கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: November 27, 2013
பார்வையிட்டோர்: 14,087 
 

அந்தக் கைகளுக்குத்தான் அப்படியொரு பக்குவம் கூடி வருகிறதோ; இல்லை பதார்த்தங்களுக்குத்தான் சர்மாவின் கைகள் பட்டால்தான் ருசியைக் காட்டுவோம் என்ற பிடிவாதம் இருக்கிறதோ தெரியவில்லை. மனுஷனின் ‘மணீஸ் கபே’யின் அப்படி ஒரு ருசி. வாரி அணைத்துக் கொள்கிற மாதிரி , வாசனை கடைக்குச் சற்று எட்டத்திலிருந்தே மூக்கை அரிக்கும்.

ஆறுமுகத்தேவர் தினமும் அந்தப் பக்கமாகத்தான் வீட்டுக்குப் போக வேண்டும். மடியில் கனமிருக்கும் சில சமயங்களில் முந்தைய ருசியின் எச்சங்களாக ஆசை துளிர்ப்பதுண்டு. தோசையின் இதமான முறுகலுடன் நெய்யின் வாசனையும் நாக்கில் புருபுருக்கும். அவருக்குப் பிடித்தமான ‘அயிட்டம்’ அது. ஆனால் அடுத்த கணமே விரட்டியடித்து விடுவார். நண்டும் சிண்டுமாகப் பிள்ளைகளைப் பெற்று , அதுகள் தெருப்பலகாரத்திற்கே ஏங்கிக் கிடக்கும்போது தின்று கழித்த தனக்குத் தோன்றும் ‘சின்னப் புத்தியை’ மானசீகமாகச் செருப்பால் அடித்துக் கொள்வார்.

‘ஒரு நாளைக்கு அதுகளை அழைச்சு வந்து திங்க வைக்கனும்’

அந்த ஒருநாள் இன்னும் வரவில்லை. இங்குதான் பத்து வருமானம் வருவதற்குள் பதினைந்து செலவுகள் எதிர் நிற்கிறதே! அதுவும் முன்பு போல அவர் என்ன வியாபாரமா செய்கிறார்? மாட்டுத் தரகு, குலத்தின் எவனோ, எப்பொழுதோ செய்த தொழில்; இப்பொழுது ஆறுமுகத் தேவரே என் புரவலன் என்று ஒட்டிக் கொண்டு விடமாட்டேன் என்கிறது. தரித்திரம், மாட்டின் பல்லைப் பிரித்து, சுழியைக் காட்டி, வயசைச் சொல்லி, கொடுப்பவனுக்கும் வாங்குபவனுக்கும் இடையில் நடையாக நடந்தாலும் கடைசியில் கிடைப்பது என்னவோ ‘நொள்ளைப் பணம்’தான். அதில் வயிற்றைக் கழுவுவதா? குதிர் போல நிற்கும் பெண்களை நினைப்பதா?

ஆயிற்று, மூத்தவள் ‘உட்கார்ந்து’ நான்கு வருஷம். ஒற்றைக்கல் மூக்குத்திக்கூட இன்னும் வழியில்லை. அதற்குள் சின்னவள்.

‘ம்ம்..மரம் வச்சவன் தண்ணி ஊத்தாமலா போவான்?’

பாரத்தை இறக்கிவைத்து சிறிது இளைப்பாறிக் கொண்டாலும் மீண்டும் சுமக்க நேரிடும்போது…

‘யோவ் தேவரே… உம்மைத்தான்… நில்லுமய்யா…’

ஹோட்டலிலிருந்து படியிறங்கிய வடிவேலு ஆசாரி, அவரை அழைத்தவாறு ஓடிவந்தார். பூசினாற் போன்ற உடம்பு, சிறு ஓட்டத்தில் குலுங்கியது.

‘என்னய்யா ரெண்டு நாளில் தர்றேன்னு சொன்னீரு, இப்ப பாக்காத மாதிரி போறீரு..’

‘கெடைக்க வேண்டிய எடத்தில கொஞ்சம் தடங்கல். வேற ஒண்ணும் இல்லை. நானே இதைச் சொல்ல வரணும்னு..’

‘ஆமா..நல்லா வந்தீரு..உம்மை மாதிரி நாலு பேருக்குக் கொடுத்தா அப்புறம் நானும் ஓடு எடுக்க வேண்டியதுதான். முடியலைன்னா சொல்லும், விட்டுடறேன். எத்தனையோ செலவிலே இது ஒண்ணு. என்னை ஏன் அலைய வைக்கிறீர்?’

பிசாசுக்குட்டி குரல்வளையில் வாய் வைத்து, வலுவுடன் இழுத்து நாராகக் கிழிக்கிற மாதிரி இருந்தது தேவருக்கு. ‘கேவலம் இருநூறு ரூபாய்க் காசுக்கு என்ன பேச்சுப் பேசுகிறான்? புதுக்காசுத் திமிர்! மாற்று ஜாதிக்காரனிடம் , அதுவும் இந்த ‘சின்னப் பயலிடம்’ கடன்பட்டது எவ்வளவு தப்பாகி விட்டது? நடுத்தெருவில் இப்படி அம்மணமாய்..’

இதயம் புழுவாகத் துடித்தது.

வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தவுடன் அவருக்காகவே காத்திருந்ததைப் போல விசாலம் ஆரம்பித்தாள்.

‘பார்த்தீங்களா… இந்த பிரபுக் கடன்காரனை? சாம்பார் நல்லா இல்லேன்னு சொல்லி தட்டை விசிறி எறிஞ்சுட்டுப் போறான்’

விழிகளை நெருப்பாக்கி உருட்டிப் பார்த்துவிட்டு, எதுவும் பேசாமல், தேவர் வீட்டிற்குள் நுழைந்தார். அவருடைய வயிற்றெரிச்சல் அவருக்கு.

விசாலமும் அவரைப் பின் தொடர்ந்தாள்.

‘வரவர அவனது அட்டகாசம் அதிகாப் போச்சு. ஏண்டா இப்படிச் செய்யறேன்னு ஒரு நாளாச்சும் கேட்கறீங்களா?’

வருஷத்திற்கு ஒன்றாகப் பெத்து அலுத்துப் போன அவளுக்கு எதையாவது மென்றுகொண்டிருக்க வேண்டும். சுமக்க முடியாத பாரத்தை, தானே தூக்கியாக வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிற மாதிரி, சதா சர்வமும் ஒரு அலுப்பு. அதற்கு தேவரா காரணம்? இல்லை அவர் பெற்றதுகளா?

இரண்டும்தான். முதல் இரண்டும் ‘பெட்டை’யாயிற்றே என்று மூன்றாவதுக்குக் கொடுத்த செல்லம், இப்பொழுது அவனை ‘தறுதலையாக்கி’ திரிய விட்டிருக்கிறது.படிப்பும் இல்லை. எங்கோ வேலை செய்து, பேருக்கு ஏதோ அம்மாவிடம் கொடுத்து, தின்று, வீட்டில் ரகளை செய்து, பின் கொஞ்ச நாட்களுக்கு வராமலிருந்து போகும் அவனை – தான் பெற்றவைகளில் ஒன்றில்லை என்று தேவர் நினைக்க ஆரம்பித்து சில மாதங்களாகி விட்டன.

திரும்பத் திரும்ப அவனைப் பற்றியே பேசினால்…?

முகம் அலம்பிக்கொண்டிருந்த ஆறுமுகத் தேவர் ‘தூ’வென்று துப்பினார்.

‘அவன்தான் உன் மூஞ்சி மாதிரி இருக்கானே, நான் ஏண்டி கேக்கப் போறேன்?’

‘தேவர் மகன் தேவருக்கு இப்பவாச்சும் இந்த மூஞ்சியைப் பத்தி தெரிஞ்சுதே… அதைச் சொல்லனும்’

‘இப்பவாச்சும் என்றால்?..இத்தனை ராத்திரிகளுக்குப் பிறகு என்று அர்த்தம்! தேவரின் தன்மானம் அவரைச் சுட்டது.

‘ஆமாம்; பேரழகிங்கிற நெனைப்புலதான் தினமும்..’ என்று ஆரம்பித்தவர், எதிரே மூத்த பெண் நிற்பதைக் கண்டதும் ‘சும்மாயிருடி..அப்புறம் வாய்ல ஏதாவது வந்துடப் போவுது’ என்று சொல்லிவிட்டு துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

இரண்டே அறைகளுள்ள அந்த வீட்டில், சமையலறையில் சும்மா உட்கார்ந்திருந்தால், அப்பாவை அங்கு சாப்பிடச் செய்தால் இருவருக்கும் இடையே மேலும் வாக்குவாதம் வலுக்கும் என்று நினைத்த மூத்த பெண் விஜயா, அவர் இருந்த அறையிலேயே சாப்பாட்டுத் தட்டை கொண்டு வந்து வைத்தாள். மட்ட ரகமான அரிசி சாதத்தின் வாசனையும், பருப்போடு ஒட்டாத கத்தரிக்காய் சாம்பாரின் நெடியும் முகத்தில் அடித்தன. அப்போது இந்த வாசனையைப் பார்த்துத்தான் மகன் தட்டை வீசிவிட்டுப் போயிருப்பானோ என்று தேவர் நினைத்தார். ‘ம்ம்…நாக்கு தடிக்கும் வயசு, அவனைச் சொல்லியும் குத்தமில்லே…’

‘எல்லாம் என் தலையெழுத்து. அப்பன் கிட்டேயும், புள்ளெகிட்டேயும் மாரடிக்கணும்னு எழுதியிருக்கு’. கண்களில் நிறைந்த நீர் கீழே விழுவதற்கு சகுனம் பார்க்க விசாலம் பின்னும் ஏதோ புலம்பிக்கொண்டிருந்தாள்.

தேவருக்கு தலை உச்சி எரிந்தது.

அந்த வெறியில் தன்னை நோக்கி ஓடிவந்த கடைசிப் பையனுக்கு ஒரு காரணமும் இல்லாமல் முதுகில் ஒரு அடி கொடுத்தார். நிலைமையைப் புரிந்துகொண்ட அது, பாதையை மாற்றிக்கொண்டு அம்மாவிடம் ஓடியது. அழுதபடி ஓடிவரும் பிள்ளையைக் கண்டதும் ‘இடையில் இது என்ன சனியன்’ என்று இழுத்து வைத்து அவளும் ‘சாத்த’ ஆரம்பித்தாள்.

தேவருக்கு என்னமோ தன்னைப் பாவித்தபடியே அவள் குழந்தையை அடிக்கிறமாதிரி தோன்றியது. சாப்பிடுவதை நிறுத்தி, ‘உனக்கு அந்த அளவுக்குக் கொழுத்துப் போச்சாடி’ என்று சத்தமாகக் கேட்டார்.

‘ஆமாம்..நீங்க கொண்டுவந்து கொட்டும் பட்சணங்களைத் தின்னு கொழுத்துத்தான் போச்சு..’ விசும்பலுக்கிடையே அவருக்கு இணையான சத்ததுதுடன் விசாலம் பதில் கூறியபோது, கையை உதறிக்கொண்டு தேவர் அவள் மேல் முரட்டுப் பாய்ச்சலாகப் பாய்ந்தார். அவளது தலைமயிரை கையில் சுருட்டிக்கொண்டு ஓங்கி ஓங்கி அடித்தார். ‘விடுங்கப்பா..விடுங்கப்பா..’ என்று மூத்த பெண்கள் இரண்டும் அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சின. ‘சின்னதுகள்’ மூன்றும் ஒன்றையொன்று நெருங்கியபடி சற்று எட்டத்திலிருந்துகொண்டு அழத் தொடங்கின. அம்மாவை அடிக்கிறார் என்பதற்காகவா? அல்லது தங்கள் பக்கம் அவர் கவனம் திரும்பினால் என்ன செய்வது என்ற பயமா? தெரியவில்லை.

ஒவ்வொரு அடிக்கும் விசாலத்தின் சுருதி ஏறியதே தவிர குறையவில்லை. அடிபட்டுச் சாவது என்று தீர்மானம் செய்துவிட்டவளைப் போல பிடிவாதமாக எதிர்த்துப் பேசினாள்.

கடைசியில் அவரே பணிந்து போகவேண்டியதாயிற்று.

‘இந்த வீட்டில் என்றைக்குத்தான் எழவு விழுமோ? முதலில் நான் சாகனும். அப்பத்தெரியும் சங்கதி…’

சட்டையைப் போட்டுக்கொண்டு, அதே கோபத்துடன் தேவர் வெளியே புறப்பட்டார்.

ரோட்டில் வெயில் பொசுக்கியது.

செருப்பில்லாத காலில் அதன் உக்கிரம் பாய்வதையும் பொருட்படுத்தாமல் வேகமாக நடந்து வந்து, வண்டிப்பேட்டையில் வழக்கமாக தான் அமரும் இடத்தில் உட்கார்ந்து கொண்டார். அவருடைய தொழில் கேந்திரம் அது. அங்கு தெரிந்த முகங்களும் அதிகம்.

மனம் இறுக்கத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை.

‘என்ன தேவரே சாப்பிட்டாச்சா?’ புண்ணாக்கு மூட்டை ஏற்றிய வண்டிக்காரன் – தெரிந்தவன் – கேட்டான்.

‘ம்..ஆச்சு.’ ஆறுமுகத்தேவர் சுரத்தில்லாமல் பதில் சொன்னார்.

‘அப்ப சரி..வண்டியைக் கொஞ்சம் பாத்துக்குங்க, சாயாக் குடிச்சுட்டு வந்திடுறேன்’

தேவர் அதற்கு ஒத்துகொண்டதும் , வண்டிக்காரன் டீக்கடைப்பக்கம் போனான்.

ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டு வண்டிக்கு அருகில் வந்தார். புதிய முகத்தைக் கண்டு மாடு சீறிற்று. கழுத்து மணியின் ‘க்ளிங்’ சத்தம். தேவர் வண்டியிலேறி உட்கார்ந்து கொண்டார். நரைத்துப் பீடிப் புகையால் பழுப்பேறிய மீசையை கைகள் வருடின.

நடுரோட்டில் தன்னை நிற்கவைத்துக் கடன் பாக்கியைக் கேட்ட ‘சின்னப் பயலையும்’ , வீட்டில் தன்னை அவமானப் படுத்துகிற மாதிரி நடந்துகொண்ட ‘சிறுக்கி’யையும் நினைக்க நினைக்க அவருக்கு ஆத்திரமாக வந்தது. தன்னுடைய அப்பன் – பாட்டன் இருந்த இருப்பென்ன, தன் நிலை இப்படி ஆயிற்றே என்று ஒருகணம் கலங்கினார். பின்பு அதை ஈடுகட்டுகிற மாதிரி தன்னுடைய வசந்த காலங்களையும் நினைத்துக் கொண்டார்.

இத்தனை வருடமாக வாழ்ந்த வாழ்க்கை, இன்றைய ஒருநாளில் அஸ்தமித்துப்போன மாதிரி இருந்தது அவருக்கு. ‘பெண்டாட்டியென்ன? பிள்ளைகளென்ன? என்று அவர்கள் மீதுள்ள ஆதிக்கத்தை உதறிவிட்டு எங்காவது ஓடிப்போனால் என்ன என்று தோன்றிற்று.

‘நன்றியில்லாத ஜன்மங்கள்..என்ன உழைச்சும் பயன்?’

சில தினங்களுக்காவது தான் வீட்டிற்குப் போகாமலிருந்தால்தான் தன்னுடைய அருமை அவளுக்குப் புரியும் என்று நினைத்துக் கொண்டார்.

கொஞ்சநேரத்தில் வண்டிக்காரனும் சாப்பிட்டுவிட்டு வந்தான். மாட்டுக் கயிற்றை அவனிடம் கொடுத்துவிட்டு, தேவர் வண்டியிலிருந்து இறங்கினார். இறங்கும்போது வயிற்றை இழுத்துப் பிடித்தது பசி.

‘தேவர் கிட்டெ சொல்லித்தான் நல்ல மாடா ஒண்ணு வாங்கனும்’

‘ம்.. அதுக்கென்ன? வாங்கிட்டாப் போச்சு’

சிறிதுநேரம் வண்டியைப் பார்த்துக்கொண்டிருந்ததற்காக அவன் நன்றி கூறும் விதத்தில் சொல்லிப் போகும் ஆசை வார்த்தைகளும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டதாக தான் செய்யும் பாவனையும் வெறும் வேஷங்கள் என்று தேவருக்குத் தோன்றியது. உலகத்தில் எல்லாமே இதுபோன்ற வேஷங்கள்தானா? வயிறும் மனமும் நிறைகிற மாதிரி அமைந்துவிடுகிற நாளின் இரவுகளின் பக்கத்தில் படுத்துக்கொள்ளும் மனைவி, வாய்க்கு ருசியாக வாங்கிக்கொண்டு போனால் சுற்றிவரும் குழந்தைகள் – அத்தனையும் வேஷம் கட்டி ஆடுபவைதானா?

பசியேப்பம் திரட்சியாக வந்து வாயை அடைத்தது. நெஞ்சுக்குக் கீழே தீ மூட்டி வைத்திருப்பதைப் போலிருந்தது.

மடியைப் பிரித்துப் பார்த்தார். இரண்டு ரூபாயும் சில்லறையும் இருந்தன. இன்று காலை வருமானம் அவ்வளவுதான். மதியம் சண்டையால் விசாலத்திடம் கொடுக்கவில்லை என்பது ஞாபகத்திற்கு வந்தது. ‘அதுவும் நல்லதிற்குத்தான். இன்னிக்கு ஒரு ராத்திரியாச்சும் பட்டினி கெடந்தாத்தான் புத்தி வரும்.’

மடியிலிருக்கும் பணத்தை முடித்து வைத்துவிட்டு தன்னால் பசியோடு இருக்கமுடியும் என்று அவருக்குத் தோன்றவில்லை. அதனால் மறுயோசனையே செய்யாமல், மணீஸ் கபேயை நோக்கி நடக்க ஆரம்பித்தார். சாப்பாட்டு நேரம் கடந்திருந்ததால் ஓட்டலில் அவ்வளவாகக் கூட்டமில்லை. போனவுடன் இலையை விரித்து வைத்தார்கள்.

வெங்காய சாம்பாரின் வாசனை, நெய்யுடன் சேர்ந்து தொண்டையில் பாகாக இறங்கியது. இதுபோல சாப்பிட்டு எத்தனை நாளாயிற்று!

அடுத்து ஒரு கவளம்; பின்னும் ஒன்று.

தண்ணீர் குடிக்க அண்ணாந்தபோது நெஞ்சை இருளக்கிவிட்டு ‘பளிச்’ சென்று என்னவோ மின்னியது. அதன் வெளிச்சமும் வேகமும்…

சாப்பாட்டிலிருந்து கையை உதறி வாசலுக்கு ஓடிவந்து பார்த்தார்.

அங்கே அவளுடைய மூத்த பெண் விஜயா , கையில் டிபன்கேரியருடன் நின்று கொண்டிருந்தாள். துணைக்கு மூன்றாவது தங்கை.

‘சாப்பாடு கொடுத்துட்டு, அப்படியே ராத்திரிக்கு அரிசி வாங்க பணம் கேக்கச்சொல்லி அம்மா அனுப்பிச்சது’

தேவர், அவளது கரங்களில் அழுக்குப் பையின் உள்ளே இருக்கும் நசுங்கிய அலுமினிய டிபன் தூக்கைப் பார்த்தார். குஷ்டரோகி மஞ்சள் தேய்த்துக் குளித்த மாதிரி , சாம்பாரின் உப்புக் கரைசலில் மங்கிய பாத்திரம்.

‘இங்கே ஏன் வந்தீங்க?’ எனக் கேட்பாரோ என்று நினைத்து விஜயா சொன்னாள். ‘பேட்டைக்குத்தான் போய்க்கிட்டிருந்தோம். நீங்கள் உள்ளே நுழைவதைப் பார்த்ததும் இங்கேயே நின்னுட்டோம்..’

முகத்திலடித்தாற்போலிருந்தது தேவருக்கு. குழந்தைகளின் பெருந்தன்மையைக் கண்டதும் மனத்துள், தன்னுடைய வைராக்கியமெல்லாம் எங்கோ பறப்பதை உணர்ந்தார். அதற்கு ஏற்றமாதிரி ‘நீங்க போய் சாப்பிடுங்கப்பா’ என்று மகள் சொன்னதும் , அதுகளுக்கு முன், தான் குற்றவாளியாக பிடிபட்டிருப்பதைப் போன்று உள்ளம் குறுகியது. என்னதான் உதறினாலும் பிடித்த பிடியை விடாமல் பிடித்துக்கொண்டு தொங்கும் ஜீவன்கள். ‘நீங்க என்ன சாப்பிட்டாலும் சரி; எங்களுக்கு வெந்த கஞ்சிக்காவது வழி பண்ணிடுங்கோ’ என்று கெஞ்சும் பார்வை.

பாதையில் போன இளைஞன் ஒருத்தன் , விஜயாவையே வெறிக்கப் பார்த்துக்கொண்டு சென்றான். அவனுடைய பசி அது.

மடியில் எட்டணாவும் சில்லறையும் இருந்தன.

பிரித்த மடியை மடிக்காமலும், மகளிடம் ‘இப்போது பணமில்லை’ என்று சொல்ல முடியாமலும் சில நொடிகள் வீணாயின. சிறிது நேரம் கழித்து ‘சரி..நீ போம்மா. சாயங்காலம் நானே அரிசி வாங்கி வீட்டுக்குக் கொண்டு வரேன்’ என்றார்.

பதில் எதுவும் பேசாமல் விஜயா புறப்பட்டாள். கடைக்கு முன்பு வீசிய பலகார வாசனையை கடைசியில் ஒருமுறை நன்றாக இழுத்து வயிற்றில் இறக்கிக்கொண்டு சின்னதும் அவளுக்குப் பின்னால் நடந்தது.

உள்ளே கடையில் சுத்தம் செய்பவன், மற்றைவைகளோடு அவரது இலையையும் எடுத்துப் போட்டு , வெளியே இருந்த எச்சில் தொட்டியில் கொண்டு வந்து கொட்டினான்

எங்கிருந்தோ நாய்கள் ஓடிவந்து, தொட்டியை நெருங்கி சண்டையிட்டன. ஒன்றின் மேல் ஒன்று உறுமலுடன் பாய்ந்து கடித்துக் குதறிக் கொண்டன. அப்போது அவற்றுள் வலிமை மிக்க நாயொன்று தொட்டியின் விளிம்பில் தாவி ஏறிக்கொண்டு மற்றதுகளை விரட்டியது. அந்நாயின் மடி தொங்கி, மார்புக் காம்பு தரையில் மோதியது. அது விரட்டியடிக்கும் நாய்களுள் சில அதனுடைய குட்டிகளாகவும் இருக்கக்கூடும். பிடுங்கித் தின்னும் பசிவெறியில் இதையெல்லாமா பார்க்க முடியும்?

தேவரின் கண்களில் நீர் நிறைந்தது. தானும் அப்படியொரு பிராணிதானோ? மனம் தன்னைப் பழிப்பதைத் தவிர்ப்பதற்காக, எப்போதோ செத்துப்போன தன் பாட்டன் வாழ்ந்த வாழ்க்கையை நினைக்க ஆரம்பித்தார் அவர்.

செம்மலர் – டிசம்பர் – 1978

நன்றி : மும்தாஜ் யாசீன், இலக்கியச் சிந்தனை (1978) , வானதி பதிப்பகம்.
ஆபிதீன் பக்கங்கள்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *