“குருவே பிரச்னைகளை எப்படி தீர்ப்பது என்று தெரியவில்லை’ என்ற கவலையுடன் ஒருவன் குரு முன் வந்து நின்றான்.
“என்னாச்சு?’
“பல பிரச்னைகளுக்குத் தீர்வு தேட இயலவில்லை. என் செய்வதென்று புரியவில்லை’ என்று அவன் சொன்னதும் அவனுடைய பிரச்னைகள் என்னவென்று குருவுக்குத் தெரிந்தது. அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.
“ஒருவனுக்கு ஒரு வினோத பிரச்னை. தூங்கும்போது அவன் கட்டிலுக்கு அடியே யாரோ படுத்திருப்பது போல் உணர்வு வரும். சட்டென்று விழித்துவிடுவான்.
ஒரு நாள் இரு நாள் அல்ல பல நாட்கள் இந்தப் பிரச்னை தொடர அவன் தூக்கம் கெட்டு, ஒரு மனோதத்துவ மருத்துவரை சென்று பார்த்தான். அவர் அவனை முழுமையாக பரிசோதித்தார். பல கேள்விகள் கேட்டார். பல ஆலோசனைகளைச் சொன்னார். சில மருந்துக்களையும் கொடுத்தார்.
அவனும் அந்த மருந்துகளை சாப்பிட்டான். அவர் சொன்ன ஆலோசனைகள்படி நடந்து பார்த்தான். புண்ணியமில்லை.
மறுபடியும் அவன் தூங்கினால் பாதித் தூக்கத்தில் யாரோ கட்டிலுக்கு அடியே படுத்திருப்பது போன்ற உணர்வு.
பயத்தில் சட்டென்று எழுந்துவிடுவான்.
வேறொரு மனோதத்துவ மருத்துவரைப் பார்க்கச் சொல்லி ஒருவர் யோசனை சொல்ல, அவரையும் சென்று பார்த்தான்.
அவரும் பல பரிசோதனைகள் செய்துவிட்டு அவனது வியாதிக்கு ஒரு பெயரைச் சொல்லி மருந்து மாத்திரைகள் தந்தார்.
அவற்றையும் சாப்பிட்டுப் பார்த்தான். நன்றாக தூக்கம் வந்தது, கூடவே கட்டிலுக்கு கீழே யாரோ படுத்திருப்பது போன்ற உணர்வும் வந்தது
அறையை மாற்றினான், வீட்டை மாற்றினான், கட்டிலை மாற்றினான். ஆனால் நடுராத்திரியில் வரும் அந்த உணர்வு மட்டும் மாறவில்லை. அப்போது நண்பன் ஒருவனை சந்தித்தான். அவனிடம் தனது தீராத பிரச்னையை சொன்னான். அவன் சட்டென்று ஒரு தீர்வு சொன்னான்.
“கட்டிலில் படுத்தால்தானே கட்டிலுக்குக் கீழே யாரோ படுப்பதுபோல் தோன்றுகிறது. தரையில் படு. அந்த உணர்வு போய்விடும்’ என்றான் நண்பன்.
ஆச்சரியம். அன்று இரவு அவன் கட்டிலில் படுக்காமல் தரையில் படுத்தான். அந்த மர்ம உணர்வு போயே போய்விட்டது.
இந்தக் கதையை குரு சொன்னதும் வந்தவனுக்கு வித்தியாசமாக சிந்தித்தால் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும் என்ற உண்மை புரிந்தது.
அப்போது குரு அவனுக்கு சொன்ன ‘விண்’ மொழி:
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது.
– வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)