கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 1, 2019
பார்வையிட்டோர்: 12,947 
 

1

‘‘உலக விநோதங்களைப் பற்றி என் தகப்பனார் ஆதிகாலத்திலெல்லாம் பிரமாதமாகச் சொல்லுவார். அப்போது நான் ‘இளங்கன்று பயமறியாது’ என்கிற பழமொழிப்படிக்கு எதையும் உணராதிருந்தேன். ”பட்டால் தெரியும் ப்ரக்ருதிகளுக்கு” என்று என் பாட்டி அடிக்கடி சொல்லுகிற பழமொழியின் உண்மை இப்போதுதான் தெரிகிறது. எந்த வரனைக் கொண்டு வந்தாலும் இப்படி ‘வேண்டாம், வேண்டாம்’ என்றால் வேறு எந்த லோகத்தில்தான் இந்தப் பெண்ணுக்கு வரன் தேட முடியும்? சதா சர்வ காலமும் இதே நினைவாகவே என்னை வாட்டி மெலியச் செய்கிறது. இப்போது வந்துள்ள வரனையாவது நிச்சயம் செய்யப் போகிறாயா இல்லையா?” என்று சுமார் 40 வயதுடைய ஒரு கம்பீரமான புருஷர் தன் மனைவி மங்களம்மாளை நோக்கிக் கேட்டார்.

அந்தம்மாள் கர்நாடகக் கட்டுப்பெட்டியுமில்லை. தற்கால நாகரீகக் சிகரத்தில் நிர்த்தனம் செய்பவளுமில்லை. குலத்திற்கேற்ற முறையில் காலத்திற்கு ஒத்து வாழ்க்கை நடத்தும் அந்தம்மாள் மிக்க வணக்கத்துடன் ”என்னை என்ன பண்ணச் சொல்கிறீர்கள்? நானும் எத்தனை விதத்தில் சொல்லிப் பார்க்கலாமோ, அத்தனையும் சொல்லியாகிவிட்டது. முன்பு என் பாட்டி கல்யாணக் கும்மி ஒன்று பாடுவாள். அதில் வரும் வேடிக்கைகளை இன்று நேரில் பார்க்கிறேன். பெண்ணுக்கென்ன வயதாகவில்லையா? பாப்பாவா? தான் படித்துவிட்ட பெருமையில் கிராமத்துப் பிள்ளைக்கு வாழ்க்கைப்பட மாட்டாளாம், படித்த வனாகவும் பட்டினவாஸத்தில் உத்தியோகம் பார்க்கிற கட்டழகனாகவும் இருக்க வேண்டுமென்று சொல்கிறாள். இந்தக் காலத்து பெண்களுக்கு வெட்கமா? மானமா? எங்க காலத்துப் போன்ற காலமே தேவலையென்று தோன்றுகிறது”.

என்று பேசும் போது ”சார்! கபால்!” என்ற குரலைக் கேட்டதும் மங்களம்மாள் ஓடிப்போய் கவரை வாங்கிக் கொண்டு வரும்போதே சிரித்த முகத்துடன் ”மஞ்சள் தடவியிருப்பதால் விஷயம் பழம் என்று தோன்றுகிறது. இந்தாருங்கள், படியுங்கள்!” என்று கூறியவாறு கொடுத்தாள். உடனே அவர் கவரைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தார்.

”ஸ்ரீமான் ராமநாதன் அவர்களுக்கு, உபய க்ஷேமங்கள். இரண்டு ஜாதகங்களின் பொருத்தமும் பிரமாதமாக இருப்பதாயும் இந்த விவாகம் கண்டிப்பாய் நடந்தே தீரவேண்டும் என்றும் ஜோஸியர் சொன்னார். ஆகையால் எவ்விதமான ஆக்ஷேபமும் இன்றி மேற்கொண்டு நடத்தலாம். புகைப்படத்தைப் பார்த்து எங்கள் பையன் சம்மதப்பட்டுவிட்டான். மற்ற விவரங்களையெல்லாம் உங்களுக்கு ஏற்கெனவே எழுதி விட்டேன். பையனுக்கு பெற்றோரில்லாததால் மாமனாகிய என் பொறுப்பில்தான் இருக்கிறான். விக்ரமபுரம் ஜில்லாவைச் சேர்ந்த புண்டரீகபுரம் என்னும் பெரிய கிராமத் தபாலாபீஸில் அவன் நிரந்தரமான உத்தியோகத்திலிருக்கிறான். சாப்பாட்டுக்குப் பஞ்சமின்றி நிலன் புலன் இருக்கிறது. உங்கள் பெண் சந்தோஷமாயும் மன திருப்தியாயும் வாழ்க்கை நடத்தலாம். அனுபவப்பட்ட பெரிய வனாகையால் இப்படி எழுதியிருக்கிறேன். என்றைக்கு நிச்சயதார்த்தம் செய்வது என்பதைத் தெரிவித்தால் வருகிறோம்…

எங்கள் பையனுக்கு இதுவரையில் வந்த இடம் கணக்கு வழக்கு இல்லை. நல்ல அழகாயும் படித்த பெண்ணாயும் சங்கீதம் தெரிந்தவளாயும் வந்தால்தான் மணக்க முடியும் என்று ஒரே பிடிவாதமாகச் சொல்லிவந்தான். உங்கள் குமாரத்தி சௌபாக்யவதி சித்ராவுக்குச் சகல அம்சங்களும் நிறைந்திருப்பதால் உடனே இசைந்து விட்டான். ஆகையால் தாமதமன்னியில் முடித்துவிடவும்.

உங்கள் பதிலை எதிர்பார்க்கும் சதாசிவம்.

கடிதத்தை உரக்கவே படித்து மங்களமும் கேட்டாள். விஷயம் பழமாக இருப்பினும் இருவருக்கும் முகம் சுருங்கியது. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ”எல்லாம் சரியாகவிருந்தும் கிராமத்துத் தபாலபீஸில் உத்தியோகமாமே… இந்த கிரகசாரத்திற்கு, என்ன செய்வது? எதை நம் சித்ரா வேண்டாம் என்று சொல்லுகிறாளோ அதுவேதானே வந்திருக்கிறது” என்று சற்று குறையுடன் சொன்னாள் மங்களம்.

ராமநாதன்: மங்களம்! இதோ பாரு; இதே மாதிரி குழம்பிக் கொண்டிருந்தால் காரியம் நடத்தவே முடியாது. நமக்கென்ன அவள் ஒரே மகளா! அவள் இஷ்டப்படி தேடி அலைவதற்கு? இன்னும் நாலைந்து பசங்கள் இருப்பது நினைவிருக்கட்டும். ஆகையால் எனக்கொன்று தோன்றுகிறது. அதாவது இந்தப் பையனுக்கு கிராமத்துத் தபாலாபீஸில் உத்தியோகம் என்பதையே நாம் கூற வேண்டாம். வேலையாகவில்லை; வேலைக்கு அலைந்து கொண்டிருக்கிறான்: நானே வேலை செய்து வைத்துவிடுகிறேன்… என்று சொல்லிக் காரியத்தை முடித்து விடுவோம். எல்லாம் பின்னால் சரியாகிப் போய்விடும். ஒரு வாரத்திற்குள் சகலத்தையும் அவசரமாக முடித்து முகூர்த்தமும் வைத்து விடலாம். அப்படிச் செய்தால்தான் நல்லது. மற்ற சகல அம்சங்களிலும் முதல்தரமாயிருக்கிற இடத்தை விடவே கூடாது. இதை எப்படியும் முடித்தே தீரவேண்டும்” என்றார். மங்களமும் இதை ஆமோதித்தாள். உடனே மறு தபாலில் சம்மந்திகளுக்குப் பதில் பறந்தது.

2

கல்யாணம் விமரிசையாக நடந்து தம்பதிகள் ஊருக்குக் கிளம்பினார்கள். சித்ராவுக்குத் தன் கணவரின் அழகைப் பார்த்ததும் அப்படியே மயங்கி விட்டதால் அவளுக்குப் பூர்ண சம்மதம் ஏற்பட்டுவிட்டது. உத்யோகமே ஆகவில்லை என்பது மட்டும் தெரிந்த விஷயமாதலால் ஆக்ஷேபணை இன்றி விவாகமானதும் ஊருக்குச் சென்றாள்.

புண்டரீகபுரிக்கு வந்ததும் அந்த கிராமத்தையும் அதன் மனிதர்களையும் பார்த்த சித்ராவுக்கு மிக்க வெறுப்பாகவே இருந்தது. ஒரு வீட்டு வாசலில் மாட்டு வண்டி வந்து நின்றதும் இறங்கினார்கள். வாசலில் ‘புண்டரீகபுரம் தபாலாபீஸ்’ என்று போர்டு போட்டிருந்ததைப் பார்த்ததும் தபாலாபீஸிலா தன் கணவர் குடியிருக்கிறார் என்று எண்ணியபடி உள்ளே வந்தாள். மாமாவும் மாமாவின் மனைவியும் தம்பதிகளை வரவேற்று உபசரித்துப்பின், ”சித்ரா! உன் வீட்டை இனி நீ ஒப்பித்துக் கொள்ளம்மா… நான் சீக்கிரத்தில் என் ஊருக்குப் போகிறேன்; உன் மாமியார் வெகு நல்ல பெயரெடுத்து ஊரெல்லாம் கொண்டாடும் படி வாழ்க்கை நடத்தினார். அதேபோல் நீயும் நல்ல பெயரெடுத்து நன்றாக மகாராஜியாயிருக்க வேண்டும். இந்த ஊர் மிகவும் ஆரோக்கியமானது; நல்ல காற்று, நல்ல மனிதர்கள்;’’ என்று அடுக்கிக் கொண்டே போவதைக் கேட்ட சித்ராவுக்கு முகம் சுருங்கியது. ”இந்தப் பட்டிக்காட்டில் எனக்கென்ன வேலை? எங்கப்பாவே உத்யோகம் பண்ணி வைத்துவிடப் போகிறார்; நான் ஜம்மென்று பட்டினவாஸத்துக் கடற்கரையின் ஜிலுஜிலுப்பான காற்று வாங்கிக் கொண்டு, சினிமா ட்ராமா… சங்கீதக் கச்சேரிகள் முதலிய பலவித கேளிக்கைகளை அனுபவிக்கப் போகிறேன். என்னிடம் எதற்காக இந்தப் பட்டிக்காட்டு விமர்சனம் செய்ய வேண்டும்?” என்று தனக்குள்ளேயே எண்ணினாளேயன்றி வெளியில் சொல்லாது மரியாதையாக நின்றாள்.

நேரம் செல்லச் செல்ல, சித்ராவின் சந்தேகம் அதிகரித்தது. தன் கணவனே வாசல்புறத்திலுள்ள தனியறையில் வேலை செய்வதும், தபால் கட்டுகள் வருவதும்…

”சாமி… கவுரு குடுங்க… கார்டு குடுங்க… தபால்தலே குடுங்க… சாமி!.. எனக்கு தபால் வந்திருக்குதுங்களா, ரவெ பாருங்க… மணியார்டர் செய்யணும். ரவெ பாரம் எழுதுங்க சாமி… எனக்கு மணியார்டர் வந்திருக்கிறதா பாருங்க… ரிஜிஸ்தர் பார்சல் இந்தாங்க சார்!.. சாமி! ரிஜிஸ்தர் கவரு ஒண்ணு எடுங்க” என்று பலபேர் பலவிதமாகப் பேசிக் கேட்பதும் அதற்கெல்லாம் அவன் பதில் சொல்வதும் தபால்காரர்களுக்குக் கட்டுகள் பிரித்துக் கொடுத்து சுற்றுப்புறத்து கிராமங்களுக்கு அனுப்புவதும் பார்த்துச் சந்தேகம் பின்னும் வலுத்தது. ஒருகால் தனக்கு உத்யோகம் ஆகும் வரையில் இதை யாருக்காவது ஒத்தாசையாகச் செய்கிறாரோ என்னவோ…! என்று கூட நினைத்தாள்.

தனக்குப் புதிய ஊர்; புதிய மனிதர்கள்; ஆகையால் ஒன்றும் கேட்கமுடியாது போயிற்று. சாவதானமாக அன்றிரவு தன் கணவனின் மூலமே அவன் கிராமத் தபாலாபீஸ் போஸ்ட்மாஸ்டர் என்பதை அறிந்ததும் சித்ராவுக்குக் கோபமாக வருகிறது. அழுகை நெஞ்சையடைத்ததுக் கொண்டு போகிறது. பொய் சொல்லி இப்படி ஏமாற்றியதற்காக ஆத்திரம் பீறிக் கொண்டுவந்து வெகுவாய் முறைத்துக் கொண்டாள். ”இந்தப் பட்டிக்காட்டு வாழ்க்கையை நான் விரும்பவே மாட்டேன். கட்டாயம் இதை ராஜினாமா செய்துவிட்டுப் பட்டணத்தில் எங்கப்பா வேலை செய்து வைப்பதைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். எல்லோரும் சேர்ந்து என்னை இப்படி மோசம் செய்ததை நான் சகிக்கவே முடியாது.” என்று பிரமாதமாகக் கோபித்துக் கொண்டாள். கணவன் சிரித்தவாறு மவுனமே சாதித்தான். அந்த மவுனப் பார்வையிலும் அன்பு ததும்பிப் பொங்கியது.

3

இடையில் எப்படியோ ஒரு வாரகாலம் ஓடி மறைந்தது. மாமாவும் மாமியும் சித்ராவுக்குப் புத்திமதிகள் சொல்லிவிட்டுத் தம் ஊருக்குப் போய்விட்டார்கள். அதுவரையில் பெரியவர்கள் இருக்கிறார்களே என்ற மரியாதையுடன் பேசாமலிருந்தாள். அவர்கள் சென்ற உடனே தடதடவென்று ஒரு நீண்ட கடிதத்தைத் தன் பெற்றோருக்கு எழுதிவிட்டு, கிண்டலாயும், இளப்பமாயும் ”சார்! ஒரு போஸ்ட்டு கவர் வேணும்” என்று முறைத்தவாறு நின்றாள்.

உத்தமனுக்கு மனைவியின் மீதுள்ள அடங்கா ப்ரேமையினால் எதையும் எதிர்த்துப் பதில் பேசிக் கோபிக்காமல் அவள் போகிற வழியே விட்டுப்பிடிக்க எண்ணி, சிரித்தபடியே, ”தேவி! சாதாரண கவர் வேணுமா? தலை ஒட்டிய கவர் வேண்டுமா? ரிஜிஸ்தர் கவர் வேண்டுமா? சமூகத்திற்கு எது தேவையோ?… என்று கூறியபடியே மூன்று தினுசுக் கவர்களையும் நீட்டினான்.

சித்ரா கோபத்துடன் தலை ஒட்டிய கவரை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு, அதில் தான் எழுதிய கடிதத்தை வைத்து ஒட்டி விலாஸம் எழுதி எடுத்துக் கொண்டுவந்து… ”போஸ்ட்டுமாஸ்டர் அவர்களே! தயவு செய்து இதை அனுப்பிவிடுங்கள்..” என்று பரிகாஸமாகக் கூறி, மேஜைமீது வைத்துவிட்டு விர்ரென்று சென்றாள். உத்தமன் கடகடவென்று சிரித்துக் கொண்டே ‘சித்தம் தேவீ!’ என்றான்.

சித்திராவின் முகத்தில் சிரிப்பு என்பதே மறைந்து, வெறுப்பும் கோபத்தின் படபடப்பும் தாண்டவமாடின. தனக்கு ஏதோ போதாக்காலத்தின் பொருட்டுதான் இப்படி ஒரு பட்டிக்காட்டில் வேண்டுமென்று தள்ளி தன் பெற்றோர் வேடிக்கை பார்ப்பதாக அவள் குமுறினாளேயன்றி தான் புதிய வாழ்க்கை ஆரம்பித்திருப்பதையும், தன்னிடம் தன் கணவன் நிகரற்ற இன்பத்தை… ப்ரேமையின் நிதியை எதிர்பார்க்கிறான் என்பதையும் அறவே மறந்தாள். சிடுசிடுப்பும், வெறித்த பார்வையும், கரம்பேறிய குரலும் உத்தமனுக்கு முதலில் சற்று கோபந்தான் வந்தது. எனினும் அதையடக்கிக் கொண்டு சிறுமியை விட்டுத்தான் பிடிக்க வேண்டும்; ஒரேயடியாய் இருவரும் முரண்டிக் கொண்டால் எலியும் பூனையும் போலத்தான் வாழ்க்கை கடைசிவரையில் ஆகிவிடும் என்று முன் யோசனையுடன் பேசாது சாந்தமாகவே சிரித்துக் கொண்டு தன் வேலையை நடத்தி வந்தான்.

பெரிய உத்யோகஸ்தன் மனைவியாக வாழ்க்கையை அப்படி நடத்த வேண்டும், இப்படி நடத்த வேண்டும் என்று மனக்கோட்டை கட்டியதெல்லாம் இடிந்துபோய் தான் ஒரு பட்டிக்காட்டின் போஸ்ட் மாஸ்டர் மனைவியா! கிராமத் தபாலாபீஸில் உத்யோகஸ்தரின் மனைவியா?… என்று எண்ணி எண்ணி அழவும் தொடங்கிவிட்டாள். இன்னும் இரண்டு மூன்று தினங்கள் சென்று மறைந்தன.

சித்திராவின் விலாஸத்திற்கு வந்த தபால்கவரை உத்தமனே வெகு குஷியுடன் கொண்டுவந்து, ”அம்மா! போஸ்ட்டு… சித்திரா தேவிக்குத் தபால்!” என்று கூறியவாறு கவரை நீட்டினான்.

சித்திராவின் கோபம் உச்சத்தைடைந்தது. பல்லைக்கடித்தவாறு… ”இந்த அழகான உத்யோகத்திற்கு ஒத்திகை வேறு செய்து பார்க்க வேண்டுமாக்கும். ஆயுசுக்கும் இந்த நாடகம் நடிக்கத்தான் வரம் வாங்கியாகி விட்டதே, விளையாட்டு வேறேயா?” என்று கூறியபடியே அவன் கையிலிருந்து கவரை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு தன்னறைக்குச் சென்று படிக்க ஆரம்பித்தாள்.

”கண்மணி சித்ராவுக்கு சர்வ மங்களமும் உண்டாகட்டும். உபயக்ஷேமம்.

வெகுவெகு ஆத்திரத்துடன் நீ எழுதிய கடிதம் கிடைத்தது. நாங்கள் அதிகம் எழுத விரும்பவில்லை. எங்களைப் போன்று நீயும் அரைடஜன் மக்களுக்குத் தாயாகியப் பிறகு உனக்கு அந்த உணர்ச்சி தெரியவரும். மக்களை எப்படியெல்லாம் வளர்க்க முடியும் என்பதை உணர்வாய். இதைவிட உயர்ந்த இடம் உனக்குக் கிடைக்கவே கிடைக்காது. உன் கணவன் உட்கார்ந்த இடத்திலேயே தண்டச் சோறு தின்னும் தடிராமனல்ல. உட்கார்ந் த இடத்திலேயே அதிகாரத்துடன் கவுரவமாக உத்யோகம் செய்யும் பெருமை படைத்தவரேயாகும். பட்டணத்தில் இத்தகைய கம்பீரமான உத்யோகம் இருந்தவிடத்தில் கிடைப்பதரிது. எந்த வேலை கிடைத்தாலும் பஸ்ஸிலும், ட்ராமிலும், கால்நடையாகவும் அலைந்து திரிந்து ஓடி ஆடி இளைத்துச் சளைத்து…’’

இதற்குமேல் படிப்பதற்கு அவளால் முடியவில்லை. கடிதத்தை ஆக்ரோஷத்துடன் ‘டர்ர்ர்’ என்று கழித்து எறிந்தாள். எல்லோரும் சேர்ந்து பொய்யைச் சொல்லி என்னைக் கட்டி வைத்ததுமின்றி கடிதத்தில் வர்ணனை வேறு வேண்டிக் கிடக்கிறது!”… என்று முணுமுணுத்துக் கொண்டே படுத்து விட்டாள்.

பின்னும் சில தினங்கள் இதே நிலைமையில் ஸாரமற்ற சப்பிட்ட வாழ்க்கையுடன் காலச்சக்கரம் உருண்டது. ஒரு நாள் ”சித்ரா!.. உன் கோபம், தாபம் ஒருபுறமிருக்கட்டும். இன்று தபால் இன்ஸ்பெக்டர் பார்வையிட வரப்போகிறார். அவருக்கு டிபன் காபி தயார் செய்து வை” என்று உத்தமன் சாப்பிடும்போதே சொன்னான்.

சித்திராவின் ஆத்திரத்தில் முதலில் ஒன்றுமே செய்ய வேண்டாம் என்றுகூடத் தோன்றியது. பிறகு ஏதோ ஒரு குணமடைந்து, உப்பு, தித்திப்பு இரண்டு வகைப் பலகாரங்களைத் தயார் செய்து காத்திருந்தாள். சரியாக 12 மணிக்கு படைபடைக்கும் வெயிலில் வேர்க்க விறுவிறுக்க, பாவம்! 45 வயதான ஒருவர், ”உஸ்ஸு!… அப்பாடா…’’ என்று சங்கீதத்துடன் வந்து உட்கார்ந்தார்.

வந்தவர் சும்மாயிருக்கக் கூடாதா? ”சீச்சீ..! இதென்ன பிழைப்பு? என்ன உத்யோகம் சார்? காலை ஏழு மணிக்குக் கிளம்பினவன், நாய் மாதிரி வெயிலில் அலைந்து சாகிறேன். ஒரு கிராமத்திற்கு ஒரு கிராமம் கிட்டவா இருக்கிறது? இந்த வெயிலில் போய் உத்யோகம் பார்ப்பதைவிட எங்காவது மாடுமேய்த்து வயிறு வளர்க்கலாம். என்ன பெருமைப்பட்டமும் உத்யோகமும் வேண்டியிருக்கிறது? நீங்கள் புண்ணியம் செய்த மகாராஜர்; உட்கார்ந்த இடத்திலேயே ராஜதர்பார் நடத்துகிறீர்கள். எனக்கு உங்களைப் பார்த்தால் பொறாமையாகவே இருக்கிறது” என்று பேசுவதைக் கேட்ட உத்தமனுக்கு உள்ளுக்குள் பூரித்தது. ”இதைச் சித்ரா கேட்கிறாளோ இல்லையோ… அவள் காதில் விழுந்தாள் தேவலையே” என்று நினைத்தான்.

சித்ராவுக்குள்ள ஆத்திரத்தில் அவள் டிபன், காப்பியை எடுத்துக் கொண்டு கதவுக்கடுத்த கூடத்தில் பலகை மீது வைக்கும்போது இந்த இன்ஸ்பெக்டரின் வார்த்தைகள் காதில் பட்டதும் ஒரு க்ஷணம் அப்படியே நின்றாள். தன் பிதாவின் கடிதத்தைப் படிக்கையில் வந்த ஆத்திரமே இப்போதும் அவள் உள்ளத்தில் உண்டாகியது. ”பொழுது போக்கத்தவன் காரியத்தைப் பார்த்துக் கொண்டு போகாமல் இந்த விமர்சனத்தை யார் கேட்டார்கள்?” என்று ஒரு முறைப்புத்தான் முறைத்தாள். மனம் மாறவில்லை.

அதே சமயம் வெகு குதூகலத்துடன் சிரித்துக் கொண்டே உத்தமன் கதவைத் திறந்து கொண்டு வந்தான். டிபனும், காப்பியும் தயாராயிருப்பதைக் கண்டு… ”ஓ!… கொண்டு வந்து தயாராய் வைத்திருக்கிறாயா?… என்று கூறியவாறு தட்டுடன் கொண்டுபோய் இன்ஸ்பெக்டருக்குக் கொடுத்தான். தன் உத்தியோகத்திலுள்ள பலவித கஷ்டங்களையும், சில தபாலாபீஸ்களில் நடக்கும் ஊழல்களையும், பலகாரத்திற்குத் தொட்டுக் கொள்ளும் உப பலகாரங்களைப்போல் எண்ணி அவர் சாப்பிட்டவாறே பேசித் தள்ளினார். ஆனால் சித்ராதான் அங்கில்லையே; எழுந்து போய்விட்டாள் என்பது உத்தமனுக்குத் தெரியுமே. அதனால் அவன் ப்ரத்யேகமான உணர்ச்சி ஏதும் கொள்ளவில்லை. காரியம் மட்டும் நடந்து வந்தது.

4

பின்னும் சில தினங்களாயின. ஜில்லா போஸ்டாபீஸில் மீட்டிங்கு அடிக்கடி நடக்கும். சில சமயம் கிராமத்து போஸ்ட்மாஸ்டர்கள் செல்ல வேண்டியது கடமை. அது போல் அன்று உத்தமன் விக்கிரமஸிங்கபுரத்திற்குப் போக வேண்டும். சித்ராவிடம் சொல்லிவிட்டு நன்றாக உடையணிந்து கொண்டு கிளம்பினான்.

”இந்த அழகான குப்பைக்காட்டு உத்யோகஸ்தருக்கு மீட்டிங்கு வேறையா?’’ என்று ஏளனமாகக் கூறி பரிகஸித்தாள். அதையும் அவன் பொருட்படுத்தவில்லை. போய் விட்டான். சித்ரா வீதிக் கதவை தாளிட்டுக் கொண்டு வந்து உட்கார்ந்தாள். சற்று நேரத்திற்கெல்லாம் யாரோ கதவைத் தடதடவென்று இடித்தார்கள். சிடுசிடுத்தவாறு எழுந்து கதவைத் திறந்தாள்.

”சாமி! தபால் தலை ஓணுங்க… கார்டு ஒணுங்க…’’ என்று சிலர் கேட்டார்கள். அதைக் கண்டாலே சித்ராவுக்கு எரிச்சலாக வந்தது. ”ஐயாவும் இல்லே, அம்மாவும் இல்லே சாயங்காலம்தான் வருவார்; போங்கள்” என்று கடுமையான த்வனியில் கூறினாள்.

சிலர் கார்டுகள் எழுதிக் கொண்டு வந்ததை தபால் பெட்டியில் போடுவார்கள். சிலர் நேரேயே கொடுத்து விட்டுப் போவார்கள். வழக்கம். அதேபோல் ஒருவர் பின்னால் ஒருவர் வந்து கார்டுகளைக் காட்டி, ”யம்மா… இது அவசரமாகப் போகணும். ஐயா வந்ததும் அனுப்பிடச் சொல்லுங்கோ” என்று கூறி மேஜை மீது வைத்து விட்டுச் சென்றார்கள். சில சிறுவர் சிறுமியர்கள் கார்டுகளைக் கொண்டு வந்து ”தபால்காரய்யா இல்லீங்களா?” எங்கப்பா குடுக்கச் சொன்னாங்க… அம்மா குடுக்கச் சொன்னாங்க…” என்று கூறி மேஜைமீது போட்டுவிட்டுச் சென்றார்கள். முகத்தைச் சுளித்தவாறே விழித்துப் பார்த்தாள். கதவை தாளிட்டுவிட்டுக் கொண்டு வரும்போது மேஜை மீது கிடந்த கடிதங்களில் ஒன்று இவள் கண்ணில் பட்டது. தாறுமாறுமான எழுத்து இவள் கவனத்தைக் கவர்ந்ததும் அதைச் சற்று பொறுமையுடன் நின்று பார்த்தாள். பட்டிக்காட்டான் ஏதோ அரைகுறையாய்த் தெரிந்த எழுத்தைக் கொண்டு எழுதியதென்பது எழுத்தின் உருவத்தையும் உச்சரிப்பையும் பார்க்கும் போதே தெரிந்ததால் அதைப் படிக்கவாரம்பித்தாள்.

”நமஷ்காறம். தேவரீராகிய ஐயா, மவாராஜராஜ ச்ரீ… எஜமானராகிய எசமானுக்கு யானாகிய அண்ணாஷாமி தெரிவிப்பது யாதென்றால் நான் போனேன்… கேட்டேன்… அவராகிய மேஷ்திரி ஷொன்னார். என்ன வெண்றால்… செங்கள் சூளைபோட்டுக் குடுக்கிறேன்; உன் எசமானாகிய ஐயாவுக்கு சொல்ரது இன்னு சொன்னார். ஏரிகரெ கயிணி நேத்து வெரப்பாடு சேஞ்சாச்சு…

இப்படிக்கு

யானாகிய ஊழியன்

அண்ணாஷாமி கையொப்பம்

இதைப் படித்த சித்ராவுக்கு அவளையறியாத சிரிப்பு வந்ததோடு இம்மாதிரி கடிதங்களைக் கண்டதேயில்லையாதலால் வியப்பாகவும் தோன்றியது. அதோடு, மற்றோடு கடிதத்தையும் படிக்க ஆசை தூண்டியதால் உடனே மற்றொரு கார்டை எடுத்துப் படிக்கவாரம்பித்தாள்.

17-10 -.. ”அண்ணாத்தேக்கி… நமஷ்காரம்… இப்பவும், மினியம்மா சொன்னா… இன்னா சொண்ணா என்றால், பெரியப்பாவுக்கு… நமஷ்காரம்னா… சொல்லச் சொன்னா… மினியம்மாவுக்கு… நாலுமாசம் ஆவுதுன்னு… அக்காவாகிய கங்கம்மா எயுதச் சொல்லித்து; இன்னும் என்ன எயுதச்சொன்னா என்ன, செலவுக்கு கொஞ்சம் ரூபா அனுப்பச் சொன்னா… அங்கே… திரு.ஸெற… கன்னியம்மாளெ பாக்கணுமுன்னு சொல்லச் சொன்னா…

இப்படிக்கு

வெங்காயம்மா

இதையும் படித்த பிறகு வியப்பு கரைகடந்தது. உலகத்தின் விரிவுகளிலுள்ள விசித்திர வாழ்க்கையின் சாயலும் ஒரு துளி தெரிந்தது. படிக்காத மக்களின் கடிதங்களிலுள்ள இத்தனை வேடிக்கையும், சிரிப்பு இதயத்தில் ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கியதால் அங்கு வந்துள்ள எல்லா கடிதங்களையும் படிக்க வேண்டும் என்கிற ஒரு ஆவல் உண்டாகியது. அப்படிப் படிப்பது சரியா? தப்பா? என்கிற எண்ணத்தை அவள் நினைக்கவே இல்லை. மற்றொன்றை எடுத்துப் படிக்க வாரம்பித்தாள்.

”ஸௌபாக்யவதி மங்களத்திற்கு சர்வ மங்களமும் உண்டாவதாக.

உபயக்ஷேமம், நானும் உன்னைப் போல் ஒரு பெண்தான். உன் வயதில் நான் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி உன் பாட்டியிடமும் உன் அப்பாவிடமும் படாத பாடுதான் பட்டேன். புக்ககத்தில் நீ சமத்தாயும் பொறுமையாவும்தான் இருக்க வேண்டும்; சதா நீ தொந்தரவு செய்து கெட்ட பெயர் வாங்காதே. மாமியாரைத் தாயாராக நினைத்துக் கொண்டு நடந்ததால் உன்னிடம் அவர்களுக்கு ஆசை இல்லாது போகாது. நீ இப்படி அடுத்த வீட்டுக்காரப் பெண்ணின் உதவியால் எனக்குக் கடிதம் எழுதியது மகா தவறு. அதை நான் ஒப்புக் கொள்ளவே மாட்டேன். இனி இம்மாதிரி அசட்டுக்காரியம் செய்யாதே. எல்லோரிடமும் நல்ல மதிப்பும் அன்பும் பெறுவதற்கு முதலில் நீ அன்பைச் சொரிய வேண்டும். அன்பினால்தான் அன்பைப் பெறலாம். கிராமத்துப் பள்ளிக்கூட வாத்தியாராகிய உங்கப்பாவுக்கு நீ வீண் கவலையையும் வீணான செலவையும் வைக்காதே. உன்னை காரணமில்லாது அழைத்து வரமாட்டேன். சமத்தாக இரு; இனி கடிதமே எழுதாதே. பெண்களுக்கு கணவன் வீடுதான் சாச்வதமான இடம். அந்த இடத்தில் நன்மதிப்புப் பெறாத எவரும் வேறு எந்த இடத்திலும் சரியானபடி மதிப்பு பெற முடியாது என்பதை நினைவில் வைத்து உன் கடமையை வழுவாது செய்துவா. நானும் அப்பாவும் அடுத்த மாதம் வருகிறோம்.

உன் தாயார் லக்ஷ்மி

பெற்ற தாயாரின் அருமையான புத்திமதி நிறைந்த கடிதம் சித்ராவின் கவனத்தைக் கவர்ந்தது. நான் முன்பு எழுதிய கடிதத்தைக் கூட, தன் தாயார் இப்படித்தான் எண்ணி இருப்பாளா என்கிற எண்ணம் ஒரு மின்வெட்டுப்போல் தோன்றியது. ஒரு க்ஷணம் ஒன்றும் தோன்றாது அப்படியே திகைத்ததுபோல் வானவெளியை நோக்கினாள். பிறகு அக்கடிதத்தை மேஜைமீது வைத்தாள். மற்றொரு கடிதம் தானாகக் கையில் ஏறிக் கண்களை உறுத்தியது.

‘‘சிரஞ்சீவி ராகவனுக்கு, உபயக்ஷேமம்.

பட்டணவாஸத்தின் புதிய மோகத்தில் நீ ஏதேதோ முறையில் நடப்பதாகக் கண்ணன் எழுதியிருக்கிறான். அனாவச்யமாகக் கெட்ட மார்க்கத்தில் ப்ரவேசிக்காதே. இளமையில் உண்டாகும் பழக்க வழக்கங்கள்தான் நன்மையானாலும் தீமையானாலும் பதிந்துவிடும். வீண் ஆடம்பர வாழ்க்கை வாழாதே. மைனர்போல் துள்ளாதே. நீ பெரிய பணக்காரனில்லை. உன் தகப்பனார் வைத்துவிட்டுப் போயிருக்கும் சொத்து உன் ஒருவன் வயிறு வளர்க்கக் கூடப் போதாது என்பது நினைவிருக்கட்டும். பிறகு என் மீது குறை கூறவேண்டாம். அதிகப்ரஸங்கியாய் ஆடினால் உன் பொறுப்பையே நான் இழக்க நேரிடும்.

உன் மாமன் சங்கரன்’’.

”அன்புமிக்க பாதங்களுக்கு வந்தனம்.

உபயக்ஷேமங்கள். உங்கள் கடிதம் கண்டு நான் மிக்க வருத்தப்படுகிறேன். இந்நிலையில் நான் ப்ரஸவமாகி அங்கு வருவதற்கும் இன்னும் மூன்று மாதகாலத்தை எப்படிக் கடத்துவது என்று வேதனையாயிருக்கிறது. எப்படியோ கஷ்டப்பட்டுக் கொண்டு அங்கேயே நான் இருந்துவிடுவதாகச் சொன்னேன். நீங்கள்தான் கேட்காது அனுப்பி விட்டீர்கள். பாழும் பட்டினத்தில் ரேஷன் தேவதையின் ஆட்சியில் ஹோட்டலில் அளந்துபோடும் சாப்பாடு போதாமல் தின்றுவிட்டு, லொங்கு லொங்கு என்று நடந்து ஓடி, பஸ்ஸில் ஏறுவதற்குக் குஸ்தி போட்டுக் கொண்டும், ட்ராமில் ஏறுவதற்கு சர்க்கஸ் செய்து கொண்டும் ஓடிச்சென்று, உழைத்துவிட்டு மீண்டும் இதே குஸ்தியுடன் வீட்டிற்கு வருவதால்தான் உங்களுக்கு இப்படி உடம்பு கெட்டுப் போகிறது என்று எனக்குத் தோன்றுகிறது. எங்காவது ஒரு கிராமத்தில் ஏதாவதொரு வேலை செய்துகொண்டு நிழலோடு இருந்தால் உடம்புக்கு ஒன்றுமே வராது. சுவர் நன்றாக இருந்தால்தானே சித்திரமெழுத முடியும்? இந்த ஊர் பள்ளிக் கூடத்தில் வாத்தியார் வேலை காலியிருப்பதாக கேள்விப்படுகிறேன். அந்த வேலையை விட்டுவிட்டு இதற்கு வந்துவிட்டால் போதும். உடம்பை ஜாக்ரதையாகப் பார்த்துக் கொள்ளவும். அடிக்கடிக் கடிதமெழுதவும்.

இங்ஙனம் தங்களடிமை

கோமதி’’

இத்தனை கடிதங்களைப் படித்த சித்ராவுக்கு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வியப்பை உண்டாக்கி உலகானுபவத்தின் சிறுசிறு திவலைகளை உணரச் செய்தது. ஆனால் இக்கடிதத்தைப் படித்ததும் அவளுடைய இதயத்தில் ஒர் மகத்தான அதிர்ச்சியை… பெரும்புயலைக் கிளப்பிவிட்டது. பட்டணவாஸத்தில் வேலையிலிருக்கும் கணவனைப் பட்டிக்காட்டிற்கு வரும்படி… அதிலும் ஒரு கிராமத்துப் பள்ளிக்கூட வாத்தியார் வேலைக்கு வரும்படிக்குப் பரிந்து எழுதியிருப்பதை… சித்ரா படிக்கப் படிக்க வியப்பும் திகைப்பும் கூறத்தரமே இல்லாது பொங்கியது.

”என் கணவன் பட்டிக்காட்டு வேலையிலிருப்பதை வெறுத்துக் கோபித்து வாழ்க்கையே கசந்த நிலையில் நான் தவிக்கையில் என்னைப் போன்ற ஒரு பெண் இப்படி எழுதியிருக்கிறாளா… என்ன உலக விசித்ரம்! ஒரே காரியம் ஒருவருக்கு இன்பமாகவும் ஒருவருக்கு துன்பமாயும் தோன்றுகிறதே” என்று அதே நினைவுடன் சற்று யோசனையுடன் இருந்தாள். மற்றொரு கடிதம் கவனத்தை இழுத்தது.

”சம்மந்தியவர்களுக்கு, உபயக்ஷேமங்கள்.

என் மகன் ஒரே பிடிவாதமாயிருக்கிறான். அவன் கேட்டதுபோல் ஆயிரம் ரூபாயுடன் உங்கள் மகளையும் குழந்தையையும் அனுப்பினால் அழைத்துக் கொள்கிறோம். இல்லாவிட்டால் எங்கள் மீது குறை சொல்ல வேண்டாம்.

இங்ஙனம் கோவிந்தன்.’’

”சுந்தரிக்கு ஆசீர்வாதம்.

‘‘கிராமத்தில் வந்திருக்க முடியாது” என்று நீ அத்தனை துணிச்சலுடன் எழுதியபிறகு உன்னிஷ்டப்படியே நீ பட்டணவாஸத்திலேயே சுகமாயிருக்கலாம். இனி உன்னை வாவென்று அழைக்க யாரும் தயாராக இல்லை. இனிமேல் கடிதம் என்னிடமிருந்து வரும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

இங்ஙனம்

கோபு’’.

5

இக்கடிதத்தைப் படித்ததும் சித்திராவுக்கு ஏதோ வேதனை செய்தது; ”இதென்ன இறுதிக் கடிதம்; இவன் இப்படி முரண்டிக் கொண்டு எழுதியிருப்பதைப் பார்த்தால் பயமாக இருக்கிறதே! ஒரு பெண்ணின் வாழ்க்கையே பாழாகிவிடும் போலல்லவா இருக்கிறது? ஐயோ! இதென்ன வாழ்க்கை பாவம்!” என்ற யோசனையிலே லயித்தது அவள் மனது.

வெளியே சென்ற உத்தமன், வேலை சடுதியில் முடிந்து விட்டதால் உடனே திரும்பிவிட்டான். மண்டை வெடிக்கும் வெய்யிலின் கொதிப்பும், அதில் வந்த அலுப்பும், களைப்பும் ஒன்றுகூடி அவன் முகமெல்லாம் வியர்வை வெள்ளம்போல் உஸ்ஸென்று பெருமூச்சுடன் வீட்டிற்கு வந்தான். சித்ரா தூங்குகிறாளோ என்னவோ என்கிற எண்ணத்துடன் வாசல் பக்கத்து ஜன்னலால் பார்த்தான். அவள் திடீர் மாறுதலுடன் தன் ஆபீஸ் அறையில் உட்கார்ந்து கடிதங்களைப் படிப்பதைப் பார்த்ததும் தன் கண்களையே அவன் நம்பவில்லை. உண்மையில் சித்ராவா… என்று பிரமிப்புடன் சந்தடி செய்யாமல் பார்த்தான். தான் வீதியில் நின்று இப்படி எட்டிப் பார்ப்பதை பிறர் கவனித்தால் ஏதாவது நினைக்கப் போகிறார்களே என்கிற யோசனையினால் மெல்லக் கதவைத் தட்டி ”சித்ரா! சித்ரா” என்று இனிமையான குரலில் அன்பொழுக அழைத்தான்.

கடிதம் படிக்கும் ஸ்வாரஸ்யத்தில் மெய்மறந்திருந்த சித்ரா இக்குரலைக் கேட்டதும் திடுக்கிட்டாள். தான் இக்கடிதங்களைப் படித்தது குற்றமென்று எங்கே நினைத்துக் கோபிப்பானோ என்கிற பயத்துடன், படித்த ஜோடு தெரியாமல் அவைகளை வைத்துவிட்டு வந்து கதவைத் திறந்தாள்.

வெயிலில் வந்த களைப்பு முகத்தில் நன்றாகத் தெரிவதையும் வியர்வை கொட்டுவதையும் கண்ட சித்ராவுக்கு இத்தனை நாட்கள் இருந்த உணர்ச்சியை விட இன்று ஏதோ ஒரு விதமான புதியமுறையில் இதயத்தைத் தாக்கியது. ”அப்பா! வெயிலில் மண்டை வெடிக்கிறதே… குடைகூடக் கொண்டு போகவில்லையா?” என்று பரிவுடன் கேட்பதை அறிந்த உத்தமனின் உள்ளம் மகிழ்ந்து வியப்புற்றது.

ஆனால் அதை மேலுக்குக் காட்டிக் கொள்ளாமல் ”நாட்டுப்புறந்தானே சித்ரா! இந்த அநாகரீக மனுஷ்யனுக்கு குடைவேறு, சாமரம் வேறா?” என்று கண்களைச் சிமிட்டியபடியே கூறினான்.

தனக்காகவே பரிகாஸமாகவும், குத்தலாகவும் கூறும் வார்த்தைதான் இது என்பதையறிந்து சற்று வெட்கமும் துக்கமும் கூட பாதித்தன. கைகால்களைச் சுத்தி செய்து கொள்ள குளிர்ந்த ஜலத்தை அன்று தானே கொண்டுவந்து கொடுத்தாள். இந்தப் புதிய மாறுதலுக்குக் காரணம் ஏதோ தெரியவில்லையே… என்று யோசித்தவாறு களைப்புத்தீர கைகால்களை அலம்பிக் கொண்டு ஈஸிச்சேரில் ‘அப்பாடா…’ என்று ஆயாஸத்துடன் சாய்ந்தான்.

இதற்குள் சித்ரா காப்பியும், டிபனும் கொண்டு வந்துவிட்டு வழக்கம் போல் தன் முகத்தைத் தூக்கியபடியே உட்கார்ந்தாள். இவன் சாப்பிடுவதற்குள் ”சாமீ! தபால் தலை ஓணுங்க…” என்கிற தினசரி சம்பிரதாயப்படி கேட்க வந்தார்கள். சிலர் தபால்களை எழுதிக் கொண்டு வந்து தபால்தலை கேட்டார்கள்.

அவசரமாக சாப்பிட்டுவிட்டு உத்தமன் எழுந்து வந்தான். அங்குக் கூடியிருப்பவர்களில் ஒரு கிழவன்… ”இன்ன சாமீ! மத்யானம் ஒரு தபா வந்தேனுங்க, அம்மா சிள்ளுபுள்ளுன்னு சீறி வியுந்தாங்க. ஓடியே பூட்டேன். இன்னிக்கு அவசரமா ஒரு காயிதம் எயுதணுங்க. தபால்கார ஐயாவே கூட காணங்க சாமி! தயவு செய்யணும்” என்றான்.

தினம் இம்மாதிரி எத்தனையோ கிராமவாஸிகள் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் வந்து தினந்தோறும் எழுதி வாங்கிச் செல்வது வழக்கந்தான்; ஆனால், சித்ரா இத்தனை நாள் வரையில் தன் விடுதியைவிட்டு வந்து இவைகளைப் பார்த்திருந்தால்தானே தெரியும். இவைகளைவிடக் கேவலமான வாழ்க்கை என்றும் நாட்டுப் புறத்து விஷயம் கசப்பானது என்றும் எண்ணி இருந்ததால்தான் இதைப்பற்றி எதுவுமே தெரியாதிருந்தது.

இன்றுதான் அவள் இங்கு உட்கார்ந்திருப்பதால் இதுவும் வியப்பாகவே தோன்றியது. உத்தமன் வெகு சாந்தத்துடனும் சிரித்த முகத்துடனும்… ”கிழவா! இதோ எழுதித் தருகிறேன். சற்று இரு; அவசரமாகக் கேட்பவர்களுக்குக் கொடுத்துவிட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு தபால்கார்டுகள், தலைகள், கவர்கள், மணியார்டர் பாரங்கள் யார் யாருக்கு எதுவேண்டுமோ அவைகளைக் கொடுத்துவிட்டுக் கிழவனிடம் வந்து… ”உம்… சொல்லு. கார்டா? கவரா? எது எழுதவேணும்?” என்றான்.

கிழவன், ஏதாச்சும் எழுதுங்க சாமி! நம்ம ராசாப்பயல் மில்டேரிலே இருக்கரான் பாருங்க. அவனுக்குத்தானுங்க எழுதணும்.

உத்தமன்: சரி! கார்டு போதும்! என்ன விஷயம் சொல்லிவிடு.

கிழவன்: அதானுங்க… ராசாப்பயலுக்கு யானாகிய…

உத்தமன்: அடேடே… அதெல்லாம் கிடக்கட்டும். நீயாகிய கிழவன் சொல்வதை நானாகிய குமரன் எழுதிவிடுவேன். நீ என்ன எழுத நினைத்தாயோ, அந்த விஷயத்தைச் சொல்லப்பா.

கிழவன்: அதுங்களா – கீழ்க்கோடித் தெரு ஐயுருக்கு 50 ரூபா கடன் குடுக்கணுமில்லே – அதெ அவரு சும்மா கேக்கராரு. அடே ராசாப்பயலே! ஒன்னெ மில்டெரிக்கு அனுப்பறதுக்குத்தானேடா கடன் வாங்கியாந்தேன். இத்தினீ மாசமா சம்பளத்துலே காலணாகூட ஒங்கப்பன் ஆத்தாளுக்கு அனுப்பிச்சயாடா… அவங்க கடன எப்படிடா திரும்பி குடுக்கறது?…

உத்தமன்: கிழவா! சரி! எனக்கு விஷயம் புரிந்து விட்டது. அதாவது – ஒன் மகன் ஒனக்கு பணம் அனுப்பவில்லை. அதையணுப்பச் சொல்லணும். அவ்வளவுதானே. சரி! அதை நானே எழுதிவிடுகிறேன்.

கிழவன்: சாமி! ஒங்களுக்குத் தெரியாதுங்களா? நம்ப எல்லாத்தா… மீனாச்சி… அல்லாரும் அண்ணாத்தெயே கேட்டுச்சுன்னு ரவே எயுதுங்க… அதான் சமாசாரங்க…

இதை வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் சித்ராவுக்கு இது ஒரு ஆச்சரியமாகவே தோன்றியது. ”நாட்டுப்புறத்துத் தபாலாபீஸில் இத்தனை விசித்திரங்கள் இருக்கிறதா!” என்று மனதிற்குள் நினைத்தாள். இத்தனை நாளாக வெறுத்த இதே விஷயம் இன்று சற்று புதுமையாகத் தோன்றியது.

6

வழக்கம்போல் உத்தமன் மாலை நேரத்தில் ஆற்றங்கரைக்கு உலாவச் செல்வதற்குப் போய் விட்டான். வந்த தபால்களை சேவகன் மறுநாள் காலை போவதற்கான கிராமவாரியாகக் கட்டிவைப்பது வழக்கம். அதேபோல் செய்து கொண்டிருந்தான்.

சித்ராவுக்கு அன்று பகல் ருசிகண்டதால் இந்தத் தபால்களையும் பார்க்க ஆசை அடித்துக் கொண்டது. என்றும் இல்லாத புதிய முறையில் அன்று தபால்காரனிடம் ”ஏம்பா நாளை எந்தெந்த கிராமத்திற்குப் போக வேண்டும? உனக்கு எத்தனை குழந்தைகள்?” என்று கேட்டவாறே அவன் வைத்த கடிதங்களை எடுத்துப் பார்த்தாள்.

தபால்காரன், ‘‘என் தலைவிதியை ஏன் கேக்கறீங்கம்மா! இந்த காயர வெய்யில்ல போய்வர்றதுக்குள்ளே என் ப்ராணனே போயிடும் போலிருக்குது; புள்ளே குட்டிக்கென்ன குறைச்சல்? அரைடெஜன் இருக்கும்மா!’’ என்று சொல்லியபடியே தன் வேலையில் ஈடுபட்டான். எனினும் இத்தனை நாள் இந்தப் பக்கமே வராத மனுஷி வந்து பேசுவதைக் கண்டு சற்று பிரமிப்பு கூட அடைந்தான்.

சித்ரா கையில் எடுத்த கடிதத்தின் எழுத்து அச்சடித்தது போன்று அத்தனை அழகாயிருந்தது. அது வருமாறு…

”அம்மாவுக்கு நமஸ்காரம்.

நான் இதுவரையில் எத்தனை கடிதம் எப்படியெல்லாம் என்னுடைய நிலைமையை விளக்கி எழுதியும் நீங்கள் கார்த்திகை மாசத்து மழை கடா முதுகில் பெய்ததுபோல் இருக்கிறீர்கள். நீங்கள் அனுப்புகிற பிச்சைக்காசு எனது ஒரு வாரத்துச் செலவுக்குக் கூட போதவேயில்லை; அப்பாவுக்கு இதோடு பல கடிதங்கள் எழுதியாயிற்று. இது வரையில் பணமே அனுப்பவில்லை; இதைத் தந்தியாக எண்ணி உடனே 150 ரூபாயை தந்தி மணியார்டரில் அனுப்பினால் பார்க்கிறேன், இல்லாவிட்டால் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்த சங்கதியைத்தான் கேட்பீர்கள்! ஜாக்ரதை…

இங்ஙனம்

சுந்தரம்

மகா பயங்கரமான இந்தக் கடிதத்தைப் படித்ததும் சித்ராவை உண்மையில் தூக்கிவாரிப் போட்டு அவள் எண்ணங்களைப் பலவிதமாகச் சிதறடித்துவிட்டது. ”என்ன அக்ரமம்! பணமனுப்பா விட்டால் தூக்கு போட்டுக் கொள்வானா? ஐயையோ! இதைப்படித்த அவன் தாயாரின் வயிறு எப்படித்தான் துடிக்காது பாவம்! அவர்கள் என்ன செய்வார்களோ? என்று நினைக்கும்போது அவளுடைய அகக் கண்களுக்கு முன்பு சுந்தரத்தின் தாயார் துடிதுடிப்பது போலும், தன் கணவனிடம் கெஞ்சி அழுவது போலும், தன்னுடைய உயிரையாவது அடகு வைத்துப் பணம் திரட்டப் பாடுபடுவதுபோலும், இதற்காக தம்பதிகள் சண்டை செய்து கொள்வது போலும், பணம் கிடைக்காததால் தாமதமாகிவிடுவதாயும், இதற்குள் கடிதம் எழுதியவன் தூக்குப்போட்டுக் கொண்டு சாகத் துணிவது போலும் பலவிதமான பயங்கரத் தோற்றங்கள் அவள் இதயத் திரையில் சினிமாக் காட்சிபோல் தோன்றியதால் அசைவற்ற நிலையில் அப்படியே உட்கார்ந்துவிட்டதை அப்போதுதான் பார்த்த தபால்கார கோவிந்தஸ்வாமி ”என்னம்மா பெரிய யோசனை பண்றீங்க?” என்று குரல் கொடுத்தான்.

அந்தக் குரலைக் கேட்டபிறகுதான் சித்ராவுக்குத் தான் அந்தர உலகத்தில் சஞ்சரிக்கும் உண்மை தெரிந்ததும் சுற்றுமுற்றும் பார்த்தாள். தான் படித்த விஷயத்தில் லயித்திருப்பதாகக் காட்டிக் கொள்ளக் கூடாதென்கிற நோக்கத்துடன் ”ஒன்றுமில்லை, என் தகப்பனார் கடித மெழுதி நாளாயிற்றே என்று யோசனை செய்தேன். அவ்வளவுதான்” என்று எதையோ கூறி சமாளித்துக் கொண்டாள்.

அதையே நிஜமென்று நம்பித் தன் வேலையில் கவனம் செலுத்தினான். சித்ரா மற்றொரு கடிதத்தை எடுத்தாள்.

”ஐயா! உமக்கு உடம்பில் மானம் என்பதே இல்லை என்று தெரிகிறது. இதோடு எத்தனை தரம் கடிதம் போடுவது? மரியாதையாய் பணத்தை அனுப்பினாலாச்சு; இல்லையேல் சட்டப்படி நான் நடந்து கொள்ளப் பின்வாங்கமாட்டேன்; பணம் வேண்டியபோது பல்லிளித்துக் கெஞ்சி அடதாளம் போட்டதெல்லாம் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்போது அந்த ஞானம் மழுங்கிப்போய்விட்டதா? உடனே ஒரு வாரத்திற்குள் பணத்தை அனுப்பினால் சரி. இல்லையேல் கோர்ட்டு மூலம் ஜப்திக்கு வருவேன் என்பதை நினைவூட்டுகிறேன்.

இங்ஙனம்

சுப்பராமன்

இதைப்படிக்கும் போது திடீரென்று இவளுடைய தகப்பனாரின் பிம்பம்தான் கண் முன்பு தோன்றியது. நிறைந்த சம்சாரி, குறைந்த வருவாய். இந்நிலைமையில் தன் கல்யாணத்திற்கே கடன் வாங்கித்தான் செய்தார் என்பது அவளுக்கு சடக்கென்று நினைவுக்கு வந்ததும் அவளையறியாது ஏதோ வேதனை செய்தது. தன் பிதாவின் நிலைமையும் ஒருவேளை இப்படியாகி விடுமோ! கடன்காரர்கள் உபத்திரவிப்பார்களோ! – என்ற வீண் கவலையும் யோசனையும் சில வினாடிகள் அவளைப் பாதித்தன. கடன்காரன் என்றால் இப்படி எல்லாமா மிரட்டுவார்கள்? கடன் வாங்கிய மனிதர்கள் கொடுக்காமல் ஏமாத்தி விடுவார்களா என்ன? அவர்களுக்கு எத்தனை தொந்தரவோ! எத்தனை கஷ்டமோ பாவம்! – என்ன அதிகாரமிரட்டல் கடிதம் இது – என்று தனக்குள் அபாரமான யோசனையுடன் சில நிமிஷமிருந்து பின்னர் மறுபடியும் கீழே பார்த்தாள். ஒரு கவர் சரியாக கோந்து ஒட்டாது பிரிந்திருந்தது. உடனே அதை எடுத்தாள். அது ஒரு பெண்மணி – எழுதத் தெரியாத நிலைமையில் எழுதியிருப்பதாகத் தெரிந்தாலும் ஆவலுடன் படிக்கவாரம்பித்தாள்.

”அம்மா, அப்பாவுக்கு நமஸ்காரம். பட்டண வாஸத்து வாழ்வு ஒணும்னும் படித்த மாப்ளெ ஒணும்னும், உத்யோகம் பண்ர சம்மந்தி ஒணும்னும் ஆசைபட்டுண்டு என்னே கொண்டு தள்ளினிங்களே – ஊரோட அக்கடான்னு விழுந்து கெடக்கற அத்தானுக்குக் குடுத்தா அகவுரவம்னு அம்மா சொன்னாளே – இப்ப நான் படற பாடு யாருக்குத் தெரியும்? பட்ணவாஸத்து உத்யோகம் பண்ர மாப்ளெக்கி நிஜார் சொக்கா, ஹாட்டு, இது இல்லாமெ சரிப்படலையாம். ”ஒங்கப்பன் என்ன வாங்கிக் கொடுத்தான்? ஒரு ஹாட்டு உண்டா? ஸூட்டு உண்டா? ஃபேஷனா மேஜெ நாற்காலி சோபா உண்டா? ஷோக்கான ட்ரஸ் உண்டா… கள்ளுமொந்த மாதிரி மூஞ்சியெ வச்சிண்டு நிக்கறத்தெ பாரு! நான் என்ன ஏரு ஓட்ர கழுதேன்னு பாத்தியான்னு ஒங்க மாப்ளெ சதா என்னெ திட்டிண்டே இருக்கா. பட்டணவாஸமாம் பட்டணம்… குடி இருக்க எடங்கடயாது. கொழாத் தண்ணியோ சித்த நேரம் வரது. அதுக்கு ஆயிரம் போட்டி. அப்புறம் நின்னுபோனா தண்ணி கண்ணீர்தான்! எதித்த வீடுக் கிணத்துலேந்து நான் தூக்கிண்டு வரபோது என்ன அவலமாயிருக்கு தெரியுமா? நாட்டுப்புறத்து வேலைலேயே பட்டணத்துலே செய்யற சுகந்தான் நீங்க தேடி வெச்சது. எந்த சாமானும் கெடக்கறதில்லே. எதுவும் ரேஷனாம்! அரிசியோ, என்னால கல்லும் நெல்லும் பொறுக்கவே முடியல்லே… கழுத்தே வீங்கிப் போறது! நாட்டுப்புறத்துலே கறிகாயோ, கீரைவகையோ தாராளமாய் கைசலிக்கக் கிடைச்சுது. இந்த எழவு ஊருலே அதுவும் இல்லே. பாலுக்கும் க்யூவாம், காப்பிக்கொட்டைக்கும் க்யூவாம்! துணிக்கும் அதே எழவாம்!.. ஒரு கஜம் வாயல் கொடுக்கரான்னு எங்க மாமியார் என்னையும் இழுத்துண்டுபோய் கடே வாசல்ல நிக்கவைக்கிறார். எனக்கு மானமே போறது. எங்க மாமனார் ஒரு டம்பாச்சாரி… ஒங்க மாப்ளே ஒரு ஷோக் மைனர். இந்த லக்ஷணத்துலே வருமானம் பஞ்சாய்ப் பறக்கிறது. கடன்வேறே வாங்கி மலையாட்டம் ஏறறது. நேத்திக்கு என் கை வளையே ஒண்ணு கட்டாயப்படுத்திப் புடுங்கி, போய் வித்து, பட்டண வாஸத்து ஷோக்குநிஜார் சொக்காய் தெச்சு பட்டாஸ் வெடிச்சுட்டார். இன்னும் ஒரு வடம் சங்கிலிதான் பாக்கி. அதுக்கு என்னிக்கு தலைநோகுமோ தெரியாது! க்ருஸ்னயால் எண்ணெக்கி ரேஷனாம். வௌக்குப் பஞ்சம், கட்டைக்கும் பஞ்சம். மூணுவேளே சோத்தப்போட்டு என்னெ வளத்தங்களே… இங்கே ஒரு வேளை சோறுகூட வயிறு நிறைய கிடையாது. பகல் பட்டினி, ராத்திரி அரைவயிறுதான். விருந்தாளி வந்துட்டா அதுவும் ஸைபர்தான்! இந்த லக்ஷணத்துலே பொண்ணு துள்ளி விளையாடத்தான் பட்டணத்துலே கொண்டு தள்ளினங்கோ… 15 குடித்தனத்துக்கு மத்தியிலே ஒரு டஞ்சன்லே குடித்தனம். வாசல் வெளிநாட்டமே கடயாது. ஜெயில் வேற வேண்டாம்! என் பாட்டுல நான் காலாற நடந்துண்டு, ஆறுலே குளிச்சுண்டு, வயல்லேபோய் வேடிக்கெ பாத்துண்டு மாடும் கன்னும் கோகுலமாட்டம் இருக்கிற அழகென அனுபவிச்சுண்டு பாலும் தயிரும் சாப்பிட்டுண்டு குசாலாயிருந்ததே மண்ணெப் போட்டும் என்ன அழவச்சது போரும்! என் தங்கெயெயாவது கிராமத்துலேயே குடுத்து, என் மாதிரி கஷ்டத்துக்கு ஆளாக்காமே பாத்துக்குங்கோ… இந்தக் கடுதாசியே கூட நான் அவாளுக்குத் தெரியாமே ரகஸியமா எழுதியிருக்கேன். பொண்ணு பட்டண வாஸத்துலே பிரமாதமாயிருக்கான்னு நீங்க நெனச்சிண்டிருக்கீங்களே, இந்த ஆனந்தம் தெரியட்டும்னுதான் இதை எழுதறேன். என் ரவிக்கைகள் எல்லாம் தொளதொளன்னு போயிடுத்து. தங்கெ அளவுக்கு நாலு ரவிக்கே தெச்சி அனுப்புங்ககோ. க்யூவுலே நின்னு வாங்கிண்டு வந்த வாயலே எங்க மாமியார் தன் பொண்ணுக்கு தெச்சுட்டா…

இப்படிக்கு

பர்வதம்

”என்ன வேடிக்கை! அடிக்கடி பாட்டி ‘உலகானுபவம்… உலகம் பலவிதம்… லோகோ பின்னருசி’… என்றெல்லாம் சொன்னதைக் கேட்டபோது எனக்கு ஒண்ணுமே புரியாது விழித்தேனே… பாட்டி சொல்லிய வசனங்களைவிடக் கடிதங்கள் பலவற்றைப் படித்தால் அதுவே மகத்தான லோகானுபவங்களை உண்டாக்கி விடும் போலிருக்கிறதே பாவம்! பேசுவது போலவே தன்னுடைய மனத்தினுள்ளதைக் கொட்டி அளந்து விட்டாள்… நான் கிராமத்தை வெறுத்துக் சண்டையிட்டு வீணாக அவர் மனதை நோவடிக்கிறேன். இவள் பட்டணத்தை வெறுத்து தன் கொச்சை பாஷையில் அதன் உண்மை ஸ்வரூபத்தை படம் பிடித்துக் காட்டி விட்டாளே!.. என்ன உலக விசித்திரம்!.. என்று கட்டுமீறிய வியப்பில் சித்ரா மூழ்கினாள்.

கடிதங்களைப் படிக்கும் ஆசை சிறு விதையாக ஊன்றி இதற்குள் முளைத்துச் செடியாக ஆரம்பித்து விட்டதும் அவள் மனதே அவளையறியாது மாறியது. ”இத்தனை நாளும் கிராமம்… கிராமம்… என்று பழித்து வந்தோமே, கிராமத்து உத்தியோகத்தையும் மிக்க இழிவாக எண்ணி வந்தோமே. இத்தனை ஸ்வாரஸ்யமான பொழுதுபோக்கு இதில் இருப்பதே நாம் உணராது போய்விட்டோமே!” என்று நினைக்கும் போதுதான், தன் கணவனை ஏளனமாக நடத்தும் கொடுமை சுருக்கென்று இதயத்தில் தைத்தது.

7

இரவு வழக்கத்திற்கும் அதிகமான நேரங்கழித்துத்தான் உத்தமன் வீட்டிற்கு வந்தான். வாசல் கதவைப் போட்டுவிட்டு, சித்ரா மேஜை மீது விளக்கேற்றி வைத்துக் கொண்டு அன்றைய தபாலில் யாருக்கோ வந்துள்ள மாதப் பத்திரிகையை வெகு ஸ்வாரஸ்யமாகப் படித்துக் கொண்டிருப்பதை கண்டு பின்னும் சந்தோஷமடைந்து அவள் அனுபவித்துப் படிக்கும் இன்பத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் படிக்கும் விஷயமாவது –

”சகோதர சகோதரிகளே!

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கும் என்னம்மை – தூய

உருப்பளிங்கு போல்வாள் என்னுள்ளத்தினுள்ளே

இருப்பள் இங்குவாரா திடர்

– ஸ்ரஸ்வதியந்தாதி.

64 கலைகளின் அற்புத ச்ருஷ்டியைக் கலைத் தெய்வமாகிய சாக்ஷாத் கலாராணி… கலைவாணி… நமக்கு ச்ருஷ்டித்து அளித்திருக்கிறாள். அக்கலைகளின் சிறப்பை அறிவாளிகள் ஒருவாறு அறிந்திருக்கலாம். 64 கலைகளுக்கும் மேலான எண்ணிக்கைகளில் கலை வளர்ந்து வருகின்றதை இன்று ப்ரத்யக்ஷமாகக் காண்கிறோம். ஆனால் அவை 64 கலைக்கோர்வையுடைய மாலையில் சேரவில்லை. இனிமேலுள்ள அறிஞர்கள் அவைகளை ஆராய்ந்து இதுவும் ஒரு தனிக்கலைதான் என்று முடிவுகட்டும் காலம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. பேசுவது, பாடுவது, ஆடுவது, ஓடுவது, எழுதுவது… எல்லாம் கலைத் தெய்வத்தின் புதுமை ச்ருஷ்டியேயாகும்.

எழுதுகோல் பிடித்து எழுதும் காவியம், பாடல், இலக்கியம், இலக்கணம் முதலிய எழுதுகோல் சம்மந்தப்பட்ட சகலமும் கலையாகும்போது எழுது கோலால் எழுதப்படும் ”கடிதம் எழுதுவதும் ஒரு கலைதான்” என்பதை ஏன் நிரூபிக்கக்கூடாது? நமது ”சுதந்திர தேவி” பத்திரிகையில் இந்தப் புதிய தொடரை ஆரம்பித்திருக்கிறோம். கடிதம் எழுதுவதும் ஒரு கலைதான் என்பதைப் பலவிதமான உதாரணங்களுடனும் பல கடிதங்களின் குறிக்கோளுடனும் விளக்கி அழகிய வ்யாஸமாக எழுதும்படி நேயர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளித்திருக்கிறோம். இந்தக் கட்டுரைப் போட்டிக்கு 5 சிறந்த பேரறிவாளிகளை பரிசோதகராக நியமித்திருக்கிறோம். கட்டுரைகளை அவர்கள் பரிசீலனை செய்து ஏகமனதாகவோ, அல்லது அதிகப்படி ஆதரவு கிடைத்ததாகவோ பொறுக்கும் கட்டுரைக்கு முதல் பரிசு 500ரூபாய். இரண்டாவது பரிசு 200 ரூபாய். மூன்றாவது பரிசுகள் 100… 100 ரூபாய்கள் வீதம் மொத்தம் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் போட்டியில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள், இருவரும் தாராளமாகக் கலந்து கொள்ளலாம். கட்டுரையை ஆற அமர யோசித்து எழுதுவதற்கு இன்னும் இரண்டு மாத தவணை கொடுத்திருக்கிறது. அதற்குள் எழுதி அனுப்பக் கோருகிறேன். நிபந்தனைகள் எதுவும் கிடையாது.

வ்யாஸங்கள் போட்டி நடத்துவதின் நோக்கம் எழுத்தாளர்களின் கற்பனையை, ஊக்கத்தை, முயற்சியை, பழக்கத்தை விருத்தி செய்வதேயாகும். ஆகையால் போட்டியில் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

இந்த விஷயத்தைப் படிக்கப் படிக்க ஏற்கனவே முளைத்துள்ள செடியில் இன்னும் சில கிளைகள் இலைகள் வெடிக்க ஆரம்பித்தன. அதே விஷயத்தைப் பலதரம் படித்தாள்.

எத்தனைநேரம் வீதியில் நிற்பது என்று மெல்ல கதவைத் தட்டி ”சித்ரா…” என்றான்.

சித்ரா அலறியவாறு அந்தப் பத்திரிகையை – ராப்பரில் சுற்றிவந்தது போலவே மேஜைமீது வைத்து விட்டு வந்து கதவைத் திறந்தாள். ” என்ன சித்ரா! நேரமாகிவிட்டதால் தூங்கிவிட்டாயா?” என்று வேண்டுமென்று குறும்பாகக் கேட்டான். ”இதற்குள்ளாகவா தூக்கம்?” என்று கூறிக் கொண்டே உள்ளே இலை போடச் சென்றுவிட்டாள்.

சாப்பாடாகியதும் கொட்டு கொட்டென்று தான் மட்டும் தனியாக படுத்திருப்பாள். உத்தமன் ஆபீஸ் வரவு செலவு கணக்குகளையெல்லாம் வெகு ஒழுங்காகச் செய்துவிட்டுப் பிறகு படுக்கைக்கு வருவான். அன்றும் வழக்கம்போல் தன் ஆபீஸ் அறைக்குச் சென்று விட்டான். சித்ரா தன் காரியங்களை முடித்துக் கொண்டு மாடிக்குச் சென்று படுத்தாள். ஆனால் அவள் மனதில் புதிதாக எழும்பியுள்ள ஆசையின் அலை சிறுகச்சிறுக மோதிக் கொண்டே இருப்பதால் எண்ணம் பூராவும், தான் பத்திரிகையில் படித்த விஷயத்திலேயே சுழன்றது.

பிறருடைய தபால்களைப் பார்க்கக் கூடாதென்கிற நியாயத்தை அறிந்தும் சித்ராவின் அந்த ஆசை தடுக்க முடியாது பொங்கியதால் கணவனுக்குத் தெரியாதபடி தான் படிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள். கட்டுரைப் போட்டி அவள் உள்ளத்தைக் கவர்ந்ததால் அதைப் பற்றியே அவளுடைய சிந்தனை சிதறியது.

8

அன்று உத்தமன் காலை மாலை இரண்டு வேளைகளும் வெளியே போய்விட்டதால் வேலை மிகவும் அதிகமாயிருந்தது. அவைகளைப் பார்த்து விட்டு வரும்போது மணி இரவு பதினொன்றாகி விட்டது. வழக்கத்திற்கு விரோதமாக சித்ரா விழித்துக் கொண்டே படுத்திருப்பதைப் பார்த்து வியப்புடன்… ”இன்னுமா தூங்கவில்லை? ஏன் சித்ரா? உடம்பு ஒன்றுமில்லையே! இதோ, உனக்குக் கடிதம் வந்திருக்கிறது இந்தா… இதை க்ரமமாக நாளை முத்திரை போட்டு நாளைக்குத்தான் கொடுக்க வேண்டும். சித்திரா தேவிக்காக இன்றே கொடுத்து விடுகிறேன்!” என்று கூறி அதைக் கொடுத்துவிட்டுத் தாழவிருந்த விளக்கை உயர்த்தி, தான் தினவர்த்தமானியைப் படித்தவாறு படுத்தான்.

சித்ரா தனக்கு வந்த கவரைப் பிரித்துப் படிக்க வாரம்பித்தாள்.

”அன்புமிக்க சித்ராவுக்கு புண்ணியவதி எழுதியது. உபயக்ஷேமம்.

நாம் ஒருவரையொருவர் பார்த்தே பலவருடங்கள் ஆகிவிட்டன. எனினும் பாலிய சினேகிதத்தின் அன்பும் வேகமும் என்றும் குறையாது. நான் சென்ற மாதம் பட்டணத்திற்குச் சென்றபோது உன்னைப் பார்ப்பதற்காக உன் வீட்டிற்குப் போனபிறகுதான் நீ கல்யாணம் செய்து கொண்டு புக்ககத்திற்குப் போய் விட்டதாக உன் தாயாரின் மூலமறிந்தேன். நீ என்றுமே வெறுத்தும் பழித்தும் வந்த கிராமவாஸமே உனக்குக் கிடைத்துவிட்டதென்று நீ விசனப்படுவதாயும், அதனால் உன் பெற்றோர்களைக் கூட கோபித்து வெறுத்துக் கடிதமே போடாதிருப்பதாயும் அவர்கள் கவலைப்பட்டார்கள். உன் கணவர் கிராமத்துத் தபாலாபீஸ் போஸ்ட்டு மாஸ்டராக இருப்பதாயும் மிகவும் நல்லவர் என்றும் அறிவும் அழகும் உடையவரென்றும் சொல்லக்கேட்டுச் சந்தோஷப்படுகிறேன். நீ எனது அந்தரங்க நேசியாகையால் ஒரு முக்கியமான ரகஸியத்தை உனக்கு, உன் க்ஷேமத்தைக் கோரி எழுதுகிறேன்.

அதாவது, எனது உறவினர் ஒருவர் கிராமத் தபாலாபீஸ் உத்யோகம்தான் பார்த்து வந்தார். நல்ல காலமும், கெட்டகாலமும், எந்தவிதமான தொழிலிலும் மனிதர்களை பின்பற்றியே நிழல்போல் வருகிறது. போஸ்ட் மாஸ்டராகவிருப்பதால் மணியார்டர்கள் வருவதும் அனுப்புவதுமான பண நடமாட்டம் கிராமத்து ஜனசங்கைக்குத் தகுந்தவாறு இருக்கும்ல்லவா? அவரும் அவருடைய மனைவியும் வெகு கெட்டிக்காரர்கள். எந்த கெட்டிக்காரத்தனமும் விதியை வெல்ல முடியாது என்பதை மறந்து விட்டார்கள் பாவம்! விதியின் விளையாட்டில் ஆபீஸ் பணத்தைக் கையாண்டு வந்தார்கள். திடீரென்று இன்ஸ்பெக்டர் வந்தபோது பலவிதமான குற்றங்களையும் கண்டுபிடித்து விட்டார். மனிதர் இப்போது விழிக்கிறார். இத்தனைக்கும் காரணம் அவருடைய மனைவியின் மூடத்தனந்தான் என்று பிறகு தெரியவந்தது. சதாகையில் பணமிருப்பதால் தமது சொந்த செலவுகளுக்கெல்லாம் அவைகளைச் செலவு செய்துவிட்டுத் தானும் மதிப்பிழந்து கணவனையும் அகப்படச் செய்துவிட்டாள். என் கணவர்தான் தபாலாபீஸ் இன்ஸ்பெக்டர். ஆகையால் ஆங்காங்கு சில கிராமங்களின் தபாலாபீஸ்களில் நடக்கும் அநியாயங்களை அவர் எடுத்துச் சொல்லித் திட்டுவார். சில போஸ்ட் மாஸ்டர்கள் வெகு மேன்மையான முறையில் நடந்துவருவதையும் அவரே பாராட்டுகிறார்.

உன் கணவர் போஸ்ட்மாஸ்டர் என்று கேள்விப்பட்டதால் உனக்கு இந்த விவரங்களை எழுதினேன். பணம் மகா பகையாளி. அவசரமாக யாராவது கடன் கேட்டால் கையில்தான் இருக்கிறதே, மணியார்டர் கொடுக்க வேண்டியவர்களுக்கு ‘இன்னும் வரவில்லை’ என்று இழுத்தடித்து, தினங்களைக் கடத்திவிட்டு கடன் கேட்டவர்களுக்கு ஆபத்தான நிலைமையை அறிந்து உதவி செய்வதுபோல் இந்தப் பணத்தைக் கொடுத்து, ரூபாய்க்கு ஒரு அணா வீதம் வட்டி வாங்கிக் கொண்டு அந்த வருமானத்திற்காக அநியாயம் செய்துதான் சிலர் அகப்பட்டுக் கொண்டார்கள். நீ மகா புத்திசாலி. படித்தவள். ஆகையால் உனக்கு நான் எச்சரிக்கவில்லை. இந்தத் தொழிலின் லீலைகளை எழுதினேன். நீயும் உன் கணவரும் சந்தோஷமாயும், ஒற்றுமையாவும் இருப்பீர்களென்று நம்புகிறேன். உன் புதிய கிராமவாஸத்தின் வாழ்க்கை உனக்குப் பிடிக்கிறதா! அதை எழுது. தொழிலில் ஜாக்கிரதையாகவிருங்கள். இப்படி எழுதினேன் என்று வித்தியாசமாக எண்ணாதே. எனக்கு இப்போது மூன்று குழந்தைகள். நான் மிகவும் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன்.

உன் பிரிய தோழி,

புண்யவதி

இக்கடிதத்தைப் படித்த சித்ராதேவிக்கு ஏனோ கதிகலங்கிப் போய் தலைச்சுற்றி, ”அடேயப்பா! கிராமத்துத் தபாலாபீஸ் உத்தியோகத்தில் கூட இத்தனை சனீச்வரத் தாண்டவம் இருக்கிறதா! என்ன ஆச்சரியம்!” என்று தனக்குள் எண்ணிப் பெருமூச்சு விட்டாள்.

பத்திரிகை படிக்கும் உத்தமன் கடைக் கண்ணால் அவ்வப்போது பார்த்துக் கொண்டுதான் இருந்தான். பெருமூச்சை ஒரு சாக்காகக் கொண்டு அப்போதுதான் பார்ப்பதுபோல் பார்த்து… ”என்ன சித்ரா! பெருமூச்சு பலமாகவிருக்கிறதே… என்ன விசேஷம்?” என்றான்.

கடிதத்தைத் தன் கணவனுக்குக் காட்டுவதற்கும் ஆசை அடித்துக் கொள்கிறது. முதலில் சற்று விழித்தாள். பிறகு கடிதத்தை கணவரிடம் கொடுத்துவிட்டு ‘‘அடேயப்பா… கிராமத்துத் தபாலாபீஸ்களில் கூடவா ஆபத்து!” என்றாள்.

உத்தமன் சிரித்தவாறு, ”சித்ரா! நீயோ படித்த மேதை. நானோ பட்டிக்காட்டான். ஆபத்துக்கு கிராமம், நகரம் என்கிற வித்யாஸம் உண்டானால் உலகம் இப்போதுள்ள நிலைமையில் இருக்கவே இருக்காதே. ஏகசக்ராதிபதியாய் சூர்யனே அஸ்தமிக்காது இருக்கும்படியான முறையில் ராஜ்யபாரம் செய்து வந்த பிரிட்டீஷ் சாம்ராஜ்யமே இன்று விதியின் விளையாட்டினால் கலகலத்து விட்டது என்றால் மற்றவைகளுக்குக் கூற வேண்டுமா! சர்வலோக ரக்ஷகனாகிய ஸ்ரீ மந்நாராயணனும் லோகமாதாவாகிய ஸ்ரீமகாலக்ஷ்மியுமே ஸ்ரீராமனாயும் ஸீதையாயும் அவதரித்திருக்கும்போது கூட விதி அவர்களை ஆட்டவில்லையா! கேவலம் புழுக்குச் சமமான சில மனிதர்கள் விதிக்குத் தப்ப முடியுமா?” என்று பெரிய வேதாந்தத்தைக் கூறியபின், கடிதத்தைப் படித்து முடித்துவிட்டுக் கடகடவென்று சிரித்தான். சித்ராவுக்கு ஒன்றும் புரியவில்லை. ”ஏன்? எதற்காக சிரிக்கிறீர்கள்?” என்றாள்.

உத்தமன்: உன் சினேகிதை புண்யவதிக்குத் தபாலாபீஸ் தமாஷ்கள் இன்னும் சில தெரியவில்லை. பாவம்! குற்றமான செய்கையை மட்டும் எழுதி உன் கணவன் பட்டிக்காட்டு மனித மிருகமாயிற்றே, எங்கே திருடிவிடுவானோ என்று எச்சரித்திருக்கிறாள் பாவம்!

சித்ரா: என்ன அப்படி ஏளனமாகச் சொல்கிறீர்கள்? அவள் அப்படி எல்லாம் அசம்பாவிதமாக எழுதவில்லை. வீணான பழி சொல்ல வேண்டாம். உலகத்திலுள்ள…

உத்தமன்: ஆமாமாம். நானும் உலகத்திலுள்ள விசித்திரங்களைத்தான் சொல்ல வந்தேன். என்னைப் பற்றிக் குற்றமாகச் சொல்லியதாக நான் சொல்லவில்லை. இது கிடக்கட்டும். தபாலாபீஸில் வினோதங்கள் இன்னும் என்னென்ன இருக்கின்றன தெரியுமா! தபால் கவர்களில் வைத்து வரும் தபால் தலைகளைச் சிலர் திருடிவிடுவார்கள். புக்போஸ்டில் வரும் பத்திரிகைகளோ, புத்தகங்களோ இவர்களும் இவர்களைச் சேர்ந்தவர்களும் படித்துவிட்டுத்தான் விலாசதாரர்களுக்கு கொடுப்பார்கள்…

இதைச் சொல்லும்போது சித்ராவுக்கு தூக்கிவாரிப் போட்டது. தான் சாயங்காலம் பத்திரிகை படித்ததை ஒரு வேளை பார்த்து விட்டாரோ. அதனால்தான் சுட்டிக் காட்டிப் பேசுகிறாரோ! என்று கூடத் தோன்றிவிட்டதால் தலைசுழன்றது. அவளால் பேச முடீயவில்லை…

உத்தமனோ தன் வார்த்தையை நிறுத்தாமல். ”அதுமட்டுமா சித்ரா! ஒரு ஊரிலேயே ஒருவருக்கொருவர் விரோதி என்று வைத்துக் கொள்ளு. அவர்கள் போஸ்ட்மாஸ்டரைக் கைக்குள் போட்டுக் கொக்கொண்டு ஒருவனுக்கு வந்துள்ள ரகஸிய சமாச்சாரங்களை வெகு ரகஸியமாக அறிந்து அதற்குத் தகுந்தபடி தமது வேலைகளில் உஷாராகவிருப்பார்கள். இம்மாதிரி சோதாத்தனமான காரியம் செய்வதில் சிலர் லஞ்சம் கூட வாங்குகிறார்கள் என்று கேள்வி…

சித்ரா கவனிக்காதிருப்பதையும் ஏதோ யோசனை செய்வதையும் கண்ட உத்தமன் அவளுடைய வேதனையைத் தெரிந்து கொண்டான். அதற்குமேல் எதுவும் பேசி அவளை வருத்தக்கூடாதென்கிற எண்ணத்துடன், ”சித்ரா! உனக்குத் தூக்கம் வந்து விட்டது போலிருக்கிறது. சரி. படுத்துக் கொள்ளு” என்று, தானே வார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்தான். சித்ராவுக்கு உண்மையில் ஏதோ செய்தது.

9

சித்ராவுக்கு மட்டும் கடிதங்களைப் படிக்கவும் அதன் வாயிலாக அனுபவம் பெறவும் கட்டுரை எழுதவும் ஆசை அடித்துக் கொள்கிறது. தான் நாட்டுப்புறத்தை வெறுத்ததையும் அதனால் கணவனைக் கூட வெறுத்து அவன் மனத்தைப் புண்ணாக்கிவிட்டதையும் அவன் உணர்ந்துதான் குத்திக் காட்டியபடியே இருக்கிறான் என்பதை நன்றாக உணர்ந்தபிறகு எப்படியாவது தன் கணவனின் மனக்கசப்பை மாற்றித் தனது உத்ஸாகத்தைத் தெரிவிக்க வேண்டுமென்கிற ஆசை உண்டாகியது.

பாம்பின் காதை பாம்பே அறியும் என்பதுபோல் சித்ராவின் பழைய எண்ணங்கள் மாறி கிராம வாழ்க்கையிலும் பொழுதுபோக்க வசதியிருக்கிறது என்பதையறிந்து, அவள் சந்தோஷமாயிருந்தால் போதும் பிறகு தானே சமாதான வாழ்க்கையில் களிப்பாள் என்ற நோக்கத்துடன் ஏதாவது ஒரு வேலையைச் சாக்காக வைத்துக் கொண்டு வெளியே போக ஆரம்பித்தான். ருசிகண்ட பூனை உரியைத் தாவுமாம் என்பது போல் பழையபடி காலையில் வேலைகள் ஆன உடனே ஆபீஸ் ரூமுக்கு வந்தாள்.

மேஜை மீதிருந்த தபால்கள் இவள் கவனத்தைக் கவர்ந்ததால் ”ஆனது ஆகட்டும்” என்று அவைகளைப் புரட்டிப் பார்த்தாள். ஒரே விலாஸத்திற்கு 5…6… கடிதங்கள் இருப்பதைப் பார்த்ததும் வியப்புடன் அவைகளைப் படிக்கவாரம்பித்தாள்.

”அன்புமிக்க ஐயா! உபயக்ஷேமங்கள்.

தங்கள் புதல்வியின் திருமண அழைப்பு வந்தது. மிக்க சந்தோஷம். கல்யாணத்திற்கு வரமுடியாமைக்கு வருந்துகிறேன். தம்பதிகளுக்கு என் ஆசிகள்.

இங்ஙனம்,

மாணிக்க முதலியார்

”அன்பிற் சிறந்த நண்பரவர்களே! மங்களம் உண்டாகுக. இவண் நலம். அவண் சுகத்தை அங்ஙனமே ஆசிக்கின்றனன். தம் செல்வக் குமாரியின் திருமண அழைப்புத்தாள் கண்டு பூரித்தனம். வர இயலாமைக்கு மன்னிப்பு வேண்டுகிறோம். தம்பதிகளுக்கு சர்வமங்களமும் உண்டாவதாக.

இங்ஙனம்

முனுசாமி

”ஐயா அவர்களுக்கு யானாகிய கோனாரக் குப்புச்சாமி எழுதியது என்னவென்றால், இப்பவும் உங்கள் மவளுக்கு விவாகம் என்ற கடிதம் என் சமூகத்திற்கு தேவரீர் அனுப்பியதை யானாகிய கோனரக் குப்புசாமி பெத்துக்கொண்டு எளுதும் விவரம் என்னவென்றால், கண்ணன் அருளால் இங்கு நான், என் மனைவி, புத்திரி புனிதவல்லி, என் அம்மாவாகிய அலமேலு மங்கை மகாலக்ஷ்மிதேவி, என் குமாரன் திருவாளர் ஜெயராமக்ருஷ்ணக் கோனான் முதலியவர்கள் சுகம். அப்படியே அய்யா அவர்கள் வீட்டிலும் சுகமென்று எதிர்பார்க்கிறேன். எனக்கு இரண்டு நாளாகக் காய்ச்சலாயிருப்பதாலும்… என் மனைவியின் பாட்டியாராகிய திருமதி. ராஜரத்தின கண்ணம்மா அவர்கள், சென்ற புதன்கிழமை பரலோகம் சேர்ந்துவிட்டாள். அதனாலும் நாங்கள் ஒருவரும் வரமுடியாது இருக்கிறது. சாவுக்குப்போயே ஆகணும். அதனால் என் மனைவி கூட புத்திரன் கூட எங்கம்மா கூட வரமுடியாது. இன்னொரு பெண்ணுக்கு கல்யாணம் செய்தால் அப்போது சாவு ஒன்று இருக்காதுன்னு நினைக்கிறேன். அப்போ அவச்யம் வரேன். ஐயா அவர்கள் மன்னிக்கணும். கல்யாணப் பெண்ணுக்கு மொய்யி எளுதுவதற்காக 10 ரூபாய் அனுப்பி இருக்கிறேன். என் பேராகிய கோனாரக் குப்புச்சாமி மொய்யி எயுதியதுன்னு எயுதவும்.

இப்படிக்கு

கோனாரக் குப்புசாமி

இதைப் படிக்கும்போது சித்ராவுக்குச் சிரிப்பு அடக்கவே முடியாது வந்துவிட்டது. கடிதம் எழுதுவதும் ஒரு கலைதான் என்ற விஷயம் நேற்று வரைக்கும் படித்ததற்கும் இன்று அசட்டுப் பிசட்டென்று மூடத்தனமும் அறியாமையும் சொட்டி வழிய எழுதியிருக்கும் இக்கடிகத்தைப் படித்ததும் அவளுடைய ஆச்சரியம் கரைபுரண்டது. அசம்பாவிதம்… கல்யாண விஷயமாக எழுதும் கடிதத்தில் சாவுகூட எழுதுவார்களா! இது கூட அந்த மடையனுக்குத் தெரியவில்லை. ஐயோ அப்பாவியே! என்று சிரித்தாள்.

”அன்புமிக்க ஐயன்மீர்!

தம்பதிகள் சர்வ மங்களத்துடனும் நீடூழி வாழ்க இறைவனை வேண்டுகிறேன். அடுத்த ஆண்டு இத்திங்களில் தங்களுக்கு ‘பாட்டனார்’ என்கிற அரிய பெரிய ஒப்புயர்வற்ற பட்டத்தை சர்வலோகரக்ஷகன் அளிக்க அவனடி வேண்டும்.

வேணுகோபால்

”சங்கரனுக்கு ஆசீர்வாதம். உபயக்ஷேமம்.

உன் மகளுடைய கல்யாண அழைப்பு கிடைத்தது. எழவெடுத்த ரயிலில் எப்படித்தான் வருகிறது என்பதை நினைக்கும்போதே மென்னைத்திரிகி ப்ராணன் போய் விடும் போல் தோன்றுகிறது. நாசமாய்ப்போன பஞ்ச காலத்தில் வீட்டிலுள்ள அத்தனை சனிகளையும் இழுத்துக்கொண்டு வருவதற்குச் சங்கடமாக இருக்கிறது. கல்யாணத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு அடித்துக் கொள்கிறது. நானோ சாகிற கிழம். இன்றோ நாளையோ சாவு. யார் கண்டா! எதற்கும் இந்த கண்ணாலே உன்னருமை மகளின் கல்யாண ஜோடியைப் பார்த்துவிட ஆசை அடித்துக் கொள்கிறது. சண்டாள உலகத்தின் கஷ்டங்கள் நீங்கும் வரையில் யார் யார் இருப்பார்களோ, சாவார்களோ… ஆகையால் எப்படியாவது விழுந்து அடித்துக் கொண்டு செத்தேன் பிழைத்தேன் என்று சனிக்கிழமை ரயிலில் வந்து விடுகிறேன். ஸ்டேஷனுக்கு மட்டுமே ஆளை அனுப்பு. இந்தக் கண்ராவி ரயில் ஸ்டேஷனுக்குச் சரியா பாதி ராத்திரி இருட்டில் வந்து தொலைகிறது. அதனால் ஆளை அனுப்பு.

இங்ஙனம்,

அப்பு மாமா

”இதற்குமுன் படித்த புத்திசாலிக் கடிதத்திற்கு இது தாதா போலிருக்கிறது. அட கிரகசாரமே! இப்படியும் ஒரு பிரக்ருதி உலகில் இருக்கிறதா! கல்யாணத்திற்கு வரும் ஆசையில் என்ன பேசுகிறோம் எழுதுகிறோம் என்று கூடவா மறந்து விடுகிறது” என்று ஆச்சரியத்தால் மூழ்கியிருக்கும் சமயம் ஒரு கிழவி வந்து கதவை இடித்தாள்.

சித்ரா கதவைத் திறந்து என்னவென்று விசாரித்தாள். ”அம்மா! ஐயா இல்லீங்களா! அவசரமா ஒரு கடுதாசி எயுதணுங்க! மகாராஜா ஐயாதான் எனக்கு எயுதர வயக்கம். எப்போ வருவாங்க?” என்றாள்.

சித்ரா ”அவர் எப்போது வருவாரோ தெரியாது. உனக்கு அவசரமானால் நானே எழுதுகிறேன் சொல்லேன்” என்று தன்னையறியாத உற்சாகத்தில் கூறினாள்.

உடனே கிழவி நீட்டி மடக்கிக் கொண்டு உட்கார்ந்தாள். ‘‘உம்… எயுதுங்க…’’

”இதே போல நீ இனிமேலுக்கும் ஒம்பொஞ்சாதியே இட்டுகிணு போவாங்கட்டி போனாக்க, பெரிய பெரிய சண்டெதான் நடக்கும். பாயாப்போன மானங்காஞ்சி போச்சு, வவுரும் காஞ்சி போச்சு. இனுமேலிக்கி இங்கு வெச்சுகிணு காப்பாத்த முடியாதுண்ணா முடியாதுதான். ஒடனே இட்டுகிணு போவாகாட்டிபோனா இன்னா நடக்குதுன்னு பாத்துக்கோ…

வீராயி

என்று தான் எழுத வேண்டிய விஷயத்தை மெஷின் போல் சொல்லிவிட்டாள். சித்ரா அந்த விஷயத்தை சற்று மெருகுடன் கடிதம் எழுதும் பாணியில் எழுதி படித்துக் காட்டினாள். கிழவி மிக்க சந்தோஷத்துடன், ”யம்மா! எங்க எஜமானுக்குத் தகுந்த மவராஜி நீ. நல்லா இருக்கணும்” என்று வாழ்த்தும்போது வெளியிலிருந்து வந்த உத்தமன் ”என்ன ஆயா! என்ன விசேஷம்? தம்பிக்குக் கடிதம் எழுதுணுமா?” என்று நகைத்துக் கொண்டே கேட்டான்.

கிழவி: சாமீ! ஒங்க மனசுபோல ஒங்களுக்கு சம்சாரம் வாச்சிருக்குதுங்க. ஐயா எங்கேன்னு கேக்கறதுக்குள்ளாரே அம்மா நானே எயுதுறேன்னு சொல்லுடீனுச்சு. எயுதிப்புட்டாங்க. எயுதபடிக்க தெரியாத பட்டிக்காட்டுப் பொணங்களான எங்களுக்கு ஒங்களெ போலே ஒபகாரம் பண்றவங்க இருக்கிறதாலேதானுங்க, நாங்க பொழக்கிறோம்

என்று சொல்லும்போது உத்தமன் மனது கட்டுமீறிய சந்தோஷத்தால் பூரித்தது. தன் மனைவி இத்தனை சடுதியில் இம்மட்டும் முன்னுக்கு வந்து விட்டாளா என்பதை எண்ணி மகிழ்ந்தவாறு அவள் முகத்தைப்பார்த்தான். அவள் சிரித்துக் கொண்டே தலைகுனிந்தாள். அவள் முகத்தில் ஒரு சாந்தியும் சந்தோஷமும் நிலவியது.

10

அன்று விடுமுறை தினமாகையால் உத்தமன் வேலைக்காரியை சித்ராவுக்குத் துணை வைத்துவிட்டு தன் மாமாவைப் பார்த்துவிட்டு வருவதாகச் சென்றான். சித்ராவுக்கு பரிபூர்ண சுதந்திரம் கிடைத்தது போலாகி விட்டதால் அன்று கவர்களைக்கூட பிரித்து படித்து விட்டு ஓசைப்படாமல் ஒட்டி விட வேண்டும் என்கிற ஆசை உண்டானதால், மறுநாள் கிராமங்களுக்குக் கொண்டு போக வேண்டிய தபால்களை விடியற்காலைதான் தபால்காரன் வந்து எடுத்துப் போவானாகையால் சில கவர்களை மெல்ல எடுத்தாள்.

ஆனால், தான் செய்யப்போவது குற்றமாயிற்றே இதனால் தன் கணவனுக்கு ஒன்றும் துன்பம் நேரிடாமலிருக்குமா! என்பதை மனம் நினைக்காமலில்லை. எனினும் ஆசையே முன்னோக்கி நின்றதால் மெல்ல ஜலத்தைத் தடவி ஜாக்ரதையாகக் கவரைப் பிரித்துக் கடிதத்தை எடுத்தாள்.

”என் அன்பைக் கொள்ளைக் கொண்ட ஆனந்தவல்லியே! அம்ருத கலசமே! உன்னைப் பிரிந்த நாள்முதலாக நான் படும் அவஸ்தை…

இதென்ன காதல் கடிதம்போலிருக்கிறதே… என்னதான் இருக்கிறது பார்க்கலாம்…

ஆண்டவனுக்குத்தான் அர்ப்பணம். கண்மணீ! என்னிதய ராணி! நாம் பெற்றோராகப் போகிறோம் என்கிற சந்தோஷம் ஒரு புறமிருப்பினும் சில மாத காலம் உன்னைப் பிரிந்திருப்பது எனக்கு நரகவேதனையாயிருக்கிறது. உன்னோடு பேசாத வாயும் உன்னமுத மொழிகளைக் கேளாத செவியும், உன்னை என் ஆவல் தீரக்கட்டி…

சீச்சீ! வெட்கக்கேடு… என்னதான் உயிர்க் காதலியாயிருப்பினும் இப்படியா மானங்கெட்டு எழுதுவது… என்று வெட்கத்துடன் கவரில் கடிதத்தைப் போட்டு ஜாக்ரதையாக ஒட்டிவிட்டு மற்றொரு கவரைப் பிரித்துப் படிக்கவாரம்பித்தாள்.

”என்னாருயிர் அன்னையே! உன் திருவடித் தாமரைகளில் அனந்தங்கோடி தண்டனிட்டுச் செய்யும் விக்ஞாபனம்:

அம்மா! என் விஷயத்தில் நீங்கள் கொஞ்சமும் கவலைப்படவே வேண்டாம். உங்கள் வயிற்றில் பிறந்து உங்களுடைய பரிசுத்தமான ரத்தம் என் சரீரத்தில் ஓடும்போது நான் எப்படியம்மா கெட்டுவிட முடியும்? அப்பாவுக்கு நான் சரியாகப் படிக்கிறேனா இல்லையா என்கிற சந்தேகம் தோன்றியிருக்கிறது. அதனால்தான் அவர் என் நண்பன் நாராயணனின் தகப்பனாருக்கு கடிதம் எழுதி விசாரித்திருக்கிறார். அதைப்பற்றி நான் சற்றும் கவலைப்படவில்லை. என்னுடைய நலனைக் கோரி அல்லும் பகலும் பாடுபடும் முன்னறி தெய்வங்களாகிய நீங்கள் என் க்ஷேமத்திற்காகச் செய்வீர்களேயன்றி வேறில்லை. அம்மா! அப்பாவுக்கு என்னுடைய பரிசுத்தத்தை நீ நன்கு எடுத்துக்கூறி அவரைச் சந்தேகப்படாமிலிருக்கும் படிக்குத் தெரிவி. அவருடைய மனங்களித்து என்னை வாழ்த்துவதற்காகவே நான் இதோடு என் காலேஜ் ப்ரின்ஸ்பால் என்னை மிகவும் கொண்டாடி எழுதிய ஒரு கடிதத்தை வைத்திருக்கிறேன். இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அம்மா! என் கல்யாணத்தைப் பற்றி இப்போது அவசரமில்லை என்றுதான் நினைக்கிறேன். அப்படி நீங்கள் இப்போதே செய்துதான் ஆகவேண்டுமென்றால் உங்களிஷ்டம் போல் செய்யுங்கள். உங்கள் மனங்கோணாமல் நடப்பதே என்னுடைய கடமை. என்னுடைய ப்ரார்த்தனையும் அதுவே. இந்த ஹோட்டல் சாப்பாடு எனக்கு மிகவும் வெறுப்பாயிருக்கிறது. உங்களுடைய மாதுர்யமான சமையலைச் சாப்பிடுவதற்கு நாக்கு பறக்கிறது. லீவு விட்டவுடனே வருகிறேன். நம்ஸ்காரம்.

உங்கள் அடிமைப்புதல்வன்

ராஜாராம்

அதோடிருந்த கடிதத்தைப் படிக்கவாரம்பித்தாள்.

”சிரஞ்சீவி ராஜாராமனுக்கு ஆசீர்வாதம். உபயக்ஷேமம்.

இன்று என் குழந்தைக்கு நேர்ந்த பேராபத்தில் நீதான் கடவுள்போல் வந்து காப்பாற்றின பேருபகாரத்தை நான் என்றுமே மறக்கமாட்டேன். காலேஜில் நீ படிக்க வந்த நாள் முதல் உன்னுடைய ஒழுக்கத்தையும், சீலத்தையும், புத்திசாலித்தனத்தையும் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன். இத்தனை சிறந்த உத்தமனாகிய உனக்கு இத்தகைய தயாளத்தனமும் பரோபகார சிந்தையும் இருப்பது அவைகளுக்குச் சிகரம் வைத்தது போலிருக்கிறது. நீ செய்த உதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்வதென்றே தெரியவில்லை. விலை மதிக்கக் கூடிய எதைக் கொடுத்தாலும் அது ஈடாகாது. என் வயிற்றில் பாலை வார்த்த உன்னை நிறைந்த இதயத்துடன் பரிபூரணமாக ஆசீர்வதிக்கிறேன். இதுதான் விலையில்லாத செல்வம். உனக்கு என்னால் எத்தகைய உதவியாவது வேண்டியிருந்தால் என்னை நேரில் பயமின்றி வந்துபாரு. இத்தகைய உத்தமமான மகனைப் பெற்றுள்ள புண்யாத் மாக்களாகிய உன் பெற்றோர்களை நான் பாராட்டுகிறேன்.

இங்ஙனம்

பாலாஜிராவ்

ப்ரின்ஸிபால்

கம்புக்கும் களைவெட்டி, தம்பிக்கும் பெண் பார்த்தது என்பதுபோல், இந்த பையன் யாரோ தெரியவில்லை, பக்கத்துக் கிராமத்தில்தான் பெற்றோர்களிருப்பதால் இதைப் பற்றி விசாரிக்கச் செய்தால் என் தங்கை சரோஜாவை இவனுக்குச் கொடுக்கலாமே என்று சித்ராவுக்குத் தோன்றியது. தான் விளையாட்டாகவும் பொழுதுபோக்காயும் கடிதம் படிக்க ஆரம்பித்ததில் கல்யாணம் நிச்சயிக்கும் விஷயத்தில் தானே தாவியதும், யோசனைகள் பலமாக எழுந்து வேலை செய்ய ஆரம்பித்தன.

11

உத்தமனுக்கு உண்மையிலேயே அன்று அலுப்பினால் தூக்கம் வந்துவிட்டது. படுத்தவுடனே தூங்கிவிட்டான். சித்ராவுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. தன் கணவன் அயர்ந்து தூங்குவதையறிந்ததும் ஓசை செய்யாமல் ஆபீஸ் அறைக்கு வந்து மிக்க ருசிகண்ட தொழிலை ஆரம்பித்தாள். தபாலுக்கு அனுப்ப வேண்டிய கடிதங்கள், தபாலில் அன்று வந்த கடிதங்கள் முதலியவைகள் மேஜைமீது இந்த துரைசானியம்மாளின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தன. சித்ரா வந்ததும் அவளைக் கண்டதும் கண்களைச் சிமிட்டி அழைப்பது போல் அவள் மனதிற்குத் தோன்றியதால் உத்ஸாகத்துடன் தன் வேலையை ஆரம்பித்தாள்.

”அன்புள்ள ப்ராண நாதருக்கு நமஸ்காரம். உபயக்ஷேமம். உங்கள் கடிதம் வந்தது. அன்றும், இன்றும், என்றும் ஒரே வார்த்தைதான். மறுபேச்சு கிடையாது. உங்களுக்கு நான் முக்கியமாயிருந்தால், நான் அங்குவர வேண்டுமாயிருந்தால் முதலில் உங்கள் தாயாரையும் அந்த ராக்ஷஸி உங்கள் அக்காவையும் வீட்டைவிட்டு ஓட்டினால்தான் வரமுடியும். இல்லாவிட்டால் நான் அங்கு அடி எடுத்து வைக்க மாட்டேன். ஓயாது ஒழியாது என் மீது குற்றங்குறைகளைக் கூறியவாறு ஆட்சி செய்வதற்கு இனி நான் உள்பட மாட்டேன். அம்மாவும், அக்காவும் உங்களுக்குப் பிரதானமானால் அவர்களே சாச்வதமாய் சிரஞ்சீவியாய் இருக்கட்டும். எப்போது இதைச் சொன்னாலும் திக்கற்ற விதவையாகிய அக்காவை எங்கே துரத்துவது என்கிறீர்கள். திக்கற்று வக்கற்று கிடக்கும் பிணங்களுக்கு அதிகாரமும் ஆணவமும் ஏன்? அடங்கி நாய் போல் கிடக்கத் தெரிய வேண்டாமா! நான் என்ன பிச்சைக்காரன் வீட்டு மகள் என்று எண்ணிவிட்டாளா? மிராசுதார் மீனாக்ஷிசுந்தரத்தினுடைய மகள் என்பதை நினைத்துப் பார்க்கட்டும். என் கீழ் அடங்கி, போட்டதைத் தின்றுவிட்டு வீட்டு வேலைகளைச் செய்து கொண்டு இருந்தால் இருக்கட்டும். உலக்கைகள் போல் இரண்டு பேர்களை வீட்டில் வைத்துக் கொண்டு சமையலுக்கு அனாவச்யமாகச் செலவு செய்து ஏன் ஆளை வைக்க வேண்டும்? வேலைக்காரிதான் எதற்கு? வீட்டில் குழந்தையா குட்டியா! ஒன்றுமில்லாத தடிமரங்கள் போல் நால்வர் இருக்கும் இடத்தில் இவர்கள் செய்வதற்கென்ன என்கிறேன். என்மேல் கோபிக்க வேண்டாம். இவைகளுக்குச் சம்மதமாயின் கடிதமெழுதவும் வருகிறேன்.

ஜானகி

இக்கடிதம் சித்ராவின் வியப்பைக் கிளறிவிட்டது. ”இப்படியும் ஒரு பெண்ணானவள் பயங்கூச்சமின்றி கணவனுக்குக் கடிதமெழுதத் துணிவாளா? என்ன மாயா உலகம்! என்ன வேடிக்கைகள்” என்று தனக்குள் வியப்புற்றாள்.

”அன்புமிக்க லீலாவுக்கு உபய க்ஷேமங்கள்

உன்னிடமிருந்து கடிதம் வருமா! என்று எதிர்பார்த்து நிமிடத்திற்கு நிமிடம் துடிக்கிறேன். கடிதம் வந்ததும் ஒரு புறம் சந்தோஷமும் கோபமும் வருகிறது. எனக்கு 500 ரூபாய் சம்பளம் என்பதனால் தாம்தூம் என்று செலவு செய்துவிட்டால் நாளைக்கு நம் குழந்தைகளுககு ஒரு பொறுப்பும் மதிப்புமுள்ள வகையில் நாம் நடக்க வேண்டாமா? இதைச் சொன்னால் ”நாளைக்கு என்பதை நினைக்க நமக்கேது உரிமை? ஆண்டவன் அன்றாடம் நடத்துவதற்குக் காத்திருக்கிறான்” என்று எனக்கே வேதாந்தம் உபதேசித்து எழுதிவிடுகிறாய். உன்னுடைய விருப்பப்படியே உன் நாத்தனாருக்கு மாதம் 20 ரூபாய் அனுப்புகிறேன். தீபாவளிக்கு நீயே புடவைகள் வாங்கி அனுப்பிவிட்டாய். அதற்கும் நான் கோபிக்கவில்லை. பொங்கலுக்கு 50 ரூபாய் அனுப்பு என்று ஆர்டர் போட்டிருக்கிறாய். மூன்று தங்கைகளுக்குமே நான் சம்பாதிப்பதை நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை, பொங்கல், சுமங்கலி ப்ராத்தனை, அம்மா திவசம் என்று செலவு செய்து கொண்டு போனால் எந்த மட்டில் போய் நிற்கும் என்பது எனக்குத் தெரியவே இல்லை. ஆகையால் நீ இவ்விஷயத்தில் அனாவச்யமாகத் தொந்தரவு படுத்தாதே. நீ கேட்டபடி 250 இன்ஷியூரில் அனுப்பியிருக்கிறேன். பாழும் வேலைத் தொந்தரவால் நான் ஒரு ஊரும் நீ ஒரு ஊருமாக இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. கூடிய சீக்கிரம் லீவு வாங்கிக் கொண்டு வருகிறேன். குழந்தைகளுக்கு என் ஆசீர்வாதம்.

இங்ஙனம்

சபாபதி.

”இதற்கு முன்பு படித்த கடிதம் ஒருவிதமான புரட்சியை உண்டுபண்ணியது. இது மற்றொரு விதமான புரட்சியை உண்டுபண்ணியது. இரண்டும் ஒன்றுக்கொன்று எத்தனை வித்யாஸம்! எத்தனை ஆச்சரியம்! என்று திகைத்தாள்.

”உலகமே! உன்னுடைய புதுமையின் போக்குதான் என்ன ஆழமானது!” என்று எண்ணினாள்.

”சிரஞ்சீவி ஸீதாராமனுக்கு ஆசீர்வாதம். உபயக்ஷேமம். உன் கடிதம் கிடைத்தது. உனக்குப் பலதரம் எழுதியிருக்கிறேன். நேரிலும் பலதரம் சொல்லியிருக்கிறேன். யாரிடமிருந்து கடிதம் வந்தாலும் அதற்குப் பதில் எழுதும்போது அந்தக் கடிதத்தை மறுபடியும் ஒருமுறை படித்துவிட்டுத்தான் பதில் எழுத வேண்டும். அப்போதுதான் அதில் என்னென்ன விஷயங்களுக்கு பதில் எழுத வேணுமோ அவைகளை எழுதமுடியும். இதை அடியோடு மறந்துவிட்டுப் படித்த கடிதத்தை அதே இடத்தில் அஜாக்கிரதையாகப் போட்டுவிடுவதால் நான் எழுதியதற்கு எந்தவிதமான பதிலும் கொடுக்காமல் நீ ஏதோ எழுதியிருக்கிறாய். நமக்கு வரும் கடிதங்களில், சாவுக் கடிதங்களை மட்டும்தான் உடனே கிழித்தெறிய வேண்டுமேயன்றி மற்றக் கடிதங்களை பத்திரப்படுத்த வேண்டும். அலக்ஷியமாகப் போடக்கூடாது. இன்று அலக்ஷியமாகத் தோன்றும் கடிதமே பல வருஷங்கள் கழித்து அதுவே அதிமுக்யமாகத் தோன்றலாம். கடிதம் என்பது எதற்காக எழுதுகிறோம் – பொழுது போக்கற்றா எழுதுகிறோம். அவைகளின் கருத்தென்ன? ஒருவர் மூலம் மற்றொருவர் க்ஷேமங்களைப் பரிமாறிக் கொள்ளவும், இன்னும் அனேக விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும்தான் கடிதம் எழுதுகிறோம். முக்கியமான விஷயங்களைக் கவனித்து பதில் கொடுக்காவிட்டால் கடிதம் எழுதியதற்கு என்ன பலன்? கடிதத்தை வைத்துக் கொண்டு பதில் எழுதும் வழக்கம் பலரிடம் கிடையாது. இதன் தவறுதலால் சிலசமயம் மனஸ்தாபங்கள் கூட உண்டாகி விடுகிறது. ‘நான் கேட்டதற்குப் பதிலைக் காணோம். இதென்ன கடிதம்’ என்று மனக்கசப்பு வேறு உண்டாகி விடுகிறது. அதுமட்டுமா? இவர்களுக்கு ஏன் அந்த விஷயம் தெரிய வேண்டும்? நான் லக்ஷ்யப்படவில்லை. இப்படி எல்லாம் நினைப்பதற்கும் அதன் மூலம் சிறிது சிறிதாக மனஸ்தாபங்கள் உண்டாவதற்கும் இடமாகி விடுகிறது. இதன் விளைவு பல இடங்களில் பெரிய சண்டையில் கொண்டு புகுத்தி விடுகிறது. இதை நீ அறிய வேண்டாமா! யாரிடமிருந்து எந்தக் கடிதம் வந்தாலும் அலக்ஷியமாக போடக்கூடாது. சிலர் தங்களுக்கு வரும் கடிதங்களைப் படித்த இடத்திலேயே போட்டு விடுவது, அல்லது பொட்டலம் கட்டிவிடுவது, குப்பையோடு குப்பையாக எறிந்துவிடுவது… இம்மாதிரி செய்கையின் லாபமோ, நஷ்டமோ அப்போது தெரியாது. அம்மாதிரி அஜாக்ரதையாகப் போட்டுவிட்ட கடிதங்கள் கழுகுக் கண்களை உடைய பிறர் கையில் கிடைத்து அவர்கள் அதை சாதகமாகவோ, பாதகமாகவோ உபயோகிக்க வசதி ஏற்பட்டுவிடக்கூடும். அதோடு மட்டுமில்லை; முக்யமான விஷயங்களை அவர்களறிந்து கொள்ள இடம் ஏற்பட்டுவிடும். இதை நான் ஏதோ கற்பனையும் வேடிக்கையாயும் எழுதியதாக நினைக்காதே. எங்கள் வீட்டிலேயே நடந்த ஒரு முக்யமான சம்பவத்தை உனக்கு எழுதுகிறேன்.

என் சிறிய தங்கைக்கு ஒரு நல்லவரனைப் பற்றி என் சினேகிதர் என் தகப்பனாருக்கு எழுதினார். அவர் கடிதத்தைப் படித்துவிட்டுப் பத்திரப்படுத்தாமல் போட்டு விட்டதற்கு பலன் என்ன ஆயிற்றுத் தெரியுமா? அக்கடிதத்தைப் படித்த எங்கள் எதிர்வீட்டுக்காரர் உடனே முயன்று அந்த வரனைத் தன் மகளுக்கு முடித்துவிட்டார். அதன் பிறகுதான் என் தகப்பனார் கண்ணை விழித்துக் கொண்டார்.

இதே போல் ஏதோ இடத்தில் வேலை காலியாயிருப்பதை எங்க மாமாவுக்கு அவருடைய மாமனார் எழுதியதைப் பிறர் பார்த்து உடனே அந்த வேலைக்கு வேறொருவர் விரைந்து சென்று, தான் புகுந்துவிட்டார். இதுபோல் பலவிதமான விஷயங்கள் இருக்கின்றன. ஆகையால் இனியும் நீ இப்படி அஜாக்ரதையாயிருக்காதே. உன் கல்யாண விஷயமாக நான் எழுதியதற்குப் பதில் போடு; அந்தப் பெண்ணின் தகப்பனார் என்னைத் தொணப்புகிறார். இல்லாவிட்டால் நேரில் அவரையே வந்து உன்னைக் காணும்படி செய்துவிடுகிறேன்.

உன் ப்ரிய நண்பன்,

நடராஜன்

”அடேயப்பா! கடிதங்களின் ரகஸ்யம் இத்தனை இருக்கிறதா? ஐயையோ! அன்று என் சிநேகிதை எழுதிய கடிதத்தை நான் மாடியில் அப்படியே போட்டு விட்டேனே! அது யாரிடமாவது கிடைத்துவிட்டால் அவளைப் பற்றியோ என்னைப் பற்றியோ என்ன நினைப்பார்கள்!” என்று தோன்றியதால் ஓசை செய்யாமல் மாடிக்கு ஓடி அக்கடிதத்தை எடுத்துத் தன் பெட்டிக்குள் பத்திரமாக வைத்தாள். கடிதத்தின் விஷயங்களை கடிதமே அறிவித்து ஜாக்கிரதைப் படுத்தியதை எண்ணி வியப்புற்றாள். உத்தமன் அயர்ந்து தூங்குவதால் மீண்டும் கீழே வந்து வேலையைத் தொடங்கினாள்.

”ஸௌபாக்கியவதி, ராஜலக்ஷ்மிக்கு ஆசீர்வாதம். உபயக்ஷேமங்கள்.

உன்கடிதம் வந்தது. சந்தோஷம். உனக்குப் பேரன் பிறந்தது பற்றி சந்தோஷம். உங்க எஜமானருக்கு வேலை உயர்ந்தது பற்றி சந்தோஷம். நீ வீடு வாங்கப்போவது பற்றி சந்தோஷம். வைர அட்டிகை செய்தது பற்றி சந்தோஷம். மற்றபடி வேறு விசேக்ஷமில்லை.

இப்படிக்கு

கமலா

”இதென்ன கடிதம்! ஒரு வரிக்கு ஒரு சந்தோஷம் என்று எழுதியிருப்பதும் வேடிக்கையாக இருக்கிறதே! உப்புசப்பற்ற இந்தக் கடிதம் ரஸிக்கவே இல்லையே… இதைப் பார்ப்போம்…’’

”ஸேதுவுக்கு அன்பு… க்ஷேமங்கள். உன் கடிதம் கிடைத்தது. இங்கு சவுக்யம். பானுமதி சுகம். ஸீதாகமலா… சுப்ரமண்யன் ராஜா வேணூ சித்தி அத்தே பாட்டி எல்லாரையும் கேட்டதாகச் சொல்லவும்

மோகனா

இக்கடிதம் உணர்ச்சியற்ற கட்டைபோல் தோன்றியதன்றி சுகப்படவில்லை.

”ஸௌபாக்யவதி அம்புஜத்திற்கு ஆசீர்வாதம். உபயக்ஷேமங்கள்.

உனது அன்பு ததும்பும் கடிதம் என்னை ஆனந்த உலகத்திற்கே தூக்கிக் கொண்டு பறந்தது. கடிதம் படிப்பதாக நான் நினைக்கவில்லை. ஏதோ கட்டுரை கதை பாடல் முதலியன படிப்பது போன்ற ருசியே உண்டாகியது. கிராமத்தில் உனக்கு எப்படி பொழுது போகிறது என்றா கேட்கிறாய்? பொழுதைப் போக்குவதற்கான உயர்ந்த வழியை அறிந்து கொண்ட பிறகு அவர்களுக்கு எங்கிருப்பதற்கும் ச்ரமமே தோன்றாது. இதுதான் நான் கண்டறிந்த உண்மை. வேலை செய்யும் நேரம் போக மற்றைய நேரத்தில் பகவன் நாமத்தை பூஜிப்பதில் நான் நிகரற்ற இன்பத்தை அடைகிறேன். பகவத் விஷயங்களை அறியப் பலவித பத்திரிகைகளைப் படிக்கிறேன். அருமையான புத்தகங்களைப் படித்துப் பயனடைகிறேன். இத்தனை விதங்களில் பொழுது போக்குவதற்கு நேரந்தான் போதவில்லை எந்த விதத்திலும் புத்தியைச் செலுத்தாது உட்கார்ந்திருந்தால் பட்டண வாஸத்திலிருந்தாலும் சரி, சொர்க்கத்திலிருந்தாலுங்கூட பொழுது போகாதுதான் வளரும். என்னுடைய வாழ்நாளில் நான் இதுவரையில் பொழுது போகாது தவித்த நாளே கிடையாது. பொழுது போதவில்லையே என்றுதான் அலைகிறேன். கல்யாணமாகிப் புக்ககத்திற்குப் போகும் வரையில் பள்ளிக் கூடப் படிப்பு, சங்கீதப் பயிற்சி, வீட்டில் என் தாயாருக்குச் சகாயமாக ஏதாவது வேலை செய்வது… இதற்கே பொழுது போதாது.

புக்ககம் போனபிறகு குடும்ப வேலையுடன் கணவனுக்கும் மாமியார் மாமனார் முதலியவர்களுக்கும் முக உல்லாஸமாயும், மரியாதையும் நடந்து கொண்டு சிச்ருஷை செய்வதற்கே போது போதாது. கணவருக்கு வேளா வேளைக்கு உடைகளைச் சரிபார்த்து வைப்பதற்கே மணிக்கணக்கில் பொழுது போய்விடும். மாமியாருக்கு பகல் நேரங்களில் அவர் விரும்புகிற பத்திரிகைகள், புத்தகங்கள் முதலியன படித்துக் காட்டுவது, கடிதம் எழுதச் சொல்கிறவர்களுக்குக் கடிதம் எழுதுவது, இதற்கே பொழுது போதாது. அதற்குப்பிறகு என் குழந்தைகளின் பாடு சரியாகிவிடும். குடும்பத்தில் பல ஆட்கள் இருப்பினும் அளவு தெரிந்து வேலை செய்தால் ஓய்வு கூடக் கிடைக்குமா! குழந்தைகள் பெரியவர்களாகிய பிறகு மாமியார் வகித்த வீட்டுப் பொறுப்பு என் தலை மீது விழுந்தது. இதுபோல் எத்தனையோ! இப்போது என்னுடைய பொழுதை நான் ஒரு நிமிஷங்கூட வீணாக்காமல் பகவத் விஷயத்தில் கழிக்கிறேன். அதுவே எனக்குப் பேரின்பமாகவிருக்கிறது. நீ பொழுதே போகவில்லை என்று எழுதியிருப்பது வியப்பாகயிருக்கிறது. உனக்கு சத்தியாய் குழந்தை குட்டிகள் இல்லை என்பதால் பொழுது வளர்வதுபோல் தோன்றலாம்.

சின்னம்மா! நான் சொல்கிறேனே என்று கோபிக்காதே. அரிது அரிது மானிடராவது அரிது என்பது பெரியோரின் வேதவாக்கு. அத்தகைய சிறந்த மானிட வாழ்வின் மகிமையறியாது பொழுதை வீணாகக் கழிக்கக் கூடாது. இப்போது நாம் சுதந்தரமடைந்துவிட்டோம். இனிமேல் ஆங்கில பாஷைக்கு மதிப்பு முன்போல் வளர முடியாது. நம் தேச பாஷை இனி ஹிந்தி பாஷைதான். ஹிந்தியை நீ கற்றுக் கொள்வதில் இறங்கிவிட்டால் அதன் ருசி உன்னை மிகவும் வசீகரிக்கச் செய்துவிடும். பொழுது போகும். ஒரு பாஷையும் வந்ததாகும். அதை நீ பிறருக்கும் போதிக்கலாம்; அதுவே உனக்கு வழிகாட்டிப் பொழுதை வளைத்துக் கட்டிக்கொண்டு போகும். இதர விஷயங்களில் நீ புத்தியை செலுத்தாது உண்பதும் உறங்குவதுமாகவே இருந்தால் எப்படித்தான் பொழுது போகும்? ஹிந்தி புத்தகங்கள் வாங்கியனுப்புகிறேன். பொழுது போக்குவதற்கு நாம் நேரத்தை வகுத்துக் கொள்ள வேண்டுமேயன்றி பொழுது தன்னைத்தான் கடத்திக் கொண்டுபோக மார்க்கம் காட்டாது என்பதை மட்டும் மறக்காதே. நீ சிறிய வயதிலிருந்தது போலவே சோம்பேறியாய் இன்றும் இருக்க முடியாது. அதனால்தான் ‘நீ எப்படி பொழுதை போக்குகிறாய்?’ என்று கேட்டு எழுதியிருக்கிறாய். ஏதோ எனக்குத் தெரிந்ததை எழுதினேன். உன் பதிலிலிருந்துதான் உன் உள்ளத்தின் போக்கை அறியவேணும்.

இங்ஙனம்

சுமதி

இக்கடிதம் உண்மையில் சித்ராவுக்கே புத்திபுகட்ட எழுதியதோ என்று தோன்றியது. ”பொழுது போக்க வகையில்லை” என்று கூடச் சொல்ல இடமிருக்கிறதா! என்கிற உயர்ந்த கருத்தல்லவா இதில் ஜ்வலிக்கிறது. பேஷ். எனக்கும் ஒரு நல்ல படிப்பினையாயிற்று” என்று இவள் கடிதத்தின் ஸாரத்தில் லயித்திருக்கையில் மணி 12 முறை அலறியது கேட்டதும் ”அடாடா! இத்தனை நேரமாகிவிட்டதா?” என்று திடுக்கிட்டவாறு எழுந்து போய் படுத்துக் கொண்டாள். அக் கடிதத்தின் பலன், தானும் ஹிந்தி பாஷையைக் கற்க வேண்டுமென்கிற ஆசையைக் கிளறி விட்டது.

12

கடிதங்களின் வினோத கவர்ச்சியின் பயனாக சித்ராவின் முகத்தில் முன்பிருந்த கடுகடுப்பும் சிடுசிடுப்பும் மறைந்து சிரிப்பும் சுறுசுறுப்பும் தாண்டவமாடுவதை அறிந்த உத்தமனின் உள்ளம் பூரித்தது. இப்போதெல்லாம் எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கெல்லாம் சித்ராவே கடிதம் எழுதும் வேலையில் ஈடுபட்டு அதைத் தன் வாழ்க்கை இன்பமாயும், கணவனின் திருப்பணியாயுமே எண்ணினாள். அது மட்டுமில்லை. கணவனுடன் சரிசமமாக ரிஜிஸ்தர் புத்தகங்களில் எழுத வேண்டிய வேலைகளையும் தானே கூடச் செய்ய வேண்டுமென்கிற ஆசை உண்டாகியது.

அன்று அசாத்ய வெயில் கொளுத்துகிறது. வியர்வை சொட்ட உத்தமன் வேலை செய்து கொண்டிருக்க, சித்ரா தானாக உள்ளே சென்று விசிற ஆரம்பித்தாள். இச்செய்கை உத்தமனை பிரமிக்கச் செய்தது. அன்பும் ஆர்வமும் ஜ்வலிக்க அவள் முகத்தை ஏற இறங்க பார்த்தான். ”சித்ரா! வேண்டாம்… உன் கை வலிக்கும். பட்டணவாஸத்திலிருந்தால் ஒரு பித்தானை அழுத்தினால் விசிறி கடகடவென்று சுற்றும். இங்கு பாவம்! கை வலிக்க நாட்டுப்புறத்தானுக்கு ஒரு விசிறியால்…” என்பதற்குள் சித்ரா கோபத்துடன் ”போதும்! இம் மாதிரி என்னைக் குத்திக்காட்டிப் பேச வேண்டாம்… நான் ஏதோ அறியாமையால்… முட்டாள்தனமாக நடந்து கொண்டது பற்றி வருத்தப்படுகிறேன். அந்த அத்தியாயம் அதோடு முடிந்துவிட்டது. என் புத்தி திருந்திவிட்டதால் இனியும் பழைய விஷயங்களையே பேசி என்னைப் புண்படச் செய்ய வேண்டாம். நானும் உங்கள் காரியத்தில்கூட ஏதாவது ஒத்தாசை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏதாவது கொடுங்கள்.

மணியார்டர் பாரங்களை ரிஜிஸ்தரில் பதிவு செய்கிறேன்’…’ என்று அவள் சொல்வதை அவனால் நம்பவே முடியவில்லை.. விறைக்க விறைக்க அவளைப் பார்த்து… ‘‘சித்ரா! நிஜமாகவா… உண்மையாகவா நீ இப்படிப் பேசுகிறாய்!’’ என்று வியப்பே வடிவாய்க் கேட்டான்.

அப்போது யாரோ முக்கியமானவர்கள் பேச வந்ததால் உத்தமன் வாசலுக்கு எழுந்து போனான். அப்போதும் மேஜை மீதிருந்த கடிதங்கள் இவள் கண்களைக் குத்தின.

”கல்யாணிக்கு ஆசீர்வாதம். உபயக்ஷேமம்.

பனைமரத்தடியில் அமர்ந்து பால் குடித்தாலும் கள் குடித்ததாக உலகம் மதிப்பிடும். இந்த உண்மையை நீ அறியாது ‘ஸோஷல், ஸோஷல்’ என்கிற கவசமணிந்து கண்டவர்களுடனும் பழகுவது சரியல்ல. நீ இன்னும் 25 வயதைக் கடக்காத இளங்கொடி என்பதை மறந்தாய் போலும். கல்யாணமாகி தம்பதிகளாகச் சேர்ந்து எத்தகைய வேலையைச் செய்தாலும் அதற்குள்ள மதிப்பும் கண்ணியமும் வேறுதான் என்பதை நீ அறிய வேண்டும். உன் மனத்தில் கல்மிஷமில்லாதிருக்கலாம். ஆனால் உலகம் அதை நம்பாது. ஆகையால் வீண் ஆட்டம் ஆடாதே. பெண்களின் கடமையும் உரிமையும் என்கிற ஒரு அபூர்வமான புத்தகம் ஒன்று உனக்கனுப்பி இருக்கிறேன். அதை நீ தவறாது படித்துப் பயனடைய வேண்டும். நான் உனது பள்ளிகூட உபாத்தியாயினியாயிருந்த சுதந்திரத்தினால் இதை எழுதுகிறேன்; வித்தியாசமாக எண்ணாதே. கணவனுடைய நிழலாகவிருந்து கணவன் மனங்களிக்க உழைப்பதுதான் பெண்களின் தர்மமாகும். இதையறியாதவர்களின் வாழ்க்கை ஸாரமற்ற உப்புசப்பற்ற ஊனவாழ்க்கை போன்றதுதான்.

உன் உபாத்தியாயினி,

மீனாக்ஷி

சித்ராவின் வியப்பு கரைபுரண்டது. தன் கணவனுக்கு தான் கூட ஒத்தாசையாக வேலை செய்ய வேண்டும் என்று முன்வந்துள்ள இதே நிமிஷத்தில் இதே புத்திமதியை போதிக்கும் கடிதமாகவிருப்பதால் பகவானின் லீலைகளின் மதிப்பும் ரகஸ்யமும் அவள் இதயத்தில் பளிச்சென்று தோன்றியது. அவளையறியாது பகவானை வணங்கினான்.

”அன்புள்ள சிவகாமிக்கு ஆசீர்வாதம். உபயயேக்ஷமங்கள்.

உன் பெண்ணுக்கு ஏதோ உடம்பு சரியில்லை. படுத்திருக்கிறாள்; க்ஷயரோகமாயிருக்குமோன்னு தோன்றதுன்னு காமு சொன்னாள். இதைக் கேக்கற போதே என் வயித்துல குபீர்னு சங்கடம் செய்தது. ஏதோ நாலு புள்ளைகள் நடுவிலே மருந்துபோல ஒரே பெண் பிறந்திருக்கு. அதுக்கு ஒரு ஆபத்தும் வராதிருக்க வேண்டுமென்று பயம் அடித்துக் கொள்கிறது. அடியம்மா! சிவகாமூ! பெண்ணை ஜாக்ரதையாக பார்த்துக்கோம்மா! ஒங்க குடும்ப விஷயம் உனக்குத் தெரியுமோ தெரியாதோம்மா! க்ஷயரோகம்னு காதுலே விழும்போதே என்னமோ பண்றது. ஒங்க மாமியார் க்ஷய ரோகத்திலேதான் செத்துப் போயிட்டா. ஒங்க நாத்தனாருக்கும் இதே மாதிரி இந்த வயசிலேதான் க்ஷயரோகம் வந்து ஆறே மாஸத்துல கண்ணெ மூடிண்டூட்டா… ஒங்க மாமியாருக்கு அம்மாகூட க்ஷயரோகத்துலேதான் செத்தாள்… இதெல்லாம் குடும்பத்து தொத்துன்னு சொல்வாம்மா… காசெ காசாக பாக்காமே வயித்தியம் பண்ணு. ஒன் வயிறு நல்லதா இருக்கணும். ஒனக்கு ஒத்தாசைக்கு வேணுமானா எனக்கு எழுதும்மா. நான் வரதுக்குத் தடையே இல்லை.

உன் அத்தை

கோமதி

இந்த அசட்டுக்கடிதம் சித்ராவுக்கு எரிச்சலாகவே இருந்தது. ”போறுமே! கடிதத்திலேயே இத்தனை அழகா எழுதுகிறவளை இன்னும் துணைக்கு வேறு அழைத்துக் கொண்டால் வேறு வினை வேண்டாம். அபசகுனிபோல் எதையாவது சதா சொல்லிக் கொண்டேதான் இருப்பாள். நோயாளிகளுக்கோ, அவர்களைச் சேர்ந்தவர்களுக்கோ, தைரியமும் ஹிதமும் பேசி அவர்களுடைய கவலையைப் போக்குவது லக்ஷணமா?

இப்படி இன்னும் கடுக்காய் கொடுத்துக் கலக்குவது லக்ஷணமா… என்று அந்த பத்திரிகையில், ‘கடிதம் எழுதுவதும் ஒரு கலை’ என்று படித்ததின் உண்மை இப்போது நன்றாகத் தெரிகிறது. ‘இந்த மகாராஜியை வரவழைக்காதிருக்க வேண்டும்!’ என்று தனக்குள் எண்ணியபடியே மற்றொன்றின் மீது படை எடுத்தாள்.

”அன்புள்ள கந்தப்பா!

உன்னுடைய ஆள்மூலம் சகல விஷயங்களையும் அறிந்தேன். உன்னை இத்தனை தூரம் அவமானப்படுத்திய அந்த நாயை நீ சும்மாவிடக் கூடாதுதான். நான் புலன் விசாரித்ததில் அந்த அல்பக் கழுதை மகன் நாளை இரவு வண்டியில் வருகிறானாம். விக்ரமபுரத்து ஜங்ஷனில் சரியாக இரவு 12 மணிக்கு வருகிறது. அரை மைல் தூரத்திலுள்ள ஆலம்பட்டி கிராமத்திற்கு இரவே போகப்போகிறானாம். ஆள்களும் வண்டியும் ஸ்டேஷனுக்கு வருமாம். அவர்களை எப்படியாவது உன் ஆட்கள் மூலம் ஸ்டேஷனுக்கு வராதபடியோ அல்லது ஸ்டேஷனுக்கு வந்த பிறகோ மறைத்துவிடும்படி ஏற்பாடு செய்துவிடு. அவனை வெகு சுலபமாக வேலை தீர்த்துவிடலாம். முடிந்தால் நானும் கூட வருகிறேன். தாமதிக்க வேண்டாம்.

இங்ஙனம்

வீரபத்ரன்

இதுவரை படித்த இத்தனை கடிதங்கள் ஆச்சரியம், வெறுப்பு, அன்பு, கோபம், அலக்ஷியம், பரிகாஸம், ஹாஸ்யம் முதலிய உணர்ச்சிகளைக் கொடுத்தனவேயன்றி இக்கடிதத்தைப் படித்ததும் அவளையறியாது தலை சுற்றியது. பயங்கரமான உணர்ச்சி தோன்றி மார்பு படபடவென்று அடித்துக் கொண்டது. ”இதென்ன கொடுமை! ஆளையாவது வேலை தீர்ப்பதாவது? இன்னதென்றே ஒன்றும் தெரியவில்லையே. நாம் கவரைப் பிரித்துப் பார்த்தது அவருக்குத் தெரிந்தால் கோபிப்பாரோ என்னவோ! இக்கடிதம் விலாசதாருக்குப் போய்ச் சேர்ந்தால் ஏதோ பெரிய அனர்த்தம் விளைந்துவிடும் போலிருக்கிறதே! என்ன செய்வது?” என்று யோசிக்கையில் அவளையறியாது பயத்தினால் ஏதோ சித்திரவதை செய்தது.

இக்கடிதம் ஏதோ பெரிய விபத்தை விளைவிக்கும் கொடிய பாணம் போன்ற கடிதந்தான் என்பது அவளுக்குத் தெரிந்துவிட்டதாகையால் அவள் அதை ஏதோ அசுர தைரியத்துடன் தன் மடிக்குள் சொருகிக் கொண்டாள். வாசலில் சென்ற உத்தமன் வந்திருப்பவருடன் பேசிக்கொண்டே இருந்தான். இதுவரையில் இருந்த உத்ஸாகமோ பரபரப்போ காரணம் தெரியாமல் மறைந்து ஏதோ புதிய வேதனைதான் செய்தது.

13

உத்தமன் வேலைகளை முடித்துக் கொண்டு படுக்கைக்கு வந்தான். சித்ராவின் முகம் ஏதோ மாறுதலை அடைந்திருப்பதை அறிந்த உத்தமன் காரணம் தெரியாமல் மனத்திற்குள்ளேயே சற்று யோசித்தான். ”சித்ரா! இன்னும் தூங்கவில்லையா! ஏன் உன் முகம் ஏதோ ஒரு மாதிரி இருக்கிறது! நான் சாயங்காலமே கவனித்தேன். உடம்பு ஏதாவது சரியில்லையா! எதுவானாலும் நீ பயப்படாமலும் கூச்சமின்றியும் சொல்லு” என்று அன்புடன் அவள் கன்னத்தை வருடியவாறே கேட்டான்.

சித்ராவின் மடியில் கடிதமிருப்பதை அவள் வெகுபாரமாயும் பயங்கரமாயும் எண்ணினாள். இதைக் கணவனிடம் எப்படிச் சொல்வது? என்ன செய்வது? என்று அப்போது நேரில் கேட்டதும் அவனிடமே சொல்லிவிட வேண்டும் என்கிற எண்ணம் உண்டானதால், எழுந்து உட்கார்ந்தாள்.

”முதலில் தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும். உண்மையில் நான் செய்தது குற்றமோ! குற்ற மில்லையோ! அதனால் சில உயிர்களைக் காக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதை நாம் விடக்கூடாது. ஏதோ ஏன் பொழுதுபோக்கிற்கு விளையாட்டாக ஆரம்பித்த ஒரு காரியத்தில் இந்த முக்கியமான விஷயம் கிடைத்துள்ளது” என்று கூறியவாறு மடியில் சொருகியிருந்த கடிதத்தை எடுத்துக் கொடுத்தாள்.

ஏற்கனவே இவள் கடிதங்களைப் படிக்கும் விஷயம் தெரிந்தும் தெரியாதுபோல நடித்தவாறு, ”இதென்ன கடிதம் சித்திரா! உனக்கு வந்ததா… இது வேறு யாருக்கோ அல்லவா வந்திருக்கிறது? அடா அடா! இதை ஏன் நீ பிரித்தாய்?” என்று வியப்புடன் கேட்டான்.

மிகவும் பயந்துவிட்ட சித்திரா, தான் கடிதம் படிக்க ஆரம்பித்ததனால் தன் புத்தி திரும்பியதாயும், கடிதத்தின் மூலம் உலகானுபவம் தனக்குத் தெரிவதாயும், தான் பத்திரிகையில் பார்த்த கட்டுரையை எழுத ஆவலுள்ளவளாயிருப்பதால் அதற்காகவே மேன் மேலும் படித்துவருவதாயும், இக்கடிதம் ஏதோ ஆபத்திருப்பதால் பயமாயிருக்கிறதென்று சகலத்தையும் மடமடவென்று ஒப்பித்துவிட்டாள். உள்ளுக்குள்ளே மனது துடிக்கும் துடிப்பும் பயமும் கண்கள் மூலம் நீர் வடித்து கன்னத்தில் வழிந்து தெரிந்தன.

உத்தமன் அவளை ஆறுதலுடன் பார்த்து, ”சித்ரா! இதற்காகக் கண்ணீர்விடாதே. பிறருக்கு வரும் கடிதத்தை நாம் பார்ப்பது மகா குற்றந்தான். ஆனால் இக்கடிதத்தின் மூலம் நாம் அந்த உயிரைக் காப்பதோடு அத்தகைய துராக்ருத மனிதன் யாரு? யாரிடம் அவன் பழிதீர்க்கப் போகிறான்? என்பதை நாம் ஒருவாறு அறிந்து உதவி செய்யலாம். அழாதே சித்ரா! உன்னுடைய மனம் இத்தனை இளகியது என்றும் பச்சாதாபம் நிறைந்தது என்றும் அறிய எனக்குச் சந்தோஷமாயிருக்கிறது. இக்கடிதத்தை நீ கிழிக்காதே. அப்படியே இருக்கட்டும். கடிதத்தின் வாரிசுதாரர்களுக்கும் அனுப்ப வேண்டாம். இதைப்பற்றி நான் விசாரிக்கிறேன். கடிதங்களே உன்னுடைய மனக்கசப்பை மாற்றி எனக்குப் பேரின்பமளிக்கச் செய்ததால் நான் உன்னைக் கோபிக்கவே இல்லை. உன் மனோ விருப்பப்படியே கட்டுரை எழுத முயற்சி செய்” என்று சமாதானமாயும் மிக்க அன்புடனும் கூறினான்.

மறுதினமே அதிகாலையில் உத்தமன் ஆபீஸ் அறையிலிருக்கையில் கருத்து குட்டையான ஒரு பருத்த மனிதன் கட்டை கட்டையாக நிற்கும் பயங்கரமான மீசையுடன் தபாலாபீஸுக்கு வந்து, ”சார்! என் விலாசத்திற்கு ஏதாவது கடிதமிருக்கிறதா பாருங்கள்” என்றான்.

ஏற்கனவே மனத்தில் வேலை செய்யும் கடிதத்தின் சொந்தக்காரன் இவனாகத்தானிருக்குமோ! என்று ஒரு எண்ணம் மின்னல்போல் தோன்றியது. மனிதனின் முகத்தோற்றமும் குரூரமான பார்வையும் ஏதோ சந்தேகத்தை உண்டாக்கின. அதை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் ”திண்ணைமீது உட்காருங்க சார்! இனிமேல்தான் கட்டை அவிழ்க்கப்போகிறேன். உங்கள் விலாஸம் எது?’’ என்று வினயமாக கேட்டான். ‘‘சோமசுந்தர முதலியார், பச்சமலை கிராமம்’’ என்றதும் உத்தமனுக்கு ஆச்சரியமாகிவிட்டது. தான் நினைத்தது தப்பு. இவன் யாரோ பாவம்! ஸ்வரூபம் இருக்கிற அழகு இதுபோலும் என்று நினைத்தபடியே கடிதத்தைத் தேடினான். ஒரு கல்யாணக் கடிதம் இந்த விலாஸத்திற்கு வந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுடன் அவனிடம் கொடுத்தான்.

வந்த மனிதன் ”நமஸ்காரங்க. நான் போய்வரேன். என் தங்கச்சி மவளுக்குக் கண்ணாளம். இன்னும் கடலாசி வல்லிங்களே, ஒரு வேளை மறந்துகிறந்து பூட்டாங்களா! அல்லது தபால்லே தவறிட்டதா இன்னு நெனைச்சேன். இந்தப் பக்கம் ஒரு வேலையா வந்தேன். நேரேயே கேட்டுகிட்டுப் போவலாம்னு கேட்டேன். வரேனுங்க” என்று கூறியபடியே போய்விட்டான்.

தோற்றத்தினால் மட்டும் எதையுமே நினைக்கக் கூடாது என்கிற தத்துவத்தை அறிந்து வியப்புற்றான். இதுவரையில் கடிதங்கள் சம்பந்தப்பட்டவரையில் அவன் எத்தகைய உணர்ச்சியோ, பயமோ அடைந்ததில்லை. அவைகளைப் பார்க்காததே அதற்கு காரணம். ஏதோ பொழுதுபோக்கிற்காக சித்ரா படிக்க வாரம்பித்ததில் கூட ஒரு துப்பறியும் வேலை கிடைத்து விட்டதையும், ஒரு போராபத்தைத் தடுக்கும் வேலை கிடைத்து விட்டதையும், ஒரு பேராபத்தைத் தடுக்கும் உபகாரமான உபயோகமான காரியம் கிடைத்ததையும் பற்றிச் சந்தோஷமே அடைந்தான். எனினும் இதை வெளியிடாமலேயே ஆபத்தைத் தடுப்பது எப்படி, கடிதத்தை இன்றைய கட்டுகளுடன் கிராமத்துக்கு அனுப்ப வேண்டுமே! என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கையில் ஒரு வைஷ்ணவ பாட்டியம்மாள் வந்து ”ஐயா! காசிப்பட்டு கிராமத்திலே இருக்கும் திருகோகர்ணம் திருவேங்கடதாதா சாரியாருக்குக் கடிதம் ஏதாவது வந்திருக்கா பாருங்கோ” என்றாள்.

உத்தமன் கட்டுகளைக் கிளறி பாட்டியம்மாள் கேட்ட கடிதத்தை எடுத்தான். எல்லாம் நல்லதற்கே! என்கிற பழமொழியை உத்தமன் என்றும் மறக்காதவன். இந்த ஊர் விலாஸத்திற்குத்தான் அவனும் சித்ராவும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் பயங்கர கடிதம் வந்திருக்கிறது என்பது இக்கடித விலாஸத்தைப் பார்த்த உடனே நினைவு வந்ததால் பாட்டியம்மாளை மரியாதையுடன் உட்காரச் செய்து பின், ”பாட்டீ! கடிதம் வந்திருக்கிறது. அவர் உங்கள் மகனா!” என்று கேட்டான்.

பாட்டி, ‘‘என் மகன்தான், அவன் ஊரிலில்லை. ‘அவச்யமான கடிதம் வரும், படித்து விஷயமறியுங்கள்’ என்று சொல்லிவிட்டுப் போனான். சம்பந்தி வீட்டிலிருந்து வரவேண்டும். அதனால் கேட்டேன். எனக்குப் படிக்கத் தெரியாது. தயவுசெய்து படித்துக் காட்டுங்கோ’’.

உத்தமன், ‘‘ஏம் பாட்டீ! உங்கள் கிராமம் ரொம்பப் பெரியதா? பணக்காரர்கள் நிறைய இருக்கிறார்களா? ஊர் நல்ல வசதியா பாட்டீ?’’

கிழவி, ‘‘ஆமாம்! ஊரைப் பார்க்கலே! பிராம்மணா வீடு நாலே நாலுதான். மத்ததெல்லாம் மற்றவா வீடுதான். அதிலும் ஒரு மகானுபாவன் இருக்கான் பாருங்கோ. சோதான்னா சோதாதான். அவனைப் பார்த்தாலே கிராமத்து ஜனங்களுக்கு பயம். அந்த மனிதனைத் தேடிக் கொண்டு கரடுமுரடான வழிகளைத் தாண்டிக் கொண்டு எத்தனை கார்கள் வருகிறது தெரியுமா? அவர்களில் முக்கால்வாசி பேர்கள் சினிமாக்காரர்களாம். சனியன் அதுபோகட்டும். சடிதத்தைப் படியுங்கள்’’.

அப்போது சித்ராவும் அங்கிருந்ததால் தம்பதிகளிருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அந்தப் பார்வையின் ஆழமான கருத்தில் பல ரகஸிய வார்த்தைகள் மவுனமாகவே இருவர் இதயத்திலும் பாய்ந்தன.

உத்தமன், ‘‘ஏன் பாட்டி! அத்தகைய போக்கிரி என்றால் அவனை ஊரார் அடக்காமல் எப்படி சும்மா வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவன் பேரென்ன!’’ என்று கேட்டான்.

பாட்டி, ‘‘கந்தப்பன் என்பது அவன் பேரு. அவனிடம் யாரப்பா எதிரில் போய் பேசமுடியும்? அயோக்யன் என்பதை அறிந்தும் ஒருவராவது அதை எதிரில் சொல்லத் துணியவில்லை. துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதையே நாங்கள் வாழ்க்கையில் அனுஷ்டித்து வருகிறோம். ஊரில் யாருடனும் கூடாதென்பது என் மகனுடைய எண்ணம். அதனால்தான் பேசாமலிருக்கிறான். எனக்கு நேரமாகிறது. ஊருக்குப் போனா முனிசீப்பைப் படிக்கச் சொல்லி விஷயம் தெரிய வேண்டும். படிக்கத் தெரியாத ஜனங்களிலிருந்து பயனேது! சற்று படித்துக்காட்டப்பா’’ என்று கெஞ்சும் பாவனையில் கேட்டாள்.

”சித்ரா! எனக்கு வேலை அவசரமாகவிருக்கிறது. இதை நீயே படித்துக்காட்டு” என்றான் உத்தமன். உடனே சித்ரா படிக்கவாரம்பித்தாள்.

”ஸ்ரீமதே ராமானுஜாய நம!

ஸ்ரீமதித்யாதி எழுந்தருளி இருக்கும் ஸ்வாமியின் தேனே மலரும் திருவடித் தாமரைகளில் அடியேன் சம்மந்தி கோமடம் கிடாம்பி, அழகிய மணவாள தேசிகாச்சாரியார் தண்டன் சமர்ப்பித்த விண்ணப்பம். இவ்விடம் தாஸவர்க்கங்கள் க்ஷேமம். அவ்விடம் நித்திய ததீயாராதனக்ரந்த காலக்ஷேபாதிசங்களுக்கு ஸ்ரீமுகம் க்ருபை செய்தருள பிரார்த்திக்கின்றேன்.’’

இதுவரையில் வைஷ்ணவ பரிபாஷையைக் கரடு முரடான வாசகத்தில் படித்தறியாத சித்ராவுக்கு இதைச் சேர்த்து வாசிக்க வாயில் பதம் சரியாகப் புரளாமல் தத்தித் தடுமாறியும் இடை இடையே சிரித்தவாறும் படித்து ”பாட்டீ! இதென்ன பாஷை. எனக்கொன்றுமே புரியவில்லையே” என்றாள்.

கிழவி: இது ஸ்ரீ வைஷ்ணவ பாஷையடீயம்மா! மெல்ல விஷயத்தைப் படித்துச் சொல்லு. எனக்கு நேரமாகிறது; நான் போகணும் என்றாள். மறுபடியும் சித்ரா படிக்கவாரம்பித்தாள்.

”அடியேனுக்குத் தேவள் எழுதிய ஸ்ரீ முகம் கிடைக்கப்பெற்றுச் சேவித்துக் கொண்டேன். திருக்குடந்தை திருமலாச்சாரியாருடைய திருக்குமாரனான சிரஞ்சீவி திருநாராயணன் தற்போது திருவரங்கத்துக் காலேஜில் படிக்கிறான். பையனின் பரம்பரை குலகோத்திர ஆசாரிய திருவடி சம்பந்தம் அனுஷ்டான வ்யவகாரங்கள் முதலியவற்றை அடியேன் விசாரித்த பிறகே விண்ணப்பித்துக் கொள்கிறேன். லௌகீக விஷயங்களை ஸ்வாமி நேரில் க்ருபை செய்தால் பரிமாறிக் கொள்ளலாம். ஸ்ரீ முகம் ஸாதித்தருள ப்ரார்த்திக்கின்றேன்

இங்ஙனம்

கோமடம் கிடாம்பி

அழகியமணாள தேசிகதாஸன்

‘அப்பாடா!’ என்று ஒரு பெருமூச்சுடன் கடிதத்தை முடித்த சித்ரா கடகடவென்று சிரித்தாள். கிழவியும் கூட சிரித்துக்கொண்டே ”ஒவ்வொரு ஜாதிக்கு ஒவ்வொரு வழக்கம். எங்க ஜாதி வழக்கம் இது. சரி நான் போய் வருகிறேன். நிரம்ப சந்தோஷம்” என்று கூறிச் சென்றாள்.

கிழவி கடிதம் பெற வந்ததில் தங்களுக்கு வேண்டிய விஷயம் கிடைத்தது பற்றி தம்பதிகள் சந்தோஷமும் வியப்பும் அடைந்தார்கள். தபால்கள் அனுப்ப வேண்டிய ரேமாகிவிட்டதால் ‘இக்கடிதத்தை அனுப்புவதா! கிழித்தெறிந்து விடுவதா!’ என்கிற குழப்பம் உத்தமன் மனதில் பலமாக வேலை செய்தது.

14

”சித்ரா! நான் வெளியில் போய்வருகிறேன். நீ தைரியமாய் பயப்படாமலிரு. ஏனென்றால், முடிந்தால்தான் இரவு வருவேன். இல்லையேல் காலையில்தான் வருவேன். உன் துணைக்கு வீடு பெருக்கும் வேலைக்காரியை இருக்கச் சொல்லி இருக்கிறேன்” என்றான்.

சித்ரா, ‘‘அக்கடிதம் விஷயமாக நீங்கள்…’’

உத்தமன்,‘‘உஸ்… உரக்கப் பேசாதே சித்ரா!’’ என்று ரகஸியமாகச் சொல்லும்போது, ”சார்!’’ என்ற குரல் கேட்டு எழுந்து வந்து பார்த்தான். வந்திருப்பது யாரென்று தெரியாததால் மரியாதை செய்து உட்காரும்படி கூறி, ‘’என்ன வேண்டும்?’’ என்று வினயமாகக் கேட்டான்.

வந்தவர், ‘‘எனக்கு தபால் தலைகள், கவர்கள் எதுவும் வேண்டாம். நீங்கள்தான் வேண்டும்’’ என்றார்.

உத்தமனுக்கு தூக்கிவாரிப்போட்டது. ‘ஒருவேளை கிழவி சொல்லிய அந்த மனிதனாகவிருக்குமோ!’ என்று சற்று அச்சத்துடன் பார்த்தான்.

வந்த மனிதர் கடகடவென்று சிரித்தவாறு ”என்ன சார் விழிக்கிறீர்கள்? மரியாதையாய் என்னோடு கூட வருகிறீர்களா அல்லது…’’ என்று பேசுவதைக் கேட்ட சித்ராவுக்குக் குடல் நடுங்கிப் பதறியது. திடீரென்று ஒரு மனிதன் இப்படி வந்து அழைப்பதைப் பார்க்க யாருக்குத்தான் வியப்பாக இருக்காது? அதோடு முன்பின் அறியாதவனாகவிருக்கிறான். ஏற்கனவே அனாவசியமான கடிதத்தினால் ஒரு குழப்பம் வாட்டுகிறது. கிழவி வேறு காலையில் அந்த மனிதனைப் பற்றி விமரிசனம் செய்திருக்கிறாள். இத்தனை பயத்துடன் தம்பதிகள் பதைபதைத்து நிற்பதை முகத் தோற்றத்தினால் அறிந்த அம்மனிதர் ”சார்! இப்படிப்பட்ட பயந்தாங்கொள்ளியை நான் பார்த்ததே இல்லை. நீங்கள்தானா ஒரு பக்கா பேர்வழியைப் பிடித்துத் தரப்போகும் சூரப்புலி? ஐயோ பாவம்! பயப்படவேண்டாம். இதோ இச்சீட்டைப் பாருங்கள். நான் யார் என்பது தெரியும்” என்று ஒரு சீட்டை நீட்டினார்.

”போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏகாம்பரம்” என்று அச்சடித்திருந்ததைப் பார்த்ததும் முகத்தில் அசடு வழியச் சிரித்தவாறு உத்தமன், ”சார்… சார்… தாங்கள் துப்பறியும் இலாகாவைச் சேர்ந்தவர்கள் என்றும், துப்பறியும் ராஜாராம் நாயுடுவிடம் பழகுகிறவர்கள் என்றும் கேள்விபட்டிருக்கிறேன். அந்தத் திறமையை இப்போது எங்களிடமே காட்டி விட்டீர்கள்” என்று சிரித்தான்.

”சார்! சந்தடி செய்யாது கிளம்புங்கள். போவோம், அந்த இடத்திற்கு. முன் ஏற்பாடாக எல்லாம் தயார் செய்து விட்டேன். அம்மா! பயப்பட வேண்டாம். உங்கள் கணவருக்கு எத்தகைய ஆபத்துமின்றி பார்த்துக் கொள்கிறேன். அவர் என்னை நேரே அங்கு வரும்படித்தான் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அவர் இங்கிருந்துத் தனியாக வந்தால் அந்த துஷ்டர்களால் ஏதாவது அபாயம் வருமோ என்ற பயத்தினால் நானே வந்தேன். தைரியமாயிருங்கள்’’ என்று சித்ராவுக்கு தைரியம் கூறிவிட்டு உத்தமனை அழைத்துச் சென்றார்.

சித்ராவுக்கு மட்டும் உள்ளுக்குள் சற்று திக்குதிக்கு என்று பயமாகவே இருந்தது. சற்று நேரம் எதன்மீதும் மனது செல்லாது ஏதோ பிரமை பிடித்தது போல் உட்கார்ந்திருந்தாள். மறுபடியும் மேஜைமீது தவங்கிடக்கும் கடிதங்கள் இவளை அழைத்ததும் அதை அன்புடன் எடுத்து படிக்கலானாள்…

”அருமை நண்பன் அம்பலவாணனுக்கு உபயக்ஷேமங்கள்.

நீ கிராமத்திற்குச் சென்று சரியாக ஒரு மாதமாகிறது. இந்த ஒரு மாத காலத்தில் டாக்டரின் புத்திமதிப்படிக்கு நடந்துகொண்டு சிறிது உடம்பு தேறியிருக்கும் என்று நம்புகிறேன். நான் அடிக்கடி கடிதம் எழுத வேண்டுமென்று நீ கட்டாயப்படுத்துவதால் எழுதுகிறேன். உன்னுடைய பதில் கடிதமோ, பல கேள்விகளை பாணம் போல் தொடுத்து விடுத்திருப்பதால் அவைகளுக்கெல்லாம் பதில் எழுத எனக்கு நேரமே போதவில்லை. ஏதோ சிலவற்றிற்கு எழுதுகிறேன். ‘ஹாஸ்யம் என்பது எத்தனை வழிகளில் இருக்கிறது? எப்படி எப்படி அவைகளை உபயோகப்படுத்தலாம்?’ என்று கேட்டிருக்கிறாய். இதைப் பற்றி நாம் நேரில் பேசினால் மணிக்கணக்காகப் பேசி பழக முடியும். இவைகளை ஒரு குறித்த அளவில் கடிதத்தில் எழுதுவதென்றால் மிக மிக சிரமமாக இருக்கிறது. இருப்பினும் உன்னுடைய விருப்பத்தை மறுக்க நான் பிரியப்படவில்லை.

ஹாஸ்யம் எனப்படுவது ஒரே ரஸமாயினும் அவைகளை அனுபவிக்கும் விதங்கள் பலப்பல வழிகளில் இருக்கின்றன. அதாவது, பார்க்கும் ஹாஸ்யம், படிக்கும் ஹாஸ்யம், கேட்கும் ஹாஸ்யம், நடிக்கும் ஹாஸ்யம், சித்திரத்தில் ஹாஸ்யம், நடையில் ஹாஸ்யம், ஒருவர் செய்ததை, பேசியதை, பாடியதை அப்படியே (இமிடேஷன்) தான் செய்து காட்டுவது ஒரு தினுசு ஹாஸ்யம். இத்தனைக்கும் முக்யமானது – மனிதனின் புத்தி கூர்மையும் சிறந்த அறிவும் அனுபவமும் கூடி நிறைந்திருந்தால்தான் இவைகளைச் சுவைக்க முடியும். செய்ய முடியும். ஹாஸ்யம் என்ற கட்டத்தை இத்தனை விதமான அஸ்திவாரம் போட்டுத்தான் எழுப்ப வேண்டும்.

நான் இப்போது உனக்கு ஒரே ஒரு ஹாஸ்யத்தைத்தான் எழுதப்போகிறேன்; அதாவது அச்சாபீஸ் ஹாஸ்யம் என்பதுதான். அச்சுக் கோர்க்கும் வினோதத்தில் உண்டாகும் ஹாஸ்யம் தங்களை அறியாது உண்டாகும் ஹாஸ்யமாகும். அதைப் பிறர் திரும்பிப் பார்க்கும் போதுதான் அதன் உண்மை ஸ்வரூபம் விளங்கி குலுங்கக் சிரிக்க வைக்கிறது.

அச்சுக் கோர்ப்பவரிடம் நாம் சரியாக பதங்களை எழுதி கொடுத்து விடுகிறோம். அதையவர்கள் ஏதோ மெஷின் போல் எழுத்துக்கு எழுத்து பார்த்து அடுக்கிக் கொண்டு போவார்கள். ஹார்மோனியம் வாசிக்கின்றவர்களின் விரல்கள் எப்படி அந்தந்த ஸ்வரஸ்தானத்தை தானாகவே அழுத்திச் சப்தத்தை எழுப்புகிறதோ அப்படியே இவர்களுடைய பழகிய கைகள் அந்தந்த எழுத்துள்ள அறைகளில் நடனம் செய்து ஜதிஸ்வரங்கம் பாடி நர்த்தனம் செய்யும். அப்படி பழகிய கைகளும் தடம் மாறி ஒன்றுக்கொன்று கை புரண்டு வேறு எழுத்துக்களைக் கோர்ப்பதுண்டு. அவைகளில்தான் ரஸமான ஹாஸ்யம் பதுங்கி கிடந்து தாண்டவமாடுகிறது. இதே வேலையை சற்று கற்றுக்குட்டிகள் செய்தாலோ சொல்லவே வேண்டாம். ப்ரூஃப் பார்க்கிறவர்கள் மூளை கலங்கித்தான் போய்விடும். நான் அச்சாபீஸில் வேலையாயிருப்பதால் இந்த அழகிய ஹாஸ்யத்தை உனக்கு எழுதிகிறேன். நான் ஒன்று எழுதிக் கொடுத்தேன். அது அச்சுக்கோர்த்து வந்ததன் ஹாஸ்யத்தை பாரு…

”ஆத்மநேய அன்பர்களுக்கு, சந்தானம் தாங்கள் வெடித்த சமைப்புத்தாள் கிடைத்தது. மகாமாட்டிற்கு வரமுயலாமைக்கு மன்னிக்கவும். மகாநாடு சிக்க வெள்ளி மரமாக தடைபெற எல்லாம் கொல்ல பறைவனை தாண்டுகிறேன்.’’

நண்பா! ஒரே ஒரு சிறிய கடித்திலுள்ள ஹாஸ்யமே இப்படி என்றால், இன்னும் மேலே படித்துப் பாரு. எத்தனை தமாஷ்கள் இருக்கின்றன என்பதைப் பார்த்து நன்றாகச் சிரிக்கலாம். சிரிப்பே பரம அவுஷதமல்லவா! ஆகையால்தான் எழுதுகிறேன். மேலே பார்த்த கடிதத்தின் வாசகம் என்ன தெரியுமா!

”ஆத்மநேய அன்பர்களே! வந்தனம். தாங்கள் விடுத்த அழைப்புத்தாள் கிடைத்தது. மகாநாட்டிற்கு வர இயலாமைக்கு மன்னிக்கவும். மகாநாடு மிக்க வெற்றிகரமாக நடைபெற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்”….

இவ்வளவுதானா? இன்னும் பாரு.

தமிழ்காட்டு நாய் அகமாய் இகழும் வற்றலே. உமது தாசி மொழிபல எனக்கு மிகவும் உச்சவத்தைக் கெடுத்தது. உமது கடிதத்தை நான் புதயல் கிடைத்தப் பிணம் போல நினைக்கிறேன். உலகத்தில், மாக்கல் எமனை விரும்புவார்கல்? புழுபுதர் படழளைத்தான். எம்பெருவாளுக்கு. நல்ல ருசியுள்ள பல கிழங்களை வாந்தி நைவேத்தியம் செய்தால், புள்ளியம் உண்டு.

மாமனார் காட்டில் எரியும் விபசாரம் கொல்ல முடியாத விஷயமாகும். மங்கணபாத்யம் விழுங்க கருமணம் கறப்பாக நடந்தது. ஏராதமானவர்கல். விநயம் பெய்தார்கள். தம்சதிகாளை உசிர் உதித்தார்கள். அரசுகள் மழுங்கினார்கள். சங்கீத நாணி கடை திறந்தது போன்று தன் சனிய உரலால் காகம் செய்த உ£கை எழுதிமடியாது” இதன் சரியான வாசகமாவது…

தமிழ்நாட்டுத் தாயகமாய்த் திகழும் வள்ளலே! உமது ஆசிமொழிகள் எனக்கு மிகவும் உத்ஸாகத்தைக் கொடுத்தன. உமது கடிதத்தை நான் புதையல் கிடைத்த பணம் போல் நினைக்கிறேன். உலகத்தில் மக்கள் எவனை விரும்புவார்கள்? முழுமுதற் கடவுளைத்தான். எம்பெருமானுக்கு நல்ல ருசியுள்ள பல பழங்களை வாங்கி நைவேத்தியம் செய்தால் புண்ணியமுண்டு.

மாமனார் வீட்டில் புரியும் உபசாரம் சொல்ல முடியாத விதமாகும். மங்கள வாத்தியம் முழங்க திருமணம் சிறப்பாக நடந்தது. ஏராளமானவர்கள் விஜயம் செய்து பரிசுகள் வழங்கினார்கள். சங்கீதராணி மடைதிறந்தது போல் தனது இனிய குரலில் கானம் செய்த அழகை எழுதி முடியாது.

நண்பா! இது போன்ற ஹாஸ்யச் சுவையை எழுதிக் கொண்டே போனால் ஒரு புத்தகமே எழுதித் தள்ளலாம். ஆனால் அதை விதியே என்று பொறுமையுடன் படித்துச் சிரிக்கத்தான் ஆள் வேண்டும். ஆகையால் மற்றொரு கடிதத்தில் வேறுவிதமான ஹாஸ்யத்தை எழுதுகிறேன்.

வேளாவேளைக்குச் சரியான புஷ்டியுள்ள ஆகாரங்களைச் சாப்பிடு. மருந்துகளைத் தவறாது சாப்பிடு. முடிந்தவரையில் உலாவு. நல்ல புத்தகங்களைப் படி. சிரமமில்லாதிருந்தால் ஏதாவது கதை கட்டுரை எழுது. நான் முடிந்தால் வருகிறேன்.

உன் ப்ரிய நேசன்

உமாபதி.

கலங்கித் தவிக்கும் மனத்திற்கு ஆறுதலளித்ததால் அதைப் படித்து சிரித்தாள்.

இவளுக்குத் துணை படுத்துள்ள கிழவி. பல்லில்லாதவள். இரும்பு உரலில் வெத்திலையை நெருக்கி வாயில் அடக்கிக் கொண்டு புகையிலையுடன் ஸ்வாரஸ்யமாய் மென்று உமிழ்ந்து பின்பு சித்ராவைக் கவனித்தாள். அவள் படித்துச் சிரிப்பதைக் கண்டு, ”ஏம்மா! தூக்கம் வரலே… இன்னா சிரிக்கிரே… படுத்துக்கோம்மா. இந்தப் பக்கத்துலேல்லாம் இப்ப கொஞ்ச நாளாய்த் திருட்டு பயம் மிகவும் அதிகமாயிருக்கிறதாம். இந்த வீட்டில் நாம் இரண்டு பேரேதான் இருக்கிறோம்னு தெரிஞ்சு எவனாச்சும் உள்ளே புகுந்துவிடப் போறானே என்று பயமாக இருக்குது. விளக்கே அவிச்சிட்டுப் படுத்துடு. அப்போ ஐயா ஊட்டுலேதான் இருக்கிறாருன்னு நெனச்சுக்குவாங்க” என்று அவள் திடீரென்று ஒரு கலக்கு கலக்கும் பய புராணத்தைச் சொன்னதும் சித்ராவுக்கு முதலில் தூக்கிவாரிப் போட்டது.

சிறிது நேரம் மவுனமாகவே இருந்தாள். பிறகு தைரியத்தை விடாமல், ”கிழவீ! வீண் காபுரா பண்ணாதே. ஐயா மாடியில தூங்கறார். எனக்கு இங்கே மிகவும் அவசரமான வேலை இருக்கிறதால் நான் ராத்திரி முழுதும் தூங்காதுதான் வேலை செய்யப் போகிறேன். எந்தத் திருடனும் இங்கு வரமாட்டான். அப்படி வந்தால் என்னிடம் துப்பாக்கி இருக்கிறது. ஒரே வெடி… அவ்வளவுதான். நீ தொணதொணவென்று பேசி என் வேலையைக் கெடுக்காதே. தெரிந்ததா! தூக்கம் வரவில்லை என்றால் ராமா கிருஷ்ணான்னு ஜபம் பண்ணிக் கொண்டே படுத்திரு” என்று சற்று அதிகார த்வனியுடன் உரக்கக் கூறிவிட்டு மீண்டும் படிக்கவாரம்பித்தாள். எனினும் அவள் மனத்திற்குள் ஏதேதோ விதமான பயம் வேலை செய்து கொண்டிருந்தது.

15

தன் கடமையை வெகுவெகு கிரமமாக நடத்திக் கொண்டு போகும் கடிகாரம் மூன்று முறை அலறிய போதுதான் சித்ரா திடுக்கிட்டுக் கண்விழித்தாள். விளக்கு அப்படியே எரிந்து கொண்டிருந்தது. தபாலில் வந்த புத்தகம் எதையோ படித்துக் கொண்டே, உட்கார்ந்தபடியே மேஜைமீது சாய்ந்து தூங்கிவிட்டாள். பாவம்! எழுந்ததும் ”ஐயோ! மணி மூன்றா அடித்து விட்டது? இன்னும் அவர் வரவில்லையே! ஒருவிதமான விபத்தும் இல்லாதிருக்குமா? பின்னை ஏன் இத்தனை நேரம்!” என்று கலங்கியபடி ஒன்றும் தோன்றாது உட்கார்ந்திருந்தாள்.

தூக்கம் அவளையறியாது முன்பு ஸ்வீகரித்தது. இப்போது அவள் அழைத்தும் காத தூரத்திற்கப்பால் போய் விட்டது. குழம்பி இருந்த தருணம் ஒரு காற்றடித்த வேகத்தில் கடிதங்கள் பறந்து இவள் மீது விழுந்தன. அவைகளை எடுத்து வைக்கப்போகையில் ஒரு கடிதத்தில், ‘நான்காந்தாரம்… என்று… கவலை வேண்டாம்…’ என்கிற வரிகள் கண்களைக் குத்தியதும் கண்கள் தாமாகவே அதைப் படிக்கவாரம்பித்தன.

”அன்புள்ள ஜயா! உபயக்ஷேமங்கள்.

தங்களுக்கு விவாக விஷயமாக ஏதோ என் சகாயம் வேண்டும் என்று கூறியதாகக் கேள்விப்பட்டேன். நான்காந்தாரமாகப் பெண்ணைக் கொடுப்பார்களா, மாட்டார்களா என்று வேறு தாங்கள் பயப்படுவதாகவும் கேள்விப்பட்டேன். அந்த விஷயத்தில் தங்களுக்குக் கவலை என்பது வேண்டவே வேண்டாம். பனஞ்சாவடி கிராமத்தில் பஞ்சநதம் சாஸ்திரிகளுக்கு 50 வயதுக்கு மேலாகிவிட்டது. அவருடைய கிரகசாரம் மனைவிகள் ஒருவர் பின் ஒருவராக நால்வரும் 50 வயதுக்குள் மடிந்தார்கள். ஐந்தாவதாக ஒரு சரியான பெண்ணைப் பார்த்து நானே கல்யாணத்தை முடித்து வைத்தேன். அவர்கள் வெகு அன்யோன்யமாகவே இருக்கிறார்கள். அதுபோல் தாங்களும் ஆனந்தமாக மணந்து சுகப்படலாம். கவலையே வேண்டாம். பூவாம் பேட்டையில் ஒரு பெண் இருக்கிறாள். வயது 16தான் ஆகிறது. அதை இப்போதே முடித்து விடலாம். தாங்கள் அவசியம் என்னை நேரில் வந்து பார்க்கவும். கல்யாணத்தைப் பற்றிய எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம்

இங்ஙனம்

கங்காதர புரோகிதன்

இதைப் படித்ததும் எரிச்சல் எரிச்சலாக வந்தது. ”கிழப் பிணத்திற்குக் கல்யாணமாம், கர்மகதியாம். ஆண்களுக்கு ஒரு சட்டம், பெண்களுக்கு ஒரு சட்டம் போலும். எத்தனை மனைவிகள் செத்தாலும் மறுபடியும் மறுபடியும் விவாகத்தைச் செய்து கொண்டே இருக்கலாமாம். உலகமறியாத வயதில் விதவையாகிவிட்டாலும் அவள் அப்படியே சாகவேண்டுமாம். என் கையில் அதிகாரமிருக்குமானால் இந்தக் கிழங்களை எல்லாம் பிடித்து சிறையிலேயே அடைத்து விடுவேன். கிழப்பாடைகளுக்கு கல்யாணமாம்” என்று வாய்விட்டே முணுமுணுத்தாள்.

”ஸ்ரீராமஜெயம்.

நான் சௌக்கியம். நீ சவுக்கியமா? பக்கத்தாத்து மாமி செத்துப்போயிட்டா. எதித்தாத்து எச்சம்மாவுக்குக் கல்யாணமாம். தம்பி பள்ளிக்கூடம் போறான். தங்கச்சி சமத்தா விளையாடறா. நானும் படிக்கிறேன். ஆத்துலே குடி இருக்கிறாவா சவுக்யம். அங்கே எல்லாரும் சவுக்கியமா? எனக்கு தீபாவளிக்கு கதர் பாவாடை வாங்கினா. உனக்கு வாங்கினாளா?

செல்லம்

குழந்தைகளின் உள்ளம் போலவே அவர்களின் எழுத்தும் இருப்பது கண்டு சிறுநகை பூத்தபடியே மற்றொன்றுக்குத் தாவினாள். அது ஒரு பத்திரிகை ஆபீஸுக்கு அனுப்பியுள்ள சிறுகதையின் எழுத்துப் பிரதி. அதை வெகு ஆவலுடன் படித்தாள். அக்கதையே முற்றிலும் கடிதங்களின் மூலமாகவே எழுதப்பட்டிருப்பதைப் பார்த்து வியப்புடன் கட்டுரை எழுதுவதற்கு இதுவும் ஒரு ஆதாரமாகத் தோன்றியதால் திரும்பத் திரும்பப் படித்தாள்.

நீச்சல் தெரியாதவர்கள் கூட தண்ணீரில் விழுந்து விட்டால் கையில் அகப்படும் துரும்பைக்கூடப் பிடித்துக் கொண்டு தட்டுத்தடுமாறி நீந்திக் கரையேற முயற்சிப்பது போல், எழுத வேண்டும் என்கிற ஆர்வம் மட்டும் மனத்தில் உண்டாகிவிட்டால் எதைப் பார்த்தாலும், எதைப் படித்தாலும், எதைக் கேட்டாலும், எதைப்பற்றி சிந்தித்தாலும் அவைகளைக் கொண்டு கற்பனைச் சோலைகள் அமைக்கவே மனம் தாவி நிற்கும். அதையே சதா நாடி அலையும். இது பிரத்யட்ச அனுபவம். அதே போல் சித்ராவின் ஆசையின் வேகம் அதிகரித்தது.

இதற்குள் மணி 5 முறை அலறியதும் அவளுடைய எண்ணம் குபீர் என்று கணவன்மீது பாய்ந்தது. ”பொழுது விடியும் சமயமாகிவிட்டதே!” என்ற கவலையுடன் வீதிப்பக்கம் எட்டிப் பார்த்தாள். துணை படுத்திருந்த கிழவி டொக்கு, டொக்கு என்று வெத்திலை நொறுக்கிக் கொண்டே ‘‘ஏம்மா! ராவு பூரா தூங்கலியா!’’ என்றாள்.

அதே சமயம், வாசல் கதவைத் தட்டும் சப்தமும் நாலைந்து பேர்கள் பேசுங் குரலும் கேட்டு, சற்று அச்சத்துடனேயே திறந்து பார்த்தாள். தன் கணவன், தன் அத்தையின் மகன், இரவு வந்த இன்ஸ்பெக்டர், இன்னும் சிலர் இருக்கக் கண்டு வியப்புடனும் தன் கணவன் சவுக்கியமாக வந்ததைப் பற்றிய சந்தோஷத்துடனும் உள்ளே நகர்ந்து நின்றபடி… ”அப்பாடா அது மட்டும் வந்து சேர்ந்தீர்களே!” என்று தன் ஆவலைத் தெரிவித்தாள்.

உத்தமன், சும்மாவா வந்து சேர்ந்தோம்! உன் அத்தானின் உயிரையே காப்பாற்றி அழைத்து வந்தோம். கடிதத்தில் குறித்திருந்த பேர்வழி ரேஷன் ஆபீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீமான் சிதம்பரம் அவர்களேதான். வேறு யாருமில்லை. காளிந்தி நதி மடுவில் வெகுகாலமாக காளிந்தி என்கிற கொடிய விஷப்பாம்பு உபத்திரவம் செய்து கொண்டிருந்ததாம். ஸ்ரீ க்ருஷ்ணன் அவதாரம் செய்து அந்த துஷ்ட நாகத்தை அடக்கி அதன் மேலேறி நர்த்தனம் செய்ததாகப் புராணத்தில் படிக்கிறோம். அதை இப்பொழுது பிரத்யட்சமாக உன் அத்தான் கலியுகத்தில் நடத்திக் காட்டிவிட்டார். அந்த துஷ்டனிடம் அணுகவே கிராமத்து ஜனங்கள் பயந்து கொண்டு தவித்ததை அந்த பாட்டியம்மாள் சொன்னாளல்லவா? அத்தகைய மதோன்மத்தனான ராக்ஷஸனைப் பிடித்து லாக்கப்பில் போட்டாயிற்று!” என்று மடமடவென்று ஒப்பித்தான்.

சித்ராவுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. ”என்ன! என்ன! அவனைப் பிடித்தாயிற்றா… அத்தானை எதற்காக அவன் கொல்ல முயன்றான்? அத்தான்! அவனுக்கும் உனக்கும் என்ன சண்டை?” என்று பரபரப்புடன் கேட்டாள்.

சிதம்பரம்: ‘‘அந்த மடையன் யாரோ! எனக்குத் தெரியாது. அவன் மகாபோக்கிரி என்பது மட்டுமிருந்தால் அதொரு வகை. கள்ளமார்க்கெட்டு வியாபாரத்தை வெகு மும்முரமாகச் செய்து வந்தான். அதை நான் கண்டுபிடித்து அவனுக்குச் சரியானபடி தீட்டி வைத்தேன். அந்த ஆத்திரத்தில் அவன் என்னையே ஒழிக்க ஏற்பாடு செய்ததை பகவான்தான் உங்கள் மூலம் தடுத்து உதவினார்’’.

உத்தமன்: ‘‘சித்ரா! இந்த கேஸின் புகழ் உனக்கே சொந்தம். நீதானே ஆற்றங்கரையில் யாரோ பேசிக் கொண்டிருந்ததாக என்னிடம் சொன்னாய். நான் மற்ற ஏற்பாடுகளைச் செய்தேன். அத்தானைக் காப்பாற்றும் பொறுப்பு மாமன் மகளுடையதாயிற்று’’ என்று தானே முன்கூட்டி சித்ராவை கண்களால் எச்சரித்துப் பேசினான்.

மகாயூகசாலியாகிய சித்ரா உடனே புரிந்து கொண்டாள். கடிதத்தின் மூலம் இந்த விஷயத்தை அறிந்ததாக எங்கே நாம் சொல்லிவிடப் போகிறேமோ! என்கிற முன்யோசனையுடன் கூறியதைக் கேட்டு உள்ளுக்குள் மகத்தான சந்தோஷத்தையடைந்தது. ”ஆமாமாம். அந்தப் பெருமை மட்டுந்தானா? நீங்கள் என்னை ஆற்றங்கரைக்கு உலாவ அழைத்துச் சென்றதனால்தான் இந்த ரகஸியத்தை நான் அறிய முடிந்தது? அச்சமயம் ஒரு சினேகிதர் உங்களை மடக்கி பேசிக் கொண்டே சிறிது தூரம் போய்விட்டதால் இந்த ரகஸியத்தை நான் அறிய நேர்ந்தது. அதுவும் எனக்கு ஆங்கிலம் தெரியாது என்கிற இறுமாப்புடன் யாரோ இருவர் ஒரு மரத்து மறைவில் பேசிக்கொண்டதை நான் புரிந்து கொள்ளும் வசதி உண்டாகியது. நல்லவேளையாக எனக்கு ஆங்கிலம் தெரிந்திருந்ததால் இந்த பேராபத்தைத் தீர்க்க முடிந்தது. எல்லாம் பகவானின் அருள்தான்” என்று கூறிவிட்டு காப்பி தயாரிக்க ஓடினாள். தான் ஆராய்ச்சி செய்து எழுத நினைத்த கட்டுரைக்கு இதுவும் ஒரு முக்கியமான ஆதாரமாகக் கிடைத்ததைக் கண்டு பூரித்தாள். அந்த சந்தோஷமே அவளுக்கு ஒரு அபூர்வ உணர்ச்சியை அளித்தது. உத்தமன் வந்தவர்களுடனே பேசிக்கொண்டே வெளியே சென்றதும் சித்ரா வழக்கம்போல் ஒரு கடிதத்தைப் படிக்கவாரம்பித்தாள்.

”அன்புள்ள ராதாவுக்கு உபயக்ஷேமங்கள்.

நீ அனுப்பிய வார, மாதப் பத்திரிகைகளை எல்லாம் படித்தேன். எனக்கென்னவோ அறிவு கிடையாது. ஒரு வரிகூட அழகாக எழுதத் தெரியாது. கற்பனை கிடையாது. ஏன்? கடிதங்கூட அழகாக எழுதத் தெரியாத மொத்துதான். எனினும், கட்டிய வீட்டிற்கு பணிக்கை சொல்வதுபோலும் செய்த சமையலில் குற்றங்கூறுவது போலும், படித்த கட்டுரைகளில், சிறுகதைகளில் குற்றங்குறைகள் சொல்வதற்கு மட்டும் எனக்குத் தெரிந்திருக்கிறது. இக்காலம் சிறுகதையின் சகாப்தமாக இருப்பது உண்மைதான். சிறுகதை என்கிற பெயரில் பலசகோதரிகள் சகோதரர்கள் வெள்ளைக் காகிதத்தைக் கருப்புக் காகிதமாக்கி இருக்கிறார்கள் என்றுதான் நான் சொல்லுவேன். நீ அனுப்பிய அத்தனை பத்திரிகைகளில் நான் படித்த சிறுகதைகளில் சிலதுதான் என் உள்ளத்தைக் கொள்ளைகொண்டது. மற்றவைகளில் சிலவற்றை முதல் இரண்டு பாராக்கள் கூட படிக்கவில்லை. சிலதை பல்லைக் கடித்துக் கொண்டு படித்தேன். என்ன கதைகள் வேண்டியிருக்கிறது? திரும்பத்திரும்ப புளித்த, உளுத்துப்போன பழைய கருத்து பலபேர் எழுதித் தேய்ந்துபோன கருத்துக்களையேதான் அனேகர் எழுதியிருக்கிறார்கள்.

ஒருத்தன் ஒருத்தியைக் காதலிப்பது, காதல் கைகூடாது போவது, காதலி உடனே வாத்தியார் வேலைக்குப் படிக்கக் கிளம்புவது… வரதக்ஷணையின் கொடுமையினாலோ மற்ற எந்தக் காரணத்தினாலோ மனைவியைத் தள்ளிவிடுவது, அவள் உடனே டாக்டருக்குப் படிக்கக் கிளம்பிவிடுவது, கணவனுக்கோ அவனைச் சேர்ந்தவர்களுக்கோ இவளே வைத்தியம் செய்வது… இது போலவே எத்தனைபேர் எழுதுவது? அதுபோனால் தேசசேவை, சத்தியாக்ரகம், ஜெயிலுக்குப் போய்வருவது… இளையாள் மூத்தாள் குழந்தைகளைப் படுத்துவது, புருஷன் நடுங்குவது, தோப்புக்கரணம் போடுவது… கல்யாணத்திற்குப் பணமின்றி கடன் வாங்கிப் பிறகு அதனால் தற்கொலை புரிவது… எல்லாவற்றையும் விட விபரீதம் – காதலிப்பவர்கள் காதல் கைகூடாவிட்டால் ஓடிவிடுவதாம். பிறகு அல்லாடுவதாம். நாகரீகத் தடபுடலில் திளைவது. அதே உச்சாணிக் கிளையில் கதை நர்த்தனமாடுவது.

அப்பப்பா!.. ராதா! எனக்கிந்தமாதிரி தொண தொணவென்று வந்து விஷயமே வருவது – பிடிக்கவில்லை… உலகத்தில் இருப்பவைகளைத் தானே எழுத வேண்டும் என்று நீ கேட்கலாம். எழுதுவதற்கு விஷயம் அனந்தம் இருக்கிறது. அதை காலதேச வர்த்தமானத்தை அனுசரித்து எந்தக் காலத்தில் மக்கள் எதை விரும்புகிறார்கள் என்ற நோக்கத்தையறிந்து அழகுடன் விறுவிறுப்பாக ஜீவகளை ததும்ப துடிக்கத் துடிக்க எழுதினால், அதன் சுவை வேறுதான். பழைய விஷயத்தைக்கூட புதிய மெருகிட்டு அழகோவியமாக எழுதலாம் என்பதுதான் என் துணிபு. ஆகையால் நான் ஏதோ குறைகூறுவதாக எண்ணாதே. உலகம் பழைய உலகந்தான். ஆனால் அது புத்தம்புதிய அலைமோதும் இன்பச் சரக்குளைத்தான் தேடியலைகிறது. பேனா பிடிக்கும் ஒவ்வொருவரும் முதலில் இதை நினைத்துப் பார்க்க வேண்டும். பக்தி, கற்பு, பெரியோரிடம் மதிப்பு, புராதன கொள்கைகளின் சிறந்த லட்சியத்தில் அன்பும் ஆர்வமும், சிலசில மாறுதல்கள் இருப்பினும் பழமையிலுள்ள உண்மைகளைப் பாராட்டல், இதிகாஸம், புராணம் முதலிய நூல்களின் மதிப்பு, சாஸ்திரத்தில் நம்பிக்கை, சத்தியத்தின் உன்னதம்… முதலிய உயர்ந்த விஷயங்களை எந்தக் கதையிலும் ஜீவநாடியாக ஓடவிட்டு எழுதுங்கதைதான் என்றும் சாகாவரம் பெற்று பிரகாசிக்குமேயன்றி, நாகரீகத்தில் தோய்ந்த ஒருத்தி, சாஸ்திரங்களை எதிர்த்து நின்று சீர்திருத்தம் செய்தாள் என்று எழுதி இருக்கும் கதை எனக்கு அடியோடு பிடிக்கவில்லை. நான் ஒரு கர்நாடகம், கட்டுப்பெட்டி. ஆகையால் நான் பழைய உலகத்தின் கொள்கையைத்தான் ஆதரிப்பேன். காலத்தின் அவசியத்தையும் அவசரத்தையும் உத்தேசித்து சில சீர்திருத்தமாறுதல்களையும் வரவேற்பேன். இவைகளைப் படித்து விட்டு என் அபிப்ராயத்தை எழுதுகிறேன். கோபிக்காதே. முக்கியமாக நீ பெற்றோருக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக நட்பு கொள்வதே தப்பு. அதிலும் அவனுடன் ஓடிவிடுவது இன்னும் மகத்தான குற்றம். அப்படி ஓடிய கழுதையை தாய் தகப்பனே திருப்பி அழைத்து வைத்துக் குலாவி, பேரனை முத்தமிடுவதாக எழுதியிருப்பது எனக்கு எரிச்சலே வந்தது. இனிமேல் இப்படி வெள்ளைக்கார நாகரீகத் தீயில் மூழ்கி அந்த பாஷைகளில் உள்ளதைப் படித்து அதன் நிழல்போல் எழுதாதே. நம் நாட்டுக்கும் சமூகத்திற்கும் ஏற்றமுறையில் நீதியும் பக்தியும் தர்மமும் ததும்ப எழுதினால் விருத்திக்கு வர ஏது உண்டாகும். இந்த நிலையில் போனால் சீக்கிரம் பேனாவுக்கு லீவுதான் கொடுக்க வேண்டிவரும். என்மீது கோபிக்காதே.

உன் ப்ரிய,

பங்கஜம்

இக்கடிதத்தைப் படித்ததும் சித்ராவுக்கு உண்டாகிய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ”கடிதமா இது!.. கட்டுரை போலல்லவா இருக்கிறது? தடி எடுத்தவர்களெல்லாம் வேட்டைக்காரர்கள் என்பது போல் பேனாவைப் பிடித்தவர்களெல்லாம் எழுதி வெற்றி பெறமுடியுமா? பேஷ்! இப்படியல்லவா மனத்தைத் திறந்து தைரியமாக கடிதம் எழுத வேண்டும். நாம் எழுதப்போகும் கட்டுரைக்கு கூட இப்படித்தான் விமர்சனம் கிடைக்குமோ?” என்ற குழப்பமும் உண்டாகியது. ”உம்… முயற்சி பயன் தராமலா போகும்? பகவான் விட்ட வழியாகட்டும்” என்ற முடிவுக்கு வந்தாள்.

சித்ரா வெகு சுறுசுறுப்பாக எதையோ மிக்க ஆழ்ந்த கருத்துடன் எழுதிக் கொண்டிருக்கையில் உத்தமன் அங்கு வந்து ”போஸ்ட்… சித்ராதேவி இந்த வீடுதானாம்மா?” என்று கேட்டு கடகடவென்று சிரித்தவாறு போஸ்டு கவர்கள் இரண்டு மூன்றை நீட்டினான். சித்ரா கடிதத்தை வாங்கிக் கொண்டு ” மிகமிக வந்தனம் போஸ்ட் மாஸ்டர் சார்” என்று கூறியவாறு உடனே படிக்கவாரம்பித்தாள்.

”ஸௌபாக்கியவதி சித்ராவுக்கு ஆசீர்வாம். உபயக்ஷேமங்கள்.

உன்னிடமிருந்து கடிதமே காணாததால் உன் தாயார் மிகவும் கவலைப்படுகிறாள். எங்கள் மீதுள்ள கோபத்தினால்தான் நீ இப்படியிருக்கிறாய் என்பதை உன் மவுனத்தைக் கொண்டே தெரிந்து கொண்டோம். உன் மனது இன்னமும் பழைய உணர்ச்சியிலே இருப்பதால், அதே வேதனையுடன் உனக்கு உடம்புக்கு வந்துவிடப் போகிறதே என்று நாங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில் உன் அத்தான் சிதம்பரத்தினிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அவனுடைய பேராபத்தை நீங்கள்தான் தடுத்துக் காப்பாற்றியதாயும், நீ இன்னும் சில மாதங்களில் தாயார் என்கிற ஸிம்மாஸனத்தில் ஆரோகணிக்கப் போவதாயும், எங்களையும் பாட்டனார், பாட்டியார் என்கிற பட்டத்தைச் சூட்டி மகிழ்விக்கப் போவதாயும் எழுதியிருந்தான். இதைப் பார்த்து நாங்கள் அபரிமிதமாகப் பூரித்துப் போனோம். இந்த சுபச்செய்தியை நீங்களிருவருமே எங்களுக்கு தெரிவிக்காதிருப்பதால் மாப்பிள்ளை கூட கிராம வாழ்க்கையை உன்னோடு சேர்ந்து வெறுப்பதாக நாங்களறிந்தோம். உன்னை இச்சமயம் எங்களிடம் அழைத்து வைத்துக்கொள்வதுதான் முறை. தனியாக விட்டுவைப்பது சரியல்ல. ஆகையால் இப்பொழுது இங்கு ஒரு கம்பெனியில் வேலை காலியாயிருக்கிறதாம். அதற்கு 250 ரூபாய் டிபாஸிட்டு கட்ட வேண்டுமாம். எப்படியாவது கடனாவது வாங்கி அதைக் கட்டி உன் கணவனை இங்கேயே அழைத்துக் கொள்ள உத்தேசித்து விட்டேன். மாப்பிள்ளையிடம் அந்த விஷயத்தைக் கூறி அந்த கிராமத்து தபாலாபீஸ் வேலையை ராஜினாமா செய்து விட்டு வந்துவிடச் சொல்லு. இனிமேல் உன் மனம் சந்தோஷமாயிருக்குமென்று நம்புகிறேன். உங்கள் பதிலை எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறேன். அதைப் பார்த்தபிறகுதான் நான் கடன் வாங்கிக் கட்ட வேண்டும். உடனே பதில். உன் தாயார் இதே கவலையாயிருப்பதால் தாமதமின்றி கடிதம் எழுது.

இங்ஙனம் உன்

தகப்பனார்

இதைப் படித்ததும் கடகடவென்று சிரித்தாள். இச்சிரிப்பொலியைக் கேட்ட உத்தமன் ”என்ன சித்ரா! காதுக்குள் கணீர் என்று ரீங்காரம் செய்யும்படிச் சிரிக்கிறாய்? என்ன விசேக்ஷம்? உங்கப்பா, அம்மா வரப் போகிறார்களா என்ன?” என்று ஆவலுடன் கேட்டான். சித்ரா பதில் சொல்லாமல் அன்பைக் கக்கும் ஆழமான பார்வையுடன் கடிதத்தை உத்தமனிடம் கொடுத்தாள்.

உத்தமன் அதைப்படித்துவிட்டு ‘‘ஓகோ! இதான் இத்தனை குஷியாய்ச் சிரிக்கிறாயா… பேஷ்… ராஜிநாமா எழுதிவிடட்டுமா! என்ன சித்ரா! நீ என்னவிருந்தாலும் தசைக்காரிதான். உனக்குமேல் சுக்ரதசை உன் குழந்தைக்கு அடிக்கப்போகிறது. அதனால்தான் பிறப்பதற்கு முன்பே தாயாராரின் மனோபீஷ்டத்தைப் பூர்த்திசெய்யப் போகிறதாக்கும். பலே! பலே!’’ என்று கண்ணைச் சிமிட்டியவாறு பார்த்தான்.

வெட்கத்தினால் சித்ராவின் முகம் சிவந்து தலை குனிந்தது. பதிலே பேசவில்லை. அந்த நிலையின் அழகு உத்தமனை பிரமிக்கச் செய்தது. இருவருக்கும் நிசப்தமான மவுனமே குடிகொண்டது. உத்தமனே சற்று பிரமை தெளிந்தவனாய்… ”சித்ரா… பதில் உடனே எழுதி உன் தாயாரை சந்தோஷப்படுத்து. நான் இன்றே ராஜிநாமாச் செய்துவிடுவதாக ஆபீஸுக்கு கடிதம் எழுதி விடட்டுமா?’’ என்றான்.

தான் இதுவரையில் செய்த அசட்டுத்தனத்தை எண்ணி வெட்கியவளாய் அன்புடன் உத்தமனைப் பார்த்து… ”ஏதோ! தெரியாத்தனமாக நான் நடந்து விட்டதை மன்னிக்கக் கோருகிறேன். பட்டினத்து வேலையும் வேண்டாம். கடன் வாங்கி டிபாஸிட்டும் கட்ட வேண்டாம். எனக்கு இனி இதை விட்டுப் போகவே ப்ரியமில்லை என்பதை நீங்களே அப்பாவுக்கும் எழுதி விடுங்கள். இனியும் பழைய விஷயத்தை வைத்துக் கொண்டு பரிகாஸம் செய்யாதீர்கள்.’’

இந்த வார்த்தை உத்தமனை பேரானந்தத்திலாழ்த்தியதால், ”பலே, சித்ரா! இந்த ஒருவார்த்தையே நான் எதிர்பார்த்தேன். சரி… மற்ற கடிதங்களைப் படிக்காமல் நான் தடை செய்கிறேன். நீ படித்துக் கொள்ளு!” என்று கூறிச் சென்றான். பூரித்த உள்ளத்துடன் கடிதத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தாள்.

”ஸௌபாக்கியவதி சித்ராவுக்கு, மாமி ஆசீர்வாதம். உபயக்ஷேமம்.

உங்கள் குலம் விளங்க ஒரு மாணிக்கம் பிறக்கப் போவதாகவும் அதை உன் தாயாருக்குக் கூட வெளியிடவில்லை என்றும் அத்தான்தான் உன் தகப்பனாருக்கு எழுதியதாகவும் உங்கம்மா கடிதம் எழுதியிருக்கிறார். அதைப் பார்த்து நாங்களடையும் சந்தோஷம் சொல்ல முடியாது. இன்னும் இரண்டு நாளில் நான் அங்கு வருகிறேன். உடம்பை ஜாக்ரதையாகப் பார்த்துக் கொள்ளு. உத்தமனுக்கு ஆசீர்வாதம்…

உன் மாமி

அத்தான் ஒரு பெரிய விளம்பரக்காரன் போலிருக்கிறது. ஆபத்து நீங்கிப் போகிறவன் இது வேறு விதை விதைத்துக் கொண்டே போகிறானோ! என்று முணுமுணுத்தவாறு மற்றொரு கடிதத்தைப் பிரித்தாள்.

”இதுவும் அத்தான் சொல்லியதாக யாராவது எழுதியிருக்கிறார்களோ என்னவோ? நல்ல அத்தான்… கையெழுத்தென்ன புதிதாக இருக்கிறது! அத்தானின் மனைவியே எழுதியிருக்கலாமோ?

”அடீ கொலைபாதகீ! கள்ளி! நீயும் உன் கணவனும் ஏதோ பெரிய சாம்ராஜ்யக் கோட்டையைப் பிடித்து விட்டதுபோல் துள்ளுகிறீர்கள்! கந்தப்பனைப் பிடித்து விட்டதால் உங்கள் ஆயுளும் இதோடு முடிந்து விட்டது என்று நினைக்காமல் துள்ளிக் குதிக்க வேண்டாம். ஒரு கந்தப்பன் மறைந்தால் ஓராயிரம் கந்தப்பன்கள் உங்களை எமலோகத்திற்கு அனுப்புவதற்குக் காத்திருக்கிறோம் ஜாக்ரதை. உங்கள் இறுமாப்பின் நேரம் முடிந்துவிட்டது.”

என்கிற மொட்டைக் கடிதத்தின் முதல்வரியை படிக்கும்போதே சித்ராவின் தலையில் சம்மட்டியாலடிப்பது போன்ற ஒரு வேதனை உண்டாகி மூளையே கலங்குவது போலிருந்தது. முற்றிலும் படிப்பதற்குள் பயத்தினால் மூச்சே நின்றுவிடும் போலாகி அவளையறியாது, ‘‘கூ!’’வென்று கூச்சலிட்டாள். உத்தமன் இந்த பயங்கரக் கூச்சலை கேட்டு ஓடி வந்தான்.

சித்ராவின் சரீரமே கிடுகிடுவென்று நடுங்கி வியர்வை வெள்ளம் ஆறுபோல் பொங்கி வழிவதால் உத்தமன் சித்ராவைத் தூக்கி மடியில் கிடத்திக்கொண்டு துடைத்தவாறு, ”என்ன சித்ரா!” என்று பதைபதைக்கக் கேட்டான். அவள் கையிலிருந்த கடிதத்தைக் காட்டி சமிக்ஞை செய்தாள்.

அதைப் படித்த உத்தமனும் அலறிவிட்டான். ”ஐயோ! இதென்ன பயங்கரம்! இளங்கர்ப்பிணியை இப்படுமோசமான கடிதம் என்ன செய்துவிடுமோ தெரியவில்லையே!” என்று கதிகலங்கினான். தானும் அதைரியமாயிருப்பதை அறிந்து அவள் பின்னும் கவலைப்படப்போகிறாளோ என்கிற பயத்துடன், தான் மிக்க தைரியசாலியாக இருப்பது போல் நடித்து, ”சித்ரா! சித்ரா! இதோ பாரு… பூ… இந்த அல்பக் கடிதத்திற்கா இத்தனை பயப்படுகிறாய்? இவன் என்ன நம்மை விழுங்கிவிடும் பூதமா! சித்ரா! பயப்படாது தைரியமாக எழுந்திரு. இக்கடிதத்தையே போலீஸாருக்கு அனுப்பி நான் தக்கபடி நடவடிக்கை எடுக்கச் செய்கிறேன்” என்று வெகு அன்புடன் கூறுகையில் வாசற்கதவை இடிக்கும் சத்தங்கேட்டதும் மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல் சித்ரா அலறியவாறு எழுந்து ”ஐயோ! கதவைத் திறக்க வேண்டாம். யார் என்று கேட்டுத் தெரிந்துகொண்டு திறவுங்கள்’’ என்று உத்தமனின் கைகளைப் பிடித்துக் கொண்டு தடுத்தாள்.

இதற்குள், ”சார்… மிஸ்டர் உத்தமன்!” என்று சிதம்பரமும் இன்ஸ்பெக்டரும் கூப்பிடுவதைக் கேட்டு சற்று தெளிவடைந்து கதவைத் திறந்தான். சித்ராவின் நிலை கலங்கிய அலங்கோலத்தைக் கண்டதும்… ”பார்த்தீர்களா சார்! அந்த முட்டாள் கழுதை ஆள்களுக்கு நேராக எழுதாமல் என் மனைவிக்கும் இதே மாதிரி எழுதினான். இன்ஸ்பெக்டர் பெரிய புலி என்பதையும், அவர் தமக்கு மேல்மட்ட துப்பறியும் ராஜாராம் நாயுடுவிடம் பழகிய பெருச்சாளி என்பதையும் அந்த அல்பன் எங்கு கண்டான்? இன்ஸ்பெக்டர் மனைவிக்கும் வந்தது’’… என்று சிதம்பரம் சொல்வதை உத்தமன் இடைமறித்து, ‘‘அட… இன்ஸ்பெக்டர் மனைவிக்குக் கூடவா வந்தது! ஐயோ பாவம்! அவர்கள் கூட சித்திராவைப் போல் அலறினார்களா! உங்கள் மனைவி எப்படி சமாளித்தார்கள்” என்றான்.

சிதம்: ‘‘என் மனைவிக்கு ஜுரமே வந்துவிட்டதப்பா! நான் இதே கடிதத்தைத் தூக்கிக் கொண்டு இவரிடம் ஓடி வந்தேன். ”ஒரு கலக்கத்தைக் கொண்டு காணப்போனால் இரு கலக்கத்தைக் கொண்டு எதிரே வந்தார்களாம்” என்பது பழமொழி. அதுபோல் அங்கு நான் கம்ப்ளைண்டு கொடுக்கச் சென்றால் அவரும் அதே கடிதத்தை வைத்துக் கொண்டு காடிசியளித்தார். சிரித்துச்சிரித்து பயமும் மறைந்துவிட்டது. இவருக்கா யுக்தியும் யோசனையும் சொல்ல வேண்டும்? உடனே இந்தக் கடிதம் எழுதிய ஆசாமிகளையும் பிடிப்பதற்குச் சரியான ஏற்பாடும் செய்தாயிற்று. எங்களுக்கு நேற்றே கடிதம் வந்துவிட்டது. ஒருவேளை இங்கும் வந்திருக்குமோ, இளங்கர்ப்பிணிக்கு அதனால் ஏதேனும் பாதகம் உண்டாகுமோ! என்கிற பயத்தினால் இங்கு முதலில் வந்தோம்.’’

உத்தமன்: ‘‘நல்ல காரியம் செய்தீர்கள். சற்று முன்பு சித்ரா மூச்சே போனது போலாகிவிட்டாள். அது சரிதான், இந்த அயோக்கியக் கூட்டங்கள் யாரு? கண்டுபிடித்தாயிற்றா!’’

இன்ஸ்பெக்டர்: ஏதோ ஒருவாறு கண்டுபிடித்தாயிற்று. நல்லவேளையாக நான் எங்கும் வெளியில் போகாது வீட்டிலிருக்கையில் கடிதம் வந்தது. பிரயாசைப்படாமலேயே கடிதம் எந்த ஊர் தபாலாபீஸிலிருந்து வந்தது என்பதைக் கண்டு கொண்டு உடனே என் குரு நாயுடுகாருவிடம் சென்று சில முக்கியமான யோசனைகளைக் கேட்டு எனது முக்கிய கையாட்கள் இரண்டு பேர்களை அழைத்துக்கொண்டு அந்த ஊருக்குச் சென்று புலன் விசாரித்து அந்தக் கந்தப்பனுக்கு யார் யார் சினேகிதம் என்பதையறிந்து அவர்களும் அவ்வூரில் திருட்டுத்தனமாக அரிசி வியாபாரம் செய்வதையும் தக்க சாட்சிகளுடன் கண்டுபிடித்துக் கையும் மெய்யுமாகப் பிடித்துவிட்டேன். இனி அதுவிஷயத்தைக் கண்டு சற்றும் பயப்பட வேண்டாம். சில தினங்களுக்கு இந்த வீட்டில் போலீஸ் பாராவும் போட்டு வைக்கிறேன் என்று சொல்லித் தேற்றிவிட்டுச் செல்வதற்காகத்தான் வந்தேன். நாங்கள் போய் வருகிறோம்.’’

சித்ரா சற்று சமாதானம் அடைந்து வந்தவர்களுக்குப் பலகாரம், காப்பி கொண்டு உபசரித்தாள். அவ்விருவரும் விடைபெற்றுக் கொண்டு உடனே சென்றுவிட்டார்கள்.

”ஒரு க்ஷண நேரத்திற்குள்ளே எப்படி ஒரு பெரிய பூகம்பம்போல் ஒரு புறம் பயங்கரமும் மறுபுறம் ஒரு சாந்தியும் உண்டாகிவிட்டது! எல்லாம் ஈசன் செயல்தான்” என்றான் உத்தமன். ‘‘ஈசன் செயல் மட்டுமில்லை. தபால் வினோதத்தின் பலன்கள் என்று கூறிச் சிரித்தாள் சித்ரா. அச்சிரிப்பில் வெற்றியின் பெருமிதம் பிரகாசித்தது.

16

”சித்ராதேவீ! போஸ்டு” என்று இரண்டு கவர்களைக் கொடுத்தான் உத்தமன். அன்று அந்த பயங்கரத்திற்குப் பிறகு தனக்கு வரும் கடிதங்களைப் பிரித்துப் பார்ப்பதற்கும் ஒருவிதமான பயமும் கவலையும் உண்டானதால்… ”எனக்குக் கடிதமா! நீங்களே படியுங்கள். எனக்கு பயமாயிருக்கிறது” என்றாள். உத்தமனே படிக்கவாரம்பித்தான்.

”அறிவிற் சிறந்த அம்மையே! வணக்கம் பல பல. உபயக்ஷேமங்கள். தாங்கள் வெகு முயற்சியுடனும், ஆராய்ச்சியுடனும் அனுப்பிய ‘கடிதம் எழுதுவதும் ஒரு கலைதான்’ என்கிற வெகு சிறந்த கட்டுரையை படித்து ஏகமனதாக அக்கட்டுரையே முதல் பரிசுக்குரியது என்று தீர்மானித்துள்ள ஆனந்தகரமான செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கவே இந்த லிகிதம் எழுதப்படுகிறது. எங்கள் ஸ்வதந்தராதேவி பத்திரிகைக்குத் தாங்கள் நிரந்தரமாக பெண்கள் பகுதியை ஏற்று நடத்தும்படிக் கோருகிறோம். அதற்கு மாதம் 100 ரூபாய் கொடுக்கப்படும். பரிசு பெற்ற இக்கட்டுரை முதல் தேதி பத்திரிகையில் வெளிவரும். பரிசு வழங்கும் விழாவைப் பிறகு அறிவிப்போம். தயவு செய்து அன்று எங்கள் ஊருக்கு வந்து விழாவைச் சிறப்பித்து பரிசுத் தொகையை வாங்கிக் கொள்ளவும்.

தயவு செய்து தங்களுடைய புகைப்படத்தை உடனே அனுப்ப வேண்டுமாய்க் கோருகிறோம். அனேகவித மேற்கோள்களுடனும் பலரகமான கடிதங்களின் ஆதாரங்களுடனும் தாங்கள் எழுதிய கட்டுரை ஒரு அனுபவக் களஞ்சியமாகவும், பாடம் கற்பிக்கும் ஆசானாகவும் இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை. உங்களுக்கு கமிட்டியின் சார்பாகவும் பத்திரிகையின் சார்பாகவும் வந்தனத்தைத் தெரிவிக்கிறோம்.

துரைராஜ்

இதைப் படித்து முடிப்பதற்குள்ளேயே உத்தமனின் ஆனந்தமும் கட்டுமீறிய உற்சாகமும் காட்டுவெள்ளம் போல் பொங்கிப் பெருகியதால் ஒரே தாவலில் சித்ராவைத் தூக்கிக் கொண்டே குதித்து விட்டான். அவளுடைய கன்னங்கள் சிவக்க… ‘‘பலே பேஷ்… சித்ரா… இந்த அளப்பரிய ஆனந்தக் கடிதம் என்னை தேன் குடித்த நரிபோல் செய்துவிட்டது. கிராமத்து வாழ்க்கையும், கிராமத்து உத்யோகஸ்தனாகிய கணவனின் அன்பும் இனி உனக்கு வெறுப்பாகத் தோன்றாதல்லவா? கிராமத்துத் தபால் வினோதத்தின் முடிவு உன்னை எத்தனை உச்சாணிக் கிளையில் உயர்த்திவிட்டது பார்த்தாயா?’’ என்று அபரிமிதமான பூரிப்புடன் கூறினான்.

சித்ராவுக்குச் சந்தோஷம் சொல்லமுடியாது பொங்கியது. ”எல்லாம் உங்களுடைய அனுக்ரகந்தான்!” என்ற வார்த்தைகள் மட்டும் புஷ்பம் உதிர்வது போல் உதிர்ந்தன.

இந்த நித்யமங்கள கல்யாண வைபவக்காட்சியை ஜன்னலால் பார்த்துப் பரமானந்தமடைந்த சித்ராவின் மாமியும் தாயாரும் பூரித்துப் புளகிதமடைந்து தாமே ஓடிச் சென்று சித்ராவை வாழ்த்தி திருஷ்டிக் கழித்தார்கள். பெரியோர்களின் அன்பில் சித்ராவின் உள்ளம் ஐக்யமானது. அதைவிட ஆனந்தம் வேறு என்ன இருக்கிறது?

***

வை.மு.கோதைநாயகி அம்மாள்

‘வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி’ என்பது முழுப் பெயர். தமிழில் முதலில் துப்பறியும் புதினம் எழுதிய பெண் எழுத்தாளர். இந்திய சுதந்திரத்துக்கான விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர். மேடைப் பேச்சாளர், கவிஞர், பத்திரிகை ஆசிரியர், சமூக சேவகி என பன்முகத் தன்மையோடு செயல்பட்டவர். விறுவிறுப்புக் குறையாத எழுத்துக்குச் சொந்தக்காரர். 115 புதினங்களை எழுதியிருக்கிறார். இரு சிறுகதைத் தொகுதிகள், மூன்று நாடகங்கள், இரண்டு உரைநடை நூல்களும் வெளி வந்திருக்கின்றன. ‘நாவல்ராணி’, ‘கதா மோகினி’, ‘ஏக அரசி’ என்றெல்லாம் போற்றப்பட்டவர். செங்கல்பட்டு மாவட்டம் நீர்வளூரில் 1901, டிசம்பர் 1ம் தேதி பிறந்தார். ஒரு வயதில் தாயை இழந்தார். சித்தப்பா ராகவாச்சாரியிடம் தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம், திருவாய்மொழி உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களைக் கற்றார். 1907ல் ஐந்தரை வயதில் திருமணம். கணவர் வை.மு.பார்த்தசாரதி, சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர். கோதை நாயகி அம்மாளுக்கும் திருமணத்துக்குப் பிறகு ‘வை.மு.’ என்ற அவர்களின் குடும்பப் பெயர் சேர்ந்து கொண்டது. அவருடைய செயல்பாடுகளுக்கும் வெற்றிகளுக்கும் பார்த்தசாரதி துணையாக இருந்தார். பள்ளிக்குச் சென்று படித்திராதவர் கோதைநாயகி. மாமியாரிடம் தெலுங்கு மொழியை கற்றுத் தேர்ந்தார். கணவர் அழைத்துச் சென்ற நாடகங்களைப் பார்த்து நாடகங்களின் மேல் ஈடுபாடு கொண்டார். சரியாக எழுதத் தெரியாத நிலையில், ‘இந்திரமோகனா’ என்ற நாடகத்தை உருவாக்கினார். இவர் சொல்லச் சொல்ல, அவருடைய தோழி பட்டம்மாள் அதை எழுதினார். அது நூலாகவும் வெளியானது. அதற்குக் கிடைத்த பாராட்டு மற்றும் வரவேற்பினால், தானே எழுதக் கற்றுக்கொண்டு வேறு சில நாடகங்களை எழுதினார்.

‘ஜகன்மோகினி’ என்ற இதழ் நின்று போயிருந்த சமயம் அது. அதை விலை கொடுத்து வாங்கி, வெளியிடத் தொடங்கினார். 35 ஆண்டு காலம் அந்தப் பத்திரிகை வந்தது. இந்து-முஸ்லிம் ஒற்றுமை, பெண் விடுதலை, தேசப்பற்று, விதவைத் திருமணம், மதுவிலக்கு ஆகியவற்றைத் தன் எழுத்துகளில் வலியுறுத்தினார். 1937ல் சொந்தமாக ஓர் அச்சகத்தையும் நிறுவி நடத்தி வந்தார். கர்நாடக இசைப்பாடல்களைப் பாடுவதிலும் வல்லவர். கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு சிறை சென்றார். 6 மாத சிறைத்தண்டனை. அபராதம் கட்டத் தவறியதால் மேலும் 4 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 1932ல் அந்நியத்துணி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக வேலூர் சிறை சென்றார். சிறையில் இருந்தபடியே இரு புதினங்களை எழுதினார். திரைப்படத் தணிக்கைக்குழு பிரிவில் உறுப்பினராகப் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. இவருடைய புதினங்கள் ‘அனாதைப்பெண்’, ‘சித்தி’, ‘ராஜமோகன்’, ‘தியாகக்கொடி’, ‘நளினசேகரன்’ என்ற திரைப்படங்களாக மலர்ந்தன. இறுதிக் காலத்தில் காசநோய்க்கு ஆளாகி துன்பப்பட்டார். 1960, பிப்ரவரி 20ம் தேதி மறைந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *