கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 7, 2018
பார்வையிட்டோர்: 6,058 
 

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்தப் பேருந்து நிலைத்தில் பதினாறாம் எண் பேருந்து வந்து நிற்பதற்குள் கூட்டம் வெள்ளமென திரண்டு ஏறினர். இறங்க வேண்டியவர்கள் இறங்குவதற்குள் ஏறுபவர்கள் இருக்கையில் இடம்பிடிக்க தன் கைகளில் இருந்தவற்றை சன்னல் வழியே இருக்கை நோக்கி வீசினர். ஒருவழியாக இறங்குபவர்கள் போக ஏறியவர்கள் இருக்கையில் அமர்ந்ததும் பலர் இடைவெளியிலும் நின்றனர்.

இருக்கையில் அமர்ந்தவர்கள் யாரையும் காணாதது போல் சன்னல் வழியே எதையோ பார்த்துக்கொண்டு இருந்தனர். தெரிந்தவர்கள் நின்றால் உட்கார சொல்லனுமே…

பேருந்து புறப்பட தயாரானது. நடத்துனர் பயணச்சீட்டு வழங்கிக்கொண்டு இருந்தார். சன்னலோர சீமான்களையும் பயணச்சீட்டு வாங்க வேண்டிக்கொண்டார்.

நெரிசலில் உட்கார வழியின்றி தவித்துக்கொண்டிருந்த முதியவரை பலரும் பார்க்காதது போலிருந்தனர். முதியோருக்கான இருக்கையையும் இளம பெண்கள் இருவர் ஆக்கிரமித்துக் கொண்டனர். இருக்கையில் வயது ஐம்பதுக்கும் குறைவானவர்கள்தான் அமர்ந்து இருந்தனர்.

“ஏய்யா..பெரிசு…அடுத்த பஸ்ல வரக் கூடாதா..” நெரிசலில் சலித்துக் கொண்டார் நடத்துனர்.

“கெழடுக வீட்ல கெடந்தாதானே…” இளசுகளின் பேச்சு அவரின் காதுகளை பரிசோதித்தன.

நிறுத்தங்கள் நான்கு கடந்தன.

“பெரியவரே… அவுங்கள எந்திக்க சொல்லிட்டு உட்கார வேண்டியதுதானே…” பயணச்சீட்டு பரிசோதகரின் பேச்சு ஆறுதலாக இருந்தபோதும் பயனில்லை.

“விடுங்க சாமி…சாகப்போற கட்டைக்கு உட்கார்ந்தா என்ன…நின்னா என்ன…இளசுக உட்கார்ந்து வரட்டுமே..” சொல்லிக் கொண்டே அடுத்த நிறுத்தத்தில் இறங்கினார் அந்த எழுபது வயது இளைஞர்.

அந்த எழுபது வயது இளைஞரின் மன வலிமையும் பெருந்தன்மையும் அப்போதுதான் உணர்ந்தனர்…இருக்கையில் அமர்ந்திருந்த ஐம்பதைக் கடக்காத முதுகு வளைந்த பெருசுகள்…

– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *