கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 20, 2019
பார்வையிட்டோர்: 27,844 
 

நாம் பிறக்கும்போதும் எதனையும் கொண்டு வரவில்லை. இறக்கும்போதும் நாம் எதையும் எடுத்துச்செல்லப் போவதுமில்லை. மனக்கோலத்தின் சிக்கல்களை எழுத்தில் வடிக்கத் தொடங்கியதுமே ஒவ்வொரு கதவாக தள்ளிச் செல்கிறது ஜானகிக்கு. இலங்;கையில் இருக்கும்போது சொத்துக்களை அனுபவிக்க முடியாமல் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கு வந்தும், பவுணைக் கணக்குப் பார்த்து சிலர் லண்டனுக்கு வந்து விடுகிறார்கள். இப்படி இடம்பெயர்ந்து லண்டனுக்கு வந்து வடையும், ரோல்சும் வித்து சொத்துச் சேர்த்துக்கொண்டிருப்பவள்தான் தனபாதகி. தொழிலாளி என்பவன் எந்தத்;தொழிலைச் செய்தாவது சொத்துக்களைச் சேர்ப்பது மேன்மையான செயல்தான். ஆனால் அவை சொத்தாசை கொண்டு மனிதப்பண்பில்லாமல் மனங்களை உடைத்துச் செயலில் மாறுவதுதான் ஜானகியைச் சிதைத்துக் குலைத்துவிடுகிறது.

ஜானகி ஓடித்திரிந்து வளர்ந்தது எல்லாம் அந்த ஊரின் நீண்ட வளவுக்குள் அமைந்த பெரிய கல்வீடு ஒன்றில்தான். ஜானகியின் அப்பம்மா அன்னம்மா ஊரில் பெரிய சொத்துக்காரர் நாங்கள்தான் என்று தம்பட்டம் அடித்துச் சொல்லுவது ஜானகிக்கு இன்றும் நல்லாக ஞாபகத்தில் இருக்குது.. பாவம் அப்பம்மா. வஞ்சகம் சூது தெரியாத அப்பாவிப்பெண் என்று ஜானகியின் அப்பம்மாவுக்கு ஒரு அடைமொழியும் ஊரில இருக்கு. முதல் கல்வீடு எழுந்தது ‘அன்னம்மா வீடுதான் ஊரில்’ என்ற பெருமிதத்துடன்; அவரின் சொற்பொழிவு நடக்கும். வெற்றிலைத் தட்டப் பின்புறத்து இடைவெளியில் தாள்காசைச் சொருவிக் கொண்டு செல்லம் கொளிக்கும் வீடு இது என்ற இறுமாப்பு அப்பம்மாவுக்கு. அத்திவாரம் ஆள் அளவில்போட்டு முன்விறாந்தை -பின்விறாந்தை என்று கோபுரம்போலக்; கட்டின வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கவேணும் என்பார்;.

பெரிய வளவின் முன்னால் புளியமரம் சடைத்து வீட்டு ஓழுங்கைக்கும் நிழல் கொடுக்கும். வீட்டு முன்விறாந்;தைக்கு முன்னால் அழகான குங்கும நிறத்தில் இருதயப் பூக்களின் செடிகள். வீட்டோடு மருவிய அழகான மகோக்கனி மரத்தில் ஜானகிக்கு ஊஞ்சல் கட்டியிருக்கும். பக்கத்துவீட்டு பிள்ளைகளும் ஜானகியுடன் வந்து விiயாடுவார்கள். பின்வளவில் சடைத்த மூங்கில் மரத்தடியில் நின்று அப்பம்மாவை ‘அம்மா’ என்று ஒரே கத்தி அழைத்துக்கொண்டிருக்கும் வீட்டுப் பசுமாடு. அம்மம்மா பசுமாட்டில் பால் கறந்து தேனீருடன் கலந்து எல்லோருக்கும் பரிமாறுவது எவ்வளவு சுவையானது. வளவின்; மத்தியில் பக்கசார்பாக கிடுகுகளால் மறைத்துக் கட்டிய மலசலகூடம். அதன் முன்புறமாக நடுவளவில்; பெரிய கறிவேப்பிலை மரம். வாசனை வீசி தாலாட்டுவதுபோல காட்சி தரும். கொக்கச் சத்தகம் போட்டு ஊராக்கள் வந்து கறிவேப்பிலை பிடுங்கும் பெரியமரம் அது. அந்தப்பெரிய வீடும், வளவும், சோலைபோன்ற செழித்துக் குலுங்கும் மரங்களும், பூக்களும், பட்சிகள் இசைக்கும் இனிய குரல்களின் அன்றைய காட்சிகள் இப்போது ஜானகிக்கு நினைவில் வந்து இனிய பூங்காவனமாகக் காட்சியாகின்றது. ஜானகியை ஆசையாக வளர்த்த அப்பம்மா இன்று இல்லை. அன்று ஜானகி ஆசையோடு விளையாடிய அந்த அப்பம்மாவின் வீட்டிற்குச்; செல்ல ஜானகிக்கு இப்போ உரிமையும் இல்லை. அந்த வீடும் இன்று உருமாற்றம். அது வேறு ஒரு கதை. இல்லை அது ஒரு பெரிய நாவல். ஆனால் இன்று விமானம் வேறு தேசத்தில் அல்லவோ ஜானகியைத் தரையிறக்கிவிட்டது.

லண்டனில் மாடி கட்டிடங்களில் குடியிருந்தால்; இருந்தால் தமிழ் ஆக்கள் அத்தகையோரைக் குறைவாக மதிப்பிடுவார்களாம். எனவே தனி வீடுகளில்தான் குடியிருக்கவேண்டும் என்பது உறவினர்களின் கருத்து. இதனை தன் நெஞ்சில் இருத்திக்கொண்டு ஜானகி மூன்று அறைகள் அடங்கிய ஒரு தனியான வாடைவீட்டில்தான் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தாள். மாடிக்கட்டிடம், தனிவீடு என மாறிமாறி சாமான்களையும், பெட்டிகளையும் தூக்கி தூக்கி குழந்தைகளோடு அலைந்து தற்போது இந்தவீடு அவளுக்கு சிறிது ஆறுதலாக இருந்தது. ஜானகியும் லண்டனுக்கு வந்து இப்போ இருபது வருடமாகிது.

வாழ்ந்துகொண்டிருந்த வாடைவீட்டை அந்த வீட்டின்; சொந்தக்காரியினால் விற்பனை செய்யத் திடீர் முடிவு எடுக்கப்பட்டது. ஜானகி குடும்பத்துக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பிள்ளைகள் படித்துக்கொண்டு தங்களை ஒரு நிலைமைக்கு கொண்டுவரமுடியாத நிலையில் ஜானகி குடும்பத்தினர் நிலை தடுமாறினர். உடனடியாக எப்படித்தான் வீடுவாங்குவதற்கான தொகைப்பணத்தைத் திரட்ட முடியும்.

வீட்டுச் சொந்தக்காரியின் வீடு விற்பனைக்கான விளம்பரத்தைப் பார்த்த பலரும் வீடு பார்வையிடும்; படலம் ஆரம்பித்துவிட்டது. பல்வேறு நாட்டவர்களினது வீட்டைப்பார்வையிடும் வருகை ஜானகிக்கு சலிப்பைக் கொடுத்தது. ஆட்கள் குடியிருக்கும்வேளை அது தகாத முறையெனத்தான் அவளுக்குப் பட்டது. தனது கருத்தை எப்படித்தான் முன்வைப்பது? எல்லாமே அவசர முடிவுகளும் செயற்பாடுகளுமாக இருக்கும்போது. வீட்டில் இருக்கும் போதெல்லாம் சுடுதண்ணி கொதிப்பது போன்ற உணர்வு அவள் இதயத்தில். உடம்பு படபடக்கிறது எந்நேரமும். முடிந்த வரை ஜானகி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.

ஜானகி குடும்பத்தினால் உதவி பெற்று தம்மை வளப்படுத்திக் கொண்ட உறவினர்களோ நண்பர்களோ விலகிக்கொண்டனர். அருமையான சந்தர்ப்பத்தில் ஜானகி குடும்பத்துடன் இனிமையானவர்கள் போன்று உறவு கொண்டனர் தனபாதகி குடும்பத்தினர். இந்த வீட்டை நாம் சொத்தாக்கி கொண்டால் இந்த வீட்டிலேயே தொடர்ந்து நீங்கள் வசிக்கலாம் என்ற அவர்களின் ஆசை வார்த்தையை ஜானகி குடும்பத்தினர் நம்பினர். ஜானகி குடும்பத்தின் மிக நேர்மையான செயலை அவதானித்தே வந்த வீட்டுச் சொந்தாக்காரி அவர்களால் முன்வருபவர்களுக்கு லாபகரமான விலையில் அந்த வீட்டை விற்க உத்தேசித்தாள். உதவி நோக்கில் தனபாதகி குடும்பம் தந்திரமாக சொத்தாக்க வேலைகள் மேற்கொண்டனர். பல்வேறு வீட்டு வேலைகள் அது இது என்ற வேலைப்பழுக்களினால் வீடு வாங்குவது குறித்து கவனக்குறைவாக இருந்துவிட்டமை நிட்சயமாக ஜானகியின் வருந்தக்கூடிய மொக்குத்தனம்தான்;.

படபடத்த மனத்தோடு மாலை வேலையால் வீட்டுக்கு திரும்பிய ஜானகி அந்த வீட்டின்; ‘தடுபுடு’ ஒலியால் தடுமாறிவிட்டாள். யாரோ நடமாடுவது போன்ற காலடிச்சத்தம். தினமும் வேலைக்குச் செல்வதையே வாழ்க்கையாகக் கருதும் வீட்டுக்காரர் இந்நேரம் வீட்டில் நிற்பது சாத்தியமில்லை என எண்ணுகின்றாள் ஜானகி. உடம்பு கிடுகிடுத்து நடுங்குகின்றது ஜானகிக்கு. நடுக்கதவு திறக்க முடியாது தடையாக இருக்கிறது. எப்படித்தான் வலுமை வந்ததோ அவளுக்கு மிகவும் கஷ்டப்பட்டு முயற்சிகள் செய்து கதவைத் திறக்கின்றாள். வீட்டின் மின்விளக்குகள் யாவும் எரிந்துகொண்டிருக்கிறது. மாலை தானே போதிய வெளிச்சமாக இருக்கும்வேளை மின்விளக்குகள் அத்தனையும் போடப்பட்டிருக்கின்றன என ஜானகி எண்ணிக் கொள்கிறாள். ஏதோ நெஞ்சு வேகமாக ஒலித்து நடுங்குவது ஜானகிக்கு மட்டும் எதிரொலிக்கிறது. அதிவேகமாக வீட்டின் சமையலறைப்பக்கமாக தன்னை சுதாகரித்துக்கொண்டு ஓடுகின்றாள்.

என்ன ஆச்சரியம் ஜன்னல் உடைந்து திறந்தபடி இருக்கிறது. எதிர்பாராத விதமாக அசம்பாவிதம் ஏதோ ஒன்று என்று ‘ஓ’ வொன்று அழுதுகொண்டு மேல்மாடிக்கு ஓடுகின்றாள் ஜானகி. நிம்மதி தேடி சயனம் கொள்ளும் அறையின் கட்டில் மலைபோல் வீட்டில் உள்ள அத்தனை உடைகளாலும்; குவிந்திருந்த காட்சி ஜானகியின் நெஞ்சை உலுக்கிவிட்டது. அதன் மேல் உள்ள லொவ்விற்றில் உள்ள லண்டன் சட்டப்புத்தகங்கள் உருண்டு போயிருக்கின்றன. நாம் இனி வீடு மாற வேண்டிவரலாம் என் ஜானகி எண்ணி ஒன்றாக எடுத்து ஒழுங்காக வைத்த பணத்தையும் – பவுண்களையும் வைத்த பெட்டியைத் தேடுகின்றாள். ‘ஐயோ என்தாயே! என்னைப் பெற்றவர்கள் வருந்தி உழைத்து அருமையாகத் தேடித்தந்த அழகழகான அத்தனை நகைகளையும்; ஒரு தோடு கூட இல்லாமல் கடவாடி விட்டார்களே!’ என ஜானகி பெருங்குரலெடுத்து அழுதுகொண்டிருந்தாள். தன்னைவிட தனது தெய்வமான தன்னைப் பெற்ற தாய் நிலைகுலைந்து இச்செய்தியால் துவண்டு விடுவாளே என அவள் நெஞ்சு பதறுகின்றது!

‘1983ஆம் ஆண்டு யூலைக் கலவரத்தால் எமது குடும்பம் அத்தனை பொருள் -பண்டங்களையும் ஊரில் இழந்து மீண்டும் பொருள்களைச் சேர்க்கவில்லையா? உயிர்கள் வாழும்போது எதனையும் சாதித்துவிடலாம். ஆனால் சேர்க்க முடியாத தனது எழுத்துச் சொத்துக்களின் இழப்பால் இடிந்துபோன தன் தந்தையையே பிரிந்து, இதயத்தைப்பிழியும் ஒரு சோக வரலாற்றை விடவா இந்த இழப்பு என ஜானகி எண்ணுகின்றாள். நகைகளை, பணத்தை எடுத்துக் கொண்டு போனவர்கள் நாசமாகட்டும்… மனதில் திட்டுகின்றாள் ஜானகி. மனது வீட்டுப்பிரச்சினையால் வேதனைப்படும் இந்தவேளையிலா இந்தக் கொடுமையான செயல்!.. ஆ..ஏன் இப்படி ஒரு நிகழ்வு என் வாழ்வில்…’ என எண்ணி புழுவாகத் துடித்துப்போனாள் ஜானகி.

தனபாதகியோ ஜானகி இருக்கும் வீட்டை தனதாக்குவதில் கண்ணும் கருத்துமாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறாள். இரண்டு சொந்த வீடுகள் லண்டனில் சொத்தாக தனபாதகிக்கு ஏலவே இருக்கும்போது, இந்த மூன்றாவது வீட்டையும் சொத்தாக்க எண்ணுவதா… ஆசை தப்பில்லை ஆனால் தனக்கு எப்போது என்ன வேண்டும் என்கிற தெளிவும் தீர்மானமும் ஒவ்வொருவரிடமும் அவசியம் வேண்டும் என்று ஜானகி எண்ணுகின்றாள். எழுத்தில் சொத்தாக மாற்றம் கண்டதும் தனபாதகியின் செயலிலும்; பெரிய மாற்றம். பெரிய வீட்டு முதலாளி என்ற நினைப்பில் மனதை நோகடிக்குமாப்போல் அதிகாரத்தை காட்டத் தொடங்கினாள்.

‘நாங்கள் ‘றி வலுவேஷன்’ செய்யப்போகிறோம். வளவில் உள்ள புல்லுகள் எல்லாம் வெட்டி இருக்கும் இடத்தை தந்துவிடவேண்டும். வீட்டோடு உள்ள பொருட்கள் எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல முடியாது’ என சேடம் இழுப்பவர்களைப்போல இழுத்திழுத்து தமிழையே ஒழுங்காகக் கதைக்கத் திண்டாடுவதுபோல் ஒருவிதமான அதிகாரத் தொனியில் தனபாதகி கூறுகின்றாள். ஜானகி திகைத்தே விட்டாள்! தான் வாழ்ந்த வீட்டை, தான் அழகுபடுத்திப் பார்த்த வீட்டை, தான் அன்புடன் நேசித்த அந்த வீட்டை நன்றி உணர்வோடு விழித்துப் பார்த்தாள்… ஒரு புரியாத புதிரின் முடிச்சைக் கண்டுபிடிப்பது போல. தள்ளவும் முடியாது கொள்ளவும் முடியாது தத்தளிக்கும் கொடுமையில் சிக்கியதுபோல ஜானகி. இதுகளுக்குப் போய் இந்த வீட்டைச் சொத்தாக்குவதற்குச் சிபார்சு செய்து உதவிசெய்துவிட்டோமே! இரக்கமில்லாமல் எங்களை வேறு விதமாக விரட்டுகிறாளே தனபாதகி. பாதகியே தான். இதயம் வேதனையில் எரிந்துகொண்டிருந்தது. பிசகிய செயற்பாடுகளை அவமானமாகவும், அருவருப்பாகவும் பார்த்து அவசர விமர்சனங்களுக்கு தன்னை உட்பட்டுக்; கொண்டேயிருந்தாள் ஜானகி.

தன்னை மட்டும்; சுத்தமாக்கி, மின்சாரத்தில் அழுத்திய உடைகளை மடிப்புக்குலையாமல் தினமும் அணிந்து காட்சிகொடுப்பவர் ஜானகியின் வீட்டுக்காரா.; வீட்டுக்காரருக்கு புல்லு வெட்டுவதுதென்றால் சுமையான பெரிய தொழில் போன்றது. இருந்தும் வீட்டைச் சுற்றியுள்ள பற்றைகளை தனியாகவே புல்லு வெட்டும் இயந்திரத்தினால்தான் நின்று வெட்டி உடல் நலம் பாதித்துவிட்டது. சாதனை மேல் சோதனை. தனபாதகிக்கு உதவி செய்யப்போய் வந்த வினை. ஜானகி எரிஞ்சு விழுந்துகொண்டு நின்றாள். மனமும் உடலும் தகிர்க்கின்ற வேதனையால் உருக்குலைந்தே விட்டோம் என்ற கவலை ஜானகிக்கு.

ஆனால் இந்தக் கோடை கேரளாநாட்டு வெள்ள அனர்த்தத்தின் உயிரிழப்புக்களும், கோடிக்கணக்கான சொத்துக்களின் அழிவுகளுக்குப் பின்பும் என்ன இந்தச் சொத்துக்கள் சேர்ப்பது என்பது போல் இருக்கிறது இப்போது ஜானகிக்கு.

தனபாதகியின் இத்தகைய அதிகாரத்தின் செயற்பாடுகளும், ஒவ்வொரு பொருளிலும் விரவி அதிரும் அதிகார மின்னல்களும் ஜானகிக்கு அருவருப்பைக் கொடுத்தது. ஒருவரைப் பிடிப்பதற்கோ அல்லது அவரை அளவிடுதற்கோ காரணம் அவசியம் இல்லை. ஒரு புன்சிரிப்பைப் பார்த்;துக்கூடப் பிடித்துவிடலாம். கைகுலுக்கும் விதம்கூட மனதைக் கவரலாம். இனிய மொழியும் உபசரிப்புமே பிடித்துப்போகலாம். ஆனால் மனிதர்களுக்கிடையில் நிலவும் இவ்விதமான மனதைப் புண்படுத்தும் செயலுக்கான காரணம் புரிந்துகொள்ள முடியாத பெரும் புதிர். காலாகாலமாக அவிழ்க்க முடியாத பெரும்புதிர். கூடப்பிறந்தவர்களுக்கிடையேயும் வரலாறாக நம்முன் காட்சியளித்துக் கொண்டிருக்கும் ஒரு புதிhராகத்தான்; இருக்கிறது என்று தனது பார்வையில் வாழ்வின் அனுபவங்களை எடைபோடுகின்றாள் ஜானகி.

மீண்டும் மாடிக்கட்டிட வாடை வீட்டிற்கே குடியேறிவிட்டாள் ஜானகி. பீனிக்ஸ் பறவைபோன்று மீண்டும் நிட்சயம் உயிர்த்து எழும்புவோம்; என்ற நம்பிக்கையில். துயர்கள் தொடர்ந்தாலும் மனதுக்கு இனிமையான அழகான சூழலில் வாழ்வு தொடர்கிறது என அவள் முகமெங்கும் படர்ந்து மலர்ந்து கொண்டேயிருக்கிறது. மகிழ்வான நினைவுகளை வரவழைத்து மனம் ரம்மியமான நிம்மதியில் ஜானகி …

12.9.2018

( ஞானம் சஞ்சிகையில் அமரர் செம்பியன் செல்வன் ஆ. இராஜகோபால் ஞாபகார்த்த சிறுகதைப்போட்டி 2018 இல் பரிசுச் சான்றிதழ் பெற்ற சிறுகதை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *