புத்தமதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 25, 2019
பார்வையிட்டோர்: 4,949 
 

2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த புத்தர் பற்றி ஆயிரக் கணக்கில் கதைகள் இருக்கின்றன. அவர் இதுபோன்ற கதைகளோ; சுதைகளோ (சிற்பம்); யாக யக்ஞங்களோ இருக்க வேண்டாம், நான் சொல்லும் எட்டு நல்ல குணங்கள் மட்டும் இருந்தால் போதும் என்று போதித்தார்.

ஆனால் அவர் இறந்தவுடனேயே பெளத்தர்களிடையே போட்டா போட்டி; காட்டா குஸ்தி துவங்கியது. புத்த மதம் மஹாயானம், ஹீனயானம் என்று இரண்டாக உடைந்தது.

ஆளாளுக்கு புத்தர் என்னிடம் இதைச் சொன்னார்; அதைச் சொன்னார் என்று போலிகள் ஏராளமாகக் கிளம்பினர். இவ்வாறு போலிகள் உருவானவுடன் மெளரிய மன்னர் அசோகர் சபையைக் கூட்டி, போலிகளைத் தள்ளி வைத்து, புத்தர் சொன்னதை அப்போதுள்ள பெரியோர்களை வைத்து மிகுந்த ஈடுபாட்டுடன் தொகுத்தளித்தார்.

மெளரிய மன்னர் அசோகர் புத்த மதம் வேர்விட்டு வளரச் செய்த முயற்சிகள் அளப்பரியது.

அசோகர் படிப்படியாக புத்த மதத்தைத் தழுவி கி.மு 263 ல் முற்றிலுமாக உப குப்தர் தலைமையில் புத்த மதத்திற்கு மாறினார். போருக்குப் பிறகு அசோகர் ஒரு சாக்கிய உபாசங்கர் (சாதாரண சீடர்) ஆனார். இரண்டரை ஆண்டுகள் கழித்து புத்த பிக்குவாக மாறினார். அதன் பிறகு வேட்டையாடுதலைக் கைவிட்டு விட்டு புத்த கயாவிற்கு புனிதப் பயணம் மேற்கொண்டார். புத்த சமயத்தைப் பரப்புவதற்காக பல்வேறு தேசங்களுக்கு தூதுக் குழுக்களை அனுப்பினார். புத்த மதத்தைப் பரப்புவதற்காகவே தர்ம மஹா மாத்திரர்கள் எனப்படும் அதிகாரிகளை நியமித்தார். இலங்கைக்கு அவரது மகள் சங்கமித்திரை மற்றும் மகன் மகேந்திரனை புத்தர் ஞானம் பெற்ற அரச மரத்தின் ஒரு கிளையுடன் புத்த மதத்தைப் பரப்ப அனுப்பி வைத்தார்.

அசோகர் பாடலிபுத்திரத்தில் கி.மு.266 ல் மூன்றாவது புத்த சமய மாநாட்டை நடத்தினார். மெக்காலி புத்ததிஸ்ஸா இதற்கு தலைமை வகித்தார். இந்த புத்த மாநாட்டிலேயே திரிபீடகங்கள் இறுதி வடிவம் பெற்றன.

புத்தரால் போதிக்கப்பட்டு அசோகரால் பரப்பப்பட்டது ஹீனயானம் ஆகும். அசோகர் கி.மு 267ல் புத்தர் பிறந்த இடமான கபிலவஸ்துவிற்கும் அதன் அருகில் உள்ள லும்பினி வனத்திற்கும் பயணம் மேற்கொண்டார். புத்த சமயத்தின் புனித இடங்களாகக் கருதப்படும் சாரநாத், சிராவஸ்தி, வைசாலி, ஜேடவனம், குசிநகர் ஆகிய இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டார்

சடங்குகளை எதிர்த்துப் போராடிய புத்தருக்குத்தான் உலகில் அதிகம் சிலைகள்!! அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய வரலாற்றுப் புருஷர்களில் புத்தருக்குத்தான் இன்றுவரை சிலைகள் அதிகம்.

ராமர், கிருஷ்ணர் போன்றவர்களை வரலாற்றுப் புருஷர்கள் என்று கொண்டாலும், அவர்களுக்கு சிலைகள் வந்தது புத்தருக்குப் பின்னர் வந்த சிலைகளே. உலகிலேயே மிகப்பெரிய சிலையும் புத்தருக்குத்தான் இருந்தது. ஆப்கானிஸ்தானத்தில் பாமியன் என்னும் இடத்தில் இருநூறு அடிக்கும் மேல் இருந்த உயரமான புத்தர் சிலைகளை நமது காலத்திலேயே, நமது கண்களுக்கு முன்னரே மத வெறியர்கள் வெடி வைத்துத் தகர்த்ததைப் பத்திரிகைகளில் படித்தோம்.

இப்படி புத்தர் பற்றிய சிலைகளும், கதைகளும், சுதைகளும் ஒருபுறம் ஜப்பான், கொரியா மறுபுறம் இந்தோனேசியா வரையும் பரவியது. இந்தோனேசியாவின் ஜாவா தீவில் போரோபுதூர் என்னும் இடத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பிரம்மாண்டமான புத்தர் கோயில் உருவானது. இதில் புத்தர் வாழ்வில் நடந்த சம்பவங்களை ஆயிரத்துக்கும் அதிகமான சிற்பங்கள் காட்டுகின்றன.

லலித விஸ்தாரம் என்னும் சம்ஸ்கிருத நூல் புத்தர் பூர்வ ஜன்மத்தில் போதி சத்துவராக அவதரித்த கதைகளைச் சொல்லும். அந்த நூல் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது. அதிலுள்ள போதி சத்துவர் கதைகள் கூட இந்தோனேசியா வரை சென்றுவிட்டன. அதில் ஒரு கதைதான் தங்கக் கிண்ணம்.

உருவில்லா கிராமத்துத் தலைவரின் மகள் சம்யுக்தா. அவள் ஒருநாள் புத்தருக்கு ஒரு தங்கக் கிண்ணத்தில் பால் சோறு கொடுத்தாள். அதை அவர் சாப்பிடும் முன்னர் நாகர்கள் வசிக்கும் நயரஞ்சன நதிக்குக் குளிக்கச் சென்றார்.

அங்கு வசிக்கும் நாக ராணி புத்தர் வருவதை அறிந்து ஒரு இரத்தின சிம்மாசனம் கொடுத்தாள். புத்தரும் உடல் வலி போகக் குளித்துவிட்டு பால் சோற்றை உண்டார். பின்னர் தங்கக் கிண்ணத்தை நதியில் தூக்கி எறிந்தார். உடனே சாகரா என்ற நாக மன்னன் அதைத் தாவிப் பிடித்து நாக லோகம் கொண்டுசெல்ல முயலுகையில், இந்திரன் கருடன் வடிவில் வந்து அவனுடன் மோதினான்.

கருடன் வாயில் வஜ்ராயுதம் இருந்த போதும் இந்திரன் வெற்றி பெற முடியவில்லை. உடனே தனது சுய ரூபத்தைக் காட்டி தங்கக் கிண்ணத்துக்காக கெஞ்சினான். இந்திரனே வந்து கெஞ்சியதால் நாகராஜனே பெருந்தன்மையுடன் அதைக் கொடுத்தான். இதற்குக் கைம்மாறாக தங்கக் கிண்ணத் திருவிழாவை பூலோகத்தில் ஆண்டு தோறும் நடக்க இந்திரன் ஏற்பாடு செய்தான்.

இதை எழுதிய லலித விஸ்தார ஆசிரியர் இன்றுவரை அவ்விழா நடப்பதாக எழுதினார். ஆனால் இந்த விழாவோ, சிலப்பதிகாரம் சொன்ன இந்திர விழாவோ இன்று வழக்கழிந்து போயின.

லலித விஸ்தாரக் கதைகள் முழுதும் போராபுதூரில் நூற்றி இருபது சிற்பங்களாக சித்தரிக்கப் பட்டுள்ளன. அவற்றில் எண்பத்தைந்து முதல் எண்பத்து ஒன்பது வரை, சம்யுக்தாவின் தங்கக் கிண்ணக் கதை உள்ளது. ஒவ்வொரு சித்திரத் தொகுப்பும் சம்யுக்தா தங்கக் கிண்ணம் கொடுப்பதையும், புத்தர் உட்கார்ந்து சாப்பிடுவதையும்; பின்னர் ஒரு கையில் தங்கக் கிண்ணம் இல்லாது போன்றும், அதை நாகராஜன் எடுத்து; பின்னர் இந்திரனிடம் கொடுப்பது போன்றும் வரிசையாகச் சித்தரிக்கப் பட்டுள்ளன.

இந்தப் படைப்புச் சிற்பங்களில் ஒரு வினோத உருவமும் உள்ளது. ஒருவன் யானையின் தும்பிக்கையுடன் கணபதி போல காணப்படுகிறான். இது இந்திரனின் ஐராவத வாகனம் என்று அறிஞர்கள் சொல்வர். ஆயினும் யானைத் தலை மகுடங்கள் பல்லவர் காலத்தில் இருந்ததாக ஒரு காஞ்சிக் கல்வெட்டு கூறுகிறது.

வட மேற்கு இந்தியாவில் ஒரு கிரேக்க மன்னனும் யானைத் தலை மகுடத்துடன் உள்ளான். இதை நாணயங்களில் காண முடிகிறது. ஆகவே யானைத் தலை மனிதன் ஆராய்ச்சியாளருக்கு ஒரு புதிராக உள்ளான்.

மிகச் சமீபத்தில் பாரதப் பிரதமரும், சீனப் பிரதமரும் தமிழகத்தின் மகாபலிபுரத்தில் சந்தித்து இரண்டு நாட்கள் தொடர்ந்து அளவளாவினர். தமிழகத்தின் போதி தர்மர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சீனா சென்று அங்கு புத்த மதத்தைப் பரப்பினார். அது தமிழில் சினிமாவாகவும் ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷனில் சிறப்பாக எடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சிதான் தமிழகத்தில் இரண்டு பெரிய தலைவர்களின் இந்தச் சந்திப்பு.

இந்தியாவும் சீனாவும் தற்போது நட்பு நாடுகளாக மாற முயற்சிப்பதன் அடிப்படையே புத்த மதம்தான் என்றால் அது மிகையல்ல…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *