அவள் பெயர் நீரஜா. மொபைலில் பேசி நேரம் குறித்துவிட்டு என் வீட்டிற்கு வந்தாள்.
சோபாவில் வசதியாக அமரச்செய்தேன்.
வயது இருபத்தைந்து இருக்கலாம். நாகரீகமாக பளிச்சுன்னு துடைச்சு விட்டமாதிரி இருந்தாள்.
“நான் உங்களின் கதைகள் அனைத்தையும் தொடர்ந்து படிக்கிறேன். குறிப்பாக ‘பெண் என்பவள்’ கதையைப் படித்தபிறகு உங்களை நேரில் பார்த்துப் பேசவேண்டும் என்பது என் நெடுநாளைய விருப்பம்…”
“மகிழ்ச்சி.”
“சில முக்கியமான விஷயங்களைப் பேச வந்திருக்கிறேன். நான் எதைப்பற்றி பேசினாலும் தங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இருக்காதே?”
“எந்த ஆட்சேபனையும் கிடையாது… நீங்கள் தாராளமாகப் பேசலாம்.”
நீரஜா சிறிது நம்பிக்கையுடன் நிமிர்ந்து உட்கார்ந்தாள். தான் பேச வந்திருக்கும் விஷயங்களை மனத்துள் ஓர் ஒழுங்கில் வரிசைப் படுத்திக்கொள்வதுபோல யோசித்தாள்.
“சார்… என்னுடைய சின்ன வயதிலிருந்தே சினிமாக்கள் அதன் நடிகை நடிகர்கள் மீது எனக்கு அதிகமான ஈடுபாடு உண்டு.”
“நல்லது.”
“நடிகைகளில் பலர் ஏற்கனவே திருமணமான ஒருத்தரிடம் காதல் வயப்படவும், இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படவும் சம்மதிக்கிறார்களே, அதன் பொதுவான மனப் பின்னணி என்ன?”
“இது நடிகைகளுக்கு மட்டுமே உரித்தான சுபாவம் இல்லை. மற்ற பெண்கள்கூட அம்மாதிரியான காதலில் ஈடுபட்டு இரண்டாம் மனைவியாகச் சமூகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.”
“ஆனால் நான் கேட்க வந்தது…”
“ப்ளீஸ் வெயிட்…. இரண்டாம் மனைவியாக வாழ்க்கைப் படுகிற பொதுவான மனப் பின்னணியாக எந்த உண்மைகளை நாம் இப்போது காணப் போகிறோமோ, அதே உண்மைகள் மற்ற பெண்களுக்கும் பொருந்தும் என்பதுதான்.”
“உண்மைதான்.”
“பகட்டாக திரையில் ஜொலிக்கிற நட்சத்திரங்கள், வாழ்க்கையின் யதார்த்தங்களில் சலித்துக் கசந்து போயிருக்கிற லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ஒரு உணர்வுச் சுகத்தைத் தருகிற ஒரு கிலேசப் பொருளாகப் பாவிக்கப்பட்டு விடுகிறார்கள் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?”
“ஒப்புக்கொள்கிறேன்…”
“ஸோ… லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ஒரு சினிமா நட்சத்திரத்திடம் ‘உணர்வு உறவு’ ஒன்று மனத்தில் வலிமையாகக் கட்டுமானம் செய்யப் பட்டுவிடுகிறது..”
“ஸாரி… உணர்வு உறவு என்றால் என்ன?”
“இமேஜ்.”
“ஓ… புரிகிறது.”
“லட்சக் கணக்கான ரசிகர்களின் இந்த இமேஜ்தான் ஒரு சினிமா நட்சத்திரத்தின் பாதுகாப்பு…”
“அதாவது செக்யூரிட்டி…”
“எஸ். செக்யூரிட்டி. இந்த இமேஜ் எப்போதுமே உண்மைக்கு அப்பாற்பட்டது. இந்த இமேஜ் வெறும் கானல்நீர் என்கிற உண்மையும் நட்சத்திரங்களுக்குப் புரிந்திருப்பதால், அதே இமேஜ் அவர்களுக்கு ஒரு இன்செக்யூரிட்டியையும் ஏற்படுத்தி விடுகிறது!”
“………………………..”
“அதனால் இமேஜ் என்ற விஷயத்தில் செக்யூரிட்டி, இன்செக்யூரிட்டி என்ற இரண்டையும் மிக அதிகமாகவே அனுபவிக்கிற அளவுக்கு அவர்களின் வாழ்க்கை ஒரு பெரிய காம்ப்ளெக்ஸ் ஆகிவிடுகிறது. காம்ப்ளெக்ஸ் ப்ரீட்ஸ் மோர் கம்ப்ளிகேஷன்ஸ்…”
“யெஸ்.. யெஸ். ப்லிம் ஸ்டார் இஸ் எ சிம்பல் ஆப் இன்செக்யூரிட்டி…”
“இதுவரைக்கும் புரிகிறது இல்லையா?”
“யெஸ்…!”
“குட்… இப்போது சினிமாவைத் தள்ளிவிட்டு, திருமணமான ஆண் என்கிற விஷயம் பற்றிப் பார்ப்போம். எந்தச் சமூகத்திலும் திருமணம் என்கிற கான்செப்ட் இருக்கிறதே – அது மனித மனநிலையில் மிக முக்கியமானதொரு சதுக்கம். ஒரு பெண்ணுக்கு ஆண்; ஒரு ஆணுக்குப் பெண் என்கிற உரிமையை ஏற்படுத்தித் தருகிற சாதனம் திருமணம். கணவன் மனைவியாகச் சேர்ந்து தம்பதியாக வாழ்தல் என்கிற சோஷியல் வேல்யூ நம் சமுதாயத்தில் மிகவும் மதிக்கப் படுகிறது.
“உண்மைதான்.”
“என்னுடைய நண்பன் நரசிம்மன் தன் இருபது வயது மகளை திருமணமாகாத வாலிபர்களுடன் பழக விடமாட்டான். ஆனால் பக்கத்துவீட்டுக்குச் செல்லும் அவளைத் தடுக்க மாட்டான். ஏனென்றால் அங்கு கல்யாணமான தம்பதிகள் இருகின்றனர். ஒரு கல்யாணமான வாலிபனால் தன் மகளுக்கு ஆபத்து இல்லை; ஆனால் கல்யாணமாகாத வாலிபனின் எதிரில் மகள் நிற்பதுகூட ஆபத்தாம்… இது எப்படியிருக்கு? இம்மாதிரி மனநிலையில்தான் நாம் இருக்கிறோம்.
“அப்படியானால் கல்யாணம் ஆனவன் என்பதற்காக ஒருத்தனை நம்பிவிடக் கூடாது என்று சொல்கிறீர்களா?”
“ஹலோ நீரஜா, கல்யாணமானவனை நம்பலாமா கூடாதா என்ற கேள்விக்கு நாம் இப்போது பதில் தேடிக் கொண்டிருக்கவில்லை… “
“ஐயாம் சாரி…”
“கல்யாணம் என்பது வெறும் ஒரு சம்பவம். ஆனால், அது ஒரு சோஷியல் வேல்யூவாக, கான்செப்டா, ஒரு கற்பனை வடிவமாகத்தான் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறதே தவிர, அடிப்படையில் அப்படியொரு பாகுபாடு இல்லை. அப்படியொரு பாபாகுபாட்டை நாம் வெறுமனே கற்பனையில் கொண்டிருக்கிறோம். அந்தக் கற்பனைதான் என் நண்பர் நரசிம்மனை கல்யாணமானவன் என்கிற ஒருவனை நம்ப வைத்தது. இப்படியொரு நம்பிக்கையை கொண்டிருப்பது ஒரே ஒரு நரசிம்மன் இல்லை. பல கோடி நரசிம்மன்கள்”
நீரஜா ஒரு இறுக்கமான முகத்தில் காணப்பட்டாள்.
“சினிமா நடசத்திரம் என்பதே ஒரு சிம்பல் ஆப் இன்செக்யூரிட்டி என்று நாம் பார்த்தோம். அப்படியிருந்தும் எந்த நிமிஷமும் கலைந்துவிடக் கூடிய மாயாபஜார் போன்ற ஒரு பேன்டஸியில் மிதக்கவும், மக்களின் இமேஜ் தருகிற போதையில் சஞ்சரிக்கவும், இவர்கள் இத்தனை வேட்கை கொண்டு எதை எதையெல்லாமோ பணயம் வைத்து, என்னென்ன தந்திரங்களாலும் துரோகங்களாலும் நட்சத்திர வாழ்க்கையைத் தக்க வைத்துக்கொள்ளத் துடிக்கிறார்கள் என்றால், அதற்கு மூல காரணம் – அவர்களின் அன்றாட வாழ்க்கை மிக மிகக் கசப்பானதாக, அவலம் மிக்கதாக, துக்கம் மண்டியதாக, வெறுமை கவிந்ததாக, இருளில் முடங்கிப் போயிருப்பதனால்தான். இருளோடு இருளாக ஒன்றி ஒருமித்து விட்டால், இருள் என்பதே இல்லாமல் போகிறது. இந்த உண்மையைக் காண முடியாமல் இருட்டிலிருந்து தப்பிக்க பொய் வெளிச்சங்களைத் தேடித்தேடி எங்கே எவ்வளவு தூரம் ஓடினாலும் இருள் கூடவேதான் வரும்.”
“…………………………..”
“…ஸோ பொய் வெளிச்சத்தை நோக்கி ஓடுகிற இருண்ட வாழ்க்கைதான் ஒரு சினிமா நட்சத்திரத்தின் அன்றாட வாழ்க்கை! அதனாலேயே வேறு எவருக்கும் இல்லாத இன்செக்யூரிட்டி ஒரு சினிமா நட்சத்திரத்தின் மீது மிகக் கனமாகப் படிந்திருக்கிறது. அதிலும், நடிகரைவிட ஒரு நடிகைக்கு இன்செக்யூரிட்டி இன்னும் பலமடங்கு அதிகம். அது நடிகையின் வீட்டு ஆண்களால் அல்லது தந்தையால் ஏற்பட்டதாக இருக்கும்.”
“எக்ஸாட்லி…”
“நம் சமூக அமைப்பில் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முதல் செக்யூரிட்டியாக விளங்குபவன் ஓர் ஆண்தான். அந்த ஆண் தந்தை என்கிற ஸ்தானத்தை வகிக்கிறவனாக அமைகிறான். ஸோ… தந்தை செக்யூரிட்டியாக அமைகிறபோது தாய் என்பவள் அன்பு என்பதாக அமைகிறாள். இந்த இரண்டு அச்சுக்களின் மீதுதான் நம் எல்லோருடைய வாழ்க்கையும் ரம்மியமாகச் சுழல ஆரம்பிக்கிறது, அச்சுக்கள் செம்மையாக இருக்கும் வரையில்!”
“இவற்றில் ஏதேனும் ஒரு அச்சு சீர்கெடும் பொழுது அதற்கேற்ப எதிர் விளைவுகளும் மன நிலையில் ஏற்படுகின்றன. பெரும்பாலான நடிகைகளின் வாழ்க்கையைக் காணும்போது, அவர்களின் மன நிலையில் தந்தை என்ற பாதுகாப்பு மிக மோசமாகச் சிதைந்து நொறுங்கிப் பாழ்பட்டுப் போயிருக்கிறது. ஆண் என்ற செக்யூரிட்டி அந்தப் பெண்களின் வீட்டில் ஒளிகுன்றியோ அல்லது அணைந்தோ போயிருக்கிறது. ஒளி குன்றிப்போன இடத்தில் இருள்தானே? ஸோ, அப்பெண்கள் அந்த மன இருளிலிருந்து தப்பிக்க தனக்கென ஒரு ஆதர்ஸ ஆடவனைத் தேடி ஓடுகிறார்கள்…”
நீரஜாவின் முகத்தில் வெளிச்சம் பரவியது.
“அவர்களின் ஆதர்ஸ ஆடவன் என்பது அனேகமாக ஆதர்ஸ தந்தை என்பதுதான். நடிகைகளின் அடிமனசு அப்படிப்பட்ட ஒரு மனிதனுக்காக அலைபாய்கிறது; ஏங்கித் தவிக்கிறது. மணம் புரிந்து மனைவியோடு வாழ்பவனை அங்கீகரிக்கிற அளவுக்கு, மணம் புரிந்துகொள்ளாமல் வாழ்கிறவனை இந்த நரசிம்மன்களின் உலகம் அங்கீகரிப்பதில்லை என்று நாம் பார்த்தோம். மணமானவன் ஒரு பெண்ணின் கணவனாக; குழந்தைகளின் தகப்பனாக; பொறுப்புள்ள குடும்பஸ்தானாகத் தெரிகிறான். காரணம் வெறும் இமேஜ். ஒரு சாதாரண நரசிம்மனுக்கே இப்படியொரு இமேஜ் இருக்கும்போது – அன்றாட வாழ்க்கையில் சீரழிந்து போய்விட்டதாலேயே நடிகையாகிப் போன ஒரு பெண்ணுக்கு ஒரு மணமான குடும்பஸ்தன் எத்தனை வலிமை மிக்க பிரமாதமான இமேஜாகத் தெரிவான்? யோசித்துப் பாருங்கள்.”
நீரஜா உதடுகளை இறுகக் கடித்தாள்.
“எங்கே உண்மை கசக்கின்றதோ, அங்கே இமேஜ் தேவைப்படுகிறது. அதனால்தான் ஒரு நடிகைக்கு ஒரு பெண்ணின் கணவனாக, சில குழந்தைகளின் தகப்பனாகப் பரிச்சயமாகும் ஒரு ஆடவன், அவளின் ஆதர்ஸ மனிதனாக, சீலம் மிக்க பொறுப்புள்ள குடும்பஸ்தனாகத் தெரிகிறான்.
“ஒரு நடிகைக்குத் தேவை அப்படிப்பட்டதொரு புருஷன்தான்! அப்படிப்பட்டதொரு ஆடவன் அவர்கள் குடும்பத்தில் இல்லாமல் போய்விட்டதால் ஏற்பட்டது ஒரு இம்சை மிக்க வலி, ரணம், சீழ் கொட்டும் காயம். இதற்கு அவர்கள் விரும்பும் மருந்து ஒரு பொறுப்புள்ள திருமணமான ஆண். அவ்விதம் மணமான ஆடவன்மேல் காதல் வயப்பட்டு அந்த ஆடவனையே மணந்து கொண்டிருக்கும் நடிகைகளின் வாழ்க்கையை நீங்கள் ஊன்றிக் கவனித்தால் இந்த உண்மையை நிச்சயமாகக் காணலாம். ஒன்று, அப்படிப்பட்ட நடிகைகள் பால்யத்திலேயே தங்கள் தந்தையை இழந்திருப்பார்கள் அல்லது அவர்களின் வாழ்க்கையில் தந்தை என்ற இமேஜ் மிக மோசமாக அடிபட்டுச் சிதைந்து போயிருக்கும்.”
நீரஜாவிடமிருந்து பலத்த விம்மல் வெடித்தது.
கண்களை மூடியபடியே சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்த அவளை மெல்லிய குரலில் கேட்டேன்:
“நீங்கள் நடிகைகளின் காதலைப் பற்றிப் பேச இங்கு வரவில்லை. அவர்களை முன்னிறுத்தி, கல்யாணமான ஒருத்தரைக் காதலிக்கும் உங்களின் தனிப்பட்ட மன சஞ்சலத்தை நிவர்த்தி செய்துகொள்ள வந்துள்ளீர்கள்… அதை மறைக்காமல் ஒப்புக்கொள்ளுங்கள்.”
“………………………..”
திருமணமான ஒர் ஆடவனிடம் நான் கூறிய காரணங்களுக்காகவே நீரஜா காதல் வயப்பட்டிருக்கும் உண்மை எனக்குத் துல்லியமாகத் தெரிந்தது.
இருவரும் எழுந்து நின்றோம்.
“ஆல் த பெஸ்ட் நீரஜா.” என்றேன்.
கண்களைத் துடைத்தபடி விடை பெற்றாள்.
Don’t publish these kind of stories. In fact, there is no story at all and nothing to impress from the above drama. You can’t title this as short story, family story and what not.