கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: August 22, 2013
பார்வையிட்டோர்: 15,542 
 

கண்ணாடியில் இன்னொரு முறை தன் முகம் பார்த்துக் கொண்டாள் செண்பகம். ‘முகத்தில் பவுடர் அதிகமோ..?’ இடுப்பில் செருகியிருந்த கைக்குட்டையை எடுத்து அழுத்தாமல் துடைத்துக்கொண்டு கண்ணாடியில் ஒட்டிவைத்திருந்த ஸ்டிக்கர் பொட்டையும் நெற்றியின் நடுவில் வைத்தபடி நிமிர்ந்தபோது,வெளியே கமலாவின் குரல் கேட்டது. “ஏய்..செம்பா..ரெடியா..? மணி ஒம்பது ஆயிருச்சுடி சீக்கிரம்..,”

“ஆனா என்னடி..? நாம என்ன ஆபீஸ்க்கா போறோம்.., கரெக்ட் டயத்துக்கு போறதுக்கு..?” கேட்ட செண்பகத்திற்கு இருபத்திரெண்டு வயது.வாளிப்பான உடல்கட்டும்,எப்போதும் புன்னகை இழையோடும் பிரகாசமான முகமுமாய், பார்த்தவர்கள் யாரும் பதினெட்டு வயதிற்கு மேல் அனுமானித்ததில்லை.

“ அதுக்கில்லேடி..லேட்டா போனா அந்த மேனேஜர் முசுடு கோவிச்சுக்கும்”
கமலாவும் செண்பகத்தின் வயதுடையவள்தான் என்றாலும் சற்றே பூசினாற் போன்ற உடல்வாகும் உயரமும் இரண்டு வயது கூடுதலாகவே காட்டியது.

“அவரென்ன நமக்கு சம்பளம் தர்றவரா..? ஏதோ நம்மகிட்டே கமிஷன் அடிக்கிற ஆளுதானே..” சொல்லியபடியே வீட்டின் கதவைப் பூட்டினாள் செண்பகா.ஒருதரம் இழுத்துப்பார்த்துவிட்டு, கமலாவோடு படி இறங்கினாள்.

தெருவின் திருப்பத்தில் ஆட்டோ பிடித்து,இடம் சொல்லி,ஐந்து நிமிட பயணத்திற்குப்பின் அவர்கள் சென்று இறங்கியபோது மணி இரவு ஒன்பது பத்து.இறங்கிய இடம் ‘தங்கம் லாட்ஜ்’.

மானேஜர் குமாரசாமி, லாட்ஜ் வாசலிலேயே வெற்றிலையைக் குதப்பியபடி நின்றிருந்தார். “ ஏய் செண்பகா..செல்வத்துக்கிட்டே சொல்லிவிட்டேனில்லே.. எட்டரை மணிக்கெல்லாம் வந்துடணும்னு..மெட்ராஸ் பார்ட்டியொண்ணு காத்துக்கிட்டு இருக்கு..ஓடு..ஓடு..ரூம் நம்பர் பதினெட்டு.., கமலா நீ இருபத்தியொன்னுக்குப் போ..” அவருடைய குரலில் விட்டுப்போன அரைமணி நேரத்தை விரட்டிப்பிடித்துவிட வேண்டிய அவசரம் தெரிந்தது.
அண்ணே இன்னும் டிபன்கூட சாப்பிடலே..” கமலா சொல்லிமுடிக்கும்முன் “ஒரு மணி நேரம்தான் பேசியிருக்கு..நீ போ புள்ளே..எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்” குமாரசாமியின் குரல் விரட்டியது.

இருவரும் உள்ளே போனார்கள்.படிகளில் ஏறும்போது கமலா கிசுகிசுத்தாள்.“ஏய் செம்பா..டிப்ஸ் கொஞ்சம் தேத்திக்கப் பாருடி..பொங்கல் வருதில்லே..புதுசா நகை வாங்கலாம்..” பேசிக்கொண்டே வந்ததில் பதினெட்டாம் நம்பர் ரூம் வந்திருந்தது.

“ம்..ம்..” என்று சிரித்தபடியே தலையாட்டிய செண்பகம் கதவை லேசாகத் தட்டினாள்.”யெஸ்..கமின்.”

நகரின் மத்தியில் இருந்த அந்த லாட்ஜ் ரயில்வே ஸ்டேஷனும் சென்ட்ரல் பஸ் ஸ்டேண்டும் அருகருகே இருந்ததில் எப்போதும் லாட்ஜில் வெளியூர் ஆட்களின் கூட்டம் நிரம்பி வழியும்.

செண்பகத்திற்கும் கமலாவிற்கும் எப்போதும் தொழில் கொடுப்பார் மேனேஜர் குமாசாமி.செண்பகாவின் கண்டிஷன் அப்படி.அவள்மூலம் நல்லவருமானம் இருந்ததால் குமாரசாமியும் அதற்கு ஒத்துக்கொண்டார். ரேட்டெல்லாம் ஆளைப் பொறுத்து அவரே நிர்ணயித்துக் கொள்வார்.ஆனால் இவர்களுக்கு ஒரு ஆளுக்கு இவ்வளவு என்று கணக்கிட்டு காசு கொடுத்துவிடுவார்.வருமானம் சற்று வசதியாகத்தான் வந்து கொண்டிருந்தது.

மேலும் போலீஸ் ஸ்டேஷன் மாமூல், அவ்வப்போது உருப்படிகள் சப்ளை, காணிக்கை தீர்த்தம் என்று எல்லாமே அவர் பார்த்துக் கொள்வார்.தனியாக தொழில் நடத்தினால் இதெல்லாம் கொஞ்சம் சிக்கல்.எனவே அவர் அடிக்கும் கமிஷன் பற்றி இவர்களும ;கவலைப்படுவதில்லை.

தாளிடாத கதவை செண்பகா திறந்தபோது “ வா செண்பகா..” பழக்கமான குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். ‘ஓ இவரா..?’ மெட்ராஸ் பார்ட்டி என்றதும் வேறு யாராவதாக இருக்கும் என்றுதான் நினைத்திருந்தாள்.சென்னையில் ஏதோ ஒரு தொழிற்சாலையின் உயர்அதிகாரி இவர்.அவர்களின் உற்பத்திப் பொருட்களின் விற்பனை சம்பந்தமாக அடிக்கடி இந்த ஊருக்கு வருபவராம். போன மாதம்தான் இவளை இங்கு சந்தித்தார்.முதல் சந்திப்பிலேயே இவளை மிகவும் பிடித்துப் போயிற்றாம்.

“வாங்க சார்..சவுக்கியமா இருக்கீங்களா..?” இவளுடைய விசாரிப்பில் அவர் முகம் மலர்ந்தார்.“இதான் செண்பகா..உன்னைப் பிடிச்சதுக்கு காரணம். கஸ்டமர் அப்படிங்கிற உறவு தாண்டி நலம் விசாரிக்கிறே பார்.அந்த குணம்தான் எனக்கு ரொம்ப பிடிச்சது.அதான் இந்த முறையும் குமாரசாமிக்கிட்டே குறிப்பா உன்னயவே கேட்டேன்.”

அவரின் புகழ்ச்சியில் போலித்தனமில்லை.செண்பகத்திற்குகூட சற்று நாணம் வந்தது.

“அப்புறம் செண்பகா..நான் போனதடவை வந்தபோதே கேட்டதைப்பத்தி யோசிச்சயா..? சம்மதம்னு சொல்லமாட்டியா..?” அவருடைய கேள்வியில் நிறைய எதிர்பார்ப்பு..

சென்றமுறை அவர் வந்து சென்றது செண்பகாவின் நினைவிலாடியது.அன்றும் இப்படித்தான் உள்ளே நுழைந்தவளை சற்றுநேரம் உற்றுப்பார்த்துவிட்டு தன்னைப்பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டார்.அவளுக்கு அதிசயமாக இருந்தது.

எப்போதும் அவள் அறைக்குள் நுழைந்தவுடன் பசித்த மிருகங்கள் தன் இரையைப் கவ்விப்பிடிக்க தாவுவது போல் அவசரம் காட்டுவதைத்தான் அவள் கண்டிருக்கிறாள்.இப்படி நிதானமாக பழகும் ஒருஆளை இதுவரை இந்தத் தொழிலில் சந்திகக்வில்லை.

“உன் பெயரை தெரிஞ்சுக்கலாமா..?”

“செண்பகம்”

“நெஜமான பேரே இதானா..?”

“ஆமா..”

“நீ இந்தத் தொழிலுக்கு வந்து எத்தனை வருமாச்சு.?”

“ஆறு மாசமிருக்கும்” என்றவளின் மனதில் எதற்காக இந்தக் விசாரணை என்ற கேள்வி எழுந்தது.அது முகத்திலும் பிரதிபலித்தது போலும்.

“நான் எதற்காக இதையெல்லாம் விசாரிக்கிறேன்னு தப்பாக எடுத்துக்காதேம்மா..” அவர் சட்டென்று வருத்தத்திலாழ்ந்தார். “என் மனைவியோட காலம்தள்ளி எனக்கு சலிச்சுப் போச்சு.என்னோட மனசுபுரிஞ்சு அவ எப்பவும் நடந்துக்கிறதில்லே.எதுக்கும் ஒத்துப்போறதுமில்லே.. விட்டுக்கொடுக்கிறதுமில்லே..” நாப்பது வயசுக்குள் இருந்த அவரின் பேச்சில் நூற்றாண்டு சலிப்பு.

“நீங்களாவது விட்டுக்கொடுக்க முயற்சிக்கலாமே..?”செண்பகா சட்டென்று சொல்லிவிட்டாலும், அடுத்த நொடியே தன் நாக்கைக் கடித்துக்கொண்டாள். ‘நாம் அளவுக்கு மீறி அவருடைய உரிமைக்குள் தலையிடுகிறோமோ..?’ஆனால் அவர் ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. ‘என்னோட விருப்பு,வெறுப்புகளை உங்கிட்டே சொல்றேன்.நீ விருப்பப்பட்டா..என்னோடயே மெட்ராஸ் வந்துடு. தனியாக வீடுஎடுத்துக் கொடுத்து ஆயுசுபூராவும் வசதியாய் வெச்சுக்கிறேன்.”

“யாரோட ஆயுசு பூரா..?” செண்பகாவின் கேள்வியால், சட்டென்று உறக்கத்திலிருந்து விழித்தவர்போல நிமிர்ந்தார். “என்னம்மா கேட்கிறே..?”

“நாளைக்கே நீங்களோ நானோ செத்துட்டா இந்த ஏற்பாடெல்லாம் இன்னும் வருத்தத்தைத்தான் கொடுக்கும்.ஒண்ணை எதிர்பார்த்து ஏமாந்து போறதைவிட.. இன்னைக்கு என்னவோ அதைப் பார்த்துட்டுப் போயிடறதுதான் நல்லது.”

“உன்னைப்பார்த்தவுடன் எனக்கு ஏற்பட்ட நம்பிக்கை உனக்கு வரலேன்னு தெரியுது.”செண்பகா பதிலேதும் சொல்லாமல் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.அவர் தனக்குள்ளேயே இப்போது முனகிக் கொண்டிருந்தார். ‘நான் அப்படி எதிர்பார்க்கிறதுலே நியாயமில்லைதான்…!’

“ஆமா சார் இப்படித்தான் நியாயமில்லாத விஷயங்களை உங்க மனைவிகிட்டே எதிர்பார்க்கிறீங்களோன்னு தோணுது.தவறு உங்க பக்கமும் இருக்கலாம்.”

“பச்..ஊஹூம்..அவளை அட்ஜஸ்ட் பண்றது ரொம்ப சிரமம்.”

“அப்படின்னா இன்னொரு கல்யாணம் பண்ணிக்குங்களேன்.”

“ஐயோ..அது பெரிய சிக்கலிலெல்லாம் கொண்டுபோய் விட்ரும். வேண்டாம்மா.. வேண்டாம்..என்றதோடு அந்த விஷயத்தை அன்று அவர் நிறுத்திக்கொண்டார்.

அவளுடைய பேச்சும் அணுகுமுறையும் அனுசரணையும் அவருக்கு மிகவும் பிடித்துவிட, மறுநாளும் வந்து அதையே கேட்டார். செண்பகாவிற்கு அந்த யோசனையே பிடிக்கவில்லை.

ஏற்கனவே ஒருவனை முழுவதுமாக நம்பி பட்ட துன்பமே போதும்.இனியொரு முறை அவசர முடிவெடுத்து இப்போதிருக்கும் நிம்மதியும் பறிபோய் விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.எனவே அப்போதே அவரிடம் “முடியாது” என சொல்லிவிட்டாள்.

“என்ன செண்பகா..திடீர்னு யோசனையிலே மூழ்;கிட்டே..என்னோட வர்றதுன்னு முடிவு பண்ணிட்டியா..?” செண்பகா சிந்தனையில் இருந்து மீண்டாள்.

“மன்னிச்சுக்குங்க சார்.அப்ப சொன்ன அதே பதில்தான் இப்பவும்”

அவர் முகம் சற்றே சுருங்கினாலும் இரண்டே விநாடிகளில் இயல்புக்கு வந்தார். “நீ சம்மதிப்பேன்னு உறுதியா நானும் நினைக்கலே..இருந்தாலும் நப்பாசைதான்.வாய்விட்டுக் கேட்டுட்டேன்.”

“பரவாயில்லே சார்..”

“சரி லைட்டை அணைச்சுடலாமா..?”

“உம்” அவள் குரலைத் தொடர்ந்து அந்த அறை இருளில் மூழ்கியது.

மறுநாள் காலை ஆட்டோவில் வீடு திரும்பும்போது கமலா முனகிக் கொண்டே வந்தாள். “என்னடி..தானாப் பேசிக்கிட்டே வர்றே..?” செண்பகா கேட்டபோது “கருமம்டி.., நேத்து ராத்திரி ஒருத்தன் கிருமி மாதிரி அரிச்சுட்டான்.உடம்பெல்லாம் ஒரே வலி..போயி நல்லா தண்ணி கொதிக்கவெச்சு ஒரு குளியல் போட்டாதான் நல்லாருக்கும்.”என்றவள் திடீரென நினைவு வந்தவளாய் கேட்டாள் “ஆமா.., அந்த மெட்ராஸ் பார்ட்டி இந்த தடவை ஒண்ணும் கேட்கலையா..?.

“கேட்டாரு.., நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்.”

“அடிப்போடி இவளே..எவனாவது என்னை இப்படிக் கேட்டா.., கும்பிடு போட்டுட்டு கூடப்போயிடுவேன்.நான் கொஞ்சம் குண்டா இருக்கங்காட்டியும் பகல்லே எவனுக்கும் புடிக்காது போல..” அங்கலாய்த்தவள் தொடர்ந்து, “நீ போனா என்னவாம்..?” அக்கறையுடன் கேட்டாள்.

“வேண்டாம் கமலா..என்னோட கடந்த கால அனுபவத்தைத்தான் உங்கிட்டே சொல்லியிருக்கேன்ல, திரும்பியும் இன்னொருத்தன் பேச்சை நம்பிட்டு, மோசம் போக நான் தயாராயில்லே..,”

கமலாவிற்கு கூட அன்று செண்பகம் அனுபவித்த துன்பங்களை நினைத்தபோது, சிலிர்த்தது.

செண்பகாவின் மனதிலும் நிழல்சித்திரங்களாhய் காட்சிகள் தோன்றி மறைந்தன.

ஏதோ ஒரு ஆபீஸில் வேலை பார்ப்பதாக சொல்லிய முரளி தன்னைக் காதலித்தது. செண்பகாவின் பெற்றோருக்கு தெரியாமல் கோவையை விட்டு ஓடி வந்தது, இந்த நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒரு கோவிலில் தாலிகட்டிக் கொண்டது, ஒரு நவீன லாட்ஜில் ரூம் எடுத்து முதலிரவைக் கழித்தது.., அதுவரை எல்லாம் ஒழுங்காகத்தான் இருந்தது.

ஒரு நண்பரைப் பார்த்து விட்டு வருகிறேன்.இங்கேயே இரு.நமக்கு ஒருவீட்டை ஏற்பாடு செய்யச் சொல்லியிருக்கிறேன்.அது சம்பந்தமாக விசாரித்து வருகிறேன் என்று சொல்லிப்போனவன். இரவு திரும்பி வந்தான். உடலெங்கும் பணத்திமிரும், கண்களில் காமமும் வழிந்த மூன்றுபேருடன்.

தன் கண்முன்பாகவே அவர்களிடம் நூறு ரூபாய் கட்டு ஒன்றைப் பெற்றுக் கொண்டு, அவன் வெளியேறியபோதுதான் அவளுக்கு அந்தப் பயங்கரமே உறைத்தது.அதுவரை அவனது முகஅழகிலும்,வார்த்தை ஜாலங்களிலும் ஏமாந்து விட்ட தன்புத்தியை நொந்து கொண்டவளாய், தப்பிக்க அவகாசமின்றி அலறக்கூட வழியின்றி, கைகால்கள் கட்டப் பட்டு மிருகங்களாய் தன்னை ஆக்ரமித்துக் கொண்டவர்கள் வெளியேறும்போது காலை ஆறுமணி.அதற்குப் பிறகுதான் அவளால் ஓ..வென்று கதறியழ முடிந்தது.திரைப்படத்தின் காட்சிமாற்றம்போல.., ஒரே இரவில் இன்பம். துன்பம் எல்லாம் நிகழ்ந்துவிட்டது.

அப்போதுதான் பக்கத்து அறையிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த கமலாவின் அறிமுகம் கிடைத்தது.இவளின் கதையைக் கேட்டு பரிதாபப்பட்டவள் தன்னுடனேயே அழைத்துச் சென்று ஆதரித்தாள்.ஊருக்குத் திரும்பிச் செல்ல மனமுமின்றி,தனது எட்டாங் கிளாஸ் படிப்புக்கு வேலையுமின்றி உழன்று கொண்டிருந்தபோதுதான் மேலும் ஒரு சோதனை வந்தது.

கமலா சேர்ந்தாற்போல நான்குநாட்கள் கண் விழிக்காமல் படுத்துக்கிடந்தாள். காய்ச்சல் கொதித்துக் கொண்டிருந்தது. கையிருப்பெல்லாம் மருந்துக்கு என தீர்ந்தபின்னும் குணமாகவில்லை.அன்று இரவு வந்து பார்த்த டாக்டரோ, “உடனடியாக இவளை அட்மிட் பண்ணும்மா” என்று அந்தப் பெரிய மருத்துவமனைக்கு லெட்டர் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். செண்பகா செய்வதறியாமல் திகைத்தாள்.தன்னை ஆதரித்த தோழியின் நிலையைப் பார்த்தபோது துக்கம் மண்டியது.முகம் அறியாத மனிதர் நடுவே யாரிடம் சென்று உதவி கேட்பது..?அதுவும் எந்த நம்பிக்கையின் அடிப்படையில்..?

அப்போதுதான் கமலாவைத் ‘தேடி’ ஒருவன் வந்தான். கமலாவிற்காக.., உடனடி சிகிச்சைக்காக..என்று செண்பகாவும் ‘விலை’ போனாள்.பின் அவள் மேலும் தேறும்வரை விலைபோவதும் நீடித்து..மூழ்கியபின் முக்காடு என்னவென்று..? இன்று செண்பகாவும் ஒரு ‘தொழில்காரியாக’ மாறி குமாரசாமியின் அறிமுகம் கிடைத்தபின் சற்று நிம்மதியாக வாழ்க்கைச் சக்கரம் உருண்டு கொண்டிருக்கிறது.

“என்னடி செம்பா..மெட்ராஸ் பார்ட்டி டிப்ஸ் நிறையக் கொடுத்திருப்பாரே..” கமலாவின் குரல் செண்பகாவை நிஜ உலகத்திற்கு இட்டுவந்தது.

“ஊம்..கொடுத்தார்..”

“வழக்கம்போல சர்ச் வாசலுக்குப்போயிஇபாதியை தர்மம் பண்ணப்போறீயா..? இல்லே இனிமேலாவது..”அவள் முடிக்கும்முன்பே செண்பகா குறுக்கிட்டாள்.

“ஆமா கமலா என்னதான் நாம சம்பாரிச்சாலும் நமக்குன்னு யாரு இருக்கா..? நம்ம வாழ்க்கைலே பெரிசா குறிக்கோளுன்னு எதுவும் இல்லேன்னாலும்இநம்ம தேவைக்கு மீறி இருக்கறதை கொஞ்சம் தர்மம்தான் பண்ணுவோமே.. புண்ணியம்னு இல்லாட்டியும், நமக்கு கிடைக்கிற மனசு ஆறுதல் பெரிசு இல்லையா..?”

ஆட்டோவை வீட்டிற்குமுன் நிறுத்தி இறங்கிக் கொண்டார்கள்.கமலா குளித்துவிட்டு தூங்கப்போவதாகச் சொல்லி விட்டாள்.

செண்பகாவும் குளித்து உடைமாற்றி ஒரு குடையையும் கையிலெடுத்துக் கொண்டு, நான்கு தெரு தள்ளி பிரதான சாலையில் இருக்கும் அந்த தேவாலயத்தை நோக்கி நடந்தாள்.

சர்ச் வாசலில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாயிருந்தது.இன்று வெள்ளிக்கிழமை.செண்பகா இதுவரை சர்ச்சிற்குள் சென்றதில்லை.வேறு மதம் என்பதற்காக அல்ல.கர்த்தர் எவ்வளவுதான் மன்னிக்கும் மனோபாவம் பெற்றிருந்தாலும் மாசுபட்ட உடம்போடு சென்று தேவனை வணங்குதல் நியாயமே இல்லையென தனக்குள் தீர்மானம் செய்து கொண்டிருந்தாள்.உள்ளே சென்று “பாவமன்னிப்பு” பெறலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறாள். ஆனால் அதற்குப் பிறகு பாவம் செய்யாமல் இருக்கவேண்டுமே.. தன்னால் அது முடியுமா..?

கைப்பையில் தான் சேர்த்துவைத்துக் கொண்டிருக்கிற ஐந்து ரூபாய் நாணயங்களை, கைநிறைய அள்ளிக் கொண்டாள்.இவள் வந்தாலே அங்கு பிச்சையெடுக்க அமர்ந்திருப்பவர்களின் முகத்தில் ஒரு மகிழ்ச்சி துள்ளுவதை அவளும் கண்டிருக்கிறாள்.

ஒவ்வொரு தலைக்கும் ஒரு நாணயத்தைக் கொடுத்துக் கொண்டே வந்தாள். பிச்சையெடுப்பவர்களின் அந்த நீண்ட இரண்டு பக்கவரிசையையும் முடித்துக் கொண்டபோது, பையில் இன்னும் சில நாணயங்கள் மீதமிருந்தன.

எல்லோருக்கும் கொடுத்துவிட்டோமா..? என்று நிமிர்ந்து பார்த்தவள், திருப்தியுடன் தலையாட்டிக் கொண்டாள்.சர்ச்சின் கோபுரத்தைப் பார்த்து ஒரு முறை கும்பிட்டுக் கொண்டு திரும்பி நடந்தவளை. “மேடம்…” என்ற பிஞ்சுக்குரல் தடுத்து நிறுத்தியது.

செண்பகா திரும்பிப் பார்த்தாள்.எட்டுவயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் கருகருவென்று சுருண்டமுடி, சிவந்த நிறம், சாந்தமான முகத்தோடு கண்களில் சோர்வு மின்ன,சட்டையும், டிரவுசரும் அழுக்கும் புழுதியுமாக தன்னை நோக்கி கையேந்தியபடி நின்றிருந்தான்.

பார்த்தால் வழக்கமாய் பிச்சையெடுப்பவன் போல இல்லை. “என்னப்பா..” செண்பகா கேட்டபோது”காசுவேணும் பசிக்குது..”அவனுடைய குரலில் தொனித்த பலவீனம் அவளைப் பரிதாபப்பட வைத்தது.

”உன்னை இத்தனை நாள் இங்கே பார்த்ததில்லையே..?”

“நான் இன்னைக்குத்தான் இங்கே வந்தேன்..ரயிலிலே..”, ‘ரயிலிலே’ என்று அவன் சொல்லும்போது ஒருசின்ன சந்தோஷம் அவன் கண்களில் மின்னி மறைந்தது.

செண்பகாவிற்கு “பகீர்” என்றிருந்தது.விபரம் புரியாமல் ரயிலில் ஏறி வந்து விட்டானோ.., இவனைப் பெற்றவர்கள் எங்கே பரிதவித்துக் கொண்டிருக்கிறார் களோ..? “அய்யய்யோ..நீ அப்படி வரலாமா..? உங்க அம்மா அப்பா தேடுவாங்களே..”

அந்தப் பையனின் முகம் சூம்பிப் போனது.. “ப்ச்”;..தேடமாட்டாங்க..”

‘ஏன்..?’ என்ற கேள்வியோடு அவள்பார்க்க ”அவங்க ரெண்டுபேரும் போன மாசம் செத்துட்டாங்க..”ஸ்கூட்டர் ஆக்ஸிடென்ட்..”என்று சொல்லி நிறுத்தினான்.

பையனின் முகத்தில் பிச்சைக்காக பொய் சொல்லும் பாவமில்லை. செண்பகாவிற்கு அடிவயிற்றைப் பிசைந்தது. “உன் பேரென்னப்பா..?”

“பாபு….ஜி.பாபுகணேஷ்..”

“ஏன் பாபு..அம்மா அப்பாவோட சொந்தக்காரங்க ஊரிலே யாரும் இல்லையா..?” அவங்ககூட போய் இருக்கலாமில்லே..?”

“அம்மாவோட ஊரு எதுன்னு தெரியாது.நான் எங்க பெரியப்பா வீட்லேதான் இருந்தேன்.ஆனா பெரியம்மாதான் எப்பப் பார்த்தாலும் “எவளோ’’ பெத்ததை நான் கட்டீட்டு அழனுமா..எங்கியாவது போய்த் தொலை..ன்னு திட்டிட்டும் அடிச்சுட்டும் இருந்தாங்க.அதான் நான் வந்துட்டேன்”.பாபுவின்குரலில் மிகுந்த ரோஷம்.

அவளுக்கு ஐயோ பாவம் என்றிருந்தது. “சொந்த பெரியப்பா பெரியம்மாதானே.. எதுக்கு அப்படி சொல்றாங்க..நீ ரொம்ப குறும்பு பண்ணுவியா..?”

பாபு அந்தக் கேள்வியில் வருத்தமடைந்தது போல் தெரிந்தது.

“அதெல்லாமில்லீங்க எங்க அம்மா பேரு ஸ்டெல்லா..அப்பா அம்மாக்கு கல்யாணம் ஆனதிலிருந்து பெரியம்மாவும் பெரியப்பாவும் ஒட்டாத உறவு., வெட்டிக்கிட்டு வாடா..ன்னு, அப்பாகிட்டே சொல்லிகிட்டே இருப்பாங்களாம்..ஆனா அப்பாவும் அம்மாவும் சண்டையே போடமாட்டாங்க..ரொம்ப ஜாலியா நாங்க மூணுபேரும் ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்கும், வெள்ளிக்கிழமை கோவிலுக்கும் போயிட்டு வருவோம்..அப்பா ஏசுவைப் பற்றி நிறையக் கதையெல்லாம் சொல்லுவாரு..” சொல்லிக்கொண்டே வந்தவனுக்கு கண்களில் நீர் கோர்த்து, வாய் கோணி,அழுகை எட்டிப்பார்த்தது.

செண்பகா பதறிவிட்டாள்.சட்டென்று அவன்கையை ஆறுதலாகப் பிடித்துக் கொண்டாள். “பாபு..அழக்கூடாது பாபு..வா உனக்கு சாப்பிட ஏதாவது வாங்கித்தாரேன்..” இவ்வளவு சின்னவயதில் தாய் தந்தையை இழந்து துன்பம் அனுபவிப்பது பெரிய கொடுமை. இரக்கத்தால் செண்பகாவின் மனம் கசிந்தது.

அவன் கையைப் பிடித்தபடி எதிரில் இருந்த ஹோட்டலுக்குச் செல்ல, சாலையைக் கடப்பதற்காக நின்றிருந்தபோது, சரியாக அவர்களுக்கு முன்னால் வழியை மறைத்தாற்போல் ஒரு கார் வந்து நின்றது.
அதிலிருந்து கோட்இசூட் போட்ட, ஆஜானுபாகுவாய் இறங்கிய பெரிய மனிதர்.பார்த்தால் வட இந்தியரைப் போலிருந்தது.நேராக செண்பகாவிடம்தான் வந்தார். “எக்ஸ்கியூஸ் மீ.. மேடம்..வேர் இஸ் திஸ் அட்ரஸ்..?” அவர் நீட்டிய விசிட்டிங் கார்டை வாங்கிப் பார்த்தாள்.

அந்த ஆபீஸை அவளுக்குத் தெரியும்.அந்தக் கார்டிலிருந்த சின்னத்தை, அந்த ஆபீஸ்போர்டில் அவளும் பார்த்திருக்கிறாள். “இதே ரோட்டிலே போனீங்கன்னா இடது பக்கமா ஒரு ரோடு பிரியும்.அதிலே திரும்பினா மூணாவது வீதியிலே.. இரண்டாவது மாடி..” செண்பகா சொல்லச் சொல்ல அவர் முகத்தில் சலிப்புக் காட்டினார்.

“ஐ டோண்ட் அண்டர்ஸ்டாண்ட் இட். டூ யூ நோ இங்கிலீஷ்..?”
செண்பகா விழித்தாள். ‘தனக்கு தெரிந்த அரை குறை ஆங்கில வார்த்தைகளால் இவருக்கு எப்படி விளக்க முடியும்.?’ வெட்கமாக இருந்தது.

“இப் யூ டோண்ட் மைண்ட், ஐ வில் எக்ஸ்பிளெய்ன் ட்டூ யூ சார்”.பாபு குறுக்கிட்டான்.செண்பகா வியப்போடு பார்க்க, அவள் தமிழில் சொல்லியதை, அவன் கோர்வையாய், மரியாதையான ஆங்கிலத்தில் விளக்க அவர் ஓகே..ஓகே..என்று கேட்டுக்கொண்டு, தேங்க்யூ சொன்னார்.பின் செண்பகாவைப் பார்த்து, “இஸ் யுவர் பிரதர்.?” அவர் கேட்டதன் பொருள் அவளுக்குப் புரிந்தது.ஒரு விநாடி தடுமாற்றத்திற்குப் பின் குப்பென்று அவளுக்குள் சந்தோஷம் பூத்தது. “யெஸ்” பிரகாசமான முகத்தோடு சொன்னாள்.

“குட் பாய்” பாபுவின் கன்னத்தில் செல்லமாய் தட்டிவிட்டு அவர் சென்று விட்டார்.

பாபு ஆச்சரியத்தோடு செண்பகாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“டேய்..படிக்கிறீயாடா..?” செண்பகாவின் குரலில் அதீத உரிமை. கேள்வி விளங்காதவனைப் போல பார்த்தான் பாபு.

“ஸ்கூல்லே சேர்த்து விடறேன்,படிக்கிறியா..?” மீண்டும் கனிவாகக் கேட்டாள். பாபுவின் கண்களும்,முகமும் ஆசையில் சில விநாடிகள் மின்னிவிட்டு உடனே சுருங்கியது.

“சந்தேகப்படாதேடா..நானும் இப்ப அநாதை.உனக்கும் யாருமில்லே..எனக்குத் தம்பி ஒருத்தன் இருக்கிறான்னு நெனச்சு, உன்னைப் படிக்க வைக்கிறேன்டா..நீ பெரிய ஆளா வருவேன்னு எனக்கு தெரியும்..”. பாபுவின் தோளை அணைத்து இறுக்கிய செண்பகாவின் கைகளின் அழுத்தத்தில் பாசம் மிகுந்திருந்தது.

பாபு சர்ச்சை திரும்பிப் பார்த்தான். “நல்லவர்கள் துன்பப் பட்டால் ஆண்டவன் எந்த உருவத்திலும் வந்து காப்பாற்றுவார்” அப்பா சொன்னது மனதுக்குள் ரீங்கரித்தது. !

Print Friendly, PDF & Email

1 thought on “நீரில் ஒரு தாமரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *