கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 21, 2013
பார்வையிட்டோர்: 8,385 
 

பூதம் அவனைக் குறித்துச் சொல்லியது: ” நீ சாகணும், நான் பார்க்கணும்”. அது அவனை நேராகப் பார்த்துச் சொல்லியிருந்தால் கூட அவனுக்கு அவ்வளவு பயமாக இருந்திருக்காது. அது சுவரைப் பார்த்து சொல்கிற மாதிரி, போஸ்டரில் இருப்பவனைப் பார்த்து சொல்கிற மாதிரி, தூரத்தில் போகிறவனைப் பார்த்துச் சொல்கிற மாதிரி, தான் கனவில் கண்டவனை நினைத்துச் சொல்கிற மாதிரி சொன்னதுதான் அவனுக்குப் பீதியையும் கவலையையும் உண்டு பண்ணியது.

அந்த பூதம் ரொம்ப நாட்களாக அங்கு இருக்கிறது. வேலைக்காரி பெருக்கும்போது அதை மூலையில் குவித்து விடுவாள். காற்றடிக்கும் போதெல்லாம் அது வீடு முழுக்க பரவி விடும். அது இருப்பது அவனுக்குத் தெரியும் என்று அதற்கும் தெரிந்திருக்க வேண்டும். ஆனாலும் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பது போல் இருவரும் இருந்தார்கள்.

அவனுடைய அம்மா அப்பா எல்லாருமே அவனுக்கு பூதம் இருப்பது தெரியாது என்று விடாப்பிடியாக நம்பினார்கள். அது பற்றி வெளிப்படையாகப் பேச விடாமல் எதோ ஒன்று அவர்களைத் தடுத்தது.

அன்று காலை அவன் நாற்காலியில் அமர்ந்து காலாட்டிக் கொண்டிருந்த போதுதான் பூதம் “நீ சாகணும், நான் பார்க்கணும்” என்று யரையோ சொல்வது போல், குடி மயக்கத்தில் சொல்வது போல் சொல்லியது. அந்த நேரத்தில் அதை அவன் எதிர் பார்க்கவில்லை. அது சொல்லியது முதலில் வெறும் ஒலியாகப் பொருளற்றுதான் அவன் காதில் விழுந்தது. அது தொடர்ந்து ‘இன்னிக்கு சாயந்தரத்துக்குள் செத்துரு. என்ன சரியா?” என்று சொல்லியதும்தான் அவன் முதலில் சொன்னவற்றையும் சேர்த்து யோசித்தான்.

பயம் கிளம்பினாலும் அது சொன்னது காதில் விழாத மாதிரி இருக்கப் பார்த்தான். பூதம் கோபமாக திரும்பி வாசல் நோக்கி சென்றது. அது எப்போதெல்லாம் மூலையில் மறைவாக இருக்கும், எப்போதெல்லாம் வெளியே போகும் என்பவை எல்லாம் அவனுக்கு அத்துப்படி. அதனாலேயே அவன் பள்ளியிலிருந்து வருகையில் அது வீட்டில் பரவி இருக்கும் சமயம் என்றால் வீட்டில் நுழையாமல் கால் போன போக்கில் பக்கத்துத் தெரு வழியாகவெல்லாம் போய்விட்டு அது மூலைக்குப் போயிருக்கும் என்று நிச்சயம் ஆன பிறகுதான் வீட்டுக்குள் வருவான். இன்று அது அவன் இருக்குமிடத்திற்கு வந்தது எதிர் பாராத நேரத்தில்.

அது சும்மா சொல்லியதா அல்லது கோபத்தில் சொல்லியதா அல்லது உண்மையிலேயே ஏதாவது செய்து விடுமா என்று அவனுக்குத் தெரியவில்லை. சங்கடமாக இருந்தது. அது அந்த சமயத்தில் வந்ததே பயத்தை உண்டு பண்ணியது.

அன்று மத்யானம் வீட்டு வாசலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இறங்கினர். அப்பா அலுவலகத்தில் அவரோடு பணி புரிகிறவர்கள். இவனைப் பாத்ததும் புன்னகைத்தவாறே “அப்பா இருக்காரா” என்றார்கள். இவன் “உள்ளே வாங்க” என்று அவர்களை அழைத்து அமரச் சொன்னான். “அப்பா இதோ வந்து விடுவார்” என்று சொல்லிவிட்டு உள்ளே போனான்.

சமையலறையில் தரையில் அமர்ந்து அப்பா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். “யார்டா” என்பது போல் நிமிர்ந்து பார்த்தார். “அவங்கதான்” என்றான். “போய் ரெண்டு கூல் ட்ரிங்க் வாங்கிக் கொண்டு வா. சட்டைப் பையில் பர்ஸ் இருக்கு. எடுத்துக்கோ” என்றார்.

முன் அறையில் இருந்த இரண்டு நாற்காலிகளிலும் அவர்கள் உட்கார்ந்து இருந்தார்கள். அதைத் தவிர வேறு நாற்காலி கிடையாது. அப்பா வந்தால் கட்டிலில்தான் உட்கார வேண்டும். ஒரு சின்ன ஸ்டூல் இருந்தது. அவன் அவர்களைப் பார்த்து மீண்டும் புன்னகைத்து விட்டு “அப்பா இதோ வந்து விடுவார்” என்றான். “நீ என்ன கிளாஸ் படிக்கிறே” என்றார் அவர். போன மாதம் வந்த போதும் அவர் அதே கேள்வியைக் கேட்டார் என்பது ஞாபகம் வந்தது.

“ப்ளஸ் டூ”

“நல்லாப் படி. ஆல் தெ பெஸ்ட்” என்றார் அவர்.

அந்தப் பெண்மணியும் புன்னகைத்தாள். இவன் பர்ஸிலிருந்து பணத்தை அவர்கள் பார்க்காத வண்ணம் எடுக்க முடியாது. பர்ஸை எடுத்துக் கொண்டு உள்ளே போனான்.

“எவ்வளவு எடுத்துக்கட்டும்….. உங்களுக்கு?”

“எனக்கு வேண்டாம். ரெண்டு வாங்கிட்டு வா. உனக்கு வேணுமா”

“வேண்டாம்” என்று சொல்லிவிட்டு பர்ஸை அப்பாவின் மடியில் போட்டு விட்டு வெளியே போனான்.

பக்கத்துக் கடை மூடி இருந்தது. அடுத்த தெரு வழியாக மெயின் ரோட்டில்தான் போய் வாங்க வேண்டும். இவன் மெயின் ரோட்டை நெருங்குகையில் ஒரு பெருங்கூச்சல் கேட்டது. ஒரு ஊர்வலம் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தான். தெருவும் சாலையும் சந்திக்கும் இடத்தில் இருந்த மூடி இருந்த ஒரு கடையின் வாசலில் நின்று கொண்டான். “ஓ. அதுதான் பக்கத்துக் கடை மூடி இருந்ததா?”

சிறிய சாலையாகையால் அது முழுவதையும் அடைத்துக் கொண்டு ஊர்வலம் சென்றது. அதன் ஆரம்பம் எங்கே என்று தெரியவில்லை. வெகு நேரமாக சென்று கொண்டிருக்க வேண்டும். அவர்கள் குறிப்பிட்ட குழுவினரைத் தாக்கியும் இன்னொரு குழுவினரை ஆதரித்தும் கோஷமிட்டுக் கொண்டு போனார்கள். கூட்டத்தில் ஒரு பகுதியினர் இவன் வந்த தெருவில் நுழைந்தனர். அது வழியாக மைதானத்திற்கு குறுக்கு வழி இருந்தது. அங்கு மாலை பொதுக் கூட்டம் இருந்தது. ஊர்வலம் போனவர்களில் சிலர் கையில் கம்பு வைத்திருந்தனர். ஒருவர் சோடா பாட்டில் ஒன்றை நடுத்தெருவில் போட்டு உடைத்தார். பல பேர் காலில் செருப்பு இல்லாமல்தான் நடந்து சென்றனர். இன்னும் சில பாட்டில்கள் உடைக்கப் பட்டன. ஒரு சில்லு இவனைத் தாண்டிக் கொண்டு போய் மூடியிருந்த கடையின் சுவரில் மோதி மேலும் உடைந்து தெறித்தது. இவன் அய்யோ என்று நகருவதற்கு முன் கூட்டத்தில் சென்ற ஒருவன் இவனைப் பார்த்து “நீ அவனா” என்று கேட்டான். அவன் கேள்வி புரிய கொஞ்ச நேரம் ஆயிற்று. இவன் ‘இல்லை’ என்று தலை ஆட்டினான். அவன் நம்பவில்லை என்று தோன்றியது. ஒருவேளை தன்னை அடிப்பார்களோ என்ற பயம் வந்தது. அந்தாளின் பின்னால் வந்தவன் அவனை ‘போ ! போ ! ‘ என்று நெட்டித் தள்ள அவன் இவனைத் திரும்பிப் பார்த்தவாறே போய் விட்டான்.

நல்ல வேளையாக ஊர்வலம் அந்த இடத்தைக் கடந்து சென்று விட்டது. கடைகளை மெல்லத் திறந்தார்கள். இவன் இரண்டு அட்டை டப்பாக்களில் அடைக்கப் பட்ட குளிர் பானங்களை வாங்கிக் கொண்டு திரும்பினான்.

அப்பா கோபமாக இருந்தார். “ஏன் இவ்வளவு லேட்” என்றார். அவர் கோபம் அலுவலகத்திலும் பிரசித்தம் போலும். அந்த பெண்மணி “பரவாயில்லை ஸார்” என்றாள். “பக்கத்துக் கடை இல்லேப்பா, ஏதோ ஊர்வலம் வேறே”. அந்த ஆள் “என்ன ஊர்வலம்?” என்றார். “தெரியவில்லை” என்றான்.

குளிர் பானம் குடிக்கவே வந்தவர்கள் போல் அவர்கள் குடித்த உடனே கிளம்பிப் போனார்கள்.

அம்மா உள்ளே வந்தாள். “சினிமா போலாமா” என்றாள்.

அவன் அரை டிராயரைக் கழட்டி விட்டு பேன்ட்டைப் போட்டுக் கொண்டான். அவன் நினைத்த மாதிரியே அப்பா “மூணு டிக்கட் வாங்கி வை” என்று தியேட்டார் பெயரைச் சொன்னார். அந்த தியேட்டருக்கு அடிக்கடி போனதில்லை.

“புதுப் படம்பா.”

“தியேட்டர் மேனேஜர் கிட்டே எங்க ஆபீஸ் பேரைச் சொல்லி என் பேரைச் சொல். டிக்கட் தருவார்”. என்று சொல்லிவிட்டு மேனேஜர் பெயரைச் சொன்னார்.

அவன் பணத்தை வாங்கிக் கொண்டு உல்லாசமாகக் கிளம்பினான். வாசலுக்கு வந்ததும் பக்கத்து வீட்டுப் பையன் “எங்கேடா? நானும் வரேன்” என்றான். “சரி உடனே வா.” எந்தப் படம், எந்த தியேட்டர் என்று சொன்னான். தான் பார்த்துவிட்டதாகவும், சும்மா தியேட்டர் வரை வருவதாகவும் கூறி இவன் தோளில் கையைப் போட்டுக் கொண்டான்.

அந்தத் தியேட்டர் அவர்கள் வீட்டிலிருந்து தூரமாக இருந்த ஒன்று. அவனுக்கு சைக்கிள் தெரியாது. இருவரும் நடந்தே போனார்கள். பேச்சு அந்தப் படத்தைப் பற்றியும் அதன் இயக்குனர் மற்றும் நடிக நடிகைகள் பற்றியும் இருந்தது.

தியேட்டர் வாசலில் பெருங்கூட்டம். இவர்கள் முண்டி அடித்துக் கொண்டு மேனேஜர் அறை எங்கே என்று கேட்டுக் கொண்டு உள்ளே போகப் பார்த்தார்கள். அந்தக் கூட்டம் இவர்களை லட்சியம் செய்யும் கூட்டம் இல்லை. ஓரு கார் வந்தது. அது உள்ளே போகக் கதவைத் திறந்த போது கூட்டமும் உள்ளே போயிற்று. இவர்கள் எப்படி உள்ளே வந்தார்கள் என்றே தெரியவில்லை. மெள்ள அலுவலக அறை போல் தெரிந்த ஒன்றின் அருகில் கொண்டு செல்லப் பட்டார்கள். அதன் கதவு மூடப் பட்டு இருந்தது. அதன் வாசலிலும் பெரும் கூட்டம் இருந்தது. அதன் கதவைத் திறந்துகொண்டு ஒருவர் ஒரு அலுமினியப் பெட்டியுடன் வேளியே வந்தார். கூட்டம் அவரைச் சூழ்ந்துகொண்டது. “எல்லாரும் கவுன்டருக்கு வாங்க” என்று சொல்லி விட்டு அவர் நடந்தார். கூட்டம் சற்று தூரத்தில் இருந்த கவுன்டரை நோக்கி நகர்ந்தது.

சுமார் பத்து பேர் அந்த அறை வாசலிலேயே நின்றனர். இவன் திறந்த கதவு வழியாக வேளியே வந்தவரிடம் “மேனேஜர் சார் இருக்காங்களா” என்றான். மேனேஜரின் பெயரைச் சொன்னான். அவர் உள்ளே போகுமாறு சைகை காட்டிவிட்டு போனார். இவர்கள் ஊள்ளே நுழைந்ததும் பாக்கிப் பேரும் உள்ளே நுழைந்தனர். அறைக்குள் இருந்த இருவரில் ஒருவர் பாக்கிப் பேரை வெளியே தள்ளி விட்டு, தானும் வெளியே போய் கதவை மூடினார். கதவிலிருந்த தாள் கதவை மூடும் போதே தானாகவே போட்டுக் கொண்டது.

கண்ணாடி போட்டுக் கொண்டு நெற்றியில் விபூதியோடு நாற்காலியில் அமர்ந்திருந்தவர்தான் மேனேஜராக இருக்கக் கூடும் என்று அவரிடம் போனார்கள்.

“சார்.”

என்ன வேண்டும் என்பது போல் பார்த்தார். அவன் அப்பா அலுவலகம் மற்றும் அப்பா பேரைச் சொன்னான்.

“இதே ரோதனயாப் போச்சு” என்றார் அவர். பிறகு “எத்தனை டிக்கட் வேண்டும்” என்றார். “மூணு” என்றான் அவன்.

“எதுக்கு மூணு நீங்க ரெண்டு பேர்தானே இருக்கீங்க?”

“அப்பா அம்மா வந்துட்டே இருக்காங்க. இவன் வரலை” என்று நண்பனைக் காட்டினான்.

அவர் மூன்று டிக்கட்களைக் கொடுத்தார். இவன் பணத்தைக் கொடுத்தான்.

அதே நிமிஷம் கதவு தட தடவென்று இடிக்கப் பட்டது. அவர் எழுந்து ஒரு நாற்காலியை கதவருகில் போட்டார். “இதே ரோதனையாப் போச்சு” என்றார்.

“டேய் கதவைத் திறடா” என்று பல பேர் கத்தினார்கள்.

“நாலே நாலு டிக்கட் கொடுத்துவிட்டு ஹவுஸ் ஃபுல்லாடா நாயே” “கதவைத் திறடா” “அந்த ரெண்டு நாயிங்களுக்கு மட்டும் எப்படிடா டிக்கட் கொடுத்தே.” “டேய் நாயிங்களா. வெளிலே வாங்கடா பார்க்கலாம்” என்று பலவாறு கூச்சல்கள் கேட்டன. அவனுக்கு பயம் தாங்க முடியவில்லை. கதவு பெயர்ந்துவிடும் போல் இருந்தது.

வெளியிலிருந்து ஒரு குரல் ஒரு ஜாதிப் பெயரைச் சொல்லி கூடவே நாயிங்களா வெளியே வாங்கடா என்று இரண்டு மூன்று ஆபாச சொற்றோடர்களைக் கத்தியது. இன்னும் பல பேர் அதில் சேர்ந்து கொண்டார்கள்.

ஒரு கதவின் மேல் தழ்ப்பாள் பிய்த்துக் கொண்டது. மேனேஜர் “இதைப் பிடிங்கப்பா” என்று சொல்லவும் அவர்கள் அவர் காட்டிய மேஜையைப் பிடித்துக் கொண்டார்கள். மூவரும் அதை நகர்த்தி கதவுக்கு அண்டக் கொடுத்தார்கள்.

அவன் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. அவன் சிநேகிதனும் பயத்தில் வெளிறிப் போயிருந்தான். மேனேஜர் இதெல்லாம் சகஜம் என்பது போல் ஒரு சமயம் தோற்றமளித்தாலும் “ரோதனை ரோதனை” என்று திரும்பத் திரும்பச் சொன்னார்.

அந்த அறைக்கு இருந்த ஒரே சன்னல் அடைத்து சாத்தப் பட்டிருந்தது.

ஒரு ஸ்டூலின் மேலிருந்த ஃபோனை எடுத்து அவர் டயல் செய்தார். தியேட்டர் பேரைச் சொல்லிவிட்டு “கொஞ்சம் கலாட்டாவா இருக்கு” என்றார்.

எதிர் முனையில் என்ன சொன்னார்களோ “எந்த ஷோவுக்கு சார்” என்று கேட்டு விட்டு “உங்களுக்கு இல்லாமயா சார். எப்ப வேணா வாங்க”. என்றார்.

மேஜையும் சேரும் நகர்ந்தன. மேனேஜரும் இவர்கள் இருவரும் மேஜையின் மறு பக்கத்திலிருந்து அதைக் கதவை நோக்கித் தள்ளினார்கள். அதற்குள் வெளியே கூட்டத்தில் யாரோ ஒருவர் கீழே விழுந்து பலமான அடி பட்டு விட்டது போலிருக்கிறது. “கண்ணு தெரியலையா பேமானிங்களா” என்று அங்கு ஒரு புதிய சண்டை ஆரம்பம் ஆகி விட்டது.

ஐந்து நிமிடத்தில் வெளியே கலாட்டா சுத்தமாக நின்று விட்டது. ஒரு குரல் “கதவைத் திறய்யா” என்றது. மேஜையையும், சேரையும் நகர்த்திவிட்டு, பின் மேனேஜர் கதவைத் திறந்தார். ஒரு ஆள் நின்று கொண்டிருந்தார். அவர் தோரணையும், மிடுக்கும் அவர் மஃப்டியில் இருக்கும் போலிஸ் என்பதைக் காட்டின. “ஏன்யா. புதுப் படத்துக்கு கொஞ்சமாவது டிக்கட் விக்கக் கூடாதா? அத்தனையையுமா ப்ளாக்குலே விப்பீங்க” என்றார். “சரி ஒவ்வொரு கவுன்டருக்கும் அம்பது டிக்கட்டாவது பப்ளிக்குக்குக் கொடுங்க” என்றார். “எல்லாரும் ப்ளாக்கிலேயே வாங்கிப்பாங்க சார்” என்றார் மேனேஜர்”. “நீ ஒதை பட்டு சாகணும்னு..” என்று பேச்சு தொடர்ந்து கொண்டிருக்கும் போதே இவர்கள் இருவரும் மெள்ள வெளியே வந்துவிட்டார்கள். டிக்கட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கூட்டம் எல்லாம் கவுன்டர்களின் முன் நின்றது.

நண்பன் விடை பெற்றுக் கொண்டான். ஒன்றும் பேசவில்லை. இவன் தியேட்டருக்கு வெளியே வந்து நின்றான். பயத்தின் கேவல் இன்னமும் மனதில் இருந்தது.

தியேட்டர் எதிரில் ஒரு சிறிய பாலம். ஆனால் அகலமானது. எல்லா வாகனங்களும் அதன் வழியாகத்தான் வர வேண்டும், போக வேண்டும். ஒரு சைக்கிள் ரிக்ஷா பாலத்தின் எதிர் முனையில் தென் பட்டது. அது மேலே மேலே ஏறி வருகையில் அதில் அப்பாவும் அம்மாவும் அமர்ந்திருப்பது தெரிந்தது. சில நிமிடங்களில் படம் பார்க்கப் போவது குதூகலமாக இருந்தது.

– சொல்வனம், ஆகஸ்ட் 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *