கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 4, 2015
பார்வையிட்டோர்: 11,660 
 

கடும் வெயில் நாக்கு வறட்சியாக இருநதது, எங்காவது தண்ணீர் கிடைக்குமா என மனம் அலைபாய்ந்தது. பக்கத்துக்கடையில் சர்பத் கடை ஒன்று இருந்தது, ஆனால் கையில் பணம் இல்லை சம்பளம் வர இன்னும் ஒரு வாரம் ஆகும்.

சம்பளம் வநதாலும் அப்படியென்ன வந்துவிடப்போகிறது. இரண்டாயிரம் கொடுப்பார்கள். அம்மாவின் வைத்தியச்செலவுக்கு பாதிப்பணம் போய்விடும், தங்கையும், வேலைக்கு போகிறாள். அவளுக்கும் ஆயிரத்தைந்னூறு வரும்.

இதனால் குடும்பத்தை ஓரளவுக்கு ஓட்ட முடிகிறது, நல்ல வேளை அப்பா உயிரோடு இல்லை. அவர் இருந்தவரை தினமும் குடித்தே பணத்தை அழித்தார்.

தினமும் வீட்டில் சண்டைதான் அம்மாவுக்கு அடி உதைதான். நாங்கள் இருவரும் பயந்து பதுங்கிக்கொள்வோம். ஆனால் அப்பா இருந்தவரை அம்மா திடகாத்திரமாகத்தான் இருந்தாள். அம்மா தினமும் காலை பள்ளிக்கு ஆயா வேலைக்கு செல்வாள். போகுமுன் இரண்டு குழந்தைகளுக்கு பாடம் எடுப்பாள். நாங்கள் இருவரும் பெண்களாக இருந்து விட்டதால் எங்கள் வேலைகளை நாங்களே பங்கிட்டுக்கொண்டோம் அப்பாவின் வேலைகளை அம்மாவே செய்வாள். எங்களை செய்ய சொல்வதில்லை.

அம்மா நல்ல செல்வமான குடும்பத்திலிருந்து வந்தவள்தான். அப்பாவையும் குறை சொல்ல முடியாது, அவரின் சொத்துக்கள் கண்க்கில்லாமல் இருந்தன. பெரிய கடை வீதியில் நான்கைந்து கடைகள் கூட வாடகைக்கு விட்டிருந்தார். ஆனால் விதி அவரை சினிமா ரூபத்தில் இழுத்துச்சென்றது. ஒருமுறை சினிமா ஷூட்டிங் பார்க்க நண்பணுடன் சென்றவர் அந்த நண்பனுக்கு அறிமுகமானவர் என்று ஒரு கதாசிரியரை இவருக்கு அறிமுகப்படுத்த அன்றிலிருந்து இவருடைய பாதையே மாறி விட்டது. தினமும் மாலை எங்களுடன் விளையாண்டு பொழுதை கழித்த அப்பா புதிது புதிதாக நண்பர்களை வீட்டுக்கு கூட்டி வந்தார். மாடியில் போய் ரூமை அடைத்துக்கொள்வார்கள். அப்படி என்னதான் பேசிக்கொள்வார்களோ தெரியாது, இரவு பன்னிரெண்டு மணிவரை கூட ஆகும் அவர்கள் வெளிவர. சில நேரங்களில் இவருடைய நண்பர்களை இவரே கைத்தாங்கலாக வெளியே கூட்டி வந்து ஆட்டோவில் ஏற்றி அனுப்பிய கதையும் உண்டு.

ஒரு நாள் நாங்கள் பள்ளி முடிந்து வீடு வந்த பொழுது அப்பாவுக்கும், அம்மாவுக்கும் வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது. இருவரும் சளைக்காமல் வார்த்தைகளை வீசிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் புத்தகப்பையை கீழே வைத்துவிட்டு பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தோம். அம்மா தீடீரென்று என்ன நினைத்தார்களோ தெரியாது அமைதியாக ஒரு ரூமுக்குள் சென்றுவிட்டார்கள். நாங்களும் பின்னாலேயே சென்றோம். அம்மா எங்களை அணைத்துக்கொண்டு சோபாவில் உட்கார்ந்து கொண்டார்கள்.

வெகுநேரம் உட்கார்ந்திருந்தோம். பின் மெதுவாக எங்களை எழுப்பி சமையலறைக்கு கூட்டிஸ் சென்று சாப்பிட வைத்தார்கள். பின் நாங்கள் படுக்க சென்றபொழுது நடு இரவு ஆகிவிட்டது. காலையில் நாங்கள் பள்ளிக்கு கிளம்பிச்செல்லும்வரை அப்பாவை பார்க்க முடியவில்லை. அம்மா அப்பொழுதெல்லாம் வேலைக்கு செல்லமாட்டார்கள்.

அதன் பின்னால் அப்பாவை மாதம் ஒருமுறை தான் வீட்டில் பார்க்க முடிந்தது.

எங்களுக்கும் விவரம் புரியாத வயது, பின்னர்தான் தெரிந்தது அவர் அத்தனை சொத்துக்களையும் விற்று சினிமா தயாரிப்பில் இறங்கிவிட்டார் என்று. அதன் பின்னர் அம்மாவின் நகைகள் ஒவ்வொன்றாய் மறைந்தன. ஆறு மாதங்கள் கடந்திருக்கும், ஒரு நாள் மாலையில் வீட்டிற்குள் நாங்கள் வரும் பொழுது கூட்டமாக் இருந்தது. அப்பா கட்டிலில் படுத்திருந்தார். அம்மாவின் முகம் கவலையுடன் இருந்தது. நாங்கள் அம்மாவின் பின்னால் போய் நின்று கொண்டோம் அப்பாவைச்சுற்றி இருந்தவர்கள் மெதுவாக அம்மாவிடம் வந்து சரிம்மா..நாங்கள் கிளம்புகிறோம், பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு ஒவ்வொருவராக கிளம்பினார்கள். கடைசியாக மிஞ்சியது அப்பா, அம்மா, நாங்கள், ஒரு வாரம் அமைதியாக ஓடியது. அப்பா இப்பொழுது நன்றாகிவிட்டார். ஏன் நன்றாகியது என்று கேட்கும்படி இருந்தது, அவரது நடவடிக்கைகள். இப்பொழுதெல்லாம் தினமும் போதையுடன் வீட்டுக்கு வருகிறார். அம்மாவுக்கு தினமும் அடி உதைதான். எங்கள் நிம்மதி போயிற்று, வறுமை ஆரம்பித்துவிட்டது. தினமும் வித விதமாக சாப்பாடு எடுத்துஸ் சென்று சாப்பிடும் எங்களை அம்மா பள்ளியிலேயே சத்துணவு சாப்பிட சொல்லிவிட்டார்கள். எங்களுக்கும் வீட்டின் வறுமை புரிந்ததால் பழகிக்கொண்டோம்.

ஒரு நாள் காலை பத்து மணி அளவில் வீட்டுக்கு யார் யாரோ வந்தார்கள். எங்கள் வீட்டை எங்களை கேட்காமலேயே சுற்றிப்பார்த்தார்கள், அம்மாவிடம் ஏதோ பேசினார்கள் எங்களுக்கு அன்று விடுமுறை ஆனதால் நாங்கள் வீட்டிலிருந்தோம், அம்மாவிடம் நிறைய பணம் கொடுத்தார்கள் எவ்வளவு என்று எங்களுக்கு தெரியவில்லை, பின் ஏதோ பேப்பரில் அப்பாவிடமும் அம்மாவிடமும் கையெழுத்து வாங்கிக்கொண்டார்கள். இருவரின் கண்களும் கலங்கியிருப்பது தெரிநதது, பின் அம்மாவிடம் சீக்கிரம் காலி செய்துவிடுங்கள் என்று கூறிவிட்டுச்சென்றார்கள். எங்களை விட்டுவிட்டு அம்மாவும் அப்பாவும் எங்கோ கிளம்பிச்சென்றார்கள். அவர்கள் திரும்பிவரும்போது நன்கு இருட்டிவிடத், அதுவரை நாங்கள் தனியாக இருந்தோம்.

காலை நாங்கள் விழித்த்போது வீடு சுத்தமாக இருந்தது போல் இருந்தது. பெட்டி,படுக்கை,பாத்திரங்கள் ஆகியவை வீட்டு முன்னால் வைக்கப்பட்டிருந்தன. அம்மா சீக்கிரம் குளித்து ரெடியாகுங்க’ விரட்டினாள்.இருவரும் குளித்து வெளி வரும்போது நல்ல பசி நல்ல வேளை அம்மா பார்சலில் இட்லி வாங்கிவைத்து இருந்தாள். அவசர அவசரமாக சாப்பிட்டோம் சாப்பிட்டு முடிக்கவும் வாசலில் வேன் ஒன்று வந்து நிற்கவும் சரியாக இருந்தது, படபடவென சாமான்கள் ஏற்றப்பட்டன.

சிறு ஓட்டு வீட்டில் குடிபுகுந்தோம், நான்கைந்து வீடுகள் கொண்ட ஒரு காம்பவுண்டு, பொதுவான பாத்ரூம், தனியாக இருந்து பழக்கப்பட்ட நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். அப்பா இப்பொழுது அதிகமாக குடிக்க ஆரம்பித்து விட்டார். நாங்கள் குடிவந்த மறுநாள் அம்மா தெரிநதவர்களை பிடித்து ஒரு தனியார் பள்ளியில் ஆயாவாக சேர்ந்துவிட்டாள். அப்பா வீட்டில் இருந்தார். காலையில் அப்பாவுக்கு சமையல் செய்து வைத்து விட்டு மேலும் அந்த காம்பவுண்டில் உள்ள இரு குழந்தைகளுக்கு பாடம் எடுத்துவிட்டு இதற்கு இடையில் எங்களையும் கவனித்து பின் எங்களுடனே கிளம்பி எங்களை பள்ளியில் விட்டுவிட்டு அரை கிலோ மீட்டர் நடந்தே அந்தப்பள்ளிக்கு செல்வாள்.

கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. நாங்கள் ஒவ்வொருவராக எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் நல்ல மதிப்பெண்ணுடன் தேறினோம், மேற்கொண்டு படிக்க வைக்க முடியாது என்பது எனக்கு நன்கு தெரிந்தது, ஆனால் அம்மா அதை வாய் விட்டு சொல்லவில்லை ஒரு நாள விடியற்காலையில் அப்பா இறந்து விட்டார். இரவு போதையுடன் தூங்கப்போனவர் காலையில் அசைவில்லாமல் இருந்ததைப் பார்த்த அம்மா அவரை தட்டி எழுப்ப பார்த்தாள்.

ஆனால் அவர் இறந்து வெகு நேரம் ஆகிவிட்டது என்பது அவர் உடல் சில்லிட்டிருந்ததின் மூலம் தெரிந்தது. செய்தி கேட்டு வந்த அக்கம்பக்கத்தார் உதவியுடன் அப்பாவின் இறுதிப்பயணம் முடிந்தது. செலவு உபயம் அம்மாவின் தாலி விற்கப்பட்டது.

அனைத்தும் ஓய்ந்தபின் அம்மாவிடம் நான் வேலைக்கு போறேன் என்றேன். அம்மா ஒன்றும் பேசவில்லை, பார்க்கலாம் என்றார்கள். மாலை வீடு வந்தபின் நாளைக்கு ஒரு கடையில் வேலைக்கு கூப்பிடுகிறார்கள் போகிறாயா? தெரிந்த கடைதான் என்றார்கள்.

மகிழ்ச்சியாக தலையசைத்தேன், வேலையும் கிடைத்தது. கடையில் சேல்ஸ்கேர்ல் வேலை மிகவும் பிடித்தது, காரணம் நிறைய தோழிகள் கிடைத்தார்கள். இதன் மூலம் தங்கைக்கும் வேலை கிடைக்க ஏற்பாடு செய்ய முடிந்தது.

இப்பொழுது அம்மாவின் முகத்தில் சிறிது மகிழ்ச்சியை காண முடிந்தது. காரணம் தன் சுமையை சுமக்க தோள்கள் கிடைத்த சந்தோசம் என புரிந்தது. ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அம்மா வேலை செய்யும் பள்ளியில் இருந்து ஒரு நாள் அம்மாவை ஆட்டோவில் கூட்டி வந்தனர். திடீரென பள்ளியில் மயக்கம் போட்டு விழுந்துவிட்டதாக கூறினார்கள். நாங்கள் பயந்துவிட்டோம் ஆஸ்பிட்டல் போகலாம் என்று கூப்பிட்டதற்கு அங்கேயே டாக்டர் ஊசி போட்டு மருந்து கொடுத்தாகவும், களைப்புதான் வேறு ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டார்கள். மறு நாள் காலையில் அம்மா என்ன சொல்லியும் கேட்காமல் ஆஸ்பத்திரிக்கு கூட்டிச்சென்றேன். டாக்டர் மிகவும் பொறுமையாக பரிசோதித்தார். சில டெஸ்ட்கள் எடுக்கச்சொன்னார். அனைத்து பரி சோதனைகளும் செய்தோம், அம்மா இதுவெல்லாம் எதற்கு என்று புலம்பிக்கொண்டே இருந்தார்கள். டாக்டர் பரிசோதன முடிவை தெரிவிக்க இரண்டு நாட்கள் கழித்து வரச்சொன்னார். அதுவரை மருந்துகளை எழுதிக்கொடுத்து சாப்பிடும்படி சொன்னார்.

இரண்டு நாட்கள் கழித்து நான் மட்டும் சென்று டாக்டரை பார்த்தேன். டாக்டர் என்னிடம் அம்மாவுக்கு குடலில் கான்சர் போன்று அறிகுறிகள் தென்படுவதாகவும் பயப்படவேண்டாம் என்றும் ஒரு ஆபரேசன் செய்தால் சரி செய்துவிடலாம் என்றார்.

நான் அதிர்ந்து நின்றுவிட்டேன், பின் சுதாரித்துக்கொண்டு இதற்கு எவ்வளவு செலவு பிடிக்கும் என்று கேட்டேன்.ரூபாய் 40,000 ஆயிரம் வரை ஆகும் என்றார். பின் சீக்கிரம் ஏற்பாடுகளை செய்யசொல்லிவிட்டு மருந்து, மாத்திரைகளை எழுதி தினமும் சாப்பிடும்படி கூறினார்.

வேலைக்கு போக பிடிக்காமல் வீட்டிற்கு வந்தேன். என் முகம் பார்த்த அம்மா உள்ளே சென்று காப்பி கலந்து தந்தாள். காப்பி குடித்த பின் தன்னிலை பெற்றேன்.

இதுவரை அம்மாவிடம் பொய் சொன்னதில்லை, விசயத்தை கூறினேன், அம்மா சிறிது நேரம் மெளனமாக இருந்தார்கள். பின் மெல்ல என் தலையை வருடி ‘கவலைப்படாதே’ நான் அவ்வளவி சீக்கிரம் சாகமாட்டேன், உங்களை கறையேற்றாமல் நிச்சயம் நான் போகமாட்டேன் என்றார்கள்.

வயிற்றில் பால் வார்த்தது போல் இருந்தது எனக்கு. இது போதும் உனக்கு இருக்கும் நம்பிக்கை கூட எனக்கில்லாமல் போயிற்றே’ ஓ நீ வாழ்க்கையில் போராடி வாழ்ந்தவள் இல்லையா?இதோ நானும் போராட தயாராகிவிட்டேன், உன்னை மீட்பது மட்டுமல்ல நாம் இழந்துவிட்ட சொத்துக்களில் கொஞ்சமாவது மீட்டு உன் கையில் ஒப்படைப்பேன்,என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அம்மாவை கட்டிப்பிடித்து இன்னும் மூன்று மாதம் மருந்து மாத்திரை சாப்பிட்டு பொறுத்துக்கொள், கண்டிப்பாக ஆபரேசன் செய்துவிடலாம் என்று கூறி அம்மாவின் நெற்றியில் முத்தம் இட்டு நான் வேலைக்கு போகிறேன் என்றேன்.

மணி 11 ஆகிறதே என்று அம்மா சொன்னதற்கு பரவாயில்லை, பர்மிசன் போட்டுக்கொள்கிறேன், இனிமேல் எனக்கு வேலை! வேலை!என் லட்சியமே நீ தான் என்று வெளியே வந்தேன். இப்போதும் அதே வெயில், நா வறட்சி, எதுவும் என்னை பாதிக்கவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *