கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 16,935 
 

அடுப்பாக நெருக்கி வைக்கப்பட்ட செங்கற்களுக்கு நடுவில் கற்பூரக் கட்டியை வைத்த சாரதா, ஐயனார் கோயில் இருந்த திசையின் பக்கமாக முகம் திருப்பிக் கண் மூடி ஒரு கணம் வணங்கினாள். பிறகு, திரும்பி தீக்குச்சியை உரசி கற்பூரத்தைச் சுடரவிட்டாள். உலர்ந்த மிளார்களை அதைச் சுற்றி அடுக்கி, தீயை மூட்டினாள். அப்புறம் பொங்கலுக்கான பானையைத் தூக்கி அதன் மீது வைத்தாள்.

‘வாங்க சார், நாம போயி நம்ம வேலயப் பாக்கலாம்’ – எரியும் அடுப்பையே பார்த்தபடி இருந்த கணேசனிடம் சொன்னார் பம்பைக்காரர். மணிபர்ஸையும் கைபேசியையும் எடுத்து சாரதாவிடம் கொடுத்த கணேசன், சட்டையையும் பனியனையும் கழற்றித் தாழ்வாகப் பிரிந்து சென்ற மரக் கிளையில் மாட்டினான். சாரதாவின் முதுகோடு ஒட்டியபடி தோளுக்கு ஒரு பக்கமாக நின்றபடி கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக்கொண்டு இருந்த சங்கரியையும் மாலாவையும் பார்த்தான். இதேபோன்ற பொங்கல் நாட்களில் அடுப்புக்கு முன்னால் உட்கார்ந்திருந்த அம்மாவின் முதுகோடு ஒட்டி 50 ஆண்டுகளுக்கு முன்னால் பேசிச் சிரித்த குழந்தைப் பருவச் சித்திரங்கள் நினைவில் இருந்து வெடித்தெழ… அவன் கண்கள் கலங்கின. அடிவயிற்றில் நெருப்பின் அனல் ஒருகணம் பரவி அணைந்ததுபோல இருந்தது.

காணிக்கைசிறிது தொலைவு நடந்து நிழல் அடர்ந்து இருந்த முந்திரி மரத்தடியில் தரை மீது துண்டை விரித்து உட்கார்ந்தான் கணேசன். பக்கத்தில் வேறு ஒரு மரத்தின் மீது சாய்ந்தபடி பீடி புகைத்துக்கொண்டு இருந்த இளைஞன் ஒருவனிடம் சென்ற பம்பைக்காரர், ‘செத்த நேரம்கூட அத இழுக்காம இருக்க முடியாதா ஒன்னால? வந்துட்டாங்க பாரு. போ… போ… போயி சீக்கிரமா வேலய முடி…’ என்று சொல்வது கேட்டது.

”இதோ… இதோ…’ என்று சொன்னபடி அவன், கணேசனை ஒருகணம் நிமிர்ந்து பார்த்தான். அவசரமாக பீடித்துண்டை எறிந்துவிட்டு, பையில் இருந்து ஹால்ஸ் ஒன்றை எடுத்துப் பிரித்து வாயில் போட்டான். மரத்தடியில் சுருட்டிவைத்திருந்த பையை எடுத்துக்கொண்டு கணேசனின் பக்கமாக வந்தான். அவன் எதிரில் பையை வைத்துவிட்டு அதில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துத் திறந்தான். வலது கையைக் குவித்து துளித்துளியாக ஊற்றி நிரப்பி கணேசனின் தலைமுடியைக் கலைத்து நனைத்தான். நாலைந்து முறை செய்த பிறகு அவன் தலை முழுக்க ஈரமானது. புருவத்தின் ஓரமாக வழிந்த தண்ணீர் இமைக்குழியில் இறங்கிய கணத்தில் கை விரலால் தொட்டு உதறினான் கணேசன்.

‘ஐனாரப்பன மனசுல நல்லா நெனச்சிக்க சார்…’

விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்துப் புன்னகைக்க முயற்சி செய்துவிட்டுக் குனிந்தான் கணேசன். ஐயனாருக்குப் பதிலாக அம்மாவின் நினைவுகள் குவிந்தன. ஐயனாரிடம் முறையிடுவதற்கு அம்மாவிடம் எப்போதும் ஏதாவது சில தேவைகள் இருந்துகொண்டே இருக்கும். ஏழு பெண் குழந்தைகளுக்குப் பிறகு பிறந்த அவனையும் சேர்த்து, எட்டுப் பிள்ளைகள் இருந்த வீட்டில் யாருக்குக் காய்ச்சல் வந்தாலும், ‘ஐனாரப்பா, எம் புள்ளய நல்லபடியா எழுந்து நடமாடவச்சிடுப்பா. வர்ற அமாசைக்கு ஒனக்குப் படையல் வைக்கறேன்’ என்று மஞ்சள் துணியில் காசு முடித்து வைத்துவிடுவாள். முடியிறக்குதல், பொங்கல்வைத்து சேவல் பலி கொடுத்தல் எல்லாம் தண்ணீர் பட்ட பாடு. ‘ஒனக்கும் வேல இல்ல… ஒன் ஐனாருக்கும் வேல இல்ல’ என்று அப்பா கிண்டல் செய்யாத நாளே இல்லை. வார்த்தைகளைத்தான் அப்படி இறைத்தாரே தவிர, பொங்கல்வைக்கக் கிளம்புகிற அன்றைக்குத் தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் கச்சிதமாகச் செய்துவைப்பார். போய் வர வாடகை கார், சேவல், மாலைகள், பம்பை, தண்ணீர் வாளி, செம்பு, துணிமணிப் பெட்டி, கூடை. அம்மாவின் மனசைப் படித்த மாதிரி எல்லாவற்றையும் செய்துவிட்டு ஒதுங்கி நின்று சிரிப்பார் அவர். தன்னுடைய மரணம் வரைக்கும் ஒருநாள்கூட அதற்காக அலுத்துக்கொண்டதே இல்லை. அதற்குப் பிறகு, அந்தப் பம்பைக்காரரின் தொலைபேசி எண்ணை வாங்கிவைத்துக்கொண்டு, அம்மாவே தனக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொண்டாள். இதயத் தாக்குதலால் மயக்கமாகி விழுந்து மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டு அறுவைச் சிகிச்சைக்காக அழைத்துக்கொண்டு போனபோது தன் துக்கத்தை ஆற்றிக்கொள்ளும் வழி தெரியாமல் அம்மாவுக் காக முதன்முதலாக ஐயனாரிடம் கோரிக்கை வைத்தான் கணேசன்.

படுக்கையில் இருந்து ஸ்ட்ரெச்சருக்கு மாற்றிய சமயத்தில் அம்மாவின் கண்களில் ஏக்கம் தெரிந்தது. அவை ஒரே கணத் தில் தளும்பிக் குளமாவதைக் கவனித்தான். ஆழ் மனம் தன் கோரிக்கையை ஐயனாரிடம் மீண்டும் மீண்டும் முன்வைத்தபடி இருக்க, அம்மாவை நெருங்கி அவள் விரல்களைப் பற்றி வருடித் தந்தான்.

உச்சியில் இருந்து மழிக்கப்பட்ட முடிக்கற்றை கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னால் வந்து விழுந்தன.

கும்பல் கும்பலாகக் காணிக்கை ஆடுகளோடு ஐயனார் கோயிலை நோக்கிப் பலரும் நடந்துகொண்டு இருந்தார்கள். நடக்க மறுக்கும் ஆடுகளைப் பின்னால் நின்று தள்ளித் தள்ளி நடக்கவைத்தார்கள் சிறுவர்கள். பம்பைகளின் ஒலியால் முந்திரிக் காடு அதிர்ந்தது.

முடியை மழித்த பிறகு, காது மடலோரம் முளைத்திருந்த முடிகளைக் கத்தியாலேயே மெள்ள வருடி அப்புறப்படுத்திய பிறகு, இளைஞன் ‘தலய நிமித்து சார்’ என்றான். தன் விரலை மீண்டும் தண்ணீரில் நனைத்து மீசை முடியில் தடவியபடி, ‘ஒதட்ட மடிச்சிக்க சார்’ என்று சொல்லிக்கொண்டே கத்தியை மீசைக்கு அருகில் எடுத்துச் சென்றான். அம்மாவுக்கு 75 வயது என்று சொன்னால் யாருக்கும் நம்பிக்கை வராது. ஒடிசலான தோற்றம் என்றாலும் உறுதியாகவே இருந்தது அவள் உடல். கருமையும் நரையும் கலந்த முடியைக் கொண்டையாகப் போட்டிருப்பாள். விபூதி வைத்த நெற்றி. காதில் ஒரு தோடு. கழுத்தில் பட்டையான ஒரு சங்கிலி. வீட்டு வேலை பார்த்து, வீட்டோடு இருந்த கனகாம்பரம் தோட்டத்துக்குத் தண்ணீர்விட்டு, கீரைப் பாத்தியில் களையெடுத்து, பன்றிகள் ஊடுருவி அகலமாக்கிவிட்டுப்போன வேலிக்கு மறைப்பு கட்டி, காற்றில் உலர்ந்த துணிமணிகளின் ஓரம் நீவி மடித்துவைத்து… இப்படி ஏதாவது ஒரு வேலையைச் செய்துகொண்டே இருப்பாள்.

எந்தக் குழந்தையாக இருந்தாலும், பார்த்ததுமே அதன் கன்னத்தைத் தொட்டெடுத்த விரல்களை முத்தமிட்டுச் சிரிக்கும் அம்மாவின் பாணியை நினைத்துக்கொண்டான் கணேசன். ‘ஒன் வெரலுக்கு நீயே முத்தம் குடுத்துக்கறியே, என்னம்மா இது?’ என்று சின்ன வயதில் ஒருமுறை கேட்டபோது, ”ஒனக்கும் ங்கொப்பனுக்கும் நான் என்ன செய்யறன்னு கவனிக்கறதே வேலயாப்போயிடுச்சி… போடா அந்தாண்ட’ என்று தள்ளிவிட்டாள்.

‘அப்ப என் கன்னத்தையும் கிள்ளி ஒரு முத்தம் குடு’ என்று சிணுங்கியபடி மீண்டும் நெருங்கிச் சென்று நின்றான்.

‘கிட்ட வந்த… வெறவுக்கட்டயாலதான் குடுப்பன். ஒழுங்காப் போயிப் படிக்கற வேலையப் பாரு’ என்ற அவள் அதட்டலைக் கொஞ்சம்கூடப் பொருட்படுத்தாமல் நின்ற இடத்திலேயே நின்ற படி அவளையே பார்த்தான். பிறகு, மெது வாக அவளே மனம் இரங்கி வந்து, ‘எதுக்குடா இப்பிடி ஒட்டாரம் புடிக்கற? அப்பன் புத்தி அப்படியே இருக்குது பாரு’ என்று சொல்லிக்கொண்டே அவன் கன்னத்தைக் கிள்ளியெடுத்து, அந்த விரல்களை முத்தமிட்டாள்.

‘எழுந்துக்க சார்…’

அந்த இளைஞன் பின்வாங்கி பாட்டிலில் மிச்சம் இருக்கிற தண்ணீரால் தன் கையைச் சுத்தமாக்கிக்கொண்டான். சாரதாவிடம் சென்று 100 ரூபாயை வாங்கி அவனிடம் தந்தான் கணேசன். ‘கோயில் மொட்ட சார்… இன்னும் கொஞ்சம் போட்டுக் குடு சார்…’ என்று கேட்டான் அவன். பம்பைக்காரர் நடுவில் புகுந்து, ‘போடா… போடா… எல்லாம் சரியாத்தான் குடுத்திருக்குது. எவ்ளோ குடுத்தாலும் விடியாதுடா ஒனக்கு…’ என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

‘அப்பா, ஒனக்கு மொட்ட நல்லாவே இல்ல’ என்று சங்கரி சிரித்தாள். ‘எதுக்குப்பா மீசய எடுத்த? மீச இல்லாம ஆபீஸுக்கு எப்படிப்பா போவ?’ என்று கேட்டாள் மாலா. பதில் சொல்லாமல் இரண்டு பேர் கன்னங்களிலும் கிள்ளி மெதுவாக முத்தமிட்டான் கணேசன். தன் அம்மாவாகத் தானே மாறிவிட்டதுபோலத் தோன்றியது அவனுக்கு.

‘குளிச்சிட்டா மத்த வேலயப் பாக்கலாம்’ – நினைவூட்டிய பம்பைக்காரர் பூமாலைகள் கொண்டுவந்த பொட்டலங்களைப் பிரிக்க உட்கார்ந்தார். பல வருடத்துப் பழக்கம். பொங்கல் வைக்கப் புறப்படுகிற தருணங்களில் முதலில் அவருக்குத்தான் போன் போட்டுச் சொல்வாள் அம்மா. அவளுடைய நோட்டில் இருந்துதான் அந்த எண்ணைத் தேடியெடுத்துப் பேசி ஏற்பாடுகளுக்கான தகவலைச் சொல்லியிருந்தான் கணேசன்.

அறுவைச் சிகிச்சையின்போது எதிர்பாராத விதமாக ரத்த அழுத்தம் உயர்ந்து, ஏதோ புது வகையான சிக்கல் முளைத்துவிட்டது. மருத்துவர்களுக்கே புரியாத சவால். மூன்று நாள் தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே வைத்திருந்தார்கள். அவள் உடல் முழுக்கக் குழாய்களைச் செருகி இருந்தார் கள். மருந்து, உணவு, காற்று எல்லாமே குழாய்கள் வழியாகவே சென்றன. கண் திறக்காத அம்மாவின் முகம் ஒரு கற்சிலைபோல இருந்தது. ஆறாவது நாள் காலையில் அவள் உயிர் பிரிந்துவிட்டது. அவள் உடலைப் பெற்றுக்கொண்டபோது அவன் உடல் துடித்தது. நம்பவே முடியாமல் அவள் முகத்தை மனம் பொங்கப் பார்த்தபடி நின்றான். மெதுவாக, அவளை நெருங்கி அவளுடைய விரல்களை எடுத்துத் தன் விரல்களுடன்வைத்து அழுத்தி வருடித் தந்தான். மனத்தில் திடீரென வெறுமை கவிந்தது. அடுத்த நாள் அவள் உடல் எரிந்து சாம்பலானது.

உடலைத் துவட்டிக்கொண்ட பிறகு, புதிய உடைகளை அணிந்தான் கணேசன். அவனை உட்காரவைத்து குழையக் குழைய சந்தனத்தை வாரி, அவன் தலையில் மெதுவாகத் தடவிவிட்டாள் சாரதா. அதன் குளுமை இதமாக இருந்தது.

”இந்தாங்க… இதப் போட்டுக்குங்க’ – மாலை ஒன்றை அவனிடம் நீட்டிக்கொண்டே சொன்னார் பம்பைக்காரர்.

தாம்பாளத் தட்டில் மாவு விளக்கைப் பிசைந்து உருட்டி வைத்திருந்தாள் சாரதா. நடுவில் குழியாக்கி எண்ணெயை ஊற்றி விளக்குத் திரியை அதற்குள் வைத்தார் பம்பைக்காரர். பூ, பழம், வெற்றிலை, பாக்கு, வத்தி, குங்குமம், எலுமிச்சம் பழங்கள் எல்லாவற்றையும் எடுத்து தட்டு நிறையப் பரப்பினார். பிறகு, கணேசனை நிமிர்ந்து பார்த்துப் பார்வையாலேயே தட்டை எடுத்துக்கொள்ளச் சொன்னார்.

தட்டைத் தொட்டபோது அவன் மனம் துடித் தது. அடிவயிற்றில் இருந்து ஒரு துக்கம் பொங்கி நெஞ்சில் மோதியது. இதேபோல ஒரு தட்டைச் சுமந்து சுடுகாட்டுக்கு நடந்து சென்ற நாளின் நினைவுகள் மிதந்துவந்தன. தனது உடல் தனக்கே பாரமாக இருப்பதுபோல இருந்தது.

பம்பைக்காரர் முள்வேலி ஓரமாகக் கட்டப்பட்டு இருந்த ஒரு பெரிய சேவலைத் தூக்கிவந்து சங்கரியிடம் கொடுத்து வைத்துக்கொள்ளச் சொன்னார். பந்தயத்தில் கிடைத்த வெற்றிக் கோப்பையை வாங்கி நெஞ்சோடு அணைத்துக்கொள்வதுபோல அந்தச் சேவலை அணைத்துக் கொண்டாள் சங்கரி. சேவலின் தலையை நிமிர்த்தி, ஒரு சின்ன மல்லிகைச் சரத்தைத் தொங்கவிட்ட பம்பைக்காரர், அதன் நெற்றியில் மஞ்சளைத் தடவி குங்குமப்பொட்டு வைத்தார்.

பொங்கல் பானையை ஒரு கூடைக்குள் வைத்து எடுத்துக்கொண்டாள் சாரதா. கொண்டுவந்த சாமான்களை மறக்காமல் தேடியெடுத்து ஒரு பெரிய பைக்குள் நிரப்பிக்கொண்டாள் மாலா. பம்பை ஒலி நான்கு பக்கங்களிலும் சிதறி அதிர்ந்தது.

கணேசனும் சாரதாவும் இரண்டு பிள்ளைகளும் சின்ன குழுவாக முந்திரிக் காட்டில் நீண்ட ஒற்றையடிப் பாதையில் நடந்தார்கள். எங்கோ ஒரு கிளையில் இருந்து ஒரு குயில் கூவும் சத்தம் கேட்டது. அந்தக் குரல் கணேசனைச் சிலிர்க்கவைத்தது. ஒருகணம் விழிகளைத் திருப்பி சத்தம் வந்த திசையில் அந்தக் குயிலைத் தேடினான். அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் எண்ணத்தை உணர்ந்த சங்கரி ஒருகணம் திரும்பி நின்று உற்று உற்றுப் பார்த்து அந்தக் குயிலைக் கண்டுபிடித்தாள்.

‘அப்பா, அங்க பாரு. அதோ அந்தக் கிளை ரெண்டாப் பிரியுதே, அதுக்குக் கீழ பாரு’ – குயிலின் இருப்பிடத்தை அவள் துல்லிய மாக வரையறுத்துக் காட்டினாள். அதைக் கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறினான் கணேசன்.

”எங்க சங்கரி?’ என்றபடி அவன் விழிகள் அலைபாய்ந்தன.

‘அங்க, அங்க பாருப்பா’ என்றபடி அவன் கன்னத்தைத் தொட்டு ஒரு குறிப் பிட்ட கோணத்தில் மரத்தின் பக்கம் திருப்பினாள். அப்போ தும் அவனால் அதைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

‘போப்பா, ஒனக்கு ஒண்ணுமே தெரியல…’ என்று சிணுங்கியபடி ஒதுங்கினாள் சங்கரி. அந்தக் குயிலின் அழைப்பு மட்டும் நிற்கவே இல்லை. அது காதில் விழ… விழ… அது தன் அம்மாவின் அழைப்பு என நம்ப விரும்பினான் கணேசன்.

தன் வேண்டுதலைப் பற்றிய விஷயத்தை நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒருநாள் பேச்சோடு பேச்சாக சாரதா விடம் சொன்னான் கணேசன். அதைக் கேட்டு ஆச்சர்யமாகப் பார்த்தாள் சாரதா.

‘இதுலயெல்லாம் நம்பிக்கையே இல்லனு சொல்வீங்க. அப்புறம் எப்படி இந்த மாதிரி?’ என்று கேட்டாள்.

‘இப்பவுமே எனக்கு நம்பிக்கை இல்ல சாரதா. என்னமோ அந்த நேரத்துல அப்படித் தோணுச்சி. ஏதாச்சும் நடந்து பொழச்சி வந்துட மாட்டாங்களானு ஒரு நப்பாச. சட்டுனு வாய்ல வந்துட்டுது. வேண்டிக்கிட்டேன்’ – கணேசன் நாக்கைச் சப்புக்கொட்டியபடி புன்னகைத்தான்.

‘சிரிக்கிற விஷயம் கெடையாதுங்க இது. சாமி விஷயம். காணிக்கைனு சொல்லிட்டப்பறம் கண்டிப்பா செஞ்சிதான் ஆவணும்’ – சுவரில் தொங்கிய காலண்டர் ஓவியத்தைப் பார்த்தபடி இருந்தவனின் முகத்தைத் தன் பக்கமாகத் திருப்பி பொறுமையாக எடுத்துச் சொன்னாள் சாரதா.

‘அதான் நடக்கலையே சாரதா? அப்புறம் எதுக்குக் காணிக்கை?’ அவன் அப்பாவித்தனமாகக் கேட்டான்.

சாரதா ஒருகணம் பதில் எதுவும் பேசாமல் அவன் விழிகளையே உற்றுப் பார்த்தாள். பிறகு, ‘இது என்னங்க பிசினஸ் டீலா? நீ ஒண்ணு குடுத்தா, நான் ஒண்ணு குடுக்கறேன்கிற மாதிரி பேசறீங்க? இது வேண்டுதல். நடந்தாலும் சரி… நடக்காட்டாலும் சரி… சொன்னபடி செய்யறதுதான் குடும்பத்துக்கு நல்லது’ என்று கவலையோடு சொன்னாள். அதையே தொடர்ந்து பல நாட்களாக எடுத்துச் சொல்லி சம்மதிக்கவைக்க முயற்சிசெய்தாள்.

ஏழெட்டு மாதங்கள் கடந்துபோன நிலையில், ஒருநாள் சாரதா தூங்கும்போது கெட்ட கெட்ட கனவுகள் வந்துகொண்டே இருப்பதாகவும் சாமிக்குச் செலுத்த வேண்டிய காணிக்கையைச் செலுத்தாமல் பாக்கிவைத்திருப்பதால்தான் இப்படி எல்லாம் தோன்றுவதாகவும் சொல்லி அழுதாள். ‘ரெண்டு பொட்டப் புள்ளைங்கள வெச்சிருக் கம். ஆளு மொகம் தெரியாத ஊருல ஏதாச்சும் திடீர்னு ஒண்ணுகெடக்க ஒண்ணு ஆச்சின்னா என்ன செய்ய முடியும்?’ என்று அடிக்கடி புலம்பத் தொடங்கினாள். இனி மேல் தவிர்க்க முடியாது என்று தோன்றிய ஒருகட்டத்தில்தான் அவள் விருப்பத்துக்கு இசைந்தான் கணேசன். அக்காக்களுக்குத் தகவல் சொல்லி ஒருங்கிணைக்கும் அளவுக்கு நேரமும் விடுப்பும் இல்லாததால், சட்டென்று தன் குடும்பத்தோடு மட்டும் கிளம்பும்படி நேர்ந்தது.

‘தட்ட பூசாரிகிட்ட குடுங்க’ – தோளை இடித்து சாரதா சொன்ன பிறகுதான் சுய உணர்வுக்கு வந்தான் கணேசன். இடைவிடாமல் ஒலித்தபடி பின்தொடர்ந்து வந்த குயிலின் குரல் அவன் மனதை அசைத்தது.

பிள்ளையார் முன்னால் தட்டை வைத்துவிட்டு தேங்காயை உடைத்தார் பூசாரி. எலுமிச்சைகளை அரிந்து குங்குமத்தை அப்பி தேங்காயைச் சுற்றிவைத்தார். பிறகு, கற்பூரம் ஏற்றி பூஜை செய்தார். தட்டோடு வெளியே வந்து எல்லோருடைய நெற்றியிலும் குங்குமத்தைப் பூசிவிட்டார். பிறகு, சேவலின் நெற்றியிலும் குங்குமத்தைத் தேய்த்தார். தட்சணையைக் கொடுத்துவிட்டு அங்கே இருந்து எல்லோரும் கிளம்பினார்கள். வேறு ஒரு பாதையில் அவர்கள் நடை தொடர்ந்தது. பம்பைக்காரர் முழங்கியபடி முன்னால் நடந்தார்.

கணேசன் தனக்குள் அழுகை திடீரென குமுறிக்கொண்டு வருவதைப் போல உணர்ந்தான். நெஞ்சம் விம்மியது. அம்மாவின் முகம் தன் நெஞ்சில் விரிவடைந்தபடி செல்வதுபோல இருந்தது. அந்தக் கண்கள், அந்தக் கன்னம், விபூதிக் கீற்று பொலியும் அவள் நெற்றி… ‘அம்மா’ என்று அவன் ஆழ் மனம் கூவியது. பைத்தியம் பிடித்ததுபோல இருந்தது.

குயிலோசை அந்தப் பாதையிலும் கேட்டது. தலையைத் தயக்கத்தோடு திருப்பி அதைப் பார்க்க முயற்சி செய்தான். ”அப்பா, இது வேற குயிலு. அங்க இருக்குது பாரு!” என்று திசையைக் காட்டினாள் சங்கரி. அந்தச் சொற்கள் அவன் நெஞ்சில் உறைக்கவே இல்லை. அந்த ஓசை ஓர் அருவியாகப் பொங்கி அவன் நரம்புகளில் நுழைந்து வழிவதுபோல உணர்ந்தான்.

வெட்டவெளியில் ஒரு மரத்தின் உயரத்துக்குக் கம்பீரமாக வடிக்கப்பட்டு இருந்த ஐயனார் முன் வந்து நின்றார்கள். பூரணி, பொற்கலையோடு ஐயனார் செவ்வாடைக் கோலத்தில் உட்கார்ந்திருந்தார். அருகில் வெள்ளைக் குதிரைகளை வீரன் பிடித்திருந்தான்.

சங்கரியின் கையில் இருந்த சேவலை வாங்கிச் சென்று பலிபீடத்தின் அருகில் நின்றிருந்தவரிடம் கொடுத்தார் பம்பைக்காரர். அவருடைய கையில் இருந்த கூரான அரிவாளால் வெட்டுப்பட்ட சேவல் தலை ஒரு பக்கம் உடல் ஒரு பக்கமாக விழுந்தது. துடிக்கும் அந்த உடலைக் கொண்டுவந்து ஐயனாரின் பாதத்தில் வைத்தார். பூசாரியிடம் பொங்கல் கூடையைக் கொடுத்தாள் சாரதா. ஊர் விவரமும் பேர் விவரமும் சொன்னாள். உடனே பூசாரி, ”படயாச்சிம்மா குடும்பமா? சரி… சரி… அம்மா வரலையா?” என்று சாதாரணமாகக் கேட்டார்.

சாரதாவுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. ‘அம்மா தவறிட்டாங்க!” என்று முனகினாள்.

”ஐயையோ, தங்கமான மகராசியாச்சே அவுங்க. நம்ம பொறப்புக்குக் குடுத்துவச்சது அவ்ளோதான்!” என்று ஒரு கணம் வேலைகளை எல்லாம் நிறுத்திவிட்டு சாரதாவைப் பார்த்து கரகரத்த குரலில் சொன்னபடி பெருமூச்சுவிட்டார். பிறகு தலை குனிந்தவாக்கில், ”ம்… நம்ம கையில என்ன இருக்குது தாயி. எல்லாம் அவன் எழுதற எழுத்து” என்றபடி ஓங்கிய குரலில் பாடத் தொடங்கினார்.

பம்பை ஒலியும் அதற்கு இணையாக உச்சத்துக்குச் சென்றது. கூடையில் இருந்த மாலைகளை ஒவ்வொன்றாக எடுத்து ஐயனாருக்கும் பூரணி பொற்கலைக்கும் அணிவித்தார். தட்டுக்குள் தேடிப் பார்த்துவிட்டு, ‘சாராயம் வைக்கலியா?’ என்று கேட்டார் பூசாரி.

பம்பைக்காரர் அசட்டுச் சிரிப்போடு தலையைச் சொரிந்தபடி வேட்டியை ஒதுக்கி, கால்சட்டைப் பையில் இருந்து பாட்டிலை எடுத்து முன்னால்வைத்தார் பூசாரி. ‘சரி… சரி… தட்டுல அம்பது ரூபா போடு’ என்று கட்டளையிட்டுவிட்டு பாட்டைத் தொடர்ந்தார். சாரதா அவசரமாக 50 ரூபாய்த் தாளை எடுத்துத் தட்டில் வைத்தாள்.

பூசை முடிந்து வெளியே வந்ததும் கூடையோடும் தட்டோடும் மீண்டும் நடக்கத் தொடங்கினார்கள். எடை அற்ற இறகுபோல தன்னை உணர்ந்தான் கணேசன். அவன் மனம் கரைந்து உருகியிருந்தது. தன் அம்மாவின் இருப்பை அந்த இடத்தில் அவனால் உணர முடிந்தது. மறு கணமே அந்த எண்ணம் உண்மைதானா என்ற கேள்வி முளைத்துக் குழப்பி அலைக்கழித்தது. சூரியன் இன்னும் உச்சியிலேயே இருந்தது. வெளிச்சத்தில் கண்கள் கூசின.

தனக்கு மிகவும் பழக்கமான இடத்தில் இருப்பதுபோல நினைத்தான் கணேசன். பால்ய காலத்தில் ஓடி விளையாடிய இடம். அம்மாவின் கையைப் பிடித்து நடந்த இடம். அம்மாவின் மடியில் உட்கார்ந்திருந்த இடம். அம்மா முத்தங்களாகப் பொழிந்த இடம். எதிர்பாராத கணத்தில் வெப்பத்தின் கடுமை குறைந்து குளுமையைச் சுமந்துவந்து மோதியது காற்று.

”மழ வந்தாலும் வரும்மா. மேற்குப் பக்கமா கருகருனு மேகம் கட்டுது பாருங்க. சீக்கிரமா நடங்க!” – பம்பைக்காரர் வானத்தை அண்ணாந்து பார்த்துவிட்டுச் சொன்னார்.

அம்மாவின் மூச்சுக் காற்று தன் மீது மோதியதுபோல உணர்ந்தான் கணேசன். தன் குரலோடும் மூச்சோடும் அம்மா அங்கேயே சுற்றிக்கொண்டு இருக்கிறாள் என்று தோன்றியது. நாலைந்து காணி சதுரப் பரப்பளவுகூட இல்லாத அந்த முந்திரித் தோப்புக்கு இடையே அம்மாக்களும் அம்மாக்களின் அம்மாக்களும் அவர்களுடைய அம்மாக்களுமாக காலம் காலமாகக் காத்துக்கொண்டு இருக்கிறார்களோ என நினைத்தான். ஒரு கணம் அவன் உடல் சிலிர்த்தது.

அவர்களைப் பார்த்ததும் கார் டிக்கியைத் திறந்தான் டிரைவர். கூடையையும் தட்டையும் பையையும் வாங்கிக் கச்சிதமாக அடுக்கி மூடினான்.

பையில் இருந்து பணத்தை எடுத்து பம்பைக்காரருக்குக் கொடுத்தாள் சாரதா.

‘அடிக்கடி வந்து போங்கம்மா. எங்க இருந்தாலும் குலதெய்வத்தை மறக்காதீங்கம்மா. குலதெய்வம் கூட இருந்தா பெத்த அம்மாவேகூட இருக்கற மாதிரி!’ – பம்பைக்காரர் வணக்கம் சொல்லிவிட்டுச் சென்றார். கணேசன் தன் பிரக்ஞையில் இருந்து மீளாதவனாகவே வணங்கி விடைகொடுத்தான்.

கூட்டம்கூட்டமாக அந்தப் பாதையில் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தார்கள். காரின் முன் கதவைத் திறந்து சங்கரியும் மாலாவும் உட்கார்ந்தார்கள்.

கார் நிறுத்தப்பட்டு இருந்த மரக் கிளையில் இருந்து ஒரு கணம் குயில் கூவும் சத்தம் கேட்டது.

”அப்பாவ இன்னும் குயிலு தேடிக்கிட்டே இருக்குது” – பிள்ளைகளின் கேலிக் குரலைக் கேட்டுப் பின் இருக்கையில் ஏறிய கணேசன் புன்னகைத்தான். அதற்குள் குயிலின் இடத்தைக் கண்டுபிடித்துவிட்ட சங்கரி, ”அப்பா, அங்க பாரு… அங்க பாரு…” என்று விரல் நீட்டிக் காட்டினாள். அவனும் தன் முயற்சி யைக் கைவிடாமல் ஜன்னல் வழியாக உற்றுஉற்றுப் பார்த்தான். அவன் பார்வைக்கு அது புலப்படவே இல்லை. உதட்டைப் பிதுக்கித் தலையை அசைத்தான். அந்த ஓசையை மட்டும் உள்வாங்கி நிரப்பிக்கொண்டே இருந்தது அவன் நெஞ்சம்.

”பாரும்மா… அப்பா ரொம்பதான் நடிக்கறாரு” – நம்ப முடியாத சங்கரி சிணுங்கியபடி சாரதாவிடம் புகார் சொன்னாள்.

”போதும் விடுங்கடி அவர. பாவம்டி அவரு. அந்த மாதிரிலாம் நடிக்கத் தெரியாத ஆளுடி. அவரப் போயி அப்படிச் சொல்லலாமா?’ என்று அவனுக்காகப் பரிந்து பேசி அவர்களை அடக்கினாள் அவள்.

அவள் முகத்தில் கலகலப்பும் பரவசமும் திடீரெனப் பெருகியதுபோல இருந்தது. அவளையே கண் கொட்டாமல் பார்த்தான் கணேசன்.

”என்ன பாக்கறீங்க? நான் சொல்றது உண்மதான?” என்றபடி ஒரு கணம் அவன் கன்னத்தைக் கிள்ளி தன் உதட்டருகே கொண்டுசென்று முத்தமிட்டாள்.

உடல் சிலிர்க்க ஒருகணம் உறைந்து, சாரதாவைப் புதுசாகப் பார்ப்பதுபோலப் பார்த்தான். மறுகணமே புன்னகைத்தபடி உள்புறமாக நகர்ந்து அவளுக்காக இடம் ஒதுக்கிக்கொடுத்தான் கணேசன். புடைவையைக் கவனமாகத் தாங்கிப் பிடித்தபடி குனிந்து உள்ளே வந்து இருக்கையில் அமர்ந்த பிறகு கதவை மூடிய சாரதா, கார் கிளம்பியதும் அவன் கையைப் பற்றியெடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டாள்.

– செப்டம்பர் 2012

Print Friendly, PDF & Email

2 thoughts on “காணிக்கை

  1. அம்மாவின் இருப்பை மிக நெருக்கமாக ஆக்கியது. நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *