கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 18, 2017
பார்வையிட்டோர்: 8,524 
 

சித்திரை வெய்யில் உச்சி மண்டையைப் பிளந்தது. ஊற்றெடுத்த வியர்வை கண்டு அஞ்சியதுபோல் அவன் அணிந்திருந்த உயர்தர டெரிலின் சட்டை முழுக்க நனைந்து உடம்போடே ஒட்டிக்கொண்டிருந்தது.

பல்லைக்காட்டி நின்ற பழஞ்செருப்பும் தலைச்சுமையும் அணிந்திருந்த உடைக்குச் சற்றும் பொருந்தாமல் பார்வைகளைக் கேள்விக்குறி போட்டு வளைத்தன. இத்தனைக்கும் சொந்தக்காரனான வெங்கடேசன் ரயில் நிலையத்தை விட்டு வெளியில் வந்து பேருந்துக்காக காத்திருக்கலானான். நிழற்குடையில் கூட்டம் அதிகமிருந்தது. இவன் ஒரு ஓரமாக குத்துக்காலிட்டு அமர்ந்துகொண்டான்.

இந்த சட்டையை வெயில்காலத்தில் போடலாமா? ஆனால் வேறு வழியில்லை. அவனிடம் இருப்பவை எல்லாமே அண்ணனுடையவைதான். அவனுக்கென்று இருந்தவை இரண்டு செட் சட்டையும் வேட்டியும்தான். அதிலும் நிறமாய் இருக்கவேண்டிய சட்டை வெளுத்துப்போயும், வெளுப்பாய் இருக்கவேண்டிய வேட்டி அழுக்கு நிறத்திலும் இருக்கும்.

அப்படியொரு கோலத்தில்தான் பத்துவருஷங்களாய் பார்க்காத அண்ணனை இரண்டு வருஷத்துக்குமுன் சந்திக்க நேர்ந்தது. உடனேயே வீட்டுக்கு அழைத்துப்போய் ஏராளமாய் சட்டை பேண்ட் கொடுத்தது. அண்ணியும் வசந்தாவுக்கென்று நல்ல நல்ல புடவைகளாகக் கொடுத்தது.

“ஏண்டா இப்படி பரதேசி மாதிரி நிக்கிறே? ஒன்ன இந்தக்கோலத்துல பாக்கக்கூடாதுன்னுதான் அப்பா அப்பவே கண்ணமூடிட்டாரா?” என்று அவனைக் கட்டிக்கொண்டு ஓவென்று அழுதது. அண்ணி சமாதானப்படுத்தியது. அண்ணன் கண் கலங்கி அதுவரையிலும் பார்த்ததே இல்லையாதலால் மனம் கனத்துப்போனது.

எந்தெந்த ஊர்களுக்கோ போகும் பேருந்துகள் வந்ததே தவிர அண்ணன் வீடு செல்லும் பேருந்து வந்தபாடில்லை. பீடியை வாயில் வைத்தபடி ஒருவர் இவனருகில் வந்து, “தீப்பெட்டி இருக்கா?” என்றார்.

“இல்லைங்களே!” சங்கடமாய்ச் சொல்லிவிட்டுக் கேட்டான்.” ஆத்துப்பாலம் போற பஸ்ஸு எப்பங்க வரும்?”

“வரும் வரும்!” தீப்பெட்டி கிடைக்காத எரிச்சலில் நகர்ந்துசென்றார்.

அண்ணனுக்கு போன் போடலாம் என்றால் போனை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது.யோசனையுடன் தாடையைச் சொறிய… சவரம் செய்யவும் மறந்துவிட்டது நினைவுக்கு வந்து உறுத்தியது.

வெங்கடேசன் ஒன்றும் தினப்படி சவரக்காரன் இல்லை. ஆனால் எப்பாடு பட்டாலும் அண்ணனைப் பார்க்கப்போகுமுன் முடி வெட்டி சவரம் செய்துதான் பார்க்கப்போவான். அவனைப் பரதேசிக் கோலத்தில் பார்க்க அண்ணனுக்குச் சகிக்காது. உடனேயே காசு கொடுத்து கடைக்குப் போய் முடிவெட்டி வாடா என்று அனுப்பிவிடும்.

பேருந்து வருகிறபாடாய்த் தெரியவில்லை. ‘என்ன ஒரு நாலஞ்சு கிலோமீட்டர் இருக்குமா? பொடி நடையா நடந்திடவேண்டியதுதான். காசும் மிச்சம். மாங்கா மூட்டைக்கி லக்கேஜ் போட்டாலும் போடுவானுங்க.’

மனதுக்குள் கணக்குப்போட்டு கனத்த மூட்டையைத் தலையிலேற்றி விடுவிடுவென்று நடக்கத்தொடங்கியவனை தீப்பெட்டி கேட்டவன் வியப்புடன் பார்த்துக்கொண்டு நின்றான்.

‘எப்படி எல்லாத்தையும் மறந்துபோனேன்? அதான், கெளம்பும்போதே ஒப்பாரி வச்சாளே…. எதுக்கு இத்தன மாங்காயும் தேங்காயும்? ஒன் அண்ணன் ஊருல பஞ்சமான்னு படுத்தி எடுத்திட்டாளே… பாதகி! எப்பவோ ஆறுமாசத்துக்கு ஒருக்கா போறானே… ஒண்ணும் வாங்கிட்டுப் போவத்தான் வக்கில்ல… வூட்டுல காச்சதக் கூடவா எடுத்திட்டுப் போற யோக்கியத எனக்கு இல்ல? போயிட்டு சும்மாவா வாரேன்?

குசேலன் அவலு கொடுத்திட்டு அரண்மன வாங்கினமாதிரியில்ல ஆயிரம் ரெண்டாயிரம்னு வாங்கியாறேன். அது எங்க தெரியிது? சொன்னா… அதுக்கும் ஆயிரம் கேள்வி! இன்னும் ரெண்டாயிரம் சேத்துக்குடுத்தா சொத்தா அழிஞ்சி போயிடும்னு. அவ கண்ணெல்லாம் அண்ணன் வாழுற வூட்டு மேலதான். புள்ளயில்லாத சொத்துதானேங்கறா… அண்ணனுக்கு புள்ள இல்லயேங்கிற வெசனம் கொஞ்சமாச்சும் இருக்கா அவளுக்கு?

படிக்கிற வயசில படிக்காம ஊரச் சுத்துனேன்… களவாணிப்பயலுவளோட சிநேகம் வச்சிகிட்டு வூட்டில இருக்கிற சாமானயெல்லாம் களவாடி வித்து தின்னேன். பத்தாததுக்கு கோயிலுக்கு தண்ணி சொமந்துவந்த இந்தக் கடன் காரியக் கணக்குபண்ணி ஒருநாளு இழுத்துகிட்டு ஓடிவந்துட்டேன். கூடவே அண்ணனோட சம்பளப்பணத்தையும், அம்மாவோட அஞ்சு பவுனு சங்கிலியையும் தூக்கிட்டுவந்து ஆறுமாசம் சொகமா திரிஞ்சோம். புள்ள உண்டாயிடுச்சி. கெடக்கிற வேலயெல்லாம் பாத்து குடும்பத்த நடத்த ஆரம்பிச்சேன்.

எவ்வளவு குடுத்தாலும் பத்தலம்பா. அப்புறம்தான் இவ லச்சணம் தெரிஞ்சிது. சரியான சோக்குக்காரி. பொம்பளயா லச்சணமா வரவுக்கேத்த மாதிரி செலவழிக்கிறாயில்ல… எப்ப பாரு…. அத வாங்கிக்குடு, இத வாங்கிக்குடுன்னு ஒரே நச்சுதான்…….

இருந்தா அண்ணி மாதிரி இருக்கணும். இன்னைக்கும் மவராசி சோகத்த வெளிய காட்டிக்காம சிரிச்ச மொகத்தோட வளையவருதே. இந்தச் சிடுமூஞ்சிக்காரி மாதிரியா?

புள்ளங்க எக்கேடு கெட்டாலும் கவல இல்ல. தான் சொகமா இருக்கணும். வேளக்கி ஒரு சேல கட்டி மினுக்கணும். கூர ஒழுவுதேன்னு ஓல வேய காசு குடுத்தா எந்தப் பொம்பளயாவது கொலுசு வாங்கிப் போட்டுப்பாளா? இவளப்போயி காதலிச்சி கல்யாணம் கட்டுன என்னச் சொல்லணும்.

ஆச்சி…. எப்படியோ பத்து பன்னெண்டுவருசம் ஓடிப்போச்சி. இன்னும் சொச்ச காலத்த ஓட்டி புள்ளங்கள தன் கையை ஊணி கரணம் போடுற நெலக்கி கொண்டுவந்துட்டா போதும்…. அப்புறம் எவன் இவகூட குடும்பம் நடத்தி குப்ப கொட்டுவான்? நல்லவேள…யார் செஞ்ச புண்ணியமோ…. ரெண்டும் பயல்களா போயிட்டானுங்க. பொட்டப்புள்ளயப் பெறாம போனாளே… அதுக்கே அவளக் கும்புடணும். இவளப் பாத்து அதுவும் சீரழிஞ்சி தெருவுல நிக்காமப் போனிச்சே….. ச்சே….!

தலைச்சுமையுடன் நினைவுச்சுமையும் சேர்ந்ததாலோ என்னவோ பாரம் தாங்காமல் பாதணி அறுந்துவிட்டிருந்தது. எப்போதோ நடந்திருக்க வேண்டியது… இத்தனை நாள் தாக்குப் பிடித்ததே பெரியது. முன் ஜென்மத்தில் மிகுந்த நன்றிக்கடன் பட்டவர் யாரோ…. உன் காலுக்கு செருப்பாவேன் என்று அவனுக்கு வாக்களித்திருக்கவேண்டும். இதற்குமேலும் என்னால் முடியவில்லை என்பதுபோல் உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்துபோயிருந்த அது, இறுதியாய் நட்ட நடுசாலையில் உயிரை விட்டிருந்தது. அதை ஓரமாய் வீசியெறிந்துவிட்டு நடையைத் தொடர்ந்தான்.

ஒரு காலத்தில் அண்ணனின் கால்களை அலங்கரித்திருந்த செருப்பு அது. இப்போது அதை சாலையோரத்தில் அப்படியே விட்டுவிட்டு வர குற்ற உணர்வு பெருகியது. பரதனைப்போல் இவன் அதை தலையில் சுமக்கவில்லை. காலடியில் போட்டு மிதித்திருந்தான். எனினும் பரதனுக்கு எவ்விதத்திலும் குறையாத அளவுக்கு அன்பும் பாசமும் அண்ணனிடத்தில் வைத்திருந்தான்.

தார்ச்சாலையில் நடப்பது தீ மிதிப்பதுபோல் இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தான். ஆளரவம் இல்லை. தூரத்தே ஒரு தூங்குமூஞ்சி மரம் இலைச்சாமரங்களை கிளைக்கைகளில் வைத்துக்கொண்டு காற்றிலே அசைத்து வா வா என்று அழைக்க, கிடுகிடுவென்று தலையிலிருந்த மூட்டையைக் கையால் பற்றிக்கொண்டே இலக்கை நோக்கி ஓடும் ஓட்டப்பந்தய வீரன்போல் ஓடினான். அதற்குள் கால் ஓரளவு வெந்துபோயிருந்தது. இந்தமுறை அண்ணனிடமிருந்து புதுச்செருப்பு கிடைத்துவிடும் என்பது புரிந்தது.

ஒவ்வொருமுறையும் அண்ணனிடம் யாசகம் வாங்காமல் வரவேண்டும் என்றுதான் நினைக்கிறான். ஆனால் அண்ணனும் அண்ணியும் எதையாவது அவன் கையிலோ சட்டைப்பையிலோ செருகாமல் அனுப்புவதில்லை. சென்றமுறைபோனபோதுஅண்ணன் சொன்னது நினைவுக்கு வந்தது. அண்ணன் தன்னிடம் யாசித்த ஒரே விஷயம் அதுதான்.

“சின்னவனே! ஒருநட உம்பெண்டாட்டியையும், பிள்ளைகளையும் அழச்சிட்டு வாயேன்டா.”

“அவ எதுக்குண்ணே…வந்தா வாய வச்சிகிட்டு சும்மா இருக்கமாட்டா… வயித்தெரிச்சல்காரிண்ணே….”

“டேய், நீயே அவளப்பத்தி இப்படி பேசலாமா? அதுவும் ஒரு பொண்ணுதான? புருஷன் நெறைய சம்பாதிக்கணும், நாமளும் நாலுபேர மாதிரி வூடு வாசல்னு வசதியா இருக்கணும்னு ஆசப்படுறது தப்பில்லயே….”

“அதில்லண்ணே…”

“இங்க பாரு… அப்பா சாவும்போது இந்த வீட்ட என்பேருலதான் எழுதிவச்சாரு.. அப்ப அவருக்கு உன்மேல தீராத கோவம். நான் எவ்வளவோ சொல்லிப்பாத்தேன். மாத்தமாட்டேன்னுட்டாரு.”

“அதனால என்னண்ணே…. எனக்கு அதில சந்தோஷம்தாண்ணே”

“அத அப்படியே விடமுடியாதுடா… அன்னைக்கு இந்த வீட்டு மதிப்ப கணக்கு பண்ணி சரிபாதிய பேங்குல போட்டுவச்சிருக்கேன். நீ எப்ப சொன்னாலும் எடுத்துத் தரேன்!”

“அண்ணே…. அதெல்லாம் வேணாம்ணே… ”

“ஏண்டா….. எங்களுக்கென்ன புள்ளயா குட்டியா? நீ உன் குடும்பத்தோட இங்கயே வந்திடு. உன் பிள்ளைங்களை நான் படிக்கவைக்கிறேன்.”

“அண்ணே…. ”

கண்ணீருடன் அண்ணன் கைகளைப் பற்றிக்கொண்டான். அவமானத்தால் உடல் நடுங்கியது. அப்பாவே இவனை மகனாக நினைக்காமல் தன் சொந்த சம்பாத்யத்தில் கட்டிய வீட்டை அண்ணனின் பேரில் எழுதிக்கொடுத்திருக்கிறார். அண்ணனுக்கு மட்டும் ஏன் தன்மேல் இத்தனை வாஞ்சை?

வாய் திறந்து கேட்டேவிட்டான்.

“நீ எனக்கு புள்ள மாதிரிடா….” அண்ணனால் அதற்குமேல் பேசமுடியவில்லை.

அன்றே முடிவு செய்துகொண்டான் எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்தப் பணத்தை வாங்கிவிடக்கூடாது என்று. அப்பாவின் மனம் நோகும்படியான காரியத்தை அவர் இறந்தபின்னாலாவது செய்யாமலிருக்க உறுதி பூண்டான். இந்த விஷயம் எக்காரணம் கொண்டும் வசந்தாவுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதிலும் குறியாய் இருந்தான்.

என்றுமில்லாத அதிசயமாய் நேற்று இரவு கனவில் அம்மாவும் அப்பாவும் வந்தார்கள். இவனைப் பார்த்து கேவிக் கேவி அழுதார்கள். இத்தனை வருடங்களில் இருவரையும் சேர்ந்தாற்போல் பார்த்தது இதுவே முதல்முறை என்பதால் மிகவும் உணர்ச்சிவயப்பட்டிருந்தான். காலையிலேயே அண்ணனுக்கு போன் செய்து விவரம் சொல்ல அண்ணனுக்கும் அளவிலாத மகிழ்ச்சி. அவர்களின் ஆசி உனக்கு எப்போதும் உண்டு என்று சொல்லி வாழ்த்தியது.

சட்டென்று இவனுக்கு ஒரு யோசனை. ஒருநடை அண்ணனைப் போய் பார்த்துவந்தால் என்ன? காய்த்துத் தொங்கிய மாங்காய்களையும், இரண்டு மொந்தன் வாழை சீப்பையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டான்.

மரத்தடி நிழலும் அவ்வப்போது வீசும் காற்றும் இதம் தந்தது. சற்றுநேரம் இங்கேயே உட்கார்ந்திருந்துவிட்டுப் போகலாம் என்று தோன்றியது. தன் காலை வாரிய செருப்பை கடிந்துகொண்டபோதும் இந்நேரத்துக்குப் போய் கதவைத் தட்டினால் அண்ணியின் மதியத் தூக்கம் கெட்டுவிடும் என்பதால் புறப்படுவதை கொஞ்சநேரம் ஒத்திப்போட்டான்.

தான் இப்படி வீட்டுக்கு வராமல் மரத்தடியில் கிடப்பது அண்ணனுக்கோ அண்ணிக்கோ தெரிந்தால் அண்ணன் கேட்கும்,
“என்னடா, அத்தனை பெரிய மனுசனாயிட்டியா? தொல்லை கொடுக்கப்படாதுன்னு தெருவோரம் குந்தியிருந்தியாமே?” பதில் சொல்லமுடியாமல் இவன் நெளியப்போகிறான்.

நினைத்துச் சிரித்தபடியே பக்கத்தில் மூட்டையைப் பற்றியபடி லேசாக கண்ணயர்ந்தான். எவனாவது மாங்காய் மூட்டையைத் தூக்கிக்கொண்டுபோய்விட்டால் என்னாவது என்ற பயமும் எழ வெறுமனே வெற்றுச்சாலையை வேடிக்கை பார்த்து அமர்ந்திருந்தான். வெயில் தணிந்ததுபோல் தெரியவும் மறுபடி நடையைக் கட்டினான்.

இதோ வந்துவிட்டான்.

கதவு திறந்தே இருந்தது. உள்ளே யார் யாரோ…. என்னவோ விபரீதமென உணர்ந்தவன் நெஞ்சதிர மூட்டையை இறக்க….அண்ணி தலைவிரிகோலமாக ஓடிவந்தாள்.

“பாவி…. பாவி… அரமணிநேரம் முன்னால வந்திருக்கக்கூடாதா? பாவி… உன்னப் பாக்கணும்னுதானடா தவிச்சாரு… கடேசியா நெஞ்சப் புடிச்சிட்டு சாயும்போது கூட உம்பேர சொல்லிட்டேதானடா சாஞ்சாரு… இப்படி ஆவும்னு ஒனக்கு காட்டுன கடவுள் ஒன்ன சித்த முன்னாடி அனுப்பி வச்சிருக்கக்கூடாதா……”

தலைமாட்டுத் தீபத்துடன் கூடத்தின் நடுவில் அண்ணன் கிடத்தப்பட்டிருந்தது. எதிர்பாராத அதிர்ச்சியால் ஒருநிமிடம் உறைந்துநின்றவன் அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு, அண்ணனின் கட்டியிருந்த கால்களைக் கட்டிக்கொண்டு வீடே எதிரொலிக்கும்வகையில் அடிவயிற்றிலிருந்து ஓலமெழுப்பிக் கதறினான். வைக்கோல் கன்றை நக்கி ஏமாந்த பசுவைப்போல் அண்ணனின் அங்கங்களைத் தழுவித் தழுவி துயருற்றான். எத்தனைநேரம் அப்படிக்கிடந்தானோ தெரியாது.

இனி அழுது லாபமில்லை என்பது புரிந்து நிமிர்ந்தெழுந்து அமர்ந்தபோது வராந்தா ஓரமாய் அண்ணனின் புதுச்செருப்பு ஜதை கண்ணில் பட்டது.. போகும்போது அண்ணியிடம் சொல்லி அவற்றை எடுத்துப்போகவேண்டும். கட்டாயமாய் காலில் மாட்டிச்செல்லக்கூடாது என்று நினைத்துக்கொண்டான்.

– அக்டோபர் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *