இயற்கை வளம் கொழித்துக் கிடந்தது. பச்சைப் பசேலென வயல்வெளிகள். பசுக் குலம் ‘அம்மா!’ என்று அழைப்பதும் அவற்றின் கழுத்து மணி ஓசைகளும் மென்மையாகக் கேட்டன. இடையர்களின் சொர்க்க பூமியாகத் திகழ்ந்தது தொண்டை நாட்டின் காரணை என்ற அந்தக் கிராமம். அங்கிருந்தவர்களின் தலைவர் அரியகோன். ஏராளமான செல்வம் இருந்தும் குழந்தைச் செல்வம் இல்லை அவருக்கு. குறையை எண்ணிக் கண்ணீர் சிந்தினாள் அவர் மனைவி. அரியகோனுக்கு நெஞ்சு பதைபதைத்தது. நாளாக நாளாகக் கவலை அதிகரித்ததே தவிர குறையவில்லை.
ஒரு நாள்… பக்கத்தில் இருந்த காட்டுக்குள் நுழைந்து வெகுதூரம் நடந்தார் அரியகோன். அப்போது மல்லி கைப் பூக்களின் நறுமணம் அவரை சுண்டி இழுத்தது. நடக்க நடக்க வாசம் அதிகரித்தது. குறிப்பிட்ட ஓர் இடம் வந்ததும் எடுப்பானதொரு சிவலிங்கம் இருந்தது (இந்த இடத்தின் பெயர் திருப்பாச்சூர்).
அரியகோனின் கைகள் தானே கூடிக் கும்பிட்டன. நிலத்தில் விழுந்து வணங்கினார். எழுந்தார். அந்த சிவலிங்கத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார்.
‘‘எம்பெருமானே! ஆளரவமே இல்லாத இந்தக் காட்டில் வந்து ஏன் எழுந்தருளி இருக்கிறாய்? வீணர்களான மனிதர்களின் தொடர்பு வேண்டாம்… இதுதான் நமக்குத் தகுந்த இடம் என்று எண்ணி இருக்கிறாயா ஸ்வாமி?!’’ என்று குரல் தழுதழுக்கக் கேட்டார் அரியகோன்.
ஆனால், அவரது உள்ளம் அந்த நேரத்தில் வேறு மாதிரி உத்தரவிட்டது அரியகோனுக்கு. ‘சிவலிங்கத்திடம் நல விசாரிப்பெல்லாம் இருக் கட்டும். குழந்தைச் செல்வம் இல்லாமல் வாடும் நீ, அவரிடம் குழந்தைச் செல்வம் வேண்டும் என்று கேள்!’ என உள்ளம் துடித்தது.pi,
உடலைச் சிலிர்த்துக் கொண்ட அரியகோன், ‘‘கருணையாளா! அடியேன் குடி விளங்க எனக்கு ஒரு குழந்தை பிறக்க அருள் செய்ய மாட்டாயா?’’ என வேண்டினார். அப்போது பல்லி ஒன்று ஓசை எழுப்பியது. மன மகிழ்ச்சியோடு அங்கிருந்து புறப்பட்ட அரியகோன் வீட்டை அடைந்தார். புறப்படும்போது இருந்த கவலை, வீட்டுக்குள் நுழையும்போது இல்லை.
அதன் பிறகு அவ்வப்போது அரியகோன் காட்டுக்குச் சென்று அந்த சிவலிங்கத்தை வணங்கி னார். பிரார்த்தனை பலித்தது. அரியகோனின் மனைவி கருவுற்றாள். பத்தாவது மாதத்தில், பெண் குழந்தை ஒன்று பிறந்தது. ஆயர்கோனான அரியகோன் ஆனந்தத்தில் துள்ளினார்.
குழந்தைக்கு குணவதி எனப் பெயர் வைத்தார்கள். குழந்தை, விளையாட்டி லும் வார்த்தைகளிலும் சிவனையே வெளிப் படுத்தினாள். குணவதி பருவம் அடைந்ததும், ஏற்கெனவே அவள் குணங்களில் மகிழ்ந்த ஊரார், அவள் அழகைப் பார்த்து வியப்பின் எல்லையைத் தொட்டனர்.
வேறொரு கிராமத்தில் இருந்து உறவினர்கள் தங்கள் மகனுக்கு மணம் பேச, அரியகோனின் வீடு தேடி வந்தார்கள். அரியகோன் அன்போடு வரவேற்றார். வந்தவர்கள் குணவதியை உற்றுப் பார்த்தனர். நெற்றியில் திருநீறு. புன்னகைக்கும் புனித முகம். கருணையை விளக்கும் கண்கள். சிவ நாமம் உச்சரிக்கும் வாய். இப்படி குணவதியைக் கண்டவர்கள், மணம் பேச வந்ததை மறந்து பயந்தனர்.
‘‘யார் இது? சரஸ்வதியா… மகாலட்சுமியா? இப்படியும் ஓர் அழகு வடிவமா? கோயிலில் இருக்கும் அம்பிகை எதிரில் நிற்பது போல் இருக்கிறதே!’’ என்றெல்லாம் கூறிவிட்டு, ‘‘பிறகு வருகிறோம்’’ என்று சொல்லிவிட்டுப் போனார்கள். அவர்கள், தாங்கள் போன இடங்களில் எல்லாம், ‘‘அவள் மானிடப் பெண்ணே அல்ல; பேசும் தெய்வம்போல இருக்கிறாள்!’’ என்று பிரசாரம் செய்தார்கள்.
வந்தது வினை! அதன் பிறகு வந்து பெண் பார்த்தவர்கள் எல்லோரும், குணவதியை தெய்வ வடிவாகக் கருதினார்களே தவிர, அவளை மணம் முடிக்க எவரும் தயாராக இல்லை.
‘மகளுக்குத் திருமணம் நடக்குமா?’ என்கிற கவலையில் விழுந்தார் அரியகோன். ஒரு கட்டத்தில் இதையே நினைத்துப் புலம்ப ஆரம்பித்த அரியகோன், நோய் வந்து ஒரு நாள் உயிரையும் துறந்தார். அதை எண்ணி உள்ளம் உடைந்த மனைவியின் உயிரும் பிரிந்தது. குடும்பத்தில் தனி மரமாக ஆனாள் குணவதி. யாரும் மணக்க முன்வராததுடன், தாய்& தந்தையின் மறைவும் சேர்ந்து குணவதியை விரக்தியின் விளிம்பில் தள்ளியது.
நாட்கள் நகர்ந்தன. மெள்ள மனம் தேறிய குணவதி எங்கும் நந்தவனம் வைத்தாள். திருக்குளம் வெட்டினாள். தண்ணீர்ப் பந்தல், தர்மசத்திரம், அன்னதானம் என ஏராளமாகச் செய்தாள். ஏழைகளின் திருமணத்துக்கு அளவே இல்லாமல் உதவி செய்தாள். ஊர்ப் பொதுக் கிணறு போல குணவதியின் செல்வம் எல்லோருக்கும் பயன்பட்டது.
ஒரு நாள்… குணவதி தூங்கிக் கொண்டிருந்தாள். நள்ளிரவில் அருமையான கனவு. சிவந்த திரு மேனியுடன் கட்டழகு கொண்ட ஒருவர் புன்முறுவல் பூத்தபடி காட்சி தந்தார். ‘‘யார் நீங்கள்? என்ன வேண் டும் உங்களுக்கு?’’ என்று கேட்டாள் குணவதி.
‘‘எனக்கு நீதான் வேண்டும்!’’ என் றார் வந்தவர்.
‘‘என்ன சொல்கிறீர்கள்? எந்த ஊர் நீங்கள்?’’
‘‘யாம் இருப்பது திருப்பாச்சூர். குழந்தைக்காக எம்மை வேண்டிய அரியகோனுக்கு உன்னைக் கொடுத் தேன். எனக்கு உரியவள் நீ. அதனால்தான் உன்னை மணம் பேச வந்தவர்களை மருட்டினேன். இன்னும் என்னை மறந்து இருக்கிறாயே! வா! குணவதி வா!’’ என்றவர், போய்க் கொண்டே இருந்தார். குணவதியின் மனமும் அவர் பின்னாலேயே போனது.
மணம் கமழும் மல்லிகைச் சோலை ஒன்றுக்கு அழைத்துப் போனவர், அங்கிருந்த சிவலிங்கத்தை நெருங்கினார். காடே அதிரும்படியாகச் சிரித்தார் அவர்.
கனவு கலைந்த குணவதி திடுக்கிட்டு எழுந்தாள். உடல் முழுவதும் வியர்த்திருந்தது. ‘‘என்னவொரு கனவு! சிவபெருமானே! உடம்பு கொடுத்து, ஊட்டி வளர்த்தாய். உண்டு, உறங்கி உணர்விழந்தேனே தவிர, உன்னை நினைக்கவில்லை! இருந்தும் கனவில் வந்து கருணை புரிந்தாயே! நீ காட்டிய வழியில் வருகிறேன்’’ என்று வாய் விட்டுச் சொன்னாள்.
காலையில் எழுந்தாள் குணவதி. பூஜைகளை முடித்தாள். கனவில் போன வழி கவனத்தில் இருந்தது. கிளம்பினாள். மணம் கமழும் மல்லிகைச் சோலையில் கனவில் கண்ட சிவலிங்கம் காட்சி அளித்தது. பக்தர்கள் சிலர் கூடி, பஜனை செய்து கொண்டிருந்தார்கள்.
மெய் சிலிர்த்தது குண வதிக்கு. முறைப்படி வணங்கி ஆனந்தப் பட்டாள். அவளிடம், ‘‘அம்மா! சந்திரன் பூஜித்த சதுரர். இந்திரன் வழிபட்ட இறைவன். முனிவர்கள் ஏத்திய முதல்வன்!’’ என்று அவரவர் அறிந்ததைச் சொன்னார்கள்.
‘‘என்னிடம் ஏராளமான பசுக்கள் உள்ளன. அவற்றின் பால் முழுவதையும் இந்த ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யலாம். ஆராதனை செய்ய அந்தணர் வேண்டுமே. எங்கே தேடுவது? அடுத்த தலத்தில் வழிபாடு செய்பவரை எவ்வாறு அழைத்து வருவது?’’ என்று கூட்டத்தாரைப் பார்த்துக் கேட்டாள் குணவதி.
அப்போது, ‘‘இதோ! யாம் இருக்கிறோம்’’ என்று கம்பீரமான குரல் ஒன்று கேட்டது. வனப்பான வேதியர் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
‘‘ஸ்வாமி, வணக்கம். நீங்கள் எந்த ஊர்?’’ & குணவதி.
‘‘இதே ஊரில்தான் இருக்கிறோம். கறந்த பால் முழுவதையும் அனுப்பி வை! புனிதமான ஆராதனையை என் பொறுப்பில் விடு!’’ என்றார் வந்தவர்.
‘‘இன்றே ஏற்பாடு செய்கிறேன் ஸ்வாமி!’’ என்ற குணவதி தனது இருப்பிடத்தை அடைந்தாள். பசுக்களையெல்லாம் ஆட்களை வைத்துக் கறந்தாள். பாலை அப்படியே கொண்டு போய்க் கொடுத்தாள். சிவபெருமானுக்கு அற்புதமான முறையில் பாலபிஷேகம் நடந்தது. அலங்காரம் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. பக்திப் பரவசத்தில் உலகையே மறந்தாள் குணவதி.
திடீரென பஞ்சம் தலை விரித்தாட ஆரம்பித்தது. மழை இல்லை; விளைச்சல் இல்லை; தண்ணீர் இல்லை; உழைத்தவனுக்கு உணவில்லை. ‘‘பசி! பசி!’’ என்ற குரல்கள் எங்கும் கேட்டன.
நாளடைவில் செல்வம் குறைந்து, குணவதி யையும் தாக்கியது வறுமை. அந்த நிலையிலும், கறந்த பால் முழுவதும் கடவுள் ஆலயத்துக்கு வந்தது. வழிபாடு செய்யும் வேதியர், குண வதியை அழைத்தார். ‘‘குணவதி! பால் முழு வதையும் கொண்டு வந்து கொடுக்கிறாய். உன் செயல்களும் நிற்கக் கூடாதல்லவா? இந்தா! இதைப் பாலுக்கான விலை என்று எண்ணாமல் வாங்கிக் கொள்!’’ என்று சொல்லி, ஒரு பொன்னை குணவதியிடம் அளித்தார்.
அதை வாங்கிய குணவதி, அந்த ஊரி லேயே இருந்த நிதிபதி என்ற வணிகரிடம் போனாள். பொன்னை அவரிடம் தந்தாள். அனுபவசாலியான அவர், பொன்னை வாங்கிப் பார்த்த சற்று நேரத்திலேயே, ‘‘அம்மா! இது மிகவும் உயர்ந்த மாற்று உடைய தங்கம். இந்தாருங்கள், அதற்கு உண்டான பணம்!’’ என்று அள்ளித் தந்தார்.
அதைக் கொண்டு, ஏழைகளின் பசியாற்றும் தர்மத்தைத் தொடர்ந்தாள். நாட்கள் நகர்ந்தன. காலம் மாறியது. மழை பெய்தது. பயிர்கள் தழைத்தன. மக்கள் மகிழ்ந்தனர்.
ஆனால், கூலியாட்களின் மனதில் பேராசை புகுந்தது. கறந்த பாலில் பாதியை வெளியே விற்றுப் பணம் சேர்த்தார்கள். குறையும் பாலுக்கு பதிலாகத் தண்ணீரைக் கலந்து குணவதியிடம் கொடுத்தார்கள். இதை அறியாத குணவதி, வழக்கம் போல் பாலைக் கொண்டு போய்க் கொடுத்தாள். அர்ச்சகரும் வழக்கப்படி ஒரு பொன் கொடுத்தார். குணவதி நேரே வணிகரிடம் போனாள். கடையில் வணிகர் இல்லை. அவர் மகன்தான் இருந்தான். ‘‘வாருங்கள் அம்மா! அப்பா வெளியூர் போயிருக்கிறார். உங்களைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார். இந்தாருங்கள்!’’ என்று, தந்தை தரும் முறைப்படி பொருட்களைத் தந்தான். அவனிடம் பொன்னைக் கொடுத்துவிட்டு, இருப்பிடம் திரும்பினாள் குணவதி.
வெளியூர் போயிருந்த நிதிபதி திரும்பி வந்தார். அன்று காலை ஒன்பது மணியளவில் அவர் மகன், ‘‘இந்தாருங்கள் அப்பா! உத்தமி குணவதி தந்த பொற்காசுகள் இவை!’’ என்று சொல்லித் தந்தையிடம் தந்தான்.
வாங்கிய தந்தை அலறினார். ‘‘என்னடா இது? மிகவும் மட்டமான பொன்னல்லவா இவை? குணவதி தந்தது உயர்ந்ததாக இருக்குமே! என்ன செய்தாய்?’’ எனக் கத்தினார்.
‘‘எனக்கொன்றும் தெரியாதுப்பா. நீங்கள் சொன்ன படியே நடந்து கொண்டேன். அவ்வளவுதான்!’’ என்றான் மகன்.
‘‘தங்கத்தின் மாற்றுத் தெரியாத முட்டாள் நீ. எதிரில் நிற்காதே! போ!’’ என விரட்டினார் தந்தை.
அந்த நேரத்தில் குணவதி உள்ளே நுழைந்தாள். ‘‘வாருங்கள் வணிகரே! என்ன… போன காரியமெல்லாம் ஜயம்தானே?’’ என்று நலம் விசாரித்தபடியே, அன்றைய பொன்னைக் கொடுத்தாள்.
அதை வாங்கிய வணிகர், ‘‘போன இடத்தில் வெற்றி தான். ஆனால், இங்குதான் பலத்த அடி. அம்மா! இதுவும், என் பிள்ளையிடம் இதுவரை நீ தந்தவையும் எல்லாம் மட்டமான பொன்!’’ என்று சிடுசிடுத்தார்.
‘‘நன்றாகப் பார்த்துச் சொல்லுங்கள்!’’ _ குணவதி.
‘‘பார்ப்பதென்ன? என் பிள்ளையிடம் நீ தந்தவையெல் லாம் மகா மட்டமான பொன்.’’ என்றார் வணிகர்.
‘‘இருங்கள்! இதோ வருகிறேன்!’’ என்ற குணவதி விரைந்து அர்ச்சகரிடம் போய், ‘‘ஸ்வாமி! சமீப காலமாக நீங்கள் தந்த பொற்காசுகள் மட்ட ரகம் என்று வணிகர் சொல்கிறார். அது உண்மையா? பொய்யா?’’ என்றாள்.
‘‘வணிகர் சொல்வது உண்மைதானம்மா. அந்தப் பொன்னெல்லாம் மட்ட ரகமே. படிப்பாலில் அரைப்படி தண்ணீர் என்று கலந்து கொடுக்கிறாயே… பால் மாறும் போது பணம் மட்டும் மாறாதா? வாசி (வேறுபாடு) அறிந்தே யாம் காசு வழங்குகிறோம்’’ என்று விவரித்தார் அர்ச்சகர்.
குணவதி தடுமாறினாள். ‘‘ஸ்வாமி! அபிஷேகத் துக்குப் பால் கொடுத்தேன். பஞ்ச காலத்தில் பொன் தந்து பாதுகாத்தீர்கள். பாலில் தண்ணீர் கலந்த பாவம் என்னைச் சேராதபடி, வாசியறிந்து காசு வழங்கினீர்கள். பழைய காசு என்று நம்பி, வணிகர் அதிகமான அளவில் பணத்தைக் கொடுத்தார். நல்லவர் அவர்; நஷ்டம் அடையக் கூடாது. இதோ வந்து விடுகிறேன் ஸ்வாமி!’’ என்று அங்கிருந்து ஓடினாள்.
தன் வேலையாட்களைச் சந்தித்து, ‘‘பாலில் தண்ணீர் கலந்தது ஏன்?’’ என்று கோபத்துடன் கேட்டாள்.
வேலைக்காரர்கள் குணவதியின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டு, மோசம் செய்த பொருளையெல்லாம், குணவதியிடம் சமர்ப்பித் தார்கள். அவற்றை அப்படியே கொண்டு போய், வணிகரிடம் தந்தாள் குணவதி. நடந்ததைச் சொல்லி மன்னிப்பும் கேட்டாள். வணிகர் மகிழ்ந்தார்.
அங்கிருந்து ஓடினாள் குணவதி. அர்ச்சகரைக் கண்டு வணங்கி, அனைத்தையும் ஒப்புவித்தாள். அவள் சொன்னதைப் பொறுமையாகக் கேட்ட அர்ச்சகர், ‘‘குணவதி! நீ மாசில்லாத மாணிக்கம். உன் அன்பை யாம் அறிவோம். அதனால்தான் கனவில் வந்து அழைத்தோம். நனவிலும் நம்மை நாடினாய். அர்ச்சகர் வடிவில் வந்து, அன்போடு நீ தந்த பாலை அபிஷேகம் செய்தோம். கனிவோடு பூஜை செய்யும் முறையை, மற்றவர்களுக்குக் காட்டினோம். தெரிகிறதா?’’ என்று சொல்லியபடியே அங்கிருந்த சிவலிங்கத்தில் இரண்டறக் கலந்தார்.
அந்த அருங்காட்சியைக் கண்டாள் குணவதி. கட்டு மீறிய அன்பால் கதறினாள்: ‘‘போதும்… போதும்… பிரபோ! எளியவளான என்னை, உன் சந்நிதியில் சேர்த்துக் கொள்!’’ என்று அலறினாள். அவள் உடல் நிலத்தில் உருண்டது. பக்தி நிறைந்த அவள் ஆன்மா, பரமன் திருவடி நிழலில் கலந்து பிறவிப் பயனை அடைந்தது. வானம் மலர் மழை பெய்தது. ஹரஹர என்னும் ஒலி அந்தரத்தில் எழுந்தது. அன்று முதல் திருப்பாச்சூருக்கு ‘வாசிபுரி’ எனும் பெயர் வாய்த்தது. இங்குள்ள இறைவன்-வாசீஸ்வரர்.
திருப்பாச்சூர் திருத்தலம், திருவள்ளூர்& திருத் தணி நெடுஞ்சாலையில், திருவள்ளூரிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் திருவாலங்காடு சாலை பிரியும் இடத்தில் அமைந்துள்ளது.
– டிசம்பர் 2006