கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 4, 2018
பார்வையிட்டோர்: 6,172 
 

தூரத்தில் ‘மா மா மா….’ என்று மாட்டின் கூக்குரலையும் தாண்டி ஒலித்தது அவர்களின் சத்தம் அது ஒரு வீண் பிதற்றல். நாட்டில் நடக்கும் சில ஒலி மாசுக்களில் அதுவும் ஒன்று இருந்தும் அந்த மாசில் நனைந்தபடி ஒரு கூட்டம் அதை செவி சாய்காமல் கேட்டு கொண்டிருந்தது

‘இந்த நாட்டின் புல்லுருவிகளான அந்த அரசியல்வதிகளை நாம் வல்லூறாக மாறி வேட்டையாட வேண்டும் நம் இரத்தத்தை குடிக்கும் இந்த பூச்சிக்களை நசிக்கிட புது புரட்சி செய்திட வேண்டும் நம்மை அடக்க நினைத்தால் ரேஷன் கார்டை தூக்கி வீசுவோம் நம் அடையாளத்தை அழிக்க நினைத்தால் ஆட்சியையே கவிழ்ப்போம்ம்ம்’

“டேய் யாரா இவன் இப்படி கூவிக்கினு இருக்கான்,

மதியோம் வெயில்ல நாஸ்டா கூட துண்ணாம வந்து குந்துன்னா இப்டி மொக்கைய போட்டுகினு இருக்கான்” என்று முனுசாமி கபாலி காதாண்டே முனுமுனுத்தான்.

“அட இர்ரா காசும் பிரியானியும் தரான் அது போதாதா நீ கம்முனு கிட இந்தா… அவ்ளோ தான் முடியபோது” என்று கபாலி அவனை அடக்கினான்.

உதய சூரியன் ஒரு வழியாக உதயத்தை விடுத்து சுட்டெரிக்க தொடங்கியது பச்சிலைகளும் தாமரைமலர்களும் துளிர்விட்டன கை ஓங்கியபடி ஓங்காத கதிர் அருவாள்கள் ஆங்காங்கே வேலைக்கு செல்ல கலைந்தன.

“டேய் வாடா நம்மலும் அப்பிட்டாவோம்” என்றான் முனுசாமி

“டேய் இவன் தான்டா கட்சி தலிவன் இவன் பேசுனவுன முஞ்சிறும் நீ பேயமா இரு புல்லா இருந்தா தான் வேண்டியது கிடிக்கும்” என்றான் கபாலி.

‘எனக்காக நீங்கள் செய்யவேண்டும்… தமிழகத்திற்கு செய்வினை செய்த இவர்களை வலுவாக செய்ய வேண்டும் செய்வீர்கள் என்று வேண்டி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்’

“அடங்கப்பா ஒரு வழியா முடிச்சுட்டான்டா,

ஒழுங்கா பேச கூட தெரில இவனுகுலாம் எப்டிரா நம்ம பயலுக ஓட்டு போடுவானுக” முனுசாமி கேட்க கபாலி மெள்ள கிசுகிசுத்தான்.

“டேய் இவன்லாம் ஆட்சிய பிடிக்க அரசியல் பன்றவன் இல்ல இவன் கூட்டத்துக்கு தலைவனா இருந்து ஓட்டவித்து சம்பாரிக்கிற பயபுள்ள,

நம்ம ஊருல இந்த சாதி, மதம், இனம் இதலாம் வச்சுகினு இவனுக சென்மத்துக்கும் வர முடியாது இருந்தாலும் ஏன் பன்றானுவ தெரியுமா இவனுக கூட்டத்த ஒன்னு சேர்த்து காசு பாப்பானுவோ

சரி அந்த கழுதைய விடு வா போய் காச வாங்குவாம்” என்று வரிசையாக நடப்பட்டிருந்த கட்சி கொடி கம்பங்களின் இரண்டு கொடிகளை லாவகமாக கழட்டி வேட்டியின் இடுப்பு மடிப்பில் சொருகினான்.

“டேய் எதுக்குடா இத எடுக்குற”

“அட கோவனத்துக்கு ஆகும்டா, சும்மா தான கிடக்கு நமக்குனாச்சும் உபயோமா கிடக்கும்”

“டேய் மாமா பின்றடா! உனக்கு எம்புட்டு அறிவு, பேசமா நீயும் ஆயிறுடா” என கபாலியை நினைத்து கொஞ்சம் சிலிர்த்தான் முனுசாமி.

“ஏன் என் கட்சி கொடிய கோவனமாக்கவா போடா….

அந்தா அங்க கூட்டமா இக்கிறானுக அங்க தான் போல வா!”

‘யோவ் வரிசையில வாங்கய்யா…

எல்லாருக்கும் இருக்கு”

ஆவலோடு முண்டியடித்து கை நீட்டிய கபாலிக்கு கிடைத்தது என்னவோ இரண்டு சிட்டைகள்.

“இன்னாடா டோக்கன தரான்

யோவ் காசு எங்கயா அத்த கொடு பர்ஸ்ட்”

“காசா நாங்க எப்போ தரோனோம்”

“யோவ் கூட்டத்துக்கு வந்தா இருநூறு ரூபாவும் பிரியாணியும் தருவோம்னானுக”

“கூட்டத்துக்கு வரவனுகுலாம் இப்படி குடுத்தா தேர்தல் வரும்போது இன்னாத்த குடுக்குறது,

இந்த டோக்கன எடுத்துட்டு அந்தாண்ட போனினா பிரியானி பொட்லம் குவாட்டர் பாட்டிலும் கொடுப்பான் வாங்கினு கிளம்பு”

“யோவ் டாப்பாய்க்காம காச கொடு”

“ஏய் அல்லு சில்லு மாறி பேசிகினு இருந்த அட்ச்சு மூஞ்சிகிஞ்சிலாம் ஒட்சுருவேன் மருவாதயா வாங்கினு ஓடு இல்லினா கொடுத்துட்டு இடத்த காலி பண்ணு”

“டேய் வாடா இவன்கிட்ட பேசிகினு” என கபாலியை ஆறுதல்படுத்தி நகர்த்தினான் முனுசாமி.

“இன்னாட இவன் இப்பவே இப்டி ஏமாத்துறான் நாள பின்ன இவன்லாம் நம்மலா ஆண்டானா வச்சு செஞ்சுறுவான் போல”

“விட்றா வந்ததுக்கு இதுனா கொடுத்தானே… வா! பிரியானியும் குவாட்டரையும் வாங்கினு போவோம்”

“இல்லிடா என்னுக்கு இப்ப காசு வேனும்” என்றான் கபாலி. அந்த குரலில் ஒரு விரக்தி ஒரு ஏக்கம் இருந்ததை முனுசாமியினால் உணரமுடியவில்லை.

“இப்ப இன்னாத்துக்கு ஒனக்கு காசு”

“அதலாம் உன்கு புரியாது”

“அடிங்கு இருநூறு ஓவா வச்சுகினு இன்னா பண்ண போற”

“இல்லாம் ஒனக்கு பிறவு சொல்றேன்…

முதல்ல காசு கரக்ட் பண்ணனும், வா” என்று கபாலி ஒரு கலக்கத்துடனே நகர்ந்தான் அவன் தவிப்பை வெளியே சொன்னால் நகைப்புக்குறியதாகும் என்று அனைத்தையும் மறைத்தான் பின்னே கண்ணீர் சிந்தும் கண்ணுக்கு தானே அந்த நீரை சுரக்க ஏற்பட்ட வலி எவ்வளவு என்று அதை வெறும் கண்கள் அறிந்திடுமா என்ன!

டோக்கனை கொண்டு போராடி காசு பண்ண நினைத்த அத்துனை முயற்ச்சியும் வீணாகி போக என்ன செய்வதன்று தெரியாமல் நின்றான் கபாலி.

“ஒன்னு சொல்றேன் பேசாம சரக்கையும் பிரியானியையும் வாங்கிகினு வெளில வித்துருவோம் வர்ர காச எடுத்துப்போம்”

“இதலாம் சரி வருமா” என்றான் கபாலி

“நீ ஒன்னியும் கவலபடாத நான் பாத்துகினேன்” எனச் சொல்லி முனுசாமி டோக்கனை எடுத்துக் கொண்டு அந்த இடத்தை நோக்கி சென்றான் ஒரே கூட்டம் மெரினாவின் உப்பலை போல அங்கே குடியலை குடிமகன்கள் முட்டி மோதி கொண்டிருந்தார்கள்.

“ஏய் நவுறு நவுறு” என சரமாரியாக புகுந்தான் முனுசாமி.

“அடிங்கு இங்கென்ன கிஷ்னாயிலா ஊத்திகினுருக்காய்ங்க நவுறு நவுறுனு பூர்ர” என்று கொக்கரித்தான் ஒரு மூத்த குடிமகன்.

“ஆமா ஊத்துறானுக ரேசன் கடையவே மூடினு டாஸ்மாக் ஆரம்பிக்க தான் பிளான் பண்றானுக அதுனால நாங்க பூர்ர தான் செய்வோம்” முனுசாமிக்கு கொஞ்சம் கோவம் தான் அது எதனால் என்று அவனுகே சிலசமயம் விளங்குவதில்லை ஒருவேளை சோம பானங்களின் விலையேற்றமாக இருக்கலாம்.

ஒருவழியாக இரண்டு டோக்கன்களுக்கு வேண்டியது கிடைத்தது. முனுசாமியின் முகத்தில் சோம வாடை பீறிட்டது ஏனோ கபாலியின் முகம் சுருங்கியது.

“டேய் சரக்க வாங்கிகினேன்…

வா! போய் பிரியாணிய தட்டலாம்”

“ஏய் காச கரக்ட் பண்ணனும்னா பிரியாணியையும் சரக்கையும் தேத்தினு இருக்க”

“ஏய் அப்பத இருந்து காசு காசுனு கூவினு இருக்க காச வச்சுகினே இன்னா பண்ண போற”

“என்னமோ பண்ணுவேன்”

“இது வேலைக்காவது நான் கிளம்புறேன்

நீயே எதனா பண்ணிக்க”

“டேய் டேய் கோச்சுகினியா”

“பின்ன இன்னாடா ஒனக்காக நாஸ்டா துன்னாமா கொலுத்து வேலைக்கு போவாம உன் கூட சுத்திகினா நீ ஓவரா கலாய்கிற

இப்ப சொல்ல போறியா இன்னா?”

“அது…

வந்து… எப்டி சொல்றது”

எப்படி சொல்வது ம்ம் கபாலிக்கு தான் அதை எப்படி சொல்ல முடியும் அதை சொல்லி முனுசாமியின் எக்காளச் சிரிப்பை எப்படி அவனால் ரசிக்க முடியும். இருந்தும் அவன் சொல்லி தான் ஆக வேண்டும்.

மேல் உதடும் கீழ் உதடும் குளற ஒவ்வொன்றாக சொன்னான்.

கதையின் தொடக்கத்தை எப்படி தொடங்குவது என்று கபாலிக்கு சற்றே பெருங்குழப்பம் மாட்டிடம் இருந்தா மகளிடம் இருந்தா என்று…

மகளுக்கும் மாட்டுக்கும் தான் என்ன சம்பந்தம், தன் மகள் உதிர்த்த வார்த்தையின் வீரியம் தான் அவனுக்கு புரிந்திடுமா புரியாது போனால் அதை எள்ளி நகையாட காத்திருக்கும் வாய்தனை கண்டு தான் தன் உள்ளம் கனிந்து பூச்சொறியுமா என எத்துனையோ மனக்குழப்பங்கள் தூயஇன்பத்தமிழில் சிதறிட்ட செய்யுள் பாக்கள் போல உரைநடை இல்லாமல் தவித்தது. ‘தாமதிக்காத சிச்சா சிச்சுகினு போறான் நீ கூவுனு’ மனக்குரல் கேட்டிட ஆரம்பித்தான்.

“வெண்பா, நல்லா படிக்கிற புள்ளனு உனக்கே தெரியும்

அது பர்ஸ்ட் கிளாஸ் பாஸ் பண்ணிகின்னதுக்கு அது பிரண்ட்ஸ் எல்லாருக்கும் கறி சோறு போடுறேனு சொல்லினு கிடந்துச்சு”

“சரி அத்துக்கு இன்னாப்போ நம்ம மணி கடையாண்டே போய் நூறு ரூபா கொடுத்தனா சோளி முடிஞ்சு. அதுக்கு போய் நீ இவ்ளோ கூத்து பண்ணிகின்னுக்குற”

“உனக்கி எப்புடி சொல்றது

சொன்னா ‌புரியாது….”

“அடிங்கு இன்னா புரியாது ஒழுங்கா சொல்றா”

நீண்ட யோசனை ஆழ்ந்த அமைதி தீர்க்கமான ஒரு பெருமூச்சு விட்டபடியே அன்று நடந்ததை கூறினான். அது அப்படி ஒன்றும் பெரிய பாவம் இல்லை சிவபெருமானே சிறுதொண்டனிடம் பெரிய பொருட்டாக கருதாத போது கபாலிக்கு இதலாம் சர்வ சாதரணம் இருந்தும் சிறு புல் பெரிதென தெரியும் மானுடம் இவ்வுலகில் உண்டென அறிய ஒரு பிரம்ம பிரயத்தனம் தேவைப்படுகிறது.

“ஒரு இரண்டு மாசத்துக்கு மின்னாடி பஞ்சவர்ணம் பிள்ளைக்கு கறி சோத்த கட்டி குடுத்துருக்கு ஸ்கூலுக்கு…

அது அந்தாண்ட போய் நான் கறிக்குழம்பு இத்தாண்டுருக்கேன் சாப்டேனு அது பிரண்ட்ஸ் எல்லாருக்கும் கொடுத்துருக்கு

அத துன்ன பிள்ளைக மறுநாள் உடம்பு முடியாம போய்டுச்சுகளாம் டாக்டராண்ட கேட்டத்துக்கு ‘உங்க பசங்க பீஃப் சாப்டுருக்காங்க அதான் ஒததுக்கலனு’ சொல்லிகினாய்ங்களாம்.

அப்புறமா வெண்பாவா அவ பிரண்ட்ஸுக ஸ்கூல ரொம்ப ஓட்டிருக்குக பாவம் பிள்ள ‘ஏய் மட்டன் சொல்லி பீஃப் கொடுத்து ஏமாத்துறியா’ ‘ஏ பீஃப்! பீஃப்’னு தினம் ஓட்டிருக்குங்க.

அன்னைக்கு பிள்ள அழுதது ரொம்ப பேஜாராய்ருச்சு

‘ஏன் பா இத்தன நாளா என்ன ஏமாத்துநீங்க’ சொல்லி கேட்டுபுச்சு, எனக்கு அப்பவே நெஞ்ச பிடிச்சிச்சு.

ஏமாத்தீடீங்க னு சொன்னது இன்னும் என் காதாண்ட கேட்டுகுனே இருக்குடா.

பஞ்சவர்ணம் சமதானப்படுத்தி நீ பர்ஸ்ட் ரேங்க் எடு உன் பிரண்ட்சுக்கு வைப்போம்னு சொல்லி வச்சுச்சு.

என்னால இன்னா பண்ணமுடியும் நம்ம வாங்குற கூலிக்கு வெள்ளாட்டங்கறிலாம் திங்க முடியுமா !!!!

நம்மலா.. மாட்ட நம்பி தான் உசுர ஓட்டிகினு கிடக்கு

அந்தா கிடக்கானுவலே கூட்டம் கூட்டமா பங்களாவுல அவனுக தட்டுல கிடக்குறதலாம் நம்ம மோந்து பாக்ககூட முடியாது.” என்று மூச்சுவிடாமல் கபாலி சொல்லி முடிக்கையில் முனுசாமிக்கு மூச்சு வாங்கியது.

“ஏய்! யார்டா சொன்னது இவனுக இததான் திங்கனுமுனு. நம்ம வயித்துல இன்னா கிடக்கனும்னு நம்ம தான் முடிவு பண்ணனும்

சரி வா வெண்பா இன்னிக்கு கறிக்கஞ்சி சாப்டுது”

ஒரு வழியாக கூட்டம் கட்டுக்குள் ஓட்டுக்கு விலைபோகும் ஆட்டு மந்தைகள் மேய்வதை நிறுத்தி கொண்டன.

“சரக்கும் பிரியாணியும் வாங்கி வெளில வித்தா கூட அவ்ளோ காசு தேறாதே ஒரு கிலோ ஆட்டுக்கறி ஐந்நூறுவா சொல்லுவானே…

இன்னா பண்ணலாம்” என முனுசாமி முனுமுனுத்தான்.

“நீ பேசாம இரு நான் வேற ஒன்னு பண்ண போறேன்”

“வேற பண்ண போறியா, இன்னா பண்ண போற”

“அந்தா நம்மல இட்டான்டால அவன் கையில கிடக்கிறது எடுத்தா எவ்ளோ தேறும்”

“ஏய் இன்னா ஆட்டய போட போறியா, மாட்டுன சாவடிச்சுருவாய்ங்க”

“உனக்கு அல்லு இல்லன பேசாம கிட நான் பாத்துகுறேன்”

இங்கு களவாட தயரானான் கபாலி, அங்கே தந்தையை காண தயரானாள் வெண்பா.

இருவரும் ஒருகோட்டில் இன்று சந்திக்க போகிறார்கள். அந்த தருணங்கள் எப்படி கடத்தப்பட போகிறது என முனுசாமி ஐய வினாக்கள் ஓட களவு நடந்தது.

“ஏய் அரசியல்வாதிகிட்டயே நீ கை வைக்கிறியா. எப்பயும் நாங்க தாண்ட உங்க கிட்ட கை வைக்கனும் நீங்கலாம் வைக்ககூடாது

டேய் இவன அடிச்சு சாவடிங்கடா”

எண்ணிய தருணங்கள் நிலைமாற முனுசாமி கடுகடுத்தான் பதறினான் பயந்தான் பிறகு கெஞ்சினான் கதறினான் தன் தோழமைக்காக.

அவன் முகத்தில் எத்துனை காயங்கள், அந்த காயங்களில் வழிந்த இரத்தம் கூட அவனை நீங்க மறுத்தது நல்லவர்கள் இரத்தம் சிந்தக்கூடாது என்று நினைத்திற்று போலும் கொஞ்ச நேரம் அங்கேயே கிடந்திற்று இருந்தும் நிலத்தில் வீழ்ந்தது ஈர்பிசையின் காரணமாக.

தந்தையை காண ஒடி வந்தவளுக்கு அப்படி ஒரு காட்சி பேரதிர்ச்சியாக தான் இருந்திருக்கும். எந்த பிள்ளையும் தன் தந்தையை பார்க்ககூடாத நிலையில் பார்த்துவிட்டாள் பார்த்தும் அவளால் என்ன செய்யமுடியும் இரக்கமெனும் குணத்தையே மறந்த மனிதர்களிடம் அவள் எதை கூறி நியாயம் கேட்டிடுவாள்.

அவள் கேட்பதற்கு ஒன்றுமில்லை அவள் சொல்லுவதற்கு தான் ஒன்று கிடந்தது அவள் உதடுகளில் அது அவள் தந்தையின் காயங்களுக்கு மருந்தாகுமா என்று தெரியவில்லை ஆனால் மனதிற்கு இதமாகும். அந்த சொற்களை இதமாகவே சொன்னாள் வெண்பா, கபாலியின் கண்களை குளமாக்கிட.

“ப்பா அது நல்லாவே இருக்காதாம் பா, நமக்கு வேணாம் பா அது”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *