கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: January 4, 2013
பார்வையிட்டோர்: 14,275 
 

ஒரு முன் குறிப்பு;
கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு முன் சென்னையிலுள்ள ஒரு மகளிர் கல்லூரியில் [பெயர் சுட்ட விரும்பவில்லை] ஒரு அனைத்துக் கல்லூரிக்கலை விழா நடந்து கொண்டிருந்தபோது மின் இணைப்பைத் துண்டித்து விட்டுப் பல மாணவியரைக் கூட்டம் கூட்டமாகப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கின சில சமூக விரோத சக்திகள்.அதன் பிறகு பலப்பல ஆண்டுகள் அந்தக்குறிப்பிட்ட கல்லூரி மாணவி என்றால் அவளுக்குக் கல்யாணம் நடப்பதே கேள்விக்குறியாயிற்று. அப்போது எழுதப்பட்ட ஒரு சிறுகதை இது[1999] . நம் சமூகத்தின் நிலையில் இன்றுவரை மாற்றம் அதிகமில்லை என்பதையே இன்றைய நடப்பியல் நிகழ்வுகள் நிரூபித்துக்கொண்டிருக்கின்றன.
———————————————————————————————————

அறைக்கதவை மிக மெள்ள யாரோ தட்டும் சத்தம் கேட்கிறது.என்னையும் அறியாமல் அழுத்திய அசதியால் உறக்கத்தின் பிடியில் அமிழத்தொடங்கியிருந்த நான் எழுந்து வந்து கதவைத் திறக்கிறேன்.சூடான பானம் ஒன்றை ஏந்தியபடி குட்டித் தம்பி அருண் நிற்கிறான்.

‘’அனுக்கா இந்தா பிடி..! ம்… ! டக்குன்னு கதவைச் சாத்திக்க’’
-மூச்சிறைக்கப் பேசியபடி பேயைக் கண்டது போல ஓடும் அவன் கண்களில் இந்த மிரட்சி எப்படித்தான் வந்து புகுந்து கொண்டது? பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் அம்மாவைக்கூடப் புறந்தள்ளி விட்டு ’அக்கா’என்று பாய்ந்து வந்து கட்டிக் கொள்ளும் அருண்! அக்காதான் தலை சீவணும்’என்று அடம்பிடிக்கும் அருண்! கபடமற்ற அவன் கண்களிலும் கூடக்கள்ளத்தைக் காணுகையில் என் உயிர் ஒரு கணம் ஓய்ந்து போகிறது.

ஃபோன் மணி அடிக்கும் சத்தமும்,தொடர்ந்து அப்பா உரக்கப்பேசுவதும் எந்த முயற்சியும் இல்லாமல் காதில் வந்து விழுகிறது.

‘’இல்லையே..! அப்படியெல்லாம் ஒண்ணுமே இல்லையே…!ஆமாம்..என் பெண்ணு அங்கேதான் படிக்கிறா,,,,ஆனா,,,இப்ப அவ என்னோட மகன் வீட்டுக்கு பம்பாய்க்குப் போயிருக்கா! நல்ல வேளை அந்த சமயம் அவ அங்கே இல்லாமப்போனா! ஆமாமாம்…ரொம்பக் கொடுமைதான்..இதுக்கெல்லாம் நடுத் தெருவிலே நிக்க வச்சுச் சவுக்கடி தரணும்’ என்ன செய்யறது….சரிங்க அப்ப வச்சிடவா? தாங்க்யூ’’

-வயதுக்கும் பதவிக்கும் அனுபவத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் இப்படி சரளமாக…அடுக்கடுக்காகப் பொய்களைத் தன்னால் உதிர்க்க முடியுமென்பதை அப்பா ஒரு வாரம் முன்னால் கூட நினைத்துப் பார்த்திருப்பாரா என்ன?

அருண் வைத்து விட்டுப் போன காப்பியில் ஆடை படர்ந்து கொண்டிருக்க அம்மா மதியம் கொண்டு வந்த சோறு ஒரு பக்கம் விறைத்துப் போய்க் கொண்டிருக்கிறது.என்னைச் சுற்றிலும் ஒரு முறை பார்வையைச் செலுத்துகிறேன்.

நேசத்திற்குரிய என் தனி அறை..! பாரதி,புதுமைப்பித்தனிலிருந்து வண்ணதாசன்,சுந்தரராமசாமி என்று என்னைச் சூழ இறைந்து கிடக்கும் புத்தகங்கள் ! என் மனநிலைக்கேற்ற இசையை எனக்குத் தந்து உதவும் ஒலிப்பேழை…! தாயின் மடியைப்போலக் கதகதப்பைத் தந்து கொண்டிருந்த இடமே இன்று தனிமைச் சிறையாக மாறி விட்டிருப்பதை எண்ணியபடி புத்தகத்தைப் புரட்டுகிறேன்.கண்கள் பக்கங்களில் வெறுமையாக ஓட….மனம் எதிலும் லயிக்காத சூனிய நிலையில் சஞ்சாரம் செய்யத் தொடங்குகிறது.

கதவைத் தட்டி விட்டு அம்மா உள்ளே வருகிறாள்.
‘’என்ன அனு இப்படி அடம் பண்றே…காலையிலே இருந்து எதுவும் சாப்பிடாம வயத்தைக் காயப்போட்டா என்ன ஆகும்..சாதம் பிடிக்கலைன்னா டிஃபன் ஏதாவது கொண்டு வரவா..?’’

‘’அது ஒண்ணுதான் கொறச்சல்’’-என் குரல் உயர்கிறது.

அம்மா வாயில் விரல் வைத்து மெள்ளப் பேசுமாறு கெஞ்சலோடு சமிக்ஞை செய்கிறாள்.

‘’நான் என்ன தப்பும்மா செஞ்சேன்…நீ கூடவா என்னைப் புரிஞ்சுக்கலை’’

‘’இதோ பார் அனு….அப்பா எதைச் செஞ்சாலும் ஒன்னோட நன்மைக்குத்தான் செய்வார்..கொஞ்சம் பொறுமையா இரு..’’

‘’அதுக்காக இப்படி ஒரு வீட்டுக் காவலா..’’

‘’சீ..அசடு மாதிரி பேசாதே’’-அருகில் வந்து ஆதரவாய்த் தலையைக் கோதிவிடும் அம்மாவின் கண்களில் நீர் முட்டி நிற்கிறது.ஆனாலும் என்னோடான விவாதத்திலிருந்து தப்பித்துக் கொண்டு வெளியேறி விட வேண்டுமென்ற அவசரமும் அவளிடம் தெரிவதை என்னால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

‘’கதவைத் தாள் போட்டுக்கோ..’’-மறக்காமல் கவனமாக அதை மட்டும் சொல்லிவிட்டுப் போகிறாள்.

‘’எல்,கே.ஜியிலேயிருந்து காலேஜ் வரைக்கும் எப்பவும் எல்லாத்திலேயும் எங்க அனுதான் முதலாவதா வருவா…’’என்று வாய் கொள்ளாத பூரிப்புடன் சொல்லிச் சொல்லிப் பெருமைப்படும் அம்மா! தலைமுறை இடைவெளிகளைத் தாண்டி சராசரி அம்மா-பெண் என்ற எல்லைக்கோடுகளையெல்லாம் கடந்து எதை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ள முடியுமென்ற சினேகத்தையே இது வரைக்கும் கொடுத்து வந்திருக்கிற அம்மா! அட்டவணை போட்ட மாதிரி ஒவ்வொரு நிமிடமும் கல்லூரியில் நடப்பதை அவள் ஒப்பிக்கையில் அலுத்துக் கொள்ளாமல்..இன்னும்..இன்னும் என்று கேட்கிற அம்மா!

-இப்போது கதவைத் தட்டுவது அப்பாவின் முறை! என் கண்களை மட்டுமன்றி முகத்தையும் பார்ப்பதைத் தவிர்த்தவராய்..இறுகிய குரலில் பாடம் ஒப்பிப்பதைப்போலப் பேசுகிறார்.

‘’இதோ பார் அனு…இப்படிச் சாப்பிடாம சத்தியாக்கிரகம் பண்றதிலே பிரயோஜனமில்லை. இன்னும் நாலு நாளோ ஒரு வாரமோ போனா….எல்லாம் கொஞ்சம் நார்மலுக்கு வந்திடும்.அதுக்குள்ளே நீ இப்படி அடம்பிடிச்சா நான் இன்னும் கடுமையா நடந்துக்க வேண்டியிருக்கும்’’
மிரட்டி விட்டு வெளியேறுகிறார்.

‘’எங்க அனுவை ஆம்பிளை மாதிரி வளர்த்திருக்கேன் தெரியுமா? கராத்தேலே அவதான் ‘பெஸ்ட் கேடட்’ என்று போன வாரம் கூட நண்பரிடம் பெருமை பேசிக் கொண்டிருந்த அன்பான அப்பா தொலைந்து போன சோகம் என்னுள் அடர்த்தியாகப் பரவுகிறது.

கலகலப்பே நிறைந்து வழிந்த வீட்டில் முணுமுணுப்புக்களும் கிசுகிசுப்பான ஓசைகளுமே வியாபித்திருக்க…..மயான அமைதி மனதைக்குடைகிறது.கதவை லேசாக ஒருக்களித்துத் திறந்து வைத்துவிட்டு ஹாலில் நடப்பதைக் கவனிக்கிறேன்.

’’கனகம்..முதல்லே வாசல்கதவைச் சாத்திட்டு வா..உடனடியா பம்பாய்க்கு எஸ் டி டி போட்டு நம்ம பையன் கிட்டே பக்குவமா விஷயத்தைச் சொல்லி யார் விசாரிச்சாலும் அனு அங்கே இருக்கிறதாவே சொல்லச் சொல்லிடணும்….இந்தக் கழுதைக்கு ஃப்ரண்ட்ஸ் ஏராளம்….நம்ம சொந்தக்காரங்களும் லேசுப்பட்டவங்க இல்லை.அங்கே ஃபோன் பண்ணி இவ அங்கே இல்லைன்னு தெரிஞ்சுடக் கூடாது யாருக்கும்..’’

-மேலே எதுவும் கேட்கப் பிடிக்காமல் அறைக்கதவை இறுக அடைத்து விட்டு மனக் கதவுக்கும் தாளிடுகிறேன்.

அரை மணி நேர அச்சுறுத்தும் நிசப்தத்திற்குப் பின் வாசலில் அழைப்புமணி அடிக்கும் ஓசை கேட்கிறது.வாசலைத் திறக்கு முன் எச்சரிக்கை உணர்வோடு என் அறைக்கதவைத் தட்டி உள்ளே தலையை நீட்டுகிறாள் அம்மா.

‘’அனு..வாசல்லே யாரோ வந்திருக்காங்க போல இருக்கு கொஞ்ச நேரம் எந்த சத்தமும் வராமப் பாத்துக்கோ நீ உள்ளே இருக்கிறதே தெரியக் கூடாது..ரேடியோ,டேப் எதையும் போட்டுடாதே என்ன..?’’

-கொஞ்சம் போனால் மூச்சு விடுவதைக் கூடக் கட்டுப்படுத்திக் கொள்ளச் சொல்லி விடுவாள் போலிருக்கிறது.பிற புலன்களெல்லாம் மழுங்கிப்போய் அவிந்த நிலையில் என் செவிகள் மட்டும் கூர் தீட்டப்பட்டு ஹாலில் நடக்கும் உரையாடலை உள்வாங்க ஆயத்தம் பெறுகின்றன.

‘’அனு எங்கே கொஞ்சம் கூப்பிடுங்க..’’
-பிரியத்துக்குரிய பேராசிரியையின் வெண்கலக் குரல்.

அப்பாவின் குரல் குறைந்து தாழ்கிறது.

‘’மேடம்..அது வந்து அனுவைக் கொஞ்ச நாளைக்கு அவளோட அண்ணன் வீட்டுக்கு அனுப்பி வச்சிருக்கோம்..கொஞ்சம் பயந்தாப்பிலே இருந்தா…’’

‘’அனுவுக்கு பயமா?என்ன சொல்றீங்க நீங்க..?ஐம்பது வயசை நெருங்கிக்கிட்டிருக்கிற நானே என்ன பண்றதுன்னு தெரியாம மலைச்சுப் போய் நின்னப்ப, ஒரு சேதாரமும் இல்லாம எல்லாரையும் மீட்டுக்கிட்டு வந்திருக்கா அவ….அதுக்காகவே எங்க காலேஜ்லே அடுத்த வாரம் ஒரு பெரிய பாராட்டுக் கூட்டம் நடத்தறதா இருக்கோம்….அதைச் சொல்லிட்டு உங்களையும் அதுக்குக் கூப்ப்பிட்டுட்டுப் போகலாம்னுதான் நான் இப்ப வந்தேன்’’
-உள்ளச் சிலிர்ப்பு என் கண்களில் பனிநீராய்க் கொட்ட அப்பாவின் பேச்சு அபசுரமாய் இடை வெட்டுகிறது.

‘’மேடம்..உங்க கிட்டே சொல்றதுக்கென்ன….? அன்னிக்கு நடந்த சம்பவத்தையே நாங்க மறக்க விரும்பறோம்..அதிலே அனுவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை..அவ அந்த டூரிலேயே கலந்துக்கலை,அந்த சமயம் அவ ஊரிலேயே இல்லைன்னு எங்க உறவுக்காரங்களை நம்ப வைக்கிறதுக்குப் படாத பாடு பட்டுக்கிட்டிருக்கோம்..இப்பப்போய்ப் பாராட்டு விழா அது இதுன்னு விஷயத்தை வெளிச்சம் போட்டுட வேண்டாம்னு உங்களை தயவா கேட்டுக்கறேன்..’’

‘’என்ன சார் இப்படிப்பேசறீங்க….உங்க பெண் என்ன செய்யக்கூடாத தப்புக் காரியத்தையா செஞ்சிட்டா.அன்னிக்கு டூர் வந்த அத்தனை பெண்களோட அப்பா அம்மாவும் அனுவை தெய்வமாக் கும்பிட்டிக்கிட்டிருக்காங்க தெரியுமா..’’

அப்பாவின் குரல் சற்றே உயர்கிறது.
’’மேடம்..எங்க பொண்ணு தெய்வமா ஆக வேண்டாம்..சாதாரணமா…சராசரியா இருந்தாலே போதும்…’’
மேலே நடக்கிற உரையாடல் மனசுக்குள் பதிவாகாமல்புத்தி வழுக்கிக் கொண்டு போகிறது.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

வகுப்பிலுள்ள பதினாறு மாணவிகளும்,வகுப்பாசிரியருமாய் மினி வேன் ஒன்றில் உற்சாகத் துள்ளலுடன் தொடங்கிய சுற்றுலா….! போட்டி போட்டுக் கொண்டு குழந்தைகளைப்போல மலை ஏறுவதும்,ஆசை தீர அருவியில் குளிப்பதுமாய் ஆடித் தீர்த்து விட்டு அனைவரும் அசந்து உறங்கிப்போய்விட,முன்னிரவு நேரத்தில் அத்துவானக் காட்டில் வண்டி பழுதாகிறது. டிரைவர் பழுது நீக்கி முடித்து விட்டு நிமிருகிற வேளை…..கண்ணிமைக்கும் நேரத்தில் எங்கிருந்தோ வந்த மூன்று முரட்டு வாலிபர்கள் அவரை அடித்துப்போட்டு விட்டு வண்டியோடு எங்களைக் கடத்திச் சென்று பாழ்மண்டபம் ஒன்றில் அடைத்துவைத்த கொடூரம்….! பேராசிரியை மட்டும் கொஞ்சம் துணிச்சலுடன் முன் வந்து பேசுகிறார்.

‘’இதோ பாருங்கப்பா..இவங்களுக்கு என்ன நடந்தாலும் நான்தான் பொறுப்பு…..வேணுமானா இவங்க போட்டிருக்கிற நகைகளை ஒண்ணு விடாம கழட்டித் தரச் சொல்லிடறேன்…..மத்தபடி எந்தத் தொந்தரவும் செய்யாம தயவு செய்து விட்டுடுங்கப்பா…’’
பேசி முடிப்பதற்குள் குரல் கரகரத்துக் கம்மிப் போகிறது அவருக்கு.

அவர்கள் அட்டகாசமாகச் சிரிக்கிறார்கள்…

‘’பாருங்கப்பா டீச்சர் சொல்றதை…..இந்தப் பிசாத்து நகைங்களுக்காகவா இத்தனை கஷ்டப்பட்டோம்…இப்படி ஒரு சான்ஸ் இனிமே வாழ்க்கையிலே கிடைக்குமா என்ன..’’
எல்லாருக்கும் உடம்பு சில்லிட்டு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள நான் மட்டும் சுதாரித்துக்கொண்டு முன்னால் வருகிறேன்..

‘’ஓகே…நீங்க சொல்றபடி நாங்க கேக்கணும்னா ஒண்ணு செய்யணும்…முதல்லே எங்களுக்கெல்லாம் பேய்ப்பசி எடுக்குது அதுக்கு ஒரு வழி பண்ணுங்க..;;
பேராசிரியை அசந்து போனவராய் என்னைப்பார்த்து விட்டுப் பிறகு என் கண்ணிலிருந்து அஞ்சலான செய்தியை நொடியில் புரிந்து கொள்கிறார்.

‘’அப்படியெல்லாம் ஈஸியா ஏமாந்து போக நாங்க என்ன இளிச்சவாயனுகளா….டேய் சூரி….இதுக எங்கேயும் அசையாம நீ பாத்துக்க நாங்க ரெண்டு பேரும் நம்ம புல்லட்டிலே போய் ஏதாச்சும் பரோட்டா கிரோட்டா கிடைக்குதான்னு பாத்து வாங்கிட்டு வந்திடறோம்’’

கிங்கரன் போல் காவலிருந்த ஒற்றை ஆளை அவன் எதிர்பார்த்திராத விநாடி ஒன்றில் நான் கற்றிருந்த தற்காப்புக் கலையின் துணையோடு தாக்க அவன் சுருண்டு விழும் வேளையில் நாங்கள் எல்லோருமாய்ச் சேர்ந்து கொண்டு அவனைத் தாக்கி வீழ்த்தி விட்டு வேனை நோக்கி ஓடுகிறோம்…எங்களுக்குத்தெரிந்த அரைகுறை ஞானத்தை வைத்து வண்டியை ஓட்டிய டிரைவர் கட்டிப்போடப்பட்டிருந்த இடத்துக்கு வந்து அவரைப் விடுவித்து விட்டுப் பிறகு எங்கெல்லாமோ சுற்று வழிகளில் சென்று மறுநாள் இருட்டும் வேளையில் வீடு சேர்கிறோம்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

மனம் நிகழ்காலத்திற்குத் திரும்ப,அப்பா கூடத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்.
‘’அதுதான்..பலாத்கார முயற்சி…தப்பி வந்த கல்லூரி மாணவியர்’னு பேப்பர்காரன் கொட்டை எழுத்திலே போட்டுட்டானே மேடம்….அந்தக் கூட்டத்திலே எங்களோட பொண்ணும் இருந்தான்னு வெளியே தெரிஞ்சா நாளைக்கு அவளை யார் கட்டிக்குவாங்க..’’

‘’பலாத்காரம்னு ஒரு விஷயமே நடக்காமல் தடுக்கப்பட்டிருக்கிறது உங்க மகளாலேதானே சார்…அதை ஏன் நீங்க பெருமையா எடுத்துக்க மாட்டேங்கிறீங்க’’

‘’மேடம்..சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க….நான் வாழ்க்கையிலே அடிபட்டவன்,அனுபவப்பட்டவன்….நீங்களோ கல்யாணமே செஞ்சுக்காதவங்க….உங்களுக்கு இதெல்லாம் புரியாது,,,,எல்லாத்துக்கும் மேலே இது என் மகள் சம்பந்தப்பட்ட விஷயம்..நானே மாற்றல் வாங்கிட்டு வேற ஊருக்குப் போயிடலாம்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன்..’’

சமயம் பார்த்து அப்பா இப்படி ஒரு கூர்மையான கத்தியைச் செருகிய பிறகும் மேடம் தொடர்ந்து அங்கே உட்கார்ந்திருப்பாரென்று தோன்றவில்லை.உள்ளுக்குள் எதிர்காலம் இருட்டாக விரிய…..மயங்கிச் சாய்கிறேன்.நிமிடங்களும் மணிகளும் உறைந்து போகின்றன.அம்மா உலுக்கி எழுப்புவது கனவின் நிகழ்வாக..மசமசப்பாகத் தெரிகிறது.

‘’அனு..இந்தா..சூடா கஷாயம் கொண்டு வந்திருக்கேன்…உடம்பு வலி எல்லாம் போய் உருவி விட்ட மாதிரி இருக்கும்’’

அவள் பதமாய் ஆற்றித் தந்ததை ஒரு மிடறுவிழுங்குகையில் அவள் கேட்கிறாள்.

‘’ஆமாம்….இப்ப உனக்கு பீரியட்ஸ் வர நாளில்லை…..இதை முழுசாக் குடிச்சிடு உடனே வந்துடும்’’

கல்லான முகபாவத்துடன் அவள் இதைச் சொன்னாலும் சூட்சுமம் விளங்கிப் புதிர் விடுபட்ட உணர்வில் கஷாயக் கிண்ணத்தையும் அவளையும் மாறி மாறி வெறிக்கிறேன்.

‘’யூ…யூ…’’எனப் பேய்க்கூச்சலிட்டபடி கிண்ணத்தையும் டம்ளரையும் விசிறியடிக்கிறேன்.

‘’நீ எனக்கு அம்மாவே இல்லை..என் முகத்திலேயே முழிக்காதே’’என்றபடி முரட்டுத்தனமாய் அவளைப்பிடித்து வெளியே தள்ளி விட்டுக் கதவை ஓசையெழ சாத்துகிறேன். என் கசக்கலில் தலையணை கிழிந்து பஞ்சுப்பொதிகள் தலை நீட்டிப் பார்க்கின்றன.

இனி என்ன இருக்கிறது…..? சுதந்திரச் சிறகுகளைக் கத்தரித்துப் போட்டுவிட்டு ஒரு ஜீவிதம்தான் எதற்கு…? பொய்யை மட்டுமே அஸ்திவாரமாகப் போட்டு இவர்கள் அமைத்துத் தரப்போகிற போலியான வாழ்வில் ஒரு ஜடமாக..தாவரமாக வாழ்வதை விட..என் முடிவை நானே தேடிக் கொள்ளத் தீர்மானிக்கிறேன்.

கடந்து போனநூற்றாண்டின் பாவப்பட்ட பெண்ணைப்போலக் கடைசியில் எனக்கு ஒரு முழம் கயிறும் உத்தரக்கட்டைக்கு பதிலாக மின் விசிறியும்தானா எஞ்சப்போகிறது….? மாற்றுச் சிந்தனையை அவசரமாக விரட்டியபடி,மின்விசிறி மீது புடவையை வேகமாக வீசுகிறேன்.இலக்குத் தவறிய வீச்சு புத்தக அடுக்கொன்றை சரித்துப்போட,குலைந்து விழும் புத்தகம் ஒன்றிலிருந்து பளிச்சென்று எட்டிப்பார்க்கும் புகைப்படம் என்னைக் கட்டிப் போடுகிறது.

உற்சாகத் துடிப்போடு நிற்கும் என்னருகே கள்ளமற்ற குழந்தைச் சிரிப்போடு வெள்ளையம்மா..

கடந்த மாதம் காசநோய்த் தடுப்புப் பிரச்சாரம் செய்தபடி எங்கள் கல்லூரி சமூக சேவைப்பிரிவான என்.எஸ்.எஸ் யூனிட்டோடு அந்தச் சேரிக்குள் வலம் வந்து கொண்டிருந்த என்னை அன்போடு பற்றுகிறது அந்தக்கரம்..

‘’அக்கா என்னைத் தெரியலையா நான்தான் வெள்ளையம்மா…பாப்பாக்குடி கிராமத்திலே பாத்திருக்கோமே..’’
-நான் எதுவும் புரியாமல் விழிக்க அவள் பிரியத்தை மடையாகக் கொட்டுகிறாள்.

‘’என் வீடு இங்கேதான்….தொட்டாப்பிலே இருக்கு….ஒரு நிமிசம்..ஒரே ஒரு நிமிசம் வந்திட்டுப் போயிடுங்கக்கா’’
-கிட்டத்தட்ட என்னைப் பற்றி இழுத்துக் கொண்டு போகிறாள்.

‘’ஆயிரம் பேருக்கு நடுவிலே உங்களுக்கு என்னை மறந்து போயிருக்கும்..ஆனா..என்னாலே இந்தச் சன்மம் முச்சூடும் உங்களை மறக்க முடியாதுக்கா….எனக்குப் புது உசிரையே தந்திருக்கிற உங்க ஞாபகமா என் பிள்ளைக்கும் உங்க பேரைத்தான் வச்சிருக்கேன்..’’

முடிச்சு இன்னதென்று புரியாமல் நான் தவிக்கும்போது அவளே அடியெடுத்துக் கொடுக்கிறாள்.

‘’அன்னிக்கு ஒரு நாள் நீங்களும் உங்க காலேசுப் பொண்ணுகளும் வந்து எங்க ஊரிலே…அதுதான் பாப்பாக்குடியிலே மீட்டிங்க் எல்லாம் போட்டு ட்ராமா போட்டீங்களேக்கா.’’

இழை பிடிபட்டுவிட்டது.பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக நாங்கள் பெரியதொரு ஊர்வலம் சென்று கலைநிகழ்ச்சிகள் அளித்த அந்த நாள்…
‘’பலாத்காரத்தினாலே பாதிக்கப்படற பெண் தன்னை மாய்ச்சுக்கறதுனாலே அது ஆண்களுக்கு இன்னும் சாதகமா..வசதியாத்தான் போயிடுது…..இது உடம்புக்கு மட்டுமே ஏற்பட்ட ஒரு சின்ன விபத்துன்னு நாம புரிஞ்சுக்க ஆரம்பிச்சிட்டோம்னா நமக்குன்னு வேற ஒரு வாழ்க்கை அமைச்சுக்கிற துணிச்சல் நமக்கு வந்திட்டதுன்னா..இப்படிப்பட்ட குற்றங்களும் குறைஞ்சிடும்’’

பேசி முடித்து விட்டு நான் மேடையை விட்டுக் கீழே இறங்கி வந்த பிறகு இவள் இந்த வெள்ளையம்மா மட்டும் ஓடி வந்து என் கைகளைப் பற்றிக் கொண்டதும்,மனதில் உள்ளதையெல்லாம் கொட்டிவிட வார்த்தைகள் இன்றிப் பாமரத்தனமான உள்ளத்தின் குமுறலை என்னைக் கெட்டியாகப் பிடித்திருந்த கரங்களாலும் விழிகளில் அணை கட்டியிருந்த கண்ணீராலும் மட்டுமே உணர்த்தியதையும் ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.

‘’எவனோ ஒரு களவாணிப்பய ஆசை காட்டிக் குலைச்சுப்போட்டுட்டுக் கை விட்டுப் போயிட்டாங்கிறதுக்காக என்னையே சாகடிச்சுக்க இருந்தேன் உங்க பேச்சைக் கேட்டதும் உடம்பெல்லாம் ஒரு புது ரத்தம் பாஞ்சாப்பிலே இருந்திச்சு……இப்ப எனக்குன்னு ஒரு குடும்பம் அமைஞ்சு நல்லா இருக்கேன்..எல்லாம் நீங்க ஏத்தி வச்ச வெளக்குத்தான் தாயீ..’’

-அந்த வெள்ளையம்மா இப்போது புகைப்படத்தில் ஒளிந்து கொண்டு என் ஏட்டுச் சுரைக்காயை எள்ளிச் சிரிக்க…..கையில் எடுத்த புடவை முறுக்கு நழுவித் துவண்டு விழுகிறது.இரண்டு நாட்களாய் என்னுள் உறங்கிப் போயிருந்த போராளியை முன்னிலும் வீரியத்தோடு உசுப்பேற்றி உயிர்த்தெழச் செய்தபடி,என் அம்பறாத் தூணியிலுள்ள அஸ்திரங்கள் இன்னும் தீர்ந்து விடவில்லை என்ற நம்பிக்கையோடு அறைக் கதவைத் திறந்து கொண்டு ஹாலுக்குள் தெம்பாய்ப் பிரவேசிக்கிறேன்.

[கோவை ஞானி நடத்திய பெண் எழுத்தாளர் சிறுகதைப் போட்டியில் தேர்வு பெற்று அவரால் தொகுக்கப்பெற்ற ‘உடலே சவப்பெட்டியாக’ என்னும் தொகுப்பில்[1999] இடம்பெற்ற சிறுகதை.
என் தேவந்தி தொகுப்பிலும் இது உள்ளது]

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *