கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: March 19, 2013
பார்வையிட்டோர்: 12,846 
 

“கார்த்தி, டுமர்ரோ நதொ கார்ல்ஸ்க்ரோனா சர்ச்சுக்கு வஸ்தாவா?” இப்படி கேட்டது வாசுகிரெட்டி.

பழைய காதல்களில் ஒன்று இந்நாளைய காதலியின் மூலம் நினைவுப்படுத்தப்படும் பொழுது , அதுவும் எந்த விசயத்திற்காக விலகினோமோ அதே விசயத்தின் வாயிலாக ஞாபகப்படுத்தப்பட்டால் கொஞ்சம் அசூயையாகவே இருக்கும்.

ஆந்திரா பழைய முதலமைச்சர் ராஜசேகரரெட்டி வகையில் வாசுகிரெட்டியும் கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவள்.

“நீங்க எல்லாம் ஏன் சர்நேம் வச்சுக்க மாட்டுறீங்க” ஒருநாள் வாசுகி என்னிடம் கேட்டாள்.

“ராமச்சந்திரன் அப்படின்னு எங்க அப்பாபேரை பின்ன வச்சிருக்கேனே, அதுதான் சர்நேம்”

“அதி லேது, ராவ், ரெட்டி, நாயுடு, சவுத்ரி, துடுக்கலா, ராஜூ, டோண்ட் யு ஹெவ் சர்நேம் லைக் திஸ்? ”

இவை எல்லாம் குடும்பப்பெயர்கள் அல்ல, சாதிப்பெயர்கள் என சொல்ல நினைத்ததை அவளிடம் சொல்லவில்லை. முன்பு ஜெனியிடம் ஒட்டுமொத்தமாக அல்லேலூயா என கேலியாக பேசியபோது ஆரம்பித்த சின்ன சண்டை 18 மாதங்களுக்குப் பிறகு என் வாழ்க்கையில் அதிகமாக வெறுப்பவன் நீ தான் எனச் சொல்லி பிரிவில் முடிந்தது.

அதனால் வாசுகிரெட்டியிடம் முற்போக்கு குரலை எல்லாம் காட்டாமல் சிரித்து விட்டு லக்‌ஷ்மணனின் சதத்தைப் பற்றி சொல்லி அன்று பேச்சை மாற்றிவிட்டேன்.

வாசுகிரெட்டி திடீரென தேவாலயத்திற்கு கூப்பிட்டதனால், ஜெனி அவள் சம்பந்தப்பட்ட விசயங்கள் எல்லாம் ஆறு வருடங்களுக்குப்பிறகு ஒன்றன்பின் ஒன்றாக வந்து போயின. ஜெனி கிறிஸ்தவப் பெண் எனத் தெரிந்தும் தான் பழக ஆரம்பித்து இருந்தேன். நேசிக்க ஆரம்பித்த இரண்டாவது மாதத்தில் அவளுடன் ஞாயிறு அன்று விருகம்பாக்கத்தில் இருக்கும் சர்ச்சிற்கு வர முடியுமா எனக் கேட்டாள். 10 வருடங்கள் கத்தோலிக்கப் பள்ளியில் படித்து இருந்ததால் அது ஒரு பிரச்சினையாக தெரியவில்லை.

வெள்ளை வண்ணம் அடிக்கப்பட்ட உயர்ந்த கோபுரம், மாலையில் விழும் அதன் நிழல், அழகான மரபெஞ்சுகள், குழந்தை ஏசுவுடன் மேரி மாதா, சிலுவையில் அறையப்பட்ட ஏசு சொரூபாங்கள் நிறைந்த கத்தோலிக்க தேவாலயங்கள் மன அமைதிக்கான ஒரு தேடலாகவே பள்ளிக்காலங்களில் அமைந்திருந்தது. எட்டாம் வகுப்பில் தொடர்ந்து முதல் இடம் பிடிக்க மேரிமாதாவிடம் பிரார்த்தனை செய்ததால் தான் எனத் தோன்றியதால் ஸ்தன்ஸ்லாஸ் கார்த்திகேயனாக மாறிவிடலாம் எனக்கூட நினைத்திருக்கின்றேன்.

பூர்வீகம் கொரடாச்சேரியானதால் வீட்டில் எப்பொழுதும் ஒரு மாதா சிலை இருக்கும். ஸ்தனிஸ்லாஸ் கார்த்திகேயன் என நோட்டுப்புத்தகத்தில் எழுதி இருந்த மறுநாளில் இருந்து அந்த சிலை எங்கள் வீட்டு சாமி மாடத்தில் இருந்து காணாமல் போனது

பள்ளி நினைவுகளை மீட்டெடுக்கலாம் என விருகம்பாக்கம் சர்ச்சிற்கு சென்று ஜெனியின் கைபேசிக்கு அழைத்தால் ,

”உன்னை யாரு அந்த சர்ச்சுக்குப்போக சொன்னா, அப்படியே அதே ரோட்ல வா, லெஃப்ட்சைட் ஒரு பெந்தகொஸ்தே சபைன்னு போட்டிருக்கும், அதுதான் எங்க சர்ச்”

ஜெனி சொன்ன இடத்திற்குபோனேன், கீழே ஒரு மளிகைக்கடை, சின்ன டெய்லர்கடை, மாடியில் சின்ன கூரை வேயப்பட்டு பெந்தகோஸ்தே சபை எனபோட்டிருந்தது. படியேறி மேலேப்போனபொழுது கிராமத்துத் தோற்றத்துடன் ஆனால் நாகரிகமாக வண்ண உடை உடுத்தி போதனை செய்து கொண்டிருந்தார். பெண்கள் தலையில் முக்காடிட்டு அவர் சொல்வதை வேதவாக்காக கேட்டுக்கொண்டிருந்தனர். முகப்பொலிவில் இருந்து எல்லோரும் அடித்தட்டு மக்கள் எனத் தெளிவாக தெரிந்தது. மெல்ல ஜெனியின் அருகில் போய் அமர்ந்து கொண்டு , அந்த சிறிய அறையில் இருந்த தலைகளை எண்ணினேன். நாற்பதுக்கும் மேலே வந்தவுடன் எண்ணுவதை நிறுத்திவிட்டு,

ஜெனியிடம் “இதுதான் உங்க சர்ச்சா” வார்த்தைகளில் இருந்த ஏளனத்தைக் கண்டு கொண்ட ஜெனி முறைத்தாள். ஒழுங்காகப்போய் கொண்டிருந்த பிரார்த்தனையில் சடாரேன எல்லோரும் திடீரென அப்பா எங்களைக் காப்பாற்று என ஆரம்பித்து, சாத்தானின் பிடியில் இருந்து எல்லோரும் விடுபட்டும், சாத்தானின் கட்டிடங்கள் இடியட்டும், சொரூப வழிபாடுகள் நாசமாய் போகட்டும் எனத் தொடர்ந்து ஓலமிட ஆரம்பித்தனர். எல்லோரும் கத்தி வழிபாடு முடிந்தபின்னர் சீக்கிரம் ஜெனியை அழைத்துக்கொண்டு வெளியே கிளம்பலாம் என நினைத்தால், காணிக்கை என ஒரு சுருக்குப்பை வலம் வந்தது. ஜெனி நூறு ரூபாய் போட்டதால் நானும் நூறு ரூபாயைப் போட வேண்டியதாகிற்று.

மாயாஜால் போகும் வழியில் “அது என்ன ஜெனி, பிரே பண்ணிக்கிட்டு இருக்கிறப்ப “ கலகல புல அபகம ஜலகில என எல்லோரும் ஏன் உளர்றீங்க”

”அது அந்நிய பாஷை, ஆண்டவர் மனசில இறங்குற நேரம் அது”

“இது அல்லேலூயா சர்ச்னு தெரிஞ்சிருந்தா நான் வந்தே இருக்க மாட்டேன், ஜெண்டிலா பிரே பண்ணிட்டு போறதைவிட்டுட்டு எதுக்கு இதை எல்லாம் சர்ச்சுன்னு சொல்லிக்கிட்டு… டிஸ்கஸ்டிங்” எனச் சொல்லி முடிப்பதற்குள் வண்டிய நிறுத்த சொன்னாள். நிறுத்தியவுடன் என்னுடன் ஏதும் பேசிக்கொள்ளாமல் ஒரு ஆட்டோவைப்பிடித்து போய்விட்டாள்.

”நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கின்றேன்” என ஜெனிக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியபின்னர் அவள் சமாதானம் ஆனாலும் எனக்கு என்னவோ ஜெனியின் அதீத ஆண்டவர் ஈடுபடு பிடிக்காமாலே இருந்தது. தற்பொழுதும் நாத்திகன் என்றாலும் இப்பொழுது இருக்கும் பரந்த பார்வை அப்பொழுது கிடையாது. அவள் எனக்காக நெற்றி பொட்டு வைத்துக்கொள்வாள், நான் அவளுக்காக ஞாயிறு தோறும் அந்த அல்லேலூயா குடிசைக்குப்போவேன் என உடன்பாடு ஏற்பட்டது.

அந்த ஜெபக்கூட்டத்திற்கு வருபவர்களின் பெயர்கள் எதுவுமே கிறிஸ்தவப்பெயர்கள் கிடையாது. மனதளவில் ஏசு சாமியை கும்பிடுபவர்களாகவும் பெயரளவிலும் ஏட்டளவிலும் இந்துக்களாக இருப்பவர்கள். படிப்பு வேலைவாய்ப்பு இவற்றில் இடப்பங்கீடு என்பதற்காக இந்துக்களாக இருக்கவேண்டிய கட்டாயம். கருப்புசாமியைக் கும்பிடுபவன் வெள்ளைக்கார ஏசுவை வழிபட ஆரம்பித்தால் ஒரேநாளில் வாழ்வாதாரம் மாறிவிடுமா என்ன?
அப்பாவி மக்களின் மேல் கோபம் இல்லை, மக்களை மந்தைகளாக்குபவர்கள் மேல்தான் கோபம்.

“கார்த்தி, உனக்குத் தெரியுமா, பைபிள்ல இல்லாத விசயங்களே கிடையாது”

“ அப்படியா , தெர்மோ டயனமிக் லாஸ் எல்லாம் சொல்லி இருக்கா” வழக்கம்போல ஜெனி முறைத்தாள்.

“ஆமாம் ஜெனி, ஒரு டவுட், கிறிஸ்மஸ் டே அன்னக்கி, உங்க பாஸ்டர் ஒரு வெள்ளைக்காரனைக் கூட்டிட்டு வந்து எல்லோரைடையும் போட்டோ எடுத்துட்டாரே, அன்னக்கி செம கலெக்‌ஷன் போல, எப்படியும் தலைக்கு நூறு டாலர்னு இரண்டு லட்சமாவது உஷார் பண்ணியிருப்பாரு”

”எவ்ளோ சீப்பா யோசிக்கிற, அவரை மாதிரி ஒரு ஜெண்டில்மேன் கிடையாது தெரியுமா”

“அந்த ஜெண்டில்மேன் முகப்பேர்ல இரண்டு கிரவுண்ட்ல டியுப்லெக்ஸ் வீடு கட்டிட்டு இருக்காரு”

“புல்ஷிட், அது அவரு ஏஜிஎஸ் ஆபிஸ்ல வேலை செஞ்சு கட்டுறது”

ஏஜிஎஸ் அலுவலக குமாஸ்தாவிற்கு அத்தனை பணம் ஏது எனக்கேட்டால் அன்றைய முத்தம் கிடைக்காது என்பதால் விவாதத்தை விட்டுவிட்டேன்.

ஏற்கனவே இருக்கிற தெய்வத்தை நெருங்கவே முடியாது. சரி வெள்ளைக்காரன் கொண்டு வந்த தெய்வத்துடன் பேசலாம் என்றால், முன்னர் இவர்களை ஆண்டவர்கள் அந்த ஆண்டவனின் ஆலயத்திலும் முன் வரிசைக்கு வந்துவிட்டார்கள். எதையாவது கும்பிட்டு விடிவு வந்து விடாதா என வரும் அடித்தட்டு மக்களை அந்த அல்லேலூயா பாஸ்டர் தசமபாகம் என்ற பெயரில் சிறுகசிறுக கொள்ளை அடித்துக்கொண்டிருந்தார். இந்த மரியாதை விகுதி அவரின் வயதிற்காக. அவருக்கு என் வயதில் ஒரு தம்பி, ஜெனி வரும்பொழுதெல்லாம் அவன் வாய் முழுக்கப் பல்லாக இருக்கும். சிலமுறை ஜெனியை அவன் அலுவலகத்தில் இறக்கிவிடுவதைப் பார்த்து கண்டித்திருக்கின்றேன்.

“உனக்கு எதுக்கெடுத்தாலும் சந்தேகம், நாளைக்கே என் அண்ணனோட போனாக்கூட சந்தேகப்படுவ போல”

“கண்ட பரதேசிப்பயலோடு வந்து இறங்கிற, கேள்வி கேட்காம கொஞ்சுவாங்களா”

பரதேசி என நான் சொன்னது பற எனத்தொடங்கும் சாதிப்பெயராக அவள் காதில் விழுந்துவிட்டது போல.

“ஆமா நானும் அந்த சாதிதானே , தெரிஞ்சுதானே , லவ் பண்றே”

நான் சொல்ல நினைக்காததை சொல்லுவதாக, அத்தனை பேர் முன்னிலையில் அலுவலகத்தில் அவள் கத்தியபின்னர் எனக்கும் ரத்தம் கொதித்தது.

“ஆமாண்டி, பேச்சுக்கு பேச்சு யேசப்பா யேசப்பான்னு சொல்லு, சர்டிபிகேட்ல மட்டும் இன்னும் ஹிண்டு போட்டு எல்லா பெனிபிட்ஸ் வாங்கிக்கோ” அதுதான் அவளிடம் நான் கடைசியாகப் பேசியது. கடலூர் பக்கத்தில் ஒரு குக்கிராமத்தில் இருந்து முதல் தலைமுறையாய் படித்து சாராய வாடையில் இருந்து வெளியே வந்து இருப்பவளை எப்படிக் காயப்படுத்தி இருக்கும் என அன்று நான் உணரவில்லை. இரண்டாவது நாள் அவள் ராஜினாமா செய்தாள். அதற்கடுத்த வாரம் நானும் வேலையை உதறிவிட்டு பெங்களூர் வந்தேன்.

போன வருடம் பெங்களூர் வாழ்க்கையும் போரடிக்க எல்லாவற்றையும் விட்டுவிட்டு சுவீடனுக்குப் படிக்க வந்துவிட்டேன். வந்த இடத்தில் தான் சுந்தரத் தெலுங்குப்பெண்ணிடம் ஒரு ஈர்ப்பு. கிட்டத்தட்ட 6 வருடங்களுக்குப்பிறகு ஒரு பெண்ணிடம் பாலியல் ஈர்ப்புக்கு அப்பாற்பட்ட நேசம். இடைப்பட்ட பெங்களூர் காலத்தில் வரலாற்றில் கடவுள்கள் எப்படி வர்த்தக மேம்பாட்டிற்கும் வியாபர அபிவிருத்திக்கும் ஆட்சிகளைக் காப்பாற்றிக்கொள்ள எப்படி எல்லாம் உதவி செய்து இருக்கிறார்கள் என்பதை ஒரு ஆராய்ச்சி நூல் எழுதும் அளவிற்கு படித்து வைத்திருந்தேன்.

ஆண்டவர்களால் சொர்க்கத்தில் இருந்து முதல் அச்சில் வெளியிடப்பட்டு வானத்தில் வீசப்பட்ட பின்னர் , டெண்டுல்கரைப்போல அதைப்பிடித்துக் கொண்டு எப்படி இன்று வரை தங்களது வியாபரத்தை நங்கூரமிட்டு வைத்திருக்கும் இறைத்தூதர்கள் , அவர்களின் இன்றைய தரகர்கள் ஆகியோரிடம் இருந்து எத்தனையோ கற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது என்பது மட்டும் விளங்கியது. ஜெனியைப் பற்றி விபரம் இல்லை. பாஸ்டர் சகோதரர்கள் சிறிய அளவிலான யேசு அழைக்கிறார் கூட்டங்கள் நடத்தி பெரிய அளவில் பெங்களூர் கோரமங்களாவில் ல் வீடு கட்டுகின்றனராம்.

சில ஆடுகள் தங்களை ஆடுகள் என உணரும்பொழுது மந்தையைவிட்டு வெளியேறும். சில ஆடுகள் தாங்கள் கசாப்பு கடைக்குத்தான் போகிறோம் என்று தெரிந்தாலும் மந்தையினுள் இருப்பதை பாதுகாப்பாக உணரும். சில ஆடுகள் தாங்களே ஒநாய்களாக மாறி மந்தையை ருசிபார்க்க காத்துக்கொண்டிருக்கும். ஜெனி என்ற ஆட்டை மீட்டெடுக்காமல் வந்து விட்டேனே என்ற வருத்தம் இன்னமும் உண்டு.

ஜெனியின் நினைவுகளில் இருந்து மீண்டு வருவதற்கு முன்னரே வாசுகிரெட்டி மீண்டும் அழைத்தாள்.

“வில் யு கம் டுமாரோ டு நைஜிரியன் ரிடிம்ட் சர்ச்”

“ஸ்யூர் வாசுகி”

மறுநாள், இருபது அடிக்கு இருபது அடி சிறிய அறை அது. நிறைய நைஜிரீயர்கள், சில இந்திய மாணவர்கள், ஒரு சில சுவிடீஷ் ஆட்கள். அறையினில் சொரூபங்கள் ஏதுமில்லை.

சொர்க்கத்தின் சுவர்கள் மரகதம், தங்கம் , வெள்ளி போன்றவற்றால் கட்டப்பட்டது என ஒரு நைஜிரியன் சொல்லிக்கொண்டிருந்தார். கடவுளுக்கு பிளாட்டினம் அவதார் யுபொடோனியம் போன்றவைகள் தெரியவில்லை போலும். விருகம்பாக்கம் அல்லேலூயா சர்ச்சில் அடித்தட்டு மக்கள், இங்கு நைஜிரியர்கள் .

கடைசியில் அதே அந்நிய பாஷை ஓலம். வாசுகிரெட்டியைக் கவனித்தேன், நெற்றியில் பொட்டு இல்லை. மண்ணின் அடையாளங்களை மதங்களுக்காக விடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. முடிவில் காணிக்கை , இங்கும் அதே வகையிலான சுருக்குப்பை.

மெக்டொனால்ஸில் ஹம்பர்கர் சாப்பிட போய்கொண்டிருக்கையில் வாசுகிரெட்டி கேட்டாள்

“டிட் யு லைக் இட், வில் யு கம் நெக்ஸ்ட் வீக் ஆல்ஸோ”

எனக்கான ஆட்டைக் காப்பாற்ற நானும் இந்த ஆட்டு மந்தையில் ஒருவனாக இருக்கவேண்டியக் கட்டாயத்தை உணர்ந்து

”யெஸ் அஃப்கோர்ஸ்” என தலையாட்டினேன்.

– ஆகஸ்ட் 08, 2010

Print Friendly, PDF & Email

3 thoughts on “அல்லேலூயா

  1. wonderful story. அல்லேலூயா கூட்டத்தின் சதிகளை அழகாகத் தோலுரித்துக் காட்டுகிறீர்கள். ஆனால் ஒன்று. ஜெனி, வாசுகிரெட்டி போன்றவர்கள்தான் உண்மையிலேயே ஆபத்தானவர்கள்.

  2. முகத்தில் அறையும் உண்மைகள்…. இப்படி எழுதவும் தைரியம் வேண்டும்… நல்ல சொல் வளம்,…..நல்ல சொல் ஆட்சி..
    பாராட்டுக்கள் செல்வா…. சிறுகதைகள் தளத்தில் உங்கள் பல கதைகளும் நன்றாக உள்ளன…
    இன்னும் தொடர்ந்து நிறைய எழுத வாழ்த்துக்களும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *