ரேணுகாவின லஞ்ச் பாக்ஸ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 9, 2020
பார்வையிட்டோர்: 6,369 
 

பள்ளியில் மதியம் உணவு இடைவேளை!

அனைவரும் சாப்பாட்டை எதிர் நோக்கி உணவுக்கூடத்திற்கு ஓடிக் கொண்டிருந்தனர்.

மீண்டும் ஒரு முறை ‘லஞ்ச்’ பாக்ஸைத் திறந்து பார்த்த ரேணு, உதட்டைச் சுழித்து, முகத்தைச் சுளித்தாள். அதை இன்ஸ்டாகிராமாக உள் வாங்கிக் கொள்ள ரெடியானாள் அவளின் தோழி மீரா.

“என்ன, வழக்கம் போலத்தானே?” என்றமீராவின் பார்வைக்குத் தலையை அசைத்துப் பதில் கூறினாள் ரேணு.

“என்னடி, டிபன் பாக்ஸை முறைக்கிறாய்?” என்று லேசாக மீரா தட்டினாள்.

“சே! சே! அப்பிடியெல்லாம் இல்லை….யே!” என்று முழு முறைப்பை சோத்து டப்பாவில் வைத்து அமுக்கி மறைக்கப் பார்த்தாள் ரேணு.

“ஏய்! என்னிடமா கதை விடுகிறாய்? பாவம்! அம்மா- அன்போடு அனுப்பும் போது அதைச் சாப்பிடாமல் முறைத்தால் எப்படி? வா! சாப்பிடலாமா? இந்தா பூரி- கிழங்கு; எனக்கு கொஞ்சம் மோர் சாதம், ஊறுகாய் கொடு!” என்று ரேணுவின் பதிலுக்குக் காத்திராமல் மீரா பூரியைத் தட்டில் வைத்தாள்.

“அம்மா! தினமும் மோர் சாதம் கொண்டு போனால் என்னை எல்லாரும் கிண்டல் பண்றாங்க; வேறு டிபன் பண்ணி அனுப்பேன்” இரண்டுங்கெட்டான் வயதிலிருந்த ரேணு அம்மாவிடம் குழைந்தாள்.

“எனக்கும் ஆசையாத்தான் இருக்கு…..என்று இழுத்த அம்மாவால் அதை முழுதும் சொல்ல முடியவில்லை. தழுதழுத்து விட்டாள்.

“ அது மட்டுமில்ல அம்மா! எல்லாரும் விதம் விதமா டிபனும் கொண்டு வர்ராங்க; பாக்கிட் மணியும் கொண்டு வர்ராங்க! தெரியுமா?”

ரேணுவின் ஏமாற்றத்தைப் புரிந்து கொண்ட கமலம், அன்றே கணவனிடம் இதைப் பற்றி ஆலோசனை கேட்டும் விட்டாள். பாவம் அவள் என்ன செய்வாள்? பட்ஜெட் உதைக்கிறதே?

“ சரி! பாவம் ரேணு; ஆசைப்பட்டா, அறியாப் பொண்ணுக்கு டிபன் பண்ணிக் கொடுத்திடேன். என்ன கெட்டுப் போயிடும்?” என்றான் கண்ணன்.

“ இல்லீங்க! தினமும் அப்படி அனுப்பணும்னா எத்தனை துண்டு விழும் தெரியுமா- பட்ஜெட்டில்?”

“ என்ன செய்யலாம்? இப்ப சாயந்தரம் நடந்து வர்ர மாதிரி, காலையிலும் நான் நடந்தே ஆபீஸ் போயிடுவேன். கஷ்டத்தை சமாளிக்கணுமே!”

ரேணுவிற்கு எதுவும் புரிந்ததாகத் தெரியவில்லை. “ஒரு டிபன் அனுப்ப இத்தனை தடைகளா? சே!” என்று வெறுத்தாள்.

பள்ளியில் உல்லாசப் பயணம்! பக்கத்திலிருந்த பாரியூர் அம்மன் கோவிலுக்குப் போவதாக முடிவு செய்தனர் ஆசிரியர்கள்.

சிரோன்மணி டீச்சர், எல்லா மாணவர்களிடமும் ஏதாவது கொஞ்சம் சாப்பாடு, டிபன் வகைகளைக் கொண்டு வரச் சொன்னார். ‘வெளிய சாப்பிட்டா உடம்பு கேக்காது புள்ளீங்களா!’

ஐயோ! இதற்கும் மோர் சாதம்தான் அனுப்புவாளா அம்மா? என்று பயம் தலை தூக்க, ‘ நான் வரவில்லை டீச்சர்’ என்று கை உயர்த்தினாள்.

“அதெல்லாம் முடியாது! ரேணு வந்தே தீர வேண்டும்” என்று மீரா கண்டிப்பாக டீச்சரிடம் கூற, ரேணு ஒத்துக்கொண்டாள்.

மறு நாள் பாரியூர் சுற்றுலா இடங்களைப் பார்த்துவிட்டு மதிய உணவிற்காக அனைவரும் தனித்தனிக் குழுக்களாக மண்டபத்தில் அமர்ந்தனர்.

சாப்பிடும் வேளையில், டிபன் பாக்ஸைத்திறப்பதற்கு முன்னேயே அவள் முடிவு செய்தாள் – ‘இன்று சாப்பாடு வேண்டாம். அம்மாவின் மோர் சாதம் தேவையில்லை. பட்டினி கிடக்கலாம்.’ என்றெல்லாம்.

மீரா வற்புறுத்தியும் அவள் எதையும் தொடவில்லை. மனதில் ஆழமான ஒரு காயம். அம்மா ஏமாற்றி விட்டாள்- என்று.

சிரோன்மணி டீச்சர், தன் பங்கிற்கு “சாப்பிடு புள்ள! பட்டினி கிடந்தா ஆவுமா?” என்று அறிவுறுத்தினார். ‘ம் ஹூம்’ ‘எனக்குப் பசிக்கலை டீச்சர்’ – மனம் வெறுத்துப் பொய் சொன்னாள் ரேணு.

அப்போது அங்கே ஒரு சிறுமி மண்டபத்தில் வந்து அமர்ந்தாள். முகம் சோர்வாகவும், களைத்துப் போய் வந்தமாதிரியும் இருந்தது.

“அக்கா! எதுனாச்சும் சாப்பிடக் குடுங்களேன்! சாப்பிட்டு நாலு நாளாச்சு!” கை நீட்டினாள். ரேணுவைச் சுற்றியுள்ள அனைத்துக் கிண்ணங்களும் காலியாக இருந்தபடியால் எல்லாரும் ரேணுவைப் பார்த்தனர்.

டீச்சர், ‘ புள்ள! நீதான் சாப்பிட மாட்டேங்கிறியே! அதுனாச்சும் சாப்பிட்டுப் பசியாறட்டும்.’ என்று சிபாரிசும் செய்தார்.

ரேணுவிற்குத் தர்ம சங்கடம்! தனக்கான சாப்பாட்டைத் தான் சாப்பிடாமல் வேறு யாருக்கோ கொடுக்க மனம் வரவில்லை! அம்மாவுக்கு எப்படி சொல்லுவது? ‘

“இதுல கேக்கு பிஸ்கெட் எல்லாம் இருக்குன்னு நினைக்காதே! வெறும் மோர் சாதம்தான் இருக்குது. திங்கறியா?”

“ அக்கா! நான் சாப்பாட்டைப் பார்த்து நாலு நாளாச்சு! இப்ப நீங்க எந்த சாப்பாடு கொடுத்தாலும் அது எனக்கு வயிறு நெறயும். என்னிக்கோ திங்கப் போற கேக்கு, பிஸ்கெட்டுக்காக நான் இப்போ சாப்பிடவேண்டிய மோர் சாதத்தைத் தள்ளி வைக்க மாட்டேன்” என்று உறுதியாகச் சொன்ன சிறுமி, மூடியிருந்த லஞ்ச் பாக்ஸையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

டீச்சர் வந்தாள். “இத பாரு ரேனு! அந்தப் புள்ள சரியாத்தான் சொல்லுது. அன்னாட சாப்பாடு கிடைக்காத எத்தனையோ பேர் நமக்குக் கீழ் மட்டத்தில் இருக்காங்க. நாம, கையிலிருக்கும் சாப்பாட்டை ஒதுக்கி, கேக், பன், கஸ்டர்டு, நூடில்ஸ் எல்லாம் சாப்பிட விரும்பறோம். ஆனால், இப்ப பிரியமா அவ சாப்பிட கேக்கிற பண்டம் சாதம்தான்- அதிகாலையில இதை வடிச்சு, பிசஞ்சு டிபன் பாக்ஸில் போட்டு உனக்கு அனுப்ப உன் அம்மா எத்தனை பாடு பட்டிருக்கணும்?- நினைச்சுப் பாரு!”

“சரிதான் ரேணு! எனக்கும் மோர் சாதம் ரொம்பப் பிடிக்கும். ஆனால் எங்க வீட்டில் எனக்கு சமையல் மாமிதான் சாதம் பேக் பண்ணுவாங்க! விதம் விதமா கொடுக்கணும்னு அம்மாவின் உத்தரவு. நான் கொண்டு வர்ர பலகாரத்தில அம்மாவோட உத்தரவு மட்டும்தான் இருக்கு. ஆனால், நீ கொண்டுவரும் மோர் சாதப் பேக்கில் அம்மாவின் அன்பும் அவளின் உழைப்பும் கஷ்டமும் கலந்து கிடக்கு! இது எனக்குப் புரியுது. உனக்குப் புரிய நாளாகும் போல!” என்று ஆமோதித்தாள் மீரா. ரேணுவுக்கு ஏதோ புரிந்த மாதிரியும் புரியாத மாதிரியும் இருந்தது. லஞ்ச் பாக்ஸைத் திறந்தாள். அந்தச் சிறுமிக்கு எடுத்துக் கொடுக்க வேண்டுமென.

அன்றைய லஞ்ச் பாக்ஸில் அம்மா அனுப்பியிருந்தது, ரேணுவிற்கு மிகவும் பிடித்த பூரியும் கிழங்கும்தான்.*

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *