மாட்டுப் பிரச்சனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 4, 2022
பார்வையிட்டோர்: 4,246 
 

சலீம்மைத் தேடி சிற்ரரஞ்சன்,பாபு,இன்னும் இருவர் வந்திருந்தார்கள்.” தோழர் இவர்கள் மாட்டுப் பிரச்சனையைக் கொண்டு வாரார்கள். “எங்களை வந்து தீர்க்கட்டாம்” என்ற ரஞ்சஜனைப் பார்த்து “பிரச்சனையைக் கூறு” என்றவன், யோசித்து விட்டு “கேட்டடியிலே நின்று கதைக்க வேண்டாம், உள்ளே வாருங்கள்” கூட்டிச் சென்றான். வாடகையில் ‘ராஜ’ களையுடன் இருக்கிற அந்த பெரிய பழைய வீடு வந்தாரை வாழ வைக்கும். வெளியிலுள்ள பூச்சுக்கள் கழன்று பெரிதாக விழுந்திருக்கவில்லை. உள்ளுக்க தான் அங்காங்கே விழுந்து கொஞ்சம் அலங்கோலமாக இருக்கிறது. அந்த காலத்தில், முருகைக்கற்களை வைத்து சுண்ணாம்புக் காறையால் கட்டிய தடித்த சுவர்களை உடையது. செல்லடிக்கெல்லாம் லேசிலே விழுந்து விடாது பயப்படாமல் நிற்க வல்லது. வக்கீலுக்குச் சொந்தமாக பழைய சங்கக் கடை இருந்த இதே போன்ற வீட்டை திருத்தி புது வீடாக்கி இருக்கிறார். “பாரம் குறைந்த (முருகைக்) கல் வீடு,உறுதிப் படைத்தது!”. அவருக்கு தெரிந்திருக்கிறது. எங்களைப் போல வெங்காயம் என்றால் அதை தகர்த்து விட்டு புதியதாய்க் கட்டியிருப்போம். இந்தியனாமி,பாலத்தடியிலே இருந்த கிரிஸ்தவ சுடலையிருந்து அடித்த செல்லிலே பாதுகாப்பற்றதாக கொல கொலத்திருக்கும். ஆனால் நாம் ஓடியது அந்த வீட்டுக்குத் தான். நாம் ( அம்மா, தங்கச்சி, அவர்கள் எல்லோரும் ) சுவரை ஒட்டியே இருந்தோம். அந்த வீடு இன்றும் இருக்கிறது. ஆனால் நாம் இருந்தது…இப்ப இல்லை. உள்ளக்க ஒரு அழுகை இருக்கிறது.

எங்க வீட்டின் கதை ஆச்சரியமானது. சொந்தக்காரர் ஒரு இன்ஜினியர். தனது கனவு இல்லமாக கட்ட வெளிக்கிட்டாராம். டையினிங் ரூமை வாசிகசாலை பெரிய மேசை வைக்கக் கூடிய மாதிரி நீட்டி மண்டபமாக்கி விட்டிருந்தார். நிஜமாகவே மண்டபத்துண்டு தான். மூன்று பக்கமும் ஜன்னல்களுடன் பின் வாசல் கதவு. அப்படியே இறங்கி தோட்டத்திற்குள் (வளவுக்குள்) பிரவேசிக்கலாம். வரிசைக்கு நல்ல இடைவெளியுடன் வைக்கப்பட்ட தென்னை மரங்கள். பூவரச மரங்களுடன் கூடிய (கம்பி) வேலி வீடு வீதியோடு ஒட்டிய தோடு இருக்கிற நீளத்திற்கு சற்று தூரம் வரையில் உயர்ந்த மதில் சுவர்.அடுத்து சிறிய நீளத்திற்கு செவவரத்தை மரங்கள்.செடி மரம் போல வளர்ந்த்து பூக்களாக பூத்து தள்ளும். காலையிலே ஐயர் வீட்டினர் வீதியிலே இருந்தே பூவை பறித்து விட்டுச் செல்வர். பின்வளவு மூலையில் பெரிய புளியம் மரம்,அடுத்து வீட்டுப் பக்கமும் கிளையை பரப்பு பகிர்ந்து கொண்டு கம்பீரமாக நிற்கிறது. பின்வளவின் மத்தியிலே காவாளிக் கூண்டு போல இரண்டு கழிவறைகளுடன் நிற்கும் கூண்டு. இடதுபுறமாக சிமேந்துப்பலகை மூடியக் கிடங்கு. அதில் பொறியியல் இன்னமும் தேவைப்படுவதாக நினைக்கிறான். அவர்கள் நினைக்கிற வட்டம்….நடைபெறுவதில்லை எனப்படுகிறது. உக்கப்படுவதை ஊக்குவிக்க ஏதாவது இரசாயனம் சேர்க்கப்பட வேண்டுமோ? இவர்கள் இதற்கு முதலிருந்த அராலி வீட்டிலேயும்…பிரச்சனையாயே உருவெடுத்தது. நீண்ட காலத்திற்குப் பிறகு வேற இடத்தில்…திரும்பவும் கட்ட வேண்டுமோ?

முதலில் இந்த மண்டபத்தையும் இறகு போல இரண்டு பெரிய படுக்கை அறைகளையும் வயிற்றுப் பகுதியில் சிறிய வசிப்பு பகுதியையும் கீறி கட்டப்பட்டிருக்க வேண்டும். பிறகு இடது பக்கம் நாற்சாரத்துடன் வெளிக்கதவுடன், முன்னும்,பின்னும் வெறும் வாராந்தா,வேலிப்பக்கமாக வீட்டை விலகிய சமையல் கூடம், ஸ்டோர் அறையைக் கொண்ட தொகுதியைக் கட்டி இருக்கிறார்கள். படுக்கை அறைகளுக்குச் செல்ல ஜன்னல்களுடன் நடைபாதை கொரிடார். முன் பக்கம் வசந்த மண்டபம் போல பெரிய போர்ட்டிக்கோ. கார் வைத்திருக்கிறார். போர்ட்டிக்கோவூடாக ஓடி கிணற்று மறைப்பு மதிலைச் சுற்றி பெரிய மாட்டுக் கொட்டில் போல ஓடுடன் கூடிய கட்டிடத்தில் கராஜ். ஐய்யா,குட்டிச்சாமிப்பிள்ளைப் போல தான் வாழ்ந்திருக்கிறார். உள்ளே டாணா வேலியிலே ஐந்தடிக்கு தள்ளி அன்னமுன்னா செடிமரங்களாக வைத்திருக்கிறார். பறங்கி அன்னமுனா மரம் ஒன்று கூட. எல்லாமே நல்லாய்க் காய்த்தன. பக்கத்து வீட்டுத் தாத்தா,” இவன் முழுமண்ணை அள்ளி விட்டு நிரப்பு மண்..போட்டு தான் வைத்தவன். அது தான் (மாமரம், சீமைப்பழம்…)எல்லாமே காய்த்துக் கொட்டுற சோலையாய் இருக்கிறது” என்றார்.

வீட்டின் பெயரும் கூட ரட்னஹரி. அவன்ர அண்ணரின் பெயர் ஹரி. அதனாலே அம்மாவிற்கு வீடு நல்லா பிடித்து விட்டது. காய்க்கா விட்டாலும் கிராமத்திலே அந்த வீட்டிலே தான் பேரீச்சை மரம் ஒன்றும் நின்றது. அவர்கள் குடி புகுந்த போது வசிப்பு கூடங்களின் சுவர்கள் எல்லாம் ரவிவர்மாவின் நளதமயந்தி, சீதாவின் என பலரின் அற்புத ஓவியங்கள் மாட்டப்பட்டிருந்தன. கலைக்கூடத்திற்குள் புகுந்த மாதிரி இருந்தது.அவருக்கு மூன்று பையன்களே பிறந்தார்கள். மூவருக்குமாக வலது பக்க கூரைச் சரிவை இன்னும் கூடுதலாக நீட்டி அடைப்புகளைப் போட்டு நாலு சிறிய அறைகளாக்கி இருக்கிறார். பிறகான இணைப்பு என தெரிந்தது. கொழும்பிலே தான் சீவியம். சித்தப்பாவின் பொறுப்பிலே இருந்தது.” அப்பரின் கனவு வீடு எனவே பராமரித்தார்கள். நல்ல மாதிரியே இருந்தார்கள். அதை விற்காமல் சந்ததி சந்ததியாக காப்பாற்றி வைத்திருக்கவே வேண்டும். போர்க்காலத்தில் அழிபட விட்டு, மூன்று பங்காக்கி விற்றும் விட்டார்கள். ஒரு காலத்தில் இருந்த அந்த அற்புதச் சுவடு தெரியாமலே போய் விட்டிருக்கிறது.

வரந்தா இணைப்பில் முதல் இருந்த சிறிய அறையை தனது ஒவிஸ் ரூமாக்கிக் கொண்டார். அதிலேயும் ஒரு புதுமை அலுமாரியை சுவருக்குள்ளேயே பதித்து விட்டார். கதிரையும்,மேசையும் மட்டுமே அறையில் இடம் பெற்றன. பைல்கள், மற்றைவை எல்லாம் சுவர்ப் பொந்துகளில் அடக்கம். அதிலே,நம்ம சலீம் சுவரோட சிறிய கட்டிலை மட்டும் போட்டிருக்கிறான். கதிரை மேசை ஒன்றும் கிடையாது. கட்டிலில், ஜன்னல் (கட்டு)லே வந்தவர்கள் எல்லாரும் இருந்தார்கள்.சலீம்மின் தங்கச்சி ஜானகி,இங்கிதம் தெரிந்து எல்லாருக்கும் தேனீர்(சிறிய வெள்ளித் தம்ளரில்) குவளைகளைக் கொண்டு வந்தாள்.என்ன நம்ம ஆள் ‘சலீம்’ என பெயர் வைத்திருக்கிறான் என பார்க்கிறீர்களா? இயக்கத்தில், அரச படைகளிடம் கைதாகினால்…..அவர்களை குழப்புவதற்கே எல்லா மதப்பெயர்களிலும் புனைப்பெயர்களை வைக்கச் சொல்லி ஊக்குவிக்கிறார்கள். ரஞ்சனின் பெயர் கிராமத்தில் சிற்ர ரஞ்சன் பெயர் பழகி போய் விட்டது. வெளியிலே புதுப்பெயர்” போல்” .

தோழர்களில் கணிசமானவர்கள், அரைவாசி சீமேந்திலும்,கூரை ஓலையிலும், ஒலைத் தட்டிகளாலும்..என பல்வேறு விதமாக கட்டப்பட்டவையில் வாழ்கிறவர்கள். அங்கே,மெல்ல மெல்ல தான் முழு வீடாகிறது… உருபெறுகிறது. அவர்களின் பெரும்பாலோனர் வீடு ஓலை வீடுகளாகவே இருக்கின்றன. எனவே, இந்த இஞ்ஜினியர் வீட்டால்… மனதில் அரற்றுவது ஆச்சரியமில்லை. இனி, வந்தப் பிரச்சனையைப் பார்ப்போம். மாட்டு வியாபாரி தியாகர், சைக்கிளில் திரிந்து திரிந்து வாங்கி கசாப்புக் கடைகளிற்கு விற்கிறவர். சிலவேளை தானே வெட்டி பங்கும் போடுவார். கிழமாடு, தீடீரென இறந்த மாடு எல்லாம் கூட வியாபாரமாகி விடும். அது அவரவர் வியாபார தந்திரம் (ரகசியம்), கஸ்ட நட்டம் அப்படி ஆட வைக்கிறது. எல்லா வியாபாரத்திலும், தில்லுமுல்லு கிடக்கவே செய்கிறது.

ஒரு வீட்டினர், வயிற்றில் கன்றுடன் இருந்த மாட்டை விற்க, அதை இவரால் கசாப்புக் கடையில் விற்க முடியாததலால் வெட்டி பங்கு போட்டிருக்கிறார். மாட்டு வியாபாரத்தை பழக்குவதற்காக அவர் தனது மருமகப் பெடியனையும் கூட கூட்டிப் போறவர். என்ன இருந்தாலும்…அந்த மாட்டை வெட்டுற ரகசிய இடத்திலிருந்து அவனை விலத்தி இருக்க வேண்டும். பார்த்துக் கொண்டிருந்த அவனை வயிற்றிலிருந்து கன்றை எடுத்தது…என்னவோ செய்து விட்டது. இது சரி இல்லை, என அக்காட்சி அவனை பயமுறுத்திக் குழப்பிக் கொண்டிருந்தது. வாசிகசாலைப் பெடியளிடம் சொல்லி விட்டான். அவர்களும் பங்கு கேட்டிருந்தவர்கள். கேட்டு திகைத்துப் போனார்கள். அசாத்திய கோபம் பொங்கி வர பங்கெல்லாம் வேண்டாம் என மறுத்து விட்டார்கள். இறைச்சியை யாரும் வாங்கவில்லை. தியாகரிடம் நேர்மையும் இருந்தது. ரஜனிகாந்தைப் போல வாங்கிய பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்து விட்டார். தியாகர் இறைச்சி எல்லாத்தையும் தனது சகாவிடம் கொடுத்து கசாப்புக் கடைக்காரனுக்கு அனுப்பி விட்டார். அதை பெடியள் தடுக்கவும் இல்லை, மறிக்கவும் இல்லை.

ஆனால், இவர் இனிமேல் இப்படிச் செய்யக் கூடாது?. என்பதற்காக ஏதாவது படிப்பினை, தண்டனை கொடுத்தே ஆக வேண்டும்’ என கோபத்திலே இருந்தார்கள். அது, எம்மை ஏமாந்த சோனகரியாக நினைத்து ஏமாற்றப் பார்த்தாரே’ என்ற கெளரவப் பிரச்சனையும் கூடத் தான் என அவ்விடத்துப் பெட்டைகள் கூறுகிறார்கள். உள் வீட்டுப் பிள்ளையாக பிழங்குவதால் தோழர்களின் சகோதரிகளும் இவர்களோடு.” அண்ணே…” என்று இயல்பா கதைப்பவர்கள். பெடியள், தண்டனையையும் தீர்மானித்து விட்டார்கள். உள்குறிச்சியில், மாட்டின் குடலை எடுத்து அவருடைய கழுத்தில் போட்டு ஊர்வலம் நடக்க தயாராகி விட்டது. பல இயக்கங்கள் இருக்கின்றன. சிலவேளை அவர்களுடைய இயக்க தோஸ்துகள் கொளுவ வரலாம்…..என்பதால் பாதுகாப்புக்கு ஊர்வலத்தில் நாங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பது பெடியள்களது விருப்பம்.

ஒரு பொது அநியாயம் நடந்திருக்கிறது. மனிதனுக்கு நடந்திருந்தால் ‘போர்க்குற்றம்’என சொல்கிறோமில்லையா? அதுவே, மற்ற உயிர்கள் என்றால் குற்றமில்லையா என்ன?. அப்புறம் என்ன தமிழன்? எல்லா உயிர்களும் ஒன்று தான். எந்த வலத்திலும் எதிர்ப்பைக் காட்டத் தான் வேண்டும்.” போய் கலந்து கொள்வோமடா” என்றது சலீமுக்குப் புரிய அவர்களோடு சேர்ந்து புறப்பட்டுப் போனான். இவர்கள் கலந்து கொண்டதால் வாசிகசாலைப் பெடியள்களால் சுதந்திரமாக கோசம் போட முடிந்தது. இது, பழைய கால கழுதையில் ஏற்றி கரும்புள்ளி,செம்புள்ளி குத்திப் போறது மாதிரி இருக்க வேண்டும். இங்கை கழுதையும் இல்லை. தவிர, அதிகமாக தண்டிப்பதும் பிழை என்ற நிலமையும் இருந்தது. நாமும் மாட்டிறைச்சி சாப்பிடுறோமே. இதற்கென்ன தான் தீர்வு? மாட்டை கொஞ்ச நாள் வாழ விட்டு,கன்றைப் போட்ட பிறகு, மாட்டையும் கன்றையும் வெட்டி சாப்பிடலாம். யாரும் எதும் கேட்க. போவதில்லை. ஆனால், இங்கே தாய்மை அவமதிக்கப்.பட்டிருக்கிறது, அது சரி இல்லை, பிழை! எனவே தான் கலந்து கொண்டோம்’ என்பது விமர்சினம். விமர்சனம்! சலிமின் வாதமும் கூட.

தியாகர் அவர்களில் ஒருத்தர்.அவருடைய பெடியள்கள் தான் செய்கிறார்கள். அவர் அந்த நிகழ்வை தூசை தட்டிக் கொள்வது போல தட்டிக் கொள்ளலாம். நாளை, அவ்விடத்து மக்களே அதை மறந்து போய் விடுவார்கள். அந்த ஊர்வலம் எதற்கும் பயன் படப் போவதில்லை. அதற்காக…நிகழ்வை லாப நட்டம் பார்த்து கழித்து விட முடியாது.

எதிர்ப்பைக் காட்டுவது? அவசியம் ஒரு சிக்கலுக்கு…தோள் கொடுக்கவே வேண்டும். சரி, பிழை பிறகு தான் ஆரம்பமாகிறது. அடுத்த நாள்,கடையடியில்,கழுகுப் பெடியள்” மாட்டுக்காரனுக்கு கயல் இயக்கம் தண்டனை கொடுத்திருக்கிறது” சலீம்மைப் பார்த்தும் பாராது போல நின்று காது பட பேசிக் கொண்டிருந்தார்கள். திரும்பி வரும் வழியில் சந்திரா அக்கா,செல்வத்தின் மனைவி எதிர்ப்பட்டார். செல்வம், கடிகாரம் திருத்துற தொழிலாளி. அவர்களிற்கு எல்லாப் பிள்ளைகளும் பெட்டைகளே! அவர்க்கு சலீமின் மீது பாசம். “தம்பி, கொஞ்சம் நில்லு உன்னோடு தனிய பேசனும்” என நிறுத்தினார். சிறிது தள்ளி கூட்டிச் சென்று” நீ படிச்ச பெடியன், ஊர்வலத்தை நிறுத்தி இருக்க வேண்டாமா, அவன் வியாபாரி. அது அவன்ர தொழில் இல்லையா?” எனக் கேட்டார். “நாங்கள் நடத்தவில்லையக்கா” என்று அவன் பதில் அளிக்க, “நீ சொன்னால் கேட்பாங்களில்லையா?” என ஒரு போடு போட்டார். அவன் என்ன பதில் சொல்வான். “ஆனால், அந்த செய்தியைக் கேட்க ஒருமாதிரி இல்லையா அக்கா” என திருப்பிக் கேட்டான். “இருக்கிறது தான். ஆனால், ஊர்வலம் போனது பிழை தான்” என்றார். “எங்களிற்கு எதிர்ப்பைக் காட்டுறது நல்லம் எனப் பட்டது. அது தான் கலந்து கொண்டோம்” என்று கூறினான். அவரிற்கு அது புரிந்திருந்தது. ஆனால், இனிமேல் இப்படியான விசயங்களில் கவனமாக இரு” என்று எச்சரித்தார்.

இவர்களை மேலிடம் “கத்திக் குத்து,வெட்டு…விசயமாக இருந்தாலும், அந்த இடத்தில் பிரசன்னமாக வேண்டும்” என சொல்கிறது. இவன் ஊர்ப் பிரச்சனையை மேலிடத்திற்கு கொண்டு போக விரும்புறதில்லை. என்ன இருந்தாலும் மேலிடம் பொலிஸைப் போல பலத்தை பிரயோகிக்கிற அமைப்பு. அவன் ஊராக்களை தேவையில்லாமல் கொண்டுப் போய் மாட்டி விட்டு, அடி வாங்கிக் கொடுக்க விரும்புறதில்லை. கூடுமானவரை அவர்களையே பேச வைக்கிறான். அவர்களே பேசி ஒரு தீர்வை எட்ட முயல்வதையும் ஊக்குவிக்கிறான். தீர்வு அமுலாகிறதுக்கு பெடியளுடன் சேர்ந்தும் ஆதரவாகவும்,நிற்கிறான். சலிம், சனி,ஞாயிறுகளில் தொழினுட்பகல்லூரியில் வகுப்புகள் வேறு எடுக்கிறான். பக்கத்து எ.ஜி.எ பிரிவுக்குள்ளாக சைக்கிளில் செல்கிற போது கெளரியை சந்தித்தான்.” என்னடாப்பா நீங்க சமூகப்பிரச்சனைகளிற்கு தண்டனைகள் எல்லாம் கொடுக்கிறீங்களாம்” என்று கேட்டான். “நாங்க அந்த ஊர்வலத்திலே போய் கலந்து கொண்டது மட்டும் தான். மற்றப்படி வாசிகசாலைப் பெடியள்களே… தீர்மானித்து நடத்தியதெல்லாம். எங்களிற்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை”என்று விளக்கினான்.

“நீ நேரடியாய் தொடுற மூக்கை,சுத்தி வளைத்து தொடுறாய். ஆனால் உதுவெல்லாம் மக்களுக்கு விளங்காது” என்று சொல்லி சிரித்தான்.

மத்தியபகுதியிற்கு” அமைப்புக்கள் கட்டுப்பாடில்லாமல் கண்டறிமாட்டுக்கு இயங்குகின்றன” என்ற குற்றசாட்டும் சென்றவாரே இருக்கின்றன. நல்லாவே விமர்சிக்கப்படுகிறார்கள்.

( ரஸ்யப் புரட்சியின் போது நடந்தவற்றை இப்படி குட்டிக்கதைகளாகவே நாவல் போல எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த அருட்டலில் எழுதியது. )

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *