மரணத் தாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 6, 2013
பார்வையிட்டோர்: 7,004 
 

அப்பாசாமியின்  கண்களுக்கு முன் கிழித்து எறியப்பட்ட விதமாய்  வெள்ளைத்தாள்கள் பறந்தன. வானத்திலிருந்து எறியப்பட்ட்து போலிருந்தது. இது என்ன ஆசீர்வாதமா.. குழந்தைகள் விளையாட்டு போல் தாளைக்கிழித்துக் கொண்டு வீசியெறிந்து கொண்டிருக்கிறார்களா என்றிருந்தது அப்பாசாமிக்கு. இப்போதைக்கு ஒரு வெள்ளைத்தாள் என்பது எவ்வளவு முக்கியம் என்பதும் ஞாபகம் வந்த்து. மூடியிருந்த கண்களைத்திறந்து கொண்டார்.

அந்த வயதின் வனப்பு அவள் முகத்தில் தேங்கியிருந்தது. அணிந்திருந்தக் குட்டைப் பாவாடையும், மேலாடையில் அவளின் கனத்த மார்புகளும் எந்த ஒரு இளைஞனையும் அவளை தேவதை நிலைக்கு கொண்டு போய் நிறுத்தி விடும். அவளின் உடை வர்ணத்திலேயே பள்ளிஆடை அணிந்திருந்த பையன் அவளை நெருங்கினான். அவள் முகம் ஒருவகைப் பரவசத்துடன் மினுங்கியது. தேர்வுகால அடையாளமாய் மார்பில் சேர்ந்திருந்த அட்டை வெள்ளைத்தாள்களுடன் இருந்தது. அதை மார்போடு இன்னும் இறுக்கினாள்.

“எனக்கு ஒரு பேப்பர் வேணும்.”

“உங்கிட்ட இருக்குதே…”

“உங்கிட்ட இருக்கறதிலை ஒண்ணு வேணும்.”

அவனும் தேர்வு அட்டையை சில வெள்ளைத்தாள்களுடன் வைத்திருந்தான்.

” உங்கிட்ட இருக்கறதில ஒண்ணு வேணும் “

அவள் அட்டைக் கிளிப்பிலிருந்து ஒரு வெள்ளைத்தாளை விடுவித்தாள். அந்த பையன் வெள்ளைத்தாளைப் பெற்றபின் தன் பரவசத்தை எப்படியாவது வெளிக்காட்டிவிட வேண்டும் என்று பரபரப்பவன் போல் இருந்தான். பத்தடி தள்ளினால் பேருந்து நிழல் குடை. ஏகமாய் அதை பலர் நிறைத்திருந்தார்கள். ஏகதேசம் எல்லாரின் பார்வையும் அவர்கள் மீது குவிந்தது. பரபரப்பு வாகனங்கள் திமிறிக் கொண்டு விரைந்தன.

அப்பாசாமி தனக்கும் விண்ணப்பம் எழுத ஒரு வெள்ளைத்தாள் வேண்டும் என்று கேட்க நினைத்தார். மனுவில் எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்துவிட வேண்டும். மாவட்ட ஆட்சியர் இப்போதைக்கு கடவுள்..  கடவுள் முன் திருவளச் சீட்டு அந்தக் காகிதம்.

“என் மகனெக் காப்பாத்துங்கய்யா…” மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைந்ததும் தென்படும் முதல் நபரைப்பார்த்ததும் கதறவேண்டும் என்று நினைத்திருந்தார் அப்பாசாமி. ஆனால் திகைப்பேற்படுத்தியது போன்று நின்றுவிட்டார். பேருந்து நிழல் குடை தாண்டி வந்தவர் ஒரு நிமிடம் நின்று பின் நடந்தார். தாறுமாறாய் ஜனங்கள் பரபரத்துக் கொண்டிருந்தார்கள். வாகனங்களின் விரைசலும் முகத்தை அறைந்துவிட்டுப் போகிற மாதிரி இருந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துள் அங்கங்கு மரத்தடிகளில் நிற்பவர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டு நிற்கிற மாதிரி அப்பாசாமிக்குத் தோன்றியது.

வாசல் முகப்பிலிருந்து உள்ளே சென்றவர் புர்ரென்ற சப்தத்துடன் விரைய ஆரம்பித்திருந்த கறுத்த நீல நிற வாகனம் பார்த்து விலகிக்  கொண்டார். காவல்காரர் ஒருவர் சல்யூட் அடித்து விரைப்பாக நின்றார். குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் அவரின் விறைப்பு இருந்தது. வாகனம் சீறிட்டு பறந்து சென்றது. கறுத்த தார் சாலைகள் வளாகத்தில் எங்கெங்கோ சென்று மறைந்தன.

“என் மகனெக் காப்பாத்துங்ய்யா…” என்றக் கதறலை செகடந்தாளியிலிருந்து வரும்போது பேருந்தில் உட்கார்ந்தபடியே சொல்லிக் கொண்டு வந்திருந்தார். கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது. தோளில் இருந்தத் துண்டில் துடைத்துக் கொண்டார். எப்படித்துடைத்தாலும் கண்ணீர் நிற்கப் போவதில்லை என்பதுபோல் கன்னங்களில் உருண்டு கொண்டிருந்தது. சகபயணிகள் அவரின் அழுகையைக் கண்டிருக்கக் கூடும். யாரிடமாவது கதறலாமா. வேண்டாம் கதறுவதை மாவட்ட ஆட்சியாளர் அலுவலக வளாகத்தில் தென்படும் முதல் நபரிடம் தான் நிகழ்த்த வேண்டும். அதுவும் மாவட்ட ஆட்சியாளர் முன்னிலையில் நிகழ்ந்தால்தான்  மாதங்களாக மனதில் இருக்கும் பாரம் இறங்கும். பாரத்தின் ஒரு பகுதியை இறக்கின ஆசுவாசத்தில் மனதில் இருப்பதைச் சொல்லிவிடலாம். தூக்கு தண்டனையை எதிர்பார்த்து இதேபோல் கண்ணீருடன் இருக்கும் திருச்செல்வத்தின் முகத்தைப் பார்ப்பதற்கு இனியொரு வாய்ப்பு ஏற்படுமா என்பதை உப கேள்வியாகக் கேட்கலாம். நிச்சயம் மாவட்ட ஆட்சியாளர் கண்ணில் தட்டுப்படுவார். இன்றைக்கு மக்களின் குறை தீர்க்கும் நாளாக இருக்குமா… இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். மாவட்ட ஆட்சியரிடமே எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்து விடலாம். வாரக்கணக்கில் யோசித்து கிராமத்தில் உட்கார்ந்தாயிற்று. சரி என்று கிளம்பி வந்திருந்தார். சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தார். எல்லாம் புதுசாக இருந்தன.

எதிரில் விரைசலாய் நடந்து வந்து கொண்டிருந்தவரின் முகத்தில் விசனம் தென்பட்டது. அவரின் கறுத்த முகம் இருட்டாகியிருந்தது. அவரின் ஒழுங்கமைப்பான உடையும், நடையின் கம்பீரமும் ஏதோ நம்பிக்கை தருவதாக இருந்தது. அவர் நெருங்க நெருங்க உடலின் படபடப்பை உணர்ந்தவரானார் அப்பாசாமி. கட்டியிருந்த வேட்டியை தளர்த்தி மேல் முட்டியைக் கடந்து பாதத்தைத் தொடும்படி செய்தார். சட்டென தோளின் மீது கிடந்த கண்ணீரால் நனைந்து போயிருந்த துண்டை எடுத்துக் கொண்டார். ஒருவகை பவ்யத்துடன் உடம்பு வளைந்தது.  நோஞ்சானான எலும்பு வளைவது சுலபம்

அவர் நெருங்கியிருந்தார்.

“கலெக்டர் அய்யா இருக்காங்களாய்யா…”

அப்பாசாமி தாழ்ந்த குரலில் தெளிவாய் கேட்டார். சரியாகச் சொல்லிவிட்டத் திருப்தியில் அப்பாசாமியின் முகம் மிளிர்ந்தது. தன்னைச் சுதாகரித்து அவரிடம் பேசுவதற்கு வெகுவாக ஆயத்தம் செய்து கொண்டது போலிருந்தது. “என்ன…” நடந்து கொண்டிருந்தவர்  கேட்டார். “கலெக்டர் அய்யா உள்ள இருக்காங்களாய்யா”

“ உனக்காகத்தா உள்ளக் காத்திட்டிருக்கார். போய் பாரு…”  அவர் சொல்லி முடிக்கிறபோது கறுப்பு முகம் அவரைத் தாண்டிப் போய்விட்டது. தனது முகமும் கறுத்துப் போயிருக்கும் என நினைத்துக் கொண்டார் அப்பாசாமி.

ஒரு நிமிடம் நிமிர்ந்து நின்றார். அவர் சொன்னது போல ஆட்சியர் அவருக்காகக் காத்துக் கொண்டிருப்பாரா. பொது மக்களின் குறைகளைக் கேட்பதற்கென்றுதான் இருக்கிறார். ஆனால் குறைகளை மட்டுமே கேட்பதற்கென்றுதான் அவர் இருக்கிறாரா. அவருக்கென்று ஆயிரம் சோலிகள் இருக்கும். ஆயிரத்தொன்பதாவது சோலியாக தான் போய் நிற்க வேண்டியிருக்கும். எந்த அரசு அதிகாரியை அணுக முடிந்திருக்கிறது. விளக்கமாய் ஏதாவது கேள்வியைக் கேட்க முடிந்திருக்கிறது? எம்.எல்.ஏ.விலிருந்து யார் வீட்டு முகப்பிலும் நின்று அவர்களின் முகங்களைத் தெளிவாய் பார்க்க முடிந்ததில்லை. தான் சொல்லும் வார்த்தை ஏதாவது மூன்றாவது நபர் மூலமாக எம்.எல்.ஏ.விடம் போய் சேர்ந்திருக்குமா. எல்லாம் காற்றில் வீசியெறியப்பட்ட வார்த்தைகளாகத்தான் போயிருக்கும். காற்றுக்கு கூட நியாயம் தர்மம் தெரியாதா. தெரிந்திருந்தால் தனது கதறலை கொண்டு போய் சேர்த்திருக்குமே. தனது கிழக்குரல் என்பதால் வலுவிழந்து கரைந்து விடுகிறதா என்ன.. குரலுடன் வேறு என்ன செய்ய வேண்டியிருக்கும். எது செய்தாலும் இவ்வளவுதானா. வேறு வழியில்லை. ஏதாவது சொல்லி கதறித்தான் சொல்ல வேண்டும். எப்படியாவது குரல் கேட்கட்டும். எதுவும் வீணாகிவிடக் கூடாது. வீணாகிவிடக் கூடாது என்று முணுமுணுத்துக் கொண்டார்.

எதற்கும் உள்ளே சென்று ஒரு  பார்வை பார்க்கலாம் என்று தோன்றியது. யாராவது ஊர்க்காரர்களோ, கட்சிக்காரர்களோ தென்பட்டால் நல்லதுதான். தன் கிராமத்தில் கூட எவ்வளவு கட்சிகள் வந்துவிட்டன. ஒவ்வொரு கட்சியும் தலைவர்களின் பிறந்தநாள், கட்சி ஆரம்பிக்கப்பட்ட தினம் என்று வகைவகையாய் கொடிகளை ஏற்றித் தோரணங்களைக் கட்டிக் கொண்டாடுகிறார்கள். ரத்த தானம், கண் தானம் என்று விழா எடுத்துக் கொண்டாடுகிரார்கள்.அதில் யாராவது தென்பட்டுவிட மாட்டார்களா. படபடப்பு நீங்க அவர்களிடம் சொல்லிவிடலாம். கிராமத்தில் கட்சிக்காரர்களிடம் சொல்லாததா. பலமுறை சொல்லியாயிற்று. உள்ளூர்காரர்களாயிற்றே என்று எந்த வகையிலும் அழுதுவிடக் கூடாது என்று கட்டுப்படுத்தி அவர்களிடம் எல்லாம் சொல்லியாயிற்று. ஆனால் எதுவும் நடக்கவில்லை. கருணை மனு அனுப்புவதற்கு கூட காரியங்கள் நடைபெற்றனவா என்று தெரியவில்லை. தெரியாததால் எதையும் விளங்கிக் கொள்ள முடியவில்லை. சட்டென எதிர்க்கட்டிடம் மங்கலாகத் தெரிவது போல இருந்தது. ஒருவகை குலுங்கலுடன் நிற்பது போலிருந்தது கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. பசியாக இருக்க வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வந்து சேர்ந்துவிட்டால் போதும் எல்லாப்பசியும் ஓடிவிடும் என்றிருந்தது.வெறும் வயிற்றோடு வந்திருந்தார். புளிதண்ணீர் தந்த ஆசுவாசம் எப்போதோ ஓடிவிட்ட்து. இப்போதைக்கு டீயும், பன்னும் கிடைக்கிற மாதிரி கடையையாவது தேட வேண்டும்.

கண்களை வருத்தி திறந்து பார்த்தார். வலது புறத்தில் வினை தீர்க்கும் விநாயகர் கோவில் என்பது கொட்டை கொட்டையாய் தெரிந்தது. சற்று தூரம்தான். திண்டுபோல் முகப்பிலும் ஏதோ தென்பட்டது. ஆசுவாசப்படுத்திக் கொள்ளவென்று உட்கார்ந்து விடலாம். மெல்ல நடக்க ஆரம்பித்தார்.

காம்பவுண்ட் சுவர் நடுங்கிக் கொண்டிருந்தது. எதிரில் இரட்டைச் சக்கர வாகனத்தில் வருபவர் ஏன் நடுங்கியபடி இப்படி தடுமாறிக் கொண்டு வருகிறார். கட்டிடங்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. ஏதாவது பூகம்பமாக இருக்குமா. பூகம்பம் வந்து எல்லாவற்றையும் கொண்டு போக வேண்டும். தீயதெல்லாம் அழிந்து போக வேண்டும். திருச்செல்வன் இருக்கும் சிறை கூட இதுபோல் குலுங்கி தரைமட்டமாக வேண்டும். கைதிகள் சிறையிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்திற்குச் சென்று விடவேண்டும். அப்படி ஏதாவது நடந்தால்தான் திருச்செல்வன் உயிர் பிழைப்பானா. அப்படியென்றால்தானா அவனை உயிருடன் பார்க்க முடியுமா. அப்படியாவது ஏதாவது நடக்குமா? அல்லது சுனாமி வந்து எல்லாவற்றையும் சீர்குலைத்துப் போகாதா. அப்படி சீர் குலைத்துப் போகிறதில் திருச்செல்வன் தப்பிக்கட்டும். வெளிநாட்டு  வேலைக்குப் போனவன்  அகப்பட்டுக்கொண்டான், பொதைப் பொருள் கடத்தல்  என்று மாட்டிக் கொண்டு விட்டான். தூக்கிற்கும் போய் விட்டான். ஏதாவது கருணை மனு அவனைக் காப்பாற்றாதா என்று  ஆட்சியாளரைப் பார்க்க  வந்து விட்டிருந்தார்.

இரண்டு தினங்களுக்கு முன் இலவச் தொலைக்காட்சியில் தூக்கு தண்டனை பற்றி ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அவருக்கு புரியவில்லை. தப்பு செய்தால் தூக்கில் போடு. அதற்கு இவ்வளவு சூட்சுமங்களா. திருச்செல்வன் வேலைக்குப் போயிருக்கிற தேசத்தில் ஏதாவது தப்பு என்றால் நடு வீதியில் வைத்து கசையடி உண்டு.தூக்கு  தண்டனை சுலபம்.

மரண தண்டனை என்பது குற்றமா.. ஹாரம் என்று அந்நாட்டுச் சட்டம் சொல்லவில்லை. மரண தண்டனை வேண்டாம் என்று சொன்னது ஒரு கோஷ்டி. வேண்டும் என்றது ஒரு கோஷ்டி. மரணதண்டனை வேண்டாம் என்பது ஒரு தத்துவம்.. அது வேண்டாம் என்று வந்தபின் என் ஆளுக்கு  வேண்டாம் எதிரிக்கு தா என்பது மோசம். வேண்டாம் என்றால் எல்லோருக்கும்தான் வேண்டாம். கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையில் ஏற்றி அலைக்கழிக்க வைப்பதா இந்த முறை… தினம் தினம் சாவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதா.  ஒரு நாள் சட்டெனக்  கொல்லப்பட்டு விடுவது எவ்வளவு உத்தமமானது. தூக்கு தண்டனைக்கு நாள் குறிக்கப்பட்டால் பின் தினம் தினம் சாவின் முகத்தில்தான் விழிக்க வேண்டியிருக்குமா..திருச்செல்வன் அப்படித்தான் சாவை எதிர்கொண்டிருப்பானா..

அது சரி. கட்டிடங்கள் எதற்கு தாறுமாறாய் இப்படி நடுங்குகின்றன. யாராவது உயர் அதிகாரி வருகிறாரா. முதலமைச்சர் வருவாரா.உள்ளிருந்த  விநாயகர் கோவில் அருகில் வந்துவிட்டது. பசி மயக்கம்தான் எல்லாவற்றையும் நடுங்கச் செய்கிறதா. திண்டில் உட்கார்ந்தார். கறுத்த விநாயகர் என்றாலும் சந்தனக் காப்பில் ஒளிர்ந்து கொண்டிருந்தார்.

கையில்  இருந்த வெள்ளைத்தாளைப் பார்த்துக் கொண்டிருந்தார்..  இது கருணை மனு எழுதப்பயன்படலாம். தன் சாவு பற்றி தானே தானே எழுதிக்கொள்ளும் தற்கொலைக் கடிதமாகக் கூட மாற்றிக் கொள்ளலாம். அவர் கைகள் நடுங்க ஆரம்பித்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *