கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 18, 2012
பார்வையிட்டோர்: 14,579 
 

புகை உடலுக்கு பகை என்று எழுதப்பட்டிருக்கும் அட்டைக்கு எதிர்த்தாற் போல் நின்று கொண்டு, ஆழ்ந்து ரசித்தபடி புகை விட்டுக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன், அந்த இடம் அவரது அலுவலக கேன்டீன். எதிரே நூறடி தூரத்தில் அவரது அலுவலக நண்பர் ராமகிருஷ்ணன், கையில் கைப்பேசியுடன், சிரித்த முகத்துடன் ஓடி வந்து கொண்டிருந்தார். அருகே வந்த ராம்கி (ராமகிருஷ்ணன் என்ற பெயர் மருவி ராம்கியாகிவிட்டது) அந்த கைப்பேசியை கோபாலகிருஷ்ணனின் கையில் திணித்தார், பின் அவரது வாயிலிருந்த சிகரெட்டை ஒரு நொடியில் பிடுங்கி தூக்கி எறிந்து விட்டார். அந்த சிகரெட் மீண்டும் உபயோகப்படுத்த முடியாத இடத்தில் (சாக்கடையில்) போய் விழுந்துவிட்டது. கோபாலகிருஷ்ணன் கோப கிருஷ்ணனாக மாறுவதற்குள் கைப்பேசியில் வந்த அந்த மகிழ்ச்சியான விஷயத்தை கூறினார் ராம்கி.

‘கோபாலகிருஷ்ணா, உனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது இப்பொழுது தான் போன் வந்தது.”

அதுக்கு எதுக்குடா சிகரெட்டை பிடுங்கி தூக்கி எறிஞ்ச, என்று பார்வையாலேயே கேட்டார் கோபாலகிருஷ்ணன். அந்த பார்வை குறிப்பை புரிந்து கொண்ட ராம்கி இவ்வாறு கூறினார்.

‘நீ இப்படி பொறுப்பில்லாமல் சிகரெட் பிடிச்சுகிட்டிருந்தா உன் பொண்ணுக்கு எப்படி நகை சேர்க்க முடியும்………….ம், சிகரெட் பிடிக்கிறத விட்டிடு, அந்த காச மிச்சப்படுத்துனா ஒரு பத்து பவுனாவது சேத்துடலாம்ல”

இவ்வளவு நேரமாக கோபாலகிருஷ்ணனின் மூக்கு மற்றும் வாய் வழியாகத்தான் புகை வந்து கொண்டிருந்தது. இப்பொழுது காதின் வழியாகவும் வழியமைத்துக் கொண்டு செல்ல ஆரம்பித்தது புகை.

மருத்துவமனையில், பெண் குழந்தை அழகாக இருந்தாள். அனைவரும் பாராட்டினார்கள். இங்கு மட்டும் தான் பொழுது போகவில்லையென்றால் கூட பாராட்டுவார்கள். மருத்துவமனைக்குள் வேகமாக ஓடிவந்தாள் ஒரு பெண்மணி கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை எடுத்து குழந்தையின் கழுத்தில் போட்டாள். கோபாலகிருஷ்ணன் அதிர்ச்சிக்குள்ளாகிப் போனார். அதை உற்றுப் பார்த்தால் தங்கம் போன்று தான் தெரிந்தது. இதயம் லேசாக ஆட்டம் கொடுத்தது, கண்கள் படபடத்தன. இந்த உலகைப் பற்றி நாம் தவறாக எண்ணிவிட்டோமோ? என்ற சிந்தனையில் ஆழ்ந்து போனார். பின் இரண்டு மணி நேரம் கழித்து அந்த தங்கச் சங்கிலியை எடுத்து தன் கழுத்தில் போட்டுக் கொண்டு கிளம்பிவிட்டார் அந்த பெண்மணி. மீண்டும் கோபாலகிருஷ்ணனின் இதயம் ஆட்டம் கண்டது. கண்கள் படபடத்தன. இந்தியாவில் இதய நோய் பரவலாக காணப்படுவது இது போன்ற நிகழ்வுகாளால் தான். பின் ஒரு இதயம் இத்தனை முறை ஆட்டம் கண்டால் என்னதான் செய்வது.

சில மாதங்களுக்குப் பிறகு

தாய்பாலின் அருமை பெருமைகளை பற்றி தன் மனைவி கோகிலாவிடம் கூறிக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன். கோகிலா, தாய்பால் கொடுப்பதன் மூலம் தன் அழகு எங்கு கெட்டுவிடுமோ என்று நினைக்கும் மாடர்ன் பெண் இல்லையென்றாலும், தாய்பாலின் சிறப்புத் தன்மை குறித்த தனது கருத்தை நிலைநாட்டுவதில் குறியாக இருந்தார் கோபாலகிருஷ்ணன். அவர் கூறியதையெல்லாம் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டால் படித்துக் குழம்பிப் போகும் சில ஆயிரம் பேர்களில் அமெரிக்க விஞ்ஞானிகள் கூட இருப்பார்கள் என்பதில் எந்த ஆச்சரியமும் இருக்காது. இவ்வளவு பொய், புரட்டுகளையும் காது கொடுத்து கேட்கும் பொறுமை ஒரு இந்திய மனைவியிடம் மட்டும் தான் இருக்கும் எனபதை நிரூபித்து கொண்டிருந்தார் திருமதி, கோகிலா. ஆனால் விஷயம் இவ்வளவு தான், ஒரு பால் பவுடர்; டின் விலை 199 ரூபாய் 50 பைசா.

அன்று திடீரென்று பெரியாரை பற்றி பக்கம் பக்கமாக பேசிக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன். பெரியாரை பற்றி இவ்வளவு விஷயங்கள் கோபாலகிருஷ்ணனுக்கு எப்பொழுது தெரிந்தது என்கிற விஷயம் அலுவலகத்தில் அனைவரின் புருவங்களையும் உயர்த்திவிட்டது. இந்த மத சடங்குகளை பற்றி கிழிகிழியென கிழித்துக் கொண்டிருந்தார்.

‘குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டுமானால், வைத்துவிட்டு போக வேண்டியது தானே, ஒரு ஐயர் வருவானாம், மந்திரங்களை ஓதுவானாம், பிறகு அந்த பெயரை 3 முறை குழந்தையின் காதில் சொல்ல வேண்டுமாம். என்ன மூட நம்பிக்கை இது. அமெரிக்கா காரனெல்லாம் இப்படியா செய்து கொண்டிருக்கிறான். சரி அதோடு விட்டார்களா? கடாவெட்டி சோறு போடணுமாம் சொந்த பந்தங்களுக்கு. என்ன கொடுமை சார் இது. இந்த நாடே மூட நம்பிக்கையால கெட்டு குட்டிச் சுவரா போச்சு சார். இவங்களயெல்லாம் நூறு பெரியார் வந்தாலும் திருத்த முடியாது சார்.”

ஹெட் கிளார்க் சீனிவாச ஐயர் கோபத்தில் முகம் சிவந்து போய் விஷயம் தெரியாமல் இவ்வாறு பேசினார்.

‘என்ன கோபாலகிருஷ்ணன், இவ்வளவு பகுத்தறிவு பேசுறேள், ஆனா திருநீறு மட்டும் தவறாமல் இட்டுண்டு வர்றேள்”

சற்று தடுமாறிப் போனாலும், கோபாலகிருஷ்ணன் சமாளித்தார்.

‘சீனிவாச ஐயரே, காலங்காத்தால குளிச்சிட்டு திருநீறு இட்டுகிட்டா தலையில் நீர் இறங்காது உமக்குத் தெரியுமா? இதெல்லாம் சயின்ஸ்”

கோபாலகிருஷ்ணனைவப் பொருத்தவரை எதைப் பற்றி பேசுகிறாரோ அதுவாகவே மாறிப் போவார். அவரது இத்தனை சமூக சிந்தனைகளுக்கும் அடிப்படைக்காரணம், குழந்தையின் பெயர் வைக்கும் விழாவில் 17,500 ரூபாய் செலவானது தான். பின் இந்த புலம்பல் கூட இல்லையென்றால், அவர் ஒரு நடுத்தர குடும்பஸ்தனாக இருந்து என்ன பிரயோஜனம். லத்திகா என்று பெயர் வைக்க 17,500 ரூபாய் செலவு. என்ன கொடுமை இது. இந்த பணத்திற்கு ஒன்றரை பவுன் நகை வாங்கியிருக்கலாம் என்று நினைக்ககையில் அவருக்குத் துக்கம் தாளவில்லை. ஆனால் பெரியார் தான் எவ்வளவு உதவியாக இருக்கிறார். பின் இது போன்ற சமயங்களில் கூட அவரை உபயோகப்படுத்திக் கொள்ளவில்லையென்றால் அவர் எதற்கு. அவர் ஈரோட்டில் பிறந்து மடிந்த சாதாரண வயதான கிழவராக அல்லவா போயிருப்பார்.

அன்று ஒரு நாள் கோகிலா மற்றும் குழந்தை லத்திகாவுடன் கோவிலுக்கு சென்றிருந்த பொழுது. அங்கு சீனிவாச ஐயர் வந்துவிட எப்படியும் சமாளித்துவிடலாம் என அவரது கொளுத்த மூளையில் தேடித் தேடிப் பார்த்து ஒன்றும் கிடைக்காமல் போக, அவர் ஒளிவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

பின்னொரு நாள் குழந்தை லத்திகாவின் தீவிரவாதத் தனத்தை பார்த்து தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தார் கோபாலகிருஷ்ணன். அந்த குழந்தைக்கு எப்பொழுதுமே ஒரு பொருள் தரமானதாக இருக்கிறதா? இல்லையா? என்று சோதித்து பார்ப்பதில் ஆர்வம் அதிகம். லத்திகா தன் தந்தை வாங்கிக் கொடுத்த பல விளையாட்டு சாமான்களில் இந்த சோதனையை மேற்கொண்டிருக்கிறாள். சில சமயம் கட்டிலில் ஏறி நின்று கொண்டு அந்த பொருளை தூக்கி வீசுவாள் தரையை நோக்கி, சில சமயம் மாடியிலிருந்து, சில சமயம் சுற்றிக் கொண்டிருக்கும் மின்விசிறியை நோக்கி. அந்த பொருள் உடையவில்லை என்றால் அது தரமான பொருள. உடைந்து விட்டால் அதை தொடக் கூட மாட்டாள். ஒரு சமயம் டி.வி.யை நோக்கி வீச ( அது ஒரு ரயில் பொம்மை) இடையில் புகுந்து டி.வியைக் காப்பாற்றினார் கோபாலகிருஷ்ணன். கடைசியாக வாங்கிக் கொடுத்த கார் பொம்மையை அவள் பரிசோதித்த விதமே தனி, அந்த குட்டிக் காரில் தான் பயணம் செய்ய வேண்டும் என்று விரும்பினாள். பாருங்கள் அதில் ஏறி உட்கார்ந்ததுதான் தாமதம் அதன் நான்கு சக்கரங்களும் தரையோடு தரையாகிப் போனது. இது போன்ற தரமற்ற விளையாட்டு பொருட்களை வாங்கிக் கொடுக்கும் தன் தந்தையின் மீது அவளுக்கு கடுமையான கோபம். கோபாலகிருஷ்ணன பொம்மை கடைக்காரனிடம் இவ்வாறு கேட்டுப் பார்த்தார்.

‘முற்றிலும் இரும்பால் செய்த உடைக்கவே முடியாத விளையாட்டுப் பொருள் ஏதேனும் இருக்கிறதா?”

‘இருக்கிறது சார்” என்று கூறிய அந்த இளைஞன், புரூஸ்லி பயன்படுத்தும் ‘நின்சா” கட்டையை எடுத்து காட்டினான், லத்திகாவும் அது என்னவென்று புரியாமல் ஆசையாக வாங்கிப் பார்த்தாள். கோபாலகிருஷ்ணனுக்கு என்னவோ இது சரியாகப் படவில்லை. அவள் சாதாரண பிளாஸ்டிக் பொம்மைகளையே ஆயுதத்தை போலத்தான் பயன்படுத்துவாள். இதில் ஒரிஜினல் ஆயுதத்தை வாங்கிக் கொடுத்தால் தன் தலைக்கு உத்தரவாதம் இல்லை, பின் அவள் தன் தலையில் சோதனை செய்தாலும் செய்து விடுவாள். அந்த பொருள் என்னவோ உடையாது தான். ஆனால் அவர் தலை.

வேண்டாம் என்று கூறிவிட்டு வேகமாக கிளம்பிவிட்டார். அவரது ஆழ் மனதில் ஓடிய விஷயம் இது தான். இவளுக்கு வாங்கிக் கொடுத்த விளையாட்டுப் பொருட்களுக்குரிய பணத்தை வைத்து 2 பவுன் தங்க நகை வாங்கியிருக்கலாம்.

லத்திகாவை பொறுத்தவரை உடைப்பதற்கு ஒரு பொருள் இல்லையென்றால், அழ ஆரம்பித்துவிடுவாள். கோபாலகிருஷ்ணனுக்கு சிறு வயதிலிருந்தே கசல் என்னும் இசையை கேட்பதில் ஆர்வம் அதிகம் உண்டு. ஞாயிற்றுக் கிழமைகளில் மதிய வேலையில் தூக்கம் வரவில்லை என்றால் ரேடியோவில் கசல் பாடலை போட்டுவிட்டு தூங்க ஆரம்பித்துவிடுவார். கசல் பாடல்களை தூக்க மாத்திரைக்கு மாற்றாக பயன்படுத்தலாம் என்பது அவரது கருத்து. அன்று தான் நிதானித்துக் கேட்டார், தன் குழந்தை லத்திகா அழுவதும், அந்த கசல் பாடலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பது. அவர் ஏதோ கண்டுபிடித்துவிட்டதாகவும், நகைச்சுவை செய்வதாகவும் நினைத்துக் கொண்டு மனைவியிடம் கூற, திருமதி, கோகிலாவோ தன் மகளுக்கு மிகப்பெரிய இசைஞானம் இருப்பதாக நினைத்துக் கொண்டு, ஒரு வீணை வாங்கிக் கொடுத்தால் தான் பச்சைத் தண்ணீர் கூட குடிப்பேன் என விரதம் இருக்க ஆரம்பித்துவிட்டார். வீணையின் விலையை கேட்ட பொழுது நெஞ்சு பதறியது. ஆனால் கோகிலா பச்சைத் தண்ணீர் குடிக்க வேண்டுமே என்ன செய்வது.

அந்த மிகப்பெரிய விளையாட்டுப் பொருளை எப்படி உடைப்பது என்பது தெரியாமல் திகைத்துப் போயிருந்தாள் லத்திகா, பின் அதை ஒரு குதிரை பொம்மையாக பாவித்து அதன் மேல் அமர்ந்து கொண்டு சவாரி செய்ய ஆரம்பித்து விட்டாள். கோபால கிருஷ்ணனின் பயமெல்லாம் இது தான், கோகிலா ஒரு குதிரையை வாங்கி வந்தால் தான் தண்ணீர் குடிப்பேன் என்று சொல்லிவிடக் கூடாது. ஆனால் கோகிலா தனது ஆசையை முழுவதுமாக தீர்த்துக் கொண்டார். அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து தினசரி இரு பார்வையாளர்களாவது அதை வந்து பார்த்துச் செல்கிறார்கள். அப்படி பார்த்தச் சென்ற மாமிகளின் ஆச்சரியப்படத்தக்க வசனங்கள் சில

‘ஏண்டீம்மா, கோகிலா திருடன் வரும் போது இதைத் தூக்கி ஓங்கி அவன் மண்டைல நச்சுன்னு அடிச்சா அவன் மிரண்டு ஓடிட மாட்டான், பிடிக்கிறதுக்கு நல்லா வாட்டமா இருக்கு பாறேன்”

‘ஏண்டி கோக்கி, எங்காத்து மாடில வடாம் காய போட்டிருக்கேன் உன் வீணைய செத்த எடுத்துட்டு வந்தண்ணா, காக்கா, குருவி, பக்கத்துல வராம இருக்கும்டி, அப்படியே நானும் வீணை கத்துக்குவேன்.”

‘அடியே கோக்கி இது என்ன மரத்தால செஞ்சது, இந்த மரத்த பார்தா அடுப்புக்கு நல்லா எரியும்னு தோணுதுடி”

‘கோகிலா (காதோரம் ரகசியமாக) வீணை ஒடைஞ்சு போச்சுன்னா அந்த கம்பிய தூக்கி போட்றாதடி, அதுல திரைசீலை செஞ்சு மாட்டிக்கலாம் சரியா”

குழந்தை லத்திகா பல்வேறு வழி முறைகளில் முயற்சி செய்தும் அதை உடைக்க முடியவில்லை. அதில் அவள் இருமுறை காபியை ஊற்றியிருக்கிறாள். பின் ஒரு முறை அதன் மேல் 2க்கு போய் விட்டாள். இதையெல்லாம் பார்த்தும், கேட்டும் கோபாலகிருஷ்ணனின் இதயம் தான் எவ்வளவு வலித்தது என்று யாருக்குத்தான் தெரியும்.

பின் ஒரு நாள் லத்திகாவிற்கு ஜுரம் வந்துவிட்டது, குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார் கோபாலகிருஷ்ணன். எவ்வளவுதான் வைத்தியம் பார்த்தாலும் குழந்தைக்கு ஜுரம் நிற்கவேயில்லை. குழந்தைக்கு நோய்த்தடுப்பூசிகள் எதுவுமே போடவில்லை என்பது மருத்துவரின் குற்றச்சாட்டு. இந்த ஜுரம் சிறிது சிறிதாகத்தான் குணமடையும் என்று அவர் கூறிவிட்டார். இதற்கு மாற்று வழி கண்டுபிடிக்க கோகிலா முனைந்தார். பல்வேறு தரப்பினரிடமும் ஆலோசனை கேட்கப்பட்டது, அதில் ராம்கியின் துணைவியார் கூறிய அந்த வழி முறை ஏற்றுக் கொள்ளப்பட்டது, அது என்னவென்றால் நோய்களை குணமடையச் செய்யும் சக்தி வாய்ந்த சாமியாரிடம் அந்த குழந்தையைக் காட்டி பரிகாரம் செய்வது. கோபால் இதிலெல்லாம் தனக்கு நம்பிக்கை இல்லையென்று கூறினால் அவ்வளவுதான், திருமதி. கோகிலா அவரை பார்வையாலேயே எரித்துவிடுவார்.

அன்று வாயில் விரல் வைக்காத குறையாக, கோகிலாவுக்கு பின்னே நின்று கொண்டிருந்தார் வரிசையில், அமைதியாகவும் மற்றும் பவ்யமாகவும். அவ்வளவு கூட்டம். ஒவ்வொருவராக கடந்து செல்ல, ஒன்றரை மணி நேரத்திற்குப் பின்அவர்களது முறை வந்தது. அந்த சாமியார் பார்க்கவே கொடூரமாக இருந்தார். அவரது கண்கள் சொருகிப் போய் கிடந்தது. பட்டசாராயம் குடிப்பார் போல என்று நினைத்துக் கொண்டார் கோபால். கொத்து திருநீரை கைநிறைய அள்ளி குழந்தையின் முகத்தில் வீசினார். தூங்கிக் கொண்டிருந்த லத்திகா கதறி அழ ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கு மட்டும் பேசத் தெரிந்திருந்தாள் இவ்வாறு கேட்டிருப்பாள்.

‘எந்த பரதேசி பயல் இப்படி செய்தது” என்று

அவள் குழந்தையல்லவா வேறு என்ன செய்ய முடியும். அந்த சாமியார் மட்டும் பிரான்ஸ் போன்ற தேசங்களில் இந்த செயலை செய்திருந்தால். குழந்தைக்கு எதிரான வன்முறைச் சட்டத்தின் கீழ் 5 வருடங்கள் உள்ளே போட்டு மிதித்திருப்பார்கள், இது இந்தியா அல்லவா?

அந்த சாமியார் எவ்வளவு நேரம் கண்களை மூடிக் கொண்டு மந்திரம் ஓதுகிறாரோ, அந்த அளவிற்கு பில் தொகை ஏறிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். வெகு நேர ஜெபித்தலுக்குப்பின். கண்களை திறந்தார். கோபாலின் மனம் பதறியது. என்ன சொல்லப் போகிறானோ என்று. கோகிலாவின் கண்களில் கருணை ஒளி மின்னியது. பின் அந்த ஆள் இவ்வாறு கூறினான்.

‘ஆத்தா உன் குழந்தையை பார்த்துக் கொள்வாள் போய் வா”

தமிழக அரசு நிச்சயமாக அவருக்கு வரிச்சலுகை அளித்திருக்கும் அப்படி ஒரு சுத்த தமிழ்

கோகிலா : சாமி கட்டணம் எவ்வளவு

கோபால கிருஷ்ணனின், சட்டைப் பாக்கெட்டின் அந்தப் பக்கம் லப்டப் சத்தம் அதிகமாக கேட்டது.

சாமியார் : ஒன்றும் தேவையில்லை போய் வா

ஒரு லிட்டர் ஆரோக்கியா பாலை இதயத்தில் வார்த்ததை போல் உணர்ந்தார் கோபாலகிருஷ்ணன். ‘நீ நல்லவண்டா” என்று மனதிற்குள்ளாக பாராட்டினார்.

சாமியார் : ஒரு நிமிடம்,……. ஆத்தாவுக்கு செய்ய வேண்டிய நேர்த்திக் கடன மறக்காம செய்திடனும்.

கோகிலா : என்ன நேர்த்திக் கடன் சாமி

சாமியார் : உன் குழந்தையின் இடுப்பு அளவிற்கு ஒரு தங்க அருணாக்கொடி செய்து ஆத்தாவுக்கு சாத்தணும்

அந்த ஒரு நொடியில்;, கோபாலகிருஷ்ணனின் இதயம் வாய் வழியாக வெளியே வந்து விழுந்தது.

‘ஒரு முழுச் சுற்று தங்க அருணாக்கொடி, அதை இதற்கு முன் அவன் கடையில்சென்று வாங்கியிருப்பானா? ஐயோ இவ்வளவு பெரிய தொகைக்கு எங்கே செல்வேன். இந்த கோகிலா என்ன தன் நகைiயையா கழற்றித் தரப்போகிறாள், புதிதாக அல்லவா வாங்கி போடச் சொல்வாள்”

கோபாலின் உள் மன புலம்பலை யாருக்கு புரிந்ததோ இல்லையோ? ராம்கி புரிந்து கொண்டார். அவரை தனியாக அழைத்துச் சென்றார், பின் இவ்வாறு ஆறுதல் கூறினார்.

‘கோபால கிருஷ்ணன், கவலைப் படாதிங்க, விஷயத்தை சிம்பிளா முடிச்சிடலாம். அதிகம் தேவைப்படாது, அந்த சாமியாருக்கு ஒரு புட்டி சாராயம் போதும். இன்று இரவு வேலையை முடித்து விடலாம், எனக்கு ஏற்கனவே இதில் அனுபவம் உண்டு”

அன்று இரவு சாமியாருடன் நடைபெற்ற காக்டெய்ல் பார்ட்டியின் விளைவாக ஆத்தா விரும்பிய தங்க அருணாக்கொடி, பின் வெள்ளி அருணாக்கொடியாக மாறியது. இன்னொரு காக்டெய்ல் பார்ட்டி நடக்கும் பட்சத்தில் அது கருப்பு கயிறாகக் கூட மாறலாம்.

எத்தனை காட்டாறுகளை கடக்க வேண்டியதிருக்கிறது. தன் அன்பு மகளின் எதிர் காலத்துக்கு சிறிது பணம் சேர்த்து வைப்பதற்குத் தான் எத்தனை போர்கள் செய்ய வேண்டியதிருக்கிறது. உண்மையில் தன்னுடன் ஒப்பிடும்பொழுது ஒரு போர்க்கள வீரன் இரண்டாம் பட்சமாகத்தான் இருப்பான் என்று எண்ணிக் கொண்டார்.

மகள் வளர வளர செலவுகளும் அதிகரித்துக் கொண்டுதான் சென்றன. ஒரு ரூபாய் சேர்த்து வைப்பதற்குள் உயிர் போய்விடுகிறது. ஏதோ ரகசிய உளவாளியைப் போல பணத்தை சேர்க்க வேண்டியதிருக்கிறது. அடுத்ததாகத் தன் குழந்தைக்காக திரு. கோபால் செய்ய இருக்கும் போர் குழந்தையை படிக்க வைப்பது. பள்ளிகளில் கூட ஆங்கில வழி பள்ளிகூடம், தமிழ் வழிப் பள்ளிக் கூடம் என தனித்தனியாக பிரிந்து கிடக்கிறது. இதில் ஆங்கில வழி பள்ளியைத் தான் பலரும் தங்கள் குழந்தைகளுக்காக தேர்ந்தெடுக்கிறார்கள், கோபால் மட்டும் என்ன முட்டாளா?

இளம் வயதில் காவல் துறையில் சேர்வதற்காக கடுமையான உடற்பயிற்சிகளெல்லாம் மேற்கொண்டிருக்கிறார் திரு. கோபாலகிருஷ்ணன். அப்பொழுதெல்லாம் பொங்கி வராத வேர்வை, லத்திகாவை பள்ளியில் சேர்க்க சென்ற போது பள்ளித் தலைமை கேட்ட டொனேஷன் தொகையை கேட்டதும் மொத்தமாக வெளி வந்து விட்;டது. தமது நண்பர் ராம்கியிடம் கேட்டார் .

‘தலைச்சுற்றலுக்கு என்ன கூல்டிரிங் குடித்தால் நல்லது.”

‘அந்த ஏ.பி.சி.டி.யை சொல்லிக் கொடுக்க இவ்வளவு தொகை சற்று அதிகம்தான். வேறு என்ன செய்வது. சேமிப்பில்தான் கை வைக்க வேண்டும். எவ்வளவுதான் ஒழித்து; வைத்தாலும் பிடுங்கப்பட்டு விடுகிறதே. இந்த சமுதாயம் ஒரு மோசமான திருடனை விட அநியாயமானது. சற்று கூட மனசாட்சியற்றது. சிரித்துக் கொண்டே கேட்கிறானே அவ்வளவு பெரிய தொகையை”

தலை சுற்றி விழுவதற்குள் அந்த டொரினோவை குடித்து முடித்தார்.

பின் குழந்தை லத்திகா அநியாயத்துக்கு படிக்க ஆரம்பித்துவிட்டாள்.

எல்.கே.ஜி. யிலேயே இவ்வளவு ஆர்வமா என் வியந்து போனார். அது எவ்வாறெனில். இரவு 1.30க்கு எழுந்திருப்பாள், அப்பா மூச்சா வருது என்று கூறி அனைவரையும் எழுப்பி விட்டு கருப்பு பூனை பாதுகாப்பு படையுடன் பின் சூழ செல்வது போல் பாத்ரூம் வரை செல்வாள், பின் படுக்கைக்கு வந்து உடனே தூங்கிவிட மாட்டாள், ஏ.பி.சி.டி.யை முழுவதுமாக ஒரு முறை சொல்லிக் காண்பிப்பாள். கோபாலகிருஷ்ணன் தன் மகளுக்கு முன் கொட்டாவி விட்டு விடக் கூடாது எனக் கட்டுப்படுத்திக் கொண்டு உட்கார்ந்திருப்பார். பின் அவளாக விருப்பப்பட்டாள் தூங்குவாள், இல்லையென்றால் உடனே ஒரு ரைம்ஸ். ரைம்சை மட்டும் கோகிலாவிடம் தான் கூறுவாள். பின் காலை ஒரு முறை குளிப்பாட்டும் பொழுது, பின் இட்லி சாப்பிட்டுக் கொண்டே ஒரு முறை, அது எந்த அளவிற்கு கோபால கிருஷ்ணனை பாதித்திருந்தது என்றால். அலுவலகத்தில் ஏதோ ஒரு பைலில் தவறுதலாக ரைம்சை டைப் செய்யும் அளவிற்கு பாதித்திருந்தது. கோபாலகிருஷ்ணன் என்றைக்கு மதியம் தூங்கிவிழாமல் டைப் செய்திருக்கிறார். அரை தூக்கத்தில் குத்துமதிப்பாக எதையாவது டைப்செய்வது தான் அரசு அலுவலகத்திற்கு அழகு.

குழந்தை லத்திகாவின் கல்விச் செலவு கண்ணைக் கட்டியது. அவள் 5 வகுப்பு வருவதற்குள் சில லட்சங்கள் செலவாகி விட்டன. கோபால கிருஷ்ணன் ஓவர் டைம்மாக பார்த்து பார்த்து ஒல்லியாகிப் போனார். ஆனால் கோகிலா அப்படியில்லை. திருமதி. கோகிலா இதே ரேஞ்சில் போய்கொண்டிருந்தால், ஒரு சீன மல்யுத்த வீரனைப் போல ஆகிவிடுவார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

அன்று ஒரு நாள் குழந்தை லத்திகாவை உற்சாகப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு இப்படி ஒரு வாக்குறுதியைக் கொடுத்து விட்டார் கோபால். அவள் மட்டும் வகுப்பில் முதல் மாணவியாக வந்தால், ஒரு தங்கக் கைக்கடிகாரத்தைப் பரிசளிப்பதாக, லத்திகா வேறு புத்திசாலியாக இருந்தாள். அவளுக்கு தங்கத்திற்கும், தங்கமுலாம் பூசப்பட்டதிற்கும் இப்பொழுதே வித்தியாசம் தெரிந்திருந்தது. அவசரப்பட்டுவிட்டோமோ என்று மனம் வெதும்பிக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன். கடிகாரக் கடைக்கு சென்று ஒரு தங்க கைக்கடிகாரத்தின் விலையை கேட்ட பொழுது, அவரது ரத்த ஓட்டம் முழுவதுமாக நின்று போனது. இதயம் வேறு நான் இப்பொழுது துடிக்கவா? வேண்டாமா? என்று கேள்வி கேட்டது. மகளுக்கு கொடுத்த வாக்குறுதியை எப்படி மீறுவது. லத்திகா படிப்பதை பார்த்தால் அவள் இப்பொழுது பி.ஹெச்.டி. முடித்துவிடுவாள் போல. இதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் பீடிங் அதிகமாகிப்போன பூனை போல அன்பு மனைவி கோகிலா. அவளுக்கு என்ன கவலை. சாம்பாரில் உப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை தவிர.

லத்திகா சொன்னதை நிறைவேற்றிவிட்டாள். வேறு வழியில்லாமல் கோபால கிருஷ்ணன் முதன் முறையாக வட்டிக்கு கடன் வாங்க வேண்டியிருந்தது. மகளுக்கு அந்த வாட்சை போட்டுப் பார்த்து அன்று முழுவதும் அழகு பார்த்தார். கடினமான விஷயம் என்னவாக இருந்தது எனில் கோகிலாவை சமாளிப்பது தான். அவளது கேள்வி கேட்கும் திறமை ஒரு தேர்ந்த வழக்கறிஞருக்கும் வராது. திரு. கோபாலகிருஷ்ணன் மட்டும் மகாத்மா காந்தியின் சத்திய சோதனையை படித்து விட்டு உணர்ச்சியேற்பட்டு பொய் கூற மாட்டேன் என்று உறு1தி மொழி ஏற்றிருந்தால் என்னாவது? இந்நேரம் அந்த வீணை அல்லவா உடைந்திருக்கும் அவர் தலையில் பட்டு. பின் கோகிலாவின் உடல் பலத்திற்கு பூரிக் கட்டை எல்லாம் தீக்குச்சி போல் அல்லவா இருக்கும். வீணைதான் அவருக்கு தகுதியானது.

அவர் அந்த கடனை அடைப்பதற்குள் கண்ணாம்முழி இரண்டும் பிதுங்கி வெளியே வந்து விட்டது. இந்த உலகில் ஒரு போர் வீரனாக வாழ்ந்துவிடலாம். பாகிஸ்தான் காரனுடன் சண்டை போடுவது கூட அப்படி ஒன்றும் பெரிய விஷயமாக இருக்காது. இரண்டில் ஒன்று தெரிந்துவிடும். வாழ்வு அல்லது சாவு. ஆனால் ஒரு நடுத்தர குடும்பஸ்தனாக இருப்பது சாதாரண விஷயம் அல்ல. என்ன செய்வது என்று தெரியாத பல சூழ்நிலைகளை உருவாக்கி வேடிக்கை பார்க்கும் வாழ்க்கை. இங்கு வேறு ஆப்ஷனே கிடையாது. சாமாளித்து தான் ஆக வேண்டும்.

குழந்தைகளைப் பொறுத்த வரை தந்தையிடம் பரிசு வாங்குவது என்பது அழாதியான விஷயம். இதற்காக லத்திகா ஒவ்வொரு முறையும் முதல் மாணவியாக வந்து கொண்டிருந்தாள். கோபாலகிருஷ்ணனும் தன் சக்திக்கு மீறி செலவு செய்து கொண்டிருந்தார். மகள் தன்னிடம் ஏதேனும் கேட்டு அதை இல்லை என்று சொல்லிவிடும்; நிலை மட்டும் வந்து விடக் கூடாது என்று அவர் கடவுளிடம் வேண்டிக் கொண்டார்.

லத்திகாவிற்கு, தான் தன் தந்தையை சிரமப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது புரியும் வயதும் வந்தது. அவள் பத்தாவது படித்துக்கொண்டிருந்தாள். அவள் மெச்சூர்ட் ஆகியிருந்தாள். தந்தையிடம் கேட்பதை நிறுத்திவிட்டாள், ஆனால் பெரிய குழந்தை கோகிலா அப்படியில்லை. அவள் இன்னும் கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் இப்பொழுதெல்லாம் வீட்டுக்குள் செல்ல வேண்டுமானால், இரண்டு கதவையும் திறந்து வைக்க வேண்டியிருக்கிறது. அன்று ஒரு நாள் கேட்டாள். தன் இடுப்புக்கு தங்க ஒட்டியானம் வேண்டும் என்று. குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவெனில். கேட்டவுடன் மயங்கி மட்டுமே விழுந்தார் கோபால். இதயம் நன்றாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று டாக்டர் கூறிவிட்டார். இதெல்லாம் தெய்வச் செயலாக இல்லாவிட்டால் வேறு என்னவாக இருக்க முடியும். அந்த இடுப்புக்கு தங்க ஒட்டியானம், அதை நினைக்கையில், அதை கெட்ட கனவாக நினைத்து மறந்துவிடுமாறு நிமிடத்திற்கு ஒருமுறை ராம்கி சமாதானம் கூறிக் கொண்டேயிருக்க வேண்டியிருந்தது. இந்தியப் பெண்கள் உடற்பயிற்சி செய்வதேயில்லை. கேட்டால் வீட்டு வேலை செய்கிறேன் என்பார்கள்.

அன்று ஒரு விரும்பத்தகு விஷயம் நடந்திருந்தது. லத்திகா 10ம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மாணவியாக வந்து விட்டாள். அதை தன் தந்தையிடம் கூறுவதற்கு சங்கடப்பட்டாள். ஏனென்றால் இதைக் கேட்டதும், சந்தோஷ மிகுதியில் ஏதேனும் விலையுயர்ந்த பொருளை வாங்கித் தர பிரயத்தனப்பட்டுக் கொண்டிருப்பார். அவர் ஒரு சாதாரண அரசு அலுவலர். அவருக்கு இவ்வளவு சுமை என்பது சற்று அதிகம். ஆனால் விஷயம் ஒன்றும் சாதாரணம் இல்லையே. எப்படித் தெரியாமல் போய்விடும். தன் மகளின் போட்டோவைப் பத்திரிகையில் பார்த்த பொழுது, கோபால் அலவலகத்தில் காபி (அலுவலக செலவில்) குடித்துக் கொண்டிருந்தார். மகிழ்ச்சியில் காபியானது மூக்கின் வழியாக வந்து விட்டது சூடாக. அலுவலகத்திற்கு 10 நாள் விடுப்பு எழுதிக் கொடுத்து விட்டார். அலுவலக தலைமை அவரை ஆச்சரியமாக பார்த்தது. ஏனெனில் எறும்பு கடித்து விட்டால் கூட 20 நாள் லீவ் போடுவார்கள் இந்த அலுவலகத்தில். கோபாலுக்கு அரசு அலுவலகத்தின் மேல் சற்று கருணை உண்டு.

கோபாலகிருஷ்ணன் தன் மகளுக்கு பிடித்த இனிப்புகளையெல்லாம் வாங்கிக் கொண்டார். அவளுக்கு என்ன பரிசளிக்கலாம் என வெகு நேரம் சிந்தித்தன் விளைவாய் ஒரு முடிவுக்கு வந்தார். ஒரு அழகான ஸ்கூட்டி பெப் தான் அது, அது தன் மகளுக்கு ஏற்ற இரு சக்கர வாகனம். தன் மகளுக்கு ரோஸ்கலர் பிடிக்கும் என்று தெரியும். வீட்டிற்கு செல்லும் பொழுது வண்டியோடுதான் செல்ல வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டார். ஆனால் அவரது துரதிஷ்டம் ரோஸ் வண்ணத்தில் எந்த வண்டியும் ஸ்டாக் இல்லை. பிடிவாதம் என்றால் அப்படி ஒரு பிடிவாதம். வண்டி வந்தால் தான் கடையை மூடவிடுவேன் என ரௌடியிசம் செய்ய ஆரம்பித்துவிட்டார். அவருக்காக பக்கத்து ஊர் ஷோ ரூமிலிருந்து குட்டியானையில் (ஆட்டோவில்) ஏற்றி வரப்பட்டது அந்த வண்டி. மணி 10 ஆகிவிட்டது. தன் மகள் தான் முதன் முதலில் அந்த வண்டியை ஓட்ட வேண்டுமென்பது அவரது விருப்பம். ஷோரூமிலிருந்து வண்டி பார்சல் செய்து தூக்கி வரப்பட்டது. அந்த பகுதியே கோபாலகிருஷ்ணன் வீட்டில்தான் குடியிருந்தது. லத்திகாவிற்கு ஏக மகிழ்ச்சி இவ்வளவு பெரிய பரிசை அவள் எதிர் பார்த்திருக்கவில்லை.

பின் தன் மகளின் படிப்பு விஷயத்தில் அதீத ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டார். இரவு நேரங்களில் ஒருகையில் ஹார்லிக்ஸ் மற்றொரு கையில் ப்ளாஸ்க் என கடிகாரத்தை பார்த்த படி காத்து கொண்டிருப்பார். படித்துக் கொண்டிருக்கும் லத்திகா கேட்கிறாளோ? இல்லையோ? அவளுக்கு ஹார்லிக்சை கலந்து குடுப்பது அவரது தலையாய கடமை. தன் மகள் படித்துக் கொண்டிருக்கும் பொழுது கரண்ட் கட் ஆகிவிட்டாள் அவ்வளவு தான், ஈ.பி காரன் தொலைந்தான். பின் ஒரு ஜெனரேட்டரை வாங்கி வைத்துக் கொண்டார். தன் மகள் இரவு நேரங்களில் அதிக நேரம் படிப்பதால் கண்ணாடி போடும் சூழ்நிலை உருவாகிவிடுமோ என பயந்து கொண்டிருந்தார். வைட்டமின் நிறைந்த கீரை வகைகளை அதிகமாக உணவில் சேர்த்து கொடுத்தார். நல்ல வேலையாக அவளுக்கு அப்படியொரு சூழ்நிலை உருவாகவில்லை. எதிர் பார்த்தது போல் 12ம் வகுப்பிலும் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் வாங்கினாள்.

இந்தியாவை பொறுத்தவரை மாவட்ட அளவில் யாரேனும் நல்ல மதிப்பெண் வாங்கி, அவர் மருத்துவப் படிப்பை தேர்ந்தெடுக்காவிட்டால் அவரது மூளை குழம்பிவிட்டது என்று அர்த்தம். நேராக அறைக்குள் சென்று கால்மேல் காலை போட்டுக் கொண்டு. தன் மகளுக்கான மருத்துவக் கல்லூரியை தேர்ந்தெடுத்தார் கோபால். தமிழ் நாடு கல்வித்துறை மட்டும் ஏதேனும் காரணம் கூறி தட்டிக் கழித்திருக்கும் பட்சத்தில் குறைந்தபட்சம் 4 பேருந்தையாவது கொழுத்தியிருப்பார். நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. தனது சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி தனது மகளை படிக்க வைத்தார்.

கோபாலகிருஷணன் ஓவர் டைமாக பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட அலுவலக தலை மிரண்டு போனது. பின அந்த பதவி உயர்வை அவருக்கு அளித்து தன்னை கவுரவித்துக் கொண்டது அரசு அலுவலகம். அவர் தனக்கான சம்பள உயர்வை பற்றி மனைவி கோகிலாவிடம் கூறவில்லை. காரணம் தன் மகளுக்கான சேமிப்பிற்கு அது உதவும் என்பதுதான்.

அன்று ஒரு நாள், உடல் நிலை சரியில்லாமல் போகவே. நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த லத்திகா. தன் தந்தைக்கு மருத்துவம் செய்தாள். அவள் குத்திய ஊசியால் அழுகை வந்து விட்டது அவருக்கு. அனைவருக்கும் தெரியும் ஊசி என்றால் உயிர் போகக் கத்துவார் என்பது. ஆனால் அன்று அழுத அழுகை. அது என்ன விதமானது என்பது லத்திகாவிற்குத் தெரியும். தன் உடல்நிலை சரியில்லாமல் போனது குறித்து அன்று மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார் கோபாலகிருஷ்ணன். வலி சுகமாகும் தருணம் அழகானது. அந்த அனுபவம் கிடைத்ததற்காக நன்றி கூறினார் கடவுளுக்கு.

தன்னை மொத்தமாக இழந்து தன் மகளை உருவாக்கிவிட்ட சந்தோஷத்தில் திளைத்திருந்த சமயத்தில் தான் அவளின் திருமண வயது நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தார். இன்னும் ஓய்வெடுக்கும் வயது வரவில்லை என்பதை உணர்ந்தவராய் செயல்பட ஆரம்பித்தார். தான் இதுவரை ரகசியமாக சேர்த்து வைத்தது, தனது சம்பள உயர்வு சேமிப்பு மற்றும் தான் ஆசையாக கட்டிய வீட்டை அடமானமாக வைத்து வங்கியில் வாங்கிய சில லட்சங்கள் என ஒட்டு மொத்தமாக தன்னை காலி செய்து தனது பெண்ணிற்கான மணமகனை தேர்வு செய்து திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்தார். தனது ரிடையர்டுமென்ட் பணத்தை வைத்து தான் அவர் வீட்டை திருப்ப வேண்டும். இப்பொழுது அவர் ஒரு ஜீரோ. ஒன்றுமற்றவர். ஒட்டு மொத்தமாக, எந்த எதிர்பார்ப்புமற்று தன்னை பங்கிட்டு கொடுத்தவர்.

அன்று கோகிலா, கோபாலிடம் எதார்த்தமாக இவ்வாறு கூறினாள்.

‘உங்க சம்பள உயர்வ வச்சு எனக்குத்தான் தங்க ஒட்டியானம் வாங்கிக் கொடுக்கல. ஆனா நம்ம பொண்ணுக்கு பண்ணி போட்டிங்களே, எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்று கோபால், தான் மறைத்ததாக நினைத்த விஷயம் கோகிலாவிற்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. என்ன அழகான புன்னகை அவரிடமிருந்து வெளிப்பட்டது தெரியுமா.

இழப்பு எப்பொழுது சுகமாகும் என்பது, அது யாருக்காக என்பதை பொருத்தது. தனது அன்பு மகள் தன்னை ஏதோ ஒரு வகையில் நிறைவடையச் செய்துவிட்ட பிறகு இழப்பு குறித்து கவலைப்பட என்ன இருக்கிறது. அவள் அழகானவள். அவள் தைரியமானவள். அவள் புத்திசாலி. அவள் அவர் மகள்.

சில வருடங்களுக்கு பிறகு

உடல் வலுவிழந்து மரணப் படுக்கையில் இருந்தபடி நேரத்தை எண்ணிக் கொண்டிருந்த சமயம். உயிர் போய் விடும் முன் மகளைப் பார்க்கும் ஆர்வம் கண்களில் மின்னியது. கோபாலகிருஷ்ணன் ஏக்கத்தின் உச்சத்திலிருந்தார். லத்திகாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவள் டெல்லியிலிருந்தாள் தனது குடும்பத்துடன்.

லத்திகா : அப்பா உடம்புக்கு எப்படியிருக்கு

கோபால் : (பேச முடியாவிட்டாலும் குரலை கேட்டுவிட்ட சந்தோஷத்தில் கண்ணீர் வழிந்தது.)

லத்திகா : அப்பா நான் உடனே வருகிறேன்.

கோபால் : (தான் அவ்வளவு கொடுத்து வைத்திருக்கும் பட்சத்தில், தனது கண்கள் மூடிவிடாது என்று தன்னம்பிக்கையோடு கார்த்திருக்க ஆரம்பித்தார்)

அவரது கண்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “அன்பு மகள்

  1. அன்புக்குரிய சூர்யா அவர்களே ,

    இந்த கதையை படிக்கும் பொது சிரித்தேன் , மகிழ்ந்தான் ,
    அழுதேன் ,படித்து முடித்த பின்பு சிந்திக்கிறேன்.
    ஒரு பெண் குழந்தையை வளர்க்கும் தாய் ,தந்தை வாழ்கையை மிகவும் அழகிய கதை அம்சத்தில் எழுதி உளீர்கள் .

    நன்றி .

    வசந்தராஜா .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *