ..”இப்போ கொஞ்சம் பரவாயில்லை. மெல்லமா பிடிச்சி சாய்வா ஒக்கார வெச்சா கொஞ்ச நேரம் இருக்க முடியுது.” என்றுஅவர் இருந்த அறைக்கு அழைத்துச்சென்றார்.

முகத்தில் சில தழும்புகளுடன் இருந்த சுபாஷ் மாஸ்டரை கைத்தாங்கலாகச் சாய்ந்து இருக்க உதவியவர் “நீங்க பேசிகிட்டு இருங்க. நான் இப்போ வரேன்”என்று சென்றார் அவர் மனைவி.

“சார். எப்படி இருக்கீங்க? வலி எல்லாம் எப்படி இருக்கு?” என்று கேட்டதற்கு

“இப்போ கொஞ்சம் பரவாயில்லை. இதையெல்லாம் கூடத் தாங்கிடுவேன். ஆனா என்னோட பொண்டாட்டி மாசமா இருக்கா. அவளை நான்தாங்கனும்ன்னு நினைச்சதுக்கு மாறா இப்போ அவதான் எனக்குப் பாத்து பாத்து செய்யறா.” என்று வேதனையை வெளிபடுத்திய சுபாஷின்உணர்வுகளைப் புரிந்துக்கொள்ள முடிந்தது.

“என்னோட அம்மாவும் வயசானவங்க. அவங்களுக்கு இந்த ஊரும் புதுசு. அதுனால இவதான் எல்லா வெளிவேலைக்கும் போகணும்.” என்று பேசிய சுபாஷுடன் வேறுபல விஷயங்களும் பேசிவிட்டு வெளியே வந்த எங்கள் பின்னேயே வந்த அவர் மனைவி, ”அவர் எழுந்து நடந்தாலும் முன்ன மாதிரிஅவருக்கு நடக்க முடியாது அப்படின்னு டாக்டர் சொன்னார். இது எங்க மாமியாருக்கு தெரியாதுங்க.” என்றதை கேட்டதும் மனம் பதைபதைத்தது.

“நீங்க எதுக்கும் அவரோட டாக்டர் ரிப்போர்ட்டை குடுங்க. நாங்களும் ஏதாவது பண்ண முடியுமான்னு பாக்கறோம்.” என்று ரிபோர்ட்டின் ஒரு காப்பியைவாங்கி வந்தோம்.

“சாரு எப்படி இருக்கார்?” என்று கேட்ட கணவர் மற்றும் பிள்ளைகளிடம்

“இப்போ பரவாயில்லை. ஆனா இன்னும் கொஞ்ச மாசமாவது ரெஸ்ட் எடுக்கணும்.” என்று கூறிவிட்டு வீட்டுவேலைகளைப் பார்க்கச் சென்றேன்.

அப்படி இப்படி என்று சில மாதங்கள் கழித்துச் சுபாஷ் மாஸ்டர் வேலைக்கு வந்தார், ஊன்றுகோலின் துணையுடன். அவரை இந்நிலைக்கு ஆளாக்கியஇரண்டு மாணவர்களும் பலவித பலம்பொருந்திய சக்திகளின் துணையுடன் சட்டத்தின் பிடியில் இருந்து விடுபட்டு மீண்டும் பள்ளிக்கு வந்தனர்.

“என்ன டீச்சர், மறுபடியும் அந்த ரெண்டு தறுதலைகள் நம்ப ஸ்கூல்லுக்கே வந்திருக்குங்க,,” என்று சாரா மிஸ் கூறும்போது தான் எனக்கும் தெரிய வந்தது.

ஆசிரியர்களின் எதிர்ப்பையும் மீறி பள்ளிக்குத் தேவையான பணம் “பள்ளியின் விரிவாக்கத்திற்கு” என்று சில லக்ஷங்களை விட்டெறிந்த அந்தமாணவர்களின் பெற்றோர்களும், அதைப் பெருந்தன்மையாகப் பொறுக்கிக்கொண்டு மீண்டும் பள்ளியில் அனுமதித்த நிர்வாகத்தையும் எங்களால் என்னசெய்ய முடிந்தது?

அன்று நிர்வாகி பேசியது இன்னும் மனதை விட்டு அகலவில்லை. “பாருங்க உங்களுக்கு இங்க வேலை செய்யப் பிடிக்கலைன்னா தாராளமா வேலையவிட்டு போங்க. நீங்க போனா அடுத்த நிமிஷம் வேற ஆளு ரெடியா இருக்காங்க. உங்களுக்குச் சம்பளம், இங்கயும் அங்கயும் அப்ரூவல் வாங்க தண்டம்அழறதுக்குப் பணம், 100% ரிசல்ட் காமிக்கவும் தேவையான எல்லா வசதியும் செய்யப் பணம் வேணும். நான் ஒன்னும் ஏதோ தருமத்துக்கு இந்த ஸ்கூல்லநடத்தல. பணம் பாக்கணும்ன்னு தான் இதுல எறங்கியிருக்கேன். அதுனால நீங்கதான் யோசிச்சி இங்க இருக்கனுமா இல்லை வெளிய போகணுமான்னுமுடிவு பண்ணனும்” என்று கூறிவிட்டு எங்களை ஒரு பொருட்டாகவே கருதாமல் அருகில் இருந்த தொலைபேசியில் யாரையோ அழைத்துப் பேசத்தொடங்கினார்.

“வேலைய விட்டு வெளிய வர ஒரு நிமிஷம் ஆகாது! இதுல பலரும் குடும்பத்தை நடத்த சம்பாதிக்க வேண்டிய நிலைல இருக்காங்க. அப்படியே இங்கவிட்டுட்டு வேற ஒரு பிரைவேட் ஸ்கூல்லுக்குப் போனா அங்கயும் இந்த நிலை வராதுன்னு உத்தரவாதம் இருக்கா?”

மனம் “ச்சே” என்று ஆனது. பணம்! பணம்!! பணம்!!! இதுமட்டுமே முக்கியம் என்று ஆனதின் விளைவுகள் …ஜீரணிக்கவே முடியாத வகையில் இருக்கிறது.

அடுத்தக் கல்வியாண்டு தொடங்கியது. மகள் நல்ல மதிப்பெண் பெற்று அவளுக்கு விருப்பமான வேதியியல் படிக்கச் சேர்ந்துவிட்டாள்.

“ஏன் டீச்சர் உங்க பொண்ணு நல்ல மார்க் எடுத்தும் எதுக்குக் கெமிஸ்ட்ரி படிக்க வெக்கறீங்க. அவளுக்கு மெடிக்கல் தான் கிடைச்சிருக்குமே.” என்றார்ராஜன் மாஸ்டர்

“அவளுக்கு எதுல விருப்பம் இருக்கோ அதுல தானே சேர்க்க முடியும். அப்போதானே அவ சந்தோஷமா படிச்சி பெரிய அளவுல சாதிக்க முடியும்?”என்றேன்.

சுபாஷ் மாஸ்டர் இப்போது ஊன்றுகோல் இல்லாமல் வந்தாலும், தாங்கி தாங்கியே நடக்க வேண்டிய நிலை. இரண்டாவதும் ஒரு மகள்.

புதிதாகச் சேர்ந்த ராஜேஷ் ஆசிரியரின் பார்வை சரியில்லை என்று தோன்றும். அதை உறுதிப்படுத்துவது போல் ஒரு மாணவி நான் தனியாகஇருக்கும்போது “டீச்சர்..” என்று கூறி மேற்கொண்டு பேசாமல் தயங்கினாள்.

“சொல்லும்மா… என்ன ஆச்சு? நீ சொன்னாதானே எனக்குத் தெரியும்.” என்று பலவாறு பேசி அவளைப் பேச வைத்தேன். அதைக் கேட்டு அதிர்ந்தேன்.

“டீச்சர்..வந்து..வந்து ..அந்த ராஜேஷ் மாஸ்டர் நேத்திக்கி லேப்ல ரெகார்ட் எல்லாம் வெக்க சொன்னார். நான் கொண்டு போனப்போ அங்க யாருமேஇல்லை… அப்போ அப்போ…” மேற்கொண்டு ஒன்னும் சொல்ல முடியாமல் அழுதவளை எப்படியோ மீண்டும் பேச ஊக்கினேன்.

“அவர் சாதாரணமாவே எங்களை எல்லாம் தடவி தடவிதான் பேசுவார். ஆனாலும் நாங்க எப்படியாவது அவர் கிட்ட மாட்டாம பாத்துக்குவோம். ஆனா நேத்திக்கி… லேப்ல வெச்சி அசிங்கமா பேசி நடக்கப் பாத்தாரு. எப்படியோ தப்பிச்சி வந்துட்டேன். வீட்டுல சொல்ல பயமா இருக்கு மிஸ்.” என்றுஅழுதவளை ஆசுவாசப்படுத்தி.

“நீ கவலை படாம போ. இனி ஜாக்கிரதையாவே இரு. உனக்குத் தெரிஞ்சி உன்னோட பிரெண்ட்ஸ் கிட்ட கேட்டு அவர் இப்படி இன்னும் யாரு கிட்ட என்னபண்ணியிருக்கார்ன்னு தெரிஞ்சிகிட்டு என் கிட்ட சொல்லு. இல்லை அந்தப் பசங்களை நான் தனியா இருக்கும்போது என்னை வந்து பாக்க சொல்லு.”என்று அனுப்பி வைத்தேன்.

வீட்டிற்குச் சென்றும் மனம் கனமாக இருந்தது..”அச்சிறு பெண் வந்து அழுதது மனதில் ஓடிகொண்டே இருந்தது. அவள் தைரியமாக வந்தாள். வெளியேவந்து கூறாது எத்தனை பேர் மனதிற்குள்ளேயே குமைந்துகொண்டிருக்கிறார்களா?”

அன்றிரவு கணவருடன் தனிமையில் இருக்கும்போது அன்று நடந்ததைப் பகிர்தேன்.

“ஒரு ஆசிரியர் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது கூட அறியாது, இப்படிப் பட்ட ஆட்களின் வழிக்காட்டுதல் எப்படி இருக்கும்? ஆசிரியர் என்பதைத் தொழிலாகப் பார்க்காமல் அடுத்தச் சந்ததியினருக்கு வழிக்காட்டும் சேவை மனப்பான்மையுடன், நம் மக்கள் என்ற எண்ணம் வேண்டும். அப்படிஇல்லாமல் இதுபோன்ற மனிதர்கள் கல்வி என்ற அமைப்பில் நுழைந்தது தான் பல பிரச்சனைக்கும் மூலகாரணம். அதுவும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நடத்தும் பலரும் இதைப் பணம் கொழிக்கும் மரமாகப் பார்ப்பதால் வந்த வினை!” என்றார் என் கணவர்.

“ஆமாங்க. என்னிக்கி பணம் மட்டுமே பிரதானம்; மத்தபடி தரம் மற்றும் திறன் எல்லாம் பின்னுக்குப் போச்சோ அன்னிக்கி பிடிச்சது இச்சமுதாயத்திற்குச் சனி. சனிகூட நல்லது பண்ணும். ஆனா இவங்கள மாதிரி ஆளுங்க நண்டு மாதிரி…வெளிய தெரியாம உள்ள இருந்தே அரிச்சிடுவாங்க.” என்றேன்.

“சரி நீ இப்போ இதுக்கு என்ன பண்ண போறே?” என்று கேட்டார் கணவர்.

“யோசிச்சி பார்த்தேன். இந்த வேலை போனா கூடப் பரவாயில்லை அப்படின்னு தோணுது.” என்று அவரின் முகத்தைப் பார்த்தேன்.

அவரும் என் தலையைத் தடவி ஆமோதிப்பாய் தலையசைத்தார். “நம்பப் பசங்களுக்கு இப்படி ஒரு நிலை வந்தா என்ன பண்ணுவியோ அதைப் பண்ணு. என்ன வந்தாலும் நான் உனக்குத் துணையிருப்பேன்” என்றார்.

எனக்கு யானை பலம் வந்தது!

யாருக்கும் தெரியாமல் இது விஷயமாக நானும் எனக்கு நம்பிக்கையான சுதா டீச்சரும் இதில் இறங்கினோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோருடன்பேசினோம்.

“ஐயோ..இந்த பொண்ணு எங்க கிட்ட ஒண்ணுமே சொல்லல.. இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா என் மக வாழ்க்கை சீரழியும்” என்று கூறியவர்களுக்குப்பேசி புரிய வைத்தோம்

“பாருங்க உங்க பொண்ணு உங்க கிட்ட வந்து பகிர முடியாம இருக்க நீங்க தான் காரணம். எதுவா இருந்தாலும் நம்ப அம்மா அப்பா இருக்காங்க, அவங்கதுணை இருப்பாங்க அப்படிங்கற எண்ணம் அவங்களுக்கு இருந்தா கண்டிப்பா அவ முதல்ல உங்க கிட்ட தான் வந்து சொல்லியிருப்பா.” என்றேன்

“இப்பவும் நீங்க உங்க பொண்ண திட்டாம அடுத்து என்ன செய்யலாம் அப்படின்னு யோசிச்சா நல்லது. நாங்க இந்த மாதிரி இன்னும் எத்தன பசங்கபாதிச்சிருக்காங்க அப்படின்னு பாக்கறோம். எல்லோரும் சேர்ந்து எழுத்து பூர்வமா எழுதி அவங்களுக்கு எதிரா கம்ப்ளெயின்ட் குடுத்தா சரியா இருக்கும்.”என்ற சுதா டீச்சரை பார்த்து

“ஐயோ..கம்ப்ளெயின்ட் குடுத்தா எப்படி..வேற ஏதாவது செய்யலாம்” என்று படபடத்தனர்.

“இங்க பாருங்க இதுல பயப்பட ஒண்ணுமேயில்லை. நல்ல காவல்துறை அதிகாரிகளும் இருக்காங்க. சமூக நல அமைப்புகளும் இருக்கு. இவங்க எல்லோரோடதுணையையும் நம்ப எடுத்துக்கலாம். பாதிக்கப் பட்ட எல்லோரும் ஒத்துமையா நின்னா எதையும் எதிர்கொள்ளலாம்.” என்று பலவாறு எடுத்துகூறி சரிகட்டினோம். இவர்களின் வீட்டிலேயே பாதிக்கப் பட்ட சில குழந்தைகளின் பெற்றோர்களைச் சந்தித்து நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டவர்கள் இவ்விஷயத்தைக் கவனத்திற்குக் கொண்டு சென்றது மட்டுமல்லாமல், வெளியுலகுக்குத் தெரியாமல் காவல்துறை மற்றும் மற்றச் சமூக அமைப்பின் உதவியுடன் அந்த ராஜேஷ் மாஸ்டரை வேலையில் இருந்து நீக்கினர்.

நிர்வாகத்தினரிடமும் “எங்களுக்குப் பசங்க படிக்கணும். அது எவ்வளவு முக்கியமோ அதே அளவு பசங்களோட பாதுகாப்பும் அவங்க முன்னேற்றமும்முக்கியம். ஏற்கனவே இங்க சுபாஷ் மாஸ்டருக்கு நடந்ததை நாங்க மறக்கல. இப்போ இந்த ராஜேஷ் மாஸ்டர் இப்படிப் பண்ணி இருக்கார். அடுத்தது இப்படிஏதாவது நடந்ததுன்னு தெரிஞ்சா நாங்க எல்லோரும் உங்களுக்கு எதிரா நடவடிக்கை எடுக்கச் சொல்ல வேண்டிவரும். அப்படியே இந்த ஸ்கூல்ல இழுத்துபூட்ட வெச்சிட்டுதான் மறுவேலை பாப்போம்.” என்று ஆவேசமாகச் சொன்னதைக் கேட்டதும்

“பாருங்க…ப்ளீஸ், இனி இதுபோல ஒன்னும் நடக்காது, நாங்க தேவையான நடவடிக்கை எடுக்கறோம்.” என்று அவர்களுக்கு நம்பிக்கையளித்தது நிர்வாகம்.

“பின்னே முதலுக்கே மோசம் வந்தால்!”

பெற்றோர் ஆசிரியர் சங்கம் இப்பொழுது கொஞ்சம் ஆக்கபூர்வமான முடிவுகளை எடுக்கவும் செயல் படுத்தவும் முனைந்தனர்.

“பாருங்க நம்ப எல்லோரும் பெற்றோர், ஆசிரியர் என்ற வேறுபாடு இல்லாம, நம்பப் பசங்களுக்கு எது நல்லது, எது தேவை அப்படின்னு மட்டும் யோசிச்சிஎந்த முடிவும் எடுக்கணும்.” என்று நான் என் கருத்தை சொல்லும் போது பலரும் ஆமோதித்தனர். முன்பு போல் அல்லாமல், மாறி மாறி குற்றம்சொல்லாமல் ஒத்துழைப்புக் குடுத்தனர்.

“பாருங்க… படிப்பு தேவை தான். ஆனா அதுகூடவே அவங்கள மன அழுத்தத்திற்கு ஆளாக்காம, அவங்க இந்த வயசுக்குரிய மகிழ்ச்சியும் அனுபவிக்கனும். அதுக்கு என்ன பண்ணலாம் அப்படின்னு நான் ஒரு லிஸ்ட் போட்டு இருக்கேன். நான் சொல்லறதை முழுசும் கேட்டுட்டு உங்க கருத்தை சொல்லுங்க. எதுவா இருந்தாலும் பேசி முடிவு பண்ணலாம்” என்று நான் கூற தொடங்கினேன்.

“1. பசங்களின் திறமையைக் கண்டறிஞ்சி ஊக்கப்படுத்தனும்.

2. விளையாட்டு மற்றும் கைவேலை போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை விடாம வாரத்துல சில பாட வேளைகளை இதுக்கு ஒதுக்கின படி பயன்படுத்தனும். இது நம் பிள்ளைகள் தீய பழக்கவழக்கங்கள் பக்கம் போகாம பார்த்துக்கும். நீதிபோதனையும் தேவை, இது பிள்ளைகளுக்கு எது சரி தப்பு அப்படின்னு யோசிச்சி முடிவெடுக்கவும், நல்ல பண்புகலோடு வளரவும் உதவும்.

3. ஸ்கூல்லுக்குத் தனியா ஒரு கவுன்சிலர் வைக்கணும். இது பசங்களுக்குச் சரியான வழிகாட்டியாகவும் தேவையான நேரத்துல சீர்திருத்தவும் உதவும்.

4. பெற்றோரும் ஆசிரியரும் எந்த விஷயத்தையும் ஈகோ பார்க்காம பகிர்ந்துக்கணும். நம்பப் பசங்க எதிர்காலம் தான் முக்கியம், மற்றது எல்லாம் அப்புறம் என்ற எண்ணம் வேண்டும்.

5. வீட்டிலும் குடும்பத்தினர் கூடி நேரத்தைச் செலவு செய்யவேண்டும். அது ஆரோக்கியமான உறவை வளர்க்கும்.” என்று கூறி நிறுத்தினேன்.

எல்லோரும் கையைத் தட்டி ஆதரவைத் தெரிவித்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *