யாரை நோக முடியும்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 19, 2020
பார்வையிட்டோர்: 4,635 
 

எதிர்த்த வீட்டு பையனை பாரு, அவன் பையன். உன்னைய மாதிரியா, ஸ்கூல் விட்டதும் “டாண்ணு” வீட்டுக்கு வந்துடறான், அவனும் விளையாடத்தானே போறான், போய் ஒரு மணி நேரத்துல வீட்டுக்கு வந்து படிக்க உட்கார்ந்துடறானுல்ல ! நீயும் இருக்கியே, புக் எடுப்பனான்னு அழிச்சாட்டியம் பண்ணிகிட்டு இரூக்கே.

ராம்குமார் அப்பொழுதுதான் படிக்க உட்கார்ந்திருந்தான். எதிர்த்த வீட்டில் சம்பத்தின் அப்பா அவனை திட்டிக்கொண்டிருப்பது இவன் காதில் நன்கு விழுந்தது. தன் பெயர் அடிபடுகிறதே என்று கொஞ்சம் கவனமாய் காது கொடுத்து கேட்டான். சந்தேகமே இல்லை. அவன் அப்பா இவனைத்தான் பாராட்டி, அவனை மட்டம் தட்டிக்கொண்டிருந்தார்.

இவனுக்கு பாவமாய் இருந்த்து. சம்பத் என்ன செய்வான் படிப்பு ஏற வேண்டுமே, கடனேன்னு ஸ்கூலுக்கு வந்துகிட்டு இருக்கான், அதையும் அவங்கப்பா பேசி பேசியே கெடுத்துடுவாரு. மனசுக்குள் வருத்தப்பட்டாலும், தன்னை பற்றி அவர் பெருமையாக பேசுவதும் மனதுக்குள் ஒரு கர்வத்தை கொடுத்தது.

பள்ளிக்கூடத்திலும் அப்படித்தான் ராம் குமார் பிரில்லியண்ட் ஸ்டூடண்ட், அவன் கூட வர்ற பையன் படிப்புன்னா என்னன்னூ கேப்பான். இது பள்ளியில் வாத்தியார்கள் இவர்களை பார்த்து அடிக்கும் கமெண்ட்.

ராம்குமார் என்னடா உங்கப்பா இராத்திரி உன்னைய அந்த வாங்கு வாங்கிட்டிருந்தாரு, கொஞ்சம் நக்கலாகவும், அக்கறையுடனும் கேட்பது போல கேட்டான் சம்பத்தை பார்த்து.

ச்…..ஒற்றை சொல்லால் அதை ஒதுக்கிவிட்டான். ஏண்டா சலிச்சுக்கறே, மீண்டும் தூண்டினான் ராம்குமார்.

விடறா அந்த ஆளை பத்தி பேசிகிட்டு இருக்காத, வேற விசயம் ஏதாவது இருந்தா பேசு. பேச்சை துண்டித்தான் சம்பத். ராம்குமாரின் அப்பாவும் சும்மா இருப்பதில்லை, சில நேரங்களில் சம்பத்தின் அப்பாவிடம் ராம் குமார் இந்த எக்ஸாம்ல எல்லாத்துலயும் செண்டம், டீச்சர்ஸ் எல்லாம் அவனை மெடிக்கலுக்கு படிக்க சொல்றாங்க, பாக்கலாம், நமக்கு அதுக்கு வசதி வேணுமில்லை, தன் மகனை பற்றி பெருமையாக சொல்லி வைப்பார். சம்பத்தின் அப்பாவுக்கு வாயும் வயிறும் எரியும். பின்ன என்ன? எழுதிய ஆறு பாடத்திலேயும் பெயில் மார்க் வாங்கியிருக்கான். அடுத்த வருசம் இதே ஸ்கூல்ல படிக்க வைப்பாங்கலானே தெரியலை. இதுல வேற இந்த ஆளு தன்னோட பையனை பத்தி நம்ம கிட்டே வந்து பெருமையா பீத்திகிட்டு இருக்காரு. மனசுக்குள் நினைத்தாலும் வெளியில் சிரித்துக்கொள்வார்.

பிளஸ் டூ வரும்பொழுது சம்பத் யாரோ நடிகனுக்கு கொடி பிடிப்பதில் ஆர்வமாகி விட்டான். ஏற்கனவே படிப்பில் அவனுக்கில்லாத ஆர்வம், இப்பொழுது சுத்தமாக காணாமல் போய் விட்டது.

ராம்குமார் சம்பத்திடம் டேய் எப்படியாவது பிளஸ் டூ முடிச்சுடுடா, அப்புறம் எப்படியோ சமாளிச்சுக்கலாம் சொல்லிப்பார்த்தான். ஹூஹூம், கேட்க மாட்டேனென்று விட்டான்.

எதிர்பார்த்தது போலவே ராம் குமார் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று விட்டான். சம்பத் சுத்தமாக காலியாகி இருந்தான். ஆனால் அவன் அதற்கெல்லாம் கவலைப்பட்ட மாதிரி எல்லாம் தெரியவில்லை. இப்பொழுது நடிகனின் பின்னால் சுற்றியவன், ஏதோ ஒரு கட்சியிலும் நுழைந்து கொண்டான்.வீட்டுக்கு வருவது என்பது கூட அபூர்வமாகி விட்டது.

ராம்குமாருக்கு நல்ல மதிப்பெண் கிடைத்தாலும் அவன் எதிர்பார்த்த்து போல டாக்டர் சீட் கிடைக்கவில்லை. நொந்து கொண்டான். அடுத்து அறிவியல் கல்லூரிக்கு விண்ணப்பித்தான் நல்ல மதிப்பெண் இருந்ததால் சீட் கிடைத்து விட்டது.

புதிய கல்லூரி நட்பு, இப்பொழுது சம்பத் தொடர்பு அவ்வளவாக கிடைப்பதில்லை. எங்காவது வழியில் பார்த்தால் கையை ஆட்டுவதோடு சரி, அவனும் சரி இவனும் சரி கண்டு கொள்ளாமல் சென்று விடுவர்.

அப்படி இப்படி என்று பட்டம் வாங்கி,முதுகலை பட்டமும் வாங்கி அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தான். அவன் அப்பா டீச்சர் வேலைக்கு படி என்று சொன்னார். சரி அதையும் விட வேண்டாம் என்று முடித்தான்.

அடுத்த படலமாக வேலை தேடும் படலம், இவன் போகும் இடமெல்லாம் வாய்ப்பு கிடைக்காமல் விரக்தியாகிவிட்டான்.

அப்பொழுதுதான் சொந்தக்காரர் ஒருவர் யோசனை சொன்னார், நான் ஒரு ஆளை சொல்றேன், அவர்கிட்ட போய் எப்படியாச்சும் ஒரு வேலையில நுழைச்சு விடுங்கன்னு சொல்லிப்பாரு. அவரு மந்திரிக்கு ரொம்ப வேண்டப்பட்டவரு. வீட்டுல எல்லாம் அவரை பாக்க முடியாது. கவர்மெண்ட் கெஸ்ட் ஹவுசுல நாளைக்கு மந்திரியோட வருவாரு, அப்ப சொல்றேன் போய் பாருங்க என்று சொன்னார்,

ராம்குமாரின் அப்பாவும், ராம்குமாரும் கெஸ்ட் ஹவுசில் காத்துக்கொண்டிருந்தனர். மந்திரி வந்து விட்டார் என்று சொன்னார்கள், ஆனால் இவன் பார்க்க சொன்ன ஆள்தான் இன்னும் வரவில்லை. அந்த ஆளுக்காக இவனைப்போல நிறைய பேர் காத்திருப்பதும் தெரிந்தது.

ஒரு வழியாக அவர் வந்தவுடன் கூட்டம் முண்டியடித்து அவரை பார்க்க உள்ளே நுழைந்தது. இவனும் முண்டியடித்து உள்ளே நுழைந்தால் சம்பத் வெள்ளையும் வெளையுமாக கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அவனிடம் வந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக பவ்யமாக பதில் சொல்லிக்கொண்டிருந்தனர்.

இவனும் வரிசையில் நின்று தன்னை பற்றி அறிமுகம் செய்து கொண்டு வேலைக்கு ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுக்கொண்டான். தெரிந்த முகம் என்பதற்காக மெல்ல முகத்தை விரித்ததோடு சரி மற்றபடி தோரணையாக இவன் சொல்வதை எல்லாம் பக்கத்தில் இருந்த ஆளிடம் குறித்துக்கொள்ள சொல்லி உனக்கு சீக்கிரம் ஏற்பாடு பண்ண சொல்றேன். அடுத்த ஆளை பார்க்க தயாராகி விட்டான்.

கூட வந்த ராம் குமாரின் அப்பா அப்படியே வியப்பாய் சம்பத்தையே பார்த்துக்கொண்டிருந்தவர், ராம் குமார் தோளை தொட்டவுடன்தான் சுயநினைவே பெற்றார்.

வழியில் நடக்கும்போது ராம்குமாரின் அப்பா சொல்லிக்கொண்டு வந்தார்

“நீயும் இருக்கியே” சம்பத் எப்படி முன்னுக்கு வந்துருக்கான் பாரு” நீ இன்னும் எவனாவது வேலை கொடுப்பானான்னு கையேந்திகிட்டு இருக்கே.

அவர் மேலும் பேசிக்கொண்டே நடக்க இவன் மனதுக்குள் நினைத்துக்கொண்டான், தன்னுடைய நிலைக்கு யாரை நோக முடியும்?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *