சில நேரங்களில் சில கடவுள்கள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: November 8, 2015
பார்வையிட்டோர்: 9,852 
 

ஆரது கதவடியிலை நிக்கிறது?

சாந்தி இல்லம் நிர்வாகி மரகதம் அம்மா என்றவர் நீங்களா?

நான் தான் மரகதம், நீங்கள் ஆர், என்ன விஷயமா வந்தியள்?

உங்களைக் காணவேண்டுமென்று வந்தேன்.

பொறுங்கோ, நாங்கள் இப்ப கை முட்ட அலுவலாய் இருக்கிறம். காலமை வெள்ளெனச் சந்திக்க வழக்கத்திலை நாங்கள் ஒருதருக்கும் நேரம் கொடுக்கிறதில்லை. என்ன விஷயமா வந்தனீங்கள் எண்டு சுருக்கமாய்ச் சொன்னால் நல்லது.

இங்கேயிருக்கிற பிள்ளைகளைப் பார்க்கலாமென்று வந்தேன்.

ரண்டு நாளைக்கு முந்தியும் உங்களைப்போல மூண்டு நாலு பேர் சும்மா விடுப்புப் புடுங்கிற மாதிரி வந்து கேட்டிட்டுப் போனவை. எல்லாரும் எங்கட இல்லத்தைப் பாக்கிறதுக்கும் போட்டோ எடுக்கிறதுக்கும்தான் வருகினமேயொழிய இங்கையுள்ள பிள்ளைகளின் சுக நலம்களுக்கோ படிப்புக் காரியங்களுக்கோ உங்களைப் போலை ஆக்களாலை ஒரு பிரயோசனமும் கிடைக்கிறயில்லை.

நான் அப்படியான நோக்கத்திலை வரவில்லை, அப்படியான ஆளும் இல்லை, மரகதம் அம்மா.

அப்பிடித்தான் எல்லாரும் முதலிலை சொல்லிக்கொண்டு வருவினம். எங்களுக்கும் மறுமொழி சொல்லிக் களைச்சுப்போச்சு. சும்மா ரண்டு பேருடைய நேரத்தையும் வீணாக்காமல் எங்களுடைய இல்லத்துக்கு உங்களாலை ஏதேனும் உருப்படியான உதவி செய்ய முடியுமெண்டால் நல்லா யோசிச்சுப்போட்டுப் பிறகொரு நாளைக்குப் பின்னேரமா வாங்கோ. சந்தோசமாக் கதைக்கலாம்.

உங்கள் மனதில் இருக்கிற கவலையும் பொறுப்பும் எனக்கு நன்றாய் விளங்குகிறது, அம்மா. இங்கே உங்கள் பராமரிப்பில் உள்ள பிள்ளைகளை ஒரு முறை நேரே பார்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள். அப்போ என்னால் உங்கள் பிள்ளைகளுக்குக் கொஞ்ச நேரத்துக்கென்றாலும் உண்மையிலேயே ஏதேனும் பிரயோசனம் கிடைத்தது என்பதை நிச்சயம் அறிவீர்கள். உங்களுக்கும் அதன் மூலம் மன ஆறுதலாகவும் இருக்கும்.

அதெப்படி? நீங்கள் என்ன நோக்கத்திலை எங்கள் பிள்ளையளைப் பாக்க விரும்பிறியள் எண்டதை முதலிலை விபரமாகச் சொல்லுங்கோ. அதை வைச்சுக்கொண்டுதான் அதுகளை நீங்கள் பாத்துக் கதைக்க உங்களுக்கு அனுமதி தாறதோ இல்லையோவெண்டு நாங்கள் யோசிப்பம். தயவு செய்து குறை நினைக்க வேண்டாம். இப்போ இந்த நிலையத்தன்ர கொள்கை இதுதான். நாங்கள் இங்கை மிருகக்காட்சிச்சாலை நடத்தயில்லை. இங்கே உள்ளதெல்லாம் குழந்தைகள் ஐயா, குழந்தைகள்! அநாதைக் குழந்தைகள். தாங்கள் அநாதைகளென்று அறியிற பக்குவம் வராத குழந்தைகள். இதை முதலிலை நீங்கள் தெரிஞ்சுகொள்ளுங்கோ.

இதையெல்லாம் அறிந்த பின்னர்தான் உங்கள் இந்த இல்லத்துக்கு வரத் தீர்மானித்தேன். இதுபோன்ற சிறுபிள்ளைகளின் காப்பகங்களைத் தமது சுய விளம்பரத்துக்காகப் பயன்படுத்தும் மனிதர்கள் மலிந்துபோன இந்தக் காலத்தில் உங்கள் நிர்வாகத்தின் கீழிருக்கும் இந்த இல்லம்தான் இலட்சியப் பற்றோடு பணி செய்கிறதென அறிந்து வந்தேன்.

மிச்சம் சந்தோசம், ஆனால் இந்த இல்லத்தைக் காப்பகங்கள் என்ற பெயருக்குள் முடக்காதீர்கள். நாங்கள் இதையொரு வீடுபோலவே கருதி நடத்துகிறோம். பிள்ளைகளை எங்கள் சொந்தப் பிள்ளைகளாகவே பேணிப் பராமரிக்கிறோம். இந்த வீட்டின் நிர்வாகியைக் காணவேண்டுமெண்டு சொன்னீங்கள். இங்கே நிர்வாகி என்று ஒருவரும் இல்லை. நாமெல்லாரும் இந்தக் குழந்தைகளின் பெற்றார்கள். இதை நல்லாய்த் தெரிஞ்சுகொள்ளுங்கோ. நாங்கள் அறுபதுக்கு மேற்பட்ட பிள்ளையளை ஆதரிக்கவேணும். அவையளை ஒரு குறையும் வைக்காமல் முறையாய்ப் பராமரிக்கவும் வேணுமெண்டு நாங்கள் எந்த நேரமும் ஓடுப்பட்டுத் திரியிறம். ஆனபடியால் எங்கட நேரத்தை வீணாக்காமல் இருக்கவேணும், பாருங்கோ.

இப்படியே இந்த நாடெல்லாம் இயங்குகிற எல்லா இல்லங்களும் நடந்தால் எவ்வளவு நல்லது. இதைச்சொல்கிறபோதே உங்கள் மனதில் இருக்கிற ஆதங்கம் வெளிப்படுகிறது. நீங்கள் என் மனதில் உள்ளதைக் கேட்டீர்கள், சொல்லுவேன், மகளே. ஒருவகையில் நானும் அநாதைதான். எனக்கெனச் சொந்தமாகக் குழந்தையென்று சொல்ல ஒருவருமில்லை. இதனால் உலகத்தில் நான் காணும் எல்லாக் குழந்தைகளையும் என் குழந்தைகளாய்க் கருதுகிறேன். அவர்கள் வாழும் எல்லா இடங்களுக்கும் போய் ஆதரவற்ற குழந்தைகளைத் தேடித் தேடிச் சந்திக்கிறேன். வசதியற்ற அந்தக் குழந்தைகள் எல்லாருக்கும் வசதி செய்து கொடுக்க வேண்டுமென்றுதான் விரும்புகிறேன். ஆனால் தர்மம் செய்ய இயலாதவர்கள் தார்மிக உதவி செய்யவும் முன்வரலாம்தானே. இப்படியான உதவியும் மனிதர்களுக்கு அவ்வப்போது தேவைப்படுகிறதல்லவா? அதனால்தான் பண உதவியோ உடல் உதவியோ செய்ய இயலாத நான் இங்கே வந்து வேறு வழியில் உங்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவ முடியுமாவென்று பார்க்கிறேன். இந்தக் குழந்தைகளை ஒருமுறை காண உங்கள் அனுமதி கிடைத்தால் எனது பயணத்தின் நோக்கம் நிறைவேறும்.

உங்களைப் பாத்தால் கனக்கப் படித்தவர்போலையும் வாழ்க்கையில் மிச்சம் அனுபவப்பட்டவர் போலையும் இருக்கிறியள். உங்களை வாசலிலை வைச்சுக் கதைக்க விரும்பயில்லை. உள்ளுக்கை வாங்கோ, பெரியவரே.

மிச்சம் நல்லதம்மா. எனக்காகவும் இரங்கி ஒப்புக்கொண்டதற்கு நன்றி.

நீங்கள் இவ்வளவும் சொன்னதை வைச்சு உங்களுக்கு ஒரு அரை மணித்தியாலத்தை ஒதுக்கலாமெண்டு யோசிக்கிறன். இது இந்தக் குழந்தைகளின் கற்கை நேரம். நீங்கள் குழந்தைகளைப் பாக்க வந்ததாலை அவர்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்படவேணும் இல்லையெண்டால் நாங்கள் விசிட்டர்களோடை மினைக்கெட்டுப் பிரயோசனமில்லை. நீங்கள் எந்த வகையிலாவது இந்தச் சிறு பிள்ளைகளுக்கு அறிவு ஊட்ட முடியுமெண்டால் உங்களுக்கு நாங்கள் அனுமதி தாறதாலை நன்மை இருக்கு. நான் சொல்லுறதை விளங்கி ஒத்துக்கொள்ளுவியள் எண்டு நினைக்கிறன்.

ஒத்துக்கொள்கிறேன். எந்த நிர்வாகத்துக்கும் நடைமுறை விதிகள் வேண்டும்தானே! நீங்கள் சொல்வது நியாயமாகவும் இருக்கிறது.

இப்பிடி இதிலை ஒரு நிமிஷம் இருங்கோ வாறன்.

இந்தாருங்கோ, உங்கட பர்சனல் விபரத்தை இந்த ஃபோமிலை எழுதித் தாருங்கோ. ஏனெண்டால் இங்கை பிள்ளைகளைப் பாக்க வாற ஆக்களன்ர சுய விபரத்தையும் நோக்கத்தையும் நாங்கள் ரெகொர்ட் பண்ணி வைச்சிருக்கவேணும்.

அப்படிச் செய்வதும் முறையான நிர்வாகத்துக்கு நல்லதுதான். படிவத்தைத் தாருங்கள்.

***

இங்கே நீங்கள் தந்த படிவம், இயன்றவரை நிரப்பியிருக்கிறேன்.

என்ன அதுக்குடனை ஃபோர்மை நிரப்பிவிட்டியள்!

என்னைப்பற்றி எழுத அதிகம் எதுவுமில்லை. ஓரளவுக்குப் பார்த்தால் எல்லாருக்கும் தெரிந்த செய்திதான்.

கையிலை வேலையாயிருக்கிறன், ஃபோர்மை அங்கை அந்த முன் மேசையிலை வைச்சிட்டுப் போங்கோ.

அப்படியே செய்கிறேன்.

அங்கை, உங்களை வகுப்புக்குக் கூட்டிக்கொண்டு போக சின்னம்மா காந்திமதி வந்திருக்கிறா.

மிகவும் நன்றி, மகளே. காந்திமதி, எனக்கு வழி காட்டுங்கோம்மா.

***

இஞ்சை இந்த வழியாலை வாங்கோ, ஐயா. இப்ப கற்கை நேரம் எண்டபடியால் இந்த மாதிரி வெளியான இடங்களைத்தான் வகுப்பு அறையாக வைச்சிருக்கிறம். இங்கை மேசை, கதிரை ஒண்டும் கிடையாது. நிலத்திலை இருந்துதான் படிக்கவேணும். பின்னேரம்தான் விளையாட்டு நேரம். மத்தியானம் பிள்ளைகள் சாப்பிட்ட பிறகு கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.

விளங்குகிறது, மகளே. நானும் நீங்கள் சொல்வதற்கமைய நடப்பேன்.

நீங்கள் முந்தி டீச்சர் வேலை, சமூக வேலை அப்பிடி ஏதேனும் செய்திருக்கிறியளோ?

இரண்டுமே சமூக வேலைதானே, அம்மா. அதைத்தான் காலம் முழுவதும் செய்துகொண்டிருக்கிறேன்.

இந்த வகுப்பறை எப்படி இருக்கிறதெண்டு நினைக்கிறியள்?

நான் முன்னர் பார்த்த இடமெல்லாம் வகுப்பறைகள் இப்படித்தான் என்று அறிந்து மனம் நோகிறது.

ஏன் அப்பிடிச் சொல்லுறியள்?

இங்கே பாருங்கள், இந்தச் சுவரெல்லாம் எவ்வளவு செம்மையாக வெள்ளையடித்துத் துப்பரவாக வைத்திருக்கிறீர்கள்.

நீங்கள் இதைச் சொல்லுறபோது எனக்குச் சந்தோசமாகவெல்லோ இருக்கு.

அப்படியில்லை,காந்திமதி. இந்தப் பிள்ளைகளின் மனம் இருக்கிறதே, அது மிகவும் அலாதியானது. சுவரைக்கண்டால் சித்திரம் வரையவேண்டுமென ஆவல்படும். கடதாசி, பென்சில் கிடைத்தால் அவர்கள் கைகள் துருதுருக்கத் துவங்கிவிடும். பறவைகள், மிருகங்களைக் கண்டால் அவற்றோடு விளையாடவும் பேசவும் ஆசை வந்துவிடும். இவர்களிடம் எல்லா நிறத்திலும் நிறக்கட்டிகளைக் கொடுங்கள். இந்தச் சுவர்கள் உங்கள் கண்களுக்கு அழுக்காகட்டும், அவர்கள் கண்களுக்கு அழகாகட்டும்.

இந்த வீட்டைச்சுற்றிய முற்றமெல்லாம் மரங்களும் செடிகளும் நிறைந்த சோலையாகட்டும். அங்கே கிடைக்கும் இடைவெளியெல்லாம் இவர்கள் ஓடி விளையாடட்டும். கூரை பிய்ந்துபோகும்படியாகச் சத்தம் எழுப்பட்டும். சண்டை பிடிக்கட்டும். அடுத்த கணம் எல்லாவற்றையும் மறந்து சினேகிதமாகட்டும். மொத்தத்தில் இது குழந்தைகளின் அரண்மனையாகட்டும். இவர்கள் போடும் கூச்சலால் உங்கள் எல்லாருக்கும் தலையிடி வரட்டும். அதையே நீங்கள் பெருமையாகப் பேசும் காலங்கள் வரட்டும்.

என்ன சொல்லுறீங்கள்?

இந்தக் குழந்தைகளின் உடல் நலத்தைப் பேணுவதிலும் பார்க்க மன நலத்தைச் பேணுகின்ற பணிதான் உங்களிடம் நிறைய இருக்கிறது என்று சொல்கிறேன், மகளே. இவர்களை நீங்கள் வெளியே கூட்டிக்கொண்டு போகும்போது இவர்கள் தெருவில் செல்லும் மற்றக் குழந்தைகளையும் அவதானிக்கிறார்கள், இல்லையா? அப்போது அவர்களைப்போல் தாங்களும் இல்லையேயென்று ஆதங்கப்படுகிறார்கள் என்பதை அறிவீர்களா? உடுப்பும் நகைகளும் இவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் என்பது தெரிந்ததுதானே. ஆனால் இவர்கள் மனதில் அந்தக் காட்சிகளைக் கண்டு எந்த வழியாலும் தாழ்வு மனப்பான்மை உண்டாகிவிடக் கூடாது என்பதில் நீங்கள் மிச்சம் கவனமெடுக்கவேண்டும். இல்லையேல் பிற்காலத்தில் இவர்களிடம் உளச்சிக்கல் ஏற்பட இடமுண்டு. இவர்களின் உடல் வளர்ச்சியிலும் பார்க்க மன வளர்ச்சியில் கூடிய கவனமெடுப்பதுதான் உங்கள் கையிலுள்ள பாரிய பணி.

இன்னுமொன்று சொல்வேன், மகளே. கோயில்களில் பார்த்திருப்பீர்களே அங்கே படம் எடுக்க அனுமதி இல்லையென்று அறிவித்திருப்பார்கள். இந்த இல்லமும் ஒரு கோயில் போன்றதுதான். ஒவ்வொரு முறையும் முகமறியாத வெளி ஆட்கள் இங்கே வந்து தம்மைப் படம் எடுக்கும்போது இந்தக் குழந்தைகள் தாமாகச் சிரிப்பதில்லை சிரிக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்ட கட்டாயத்திற்காகச் சிரிக்கிறார்கள். முன்பின் தெரியாதவர்களின் கட்டளைகளுக்குப் பணியவேண்டி வந்ததேஎன்று எண்ணி இவர்கள் மனம் கூசுகிறார்கள். தம்மைக் காட்சிப் பொருளாக்குகிறார்களேயென்று இவர்களின் இளம் மனம் நொந்துபோகிறது. வந்தவர்கள் பின்னர் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறீர்களா? ஒரு சிலர் இதை வைத்தே வியாபாரம் செய்கிறார்கள். பலர் தமக்குவிளம்பரம் தேடிக்கொள்கிறார்கள்.

எவ்வளவோ யோசிக்கவைக்கிறீர்கள், ஐயா. பெரிய அம்மாவிடம் எல்லாத்தையும் சொல்லுறன். வாருங்கோ பிள்ளையளைக் காட்டுறன். இங்கை இதுதான் இவர்களின் கற்கை அறை. இந்தப் பிள்ளைகளைப் பாருங்கள், எல்லாம் எங்களன்ர அருமையான பிள்ளைகள்.

குழந்தைகளே, உங்களைக்கண்டது எனக்கும் மிக்க மகிழ்ச்சி. உங்களைக் காணவென்று நெடுந்தூரம் பயணம்செய்து வந்திருக்கிறேன்.

ஐயா, பிள்ளையளோடை அதுகளுக்கு விளங்கிறமாதிரிக் கதையுங்கோ.

ஓம், காந்திமதி. எனக்கும் பழக்கத்தை மாத்தேலாமல் கிடக்குது.

பாருங்கோ, பெரியவரே, பிள்ளையள் உங்களையே பாத்தபடி இருக்குதுகள். ஐயா, நான் கொஞ்சத்தாலை வாறன். இப்பிடியொரு சந்தர்ப்பம் எல்லாருக்கும் கிடைத்துவிடாது, தவற விடாதையுங்கோ.

அதற்குக் கடவுளுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும், மகளே. யோசிக்கவேண்டாம், நீங்கள் பார்ப்பீர்கள்தானே, நான் விரைவில் பிள்ளைகளோடு பிள்ளைகளாகிவிடுவேன்.

***

பிள்ளையளே, எல்லாரும் காலமை குளிச்சுச் சாப்பிட்டுப் படிக்க வந்தியளோ?

ஓம், ஓம், ஓம்…..

எல்லாரும் வடிவாச் சட்டை போட்டிருக்கிறியள். நெத்தியிலை திருநீறும் சந்தனமும். உங்களைப் பாக்கவே எனக்குச் சந்தோசமாக இருக்கு.

நீங்கள் ஆர்?

சொல்லுறன், நீங்கள் எல்லாருக்கும் காலமை படிக்கிறதெண்டால் வலு சந்தோசமெல்லோ?

ஓ……ம்!

நானும் உங்களைப் போலை சின்ன வயசிலை இப்பிடித்தான். படிக்கவும் ஆசை, விளையாடவும் ஆசை. அங்கை பின்னாலை ஒரு பூனைக்குட்டி வந்து நிக்குது, தானும் படிக்கப்போகுதாம்.

ஓ…. இல்லை சும்மா சொல்லுறியள்.

ஓம், சும்மாதான் சொன்னனான். உங்களெல்லாருக்கும் பூனைக்குட்டி, நாய்க் குட்டியெண்டால் மிச்சம்விருப்பம், இல்லையோ?

ஓமோம், ஆனால் இஞ்சை அதுகளை உள்ளுக்கை வரவிடமாட்டினம்.

இனி அப்பிடி இருக்காது. பெரியம்மாட்ட சொல்லுறன். உங்களுக்கு விளையாட பூனை, நாய் எல்லாம் கெதியிலை வரப்போகுது.

ஓ….!

அதார் துள்ளித்துள்ளிக் கதைக்கிறவ?

இவதான் ஆரபி. இவவுக்குத்தான் எல்லாரிலும் பாக்க நல்லாக் கதைக்கத் தெரியும்.

ஆரபி, மிச்சம் வடிவான பெயர். உங்கள் எல்லாற்றை பெயரையும் சொல்லுவியளோ?

நாங்கள் எங்கட பெயரைச் சொல்லுவம். இப்பிடித்தான் நாங்கள் இஞ்சை வாற எல்லாருக்கும் முன்னாலை நிண்டு பெயர் சொல்லுவம், பாட்டுப் படிச்சுக் காட்டுவம். போட்டோ எடுக்கிறதுக்காகச் சிரிச்சபடி நிப்பம், சில ஆக்கள் கதை சொல்லத் தெரியுமோ எண்டு கேப்பினம். எங்களுக்கு எங்கட கதையே தெரியாது. இண்டைக்கு நீங்கள் முதலிலை உங்கட பெயரைச் சொல்லுங்கோ, பாப்பம்.

ஓமோம், ஆரபி நல்லாத்தான் கதைக்கிறா. நீங்கள் எல்லாரும் சிரிச்சுச் சிரிச்சுக் கதைக்க எனக்கும் சின்னப் பெடியளைப்போல மிச்சம் சந்தோசமாக் கிடக்கு.

உங்கட உண்மையான பேரைச் சொல்லவேணும். இஞ்சை ஒருதரும் பொய் சொல்லக்கூடாது. உங்களுக்குத் தெரியும்தானே?

ஓம் பிள்ளைகளே, உண்மையைத்தான் சொல்லுறன். என் பெயர் கடவுள்.

கடவுள்? உங்கட சொந்தப் பேரைச் சொல்லுங்கோ.

என்னுடைய சொந்தப் பெயரே அதுதான்.

அப்ப நீங்கள் நாங்கள் கும்பிடுற அந்தக் கடவுள் இல்லை. உங்கட பேர் மட்டும்தான் கடவுள். அப்படித்தானே?

அந்தக் கடவுள், இந்தக் கடவுள் எண்டு எதுவும் இல்லை, குழந்தைகளே. என்ர பேர் அந்தக் காலத்திலையிருந்தே கடவுள்தான்.

அப்பிடியெண்டால் உண்மையான கடவுளா?

பொறுங்கோ, ஆரபிக்கு இப்ப எத்தனை வயதெண்டு நான் சரியாச் சொன்னால் என்னை நம்புவீங்களோ?

எங்கை சொல்லுங்கோ பாப்பம்.

ஆ…. போன மாதம் ஒம்பதாம் திகதிதான் ஆரபிக்கு ஏழாவது பிறந்த நாள். நான் சொன்னது சரியா இல்லையா?

அடேயப்பா, சரியாச் சொன்னீங்களே. அங்கேயிருக்கிற எங்கட பெரியம்மாட்டக் கேட்டுப் பாடமாக்கிப்போட்டு வந்து சொல்லுறீங்களா?

அப்பிடியில்லை, ஆரபி.அம்மா சொல்லித் தராமலே உங்கள் எல்லாருடைய பிறந்த நாளையும் சரியாகச் சொல்லுவன்.

அதெப்பிடி? எங்களன்ரை உண்மையான பிறந்த நாள் ஒருதருக்கும் தெரியாது. ஏனெண்டால் நாங்களெல்லாம் அநாதைகளாக் காட்டுக்கை இருந்தனாங்களெண்டு எல்லாரும் தங்களுக்கை கதைப்பினம். எங்களுக்கு அப்பா, அம்மா இருந்தால்தானே எங்கட பிறந்த நாளை நாங்களோ வேறை ஆரெண்டாலோ சரியாகச் சொல்லலாம்.

அப்பிடி இல்லை, பிள்ளைகளே. நீங்கள் ஒருபோதும் அநாதையில்லை. என்னை நல்லா நம்புங்கோ. நீங்களும் மற்ற எல்லாப் பிள்ளைகளையும் போலை அப்பா, அம்மா இருக்கிற பிள்ளையள்தான். இப்ப உங்கட அப்பா, அம்மா உங்களுக்குப் பக்கத்திலை இல்லாததாலை உங்களை அநாதையெண்டு சில அறியாத சனங்கள் சொல்லுங்கள். நல்லாச் சொல்லிப்போட்டுப் போகட்டும். நீங்களும் ஹ ஹ ஹ ஹா எண்டு சிரியுங்கோ. எங்கை எப்பிடிச் சிரிக்கிறது எண்டு காட்டுங்கோ.

ஹ ஹ ஹ ஹா..!

அப்பிடித்தான். இப்ப உங்களுக்கு இந்த வீட்டிலை பெரியம்மாவும் சின்னம்மாவும் இன்னும் எத்தனையோ பேரும்தான் உங்களுடைய அம்மா, அப்பா. இதை நம்புறியளோ இல்லையோ?

ஓமோம், அவங்கள்தான் எங்களுக்கு எப்பவும் அம்மாவும் அப்பாவும்.

அந்த மாதிரித்தான் என்ர பெயர் கடவுள் எண்டதையும் நம்புங்கோ.

இஞ்சை வந்து வேடிக்கை செய்யவும் விளையாட்டுக் காட்டவும் வெளியாக்கள் வாறவையள். நீங்கள் முசுப்பாத்திக் கதை கதைக்கலாமெண்டா வந்தீங்கள்?

என்னையொரு முசுப்பாத்தி ஆள் எண்டுதான் சனங்கள் நினைச்சிருக்குதுகள்.

அப்ப முசுப்பாத்தி காட்டுங்கோ. முசுப்பாத்தியெண்டால் எங்களுக்கும் விருப்பம்.

***

காந்திமதி, வந்தவர் அங்கை வகுப்பு நடத்துகிறாரோ விளையாட்டுக் காட்டுறாரோ? அவர் வந்ததிலையிருந்து வகுப்பெல்லாம் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாய்க் கிடக்குது.

அவரைக் கொண்டுபோய் வகுப்புக்குள்ளை விட்டாப்போலை ஒருக்கால் எட்டிப் பாத்தனான். அப்பவும் சிரிப்பும் விளையாட்டும்தான். பிள்ளையளுக்கு நல்லாப் பொழுது போகுது, அதுகளைக் குழப்பக் கூடாது எண்டபடியால் நான் திரும்பி அங்கை இன்னும் போகயில்லை.

ஒருக்கால் போய்ப் பாத்திட்டு வாரும்.

ஓம் போறன்.

இவர் வந்து ஒரு மணித்தியாலமாப் போச்சுது. நாங்களும் வேலைப் பழுவிலை கவனிக்காமல் இருந்திட்டம். பிள்ளையள் களைச்சுப்போயிருந்தால் அவரை வெளியிலை அனுப்பிவிடும்.

ஓமம்மா, போய்ப்பாக்கிறன்.

***

சரி பிள்ளையளே, வகுப்பு நடந்தது போதும். பெரியவரும் களைச்சுப்போனார். எல்லாரும் வந்து வரிசையாய் நில்லுங்கோ.

கொஞ்சம் பொறுங்கோ சின்னம்மா, இவர் இன்னும் கதை சொல்லி முடியல்லை.

கதையோ, ஆர் கதை சொல்லுறது? எங்கை அந்தப் பெரியவரைக் காணயில்லை?

அவர்தான் இங்கை கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்.

என்ன சிரிப்பு இது? உங்களெல்லாருக்கும் இண்டைக்கு என்ன நடந்தது? எங்கை பெரியவர்?

இஞ்சை நடுவிலை இருந்து கதை சொல்லுறார் தெரியல்லையோ?

நடுவிலை? என்ன இது? பிள்ளைகளே எல்லாரும் எழும்பி நில்லுங்கோ. எனக்குப் பதட்டமாக் கிடக்கு. எங்கை அந்தப் பெரியவர்? எங்கை அந்தப் பெரியவர்?

***

அம்மா, அம்மா!

என்ன காந்திமதி? ஏனிப்பிடி பதகளிச்சுக்கொண்டு ஓடிவாறீர்? என்ன நடந்தது?

அவர், அவர்… அந்தப் பெரியவர்… அவரை அங்கை வகுப்பிலை காணயில்லை. எங்கை போனார் எண்டும் தெரியல்லை. பிள்ளையள் சொல்லுதுகள் அங்கை முன்னாலை இருக்கிறாரெண்டு.

என்ன சொல்லுறீர், காந்திமதி? வகுப்பிலை பிள்ளையளுக்குக் கதை சொல்லிக்கொண்டு இருந்தாரெல்லோ?

அப்பிடித்தான் பிள்ளையள் இப்பவும் சொல்லுதுகள். ஆனால் அவரை என்ர கண்ணிலை மட்டும் அங்கை காணயில்லை.

என்ன கதைக்கிறீர், நல்லாப் பார்த்தீரோ?

ஓமம்மா, பார்த்தேன். பிள்ளையளெல்லாம் சுத்துவட்டமாய் இருந்து கதை கேட்டுக்கொண்டிருந்தமாதிரித்தான் இருந்ததுகள். ஆனால் அவரை மட்டும் அங்கை காணயில்லை.

இதென்ன அதிசயமாக்கிடக்கு! அவர் வகுப்புக்குள்ளையிருந்து வெளியிலை வந்தால் எங்கட கண்ணிலை படாமல் போகுமோ. இந்த அறையைத் தாண்டித்தானே அவர் வெளியிலை போகவேணும். அங்கை வெளிக்கதவும் பூட்டினபடி கிடக்கு.

எனக்கொண்டும் விளங்கயில்லை, அம்மா.

வாரும் உள்ளைபோய்ப் பாப்பம்.

எவ்வளவு நேரமாக் கைதட்டுதுகள் இந்தப் பிள்ளையள்! என்ன கூத்து இது, ஒரு நாளும் இல்லாமல், சிவனே, ஏன் இண்டைக்கு இப்படியெல்லாம் நடக்குது?

பிள்ளையளே, கைதட்டினது போதும். எல்லாரும் வந்து வரிசையாய் நில்லுங்கோ.

ஆரபி என்னவோ சொல்லப்போறாவாம், அம்மா.

என்ன ஆரபி? நீங்கள் நல்ல பிள்ளையெல்லோ. உங்களுக்குக் கதை சொன்ன பெரியவர் எங்கை, எதாலை வெளியிலை போனவர்.

நீங்கள் இப்ப வரவும் தான் பிறகு வாறன் எண்டு சொல்லிப்போட்டு அங்கை போனார், அம்மா.

எதாலை போனவர்?

உதாலைதான். உங்களைத் தாண்டித்தான் போனவர்.

நாங்கள் காணயில்லை.

காந்திமதி, ஒருக்கால் அவர் நிரப்பித் தந்த ஃபோர்மை எடுத்துக்கொண்டு வாரும்.

பொறுங்கோ வாறன், அங்கை முன் மேசையிலை வைச்சிட்டுத்தான் வந்தவர். அங்கைதான் கிடக்கும்.

கெதியா வாரும். எனக்குத் தலையைச் சுத்துது.

இஞ்சை இருக்குதம்மா, ஃபோர்ம்.

இதென்ன இது, ஃபோர்மிலை ஒண்டுமே இல்லை. பெயர் எழுதிற இடத்திலை மட்டும் கடவுள் எண்டு எழுதிக் கிடக்குது!

Print Friendly, PDF & Email

1 thought on “சில நேரங்களில் சில கடவுள்கள்

  1. சமீபத்தில் படித்த கதைகளில் என்னை மிகவும் கவர்ந்த கதை என்று கூறினால் மிகையாகாது.. காப்பகத்தில் வளரும் குழந்தைகளின் மனநிலையை தத்ரூபமாக எடுத்துக் காட்டியுள்ளார் திரு ராஜாஜி ராஜகோபாலன் அவர்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *