கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: April 19, 2020
பார்வையிட்டோர்: 13,610 
 

“என்ன ராஜா அப்படிப் பார்க்கர? நீ படிச்ச வெட்னரில இந்த காக்கா ஊனத்தை சரி பண்ண வழியிருக்கா பாரு” சிரித்துக் கொண்டே சோற்றை காக்கை கூட்டத்தில் வீசியெறிந்தார்.

தினமும் காக்கை, அணில் மற்றும் புறாக்களுக்கு உணவளிப்பதை வழக்காக கொண்ட ஆர்மி ரிடையர்டு சோல்ஜர்.

“இதுல ஒரு கண்றாவியான நிலைமை என்னன்ன நல்லா காலு இறக்கையியிருக்கிற காக்காவோட போட்டி போட்டு நொண்டி நொண்டி சண்டை போட்டு போட்டி போட்டு சாப்பிடனும். மத்த காக்கா பச்சாதாபம் காட்டாது தெரியுமோ?”

என்று சோற்றுக் கையாலேயே தலையில் அடித்துக் கொண்டார். மேலும் அவர்,

“நம்ம எலக்ட்ரிக் டெரியின்ல சின்னதா கட்டு போட்ட சுண்டு விரலைக் காட்டி பிச்சை எடுப்பான் மனுஷன்.”

சொன்னது அனுதாபம் தேடி அண்டிப் பிழைப்பதில் அவர் காட்டிய வெறுப்பு அவரது தன்மானம் என்னுள்ளத்தில் சலனம் காட்டியது.

எங்கள் காலனியில் அவர் மிலிட்டரி மாமா. பிரம்மச்சாரி. காஷ்மீர் பார்டர்ல கன்னி வெடில கால் ஒன்றையிழந்து ஒய்வு கொடுத்து விட்டனர் இழப்பீட்டோடு. அதுல சின்னதா வீடுகட்டி ஆதரவற்ற விதவை அக்காவோடு வசிப்பவர். நான் டாக்டர் ஆகனும்னு ஆசைப்பட்டார். கால்நடை மருத்துவரானதில் மகிழ்ந்தார்.

ஆனால் நான் பிராய்லர் கோழி பண்ணை மருந்து ஆராய்ச்சி கம்பெனி சேர்ந்தது அவருக்கு வருத்தம்.

கிராமங்களில் கால்நடை மருத்துவராய் ஏழை விவசாயிக்கு உதவிட வேண்டும் என்பார். உங்கப்பா சேர்த்து வச்ச காசு போதும். நீ கிராமத்தில இலவச‌கால்நடை மருத்துவனாகிடு என்று வற்புறுத்தி வருகிறார். எங்க அம்மா அப்பா அவர் வார்த்தை தட்ட மாட்டார்கள். வசதி மிகுந்த ஆணவம் என் பெற்றோர் கொண்டதில்லை. கஷ்டப்பட்டு உழைத்து உயர்ந்த அவர்கள் ஒரே மகன். என்னை நம் கலாசாரத்தில் முக்கி தோய்த்து எடுத்தவர்கள்.

அந்த நொண்டி காக்கா போட்டி போட்டு கிடைச்சதை தின்று கொண்டிருந்தது. நீண்ட நேரம் அதை பார்த்த வண்ணம் இருந்தேன்.

இந்தாடா லன்ச் பாக்ஸ் என்று அம்மா வந்தவுடன் நான் மிலிட்டரி மாமாவிற்கு பை சொல்லி பைக்கை ஸ்டார்ட் செய்து புறப்பட்டு எனது மருத்துவ ஆராய்ச்சி கூடத்திற்கு சென்றேன்.

எனது சீனியர் ஆராய்ச்சியாளர் என்னிடம் நாளை குடியாத்தம் அருகே கோழிப்பண்ணைல நம்ம ஆராய்ச்சி மருந்து ஆய்வு தெரிந்து கொள்ள போகனும். நாளை அதிகாலை வந்துவிடு ஆபீஸ் கார்ல போகலாம் என்றார்.

போனமாதம் கோட் வியாதி தடுக்க புதிதாக கண்டுபிடித்த தடுப்பூசி அந்த குடியாத்தம் பண்ணைல தேர்ந்தேடுத்த நூறு கோழிக் குஞ்சுகள் தடுப்பூசி போட்டோம். அதன் பக்க விளைவுகள் குறித்து குறிப்பெடுக்க அழைத்தார் எனது சீனியர்.

என்ன ஆச்சு சார்? அதிர்ச்சியில் உறைந்து நான் என் சீனியரிடம் கேட்டேன். குடியாத்த பண்ணை மேலாளர் அந்த நூறு கோழிக் குஞ்சுகள் பக்க வாதத்தில் வதைந்து போனதைச் சொன்னார். மருந்து அலர்ஜி போல‌ என்றா பார்த்தோம். எனது அதிர்ச்சி அதற்கில்லை,

வேஸ்ட். ! மற்ற நல்ல ஆரோக்கிய கோழிகளோடு முடக்கு வாத கோழிகளால் உண்டு கொழுக்க முடியாது. “ஃபுட் கன்வர்வஷன் ரேஷியோ” ( உண்ணத் தரும் உணவு உடல் எடை கூடும் அளவீடு) பண்ணைக்கு நஷ்டம். ஆகவே அந்த கோழிக் குஞ்சுகளை “கல்லிங்” (அந்த நொண்டிக் கோழிகளை குழி தோண்டி ஊயிரோடு புதைத்தல் அல்லது கழுத்தைத் திருகி குழியில் போட்டு மூடுதல்) செய்திட பண்ணை மேலாளர் இடம் எனது சீனியர் சொன்னார்.

மனசு சொல்லொனாத் துயரம் கொண்டது.

“மிலிட்டரி மாமா” உரக்கக் கூப்பிட்டேன்.

என்னடா என்று ஊன்று கோலோடு வந்தார்.

நாளைக்கு உங்க கிராமம் கலசபாக்கம் பக்கத்தில பூண்டிக்கு நான் எங்கப்பா அம்மா நீங்க போறோம். ரெடியா இருங்க. என்றேன்.

சரிடா உங்கம்மா நேத்தே சொல்லிட்டாங்க என்றார்.

“பூண்டி கிராமத்து மக்களே இன்றிலிருந்து மூன்று நாட்கள் கால்நடை மருத்துவர் நடேசன் இலவச ஆலோசனை மற்றும் மருந்து கொடுக்க முதல் காம்ப் இந்த பூண்டிச் சாமியார் மடத்தில் துவங்கியுள்ளார். தயவு செய்து சுற்று வட்டார மக்கள் தங்கள் ஆடு மாடு சிகிச்சைக்கு வழி கொள்வீர்களாக”

மிலிட்டரி மாமா ரெகார்ட் செய்து ஆட்டோவில் சுற்றுவட்டார கிராமங்களில் பிரச்சாரம் செய்தார்.

நான் நிம்மதியாக எனது தாய் தந்தை ஆதரவுடன் இந்த பூண்டியிலிருந்து இலவச கால்நடை மருத்துவ ஆலோசனைக்கு உடன் துணை அருள் செய்ய பூண்டி சாமியார் சமாதியில் வேண்டிக் கொண்டேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *