தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 11,259 
 

வசந்தா அலுவலக வேலையை முடித்துவிட்டு, வீட்டுக்குக் கிளம்பும் போது, அம்மா மொபைலில் அழைத்தாள்.
“”வசு…”
அம்மாவின் குரலில் பதட்டமும், அவசரமும் தெரிந்தது.
“”வசு… வீட்டுக்குக் கிளம்பிட்டியா? நேராக, கங்கா நர்சிங் ஹோமுக்கு வந்துடு… அத்தையை அங்கே சேர்த்திருக்காளாம்…”
கைம்மாறுவசந்தாவுக்கு, “திக்’ என்றது.
வசந்தாவுக்கு முக்கிய உறவே, அத்தையும், அவளுடைய குடும்பமும் தான்…
“”என்னாச்சு?”
“”கொஞ்சம் படபடப்பாகவே அத்திம்பேர் பேசினார். ராத்திரி முழுக்க அத்தைக்கு நெஞ்சு வலியாம். ஜெலூசில், பெருங்காயம் என்று கைவைத்யம் பார்த்திருக்கா… விடிகாலை 5 மணிக்கு தீவிர வேதனையுடன் எமர்ஜன்சியில் சேர்த்திருக்காளாம்…”
“”அம்மா… நீ கவலைப்படாம, தைரியமா நர்சிங் ஹோமுக்கு வந்துடு… நான் இன்னும் 20 நிமிடத்தில் அங்கே இருப்பேன்.”
வசந்தா தன்னுடைய சிறிய சான்ட்ரோ காரைக் கிளப்பினாள். மனம் மட்டும் அத்தையையே அசை போட்டது. இதுவரை அத்தைக்கு தலைவலி கூட வந்தது கிடையாது.
அத்தை அந்த காலத்து மனுஷி, பரோபகாரம், எளிய வாழ்க்கை, லோகஷேமம், தர்மம், இப்படி பல ஐதீகங்களில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தாள். நன்னிலம் கிராமத்தில் இருந்து, திருமணமாகி மெட்ராஸ் வந்ததும், கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல இருந்ததாம். அத்திம்பேருக்கு அதிகம் வருமானம் இல்லை.
ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே, முத்துக் காளச் செட்டி தெருவில், ஜாகை, தோப்பு, பரம்பு என்று அகல வாழ்ந்துவிட்டு, ஒண்டிக் குடித்தனத்தில் பதுங்கிய போது, கணவரின் அன்பு மாத்திரம் உற்சாகப்படுத்தியது. கொஞ்ச நாளிலேயே, நிறைய தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டாள். பாட்டு சொல்லித் தருவது, ஜட்ஜ் மாமா வீட்டில் இட்லிக்கு அரைப்பது, பட்சணம் செய்வது, சீமந்தத்துக்கு, “பொரி கொள்ளு’ தயாரிப்பது என்று ஓயாத உழைப்பால், கொஞ்சம் காசைப் பெருக்கிக் கொண்டாள்.
அத்தைக்கு ஒரே பிள்ளை. “விசு’ என்ற, “விஸ்வநாதன்!’ பூவன் பழத்தின் வெளுப்பும், அக்னிஹோத்ரிகளின் தேஜசும் முகத்தில் தேக்கினவன். நன்றாகப் படிப்பான்; நிறைய சிந்திப்பான். பள்ளி படிப்பு முடிந்த போது, ஜட்ஜ் மாமா உபதேசத்துடன், ஐ.ஐ.டி.,யில் சேர்ந்தான். அறிவும், துணிச்சலும், உழைப்பும் கூடிய இளம் பொறியாளர்களை அப்போது வெளிநாடுகள் வலை போட்டு தேடிய சமயம்.
அபூர்வமாகவே சிலர் மட்டும், வெளிநாடு போன சமயத்தில், விசுவுக்கு கால் காசு செலவில்லாமல், மேல் படிப்பு, உத்யோகம் என்று போட்டி போட்டுக் கொண்டு வாய்ப்புக்கள் வந்தன. எல்லாரும் சொன்னார்கள்… “விசு வெளிநாடு எல்லாம் போக மாட்டான். அவனுக்கு வெளியூ ரெல்லாம் சரிப்படாது. அவன் அம்மாவை விட்டுட்டு இருக்க மாட்டான். அவன் ஒரு சுத்த அம்மா கோண்டு…’
விசுவுக்கு அம்மா மேல் அலாதி பிரியம். அவனுக்கு, அவன் படிப்புக்கு என்று, தன் உடலை நிறைய வருத்திக் கொண்டிருக்கிறாள். ஆனாலும், என்றும் புன்சிரிப்பு தான்.
வசந்தா தன் எட்டு வயதில் இருந்து, அத்தையிடம் பாட்டு, ஒழுக்கம், பஜனை, சமையல் என்று எவ்வளவோ கற்றுக் கொண்டிருக்கிறாள். நிறைய குழந்தைகள், பாட்டு படிக்க வருவர். அங்கே உள்ள உண்டியலில், காசு போட்டுவிட்டுச் செல்வர்.
“பகவான் நாமத்தை நான் சொல்லிக் கொடுப்பதால், எனக்கு மனசாந்தி கிடைக்கிறது. இதற்கு போய் சன்மானம் வாங்கி கொச்சைப்படுத்தலாமா?’ என்பாள். விசுவுக்கு அடுத்தபடியாக அத்தைக்கு வசந்தாவை பிடிக்கும். தன்னுடைய குழந்தையாகவே வளர்த்தாள். இன்றைக்கு வசந்தா ஒரு முதிர்கன்னி. சாப்ட்வேர் கம்பெனியில் கைநிறைய சம்பளம் வாங்குகிறாள்.
புறத்தளவில் அவளிடம் மாற்றம் கண்டாலும், மனதளவில் பாரதப் பண்பாட்டை விட முடியவில்லை. பெரியவர்களுக்கு மரியாதை, கூட்டுக் குடும்ப வாசம், கல்யாணியில், “வாசுதேவ விட்டல்’ என்று வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தாள். அதனாலேயே, வெளிநாட்டின் நிரந்தர வாசத்தை ஏற்க அவள் மனது ஒப்புக் கொள்ளவில்லை.
அமெரிக்க டாலரை விட, அவள் நெஞ்சில் தொங்கிய, மூகாம்பிகை அம்மனின் டாலர் அவளுக்கு நிறையவே பிடித்திருந்தது. விசுவுக்கு கல்யாணம் நடந்தது. பெரிய தொழிலதிபரின் பெண் ராஜிக்கு அமெரிக்க மோகம். ஆரம்பத்தில், வருடா வருடம் குடும்பத்துடன் இந்தியா வந்த விசு, மூன்று வருடங்களுக்குப்பின் அபூர்வமானான். இரண்டு வருடம், மூன்று வருடம் என்று, இப்போது அவன் வந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது.
குழந்தைகள் படிப்பு, நேரமில்லை என பல சாக்கு போக்குகள். அத்தை ஒரு சம்பவத்தை அடிக்கடி சொல்வாள்… அத்தை கல்லுரலில் அரைத்தும், அம்மியில் சிரமப்பட்டும், எந்திரத்தில் பொடியாக்கியும் வேலைகளைச் செய்து விட்டு களைத்து வரும் போது, அத்தையின் கைகளில் தைலம் தேய்த்து, சுடு தண்ணீர் ஒத்தடம் கொடுப்பானாம் விசு.
“குழந்தே… போய் படுத்துக்கோ… ராத்திரி ரொம்ப நேரம் கண்முழுச்சி படிச்சியோல்யோ…’ என்பாள்.
தன் வலியை மறந்து, புத்ர பாசத்தில் ஓடாய் தேய்ந்து விட்ட அம்மாவிடம், விசு அடிக்கடி கேட்பானாம், “அம்மா…< உன் அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போறேன்? உன் உழைப்பில் என்னை உயர்த்தி, நான் நன்றாக வாழ இவ்வளவு கஷ்டப்படுகிறாயே?’
“விசு… நாளைக்கு நீ பெரிய உத்யோகத்துக்கு போய்விட்டால், நான் ராணியாய் வீட்டில் இருக்கப் போறேன்…’
“அம்மா… நீ எனக்கு தெய்வம் தான். உனக்கு, என்ன வேண்டுமானாலும் நான் செய்வேன். ஆனால், என்ன கைம்மாறு செய்தாலும், அதற்கு ஈடாக முடியுமா?’
அத்தை தீர்க்கமான முகத்துடன் ஒருநாள் சொன்னாள்.
“விசு… நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்று நீ அடிக்கடி கேட்கிறாயே? அம்மா, குழந்தைக்குச் செய்வதெல்லாம் நிஷ்காய கர்மாதான். பலனை எதிர்பார்ப்பதில்லை, வானத்து மழை போல. கைம்மாறு என்று ஒன்று இருப்பதே நினைவுக்கு வருவதில்லை. ஆனாலும், கடமைக்கு என்று விட்டேத்தியாகவும் ஏனோ, தானோ என்று செய்வதும் இல்லை…
“விசு… நான் 19 வயதில் கல்யாணமாகி வந்தேன். திருமணமாகி மூன்று வருடங்கள் நான் உண்டாகாமல் இருந்தேன். அன்று, என் தாய்மையை களங்கப்படுத்தி பேச ஆரம்பித்தனர். ஆனால், என்னை அந்த அவப்பெயரிலிருந்து, நீ ஒரு அவதாரமாய் வந்து காப்பாற்றினாய். என் தாய்மையை ஒளிரச் செய்த உனக்கு, நானல்லவா கைம்மாறு செய்ய வேண்டும்?’
சில மணி நேர வாதாடலுக்குப் பின், விசு தீர்மானமாய் கேட்டான்.
“அம்மா… அப்படி நான் உனக்கு கைம்மாறு செய்ய வேண்டும் என்று எண்ணினால், என்னம்மா செய்யட்டும்…’ அவனை உச்சி மோர்ந்து சாவகாசமாய் அத்தை சொன்னாள்.
“விசு… எனக்கு உன் கையால் கொள்ளி போட வேண்டும். நீ எந்த நாட்டில், எந்த தூரத்தில் இருந்தாலும், நான் இறந்து விட்டேன் என்று தெரிந்தால், ஓடோடி வந்து, பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னி பகவானுக்கு என்னை பிஷை கொடுக்க வேண்டும்… நான் ஒரு உயர்ந்த ஆகுதி ஆக வேண்டும்…’ அத்தை தீவிரமான குரலில், தீர்மானமாய் சொன்னாள்.
“பிரசோபநிஷத்தில் ஒரு வாக்கு வருகிறது. ஒரே பிள்ளையின் கைகளால் சிதையூட்டபட்ட அன்னை அவரோகணதிக்குப் போய், நிச்சலமான கைலாய பதத்துக்கு போகிறார்களாம் விசுக் கண்ணா… நான் பழைய மனுஷி. அசாத்ய நம்பிக்கை, நம் வேதங்களிலும், உபநிஷத்துகளிலும் வைத்திருக்கிறேன். இதுவே, நீ எனக்கு செய்யும் பெரிய கைம்மாறு…’
அம்மாவை ஆச்சரியமாய் பார்த்தான் விசு.
கேட்டு, வாங்கி, அணிந்து பெருமைப்பட எத்தனையோ சாதனங்கள் இந்த உலகில் உண்டு. ஆனால், பிள்ளை கையால் கொள்ளி போடுவதே உத்தமம் என்று நினைக்கும் அம்மா, வித்யாசமான பிறப்பாய் தெரிந்தாள்.
வசந்தா, நர்சிங்ஹோம் வாசலில் நின்ற போது, அசாதாரணமாய் உணர்ந்தாள். அத்திம்பேரின் முகம் பாறையாய் தெரிந்தது.
“”வசு… இப்போதைக்கு நீதான் இருக்கிறாய். உனக்கு ஒரே ஒரு முக்கியமான ஜோலி இருக்கு. விசுவை உடனடியாய் வரச் சொல்லு. அவன் வந்து கொள்ளி போட்டால் தான், அவளுடைய ஆன்மா சாந்தியடையும். வேகமாய் அவனைத் தொடர்பு கொள்ளு.”
ஐ.சி.யூ.,வில் இருந்து பனிக்கட்டியாய் அத்தை வெளியே வந்தாள். பாரம்பரியத்தில் வாழ்ந்தவள். தன் ஆசாரங்கள் கொஞ்சமும் குலையாமல், பூரணமாய் வாழ்ந்து விட்டவள். வசுவின் மனதில், அம்மாவை விட ஒருபடி மேலே சென்று எல்லாம் பயிற்றுவித்தவள்.
வசந்தா, வேகமாய் எதிரேயுள்ள ஐ.எஸ்.டி., பூத்தில் பிரவேசித்தாள்.
இருபது நிமிஷம் பல ஸ்தலங்களில் விசு கிடைக்காது, ரத்த அழுத்தம் உயர்ந்து போன நிலையில், வசந்தாவின் முயற்சியில், விசு லைனில் வந்தான்.
“”என்ன வசந்தா? இந்த நேரத்தில்?”
“”விசு… உன்னை தொடர்பு கொள்ள எவ்வளவு கஷ்டமாய் இருந்தது தெரியுமா?”
“”நான் ஒரு முக்கியமான வியாபார விஷயமாய் இப்போ நியூ ஜெர்சியில் இருக்கேன். வீட்டில் ராஜி சொல்லலியா? இந்த ஸ்டார் ஓட்டலில் கனெக்ஷன் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம் தான். பல கேள்விகள் கேட்டு விட்டு, அப்புறம் தான் கனெக்ஷன் எல்லாம், டெரரிசத்துக்குப் பயந்து…”
“”விசு… மனசை தேத்திக்கோ… எனக்கு உன்னிடம் சொல்ல ஒரு துக்க செய்தி…”
“”…”
“”விசு… அத்தை நம்மை எல்லாரையும் விட்டுட்டுப் போய்ட்டா.”
விசுவின் பதிலில்லாத அசாத்ய மவுனத்தில், அவனுடைய சோகத்தை வசந்தா உணர்ந்தாள்.
“”எப்போ?”
“”இப்போதான். ஒரு மணிநேரம் முன்னால…”
“”ஐயோ… நான் அம்மாவைப் பார்த்து நாலு வருஷம் ஆயிடுத்து. போனில் பேசி கூட மூன்று மாசம் இருக்கும். தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தால், பேச நிறைய விஷயம் இருக்கும். எப்போதோ பேசினால், நீ சுகமா, நான் சுகம் தான் என்று மேலோட்டமாய் தான். மனசை விட்டு பேசி எத்தனை நாட்கள் ஆகிவிட்டது? எங்கே வர முடியறது. குழந்தைகள் படிப்பு, வியாபாரம். ஒரு நாள் இல்லையென்றால், ஏகப்பட்ட டாலர்கள் கை நழுவிடும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஊரில், ஒவ்வொரு இடத்தில்…”
“”விசு… எப்போ கிளம்பப் போற? காரியங்கள் காத்துக் கிடக்கு… அப்பா உன்னிடம் கேக்கச் சொன்னார். நீ சொல்றதை வெச்சுத்தான், அம்பி சாஸ்திரிகளிடத்தில் சொல்லணும். உனக்கு எப்போது இந்தியாவுக்கு பிளைட்?”
“”வசந்தா… நீதான் அங்கேயிருக்கியே… செல்லப் பொண்ணு. எல்லாவற்றையும் முடித்துவிட்டு எனக்குத் தகவல் சொல்லு…”
“”ஏய் விசு… என்ன சொல்ற… போன வாரம் கூட அம்மா, உன் கையில் கொள்ளி வாங்கி, அப்பா இருக்கும் போதே, பூ, பொட்டோட போய் சேரணும்னு புலம்பிண்டிருந்தா… நீ வராம ஒரு காரியமும் நடக்காது…”
“”வசந்தா… நீ படித்தவள். உனக்குக் கூடவா இதெல்லாம் புரியாது. இன்னிக்கு, நாளைக்கு என்று எனக்கு தொடர்ச்சியாக ஆறு நாள் மீட்டிங் இங்கு இருக்கு… கோடிக்கணக்கான டாலரில் புரளும், “பயோ-இன்ஸ்ட்ரூமென்டேஷன்’ பிசினஸ். பெரிய பெரிய தலைகளை எல்லாம் என் கண்டுபிடிப்புகளில் சிக்க வைத்து, “க்ளோபல்’ மார்க்கெட்டில் பல கோடிஸ்வரர்களை உருவாக்குகிறேன். என்னால் வீட்டிற்குப் போகவே இன்னும் ஏழு நாள் ஆகும்…”
வியர்த்துப் போனாள் வசந்தா.
“”என்னதாண்டா சொல்ற? செத்த அன்னிக்கு வர முடியாது…’ன்னு சொல்ற. பத்துக்கு வருவியா, சுபஸ்வீகர்ணத்துக்கு வருவியா?”
“”வசந்தா… மாசா மாசம் 1000 டாலர் அப்பாவுக்கு அனுப்பறேன். ஒரு அழகான வீடு கட்டி, அவர்களை தங்க வைத்திருக்கிறேன். என்னை அம்மா என்றுமே சபிக்க மாட்டாள். என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை.”
வசந்தாவுக்கு, “விர்’ரென்று தலையில் ரத்தம் ஏறியது.
“”அடப்பாவி… உன் டாலரை நீயே வச்சுக்கோ… இதுவரை நீ அனுப்பிய ஒரு பைசாவைக் கூட அத்திம்பேர் எடுத்து செலவழிக்கவில்லை. “என்னோட பென்ஷன், எனக்கும், அவளுக்கும் போதும்…’ என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த பணமெல்லாம் பாங்க் கணக்கிலேயே அப்படியே தான் இருக்கு.”
“”வசந்தா… இப்போ காரியமெல்லாம் சிறப்பா பண்ணிடு. நான் நாளைக்கு 4000 டாலர் அனுப்புறேன். நிறைய தானங்கள், விஸ்தரிச்சு வைதீகங்கள், அன்னதானம் என்று எல்லாம் ஏற்பாடு செஞ்சுடு. பணத்தை பற்றிக் கவலைப்படாதே!”
“”விசு… நீ பாவிடா… அம்மாவிடம், “கைம்மாறு கைம்மாறு’ன்று கேட்டப்போ, அந்த அப்பிராணி, உன் கைகளால் கொள்ளி தானம் மட்டும் தான் கேட்டாள். நீ வராமல் இருந்தால், இந்த ஜீவிதம் முழுவதும், குற்றபோதத்தில் நிரந்தரமாய் இம்சைபடுவாய்… நீ செய்யறது சரியில்லை.”
“”வசந்தா… தப்பாய் நினைக்கலைன்னா இன்னும் ஒண்ணும் கூட சொல்றேன். நீயே கொள்ளி போட்டுடு. இது போல சந்தர்ப்பத்துக்குத்தான், நம் சாஸ்திரங்கள்ல, “கைப்பில்’ வாங்கி, கொள்ளி போடறதுன்னு ஒரு சம்பிரதாயம் இருக்கு… இதுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தரவும் நான் தயாராய் இருக்கேன்…”
வசந்தாவுக்கு உச்சிவெயில் தலைக்கடித்தது போல, ஆக்ரோஷம் வந்தது. கண்ணகியின் மறு உணர்வாய், “கார்டியாக்’ வேகமாய் வேலை செய்தது.
“”விசு… டாலரைக் கெட்டியா பிடிச்சுக்கோ… நல்ல கதிக்குப் போயிடுவே. மனைவியும், பிள்ளைகளும் சவுக்கியப்பட்டா, அதுமட்டும் வாழ்க்கையில் போதும்ன்னு நினைக்கற… இறந்து போனவர்கள் ஒரு அஃறிணை. அதன் சடங்குகள் ஒரு சம்பிரதாயம் என்று மட்டும் நினைக்கிற.
“”பணக்கற்றையை சாப்பிட முடியாது. கங்கை வெள்ளத்தை போல, டாலர் தாகம் தீர்க்க முடியாது. நான் எப்பவாவது அதிகமா மிட்டாய் வாங்கிட்டா, “கூடாதுடி செல்லம்… பணத்தை வேஸ்ட் பண்ணக் கூடாது. மரத்திலியா காய்க்கறது…’ன்னு, சின்ன வயசில அத்தை கேப்பா… இப்போ புரியுது. பணம் நிறைய விளையுது… மரத்தில இல்லை… மனித நேயத்தையும், பாசத்தையும், பாரம்பரியத்தையும் கொன்னுட்டு வளர்றது… உன்னோடு நான் பேசறது இதுவே கடைசி தடவை…”
நிச்சலனமாய் விசுவை துண்டித்துவிட்டு, ஆடிப்போன தன் உடலை, சாதாரண நிலைக்கு கொண்டு வர சற்று நேரமானது. அத்திம்பேர் பின்னால் நின்று கொண்டிருந்தார்.
“”எப்போ இங்கே வந்தேள்?”
“”நீ அவனிடம் சமாச்சாரத்தைச் சொல்லும் போதே… கடைசி வரை நீ பேசியது எல்லாம் கேட்டுண்டுதான் இருந்தேன்.”
“”அத்திம்பேர்… அம்பி சாஸ்திரிகளைக் கூப்பிட்டு ஏற்பாடு செய்துடலாம்…. நானே அத்தைக்குக் கொள்ளி போட்டுடறேன். எனக்கு நிறைய கைம்மாறு செய்ய வேண்டியிருக்கு… பாசத்தோட, பாரம்பரியத்தை பயிற்றுவித்த மகராசி. நான் அவள் வயித்தில் பிறக்காத பெண்…” வசந்தா விம்மித் தெறித்தாள்.
மனசில் வைராக்கியத்துடன், தலையை விரித்துப் போட்டுக் கொண்டு ஸ்நானம் செய்ய ஆயத்தமானாள்.
அம்பி சாஸ்திரிகள், “கோவிந்தா’ என்று சொல்லி, அத்தையைப் பார்த்த போது, அவளுடைய ஆன்மா வசந்தாவை வாழ்த்துவது புரிந்தது.

– கல்பகம் பாஸ்கரன் (நவம்பர் 2010)

டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை – 4

கல்பகம் பாஸ்கரன்
சொந்த ஊர்: சென்னை.
கல்வித் துறையில் சிறிது காலம் ஆராய்ச்சி செய்து, ஐ.ஆர்.எஸ்., (இந்தியன் ரெவன்யூ சர்வீஸ்) தேர்வு பெற்று, நிதித் துறையில் பல்வேறு பிரிவுகளில் உயர் அதிகாரியாய் பணி புரிந்துள்ளார். கல்லூரி நாட்களில் இவர் எழுதிய படைப்புகள், பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுதிய இந்த சிறுகதை, ஆறுதல் பரிசு பெற்றிருப்பது மகிழ்ச்சி தருவதாக குறிப்பிடுகிறார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *