கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 9, 2021
பார்வையிட்டோர்: 9,764 
 

“அய்யிரு செத்துப் போனதிலிருந்து ஆறு மாசமா பெருமாளு பட்டினிதான், சாமி. புள்ளாகோவுல்லாம் தெனப்படி நடக்குது. பெருமா கோவுலை உட்டுட்டாங்களே!’ என்று அங்கலாய்த்தான் அளவுகார ராமசாமி நாயக்கன். தாத்தா வரதாச்சார், கொள்ளுத் தாத்தா சடகோபாச்சார் மற்றும் ஆசூரி பரம்பரையே பட்டாச்சார்களாக இருந்து கைங்கர்யம் பண்ணிவந்த கருமாணிக்கப் பெருமாள் கோயிலை மூடிவிட்டார்கள். அர்ச்சகம் பண்ண ஆள் இல்லை. ஊரில் இருக்கும் பிராமணர்களுக்கு மனதில்லை; வெளியிலிருந்து யாரும் வந்து செய்வதற்கும் முன்வரவில்லை. ஏனென்றால், கோயிலுக்கு வரும்படி ஒன்றும் அதிகம் கிடையாது. ஆகவே கோயிலை இழுத்து மூடிவிட்டார்கள்.

அவன் சாதாரண விஷயமாகத்தான் சொன்னான். நானும் சாதாரண மாகத்தான் அசட்டையாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது அது விசுவரூபம் எடுத்து ஒரு பிரச்னையாக எனக்குத் தோன்றிக்கொண்டு இருந்தது. மயூரம்பட்டி ரொம்பதான் மாறிவிட்டது. இந்தக் கருமாணிக்கப் பெருமாளுக்கு ஒரு காலத்தில் நடந்த சேவை என்ன, சாற்றுமறை என்ன! சிங்கப் பெருமாள் கோவிலில் இருந்து பல்லக்கும், குடைகளும் சாமரங்களும் வரும். சாற்றுமறைக்குப் பட்டு பட்டாச்சார் வருவார். ஆசார்யன் முதலியாண்டான் ஸ்வாமியும் எள்ளியிருப்பார். அப்பாவும் ராகவாச்சாரும் தடபுடல் பண்ணுவார்கள். தூப தீபங்கள் என்ன, வானவேடிக்கைகள் என்ன, வேதபாராயண கோஷ்டிகள் என்ன, மடைப்பள்ளியில் இருந்து புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் பிரசாதங்களின் மணம் என்ன…..! பின்னால் திவ்யப்பிரபந்த கோஷ்டியுடனும், முன்னால் அங்கப்பனின் கம்பீரமான நாதஸ்வர முழக்கத்துடனும், உத்ஸவர் பார்த்தசாரதி பெருமாள் ஜாம் ஜாம் என்று வீதி உலா வருவார்.

இதையெல்லாம் நான் ஏன் இப்போது நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்? நான் இப்போது இங்கு வந்ததே அனாவசியம். எனக்கு இங்கே என்ன இருக்கிறது? அப்பா வைத்து விட்டுப்போன இந்த இடிந்து விழுந்துகொண்டிருக்கும் வீட்டைப் பார்க்க வந்ததே அசட்டுத்தனம். கலிபோர்னிய பல்கலைக்கழகப் பேராசிரியர் மயூரம்பட்டியில் இருக்கும் தன்னுடைய சொத்தான இந்த இடிந்துகொண்டிருக்கும் வீட்டைப் பார்க்க வந்திருப்பதை ஊர்க்காரர்கள் கூட கேலி பண்ணிக் கொண்டு இருப்பார்கள். ஆனாலும் இப்போதெல்லாம் எனக்கு பைத்தியக்கார எண்ணங்கள் நிறையவே தோன்றிக் கொண்டிருக்கின்றன. அப்பா செத்துப்போன பிறகே இந்த மாதிரிதான்.

கோவிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தேன். முள்ளும் புதருமாக உள்ளே நுழையவே முடியாதபடி இருந்தது. காம்பவுண்டுச் சுவர் ஒரு பக்கம் இடிந்து விழுந்து விட்டிருந்தது. மடைப்பள்ளிச் சுவர் வீறல் விட்டு எப்போது விழலாம் என்று காத்துக் கொண்டிருந்தது. கூடவே வந்து தொணதொணத்துக் கொண்டிருந்தான் மருது வீராசாமி நாயக்கன். கேசவாச்சார் போய் விட்டார்; அவர் ஆம்படையாள் கோதை மாமிதான் இப்போது இருக்கிறாளாம். மாமா போன பிறகும் சொந்தப் பயிர்தானாம்; கோபாலன் வாரம் இருமுறை காரில் வந்து பயிர் பச்சையைப் பார்த்துக் கொள்கிறானாம். ஊர் தி.மு.க., அ.தி.மு.க. என்று இரண்டாகிவிட்டது. அக்ரஹாரத்தில் கண்டவர்களும் வீடு கட்டுகிறார்களாம். தெய்வ நிந்தனை வேறு. ரங்குடு பெருமாள் நாயக்கன் பெண்ணோடு குடும்பம் நடத்துகிறான்; கேட்பார் கிடையாது. யாருக்கும் ஊரைப் பற்றியோ கோவிலைப் பற்றியோ அக்கறை கிடையாது…. வீராசாமி நிறுத்தமாட்டான் போலிருக்கிறது.

எனக்கு எதற்கு இந்த வம்பெல்லாம்? இன்னும் ஒரு வாரம். அப்புறம் நான் இந்திய மண்ணிலேயே இருக்கப் போவதில்லை. அப்பா வருஷாப்தீகத்தை முடித்துவிட்டுப் போக வேண்டியதுதான். அப்புறம் நான் உண்டு, சோயிங்கா, அரபிந்தோ, ஏ. கே. ராமானுஜன், மற்ற காமன் வெல்த் இலக்கியங்கள் உண்டு.

மருது வீராசாமி நாயக்கன் தான் இப்போது கோவிலுக்கு ‘பிட் பர்ஸன்’ முன்பெல்லாம் ‘தர்மகர்த்தா’ என்று சொல்வார்களே, அந்தமாதிரி போல் இருக்கிறது. தமிழில் தன்னை ‘தக்கார்’ என்று சொல்லிக் கொள்கிறான். கோவிலைத் திறந்து ‘சாமி’ யைக் காண்பிக்காமல் என்னை விடமாட்டானாம். திறக்கிறான்.

அதே பழைய பூட்டு தான். இந்தப் பூட்டை நானும் தினமும் திறந்ததுண்டு. பதினைந்து, பதினெட்டு வருடங்களுக்கு முன்பு இருக்குமா? அப்போது நான் சென்னையில் படித்துக் கொண்டு இருந்தேன். வெகேஷனுக்கு ஊருக்கு வருவேன். அப்பாதான் கோவில் அர்ச்சகர். அப்பா அர்ச்சகர் ஆனதும் தற்செயலாக நிகழ்ந்ததுதான். ஏற்கெனவே கோவில் பண்ணிக் கொண்டிருந்த ராகவாச்சார் திடீரென்று காலமாகி விட்டார். இப் போது தோன்றுகிறது, எய்ட்ஸ் மாதிரி ஏதாவது இருக்கலாம் என்று ; அவ்வளவு பிரக்யாதி அவருக்கு. அப்போது அதெல்லாம் யாருக்குத் தெரியும்? நன்றாக இருந்தவர் திடீரென்று போய் விட்டார்; பார்த்தசாரதி கூப்பிட்டுக் கொண்டான். ‘உயர்வற உயர் நலம் ….’ என்று சீமாச்சு பெரியப்பா தஸாஸிகத்தில் சொல்லிக் கொண்டிருந்தார். ஆக, போய்விட்டாரா, கோவில் மூடி இருக்கக் கூடாது என்று அப்பா பண்ண ஆரம்பித்தார். பிறகு வேறு யாரும் கிடைக்காததால் அவரே நிரந்தரமாகப் பண்ண வேண்டி இருந் தது. ‘வெகேஷனில் இரண்டு மாதமும் நான் தான் கோவிலைத் திறப்பேன்; அப்பா நேரடியாக மடைப்பள்ளிக்குப் போய்விடுவார். இந்தக் கருமாணிக்கப் பெருமாளைச் சுற்றி எப்போதும் நல்ல பாம்பு உண்டு. ஆனால் எங்களுக்கு அதெல்லாம் பழக்கமாகி விட்டிருந்தது. திருப்பள்ளியெழுச்சி சொல்லிக் கொண்டு கையைத் தட்டிக் கொண்டே போய் சன்னதியைத் திறப்பேன்.

சன்னதியைத் திறக்கும்போது வீராசாமிக்கு ஏன் இப்படி கைகள் உதறுகின்றன? பயம். ஒரு சமயம் அப்பா திருவாராதனம் பண்ணிக் கொண்டு இருக்கும்போது ஏழுமலை நாயக்கன் கோவிலுக்கு வந்திருந்தானாம். அவன் தான் அப்போது பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்டு. அப்பா பெருமாளுக்குக் கர்ப்பூர ஹாரத்தி பண்ணிக் கொண்டு இருக்கிறார். அவருக்குப் பின்னால் ஒரு நல்ல பாம்பு படம் எடுத்துக் கொண்டிருப்பதை ஏழுமலை நாயக்கன் பார்த்துவிட்டான். இப்போது ஆழ்வாராதிகளுக்குக் கர்ப்பூரஹாரத்தி; அப்பா முன்னால் வந்து கொண்டிருக்கிறார். பாம்பும் படம் எடுத்துக் கொண்டே பின்னால் வந்து கொண்டு இருக்கிறதாம். இதோ முட்டியளவு படம் எடுத்து நிற்கிறது. ஏழுமலைக்கு வாய் வரவில்லை. வெளியில் ஓட நினைக்கிறான் ; கால்கள் எழும்பவில்லை. வேர்த்து விறுவிறுத்து அவன் சட்டை நனைந்துவிட்டது. இப்போது பலிபீடத்துக்குப் பிரசாதம் எடுத்துக் கொண்டு அப்பா சன்னதியை விட்டு வெளியே வருகிறார். பாம்பும் பின்னாலேயே வருகிறது. எப்படியோ அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வருகிறான் ஏழுமலை. துவஜஸ்தம்பத் தண்டை நின்று கொண்டு ‘பாழு …. பாம்.’ என்று உளறிக்கொட்டுகி றான். அப்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘உள்ளே வா’ என்று சைகை காண்பித்துவிட்டுப் பிரசாதத்தைப் பலிபீடத்தில் வைத்துவிட்டு அவர் உள்ளே போகிறார். “சாமி, பாம்பு … பாம்பு ….. வெளியே ஓடி வாங்க”, என்று சுதாகரித்துக் கொண்டு கத்தினானாம். அப்பா திரும்பிப்பார்க்கிறார்; அவர் கண்ணுக்குப் பாம்பும் தெரியவில்லை, தேளும் தெரியவில்லை. ஏழுமலை பார்க்கிறானாம், வேஷ்டிக்குப் பக்கத்தில் படம் எடுத்து ஆடிக் கொண்டிருக்கிறதாம். அதற்கப்புறம் அவன் பெருமாள் கோவில் பக்கமே வந்ததில்லை. அப்பாவிடமும் அதற்கப்புறம் பத்து அடி தள்ளி நின்று பயத்துடன் பேசுவான்.

வீராசாமி உடம்பு உதறலுடன் சன்னதியைத் திறந்து விட்டான். ஆறு மாதமாகத் திறக்காத சன்னதி. முன் பெல்லாம் நிலம், நீர் என்று வாழ்ந்து கொண்டு இருக்கும்போது கிடங்குள் முழுவதும் கதவைத் திறக்க முடியாத அளவுக்கு நெல் கொட்டியிருப்பார்கள். ஏணி போட்டு ஏறி மேலே உள்ள அந்தச் சின்னக் கதவைத் திறந்தவுடன் ‘நொய்ய்…’ என்று ஒரு சுணையும் புழுக்கமும் வந்து தாக்கும். அந்த மாதிரி ஒரு புழுக்கம் வந்து முகத்தைத் தாக்கியது. பார்த்தசாரதி தாயார்கள் சகிதம் சேவை சாதித்துக் கொண்டு இருந்தான். வஸ்திராபரணங்கள் அப்பா போவதற்கு முன்பு அணிவித்தவையாக இருக்க வேண்டும். வலது பக்கம் கண்ணன் காளிங்க நர்த்தனம்; பஞ்சலோக விக்ரகம். அதற்கப்புறம் சக்கரத்தாழ்வார், சாளக்கிராமங்கள். பின்னால் பூஞ்சைக்காளான் பூத்து மூலவர் கருமாணிக்கப் பெருமாள். ‘கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்…ஆச்சர்யம்; பதினெட்டு வருடங்களுக்குப் பிறகும் எனக்கு இந்தப் பழக்கம் போகவில்லை!

கோவிலைப் பூட்டிக்கொண்டு வெளியே வந்தோம். நெருஞ்சி முட்கள் காலைக் குத்தின. அளவுகார கேசவ நாயகன் வீட்டு மண் திண்ணையில் வம்பளந்து கொண்டிருந்த கூட்டம் எழுந்து நின்று அமெரிக்காவுக்கு மரியாதை கொடுத்தது. கோதண்டம் ஓடி வந்தான். முண்டாசை அவிழ்த்து கக்கத்தில் இடுக்கிக் கொண்டு கும்பிடு போட்டான். அவன் தான் இப்போது பள்ளக் கழனியைப் பயிரிடுகிறானாம். அந்த ஒரு நிலம்தான் அப்பா வைத்து விட்டுப் போனது; மற்றதையெல்லாம் விற்று ‘தாம் தூம்’ பண்ணிவிட்டுருந்தார். விஜயந்தாளடி, தொட்டாச்சார் மானியம், ஏழாம் மேடு, மணியாரர் கழனி இவையெல்லாம் பொன் விளையும் பூமி; எல்லாம் போய்விட்டது. கோதண்டம் பள்ளக்கழனியைப் பார்க்க வருமாறு கூப்பிட்டான். பார்க்க வேண்டிய இடம்தான்; அதன் விளைச்சலில் தான் அப்பா இருந்தவரை கருமாணிக்கப் பெருமாளுக்கு நித்தயப்படி நடந்து கொண்டிருந்தது.

“அந்தப் பக்கம் வழியில்லை, சாமி; இப்படி…” கோதண்டம் முன்னே நடந்தான்.

கோடியாத்து ரங்குவின் காய்கறித் தோட்டம் இருந்த இடத்தில் இப்போது ஒரு வீடு எழும்பி இருந்தது. அந்த வீட்டைத்தாண்டி , ஒற்றைத்தெருக். கோடியைக் கடந்து, பஜனைக் கோவிலைப் பிரதிட்சணமாக வந்து, முழங்கால் அளவு தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும் தொப்பக் கால்வாயைக் கடந்து வரப்பில் ஏறினவுடன் ஏரிக்காற்று ‘ஜில்’ என்று வந்து உடம்பைக் கவ்விக் கொண்டது. கண்ணுக் கெட்டின தூரம் வரை பசுமை. ஏரிப் பாய்ச்சல், மூன்று போகம் விளையாத நிலம் அங்கு கிடையாது. தொண்டானையும் சாலையும் வைத்துக் கொண்டு ‘கவலை’ இறைக்கும் அந்தப் பழைய காட்சியைக் காணோம்; எங்கு பார்த்தாலும் பம்ப் செட்டுகள்.

அது யார் அது கீழண்டை வயலில் அண்டை கட்டிக் கொண்டிருப்பது? அம்மங்காளா அது? அவளே தான்! வெற்றிலைச் சாற்றைத் துப்பிவிட்டு ஒயிலாக எழுந்து நின்று உற்றுப் பார்த்தாள். பிறகு கலீரென்று சிரித்தாள். என்னத் தைக்கண்டு இப்படிச் சிரிக்கிறாள்? “என்ன வேண்டியிருக்கிறது, எப்பப் பார்த்தாலும் ஒரு தேவடியாச் சிரிப்பு சிரிச்சுண்டு!” என்று எச்சம்மா பாட்டி இவளைக் கரித்துக் கொட்டுவது ஞாபகம் வருகிறது. எச்சம்மா பாட்டி ஆயுளில் ஒரு தடவையாவது சிரித்திருப்பாளா? அது என்ன எச்சம்மா என்று ஒரு பெயர்? நாற்பத்தைந்து வயது இருக்குமா இவளுக்கு? இருக்கும். நாற்பத்தைந்து வயதில் இவள் தலையில் ஒரு முடி கூட நரைக்கவில்லை. எனக்கு முப்பது வயதில் தலை தும்பையாகி இருக்கிறது. தேக்கில் இழைத்தால் போல மழமழவென்று கால்களும் கைகளும். கருப்பு, கருப்பு, தொட்டால் ஒட்டிக் கொள்ளும் கருப்பு. அந்தக் கருப்பில் ஒரு மினு மினுப்பு வழுக்கிக்கொண்டு ஓடியது. உடம்பிலும் அந்தப் பழைய கட்டுக்கோப்பு அப்படியே இருந்தது. ராகவாச்சாரியாரைப் பைத்தியமாக ஆட்டி வைத்த உடம்பு அல்லவா அது! கருமாணிக்கப் பெருமாளுக்குக் கைங்கர்யம் பண்ணியவர்களில் இவளிடம் மயங்கிப் போகாதவர்கள் யார்? இவளும் அதைக் கைங்கர்யமாகப் பண்ணிக்கொண்டிருந்தாளோ என்னமோ! எனக்கு ரொம்ப நாளாகத் தெரியாது. “வேட்டைக்காரத் தேவடியாளுக்கு அக்ரஹாரத்து ஆம்பிளைகள் எல்லாரிடமும் என்ன ஸ்வாதீனம் பார்!” என்றெல்லாம் அக்ரஹாரத்துப் பெண்கள் வயிற்றெரிச்சலுடன் சொல்லிக் கொள்வார்கள். அதெல்லாம் அவ்வளவாக விவரம் தெரியாத வயது. பின்னால் நேரடியாக ஒரு நாள் தொட்டாச்சார் கொல்லையில் மாங்காய் பறிக்கப் போனபோது கண்ணாலேயே பார்த்துவிட்டேன். அலறியடித்துக் கொண்டு ஓடப் போனேன். கலீர் என்று கையைக் கொட்டிக் கொண்டு சிரித்தாள். அதே சிரிப்புதான் இப்போதும் சிரிக்கிறாள்; மனது விட்டுச் சிரிக்கிற சிரிப்பு, அந்த பழைய சம்பவத்தை நினைத்துக் கொண்டாளோ என்னமோ!

“சின்னய்யிரு புள்ள பெரிசும்மே! இன்னா, மலைச்சுப் போய் அப்படிப் பாக்குறே?” என்றான் கோதண்டம்.

“எனக்குத் தெரியாதாக்கும்! அவங்க தாத்தாவே வரப்பலன்னா இருந்தது!”

கண்கள் சிட்டுக்குருவி போல மேலும் கீழும் பறந்து கொண்டிருக்க, முகத்தில் குறுகுறு என்று சந்தோஷம் பொங்கிக் கொண்டிருந்தது. எங்கிருந்து இவளுக்கு இவ்வளவு சந்தோஷம் வருகிறது?

“கண்ணாலம் கட்டிக்கிலையா, கண்ணு?” என்று புன்முறுவலுடன் கேட்டாள். ‘இல்லை’ என்று தலை அசைத்தேன்.

அகன்று விரிந்து குறுகுறுத்த அந்தக் கண்கள் திடீரென்று சிறுத்து மங்கி எங்கோ தூரத்தில் பார்த்தன. முகம் விகசித்து ஒரு சமயம் அழுது விடுவாளோ என்று தோன்றியது. பரந்து எழுந்த மார்பகம் விம்மி அடங்கி ஓர் ஆழ்ந்த பெருமூச்சை வெளியிட்டது.

“அய்யிரு தெய்வமா வாழ்ந்துட்டுப் போயிட்டாரு. பெருமாளெ நெனக்காத நேரம் கெடயாது. செத்துப்போன ஒரு வாரத்துக்கெல்லாம் அந்த ரெண்டு நாகமும் எரை எடுக்காமக் கோயிலை சுத்திச் சுத்தி வந்து மடப்பள்ளி எதிரே உயிரை உட்டுதே! அந்த அதிசயம் எங்கு நடக்கும்!” பல பலவென்று கண்ணீர் உகுத்தாள்.

அம்மங்காளும் பெருமாளுக்கு நிறைய சேவை செய்திருக்கிறாள். பார்த்தசாரதிக்குப் புஷ்ப கைங்கர்யம் பண்ணுவாள். நந்தியாவட்டைக்கும், அரளிக்கும், பாரிஜாதத்துக்கும் தண்ணீர் ஊற்றுவாள். கோவிலைச் சுற்றியும் சுத்தம் செய்வாள். தனுர் மாதம் வந்து விட்டது என்றால் விடியற்காலையில் எழுந்து பெருக்கிக் கோலம்போட வந்து விடுவாள். வரக் கொஞ்சம் தாமதமாகி விட்டால், “இந்த … யை எங்கே இன்னும் காணோம்?” என்று செல்லமாக வைது கொண்டே கேட்பார் ராகவாச்சார். கார்த்திகைக்கு விளக்குக்குத் திரி திரிப்பாள். ஏரியில் விடும் தீபகலசத்துக்கு செங்கல் பொடி பண்ணிக் கொண்டு இருப்பாள். அவளை ‘வேண்டாம்’ என்று யாரும் சொன்னது கிடையாது; சொன்னாலும் அவள் கேட்கிற ஜென்மம் இல்லை. “இந்த ஊர்லே கேட்பார் பொடைப்பார் கிடையாதா? எந்த வேளையும் ஒரு வேட்டைக்காரியைக் கோவில்ல வெச்சுண்டு!” என்று கோடியாத்து வேதம் பாட்டி அரற்றிக் கொண்டு இருப்பாள். இப்போது ஒருவருடமாக அதெல்லாம் இல்லாமல் இவள் என்ன பண்ணிக் கொண்டிருப்பாள்?

“என்ன, கண்ணு, என்னமோ ரோசனை பண்ணிக்கினு இருக்கியே?”

திடுக்கிட்டுத் தலை நிமிர்ந்தேன். “அம்மாவை நல்லா கவனிச்சுக்க, சாமி. விசாரிச்சதா சொல்லு.” சொல்லிவிட்டு மீண்டும் ஒரு புன்னகையை வீசினாள்.

கால்வாயில் சல சல வென்று ஒரே சீராக தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. மோழையிலிருந்து ஒரு நீர்க்கத்தான் குட்டி வெளியே வந்து உடம்பை வளைத்து வளைத்து நீந்திக் கொண்டிருந்தது. ஒரு நண்டு அதன் பக்கத்திலிருந்து ஓர் அரைவட்டம் அடித்து விலகிச் சென்று கொண்டிருந்தது. தவிட்டுக்குருவி ஒன்று டக்கென்று ஓடும் நீரில் ஒரு முழுக்குப் போட்டுவிட்டு உடம்பைச் சிலிர்த்துக் கொண்டு உயரப் பறந்து சென்றது. நான் மேலே நகர்ந்தேன். மனது. இப்போது ஏதோ சங்கல்பம் செய்து கொண்டுவிட்டாற்போல் பிரச்னைகள் இன்றி லேசாக இருந்தது. மற்றவர்களை சந்தோஷப்படுத்துவது என்பது எல்லோருக்கும் வந்துவிடாது; சிலருக்குத்தான் அதைக் கடவுள் பிரசாதமாகக் கொடுத்திருக்கிறான்.

ராகவாச்சார் வேதம் படித்தவர்; நாலாயிரமும் தெரிந்தவர். அப்பாவுக்கும் நாலாயிரமும் பாடம்; கூட ஆங்கிலமும் படித்திருந்தார். வெண்கல மணியின் ‘டாண்…டாண்’ சப்தத்துடன் கலந்து, அவர்கள் இருவரும் கணீர் என்ற குரலில் பிரபந்தங்களைச் சொல்லிச் சேவைபண்ணும்போது மற்றவர்களுடன் சேர்ந்து பார்த்த சாரதியும் மெய்மறந்து நிற்பதுபோல இருக்கும்.

அப்பேர்ப்பட்டவர்கள் இந்த வேட்டைக்காரியிடம் என்னத்தைக் கண்டிருப்பார்கள் என்று நான் ஆச்சர்யப் பட்டதுண்டு. அதற்கெல்லாம் வயது வேண்டும்; நேரடி அனுபவம் வேண்டும்; கற்பனாசக்தி வேண்டும். அப்பாவும் ராகவாச்சாரும் அனாவசியமான சிந்தனைகளால் வாழ்க்கையைப் பிரச்சினை ஆக்கிக் கொள்ளாமல் சாதாரணமாக இருந்து சந்தோஷமாக வாழ்ந்துவிட்டுப் போனவர்கள். இந்த முப்பது வயது வரை நான் கண்டது என்ன? அனுபவங்கள் இன்றிப் புத்தகங்கள் படித்துக் குழம்பிய தெளிவற்ற சிந்தனை; மேலும் சிந்தனை; குழப்பம். இரண்டும் இரண்டும் நான்கு என்று கணக்குப் போட்டு வாழ்ந்த கொடுமையான வாழ்க்கை. அப்பாவும் ராகவாச்சாரும் தவறுகள் புரிந்து கொண்டு, சாதாரண மனிதர்களாக வாழ்ந்து கொண்டு, பார்த்தசாரதியிடம் முறையிட்டுக் கொண்டு சந்தோஷமாக இருந்தவர்கள்.

சம்பந்தம் இல்லாமல் கலீன் மக்கெல்லோவின் ‘தி தார்ன் பேர்ட்ஸ்’ ஞாபகம் வருகிறது. பிரம்மசர்யப் பிரமாணத்தை மீறிய ஜேசுவிட் பாதிரி ரால்ப், கார்டினல் விட்டோரியாவிடம் வந்து ‘கன்பெஸ்’ பண்ணுகிறார். விட்டோரியா அழகாக ஆறுதல் சொல்கிறார். “நாம் பிறக்கும்போது பாதிரிகளாகவா பிறந்தோம்? நாம் முதலில் மனிதர்கள்; பிறகுதான் எல்லாம். நீ தவறு செய்யாதவரை ‘தான்’ என்ற கர்வமும் அகம்பாவமும் உன்னிடம் இருந்தது. உன்னுடைய கர்வத்தால் லூஸிபர் ஆசைப்பட்ட அந்த இடத்தை நீயும் அடைய நினைத்தாய். இப்போது உன்னிடம் பணிவு வந்திருக்கிறது; மண்டியிட்டு இதயம் திறந்து கடவுளிடம் வருகிறாய். எல்லாம் இறைவனின் லீலா விநோதங்கள்!

“இங்க உக்காரு சாமி. ஒரு நிமிஷம். இதோ வந்துடறேன்.” வீராசாமி படலைத் திறந்துவிட்டு தொழுவத்தை நோக்கிச் சென்றான்.

நாற்காலியில் சாய்ந்து கொண்டு தோட்டத்தைத் தாண்டி பார்வையைச் செலுத்தினேன். பெரிய குளத்து மேட்டிலிருந்து இறங்கிய மாடுகள் இரண்டும் மூன்றுமாக உள்ளே வந்து கொண்டிருந்தன. நெற்றி வெள்ளையுடன் கூடிய ஒரு கறுப்புப்பசு ‘அம்ம்….மா’ என்று குரல் கொடுத்துக் கிணற்றங்கரைக் கொட் டிலில் இருந்த தன் கன்றை நோக்கி ஓடியது. அதை அதட்டி தொழுவத்துக்கு ஓட்டிக் கட்டினான் வீராசாமி. ‘அம்பே…’ என்று அந்தக் கன்றுக் குட்டி அலறிக் கொண்டு கயிற்றை ஜிம்பி இழுத்துக் கொண்டிருந்தது.

மனது ஒட்டாமல் தாமரை இலைத் தண்ணீ ர் மாதிரி, இது என்ன வாழ்க்கை ? செய்யும் தொழிலில் மனதுக்குத் திருப்தி வேண்டும்; சந்தோஷம் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் அயலான் பாஷையில் கஷ்டப்பட்டு அரையும் குறையுமாகத் தங்களை வெளிப்படுத்திக் கொண்டதை நான் மேலும் கஷ்டப்பட்டு ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். ஆங்கிலத்தில் நாம் எழுதுவதே போலி; அதை மேலும் ஆங்கிலத்தில் விமர்சனம் செய்வது இன்னும் போலி. இந்த வாழ்க்கை இன்னும் எவ்வளவு நாளைக்குத் தொடர வேண்டும்?

ராமானுஜ யதிராஜ ஜீயரிடம் இன்று காலை பேசிக் கொண்டிருந்தேன். ஐம்பது வருடங்களுக்குப் பிறகு பரிபூரணமான, மனதுக்குத் திருப்தியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். முப்பது வருட அரசாங்க சேவையும், அமைதியான குடும்ப வாழ்க்கையும் கொடுக்காத நிறைவை, “இதுவோ பெரும் புதூர்? இங்கு பிறந்தோ யதிராஜர் எம்மை ஆட்கொண்டார்?” என்று பாடிக்கொண்டு ஹரிஜனங்களுக்கும் சமாஷ்ரயணம் பண்ணிக் கொண்டு, ராமானுஜரின் திருவவதாரச் சேவையை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் இந்தத் திருப்பணி இதமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

மனது அலைபாய்ந்தது. அமெரிக்காவை வெறுக்க வேண்டும் என்றால் அமெரிக்காவை அனுபவித்தாக வேண்டும் போலிருக்கிறது. அந்த வெறுப்புதான் கருமாணிக்கத்திடம் என்னைத் திருப்புகிறதா? ஜே.கே. சொல்வது போல, ஒரு பிசாசிடம் இருந்து தப்பி ஓடி இன்னொன்றிடம் சரண்புகுவது போல! ஆனால் இந்தக் குளிர்ச்சியும், இதமும், மனதைத் தொடுகின்ற தண்மையும் இதுவரை அனுபவித்திராத உணர்ச்சிகள். ரூட்ஸ்! ரூட்ஸ்! அவை கட்டாயம் இருக்கின்றன. ரூட்லஸ்னஸ் என்பது என்னுடைய லெக்சர்களில் நான் இதுவரை கேலி செய்துகொண்டிருந்த ஒரு வார்த்தை….ஆனால் வேர்களை இழக்கும்போதுதான் வேர்களின் அவசியத்தை உணர முடிகிறது. இழக்கவில்லை; இழந்திருக்கமுடியாது. இப்போதுதான் வேர்கள் மறு உயிர் பெற்று மண்ணில் பரவி இறுகப் பற்றி… சரி, இவற்றுக்கெல்லாம் வார்த்தை வடிவம் கண்டுபிடித்துக் கொண்டிருப்பானேன்? கருமாணிக்கம், அப்பா, அம்மங்காள், இவற்றோடு கூட நெற்றி வெள்ளையுடன் கூடிய அந்தக் கருப்புப் பசுவும் கன்றும் தோன்றித் தோன்றி மறைகின்ற காட்சிகள். “எஸ்கேபிசம்…’ ‘கம்பேக்’ என்ற பெயர்களுக்கு பயப்படுவானேன்? என் மனதுக்குத் திருப்தியான காரியத்தைத் தான் நான் செய்யப் போகிறேன். அது என்னுடைய சொர்க்கமோ, நரகமோ எப்படியாவது இருந்து விட்டுப் போகட்டும். வாழ்க்கையில் முதல் முறையாக சுதந்திரமாக எடுக்கும் முடிவு. பிராய்டு சொன்னது உண்மைதான்: “யு காண்ட் பி எ மேன் அன்டில் யுவர் பாதர் இஸ் டெட்!”

“அம்மா …மா!

நெற்றி வெள்ளையுடன் கூடிய அந்தக் கறுப்புப் பசு கிணற்றங்கரைக் கொட்டிலில் கட்டியிருந்த தன் கன்றைப் பார்த்துக் குரல் கொடுத்து அலறியது. கயிற்றை ஜிம்பி இழுத்துப் போரடிக் கொண்டிருந்த அந்தக் கன்றை அவிழ்த்துவிட்டான் வீராசாமி அது வாலைத் தூக்கிக் கொண்டு நான்கே எட்டில் பாய்ந்து வந்து தன் தாயின் மடியை முட்டிக் குடிக்க ஆரம்பித்தது.

நான் எழுந்திருந்தேன்.

– கணையாழி, செப்டம்பர் 1989

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *