புரட்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 9,762 
 

அவசர கால பிரகடனமாக ஐ.நாவில் சைனா மற்றும் இந்தியாவின் சார்பில் ஸ்ரீனியும், செந்திலும் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார்கள். அவை, உங்களின் விழிப்புணர்வுக்காக இங்கே பதிவிடப்படுகிறது.

மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக இந்தியாவிலும் சைனாவிலும் இருந்த நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற சட்ட கொள்கையை மாற்றி அதை பரவலாக பிரதிநிதித்துவப்படுத்தி சில நூற்றாண்டுகள் கடந்து விட்ட போதிலும் நிலைமை கட்டுக்கடங்கவில்லை. சில பத்து காலங்கள் வாழ்ந்து கொண்டிருந்த மனிதன் சில நூறு ஆண்டுகள் வாழக்கூடியவானாகிவிட்டான்.

ஆதலால், அடுத்த கட்ட நடவடிக்கையாக சென்ற நூற்றாண்டில் அவ்விரு தேசங்களும் புதிய சட்டத்தையும், தடையையும் விதித்தது.

முதலில் தடை, இருபால் புணர்வின் மூலமாக தான் மக்கள் தொகை பெருகுவதாக கண்டறியப்பட்டு இருபால்
புணர்வை இருதேசங்களும் தடைசெய்து உத்தரவிட்டது.

இரண்டாவது சட்டம், நூற்று இருபது வயதிற்கு மேல் எந்த ஒரு மனிதனும் உயிர் வாழ கூடாது. அப்படியே வாழ்ந்தால் மாஃபியாக்களின் மூலம் கண்டறியப்பட்டு கொலை செய்யப்படுவார்கள். அதை ஐ.நாவும் ஏற்றுக்கொண்டு மற்ற தேசங்களிலும் நடைமுறைக்கு கொண்டுவந்தது.

இச்சட்டங்கள் இயற்கைக்கு எதிரானது என சில அமைப்புகளும் ஆன்மிகவாதிகளும் போர்க்கொடி தூக்கின. அழித்து குடியேறுவதற்கு காடுகளும் இல்லை-நிலவும் பாரம் தாங்காமல் ஆண்டுக்கு ஒரு சென்டிமீட்டர் வீதம் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு பாஜிக்களின் உதவியோடு அப்போர்க்கொடி கிழித்தெறியப்பட்டது. அவ்விசயத்தில் பட்லரையும், குஷோலினியையும் பாராட்டியே ஆக வேண்டும்.

மேலும், சில ஆண்டுகள் கழித்து பாஸா விஞ்ஞானிகளின் பெரும் முயற்சியாலும் கடின உழைப்பாலும் நிலவின் பாரத்தை குறைத்து மக்களை செவ்வாய் கிரகத்திற்கு மாற்றினோம். ஆனால், நிலவிலிருந்து மக்களை இடம்பெயர்க்கும் பொது மேல்ஜாதி மக்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் அவர்களில் பலரை விண்வெளியிலேயே கொலை செய்து மிதக்கவிட்டுவிட்டதாகவும், இது போன்ற மனிதாபிமானமற்ற செயல்களினால் தான்
மனிதர்களுக்கு இத்தனை துன்பங்கள் நிகழ்கிறதென பல நாத்திகர்களால் இன்னும் நம்பப்பட்டு வருகிறது.

ஆனால், இப்போது நிலைமை கைமீறி பொய் விட்டது. பலகாலங்களாக குழந்தைகளின் குறும்புகளை பார்த்திடாமல் பல பேருக்கு மனநிலை பாதிக்க பட்டுள்ளதால் மக்களை காத்திட ஒரு புரட்சி படை உருவாகி உள்ளது. அவர்கள்
இரண்டு தலைமுறையாக ஆராய்ச்சி செய்து ஒரே புணர்வில் குழந்தைபெற செய்யும் கலவி முறையை கண்டுபிடித்துள்ளனர். அதற்காக, புதியதொரு உணவு முறை கையாளப் படுகிறதாம்.

செவ்வாயில் மனிதர்களின் அட்டூழியம் தாங்க முடியாமல் செவ்வாய் வாசிகள் மனிதர்களை எதிர்க்க துவங்கியுள்ளனர்.

எங்களின் முன்னோடிகள் திருவருட்ச்செல்வர்கள் பெருமாள் மற்றும் சூர்யாவின் நல்லாசியோடு இவ்விரு பிரச்சனைகளையும் சரி செய்ய ஸ்ரீனி, செந்தில் ஆகிய நாங்கள் ஒரு “புதிய சட்டத்தை” அமலாக்க விரும்புகிறோம்.
அவையாவன:

( பலத்த பாதுகாப்பிலிருந்து எங்களால் இதை மட்டுமே களவாட முடிந்தது. மக்களின்
விழிப்புணர்வுக்காக நான் செய்த இந்த தியாகத்தால் எனக்கு நேர இருக்கும் ஆபத்தை
நினைத்து நான் கலங்கவில்லை. மேலும், எத்தனை அராத்துகள் வந்தாலும் காட்டான்கள்
முளைத்தாலும் யாம் எதற்கும் அஞ்சோம். குழந்தைகளுக்கு ஆதரவாக அரசை எதிர்த்து
நாங்கள் மேற்கொண்டுள்ள புரட்சி கண்டிப்பாக வெற்றி பெரும் என்பதை இக்கணத்தில்
தெரிவித்து கொள்கிறோம்.. )

– 28 செப்டம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *